பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 30, 2012


29.3.2012


தற்போதைய வாசிப்பில் மீண்டும் ஜெயமோகன்.
ஜெ.மோ-வின்  ‘ஆழ்நதியைத் தேடி’ 15 கட்டுரைகள் 113 பக்கங்கள்.

கடந்த மூன்று மாதங்களாக ஜெ.மோ-வின்

1.   நவினத் தமிழிலக்கிய அறிமுகம்

2.   புதிய காலம் - சில சமகால எழுத்தாளர்கள்

3.   மேற்குச்சாளரம் - சில இலக்கிய நூல்கள்


   ஆகிய நூல்களைப் படித்ததின் வழி பலவற்றை , பலரின் எழுத்துகளை , பல எழுத்தாளர்களை அறிய முடிந்தது.

   இந்த வாரம், இந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டே மற்ற மூன்று புத்தகங்கள் கொடுத்த அனுபவத்தை எழுத முயல்கிறேன்.

மார்ச் 22, 2012

கோவமுண்டு கொள்கையற்ற



#படிக்கும்-முன் குறிப்பு# இதனை நீங்கள் படிப்பீர்கள் என்ற பயமல்ல; படித்தும் நீங்கள் இப்படித்தான் என்ற பாவம்தான் வேறொன்றும் அல்ல.......



போனார்கள் வந்தார்கள்
பயணமாம்
போவார்கள் வருவார்கள்
இன்னுமாம்

போனதின் அடையாளம் சொல்லி
போட்டோக்கள்
போவதின் அடையாளம் சொல்ல
அறிக்கைகள்

படிக்காத நீங்கள் - அங்க
படைப்பாளிகளெனில்
பிடிக்காத நாங்கள் - உங்க
கூட்டாளிகளல்ல

மார்ச் 20, 2012

ஜெமோவின் 'மேற்குச்சாளரம்'

19.3.2012
ஜெயமோகன் எழுதிய 'புதிய காலம்- சில சமகால எழுத்தாளர்கள்' எனும் புத்தகத்தை படித்தாகிவிட்டது. முக்கிய எழுத்தாளர்களின் அறிமுகமும், அவர்கள் முக்கிய ஆக்கங்கள் குறித்தும் தெரிந்துக் கொள்ள முடிந்தது.

இப்போது வாசிப்பில், ஜெயமோகன் எழுதிய ...
'மேற்குச்சாளரம் - சில இலக்கிய நூல்கள் ' எனும் புத்தகம்.

பத்தோன்பதாம் நூற்றாண்டு நாவலான மாஸ்டர் கிறிஸ்டியன் (மேரி கொரல்லி ) முதல் சமகாலத்து நாவலான, காண்டாக்ட் ( கார்ல் சகன் ) வரை, ஜப்பானிய நாவலான வுமன் ஆன் டியூன்ஸ் (கோபோ ஆப்) முதல் மத்திய கிழக்கு நாவலான பிரிட்ஜ் ஆன் தி டிரினா (இவோ ஆண்டிரிச்) வரை அதன் எல்லை விரிகிறது என சொல்லியிருக்கிறார் - ஜெமோ.

மூல மொழியை வேறாகக் கொண்டப் படைப்புகளை தமிழில், கதையை சுருக்கமான சித்திரத்தில் தன் விமர்சனத்துடன் கொடுத்திருக்கிறார் ஜெமோ.

நான் என்பது நான் மட்டுமல்ல



நிசப்தத்தின்
இரைச்சலைத் தாங்காது
கத்துகிறேன்
எதிரொலிக்கிறது
இரைச்சலின் நிசப்தம்

###################################


பறக்காத
கரப்பான் பூச்சிகள்
பயப்படவில்லை
குழந்தைகள் உடன் பெரியவர்கள்

####################################

எனக்காக பிரார்த்தியுங்கள்
வேண்டுதல் தொடுப்பது
சாத்தானெனில்
கோவித்துக் கொள்ள மாட்டார்களா
காலம் காலமாக
பிரார்த்தனைக்கு பெயர்போன
கடவுள்கள்......!

###################################

மார்ச் 19, 2012

அப்போதைய அவனும் இப்போதைய இவனும்




என்னைப்போல் ஒருவன்
அல்லன் அவன்
அப்படியொரு சந்திப்பு
இதற்குமுன் உண்டு

அப்போதைய அவன்
கறுப்பு
குட்டை
தூக்குப்பல்
மடங்கியிருக்கும் முதுகு
முட்டைக்கண்
வார்த்தைக்கு வார்த்தை
பல்லில் தேங்கியது நாக்கு
தொங்கியிருக்கும் மூக்கு
என்
ஒவ்வொரு அழகுக்கும்
முரண் அவன்


அருவருப்பாகத்தான் இருந்தது
அவனின் அறிமுகம்
ஆச்சிரியங்களின் இறுதி நிலை
அருவருப்புத்தான் போலும்

யாரும் யாருக்கும்
சொல்லாமலேயே
யாரொடும் யாரும்
கலந்து பேசாமலேயே
கண்ணில் பட்டவன் அவன்

உரையாடிய ஒவ்வொரு வார்த்தையும்
ஆபாசத்தின் உச்சமாகவே
தோன்றியது

ஜீரணிக்க முடியாத
காம வர்ணனைகளை
முதல் சந்திப்பின்
முக்கியமின்றியே
வெட்கமின்றி பேசினான்

விடைகொடுக்கவும் வழியில்லை
அவன் பேச்சு அவ்வளவு சுவாரஸ்யம்
பேசப் பேச
மூளைக்குள் திரைப்படம் போலவே
காட்சியுருவங்கள்
வந்து வந்து ஆடையவிழ்த்து
அழைப்பிதழ் கொடுக்கின்றன

ஆணான ஆடையற்ற உருவும்
பெண்ணான ஆடையற்ற உருவும்

என்போன்றே முகம் காட்டின

இத்தனைக்கும் நான் உத்தமன்

இனியும் தொடர முடியாத
என் போன்றோன் அவன்

கையில் கிடைத்த
பெயரற்ற ஒன்றை
அவன் மீதேறிந்தேன்

உடைந்தான்
சுக்குநூறானால்
என் போன்றவன்
இப்போது
என் போன்றவர்களானான்

இனியும் அங்கிருக்க
இயலாத நொடியை
உணர்ந்தவனாய்
வெளியேறினேன்

அடுத்த அறை
அடுத்த பார்வை
அடுத்த ஒருவன்

நிலைக்கண்ணாடியில்
உட்புகுந்தேன்

இப்போதும்
என்னைப்போல் ஒருவன்
அவன் அல்லன்
இவன் வேறொருவன்




- தயாஜி -






மார்ச் 06, 2012

விடைபெறும் கேள்வி ?

              விடைபெறும் கேள்வி ?

     வணக்கம் தோழி. நான் நலம். நீ இங்கு நலமாக இருக்க உன்னைப் போல் நானும்  இறைவனை வேண்டுகின்றேன். பார், அன்று நீ சொல்லிக் கொடுத்தது போலவே கடிதத்தைத் தொடங்கிவிட்டேன் என நினைக்கின்றேன். உனக்கு மகிழ்ச்சிதானே? அப்படியென்றால் அந்த மகிழ்ச்சியை தொடர முடியாததற்கும் நான்தான் காரணம். என்னை மன்னித்துவிடு. ஓ.........  உனக்கு மன்னிப்பு என்றால் பிடிக்காதுதானே. மறந்துவிட்டேன் மன்னித்திடு. ச்சே; பாரேன் நான் திருந்தவே இல்லை.
    ‘திருந்தவே இல்லை’ இந்த வார்த்தைதானே என் வாழ்க்கையையே  இந்த நிலைமைக்கு மாற்றி அமைத்தது. ஆமாம்.......   நான் திருந்துவேன்னு யார்தான் நினைச்சிப் பார்த்த சொல்லு, உன்னைத் தவிர. உன்னால் மட்டும் என்னை எப்படி நம்பிக்கை வைக்க முடிந்தது. எத்தனையோ  பேர் சொல்லியும். இவ்வளவு ஏன், என் வீட்டில் உள்ளவங்க எல்லாரும் சொன்ன பிறகும் கூட நீ ஒருத்திதான் என் மேல் நம்பிக்கை வைத்து கைகொடுத்தாய். அதோடில்லாமல் உன்னுடன் தங்குவதற்கு இடம் கொடுத்து இன்றுவரை எனக்கு பக்கபலமாகவும் ஆலோசகராகவும் இருந்த உனக்கு என்னால் முடிந்த சிறிய நன்றி இது என நினைத்துக் கொள். இப்போ ஏன் இந்த நன்றி கடிதம் என நீ யோசிப்பாய் என நான் நன்கு அறிவேன் தோழி. எல்லாம் நன்மைக்கே என நீ கற்றுக் கொடுத்த பாடத்தின் விளைவு இது. இன்னும் நினைவில் இருக்கிறது விளைவு என்பது தீமையைக் குறிக்கும் சொல் அல்ல. ஒரு செயலில் விளைவைக் கொடுக்கும் சொல். தோழி; சரிதானே......
       எனக்கு 16 வயது இருக்கும்னு நினைக்கிறேன்;  அப்பாவும் அம்மாவும் வேலைக்கு போன பிறகு வீட்டில் யாரும் இருக்கமாட்டாங்க... நீயே யோசிச்சி பாரு; முன்பு தோட்டத்து வீட்டில் இருக்கும்போது எப்படியெல்லாம் இருந்தோம். அம்மா அப்பா இல்லாட்டியும் பக்கத்துவீட்டுக்காரங்க  நம்ம மீது அக்கறை வச்சி நம்மையும் கவனிச்சி வந்தாங்க. இப்போ அப்படியா..? பத்து வருசம் இருந்தாதும் பக்கத்து வீட்டில் யார் இருக்கான்னு தெரியாமதானே வாழ்றாங்க. அதனால்தான் என்னவோ நான் தனியா இருந்தப்போ என் வீட்டுக்கு வந்த தோழிகளைப் பற்றி பக்கத்தில் உள்ளவங்க கண்டுக்கல. கண்டுகிட்டா மட்டும் எப்படி என் அப்பா அம்மாகிட்ட சொல்லுவாங்க. இவங்க ரெண்டு பேரும்தான் எப்பவும் பகலில் வீட்டில் இருக்கறதே இல்லையே.
     அவங்களையெல்லாம் தோழிங்கன்னு சொல்றதுக்கே அருவருப்பா இருக்கு. ம்... பாவம் அவங்களும் என்னதான் செய்வாங்க.நாங்க என்ன இப்படியெல்லாம் ஆகும்னு நினைச்சாப் பார்த்தோம். இப்போ அவங்க எல்லாம் எங்க இருக்காங்கலோ தெரியலை தோழி. பாவம்தான் அவங்களும். எனக்கு பரவாயில்லை. நீ கிடைச்ச. ஆனால் அவங்களோட நிலை. கஷ்டமாதான் இருக்கு. ரஞ்சினியை பத்தி கேள்விபட்ட வரைக்கும் இன்னமும் ‘புக்கிட் பிந்தாங்’-லதான் இருக்காலாம்..               
      தொடக்கத்தில் இருநூறா இருந்த அவளோட மதிப்பு இப்போதெல்லாம் நூறு வெள்ளிகூட தாண்டறதே கஷ்டமா இருக்காம். இருக்காதா ஆரம்பத்தில் சின்ன வயசுக்காரியா அவ மட்டும்தானே அங்க இருந்தா. எல்லார்க்கும் அவளைத்தான் தெரியும். இப்போ பார்த்தா அவளைவிடவும் சின்னச்சின்ன பொண்ணுங்க வந்து சேருதுங்க. பாரு பெத்தவங்களை நம்பாம எவனையோ நம்பி வீட்டைவிட்டு வந்திடுதுங்க. இங்க வந்தா சேர்ந்த பிறகு வந்தவன் கூடயும் வாழ முடியாம வீட்டுக்கும் போக முடியாம இதுங்க அந்த சீன தவுகேகிட்ட நல்லா மாட்டிக்குதுங்க. எனக்கு எப்படி இந்த ரஞ்சினி பத்தி தெரியும்னுதானே யோசிக்கற.? மோகன்தான் சொன்னான். ஆமா; அதே கஞ்சா மோகன்தான். இல்லை இல்லை நான் சாப்டலை. என் கிட்ட விற்க மருந்து கொண்டு வந்தான். இனி அந்த மருந்து எனக்கு வேண்டாம்; நான் திருந்திட்டேன்னு சொல்லி அவனை விரட்டிட்டேன்.
(பொய்தான் சொல்கிறேன் மன்னித்துவிடு)
       சும்மா.... சாப்பிட்டா ஒன்னும் ஆகாது என சொல்லி கொடுத்த பொருளில் இத்தனை இன்பமா என அதிலேயே நிலைக்க நினைத்திருந்தேன். யாரும் இல்லாத நேரத்தில் வந்த தோழிகள் முதலில் இலவசமாக என் நட்பின் அடையாளமாகத்தான் மருந்தைக் கொடுத்தார்கள். நாளாக நாளாக ஆரம்பத்தில் கொடுத்ததற்கெல்லாம் சேர்த்தே பின்னாளில் நான் பணம் செலுத்த வேண்டியதாயிற்று. உனக்கு தெரியாது தோழி; யாருமே இல்லைன்னு நான் நினைச்சப்போ அந்த தோழிங்கதான் எனக்கு எல்லாமா இருந்தாங்க. உனக்கு தெரியுமா..?; நான் வயசுக்கு வந்ததைக்கூட அவங்கதான் கண்டுபிடிச்சி சொன்னாங்க. அதுக்கப்பறம் என்ன செய்யனும் எப்படி நடக்கனும் எல்லாம் அவங்கதான் கத்துக் கொடுத்தாங்க. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எப்பவும் வேலைவேலைதான் இதில் எங்கிருந்து நான் இதையெல்லாம் அவங்ககிட்ட சொல்றது. பணத்தைப் பொருத்தவரைக்கும் எனக்கு வீட்டி குறையே இல்லை. ஒவ்வொரு நாளும் தேவைக்கு அதிகமாகவே கிடைத்தது.
     என் தோழிங்க  மூலம்தான் எனக்கு மோகன் அறிமுகமானான். அவன்கிட்டதான் எப்போ வேணும்னாலும்  நமக்கு மருத்து கிடைக்கும். ரொம்ப நல்ல பையன். என்கிட்ட இருந்துகூட சில சமயம் காசு குறையாதான் வாங்கியிருக்கான். கருப்பா குள்ளமா இருப்பான். அவன் இருக்கற இடம் யாருக்கும் தெரியாது. அவனே அங்க திடிர் திடிர்னுதான் வருவான். பல முறை நாங்க அவனுக்காக காத்திருந்திருக்கின்றோம் தெரியுமா. அவனையும் அவனோட அப்பா அம்மா வீட்டை விட்டு விரட்டிட்டாங்காலம். சொல்லி அழுவான். அதான் சொன்னேன் “உன்னை இன்னும் தலை முழுகலைடா, அதுவரைக்கும் சந்தோஷப்படு”. அப்பறம்தான் கொஞ்சம் அழுகையை நிறுத்தினான். அந்த சாக்கில நான் ரெண்டு பாக்கேட் எடுத்து வைச்சிகிட்டேன்.
    வழக்கமா மோகன் இருக்கிற இடத்தில் அன்னிக்குன்னு பார்த்து போலிஸ் வந்துடுச்சி, நாங்கெல்லாம் ஓடிப் போய்ட்டோம். எப்படியோ என்னைப் பத்தி என் அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சிப்போச்சி, அதும் பாரேன் இந்த சம்பவம் முடிஞ்சி ஒரு வாரம் ஆனபிறகுதான் வீட்டில் என்னை விசாரிச்சாங்க. பெரிசா ஒன்னும் கேட்கலை. அப்பா அம்மாவையும்  அம்மா அப்பாவையும்தான் மாத்திமாத்தி குத்தம் சொன்னாங்க. கொஞ்ச நாள் ஆன பிறகு எனக்கு என்ன ஆச்சின்னு தெரியலை, உடம்பு ஒரு மாதிரி செய்தது. மயக்கம் போட்டு விழுந்தேனாம். பிறகு நானும் தோழிங்களும் (ஸ்...யாருக்கும் தெரியாமல்தான்) கிளினிக் போனோம்.
        சத்தியமா சொல்றேன் தோழி; என் வயித்தில் குழந்தை இருக்குன்னு டாக்டர் சொல்லிதான் எனக்கே தெரியும். அன்னிக்கு என் வீட்டில் நடந்ததும். என்னை தலைமுழுகி விரட்டனதும் அன்னிக்கே உன்கிட்ட சொல்லிட்டேன். ஒரு பொம்பளை பிள்ளை இப்படி சொந்த வீட்டிலேயே  திருடினதுகூட பரவாலை.... ஆனா அப்படி  ஒரு அசிங்கமான வீடியோ  படத்தில் என்னை பார்த்தும் எப்படிதான் வீட்டில் வச்சிருப்பாங்க. நீயே சொல்லு.? வயித்தில் உள்ள குழந்தையைப் போலவே அந்த வீடியோ படமும் எனக்கு எப்படின்னு தெரியவேயில்லை தோழி.
    வேற வழி இல்லைன்னு முடிவான பிறகுதான் ; என் தோழிங்க ஒரு அக்கா வீட்டுக்கு கூட்டி வந்தாங்க. தொடக்கத்தில் அந்த அக்கா என்னை நல்லா அன்பாதான் பார்த்துகிட்டாங்க. என் உடம்புக்கு நல்லதுன்னு சொல்லி ஏதேதோ மாத்திரியை சாப்ட சொன்னாங்க. அது என்ன மாத்திரைன்னு எனக்குத்தான் தெரியுமே. ஆனாலும் சாப்டேன். நான் மயக்கத்தில் இருக்கும் போது என்னை வச்சி அந்த அக்கா சம்பாதிச்சது கொஞ்ச நாள் கழிச்சி; அதும்  அப்பன் இல்லாத குழந்தை வயித்திலேயே செத்துப் போனபிறகுதான் தெரிஞ்சது. கொஞ்ச நாள் ஆஸ்பித்திரில இருந்தேன். அங்க  அவங்க டாக்டருங்க கொடுத்த மருத்துல என்னால தெளிவா நாலு வார்த்தையைப் பேச முடிஞ்சது.
   அங்கதான் நாம சந்திச்சோம். ஏன்னு தெரியலை உங்க ஆதரவு கிடைச்சி இப்போ உங்க வீட்டில் இருக்கேன். நீங்ககூட கேட்டிங்க வீட்டுக்கு அனுப்பவான்னு. வேணாம்னு சொல்லியும் நீங்க விடலை. பாருங்க என்னால உங்களுக்குதான் அவமானம். அந்த அவமானமே போதும்னுதான் என் வாயாலும் இதோ என் எழுத்தாலும் உங்கள் பெயரைச் சொல்லி கூப்டவோ எழுதவோ முடியலை. நல்லா யோசிச்சுப் பாருங்க உங்களுக்கு கிடைச்ச அப்பா அம்மா மாதிரி எனக்கும் கிடைச்சிருந்தா எனக்கு இந்த நிலை வந்திருக்காதுதானே தோழி. அப்படியும் சொல்லமுடியாது. எனக்குன்னு  சொந்த அறிவுன்னு ஒன்னு இருக்கே. யாருமே கூட சேர்க்காத பழகாதவங்ககிட்ட நான் நட்பா இருக்க ஆசைப்பட்டது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இப்போ அதையேத்தானே நீங்களும் செய்து இருக்கிங்க; பாருங்க எல்லாரும் ஒதுக்கிய எனக்கு நீங்க அடைக்களம் கொடுத்திருக்கிங்க. ஆனால் நானும் உங்களை முட்டாளாக்கிட்டேன். இனியும் என்னால உங்களுக்கு எந்த பாதிப்பும் வந்திடக்கூடாதுன்னுதான் கவலையா இருக்கு. இனி அந்த கவலைக்கு இடம் இல்லை.
    அதனாலதான் நான் இந்த வீட்டை விட்டு போறேன் தோழி. மறுபடியும் என் வாழ்க்கை எப்படி அமையப் போகுதுன்னு கவலையெல்லாம் எனக்கு இல்லை. சரியா வளர்க்கப்படாத பிள்ளைகளுக்கும் முறையற்ற நண்பர்கள் கூட பழகிறவங்களும் அதற்கான பாதிப்பை அடைஞ்சேதானே ஆகனும். நான் உங்க வீட்டில் இருக்கிறதால உங்களுக்கும் கெட்ட பேரு வந்தா....... அந்த பாவம் பெரிய பாவம் இல்லையா..?
    எங்கே போவது என தெரியவில்லை. ஆனாலும் போகிறேன். பதினாறு வயது என்னை படிதாண்ட வைத்தது. பெற்றவர்களே அவமானத்தால் என்னை தலைமுழுகினார்கள். தவறான நட்பால் ஒழுக்கம் இழந்தேன். பார்ப்பவரெல்லாம் படுக்கைக்கு அழைக்கும்படி வீடியோவால் விளம்பரமானேன். தந்தை தெரியாமல் தாயாகி யாருமற்ற அனாதையானேன். இப்போது பாரேன் இருபத்தைந்து வயதுகூட ஆகவில்லை ; அதற்குள் என் நிலையை.
      தோழி எனக்கனெ நீ செய்த உதவிகள் எல்லாம் போதும். இருந்தும் கடைசியாக ஒரு உதவி செய்யேன். நான் உனக்கு எழுதும் இந்த கடிதத்தை கிழித்திடாதே. உன் நண்பர்கள் உறவினர்கள் என எல்லோரையும் படிக்கச் சொல். அதில் சிலர் திருந்தக்கூடும் இன்னும் சிலர் என்னை படுக்கைக்கு  அழைத்ததற்கு வருந்தக்கூடும் ! . இனி எங்கே உன்னை சந்திப்பேன் எனத் தெரியவில்லை தோழி. ஏன் உன்னை மீண்டும் சந்திக்க வேண்டும் தொழி.?
    அன்று நீ சொல்லிக் கொடுத்தது போல் கடிதம் எழுதத் தெரிந்த எனக்கு அதனை எப்படி முடிப்பது எனத் தெரியவில்லை. எப்படியாவது முடிக்கனுமே. வழக்கம் போல செய்ய வேண்டிய வேலைகள் எல்லாவற்றையும் செய்துவிட்டேன். சமையல் வேலை எல்லாம் முடித்துவிட்டேன். சாப்பிட்டு. என் கடைசி சமையல். எந்த பொருளையும் என்னுடன் எடுத்துச் செல்லவில்லை என்பதை ‘நீயும்’ உறுதிசெய்து கொள். ம்... இன்னும் உன் கணவர் வீட்டிற்கு வரவில்லை; உன் கணவர் வருவதற்குள் செல்வதால் நீயே அவரிடம் சொல்லிவிடு. விடைபெறுகின்றேன் பல கேள்விகளுடன் உன் தோழி.

நன்றி வணக்கம்.
  



(பின்குறிப்பு; தோழி உனக்கு மட்டும்)
    தோழி, பதினாறு வயதில் பாதை மாறிய எனக்கு உதவ முன் வந்தாய். அதே போல நீ செய்யும் சமூக சேவையையும் பாராட்டவே வேண்டும். உன்னிடம் ஒரே ஒர் உதவி பெறவே விருபுகின்றேன். இனி நாம் சந்திப்பது உறுதியல்ல. ஆதலால் இதுவே என் கடைசி வேண்டுகோலாக் கூட இருக்கலாம். உன் சமூக அக்கறை நல்லதுதான். ஆனால் உன்  வீட்டில் உனக்கென உன் கணவர் இருக்கின்றார். உங்களுக்கு என ஒரு குழந்தை வேண்டாமா தோழி...?
   சமூகமும் சமூகம் சார்ந்தவர்களும் உனக்கு பெரிதாகத் தெரிந்ததால் உனக்காக வீட்டில்  கணவர் இருக்கின்றார் என்பதை நீ பல சமயங்களில் மறந்துவிட்டாய். இனியும் நீ அப்படி இருக்க வேண்டாமே.
    ‘தோழியாகவே’ விடைபெறுகின்றேன். இப்படிக்கு நான்.
   
 

மார்ச் 04, 2012

நொண்டிக்கால் நாயும் நொண்டி நொண்டி நடக்கும் நானும்

 

   நாய் கடிக்கும்தான். ஆனால் அந்த நாயும் கடிக்கும் என அன்றுதான் தெரிந்தது. கடித்துவிட்டது. ஆம் அதே நாய்தான். அந்த நொண்டிக்கால் நாய்தான். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஆச்சர்யமாகதான் இருக்கிறது உடன் வலியும். போயும் போயும் அந்த நொண்டிக் கால் நாய்.
    உள்ளதை உள்ளபடி நொண்டிவிடுகிறேன்! இல்லையில்லை சொல்லிவிடுகிறேன். நாய்கள் என்றால் எனக்கு சிறு வயது முதல் விருப்பம். அப்போது எனக்கு வயது 10 அல்லது பத்துக்கு மேல் இருக்கும், நிச்சயம் அதற்கு கீழ் இருக்காது. இந்த நிச்சயத்துக்கு காரணம் இருக்கிறது. எங்கள் தோட்டத்தில் பக்கத்து வீட்டில் முஹமட் ரஹிம் இருந்தார். எங்களுக்கும் அவரின் குடும்பத்திற்கும் நல்லதொரு தொடர்பு இருந்ததால் நாங்கள் நாயை வளர்க்கவில்லை. நாய் குரைக்கும் சத்தம் அவர்களுக்கு ஆகாது என அப்பா சொல்லியிருந்தார். அவர்களும் நம் வீட்டிற்கும் வர தயங்குவார்கள் என்பதால்  ஒருசேர நானும் தங்கையும்கூட அப்பாவின் பேச்சிற்கு கட்டுபட்டோம். முஹமட் ரஹிம்-மின் அப்பா என் அப்பாவின் அந்த கால ஆசிரியர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
     பத்து வயதில் வீடு மாறினோம். தோட்டத்தில் இருந்து கொடுக்கப்பட்ட மலிவு விலை வீட்டிற்கு சென்றோம். முன்பு இருந்த வீட்டில் குப்பைகளை ஒதுக்குபுறத்தில் உள்ள குப்பை தொட்டியில் போடுவோம். மூன்று நாள்களுக்கு ஒரு முறை லாரியில் ஒருவர் வந்து குப்பைகளை எடுத்துச் செல்வார். அவருக்கு நாங்கள் அனைவரும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் கட்டணம் செலுத்துவோம். கட்டணம் என்றால் இப்போது கொடுப்பது போல இல்லை. முடிந்தவர்கள் ஐந்து ரிங்கிட் கொடுப்பார்கள். முடியாதவர்கள் ஒரு ரிங்கிட்டேனும் கொடுத்திடுவார்கள். அங்கே இருந்தவரை அவராக வந்து பணத்தை வாங்கியதில்லை. மாதம் ஒரு முறை தோட்டத்து பெரியவர்களாய் சேர்ந்து கொடுப்பார்கள்.
    இங்கே மலிவு வீட்டின் அருகிலேயே குப்பை தொட்டியை வைத்துவிட்டார்கள். வாரம் ஒருமுறை குப்பை லோரியுடன் நான்கு பேர் வருவார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டியில் இருக்கும் குப்பைகளை லோரியில் போடுவார்கள். அது என்னவென்று தெரியவில்லை. அந்த குப்பை லோரி சரியாக எங்கள் வீட்டின் வாசலில் நின்றுதான் குப்பைகளை அரைக்கும்.
    சுமார் முன்று நிமிடமே ஆனாலும், அந்த அரைத்தலில் வெளிவரும் வாடை இருக்கிறதே. இப்போது நினைத்தாலும் வயிற்றில் ஏதோ சத்தம் கேட்கிறது. சில சமயங்களில் அந்த குப்பை லாரி கிளம்பியவுடன் மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டு சென்று பார்ப்பேன். சின்னசின்னதாய் புழுக்களை பார்த்து தலையே சுற்றும். தங்கைதான் அதை சுத்தம் செய்வாள். அண்ணனாய் பிறந்ததில் இப்படி சில வசதிகளும் இருக்கிறது.
    சுத்தம் செய்ய தங்கை இருந்தாலும் அந்த நாற்றம் என் மூக்கையும் தாக்கியது. அதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். அதற்காகத்தான் இந்த யோசனை. வீட்டில் ஒரு நாயை வளர்ப்பது.
    என் நண்பன் ஒருவன் சொன்னான் அவன் வீட்டில் நாய் இருக்கிறதாம். வாரம் ஒரு முறை குப்பை லாரியுடன் வருபவர்கள் நாய்க்கு பயந்து குப்பையை எடுத்து லாரியை சீக்கிரமே கிளப்பிவிடுவார்களாம். ஆக நாங்களும் நாயை வளர்க்க ஆரம்பித்தால், குப்பை லாரி எங்கள் வீட்டின் முன் நிற்காது. நிற்காத போது, எப்படி எங்கள் வீட்டின் முன் குப்பைகளை அரைப்பார்கள். இனி வாடை, புழுக்களுக்கு அவசியம் இருக்காது. அதுமட்டுமில்லாமல் நாங்கள் வாங்கிய மலிவு வீடுகள் வரிசயையில் எல்லாம் தமிழர்களே இருந்தார்கள். முன்போல மலாய்க்கார நண்பர்கள் மருந்துக்குக்கூட இல்லை. ஒருவேளை பூமி புத்ரா என்பதால்  அவர்களுக்கு வேறு இடம் கொடுத்திருக்கலாம்!.
    தேவையில்லாத போது யார்யார் விட்டிலோ குட்டிப் போட்டிருக்கும் நாய்கள். தேடும் போது ஒன்றுக்கூட கண்ணில் படவில்லை. பார்க்கப்படுவதெல்லாம், சொறி நாய்களும் தெரு நாய்களும்தான்.
     நாய் வளர்ப்பது என முடிவெடுத்த பிறகு, அழகான நாயைத்தானே வளர்க்கவேண்டும். கண்டகண்ட நாயை வளர்ப்பது எப்படி தகும். அதற்கு முதலில் வளர்க்கப் போவது பெண் நாயா..? அல்லது ஆண் நாயா..? என முடிவெடுக்க வேண்டும். யோசிப்பதற்குள் தங்கை நாயைக்கு பெயர் வைத்துவிட்டாள்.
   ‘பூஜா’. நாங்கள் தேடி அல்லது வாங்கி வளர்க்கப்போகும் பெண் நாய் குட்டியின் பெயர். பெயர் வைத்தாகிவிட்டது நாய்தான் வந்தபாடில்லை.
   கொஞ்சம் இருங்கள் நாய்கடிக்கு மருந்து கட்டியிருக்கிறேன்.  காலின் கட்டை இறுக்கமாக கட்டிவிட்டேன் என நினைக்கிறேன். வலிக்கிறது. கட்டை கொஞ்சமேனும் தளர்த்தி கட்டுகிறேன். இம்மாதிரி அடிபட்ட அல்லது கடிபட்ட இடத்தில் இறுக்கமாக கட்டக்கூடாது. ரத்த ஓட்டத்தை பாதிக்கும். பிறகு அந்த இடம் செயல்படாமல் கூட போய்விடும் அபாயம் இருக்கிறது.
   இப்போது விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன். சரி எங்கே விட்டேன்..? ஆமாம். ‘பெயர் வைத்தாகிவிட்டது நாய்தான் வந்தபாடில்லை’... இங்கிருந்துதானே.....?
    எங்கள் வீட்டின் பின் வரிசைகளின் எப்போதும் நான் சென்றதில்லை. இல்லை என்பதைவிட அதற்கான தேவை இருந்திருக்கவில்லை.
    தோட்டத்து வீட்டில் இருந்த பொழுது, வீட்டின் முன்புறமும் பின்புறமும் குட்டி தோட்டம் ஒன்றை நாங்கள் எல்லாரும் வைந்திருந்தோம். முன்புறம் அழகழகாய் பூக்கும் பூந்தோட்டம். பின்புறத்தில் காய்கறி தோட்டம். இதில் இன்னொன்றை சொல்லியாகவேண்டும். பூந்தோட்டம் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தாலும், காய்கறி தோட்டம் மட்டும் நிச்சயம் வீட்டுக்குவீடு மாறுபட்டிருக்கும். நாங்கள் பப்பாளி வளர்த்தால், பக்கத்துவீட்டு முஹமட் ரஹிம் வாழை வளர்ப்பார், அவரின் அடுத்த வீட்டு தங்காகுஞ்சி கத்தரிக்காயை வளர்ப்பார் , அவரின் அடுத்த வீட்டு  ‘நாசமானிபோனியா’ - நேசமணி பொன்னையாவை இப்படித்தான் அடையாள அட்டையில் சொல்லியிருந்தார்கள். நாங்களும் அப்படியே கூப்பிட்டு பழகிவிட்டோம்.
   இப்படி ஆளுக்கு ஆள் ஒரு வகை காய்கறிகள் பழ வகைகளை விதைப்போம்; வளர்ப்போம்; பயிறுடுவோம் ; தேவையெனில் நாங்கள் பகிர்ந்துக் கொள்வோம். பணம் அநாவசியமாய் பட்டது.
   இப்போது வாங்கியிருக்கும் - வேறு வழியில்லை என்ற போர்வையில் விற்பப்பட்ட இந்த மலிவு வீட்டின் பின்புறம். அதற்கு முன் முன்புறம் பற்றி சொல்லிவிட்டால் நல்லது. ஒரு ‘மைவி’ காரை நேராக நிருத்தலாம். கார் கதவை முழுதாய் திறக்க முடியாது -  சுவர் இடிக்கும் . பாதி திறந்த கார் கதவின் வழியே உடலை வளைத்து நெளித்து குனிந்து நிமிர்ந்து வெளியே வர முடியாதவர்கள் காரை வீட்டின் வெளியே வைத்து விடுவார்கள் -  குப்பை தொட்டி அருகில். குப்பை லோரி வந்துச் சென்றவுடன் காரும் கொஞ்ச நேரம் குப்பை வாடையை கார்கள் சுமக்கும்.
  இப்போது வீட்டின் பின்புறம் குறித்து சொல்லிவிடுகிறேன். வாந்தி வருவது போல் இருந்தால் நான் பொறுப்பல்ல.
   பின்வாசல் கதவைத் திறந்தவுடன் குட்டி சாக்கடை அமைந்திருக்கும். குப்பைத் தொட்டியில் போட வெண்டிய சில சாக்கடையில் மிதந்து செல்லும். பேருக்குத்தான் புது வீடு, மலிவு வீடு, பாதுகாப்பான வீடு; சுத்தம் மட்டும் இல்லை. தோட்டத்தில் இருந்தவர்கள்தான் இங்கும் இருக்கின்றார்கள் ஆனால் அங்கு அவர்கள் இப்படி செய்திருக்கவில்லை.
   இங்கே வந்த பிறகு, சமையல் அறை சன்னலை திறந்தால் சாக்கடை வசதியாக இருப்பதால் என்னவோ..? உண்ட மிச்ச மீதி பொருள்களை குப்பையில்  போட கஷ்டப்பட்டு, சன்னலைத் திறந்து சாக்கடையில் கொட்டி விடுகிறார்கள். சின்ன சாக்கடை என்று செல்லியிருந்தேனே, ஆகையால் இந்த உணவுகள் ஆங்காங்கே அடைபட்டு சாக்கடை நீர் தேங்கி விடும். உடன் நாற்றம் . அதோடு நின்றிடவில்லை இந்த செயலில் விளைவு. தேங்கியிருக்கும் உணவுகளில் பல சமயங்களில் புழுக்களை நானே பார்த்திருக்கிறேன். குண்டு குண்டாய் குலுங்கி குலுங்கி அவை நகரும். வெள்ளையாய் , தலைப் பக்கம் மட்டும் கறுப்பாய் வீங்கிய வயிறுடன் இருக்கும். தேங்கிய உணவுகளில் வந்துப் போகும் ஈக்களில் வாரிசுதான் இந்த புழுக்கள் என்றாலும்; புழுக்கள் ஈக்களாகியது இன்றுவரை நான் கண்டதில்லை. பட்டாம்பூச்சியாகும் புழுக்களை படமாகவும் பாடமாகவும் சொல்லிக் கேட்டதுண்டு. ஈக்களுக்கு அந்த பாக்கியம் இல்லை.
    இப்படிபட்ட பின்புறத்தில்தான், அந்த நொண்டிக் கால் நாய் சுற்றித் திரியும்.
    அந்த நாயை முதன் முதலில் பார்த்தது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. ஒரு நாள் நல்ல மழை. வீட்டின் பின்புற சாக்கடையில் நீர் ஓடாமல் அப்படியே தேங்கி, சாக்கடையை விட்டு வெளிவர ஆரம்பித்தது. சாதாரணமாகவே வாடையின் வீச்சம் தாங்காது. சாக்கடையைவிட்டு வெளிவந்தால் சொல்லத் தேவையில்லை. சாக்கடையில் தேங்கியிருந்த அசிங்கங்கள் எல்லாம் வெளிவந்தன. அசிங்கங்கள்..! ஆமாம் அம்மா அப்படித்தான் சொன்னார்.
    எந்த வடிவத்திற்குள்ளும் அடங்காமல் இருக்கும். கருப்பென்றால் கருப்பல்ல. கருப்பையும் தாண்டியக் கருகருப்பாய் இருக்கும். சில சமயம் வடிவத்தை கண்டுக் கொள்ள முடியும் அதுவும்; நீரின் மேல் மிதக்கும் போதுதான். கல்லெறிந்தாலோ நீரை ஆட்டினாலோ அந்த வடிவத்தை அவை கலைத்துவிட்டு வேறுமாதிரி காட்சிக் கொடுக்கும். அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் எங்களுக்கு குறிப்பாக அம்மாக்களுக்கு நேரமோ விருப்பமோ இருப்பதில்லை. ஒரே வார்த்தை, அசிங்கம். ஆம் அசிங்கம். நாங்களும் அதை அப்படித்தான் சொல்லுவோம்.
   மழைப்பொழுதில் வெளியேறிய அந்த வடிவமற்ற அசிங்கங்களை சுத்தம் செய்யும் போதுதான் நொண்டிக்கால் நாயை பார்த்தேன். அடைமழை லேசாக ஓய்ந்திருந்தது. இந்த நேரம்தான் சாக்கடையை இலகுவாக சுத்தம் செய்ய முடியும். அதிக மழைப்பொழுதும்,  மழையற்ற பொழுதும் சாக்கடையை சுத்தம் செய்ய இயலாது. காரணம், அதிகம் மழையென்றால் தானாகவே சாக்கடை சுத்தமாகிவிடும். மழையில்லாத பொழுதென்றால் சாக்கடையை சுத்தம் செய்ய அந்த வாடை வீச்சத்தை பொருத்துக் கொள்ள வேண்டும். அதோடு சில சமயம் சாக்கடை அசிங்கங்கள் நம் மீது தெளித்து பலமுறை குளிக்கவைக்கும்.
    லேசான  மழையென்றால் சாக்கடை நீர் ஓட்டம் இருக்கும்.  நீண்ட குச்சியையோ அல்லது எதையாவது எடுத்து சாக்கடையில் வைத்து அதன் நீர் ஓட்டத்துக்கு ஏற்றார்போலவே குச்சியை குத்திவிட்டுக் கொண்டிருந்தால் சாக்கடை சுலபமாக சுத்தமாகும். இன்னொரு முக்கியமான ஒன்று என்னவென்றால் சாக்கடை நீர் மேல் பட்டாலும் மழைநீரில் தானாக போய்விடும், இந்த நேரத்தில் வாடையும் வீசாது.
  அப்படி சுத்தம் செய்யும் வேலையாக நான் பின்புறம் சென்ற போதுதான் அந்த நொண்டிக்கால் நாய் கண்ணில் பட்டது. காரணமின்றியே என் பின்னால் வந்து நின்றுக் கொண்டிருந்தது.
   “சூ..... ஏய்..ச்சூ... ஏய் ஏய்.....” எப்படி விரட்டியும் அந்த நாய் நகரவேயில்லை. நொண்டிக் கால் நாய் என்பதால் தைரியமாக அதை விரட்ட ஆரம்பித்தேன் என நினைக்கிறேன். உண்மைதான் நாய் நொண்டி என்பதால்தான் தைரியமாக என் காலைச் சுற்றிய அதன் முகத்தைக் கூட பார்க்காமல் ஓங்கி உதைத்தேன். உதைவாங்கிய நாய் விநோத சத்தத்துடன் ஓடியது.
  பிறகு மனம் கஷ்டமாக இருந்தது. அந்த நொண்டிக்கால் நாய் சமீபத்தில்தான் குட்டி ஈன்றதாம். தகவல் சொன்ன நண்பனிடம் அவை இருக்கும் இடத்தை அறிந்துக் கொண்டு நாய் குட்டிக்காகச் சென்றேன். எங்கள் வீட்டுக்கு நாய்குட்டி தேவையாக இருக்கிறதே. ஆனால் எப்படி அந்த நொண்டிக்கால் நாயை பார்ப்பேன். நான்தான் என் காலை சுற்றிய அந்த நாயை காலால் உதைத்திருக்கிறேனே. அது சரி யாருக்கு தெரியும்; அந்த நொண்டி நாயும் குட்டியோடிருக்கும் என.
   நண்பன் சொன்ன இடத்தில் ஒரே ஒரு நாய் மட்டும்தான் இருந்தது. ஓடக்கூடிய நாய்தான் அது. ஆனால் என்னைப் பார்த்ததும் ஓடாமல் தலையை திருப்பிக் கொண்டது. குட்டிநாய் என்பதால் தைரியமாக காதை தூக்கினேன். ரோசக்கார நாய்தான். ஒற்றைக்கையால் குட்டி நாயின் முதுகை அழுத்திப் பிடித்து தூக்கினேன். ஆச்சர்யம். பெண் நாய்தான். பூஜா என்ற பேருக்கு ஏற்றார் போல அமைந்திருக்கிறது. தாய் நாய்தான் இல்லையே, குட்டியை எடுத்துக் கோண்டு போகலாம் என நாலா புறமும் பார்த்தேன். ஒன்றுமில்லை. கீழே வைத்த நாயை தூக்க முயன்று அது முடியாமல் நாய் திணறிக் கோண்டு காலில் விழுந்தது. காலில் அடுத்த நொடி ‘சுருக்’கென்றது.
  காலைக் கடித்த அந்த குட்டி நாயும் சத்தம் எழுப்பியவாரு நொண்டி நொண்டி நடந்து அதன் இடத்தில் போய் படுத்துக் கோண்டது. குட்டி நாயின் விநோத சத்தம், தூரத்தில் எங்கோ எதிரொலித்தது. அந்த சத்தத்தை ஏற்கனவே கேட்டதாய் நினைவு.


- தயாஜி -
  

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்