- 14 பிப்ரவரி 2025 -
527 ஆண்டுகள் ஆகிவிட்டன
இன்னொரு மீரா
பிறக்கவேயில்லை
கண்ணனை காதலனாய்
ஆவாகனம் செய்ய
இன்று
ஆட்களே இல்லை
உச்சபட்ச உரிமையில்
கண்ணனை தன்னிடம்
அழைக்கவும்
தன் மார்போடு அணைக்கவும்
உரிமைகள் மறுக்கப்பட்டன
கோவர்த்தன மலை
அடிவாரத்தில்
கோவர்தனன் தனிமையில்
தள்ளப்பட்டுவிட்டான்
கடவுளை தொடாதே
தொழு
கடவுளிடம் நெருங்காதே
தள்ளி நில்
கடவுளை காதலிக்காதே
வணங்கு
என்கிறார்கள்
நூற்றாண்டுகள் கடந்த
காதல் தோல்வியில்
கிருஷ்ணனும்
தன் லீலைகளை
மறந்தேவிட்டான்
மனிதர்களிடமிருந்தும் விலகிவிட்டான்
கடவுளை காதலிப்பது
பெரும்பாவமாக பாவித்து
கொலை செய்யும்
மூடர்களால்
கடவுளும் காதலும்
பிளவுபட்டார்கள்
காதல் மணம் வீச
காதலி தூவும் மலர் மழையில்
கண்ணனின் கன்னத்தில்
வெட்கம் பூத்து
அவன் இமைகள் இசைப்பதை
அவன் கண்கள் வசீகரிப்பதை
அவன் உதடுகள் சிலிர்ப்பதை
இனியெப்போதும் பார்க்க முடியாது
காதலிகளே உங்களுக்கு
சொல்ல
ஒரே ஓர்
ஆறுதல்தான் இருக்கிறது
எங்களிடம்
கடவுளைக்
காதலித்து கரைந்ததாய்
வரலாற்றில் எங்களுக்கு இடமில்லை
ஆண்களுக்கு அது
ஒருபோதும் அனுமதிக்கப்படவேயில்லை
0 comments:
கருத்துரையிடுக