பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 23, 2022

பூட்டப்படாதக் கதவுகள்

"இவருக்கு கொஞ்சம் கூட பயமே இல்ல.. காலம் எப்படி கெட்டுக்கிடக்கு வாசல் கதவை லாக் பண்ணாமலேயே வச்சிருக்காரு...." என புலம்பிக்கொண்டே நுழைந்தான். 

"அப்பா... அப்பா... எங்க இருக்கீங்க...?" என அதிகம் தேடாமல், வரவேற்பறை நாற்காலியில் அமர்கிறான். வாங்கி வந்திருந்த சமையல் பொருட்களை கீழே வைக்கிறான். 

எப்படியும் ஒரு மாதத்திற்கான சமையல் பொருட்கள் அதில் இருக்கும். அதற்குள் அவை முடிந்துவிட்டால் ஓரிரு நாட்கள் அப்பா எப்படியும் சமாளித்துக்கொள்வார். ஒத்தையாளுக்கு ஒரு டம்ளர் டீயும் ஒரு ரொட்டிபன்னும் போதாதா என தன்னைத் தானே கேட்டுக்கொள்வான். 

அதுவுமில்லாமல் ஒரு மாதத்திற்கு ஒருமுறை இப்படி வருவதற்கே அவனுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

"குளிச்சிகிட்டு இருக்கேன் பா.. தோ வந்துடறேன்...." குளியல் அறையில் இருந்து சத்தம் வந்தது. குளித்துவிட்டார்.

"வா.. மாதவா.. வா எப்படி இருக்க பொண்டாட்டி புள்ளைங்க எப்படி இருக்காங்க..."

"நாங்க இருக்கிறது இருக்கட்டும் நீங்க ஏன் பா இப்படி இருக்கீங்க..?" என கோவப்பட்டான்.

"எப்படி இருக்கேன். நானும் நல்லாத்தான மாதவா இருக்கேன்..."

"நான் அதைக் கேட்கல.. ஏன் எப்பவும் வாசல் கதவை உள்ள லாக் பண்ணாமலேயே இருக்கீங்க... எத்தனை தடவை சொல்லிருக்கேன்..."

"ஓ அதுவா... நான் குளிக்கும் போது கூடதான் பாத்ரூம் கதவை உள்பக்கம் லாக் பண்ண மாட்டேன்.." என்றவாறு சிரிக்கலானார். வாய்விட்டு சிரித்ததில் வாயில் பல்லில்லாதது அப்படியே தெரிந்தது.

"செய்யறது எல்லாம் கிறுக்குத்தனமான வேல... இதுல சிரிப்பு வேற..."

அப்பா நிதானமானார், "என்னப்பா செய்றது. நானோ ஒண்டிகட்ட, நீயோ மாசத்துக்கு ஒரு தடவைதான் வந்து பாக்கற..... ஒருவேளை நான் வீட்டுலயோ பாத்ரூம்பலயோ விழுந்து செத்துட்டா.... யார் உனக்கு கதவை திறந்துவிடுவா... அதும் இந்த வாசல் கதவை அவ்வளவு சீக்கிரத்தில் ஒடைக்க முடியாதுன்னு நீதான சொன்ன. என்னைய பார்த்துக்கவே நீ ரொம்ப கஷ்டப்படற அதுல நான் செத்தும் உனக்கு சிரமத்தைக் கொடுக்கனுமா சொல்லு...."

"இல்லப்பா அது வந்து...." அவன் மனம் ஏதோ செய்தது.

"அதான் வந்துட்டயே... இதோட அடுத்த மாசம்தான வருவ...." அப்பா இப்போதும் நிதானமாகவே இருக்கிறார்.

அக்டோபர் 22, 2022

சொல்லுதற்சுலபம்

" ஏன் சார் கோவிலுக்கு வரமாட்டறீங்க...?"

"சாமியே இல்லைன்றவனைப் போய் கோவிலுக்கு கூப்டற...?"

"சாமி இல்ல... அதனால கோவிலுக்கு வர மாட்டேன்னு சொல்லத் தெரிஞ்ச உங்களுக்கு..."

"சொல்லத் தெரிஞ்ச எங்களுக்கு...?"

"சாதி இல்லைன்னு சொல்லி, எந்தச் சாதி நிகழ்ச்சிக்கும் போகாம இருக்க முடியலையே... போதாக்குறைக்கு சாதி சங்க தலைவர்களுக்கு உங்க சார்பா மாலையெல்லாம் போடறீங்க.."

"அது வந்து......"

"அது அப்பறம் வரட்டும்.. இதுவாச்சும் பரவால... தாழ்ந்த சாதியெல்லாம் இல்லைன்னு கோஷம் போடுற நீங்க... உயர்ந்த சாதிகளும் இல்லைன்னு கோஷம் போடலாம் தான....."

"சொல்றதுக்கு எல்லாம் ரொம்ப சுலபமாதான் இருக்கும்....."

"அதான் சார், சொல்றதுக்கு எல்லாமே சுலபமாதான் இருக்கும்...."

அக்டோபர் 21, 2022

- God No Where vs God Now Here -

"கடவுள் இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும் பார்க்கறியா?"

"அப்படியா...?"

"நிரூபிக்க முடியும்ன்றேன்... அப்படியான்னு கேட்கற..."

"சரி நிரூபி. பாக்கலாம்..."

அதற்காகவே காத்திருந்தவர், தன் முகநூலில் 'கடவுள் இல்லை' என எழுதி பகிர்ந்தார். பார்த்தவருக்கு ஒரே குழப்பம். இதில் கடவுள் இல்லையென்று எங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது. கேட்டேவிட்டார்.

"இதில் கடவுள் இல்லைன்னு எப்படி நிரூபிச்சிருக்க...?"

"ஹஹஹ... அதான் நிரூபனம். இப்ப கடவுள் இல்லைன்னு எழுதி போட்டிருக்கேனா...?"

"ஆமா... போட்டிருக்க.. நீ அதை மட்டும்தான போட்டிருக்க...."

"கடவுள் இல்லைன்னு நான் போட்டதை, கடவுள்னு ஒருத்தர் இருந்தார்னா வந்து நான் இருக்கேன்னு எழுதிருக்கனும் தான..... அப்ப எதுவும் வரல.. ஆக கடவுள்னு ஒருத்தர் இல்ல.. எப்படி நிரூபிச்சேன் பார்த்தியா...?? "

"அதைவிடு காலம்காலமா இந்த குழப்பம் இருந்துகிட்டுதான் இருக்கு... ஆனா லஞ்சம் ஊழல்  இல்லாத இந்த நாட்டுல நாம் இருக்கறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு..."

"என்னது லஞ்சம் ஊழல் இல்லையா.. என்ன கனவு காண்றயா....?"

"கனவா... நானும் நிரூபிக்கிறேன் பாக்கறியா...?"

"எப்படி..?"

"தோ... இப்படி..."
என்றவர் தன் முகநூலில்  ஊழலும் லஞ்சமும் இல்லை. இல்லவேயில்லைன்னு எழுதி பகிர்ந்தார். பார்த்தவரின் கண்கள் சுருங்கின,

"என்னதிது..?"

"ஆமா பின்ன... லஞ்சம் ஊழன்னு ஒன்னு இருந்திருந்தா நான் சொன்னதுக்கு வந்து 'உள்ளேன் ஐயா'னு எழுதிருக்கனும் தான...."

"இதுக்கு இது பதில் இல்லையே...?"

"அதுக்கும் அது பதிலில்லையே...?"

அக்டோபர் 09, 2022

- 42 குறுங்கதைகள் -

- 42 குறுங்கதைகள் -

இயல் பதிப்பகத்தின் நூலிழை குழு சந்திப்பின் மூலமாக ஆசிரியர் ப.பத்மநாதனை தெரியும். அவருக்கும் என்னை அப்போதுதான் தெரியும் என நினைக்கிறேன். கதைகள் குறித்த காலந்துரையாடல் வழியும் கதைகள் குறித்து நான் முன்வைக்கும் கருத்துகள் வழியும் இருவரும் நட்பானோம். 

ஒவ்வொரு முறையும் அழைத்து பேசும் போது ஒவ்வொரு கதைகள் குறித்து பேசுவார். கதைகளுக்கான கருவைப் பகிர்ந்துகொள்வார். சிறுகதைகளை எழுதி அது பற்றிய உரையாடலை திறந்த மனதுடன் எதிர்க்கொள்வார். 

இவ்வாண்டு சிறுகதை தொகுப்பு கொண்டுவர திட்டம் வைத்திருந்தார். அதையொட்டிய முன் வேலைப்பாடுகளையும் செய்யத்தொடங்கியிருந்தார். அப்போதுதான் குறுங்கதை பயிலரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதுவரை சிறுகதைகள் குறித்த கலந்துரையாடலில் பங்கெடுத்த நான் குறுங்கதை பயிற்றுனராக ஆனேன். தொடர்ந்து குறுங்கதைகளின் சாத்தியக்கூறுகளை முயல்வதாலும் ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல;101 குறுங்கதைகள்’ என்ற குறுங்கதைத் தொகுப்பை நான் வெளியிட்டிருந்ததும் இதற்கான ஆதாரக்காரணங்கள்.


இவர் மட்டுமின்றி குறுங்கதை பட்டறையில் மேலும் சிலர் பங்கெடுத்துக்கொண்டார்கள். குறிப்பாக ஆசிரியர் உமா தேவியையும் சொல்லலாம்; ஏனெனில் அவரும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட திட்டமிட்டு பின்னர் குறுங்கதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். அவர் குறித்து அடுத்த முறை பேசுகிறேன்.

குறுங்கதைகள் பட்டறையில், குறுங்கதைகள் எழுத பயிற்சி கொடுப்பதற்கு முன்பாக அதிலிருக்கும் சுதந்திரத்தைப்பற்றி பேசினேன். அதோடு முக்கியமான எழுத்தாளர்களின் முக்கியமான குறுங்கதைகள் குறித்தும் அது எந்த இடத்தில் குறுங்கதையாக மாறுகிறது என பேசுவேன். அவை; பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகத்தையும் எழுத வேண்டும் என்ற ஆரவத்தையும் கொடுத்தது.

பலர் எழுதினார்கள். பலவிதமான குறுங்கதைகள் வந்தன. வழக்கம் போலவே ‘கதைகள்’ தவிர்த்து தங்களின் அனுபவங்கள், அறிவுரைகள், சம்பவங்கள் என வந்தன. அதிலிருந்து மெல்ல மெல்ல குறுங்கதைக்குள் அவர்களை அழைத்து வந்தோம். 

குறுங்கதைகளில் இருக்கும் பலமும் பலவீனமும் அது கொடுக்கும் சுதந்திரம்தான். என்னவெல்லாம் எழுதலாம் என்கிற கேள்வியும், என்னவெல்லாம் எழுத முடியும் என்கிற பதிலும் குறுங்கதை எழுத ரொம்பவும் அவசியம். அதற்கு குறுங்கதைகளைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும். ‘சின்ன கதைதானே அதிலென்னத்தை சொல்லிடப் போறாங்க’ என மேம்போக்காக நினைப்பவர்களைக் குறுங்கதைகள் ஏமாற்றிவிடுகின்றன. ஒரு சொல், ஒரு வரி, கதைகள் மீதான முழு பார்வையையும் மாற்றிவிடும் என்பதில் எச்சரிக்கை வேண்டும். அதே போல வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகள் மட்டுமே குறுங்கதைகளைக் காப்பாற்றிவிடாது.

ஆசிரியர் ப.பதமநாதனின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஆசிரியர் பணிகளுக்கு இடையே எழுதினார் என்றெல்லாம் அவரை என்னால் பாராட்ட முடியாது. ஆனால் தொடர்ந்து எழுதினார், விமர்சனங்களை எதிர்க்கொண்டார், வாசித்தார். சில சமயங்களில் பின்னிரவுக்கெல்லாம் புலனத்தில் செய்தி வரும். “கதையை அனுப்பியிருக்கேன் வாசிக்கவும்..”. 
கதைகளில் விமர்சனங்கள் வழி நான் கொடுக்கும் சில மாற்றங்களை அவரால் பகுத்துப்பார்த்து ஏற்றுக்கொள்ள முடிந்தது. தன்னை ஓர் ஆசிரியர் என்கிற இடத்தில் வைக்காமல், எழுத்தாளர் என்ற இடத்தில் வைத்து உரையாடுவார். அவரிடம் கேள்விகள் இருந்தன, குழப்பங்கள்  இருந்தன, தேடல்கள் இருந்தன. எல்லாவற்றும் மேலாக “நான் நல்லா எழுதறேனா?” என்கிற பொறுப்பும் இருக்கவே செய்தது.

எழுத்தில் நகைச்சுவைகளைக் கொண்டு வந்து வாசிப்பாவர்களை சிரிக்க வைப்பது அத்தனை எளிதல்ல. தொலைக்காட்சியில் நாம் பார்த்து சிரிக்கும் நகைச்சுவைக் காட்சிகளைப் போல புத்தகத்தில் வாசிப்பின் வழி நம்மை சிரிக்க வைப்பது இயலாது. முன்னதில் காட்சிகள் நகர்கின்றன, பின்னணி இசை, நடிகர்களின் பாவணை என பல அம்சங்கள் உள்ளன.
ப.பத்மநாதனின் குறுங்கதைகளில் நகைச்சுவைகளைப் பல இடங்களில் கையாண்டும் வெற்றியையும் நெருங்கியிருக்கிறார். சில தலைப்புகள் நமக்கு எதிர்ப்ப்பார்ப்பைக் கொடுக்கின்றன. அதோடு நாம் ஏமாந்துவிடாமல் நிற்கின்றன.

இது ப.பத்மநாதனின் ’42 குறுங்கதைகள்’ புத்தகம் குறித்த விமர்சனம் அல்ல; ஓர் எளிய அறிமுகம் மட்டுமே. 

ஏனெனில்;

இன்று (09/10/2022) ஶ்ரீ ஞானானந்த புரம், தெலுக் இந்தானின் அவரது நூல் வெளியீடு உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். அதோடு இயல் பதிப்பகம் வெளியிட்ட ஆசிரியர் ப.பத்மநாதனின் ‘42 குறுங்கதைகள்’, ஆசிரியர் உமாதேவியின் ‘அப்பாவின் கைக்கடிகாரம் – குறுங்கதைத் தொகுப்பு, சமூக & சமய ஆர்வளர் ஏ.கே. ரமேஷின் ‘தீக்ஷா’ சிறுகதைகள், ஆசிரியர் சுமத்ரா அபிமன்னனின் ‘அப்பாவின் அம்மா’ சிறுகதைகள், இளம் எழுத்தாளர் யோகாம்பிகையின் ‘கரு’ சிறுகதைகள் அடங்கிய ஐந்து புத்தகங்களையும் குறைந்த விலையில் வாங்கலாம்.

விரைவில் ஐவரின் புத்தகங்கள் குறித்த என பார்வையையும் பகிர்வேன்; அதற்கு முன் நீங்கள் இவர்களின் படைப்புகளை வாசித்திருந்தால் அது பற்றிய உரையாடலுக்கு அது வழிவகுக்கும்.

இவை நல்ல கதைகளா இல்லையா என்பதை நாம்தான் வாசித்து உரையாடி கண்டுகொள்ள வேண்டும்.

அக்டோபர் 07, 2022

கண்ணீர்க்குடி நாகங்கள்


கண்ணீரைச் சுமக்க கைக்குட்டையொன்று எப்போதும் வேண்டுமோ நமக்கு

இங்கு காரணங்களின்றி கண்ணீர் வருவதில்லை
சிலரின் காரியங்களில்லாமல் நாம் அழுதிடுவதுமில்லை

நம்மை அழவைப்பதில் அப்படியென்ன ஆனந்தத்தைக் கண்டிடப்போகிறார்கள்
சொல்ல முடியாது
அவர்கள் தின்ற சோறு செரிக்க
யாரும் அழத்தான் வேண்டும் போல

கண்களில் என்ன அட்ச்சயப்பாதிரத்தையா வைத்திருக்கிறோம்
அழ அழ கண்ணீர் வர வர
வறட்சியின்றி வருகை தருகிறது த(க)ண்ணீர்

ஒருத்தனுக்கு அழது சாவதா
இல்லை
ஒவ்வொருவருக்குமாகச் சிரித்து வாழ்வதா என்ற
சுயவிசாரனையே நம் சுயத்தின் விசாரணை

கண்ணீர்ப்பட்ட ஈர
கைக்குட்டையைப்
புன்னகையென்னும் குளிர்நெருப்பில் உலர வைப்போம்
கண்ணீரை விட பலம் கொண்ட ஆயுதம்
புன்னகை என
உணர வைப்போம்

கண்ணீர்க்குடி நாகங்களை இன்றுமுதல்
பசியில் வைப்போம்....

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்