பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 26, 2020

நாகம்மாளின் மனக்குறிப்புகள் – புத்தக வாசிப்பு

 


மனோகரன் கிருஷ்ணன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு, ‘நாகம்மாளின் மனக்குறிப்புகள்’. வழக்கமாக , கதைகளை இதழ்களுக்கோ அல்லது ஏதும் ஊடங்களுக்கோ அனுப்பி அது பிரசுரமாகிய பின் தொகுத்து புத்தகமாக்குவார்கள். அல்லது புத்தகம் வெளியீடு செய்வதற்கு முன்னமே அதையொட்டிய சில கதைகளை ஊடகங்களுக்கு அனுப்பி பிரசுரிக்க வைப்பார்கள்.

இந்த இரண்டும் இல்லாமல், தனது வலைப்பூவிலும் அவ்வபோது முகநூலிலும் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்கியுள்ளார் கதாசிரியர். தொடர்ந்து வாசிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு பல்வேறுபட்ட பதிப்புகளில் வெளிவந்துள்ள திருக்குறள் புத்தகங்களை சேகரித்து வருகின்றார். மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்களையும் தொடர்ந்து சேமித்து வருகின்றார். தற்போது வெளியீடு காணும் புத்தகங்கள் முதல் கிடைக்காத புத்தகங்கள் வரை அதில் அடங்கும். இச்செய்தி வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவும் என நம்புகின்றேன்.

இனி சிறுகதை தொகுப்பிற்கு செல்லலாம்;

மொத்தம் 15 கதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் நம் மண்ணில் கதையைச் சொல்ல முற்பட்டிருக்கின்றது. அது முழுமையடைந்துள்ளதா என்றால் அதன் முயற்சி தெரிகிறது எனலாம்.

முதல் கதை, ‘மனைவி காத்திருக்கிறாள்’. இக்கதை எனக்கு ஒரு புதுமொழியை நினைக்க வைத்தது. ‘ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் வீட்டிற்கு துடைப்பக்கட்டைதான்’. பெரும்பாலும் கணவன்களுக்கு  இதனைச் சொல்லி கிண்டல் செய்வோம். சொல்லப்போனால்,  பெரும்பாலான கணவன்களின் நிலை இதுவாகத்தான் இருக்கும். பிறந்த விட்டிற்கு சென்றுள்ள மனைவியை அழைத்து வர செல்லும் கணவன் அதற்கான இரயிலில் ஏறினாரா இல்லையா என்பதுதான் கதை. ஒரு கதைக்கு இதுமட்டும் போதுமா என்ன.? கணவனின் அந்த பயணத்தை கதாசிரியர் சொல்லிக் கொண்டுச் செல்லும் போது நமக்கேக்கூட ஓரளவிற்கு பதற்றம் தொற்றிக்கொள்கிறது. நம்மில் பலர் பொது போக்குவரத்து சேவைக்கு இவ்வாறான  அனுபவங்களைப் பெற்றிருப்போம். ஆனால் கதையின் முடிவு கதையோட்டத்தை காப்பாற்ற தவறிவிட்டதாகப்படுகிறது. இத்தனை இன்னல்களை தாண்டி, கணவன் தன் மனைவியை அழைத்து வருவதற்கு பேருந்தில்  ஏறிவிட்டதில் என்ன கதை இருக்கிறது. முழு கதையையும் மாற்றிப்போடும்  சூட்சுமம் இருக்கும் கதை முடிவில் இன்னும் கவனம் எடுத்திருக்கலாம். பல பாடுகள் கடந்து விட்ட நிலையில் மனைவி தொலைபேசியில் அழைக்கும் சமயத்தில், சில நொடிகளின் இரயிலை தவறவிட்டு நிற்பதில்தான் இக்கதை ஒளிந்திருக்கிறது. ஆனால் இக்கதையின் முடிவு இக்கதையை அனுபவ பத்தி போல அமைத்துவிட்டது.

அடுத்த கதை, ‘வெளியே ஒரு வானம்’. தன் வகுப்பு மாணவனின் வித்தியாசமான செய்கையால் ஈர்க்கப்படும் ஆசிரியை அதற்கான காரணம் தெரிந்ததும் உடைந்துப் போகிறார். இக்கதை சொல்லப்பட்டிருந்த விதம் கவர்கிறது. முன் யூகங்கள் ஏதும் இக்கதைக்கு இடம் கொடுக்கவில்லை.

‘ஆன்மாக்களின் தரிசனமும் கடவுளின் வார்த்தைகளும்’. புதிய அனுபவத்தை கொடுக்க முயற்சிக்கும் கதை. இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இக்கதை மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.  நாவலுக்கான கருவை மிக சுக்கமாக சொல்ல முயன்று அது தன் பக்கங்களின் சிலவற்றை அதிகப்படுத்தியது போல இருக்கிறது. இதனை நாவலாகவோ குறுநாவலாகவோ கதாசிரியர் முயற்சிக்கலாம். அது இக்கதை வாசிப்பின் அனுபவத்தை முற்றிலும் வேறொரு அனுபவத்தைக் கொடுக்கும்.

‘வட்டிப்பணம்’ . பணம் படுத்தும் பாடு. பணமே பிரதானம் என்னும் மனிதனின் கடைசி நிமிடம் எப்படி இருந்துவிடும் என சொல்லும் கதை. இக்கதை சொல்லப்பட்ட விதம் வாசகர்களை கவரும். மெல்ல மெல்ல காய்களை நகர்த்தி  முன்னேறிச் செல்வது போல கதையை ஆசிரியர் முன்னகர்த்தி செல்கிறார். கதையில் முடிவு முழு கதையையும் மீண்டும் நினைக்க வைக்கிறது.

‘ஒற்றைச் செருப்பாய்’ இந்நாட்டுச் சூழலில் தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை சொல்லும் கதை. பலரும் இத்தகைய கருவினை கையாண்டிருக்கிறார்கள். கதாசிரியர் தன் பார்வையில் கதையை நகர்த்துகிறார்.

‘அற்றைக்கூலி’ வாசித்து முடிக்கவும் மனதை கணக்க செய்துவிடுகிறது. எதற்காக போராடுகின்றோமோ அது கைக்கு எட்டிய நொடியில் நாம் அதனைவிட்டு இன்னும் அதிகம் தூரம் நகர்ந்துச் சென்றுவிடும் உணர்வு மேலிடுகிறது.

‘கலைந்து செல்லும் மேகங்கள்’, சகோதரியின் மரணத்திற்கு செல்லும் வழியில் நாயகனின் நினைவுகள் பின் செல்கின்றன.

‘நெருப்புப் பிண்டங்கள்’, சில பக்கங்கள் கொண்ட கதைதான். ஆனால் கதையின் முடிவு என்னை பெரிதும் பாதித்தது என்றே சொல்லவேண்டும்.  தாத்தாவும் பேத்தியும் இருக்கும் வீட்டில் திருடர்கள் நுழைகிறார்கள்.  தடுக்க முயன்ற தாத்தா கொலை செய்யப்படுகின்றார். அந்த ஏழை வீட்டில் திருடர்கள் பறித்துக்கொண்டு போனது தாத்தாவின் உயிர் மட்டுமல்ல அந்த பேத்தியின் எதிர்காலத்தையும் என கதை முடியும் போது வாசிக்கையில் நம்மால் அவ்வளவு சீக்கிரத்தில் மீண்டு வர முடியாது.

‘பள்ளி வண்டி’, கதையும் இங்குள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்தான். பெரும்பாலும் பேருந்து ஓட்டுனர்கள் குறித்து பெரிதாக பேசுவதில்லை. இக்கதை அவர்களின் சிக்கலைக் காட்டுகிறது.

‘தாயுமானவள்’, ஆசிரியை குறித்த கதை. பெரிய திருப்பங்கள் இல்லை. நன்னெறியை போதிக்கும் வகை கதை.

‘மானுடம் கடந்த மனிதர்கள்’, தலைப்பிற்கு ஏற்றார் போல அமைந்துவிட்ட கதை. தினமும் ஒரு முறையாவது  வித்தியாசமான மனிதர்களை நாம் சந்திக்கக் நேரும். அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னதான் தேவை போன்ற எந்த புரிதலுக்கும் நம்மால் வர முடியாது ஆனாலும் நம்மால் அவர்களை புறக்கணிக முடியாது. கதையின் மையம் இதுதான்.

அடுத்த தலைப்பு, புத்தக தலைப்பைக் கொண்டது. ‘நாகம்மாளின் மானக்குறிப்புகள்’. அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார் நாயகன். அங்கு சந்திக்கும் நபர் மூலம் பழைய தங்களின் தோட்டத்து பழைய வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும்படி கதை நகர்கிறது. குலதெய்வ வழிபாடு குறித்து இக்கதையில் குறிப்பிடும் தகவல் அதிர்ச்சியைக் கொடுக்கின்றது. ஜீரணிக்க முடியவில்லை. அந்த காலத்தில் பூப்படைந்த பெண்களைக் கண்டு வேற்று இன மன்னர்களும் சிப்பாய்களும் அதிகாரம் படைத்தவர்களும் வன்முறை செய்து இச்சையைத் தீர்ப்பதற்காக அவர்களை இழுத்துப் போவார்களாம். அதனை தடுப்பதற்காகவே, பெண் குழந்தைகள் வயதிற்கு வந்தவுடன், வீட்டின் முன் சிறு குழியை வெட்டி அந்த பெண்ணை அதில் அமரவைப்பார்களாம். அவள் கையில் அகல் விளக்கைக் கொடுத்து அவள் மேல் தென்னை மட்டைகளைப் போட்டு மூடி விடுவார்களாம். அந்த பெண் குழிக்குள்ளேயே எரிந்து பூபோல் சாம்பலாகி விடுவதால் அவளையே குலதெய்வமாய் வணங்குகிறார்களாம்.

‘நிழல் மரக்கோடுகள்’ கதையும் பழைய வாழ்க்கையைச் சொல்லி செல்கிற கதைதான். போர்க்காலம், கொடுமைக்காலம், கலவரக்காலம், வசந்தகாலம் என நான்கு காலத்தின் சூழலைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இன்னும் அதிகமாக சொல்லியிருக்க கூடும் வாய்ப்புகள் இருந்தும் இக்கதையில் கதாசிரியர் அதனை செய்யவில்லை. செய்திருக்கலாம்.

தொகுப்பின் நிறைவான கதை, ‘சுடுகாட்டு காளி’. சிறிய கதை. மேலும் செறிவாக்கம் செய்திருந்தால், ‘குறுங்கதை’ வடிவில் கிடைத்திருக்கும்.  இக்கதையை நேர்த்தியாக சொல்ல முயன்றுள்ளார். சாமாண்யன் நான்கு நம்பர் எடுக்கும் கதை. அதற்காக மந்திரவாதியுடன் சுடுகாட்டிற்கு பூஜை செய்ய செல்கிறார்கள். அங்குதான் சிக்கல் ஏற்படுகிறது. நினைத்துப் போன நான்கு நம்பர் கிடைத்ததா இல்லையா என்பதுதான் கதையின் சுவாரஸ்யம். கதையின் கடைசி பத்தி நம்மை நோக்கி நாமே சிரிக்கும்படி ஆகின்றது.

மனோகரன் கிருஷ்ணன் அவர்களின் இந்த ‘நாகம்மாளின் மனக்குறிப்புகள்’ அவரின் முதல் சிறுகதை தொகுப்பு. அதற்கான முயற்சிகள் தெரிகின்றது. இப்புத்தகம் வாசிப்பதற்கு ஏற்றது. வழக்கமாக வாசித்துப் பழகிய கதைகளில் இருந்து சற்றே மாறுபட்ட கதைபோக்குகள் கொண்ட கதைகளாக இக்கதைகளைச் சொல்லலாம்.

அடுத்தடுது இன்னும் ஆழமான படைப்புகளை எதிர்ப்பார்க்கலாம். கதாசிரியருக்கு வாழ்த்துகள்.

 

#தயாஜி


டிசம்பர் 25, 2020

பேய்ச்சி' தடை! கொண்டாட வேண்டியதா? யோசிக்க வேண்டியதா?

 

அதற்கு முன் சிலவற்றை பேச நினைக்கிறேன். எனக்கும் நவீன் அவர்களுக்கும் இடையில் உள்ள சிக்கல் கொடுக்கல் வாங்கள் போன்ற வாய்க்கால் வரப்பு சிக்கல்தான். யோசித்துப் பார்த்தால் இதெற்கெல்லாமா வீராப்பு பிடித்து கொள்வோம் என நினைக்கத்தோன்றும். ஒரு வேளை நாளையே அவர் "வாடா தம்பி"  என்று அழைத்தால் நான் போனாலும் போய்விடுவேன். 


ஆனால் இப்பொழுது நான் பேச முற்படுவது இலக்கியத்திற்காக எதனையும் இழக்க தயாராய் இருக்கும் எழுத்தாளர் ம.நவீன் பற்றி...

எனது பதின்ப வயதில் இருந்து திரு.ம.நவீன் அவர்களின் வாசகனாக இருக்கிறேன். ஒரு சமயம் வல்லினம் குழுவில் இணைந்து செய்லாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. ஆத்மார்த்தமாகத்தான் அதில் பயணித்தேன். நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். அப்பயணத்தில் என்னால் பலவற்றை அறிந்துக்கொள்ள முடிந்தது. தனிப்பட்ட வாழ்வில் எனக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு வல்லினம் குழுவினரும் ம.நவீன் அவர்களும் ஆறுதலாகவும் ஆலோசகராகவும் இருந்தார்கள். 

தனிப்பட்ட முறையில் அவருடன் பலவற்றைப் பற்றி பேசியுள்ளேன். சண்டை போட்டுள்ளேன். முரண்டு பிடித்துள்ளேன். திரும்பி வராத அந்த காலத்தின் நினைவுகளை எப்போதும் மறப்பதற்கில்லை.

சரி,
மலேசிய நவீன இலக்கியம் என்று பேச்செடுத்தால் வல்லினம் மற்றும் ம.நவீன் அவர்களை மேற்கோள் காட்டாமல் பேச முடியாது. குறைந்த பட்சம் திட்டுவதற்காவது பேசுவார்கள். அதற்கான உழைப்பை கொடுத்தோம். கொடுத்தோம் என இச்சமயம் சொல்வது சரியா அல்லது கொடுத்தார்கள் என சொல்வது சரியா என பிடிபடவில்லை.
மற்ற இயக்கங்களும் அவர்கள் பங்கிற்கு செயலாற்றினாலும் முதன்மையாக இருப்பது தற்காலத்தில் வல்லினம் இணைய பக்கம்தான்


சில காரணங்களால் பேய்ச்சி நாவலை வாசிக்கவில்லை. ஒரு சமயத்தில் அவர் எழுதிய புத்தகங்களின் முதல் பிரதியை அவர் கையெழுத்துடன் முதல் நபராக வாங்கி வாசித்தவனால் பேச்சி நாவலை யாரோ ஒருவர் போல வாசிப்பதை மனம் ஏற்கவில்லை.

அந்நாவல் குறித்து பலவாறான விமர்சனங்கள் வந்ததை அறிந்திருந்தேன். ஒரு கட்டத்தில் நாவலைப் பற்றி பேசாமல் ம.நவீன் அவர்களை தூக்கிப் பேசவும் தாக்கி பேசவும் ஆரம்பித்துவிட்டார்கள். அங்கு பலருக்குள் சிக்கல் வந்திருக்கலாம்.

இன்று போய்ச்சி நாவலை தடை செய்துவிட்டோம். அடுத்த என்ன ஆகப்போகிறது. சும்மா இருந்தவர்களை சொறிந்துவிட்ட கதையாய் இனிதான் அந்த நாவலை ரகசியமாக வாசிப்பார்கள். அதனை எழுதியவர் மீது புதிய வெளிச்சமும் ஏற்படப்போகிறது. 

எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்ற ஒவ்வொன்றின் மீதும் ஒரு தடையை வைக்கப் போகிறார்கள். அது நாம் எல்லாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சமூக  அவலங்களை முழுமையாக எழுத முடியாது. ஊழல் அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்க முடியாது. 

சமீபத்தில் கூட 'குலதெய்வங்கள்' பற்றி ஒருவர் எழுதிய புத்தகத்தை இங்கு வெளியீடு செய்ய  தடை போட்டுவிட்டதாக முகநூலில் பார்க்க நேர்ந்தது. 


இலக்கிய படைப்பை விமர்சிப்பதும் விவாதிப்பதுமே அதற்கு நாம் செலுத்தும் நன்றி என நம்புகிறேன். அங்கிருந்துதான் அப்படைப்பு நிலைக்குமா இல்லையா என்கிற தெளிவு கிடைக்கும். மாறாக தடை போடுவதும் எழுதியவரை தாக்குவதும் ஏற்புடையதா என்பது நம்மை நோக்கி நாமே கேட்க வேண்டிய கேள்வி.

யோசித்துப்பாருங்கள் நாளையே ஒரு ஆளோ ஒரு இயக்கமோ சேர்ந்து, உலக பொதுமுறை என நாம் போற்றும் திருக்குறளில் 'காமத்துப்பால்' இருப்பதால் அது ஏற்புடையதல்ல என குருட்டுத்தனமாக தடைவிதிக்க வந்தால் என்ன செய்வோம்?

என்னால் இத்தடைக்கு கண்டனம் தெரிவிக்க முடியவில்லை. இதுவரை தெரிவித்த கண்டனங்களுக்கு பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. பின் விளைவுகளை நினைத்து, என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்