பிப்ரவரி 28, 2022
பிப்ரவரி 26, 2022
- இயந்திரப்பறவை -
பிப்ரவரி 25, 2022
புத்தகவாசிப்பு_2022_7_நிலவழி
- ஒற்றைச்சாபம் -
- நிறுத்து... நிறுத்து... நிறுத்து... -
"அம்மா... "
"எனக்கு அப்பா.."
"எனக்கு எங்க வீடு.."
"எனக்கு என்னோட கால்.."
"எனக்கு என்னோட கண்ணு.."
"எனக்கு எங்க ஸ்கூலு டீச்சர்.."
"எனக்கு என் தங்கச்சியோட கரடி பொம்மை.."
" எனக்கு நான் ஸ்கூலுக்கு போகனும்.."
"நான் கொஞ்ச நேரம் தூங்கனும்..."
"எங்கப்பாவை ஒரு தடவையாச்சும் பார்க்கனும்.."
எல்லோரும் என்னவேண்டுமென கேட்டார்கள். ஒருவன் மட்டும் எதுவும் கேட்கவில்லை. அவனால் முடியவில்லை. கண்களில் இன்னமும் கலவரம் தெரிகிறது. குண்டு வெடித்து உடல் சிதறியத் தாயைப் பார்த்த அதிர்ச்சியில் பேச்சறுந்து போனவன் அவன்.
அவனுக்காகவும் அவர்களுக்காகவும் நமக்காகவும், நாம் கேட்போம்.
"யுத்தங்களை நிறுத்து..."
"யுத்தங்களை நிறுத்து..."
"யுத்தங்களை நிறுத்து...."
பிப்ரவரி 24, 2022
- நண்பர்களை அழைக்கிறேன் -
போட்டிக்கு முன்பதாக பங்கேற்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறையையும் வழிநடத்தினோம். மாணவர்கள் ஆர்வத்துடனும் எதிர்ப்பார்ப்புடனும் கலந்துகொண்டார்கள். ஒரு நாள் பயிற்சி பட்டறையில் அவர்கள் பெற்ற அறிமுகத்தைத் தொடர்ந்து ஆளுக்கொரு குறுங்கதையை எழுதி போட்டிக்கு அனுப்பி வைத்தார்கள்.
அத்தோடு நின்றுவிடாமல் தொடர்ந்து குறுங்கதைகளை எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள்.
ஆர்வத்துடன் இருக்கும் இதுபோன்ற இளம் தலைமுறைக்கு தம்மால் இயன்ற பங்களிப்பையும் பல இடங்களில் புதிய தொடக்கத்தையும் ஏற்படுத்தி கொடுத்துக்கொண்டிருக்கும் 'மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்திற்கு' எனது அன்பு.
25-02-2022-டில் நடக்கவிருக்கும் குறுங்கதைப் போட்டி வெற்றியாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நமது கைத்தட்டல்களும் மனதார சொல்லும் பாராட்டு வார்த்தைகளும் இளம் தலைமுறையினர்க்கு அவசியம் என்று நம்புகிறவன் என்கிற முறையும் உங்களையும் அழைக்கிறேன்.
மலேசிய இலக்கியச்சூழல் எப்படி இருக்கிறது என அமர்ந்து குறை பேசாமல், எப்படி இருக்க வேண்டும் என களத்தில் இறங்கி நிறை காணுவதற்கான காரியங்கள் சாதித்துக் கொண்டிருப்பவர்களில் நானும் சிறுபுள்ளி என இருப்பதில் மகிழ்ச்சி...
இக்குறுங்கதை போட்டியின் பயிற்றுனராக எனக்கு கிடைக்கப்பெற்ற கதைகளில் பலவும் புதிய பாணி, புதிய கதைக்களன்களைக் கொண்டிருந்தன. அவை பற்றி நாளை நிகழ்ச்சியில் பேசுகிறேன்.....
பிப்ரவரி 23, 2022
- அம்மா வருவேன் -
"நீங்க ரொம்ப பாவம். இப்படி ஓர் அம்மாவை நான் பாக்கல... ஆனா நீங்க எனக்காக எல்லாமே செய்றீங்க... என்னால உங்களுக்கு ஒன்னுமே செய்ய முடியலம்மா..."
"பெத்த பிள்ளைக்கு செய்யாத அம்மா எங்கயா இருக்காங்க.. உனக்கு ஒன்னும் ஆகாது.. அம்மா இருக்கேன்.. உனக்கு ஒன்னுமில்ல.. நீ நல்லாய்டுவ.... மறுபடியும் அம்மாகூட கடைக்கு வருவ.. பேசுவ.. சமைக்க உதவி செய்வ.. சண்டை போடுவ.. விளையாடுவ..."
"அம்மா ரொம்ப வலிக்குதுமா...."
"கொஞ்சம் பொறுத்துக்கய்யா... இப்பதான் மருந்து சாப்டிருக்க கொஞ்ச நேரத்துல சரியாகிடும்.. ஆம்பிலன்ஸும் வந்துகிட்டு இருக்கு...."
"மா.. நீங்க போய் தூங்குங்க.. என் கூடயே இருக்கீங்க... சரியா தூங்கியே ரொம்ப நாள் ஆச்சிமா...."
"தூக்கமாய்யா முக்கியம்... உன்னையை இப்படி விட்டுட்டு அம்மாவால எப்படியா நிம்மதியா தூங்க முடியும்..."
"நானே உன் நிம்மதியைக் கெடுத்துட்டேன் மா... மன்னிச்சிடும்மா..."
"அப்படிலாம் பேசாதப்பா..."
"வலிக்குதும்மா...ரொம்ப வலிக்குதும்மா..."
"அம்மா மடில படித்துக்கப்பா.. எல்லாம் சரியாகிடும்... ஆம்பிலன்ஸும் வந்துகிட்டு இருக்கு...."
"ம்மா....ம்மா...."
"அம்மா இருக்கேன்.. உனக்கு ஒன்னும் ஆகாது.... "
"ம்மா....."
"தோ ஆம்புலன்ஸ் வந்துடிச்சி...."
ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. அவசரமாக இறங்கியவர்கள் கூடியிருந்த உறவினர்களை நகரச்சொன்னார்கள். பாதி மயக்கத்தில் இருந்தவனை கட்டிலில் தூக்கி வைத்தார்கள். அம்மா வாசலுக்கு சென்றுவிட்டார்.
அவர்கள் அவனை கட்டிலில் வைத்து வெளியே கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். வாசலில் நின்றிருந்த அம்மாவின் வெண்புகையை ஊடுருவி அவன் கட்டிலில் கடந்து சென்றுக்கொண்டிருக்கிறான்.
"ம்ம்மா...மா..." முனகினான்.
"உனக்கு ஒன்னும் ஆகாதுயா.. நீ எப்ப கூப்டாலும் அம்மா வருவேன்.... உனக்கு ஒன்னும் ஆகாது...."
பிப்ரவரி 21, 2022
அடையாளம் காணுதல்
என் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. என்னை சிதைக்க முயன்றவர்களிடமிருந்தும் என்னைச் செதுக்க கற்றுக்கொள்வதற்கு அதுதான் காரணம்.
எல்லாவற்றையும் எழுதி கடக்க முயன்றே எழுதிக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் பெரிய ஆறுதல் நீங்கள் என் எழுத்தை வாசிப்பதுதான். யாரோ ஒருவருக்கு ஒற்றைத்துளி நம்பிக்கையை அது விதைக்குமெனில் எனக்கு வேறென்ன வேண்டும்.
பொதுவாக இல்லாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் அழைப்பும் புலனச்செய்திகளும், என் எழுத்துகள் கண்டறிந்த வலியினை பலர் பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமே தெரிந்த நியாயத்தின் மௌனத்தை அவர்கள் என் எழுத்தில் கண்டதாக சொல்கிறார்கள். யாரோ ஒருவரால் அந்த மௌனத்தின் பின்னனியை உணர முடிந்ததைச் சொல்லி கலங்கவும் செய்வார்கள்.
உங்களுக்கும் எனக்குமான இடைவெளியை எழுத்துகளால் நிரப்பிட முயன்று கொண்டே இருக்கிறேன்.
சிலர் மீது கோவம் இருக்கும் அதே சமயத்தில் அவர்கள் மீதான மரியாதையையும் வைத்திருப்பேன். சிலர் என்னதான் சீண்டிக்கொண்டிருந்தாலும் அவர்களைக் கண்டுக்கொள்ளவே மாட்டேன். சிலரை யாருக்காவும் விட்டுக்கொடுக்க முடியாது. சிலருடன் ஒட்டி உறவாட முடியாது.
எழுத்தில் எனக்கு அறிமுகமாகி எனக்கு மிகவும் நெருக்கமானவர். அண்ணன் என உரிமையுடன் அழைப்பவர்களில் ஒருவர் அண்ணன் ஸ்ரீதர் ரங்கராஜன். முக்கியமான மொழிபெயர்ப்பாளர். ஹருகி முரகாமியை நான் கண்டுகொண்டது இவரின் மொழியாக்கத்தில்தான். என் வாழ்வில் ஏற்பட்ட மனஉளைச்சலின் ஆதாரப்புள்ளியை அடையாளம் காட்டியப் படைப்பாளி. 'தொ பாரு தம்பி..' என அவர் ஆரம்பிக்கும் போது நான் கற்றுக்கொள்ள தயாராகிவிடுவேன்.
வல்லினம் பதிப்பகம் வெளியீடு செய்த எனது முதல் புத்தகமான 'ஒளி புகா இடங்களில் ஒளி' புத்தகத்தை செறிவாக்கம் செய்த இருவரில் தோழர் ம.நவீனும் அண்ணன் ஸ்ரீதரும் அடங்குவர். அப்புத்தகத்தை எனது பெற்றோர் வெளியீடு செய்ய ஸ்ரீதர் அண்ணன் தான் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
நூல் அறிமுகத்தையும் செய்தவர் அவர்தான்.
யாருக்கும் இதுவரை முழுமையாய் சொல்லாத விடயம் ஒன்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மனமொடிந்து வாழ்வை முடித்துக்கொள்ள நினைத்து கடைசி வார்த்தைகளை அவருக்குத்தான் அனுப்பினேன். உடனே என்னை அழைத்துப் பேசி, என் மனநிலையில் மாற்றத்தைக் கொடுத்து என் வாழ்வின் வழியை மடை மாற்றிவிட்டார்.
"தம்பி எல்லோரும் எழுதுவதையே நீயும் எழுதுவதாய் இருந்தால், நீ எழுத வேண்டாம். இன்னொருவர் எழுத முடியாத அனுபவமும் தேடலும் இருந்து நீ எழுதினால்தான் அது உனக்கான அடையாளமாய் மாறும். மறந்துவிடாதே"
என் அவர் சொல்லிய ஆலோசனையை ஒவ்வொரு முறையும் எழுதும் போதும் நினைத்துக்கொள்வேன்.
சமீபத்தில் வெள்ளைரோஜா பதிப்பகத்தை தொடங்கினேன். எங்கள் பதிப்பகத்தின் முதல் புத்தகமும் எனது இரண்டாவது புத்தகமுமான 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல - 101 குறுங்கதைகள்' புத்தகத்தை அவருக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தேன். பின்னர் அவரின் ஆலோசனையில் அடுத்த புத்தகத்திற்கான வேலையையும் தொடங்கினேன். அதுதான் எனது மூன்றாவது புத்தகமும் முதல் கவிதைத் தொகுப்புமான 'பொம்மி'.
சில நாட்களுக்கு முன் அண்ணன் ஸ்ரீதரை சந்தித்து 'பொம்மி' புத்தகத்தைக் கொடுத்தேன்.
அதோடு பலவற்றைப் பேசினோம். அதன் மையம் நாவல் எழுதுவது குறித்து அமைந்தது. நாவலுக்கு ஏற்றார்ப்போல என்னிடம் உள்ளவற்றை மெல்ல வெளி கொணர்ந்தார். எனக்கும் கூட அது ஆச்சர்யத்தைக் கொடுத்தது. சரி செய்திடலாம் என்கிற நம்பிக்கையும் வந்துள்ளது.
அவரைப் பற்றி இன்னும் கூட சொல்லலாம். அத்துணை முக்கியமானவர். இப்போது நம் அருகில் இருக்கிறார். பயன்படுத்திக்கொள்ளலாம். அவரின் மொழியாக்கங்களை வாங்கி வாசிக்கலாம்.
இதனை வாசிக்கும் நீங்கள் கூட என் வாழ்வில் ஏதாவதோர் பங்கினை செய்பவர்களாகத்தான் இருப்பீர்கள் என நம்புகிறேன். விரைவில் அதுபற்றியும் எழுதுவேன்.
- உப்பிட்டவரின் உள்ளளவு -
இரண்டாண்டுகளாக மருத்துவப்பரிசோதனைக்குச் சென்று வருகிறேன். ஆட்கள் மாறியிருக்கிறார்களே அன்றி, வியாதிக்காரர்கள் குறைந்த பாடில்லை. அவர்கள் கணவன் மனைவியாகத்தான் இருக்க வேண்டும். சர்க்கர நாற்காலியில் அவரை வைத்து என்னருகில் வந்து அமர்ந்தார்.
கணவன் ஏதோ முனகுவது கேட்டது. மனைவி சமாதானம் செய்துகொண்டிருந்தார். 'இதோ நமது எண்கள் வரப்போகின்றன. சீக்கிரம் மருத்துவரைப் பார்த்துவிடலாம்' என்பதே அதன் சாரம்.
அந்த அம்மாவின் முகத்திலும் காயம். கண்ணுக்குக் கீழ் கண்ணிப்போய் இருக்கிறது. இருவரும் ஏதோ விபத்தில் சிக்கியிருக்கக்கூடும் என, நலம் விசாரித்தேன்.
கணவருக்கு இனிப்பு நீர் வியாதியாம், இதயத்திலும் அடைப்பு வந்துவிட்டதாம். மேலும் அடுக்கிக்கொண்டே போகலானார். அவர் இன்னமும் சமாதானம் ஆகவில்லை. மனைவியை அருகில் அழைத்துத் திட்டவும் செய்தார்.
பாவம் அவர், அவரால் வலியைத் தாங்க முடியவில்லை. ரொம்பவும் கஷ்டப்படுகிறார் என்றார். வேறு எதுவும் பேசலாம் என நினைத்தேன்.
"முகத்தில் என்னம்மா காயம், விழுந்துட்டீங்களாம்மா" என்றேன்.
"இல்லப்பா.. நேத்து சாப்பாட்டில் உப்பு பத்தலைன்னு சொல்லி , அரைஞ்சிட்டாரு..."
" ஐயோ அப்பறம்..."
"அப்பறம் என்ன.. மூஞ்சியைக் கழுவிட்டு வந்து.. சாப்பாட்டில் உப்பு போட்டு, ஊட்டிவிட்டேன்."
"உங்களுக்கு வலிக்கலயாம்மா...?"
"வலி.. வலிதான் ஆனா அவருக்குப் பசிக்குதுல்ல...."
பிப்ரவரி 20, 2022
- யார் வாழ்க்கை யார் கையில் -
“இதோ பாருங்க… நான் நல்லாத்தான் இருக்கேன்.. காணாமல் எல்லாம் போகல.. யாரும் என்னைத் தேட வேண்டாம்.. என்னை நிம்மதியாக இருக்க விடுங்க.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை… “
“இதுக்கு முன்ன நீங்க எல்லாம் எங்க இருந்தீங்க… எங்கம்மாவைப் பத்தி எனக்கு தெரியாதா.... அவங்க என்னை எப்படியெல்லாம் வேலை வாங்கியிருக்காங்கன்னு உங்க யாருக்கும் தெரியுமா? எங்க அப்பா எப்படியெல்லாம் திட்டுவாருன்னு உங்க யாருக்கும் தெரியுமா..? உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”
“எனக்கு என் வாழ்க்கையை வாழ்ந்துக்கத் தெரியும்.. நானே விரும்பிதான் வந்திருக்கேன்.. எங்க அப்பாவோ அம்மாவோ யாரும் என்னை தேட வேண்டாம்… போலிஸ்லயும் புகார் கொடுக்க வேண்டாம். உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”
“உங்க யாருக்கும் நான் தொல்லை கொடுக்கல.. நீங்க ஏன் இப்படி என்னைக் கஷ்டப்படுத்தறீங்க.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”
“எனக்கு புடிச்ச வாழ்க்கையை நான் தேர்ந்து எடுத்திருக்கேன்.. என் வாழ்க்கையை நான் பார்த்துக்கறேன்… என்னையும் அவரையும் நிம்மதியா வாழ விடுங்க.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”
“அவரு என்னையை நல்லா பார்த்துக்கறாரு.. எனக்கு அவர் முக்கியம்… அவர் ரொம்ப நல்லவரு… அவருக்கு ஏதும் ஆச்சுன்னா.. நானும் செத்துடுவேன்.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”
“உங்க எல்லோரையும் கெஞ்சி கேட்டுக்கறேன். எங்களை நிம்மதியா வாழ விடுங்க.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”
அந்தக் காணொளியை அதற்கு மேல் பார்க்க முடியவில்லை. பதினைந்து வயது கூட ஆகாதவள் மீது அவளின் பெற்றோருக்கோ நமக்கோ அக்கறை இருக்கக்கூடாதா என்ன?
பிப்ரவரி 17, 2022
- தீக்குள் விரலை வைத்தால்.... -
புகழ்பெற்ற தன்முனைப்பு பேச்சாளர். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தலைப்பில் பேசுவார். அவர் பேசுகின்றார் என்றாலே கூட்டம் சேர்ந்துவிடும். அவரின் சிறப்புகளில் ஒன்று கர்த்தரைப்பற்றியும் பேசுவார் கந்தனைப் பற்றியும் பேசுவார் நபிகள் நாயகம் பற்றியும் பேசுவார். எது பேசினாலும் யாரை உதாரணமாகச் சொன்னாலும் அதனால் மனித சமூகத்திற்கு ஏதும் நன்மை உண்டா எனதான் அவர் யோசிக்கிறவராக இருப்பார்.
நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தவறாது சென்றுவிடுவேன். ஆனால் எனக்குள் ஏதோ ஒரு குறை இருந்தது. முழுமையற்ற குழப்பம் என்னைத் தொல்லைப்படுத்தி கொண்டே இருந்தது.
இன்று அவர் மகாகவி பாரதியின் கவிதைகளில் சிலவற்றை உதாரணம் கூறினார். "தீக்குள் விரலை வைத்தால்....." என்று பாடிக்கொண்டே மேடையில் இருந்த குத்திவிளக்கின் தீபத்தில் தன் கைவிரலை வைத்துவிட்டார். அவர் கைவிரல் சுடவில்லை. கவிதையை வாசித்து முடிக்கும்வரை கைவிரல் தீபத்திலேயே இருந்தது.
நான் உட்பட அரங்கமே கைத்தட்டியது. எங்கள் கண்கள் கலங்கின. எப்படியான மனோசக்தியை அவர் கைவரப் பெற்றிருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்தத் தீ எப்படி இவர் விரலை சுடவில்லை என சட்டென கேட்டுவிட்டேன். அவர் என் கண்களை ஆழமாகப் பார்க்கலானார். என்னை அருகில் அழைத்தார்.
"என் விரலை நல்லா பார்த்தீங்களா ?" என்றார்.
"சார் நான் உங்க விரலை மட்டும்தான் பார்த்தேன்.. எப்படி நெருப்பு சுடவில்லை...?"
"இந்தப் பக்கத்தில் என் விரலை மட்டுமல்ல.. அந்தப்பக்கம் இருந்த தீபத்தையும் நீங்கள் கவனித்திருக்கனும்'
"ஏன் சார்...?"
"ஏன்னா.. அது தீ உள்ள தீபம் அல்ல. மின்சார விளக்கு பொருத்திய குத்துவிளக்கு...."
சொல்லிவிட்டு சிரித்தபடி விடைபெற்றார். அவரின் அந்த பதில் தரிசனமாக மாறி என் வாழ்வை மாற்றியது. இப்போதெல்லாம் என் மனம் தேவையில்லாமல் குழம்புவதில்லை.
நந்தலாலா...நந்தலாலா......
பிப்ரவரி 16, 2022
- பாவத்தின் சம்பளம் -
பிப்ரவரி 15, 2022
- 6 சிறியது 5 பெரியது -
பிப்ரவரி 14, 2022
- பெயரில் என்ன இருக்கிறது? -
திருமணத்திற்கு ஜாதியை எப்படியாவது பார்த்துவிடுபவர்களின் மத்தியில் செல்வனின் தேடல் உண்மையிலே வித்தியாசமானதுதான்.
அவன் தேடுவது அதை மட்டும்தான். ஆமாம், அது ஒன்றைத்தான். வேறெதுவும் செல்வனுக்கு முக்கியமாகப்படவில்லை.
அழகு - அது வயதைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.
படிப்பு - கல்யாணத்திற்கு பிறகு கூட படிக்கலாம்.
குடும்பம் - குழந்தை குட்டி என ஆனப்பிறகு சரியாக அமைத்துக்கொள்ளலாம்.
பொருத்தம் - ஜோதிடத்தை முழுமையாக நம்பவேண்டியதில்லை.
பணம்/வரதட்சணை - தேவையில்லை; உழைத்து சம்பாதித்துக் கொள்ளலாம்.
செல்வன் எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருந்தான். மற்ற எல்லாவற்றிலும் அவனால் சமரசம் செய்ய முடிந்தது. ஒன்றைத்தவிர. அது பெயர். ஆமாம் பெயர் மட்டும்தான். அந்தப் பெயரில்தான் அவனுக்கு மனைவி வேண்டும்.
ஒரே மாதத்தில் ஆசை நிறைவேறியது. அவன் தன்னை அதிஸ்டசாலியாக உணர்ந்தான். பல ஆண்டுகளாக தன் வலது பக்க மார்பில் பச்சை குத்தப்பட்டப் பெயரை இனி எப்போதும் அவன் அழிக்கவேண்டாம். யாருக்கும் காரணம் சொல்லவேண்டாம்.
பிப்ரவரி 13, 2022
- தனிமையிலே இனிமை காண... -
பிப்ரவரி 12, 2022
- மனம் ஒரு.... -
பிப்ரவரி 11, 2022
- தவறவிடக் கூடாதக் குறுங்கதை -
பிப்ரவரி 10, 2022
புத்தகவாசிப்பு_2022_6 'பா.வெங்கடேசன் கதையும் புனைவும்'
பா.வெங்கடேசன் கதையும் புனைவும்
தலைப்பு
– பா.வெங்கடேசன் கதையும் புனைவும் (புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்)
எழுத்து
– த.ராஜன், பா.வெங்கடேசன்
நேர்காணல்
– த.ராஜன்
வகை
– நேர்காணல்
வெளியீடு
– எதிர் வெளியீடு
நூல்
வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)
புத்தகம் குறித்து பேசுவதற்கு முன்பாக சிலவற்றை தெளிவுபடுத்த வேண்டுமென
நினைக்கிறேன். ஏனெனில் இந்த புத்தகத்தைப் பற்றியும் பா.வெங்கடேசன் பற்றியும் சிலருடன்
பேசும் பொழுது வேள்பாரியை படித்தது குறித்து பேசினார்கள். எழுத்தாளரின் பெயரில் ஏற்பட்ட
குழப்பமாக மட்டுமே இதனைப் பார்க்க முடியவில்லை. புத்தகங்களை வாசிக்காமல் யார்யாரோ சொல்வதை
அரைகுறையாகக் கேட்டுப்பேசுவதால் ஏற்பட்ட சிக்கலாகவும் பார்க்கிறேன்.
அதற்காகவேணும் பா.வெங்கடேசன் குறித்து சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள
நினைக்கிறேன்.
பா.வெங்கடேசன், முக்கியமானத் தமிழ் எழுத்தாளர்.
சிறுகதை, நாவல், கட்டுரை என்று பல தளங்களில் செயலாற்றுபவர். ‘ராஜன் மகள்’, ‘தாண்டவாரயன்
கதை’, ‘பாகீரதியின் மதியம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள் இவரின் சிறுகதைத்
தொகுப்பு. 1996-ஆம் ஆண்டுவாக்கில் வெளிவந்தது. பல ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இவ்வாண்டு
(2022) அச்சில் வந்துள்ளது.
இன்னும் சில வீடுகள், எட்டிப்பார்க்கும் கடவுள்,
நீளா ஆகியவை இவரின் கவிதைத்தொகுப்புகள்.
ராஜன் மகள், பகீரதியின் மதியம், வாரணாசி, தாண்டவராயன்
கதை போன்றவை இவரின் புதினங்கள் ஆகும்.
பா.வெங்கடேசனின் எழுத்து பற்றி சொல்லும் போது;
தான் எடுத்துக்கொண்ட புனைவுப் பரப்பைத் தன்னுடைய
அசாத்தியமான கற்பனையாலும் தீவிரமான சொல்முறையாலும் பிரம்மாண்டமாக்கும் கதைசொல்லி.
இனி புத்தக பற்றிய வாசிப்பு அனுபத்திற்கு செல்வோம்.
சமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களில் என்னை சிரமத்தில் ஆழ்த்திய
புத்தகம். எடுத்த வேகத்தில் வாசிக்க முயன்றும், பல இடங்களில் தடுமாறவே செய்தேன். தொடர்ந்து
புனைவுகளை வாசித்தும் எழுதியும் பேசியும் வருவதால் அ-புனைவைச் சட்டென உள்வாங்க முடியவில்லை.
ஆனால், மெல்ல மெல்ல இலக்கிய வாசிப்பு குறித்த வேறொரு பார்வையை இந்நூல் கொடுத்தது.
கெட்டி அட்டையில் 150 பக்கங்களில் நேர்த்தியாக இந்நூலை எதிர் வெளியீடு
, வெளியிட்டுள்ளார்கள். முழுக்கவும் பா.வெங்கடேசனின் நேர்காணல். மூன்று பகுதிகளாக நூலின்
பகுதிகளைப் பிரித்திருக்கிறார்கள்.
முதல் பகுதியை புனைவும் கற்பனையும் என்றும், இரண்டாவது பகுதியை
புனைவாக்கச் செயல்பாடு என்றும் மூன்றாவது பகுதியை வாசிப்பும் அரசியலும் என்று பிரித்திருக்கிறார்கள்.
த.ராஜன் எழுதியிருக்கும் முன்னுரையில் இப்புத்தகத்தின் அவசியமும்
அதற்கான உழைப்பையும் தெரிந்து கொள்ள முடிகிறது. ‘சில வார்த்தைகள்’ என்ற தலைப்பில் நேர்காணலுக்கு
முன்பாக பா.வெங்கடேசன் சிலவற்றை எழுதியுள்ளார். அவ்வுரை இப்புத்தகத்தை வாசிப்பதற்கு
நம்மை தயார் செய்கிறது. ‘இங்கே உரையாடலுக்கு எடுத்துக்கொண்டிருப்பது புனைவாக்கத் தொழில்நுட்பத்தின்
கருத்தாக்கரீதியான பின்புலத்தைப் புரிந்துகொள்ளும் சில வழிமுறைகளை மட்டும்தான்’ என்று
அவர் கூறுவதிலிருந்து இதனை நாம் புரிந்துகொள்ளலாம்.
பா.வெங்கடேசனின் எழுத்துகளை இதுவரையில் வாசிக்காததும் இந்நூலை
வாசிப்பதில் எனக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு ஒரு வகையில் காரணம்தான். ஆனால் வாசிக்க வேண்டிய
முக்கிய புனைவாளர் என்பதில் மாற்று கருத்து இல்லை என்பதே இந்த அ-புனைவு நமக்கு நினைவூட்டுகிறது.
த.ராஜனின் கேள்விகளுக்கு பா.வெங்கடேசன் கொடுக்கும் பதில்கள் சில
இடங்களின் நமக்கு குழப்பத்தைத் தருகின்றன. எப்படி தெளிவு பெறலாம் என யோசித்து தொடர்ந்து
வாசிக்கையில், அடுத்த கேள்வியை நம் ஐயத்தைப் பற்றியதாகத்தான் கேட்டிருக்கிறார் த.ராஜன்.
ஒரு வாசகனுக்கு எவ்விடத்தில் குழப்பம் ஏற்படும், எவ்விடத்தில் வாசகனுக்கு மேலதிக விளக்கம்
வேண்டும் என்பதை நன்கு அறிந்து இந்த நேர்காணல் தொகுக்கப்பட்டிருக்கிறது.
எது கற்பனை அது எப்படி புனைவாக மாறுகிறது என விளக்கும் பா.வெங்கடேசனின்
பதில் நம்மையும் யோசிக்கத்தான் வைக்கிறது. அதனை சுருக்கமாக ‘ கதை நாம் எப்படி இருக்கிறோம்
என்பதைச் சொல்கிறதென்றால் ஒரு ‘புனைவு’ நாம் எப்படியெல்லாம் இருக்க சாத்தியங்கள் இருக்கின்றன
என்பதை உணரவைக்கிறது’ என்கிறார்.
நாம் வாசிக்கும் பிரதியில், எழுத்தாளரின் பேனா மையில் யார் கதை
சொல்கிறார் என்பதை கண்டறிவது அரசியல் வாசிப்பின் நோக்கம் என்கிறார். வாசிப்பும் அரசியலும்
என்கிற மூன்றாவது பகுதியில் இது பற்றி விரிவாக உரையாடியுள்ளார்கள்.
மேற்கொண்டு நாம் புரிந்து கொள்வதற்காக இதர படைப்பாளிகளின் படைப்புகளையும்
நமக்கு அறிமுகம் செய்து தேடலை ஏற்படுத்துக்கிறார். குறிப்பாக, ஜெயகாந்தனின் சிறுகதையான ‘அக்கினிப் பிரவேசம்’ பிற்பாடு விரிந்து அவரே எழுதிய
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற நாவலாக எப்படி மாறியிருக்கிறது என சொல்லுமிடம்
நமக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது.
புனைவு குறித்த உங்களது அபிப்பராயங்களை மறுபரிசீலிக்கவும் ; உங்களது
வாசிப்பையும் எழுத்தையும் மெருகூட்டவும் இந்தப் புத்தகம் கொஞ்சமேனும் உதவும் என்கிறார்
நேர்காணல் கண்ட த.ராஜன். அவர் சொல்வது உண்மைதான் ஆனால் அது கொஞ்சமல்ல என்பது வாசித்து
முடித்ததும் தோன்றுகிறது.
ஒற்றை வாசிப்பில் பெற்றதைவிட
மீள் வாசிப்பில் இன்னும் பலவற்றை அறிந்து கொள்ளும் அனைத்து சாத்தியங்களைக் கொண்ட புத்தகமாக
‘பா.வெங்கடேசன் கதையும் புனைவும்’ புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்) என்பதில் சந்தேகமில்லை.
-
தயாஜி
(இந்நூலை
வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)
- வேர் தேடும் மரம் -
ஒவ்வொரு முறையும் அவளை ஏதாவது ஒரு மரத்தின் அருகில் பார்க்கலாம். ஒரு நாள் பூங்காவில் உள்ள மரத்தில், ஒரு நாள் வாசலில் இருக்கும் மரத்தில், ஒரு நாள் குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் உள்ள மரத்தில்.
நாங்கள் இந்தப் புதியக் குடியிருப்பிற்கு வந்து சில நாட்கள் ஆகின்றன. என்னைப்போல பலரும் அவளை அவ்வப்போது பார்த்திருக்கிறார்கள். அவளிடம் பேச யாரும் முயன்றதில்லை. அவளும் அதற்கு ஏதும் மெனக்கெடுவதாகத் தெரியவில்லை.
ஏன் எப்பொழுதும் ஏதாவது மரத்தின் அருகில் நின்று ஏதோ செய்துக்கொண்டிருக்கிறாள். மனநலம் பாதிக்கப்பட்டவளோ. ஆனால் எப்படி சரியான மணிக்கு தென்படுகிறாள்.
சிலர் அவள் பற்றி ஏதோ புகார் கொடுத்திருக்கிறார்கள். குடியிருப்பு காவலாளிகளிடம் இனி அவளை உள்ளே அனுமதிக்க கூடாது என்று முறையிட்டுள்ளார்கள். நாங்கள் சொல்வதைக் கேட்பதுதானே அவர்களின் வேலை. அப்படியே செய்தார்கள்.
இன்றோடு ஒரு மாதகாலம் ஆயிற்று, அவளைப் பார்த்து. அப்படியொருத்தி அவ்வப்போது இங்கே நடமாடினாள் என்பதையே இங்கு பலரும் மறந்துவிட்டார்கள். நானும்தான்.
இன்று அவளை நினைக்க ஒரு காரணம் கிடைத்தது. அவள் வந்து போகும் வரை செழிப்பாக இருந்த மரங்கள் ஒவ்வொன்றும் பட்டுபோய் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் வேரோடு பிடுங்கி விழலாம் என்கிற நிலையில் இருக்கின்றன.
இது, காட்டை அழித்து கட்டியக் குடியிருப்பு என்பதற்கும் இங்கு நடப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று ஞாயிற்று கிழமை சந்திப்பில் மேனேஜர் ஒரு பேசிக்கொண்டிருக்கிறார். அதோ அங்கொரு மரம் வேறோடு விழுகிறது....
பிப்ரவரி 09, 2022
உனக்கு 20 எனக்கு 20
பிப்ரவரி 08, 2022
- நான் பாதி ; நீ பாதி -
பிப்ரவரி 07, 2022
- குறுங்கதை எழுதுவது எப்படி? -
ஆம்.
வார்த்தை எண்ணிக்கை வேண்டுமா?
ஆம்.
தலைப்பு அவசியமா?
ஆம்.
வசனங்கள் கட்டாயமா?
ஆம்.
கதை சொல்லி வேண்டுமா?
ஆம்.
இவைதான்; இவை மட்டும்தான் குறுங்கதையா?
ஆம்.
- பின்குறிப்பு
ஆம் என்று சொன்ன எல்லாவற்றையும் இல்லை என்று சொல்வதுவும் குறுங்கதைகள்தான்..
#தயாஜி
பிப்ரவரி 06, 2022
நன்றி நவில்தல்
அதன் வழி குறுங்கதைகள் பற்றியும் எங்கெல்லாம் குறுங்கதைகளைக் காணலாம் என்றும் பேசினேன். இம்முறை மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது. பலரும் எழுதுவதில் ஆர்வமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறது என்பதை உணர முடிகிறது.
பேசி முடித்ததும் கேள்வி நேரத்தில் பங்கேற்பாளர்கள் கேட்ட கேள்விகள் சில வழக்கமானதாக இருந்தன, சில முக்கியமான கேள்விகளும் இருந்தன. இரண்டிற்கும் பதிலளித்தேன்.
எழுத்தில் ஆர்வம் உள்ளவர்களைப் பார்க்கும் போது நானும் உற்சாகமாகிவிடுகிறேன். நானே அதை பல முறை உணர்ந்திருக்கிறேன்.
என்னைப் பொருத்தவரையில் எழுத ஆர்வம் உள்ளவர்கள் குறுங்கதையில் இருந்து தொடங்கி குறுங்கதையிலேயே பெரிய பாய்ச்சலைக் கொடுக்க முடியும்.
இன்று ஆர்வத்துடன் பங்கெடுத்தவர்களுடன் மீண்டும் ஒரு சந்திப்பிற்கும் தொடர் உரையாடலுக்கும் வழி சமைத்திருக்கும் மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடக்கும் நல்லவற்றில் நம் பங்கும் சிறிதேனும் பயனாக அமைவதில் எனக்கும் எப்போதும் மகிழ்ச்சியே...
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
- பிக்கபூ -
பிப்ரவரி 05, 2022
- தொழில் ரகசியம் -
பிப்ரவரி 04, 2022
- வாழ்வின் வலி நிவாரணி -
பிப்ரவரி 03, 2022
புத்தகசவாசிப்பு_2022_5 ' மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்'
மிஸ்டர் ஜூல்ஸுடன்
ஒரு நாள்
தலைப்பு – மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்
எழுத்து – டயான் ப்ரோகோவன்
தமிழாக்கம் – ஆனந்த்
வகை – குறுநாவல்
வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம்
நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை
016 – 473 4794 (மலேசியா)
டயான் ப்ரோகோவன், ஃப்ளெமிஷ் எழுத்தாளர். அவரின் ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ என்னும் நாவல் உலகின் பல மொழிகளில் மொழியாக்கம் கண்டு அதிக வரவேற்பையும் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. ஜெர்மன் மொழியில் மட்டும் இந்நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
வித்தியாசமான கதைக்களன் கொண்ட நாவல். இறந்துவிட்ட மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாளை கழிக்கிறார் அவர் மனைவி. எதிர்ப்பாராத மரணத்தை எதிர்க்கொள்வது என்பது தனிமையில் இருப்பவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல. என்னதான் அறிவார்ந்தவர்களாக இருந்தாலும் உடனடியாக ஒருவரின் இறப்பை ஏற்றுக்கொள்வது சிரமம்தான். அச்சிரமம் இந்நாவல் முழுவதும் வருகிறது. ஒரு கட்டத்தில் இருவர் இருக்கும் வீட்டில் நாமும் ஒரு நபராக நுழைந்துவிடுகிறோம்.
கணவரின் உடலை வீட்டில் வைத்தவாரே அவருடனான நினைவுகளில் அன்றைய நாளை கழிக்கிறார் மனைவி. அவை நல்ல நினைவுகள் மட்டுமல்ல, மனதை ரணப்படுத்தும் நினைவுகளும் வருகின்றன.
இறந்த மனிதனின் வீட்டில் எப்போதும் போல வருகிறான் டேவிட். டேவிட் ஆட்டிஸம் குறைபாடு உள்ள மாணவன். மிஸ்டர் ஜூல்ஸுடன் வழக்கம் போல சதுரங்கம் விளையாட வருகிறான். அவனால் அசைவற்று இருக்கும் மனிதரை புரிந்து கொள்ள முடியுமா, இறந்த கணவரின் உடலை என்னவென்று காட்டுவார் மனைவி என்கிற கேள்விகளுக்கு எதிர்ப்பாராத விதத்தில் பதிலை சொல்லிவிடுகிறார் எழுத்தாளர்.
நான் வாசித்து தமிழில் ஆட்டிஸம் குறைபாடு பற்றிய கதைகள் குறைவே (இல்லையென்றே தோன்றுகிறது). கவிதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. சினிமாவாக கார்ட்டூன்களாக கட்டுரைகளாக வந்திருக்கின்றன. ஆனால் புனைவு வெளிகளில் இன்னும் ஆழமாக அக்குறைபாடு பற்றிய அறிதல் கொடுக்கக்கூடிய கதைகள் இல்லை என்பது இந்நேரம் எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது.
மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள், 71 பக்கங்களே கொண்ட குறுநாவல்தான். எளிதாக வாசித்து விடலாம் என்ற எண்ணமே இந்நாவலை எடுக்க வைத்தது. ஆனால் அதன் அடர்த்தியும் அதன் நகர்தலும் வாசிப்பைத் தாமதப்படுத்தியது. சில சமயம் என்ன கதை இது வெறுமனே உயிரற்ற உடலுடன் எத்தனை மணிநேரத்தை கடத்துவார் என யோசிக்க வைக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் அந்த மனைவியின் துக்கம் நம்மையும் சூழ்ந்து கொள்கிறது.
‘அவள் யாரிடமும் சொல்லாதவரையில் அவர் இன்னும் இறந்து போகவில்லை’ என்று நாவலில் ஒரு வரியை எழுதியிருக்கிறார் ஆசிரியர். அதற்குள் இம்முழு நாவலையும் அடக்கிவிடலாம். சொல்லிவிடுவதற்கும் சொல்ல தயங்குவதற்கும் ஊடாக இருக்கும் மனப்போராட்டத்தை மனைவியின் மூலமாக வாசகர்களுக்கு ஏற்றிவிடுகிறார் நாவலாசிரியர்.
சில ஆண்டுகளுக்கு முன், ‘காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படம் வந்திருந்தது. காதலி இறந்துவிடுகிறாள். காதலன் மன அழுத்தம் தாங்காது அவள் உயிருடன் இருப்பதாக நினைத்து பிணத்தை தன் உடலில் கட்டிக்கொண்டு வாழ்வதற்கு ஓடுவான். காதலனின் பார்வையில் காதலி உயிரோடு இருப்பதாகவே தெரியும். இக்கதை அத்திரைப்படத்தை நினைக்க வைத்தது. ஆனால் இரண்டு மணி நேரத்தில் திரைப்படத்தைப் பார்த்து கடத்துவது போல. எளிதாக இந்நாவலை வாசித்து கடத்த இயலாது. அதுதான் இந்நாவலின் தனித்தன்மை. மனித மனங்களில் மாய வித்தையை அறிந்துள்ள எழுத்தாளரின் எழுத்தில் இந்நாவலை வாசிப்பது நமக்கு பயிற்சியாகவும் பயனாகவும் அமையும் என நம்புகிறேன்.
எந்த மனிதனும் இன்னொரு மனிதன் தனக்களித்த நினைவுகளை, தான் சாகும் வரையில் சுமந்திருக்கிறான். அதுவே அவனுக்கு, மீத வாழ்க்கையை வாழ்வதற்கான வேகத்தையும் அழுகையையும் கொடுக்கிறது.
- தயாஜி
(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)
- என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா -
பிப்ரவரி 02, 2022
-'சிங்கியா மங்கியா' என்றொரு நாடு-
பலரும் நன்கு அறிந்த சிறு நாடு. பரப்பளவு எவ்வளவு இருந்தாலும் நாட்டையும் நாட்டு மக்களையும் நல்வழிப்படுத்த அரசாங்கம் அவசியம்தானே. அங்கும் ஓர் அரசாங்கம் அமைந்திருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்ற விசாரணையால் 'சிங்கியா மங்கியா' நாடு மிகவும் பிரபலமானது. அரசாங்கப் பணியில் இருக்கும் முக்கிய அதிகாரியும் அரசியல்வாதியுமானவர் செய்த பண மோசடி அம்பலத்திற்கு வந்தது. என்னதான் அரசாங்கத்தின் முக்கிய பணியில் உள்ளவரென்றாலும் பொது மக்களின் பணத்தை கையாடல் செய்தது அந்நாட்டில் பெருங்குற்றம்.
'சிங்கியா மங்கியா' நாட்டு அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம். மக்களை எப்போதும் குழப்பத்தில் விடாத அரசாங்கம். மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் அரசாங்கம்.
அந்த அரசாங்கம், இவ்வாறான குற்றத்திற்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமையவேண்டும் என்ற ஒற்றைக்குறிக்கோள் கொண்டவர்களின் கூடாரம்.
அதிகப்படியான விசாரணைகள் ஏதுமின்றி, உடனடி தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசாங்க அதிகாரியும் அரசியல்வாதியுமாகியவரின், அனுமதியின்றி அவர் செய்த பண மோசடிகளைக் கண்டறிந்த அவரின் பணியாளருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. என்ன இருந்தாலும் பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் மீதான நன்மதிப்பு குலையக் காரணமான நபர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படதான் வேண்டும் என்றும் ஆளுக்கு ஆள் கூறிக்கொண்டார்கள்.
அதன் பின் எந்தக் குற்றமும் 'சிங்கியா மங்கியா'வில் பதிவாகவில்லை என்பது தனிவரலாறு.
அந்த தீர்ப்பிற்கு பிறகுதான் 'சிங்கியா மங்கியா' என்ற நாடு காலப்போக்கில் காணாமல் போனது. யாருக்கு தெரியும் அந்நாடு இப்போது வேறொரு பெயர் வைத்துக்கொண்டிருக்கலாம்.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
#குறுங்கதை
பிப்ரவரி 01, 2022
- எளிய கேள்விகள் எப்போதும்... -
" யாருங்க அது....?"
###############
"குட் மார்னிங். இது என்னோட ரெசிமி"
"அது அங்கயே இருக்கட்டும், உங்களுக்கு முன் அனுபவம் இருக்கா..''
" இதான் சார் என் முதல் இண்டர்வியூ"
"நான் அதைக் கேட்கல...."
###############
"சத்தியமா நான் உன்னைத்தான் கல்யாணம் செய்துக்குவேன். இப்போ இந்தக் குழந்தை வேண்டாமே..?
###############
அவள் "அன்னது தங்கச்சியா, தங்கச்சிதான் இப்படி செல்பி புடிச்சி அனுப்புமா?"
###############
" அவர் ரொம்ப நல்லப் பையன். அவரைத்தான் நான் காதலிக்கிறேன்"
"அவர் நல்லப்பையன் தான், அவருக்கே ஒரு பையன் இருக்கான் தெரியுமா?"
###############
அவன் " ஆமா ஏன் எப்பவும் போன் பாஸ்வெட்டை மாத்திகிட்டே இருக்க...?"
###############
"இன்னுமா நீ என்னைய நம்பற..."
##############
" இப்பதான் இன்னொரு ஆளுக்கு உதவியா கொடுத்தேன். ஏன் டா.. நேத்தே கேட்டிருக்கலாமே...?"
##############
எளிய கேள்விகள் எப்போதும் ஆபத்தானவை......