பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 27, 2013

என் இனிய மர்லின் மன்றோ - பகுதி 2





தியானிக்க முயல்கிறேன்

தீயென பற்றிக்கொள்கிறாள்

மர்லின்

அழைப்பேயுன்றி

அத்துமீறி

பிரவேசிக்கிறாள்

மர்லின்

தேகமெல்லாம் வியர்க்க

விரல் வழி வழிகிறாள்

மர்லின்

போதாதென காதில்

காற்றூதி கரைக்கிறாள்

மர்லின்

இனியென்ன தியானம்

நீயே போதுமென

எழுந்தேன் தீயென

எதிரே

கண்மூடி

கால் மடக்கி

புத்தகம் ஒன்றில்

மூழ்கி

தியானிக்கிறாள்

சஞ்சலமின்றி

என் மர்லின் மன்றோ


  என்ன மர்லில், இந்த வார்த்தைகளை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறாயா.  என் புத்தகங்களை அன்று நீ படித்து முடித்த பக்கத்தில் உனக்காக வைத்திருந்த கவிதைதான் இது. நீ படித்திருந்த புத்தகங்களை நான் அப்படியே வைத்திருக்கிறேன். எத்தனை முறை மூடிமூடி திறந்தாலும் உன் வாசம், புத்தகங்கள் முழுவதும்.  என் புத்தகங்களை யாருக்கும் நான் இரவல் கொடுப்பதில்லை. ஏற்கனவே, நான் இரவல் வாங்கிய புத்தகங்கள் சில அப்படியே தங்கிவிட்டதால், என் புத்தகங்கள் எங்கும் தங்கிடவேண்டாமே என்பதுதான் காரணம். இப்போது இன்னொரு காரணமும் வந்துவிட்டது.

நீ

மர்லின்

நீதான் காரணம்.








உன் வாசத்தினை மற்ற முகங்களின் மூக்குகள் சுவாசிக்கக்கூடாது மர்லின். அந்த என் சுவாசத்தை நிறுத்திவிடுமே. சொல்ல வந்ததை சொல்லாமல் உன்னை பற்றியே பேசுகிறேன் என்கிறாயா..?

சரி,சரி மர்லீன் அந்த ஆசிரியர் பற்றி சொல்கிறேன் கோவிக்காதே.

புதிதாக வந்த ஆசிரியருக்கும், ஏற்கனவே இருந்த ஆசிரியர்களுக்கும் வித்தியாசங்கள் இருந்தன. இவர் எப்போதும் சிரித்த முகமாய் இருப்பார். தினம் ஒரு வண்ணத்தில் உடுத்தியிருப்பார். முகம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இத்தனைக்கு மேலாக அவர் மீது வாசிக்கும். இதை சொல்லும் போது மட்டும், எனக்கு லேசாக புல்லரிக்கிறது.

இப்போதைய என் கையெழுத்தை படிக்கவே நீ சிரமப்படுகிறாயே, அப்போது , அந்த வயது என் கையெழுத்து எப்படி இருந்திருக்கும் என கொஞ்சம் யோசித்துக் கொள்ளேன். வகுப்புக்கு வரும் ஆசிரியர்கள் எல்லோரும் என் கையெழுத்தை வகுப்பில் காட்டி, “இப்படியெல்லாம் எழுதினா சரஸ்வதியே ஓடிப்போய்டும்... ” என் சொல்வதை வழக்கமாகியிருந்தார்கள். கட்டுரையை எழுத சொல்லிவிட்டு, அருகில் என் எழுத்தை குறித்த நேரடி நிலவரங்களை வகுப்பில் சொல்வதில், ஒவ்வொரு ஆசிரியருக்கு ஒவ்வொரு பாணி இருந்தது.

ஓர் ஆசிரியர், பக்கத்தில் நின்றுக் கொண்டே சொல்லுவார்.

ஓர் ஆசிரியர் நாற்காலியை பக்கத்தில் போட்டு அமர்ந்துக் கொண்டு சொல்லுவார்.

ஓர் ஆசிரியர் அவரது மேஜைக்கு அருகில் என்னௌ உட்கார வைத்துத்துச் சொல்லுவார்.

ஓர் ஆரிசியை, என் காதை திருவிக் கொண்டே சொல்லுவார்.

ஓர் ஆசிரியை தலையில் ஒவ்வொரு வார்த்தைக்கும் கொட்டுவார்.

எல்லோருக்கும் என் எழுத்து, சுவாரஸ்ய பேச்சுக்கு தேவைப்பட்டதே தவிர யாரும் என் எழுத்தை திருந்த , கையெழுத்தை அழகாக்காக நினைக்கவில்லை. எப்படி ஆளுக்கொரு பாணி இருக்கிறதோ அவ்வாரே ஆளுக்கு ஒரு வாடையும் இருந்தது;

ஓர் ஆசிரியருக்கு, பழைய ஆப்பில் வாடை இருக்கும்.

ஓர் ஆசிரியருக்கு , ஏதோ எரிந்துபோனதுதான் வாடை இருக்கும்.

ஓர் ஆசிரியருக்கு , தங்காளி வாசனை இருக்கும்.

ஓர் ஆசிரியைக்கு , அடையாளம் தெரியாத வாடை இருக்கும்.

ஓர் ஆசிரியைக்கு , கவுச்சி வாடை இருக்கும்.


அலங்கோல எழுத்துகளுக்கு நான் அடிவாங்கியதை விட, அருகில் நிற்கும் இவர்களின் உடல் வாடையை தெரியாததுபோல இருந்ததுதான் எனக்கு கஷ்டமா இருந்தது. ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், நாங்கள் அந்தந்த ஆசிரியர்களை அவர்களின் பிரித்தியேக வாடையையே அடைமொழியா வைத்து பேசுவோம்.

ஓர் ஆசிரியர்க்கு; ஆப்பிள் கடை அழகுராசா..

ஓர் ஆசிரியர்க்கு, தீய்ஞ்ச வடை

ஓர் ஆசிரியர்க்கு, ஊழ தக்காளி

ஓர் ஆசிரியைக்கு; மாயக்கா

ஓர் ஆசிரியைக்கு , மீன் வண்டி


இப்படி வைத்த பெயர்களில் இருந்து தப்பித்தவர்கள், எங்களுக்கு பாடம் எடுக்காத ஆசிரியர்கள்தான்.

என் கையெழுத்தை கேள்விப்பட்டுதான். கொஞ்சம் பொறு.. கேள்விப்பட்டு என்பது எங்கேயே சொல்லி எப்போதெ கேட்டு தற்சமயம் நினைவுக்கு வருவதாக நீ நினைத்துக் கொள்ளாதே மர்லின். இந்த கேள்விப்பட்டு என்பது வேறு மாதிரியானது. தன் பாட நேரம் முடிந்ததும், வெளியில் காத்திருக்கும் அடுத்த பாட ஆசிரியரிடம், என் கையெழுத்து குறித்து பேசிவிட்டுதான் போவார்கள். அப்படிதான் ஒரு நாள் புதிய ஆசிரியரிடம், எங்கள் ஆப்பிள் கடை அழுகுராசா என் கையெழுத்தை புகழ்ந்துவிட்டு சென்றார்.







புதிய ஆசிரியர்

அன்றுதான் அவர் எங்களுக்கு அவர் புதிதாக வந்திருந்தார். அழகானவர். அவர்தான் இனி எங்களுக்கு வகுப்பு ஆசிரியர் என்பது எங்களுக்கு தனி குஷியைக் கொடுத்தது.

“எல்லோருக்கும் வணக்கம்... நான் புனிதவதி. இனிமேல் நான் தான் உங்க வகுப்பு ஆசிரியர். ஒவ்வொருத்தரா முன்னுக்கு வந்து உங்களை அறிமுகம்  செய்துக்கோங்க.. அப்பதான் உங்களை பத்தி எனக்கு தெரியும். முன்னுக்கு வந்து உங்க பேரை மட்டும் சொல்லாம.. உங்க பேரு, உங்க குடும்பத்துல எத்தனை பேரு , உங்க எதிர்கால ஆசை என்ன, இந்த மாதிரி ஏதாவது சொல்லுங்க.. சரியா..”

அவரின் குரல் கூட எங்களுக்கு இனிமையாய் இருந்தது. ஒவ்வொருவராக எழுந்து முன்னே சென்று, தங்களை அறிமுகம் செய்துக் கொண்டோம். இப்போது நான் முன்னே சென்றேன்,

“வணக்கம் டீச்சர்... என் பேரு”

“தெரியும். மணிதானே நீ.. உன்னை பத்திதான் எல்லா டீச்சரும் சொல்லறாங்களே.. நீ வேற என்ன சொல்ல போற.. போய் உட்காரு போ...”

புனிதவதி டீச்சரின் அந்த பேச்சு, எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. என் வகுப்பினர் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். எனக்கு அழுகை வருதாய் உணர்ந்த நான், கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்றையொன்று இருக்க அழுத்திக் கொண்டேன். அதில் ஏற்பட்ட வலியால் அந்த அவமானத்தை சரிகட்டலாம் என்று தோன்றியது. கொஞ்சம் சரிகட்டவும் முடிந்தது. தலையை குணிந்துக் கொண்டு என் இடத்திற்கு செல்லும் போதும், ஆசிரியர் என்னை அழைத்தார்;

“மணி.. எங்க போற ... நான் உன்கிட்ட இன்னும் பேசியே முடிக்கலையே... வா வா..”

வகுப்பினர் சிரித்தனர். இப்போது இடது கை கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்றையொன்று அழுத்திக் கொண்டேன். ஆனால், அந்த விரல்களில் சுரணை குறைவாகத்தான் இருந்தது. ஆகவே, அழுத்ததை அதிகம் கொடுத்தேன்.

மர்லீன் அங்கேதான் திடீரென ஒரு யோசனை வந்தது; முதல் அவமனாத்தை சரிகட்ட வலது கையை பயன்படுத்தியாகிவிட்டது. இரண்டாவது அவமானத்தைச் சரிகட்ட இடது கையை பயன்படுத்துகிறேன். மூன்றாவது அவமானம் ஏதும் அடுத்தாக வந்தால், என்ன செய்வது என பீதி பற்றியது. ஆனால் அது அவசியமற்றதானது.

“சொல்லு மணி உன்னோட எதிர்கால லட்சியம் என்ன..?”

புனிதவதி டீச்சர் என்னிடம் கேள்வி கேட்டது, எனக்கு கௌரவத்தைக் கொடுத்தது. ஒருவேளை நான் வகுப்பினர் முன் மற்ற மாணவர்களை போல பேசாமல் இருந்திருந்தால், நண்பர்கள் அடுத்த ஆண்டுவரை இதையே சொல்லி காட்டுவார்கள்.

“இந்த பாடம் கூடவா உனக்கு தெரியல..?”

“ஆமா, தெரியல இப்ப அதுக்கு என்ன... நீயும்தான் அன்னிக்கு புனிதவதி டீச்சர் வந்தப்போ முன்னுக்கு போய் எதுவுமே பேசாம வந்த...”


“டே, நீ என்கிட்ட ஐம்பது காசு வாங்கினயே.. மறந்துட்டயா..?”

“அதெப்படி மணி மறப்பேன், அன்னிக்குத்தானே கிளாஸ் முன்னுக்கு நீ வந்து எதுவுமே பேசாம போய் உட்கார்ந்தே... நாங்க கூட சிரிச்சோமே.. நல்லா ஞாபகம் இருக்கே..?”


“இரு இரு எங்க அப்பாகிட்ட சொல்றேன்..?”

“சொல்லு இப்ப யாரு வேணாம்ன்னா.. அப்படியே அன்னிக்கு கிளாஸ்ல எல்லோரு முன்னாடியும் புனிதா டீச்சர்கிட்ட வாங்கி கட்டினியே அதியும் சேர்த்தே சொல்லு போ..”


ஐயோ மர்லீன் இப்படித்தான், இப்படியேத்தான் என்னை படுத்தி எடுத்தியிருப்பார்கள். நல்லவேளை எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது.

“படம் நடிக்க போகனும் டீச்சர்...”

“ஓ... அப்படியா என்ன படம் நடிக்க போகப்போற..?”

“தமிழ்ப்படம் அப்பறம் இங்கிலிஷ் படம்”


மர்லின் உண்மையில் இங்கிலிஷ் படம் என நான் சொன்னது, என் கௌரவத்தைக் காப்பாற்றத்தான். என் அப்பா அடிக்கடி ஆங்கில பட வீடியோக்களை கொண்டுவருவார். முதல் இரண்டு நாளில் அந்த வீடியோ அவரது அலமாரியில் இருக்கும். மூன்றாவது நாளாக டி.வி பக்கத்தில் வைப்பார். அப்போதுதான் அந்த படத்தை நாங்கள் பார்க்க முடியும். சில சமயம் அவர் அலமாரியில் இருந்து அந்த வீடியோ , டி.வி பக்கம் வராமல் கூட போயிருக்கிறது. அப்போது நான் பார்த்த படங்களில் பேசிய ஆங்கிலம் புரியாததால். அந்த படத்தின் காட்சிகளை வைத்து நண்பர்களிடம் நானே ஒரு கதையை உருவாக்கிச் சொல்லுவேன்.


மர்லின் இன்னொன்று சொல்லுவேன், ஆனால் நீ சிரிக்கக் கூடாது. பல முறை ஆங்கிலப்படங்களில் பெயரை கூட நான் எனக்கு தோன்றிய விதத்தில் சொல்லியிருக்கிறேன்.


‘அசிக்கோ மசி’, ‘லிக்கானோ லிக்கிமா’, ‘குசாப்பி’ , ‘ஜிங்கல்லோ’ , இதெல்லாம் நான் பார்த்த படங்களுக்கு நான் வைத்த பெயர். படக்கதையை நான் சொல்லும் போது நண்பர்களில் யாராவது அந்த படத்தை பார்த்ததாக சொன்னாலோ அந்த தலைப்பை திருத்தினாலோ நான் சொல்வது ஒன்றுதான், “நீ பார்த்த படம் இல்ல இது, அந்த படம்னுதான் நானும் நினைச்சேன்.. ஆனா இது வேற படம்..” என சொல்லி சட்டென கதையை மாற்றி எனக்கு தோன்றியதை சொல்லுவேன்.


“நல்லா நடிப்பியா...”


“நடிப்பேன் டீச்சர்..”


“ஓ.. அப்போ நடிச்சி காட்டு பாக்கலாம்... பிள்ளைங்களா.. இப்போ மணி நடிக்கிறதை நாம எல்லாம் பார்த்து ரசிக்கப்போறோம்...”


வகுப்பின் சிரிப்பொலி என் மண்டையில் டங்கென்றது.


“என்ன நடிக்கனும் டீச்சர்...”


“என்ன நடிக்கனுமா... நீதானே சொன்ன நடிக்கனும்னு... நடிக்க சொன்னா... என்ன நடிக்கனும்னு என்னையே கேட்கறயே..”


“ஓக்கே டீச்சர்... நான் நம்பியார் மாதிரி நடிக்கட்டா..”


“ம்..”


இரண்டு கைகளையும் ஒன்றின் மேல் ஒன்றாக பிசைந்தேன்.  ஒரு கண்ணை சுருக்கி, மறுகண்ணின் புருவத்தை உயர்த்தினேன். கீழ் வாயைக் கொஞ்சம் கோணலாக்கினேன். பேசத்தொடங்கினேன்.


“ஹஹஹஹ.... எல்லோரும் எப்படி இருக்கிங்க.. நான் தான் நம்பியாரு பேசறேன்... எம்.ஜி.ஆரு எப்படி இருக்காரு... அவரை கேட்டதா சொல்லுங்க.. ஹஹஹ...”


புனிதவதி டீச்சர் முதற்கொண்டு வகுப்பில் எல்லோருமே கைதட்டினார்கள்.


“நல்லா பேசற மணி... எங்க கத்துகிட்ட..”


“தெரியல டீச்சர்.. சும்மா பேசிப்பார்த்தேன் வந்திருச்சி...”


“பரவாலையே...திறமைசாலிதான் நீ.. மணி, இதை இப்படியே விட்டுடாத.. அப்படியே மத்த மத்த குரலிலும் பேசக் கத்துக்கோ... ஏன்னா எல்லோராலும் இப்படி பல குரலில் பேசிட முடியாது..”


“பல குரலா...?” வகுப்பில் யாரோ ஆண் குரல்.


“ஆமா பிள்ளைங்களா... இப்படி பேசறதுக்கு பெயர்தான் பல குரல், சீக்கிரமே நம்ம மணி நிறைய குரல்ல பேசப்போறாரு...”


மாணவர்கள் சிரித்தனர். இந்த சிரிப்பு எனக்கு சில்லென்று இருந்தது. மர்லின்  அதிலும் ‘மணி பேசப்போறாரு’ என ஆசிரியர் மரியாதையாய் சொன்னது இன்னும் சில்லானது.


புனிதவதி ஆசிரியரின் பாடம் முடிந்தது. முதல் நாள் என்பதால் எங்களை குறித்த அறிமுகத்திலேயே பாடம் முடிந்துவிட்டது. என்ன செய்வது மர்லீன், கடிகாரம் என்னும் சாத்தான்தான், பிடித்த நேரத்தை பிடிங்கிக் கொண்டு பிடிக்காத நேரத்தை வாரி வழங்குமே.








கடிகார சாத்தான்.



புரியவில்லையா மரிலீன். விளக்கமாக சொல்கிறேனே.. பாட நேரம் முடிந்ததும், புனிதவதி டீச்சர் அடுத்தாக ஆசிரியருக்கு காத்திருக்கக்கூட முயலவில்லை. அதற்குல் வந்துவிட்டார். ஆங்கில ஆசிரியர் மோகனகாந்த. சிரிக்காதே மரிலீன் உண்மையிலேயே அவர் பெயர் மோகனகாந்த்துதான். மோகனாத் என்ற பெயரையா அடையாளம் தெரியாமல் இருக்க இப்படி மாற்றி சொல்கிறேன். உன்னிடம் உண்மையைப் பேசிக் கொண்டிருக்கும் நேரம் மர்லீன் இது.


“என்ன டீச்சர், பசங்க எல்லாம் என்ன சொல்றாங்க...இந்த ஸ்கூலு ஓக்கே வா.. ”


“ஓக்கே சார், பசங்க எல்லாம் நல்லா பேசறாங்க.. மணி பையன் கூட பல நம்பியார் மாதிரியெல்லாம் பேசினான்...”


“எது, மணி பேசினானா...எங்க கேட்டுப் பாப்போம்...?”


மோகனகாந்த் ஆசிரியரின் பார்வை என் மீது திரும்பியது. இடது கையை காட்டி என்னை அழைத்தார். வலது கையில் புத்தகமும் ரோத்தானும் இருந்தன.  என் இடத்தில் இருந்து வாசலுக்கு அந்த இருவரையும் நோக்கி நடக்கும் போதே எப்படி பேசலாம் என்ன பேசலாம்...  என எனக்கு நானே ஒத்திகைப் பார்த்துக் கொண்டேன்.


“என்ன மணி நம்பியார் மாதிரியெல்லாம் பேசினியாம்.. ”


“உங்களுக்கு நிஜமாவே தெரியாதுங்களா சார்.. நல்ல திறமை சார் பையனுக்கு..” என்றார் புனிதவதி ஆசிரியர்


“ம் நல்ல திறமைதான்.. எங்க மணி சொல்லு...”


“நம்பியார் மாதிரி என்ன சார் சொல்லட்டும்..” என்றேன்..


“நம்பியார் மாதிர் வேணாம் , முதல்ல பிஸ்னஸ்க்கு ஸ்பெலிங் சொல்லு...”


“பி...பி.... ”


“என்ன டா பி, அதுக்கு அப்பறம் என்ன வரும்..”


“பி.. ஸ்..ன...ஸ்..”


“ஓ.. பிஸ்னஸ்க்கு ஸ்பெல்லிங் வந்து பி..ஸ்..ன..ஸ்... ஆ.... ”


வலது கையில் இருந்த ரோத்தானின் எதிர்பகுதி, என் தலையில் டக் டக் டக் என்றது.


“ஏண்டா பிஸ்னஸ்க்கு ஸ்பெலிங்... தெரியல.. நம்பியாரு மாதிரி பேசறயா நீ.. அவனுங்கதான் பணம் வாங்கிட்டு நடிச்சிட்டு போறானுங்க.. அவ்வளவு படம் பைத்தியமா நீ...”


புனிதவதி ஆசிரியரார் இந்த சம்பவத்தை யூகித்திருக்கக்கூட மாட்டார். தலையில் வாங்கிய ஒவ்வொரு அடிக்கும். என்னை விட அவர் முகம் கோணி வருந்தினார்.


“சார்..”  என அவர் ஆரம்பிக்க;


“விடுங்க டீச்சர், இவனுக்கெல்லாம், ரோத்தான்லயே போட்டு உரிச்சாதான் புத்தி வரும்.. படிக்க சொன்னா வலிக்குது நம்பியாரு மாதிரி பேசறானா...”


மேற்கொண்டு எதை பேசினாலும் எனக்குத்தான அடி விழும் என்பதை தாமதமாக புரிந்துக் கொண்ட ஆசிரியை , அடுத்த வகுப்பிற்கு போகவாத சொல்லி புறப்பட்டார். நடந்து போகிறவர் ஒரு முறை திரும்பி என்னை பார்த்தார். அவரது முகத்தில் கரிசனம் தெரிந்தது.


அன்றைய பாட நேரம் மூழுவதும், எல்லா கேள்விகளுக்கும் நானே முதலில் பதில் சொல்ல அழைக்கப்பட்டேன். மர்லின் அழைக்கப்பட்டேன் என்பதா அடிக்கப்பட்டேன் என்பதா தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் நிற்கும் கறும்பலகை அருகில் சென்று அடிவாங்கி மறுபடியும் வந்து என் இடத்தில் உட்கார்ந்துக் கொண்டேன். ஒவ்வொரு முறையும் அவரிடம் அடிவாங்கி, திரும்ப வந்து நாற்காலியில் அமரும் போது, கடிகார சாத்தான் நகர்ந்திருக்காமல் என்னை பார்த்து பல்லிளிப்பது போல இருந்தது.







வாசனையின் இருப்பிடம்


மறுநாள், வகுப்பாசிரியர் புனிடவதி தன் கையில் மிட்டாய் பொட்டலத்தோடு வந்தார்.


“வணக்கம் ஆசிரியை”


“வணக்கம் உட்காருங்க..”


நேற்று அவரால் நான் வாங்கிய அடிகளுக்கு என்னை சமாதானம் செய்யவா, இத்தனை மிட்டாய்களை வாங்கி வந்திருக்கிறார் என நினைத்தேன்.


“ பசங்களா... நேற்றுதான் உங்க வகுப்புக்கு முதன் முதலா வந்ததால.. ஒன்னும் கொடுக்க முடியல.. இந்தாங்க ஆளுக்கு ஒரு மிட்டாய் எடுத்துக்கோங்க... இதே போல அழகா வர மாணவருக்கு, நல்லா படிக்கற மாணவருக்கு, விடுமுறை எடுக்காம வர மாணவருக்கு , பரிட்சையில் பாஸ் பண்ற மாணவருக்கு, கையெழுத்து அழகா இருக்கற மாணவருக்கு , மிட்டாய் கொடுக்கப் போறேன்.”


ஆமாம் மர்லின் அவர் எங்களுக்கு வகுப்பு ஆசிரியர் என்று சொல்லிவிட்டேன். என்ன பாடமென்று சொன்னேனா.. பாரேன் மரிலின் உன்னிடம் பேசும் ஆர்வத்தில் ஏதேதோ சொல்லி முக்கியமானதை மறந்துவிட்டேன். அவர்தான் எங்களுக்கு தமிழ் மற்றும் விளையாட்டு ஆசிரியர்.





விளையாட்டு திடல்


காலை பொழுதுன் முதல் பாடம். உடற்கல்வி. தெளிவாக கேள் மர்லின் நான் சொன்னது உடற்கல்வி , உடல் கலவி அல்ல. ஆனாலும் நமது மறக்க முடியாத கலவிகளில் ஒன்று இன்னமும் மனதில் இருக்கிறதே.. சொல்லவா....?


தொடரும்...

ஜூலை 21, 2013

மலேசிய எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கிறோம்..!

(12 ஜூலை 2013 அன்று க. பாக்கியம் ஏற்பாட்டில் ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ. ராஜேந்திரன் அவர்களும் மலாயா பல்கலைக்கழக இணைபேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களும் பேசிய சில விடயங்கள் விவாதத்துக்குறியதாகச் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்தன. அதற்கான எதிர்வினைகளை வல்லினம் இங்கே பதிவு செய்கிறது...  http://vallinam.com.my/version2/ அதில் வெளி எனது கட்டுரையை இங்கே பதிகிறேன்)





மலேசிய எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கிறோம்..! 

 





06
  

நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். மிக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்; இதுவரையில் பெண்களுக்கு எழுத்தாளர் சங்கம் கொடுத்து வந்த மரியாதை, பரிசு , முக்கியத்துவமெல்லாம், அவர்களின் எழுத்துகளை படித்ததால்தான் என நினைந்திருந்த அவர்களுக்கும் சரி, இன்னமும் எழுத்தாளர் சங்கத்தில் அதி பயங்கரமாக உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் சரி… சரியாக புரிய வைத்துவிட்டார் சங்கத்தலைவர். இதுவரையில், ‘கொடுத்தது’ எல்லாமே கட்டாயத்தின் பெயரிலும், ஒரு பெண்ணுக்காவது பரிசு, கொடுக்கனுமே என்ற ஆண்களின் பெருந்தன்மையாலும்தானாம். அதோடு, தான் தலைவரான பிறகு, பெண்களுக்கு கண்டிப்பாக பரிசு கொடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இருப்பதாக மேடையிலே முழங்கிய எழுத்தாளர் சங்க தலைவரின் அந்த பேச்சி; பேச்சு என்பதை விட  ஆணாதிக்க சிந்தனை என்பதே சரி கண்டிக்கத்தக்கது.

எனது எதிர்வினையை அவருக்கு காட்டும் வகையில் வரும் , ஞாயிறு நடைபெறவிருக்கும் சிறுகதை பரிசளிப்பு விழாவை நான் புறக்கணிக்கிறேன். எனது சிறுகதையும் ஒரு கதையாக பரிசளிப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கென சன்மானமாக 250ட்டும் தரப்படும். RM 250.00 வெள்ளிக்காக சுரணையற்ற ஒருவனாய் பல்லைக் காட்டிக் கொண்டு முன்னே போய் முகம் காட்ட எனக்கு உடன்பாடில்லை.

“நிகழ்ச்சியினை புறக்கணித்த பிறகு அவர்கள் கொடுக்கும் கதைக்கான  சண்மானத்தை மட்டும் ஏன் வாங்கிக் கொள்கிறீர்கள்…?” எனும் கேள்வி கையாலாகாத திசையில் இருந்து என்னை நோக்கியும் , அவர் பேச்சினால் நிகழ்ச்சியினை புறக்கணிக்கும் சிந்திக்கத் தெரிந்த இதர எழுத்தாளர்களை நோக்கியும் வீசப்படலாம்.

சொல்லவேண்டியது ஒன்றுதான்;

எங்களை கதைகளை விற்று வியாபாரம் செய்யபோகிறீர்கள். எங்கள் கதைகள் உங்கள் வசதிக்காக ஏதோ பெயரில் புத்தகமாக்கப்படுகிறது. அது சம்பத்தப்பட்டவர்களுக்கு 10 வெள்ளியாகவும். மற்றவர்களுக்கு 30 வெள்ளியாகவும் விற்பக்கப்படவுள்ளது. நீங்கள் பயன்படுத்திய எங்கள் கதைகளுக்கும் , எழுதிய எங்களுக்கும் தரவேண்டிய ‘copyright’. கதையை பயன்படுத்தி விற்கும் உங்களிடம் இருந்து எங்களுக்கான உரிமம் வரவில்லையென்றால், நாங்கள் காவல் நிலையத்தில் கூட புகார் செய்யலாம் அதுதான் உரிமம். துரதிஷ்டவசமாக இந்த உரிமம் குறித்து அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். எழுத்தாளர்களுக்கும் இது குறித்து சங்கத்தின் மூலமோ அதன் தலைவரின் மூலமோ கூட தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால் தங்களின் உழைப்பிற்கான ஊதியத்தை இப்படி அடுத்தவர் விளம்பரத்தில் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும் எங்கள் கதையை நூலாக பிரசுரிக்க சங்கம் எங்களிடம் அனுமதி பெறவில்லை. அனுமதி பெறாமல் நூலாகப் போட்டி அதை விற்று பணமாக்கும் சுரண்டலை ஏற்க முடியாது. உள்ளே உள்ளது எங்கள் உழைப்பு.

தான் பலர் முன்னிலையில் மேடையில் பேசிய ஆணாதிக்க சிந்தனையை திரும்ப பெறும்வரையிலும் அதற்காக மன்னிப்பு கேட்கும் வரையில் இனி மலேசிய எழுத்தாளர் சங்க நிகழ்ச்சி ஒவ்வொன்றும் தொடர்ந்து புறக்கணிக்கப்படும். அதே மேடையில் எண்ணகூடிய வகையில் சில ஆண்கள் இருந்தாலும், சில பெண் எழுத்தாளர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் எதிர்வினை குறித்து இன்னும் வெளிவரவில்லை. அவர்களும் சரி அங்கிருந்த மற்றவர்களும் சரி, தலைவரின் ஆணாதிக்க சிந்தனையோடு ஒத்துப்போகின்றார்கள் அல்லது அடுத்தடுத்து சங்கத்தின் மூலமும் தன் தலைவரில் மூலமும் தங்களுக்கு கிடைக்கப்போகும்; கிடைத்துக் கொண்டிருக்கும் சலுகைகளை இழக்க விரும்பவில்லை
.
அவரின் பேச்சு, ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி நான் சொல்லவில்லை கிள்ளவில்லை என்று அவராலும் அவரது கூஜாக்களாலும் சொல்ல முடியாது. நாங்கள் செயல்படக்கூடியவர்கள். வெறுமே எழுதாமலும் வாசிக்காமலும் இருக்கும் சில சங்க ஜால்ராக்கள் இல்லை.

இந்த எதிர்வினையைக் கூட செய்யவில்லையென்றால் “நானும் எழுதுகிறேன்” என சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை என்றே நினைக்கிறேன்.



தயாஜி....


ஜூலை 17, 2013

நண்பர் பாண்டியனின் கேள்விகளுக்கு.....




நண்பர் பாண்டியனின் கேள்வி...

கடந்த சில நாட்களாக எழுத்தாளர் சங்க தலைவரின் மேடைப் பேச்சு தொடர்பான எதிர்ப்பலைகள் முகநூல் வட்டத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. அவரின் பேச்சுக்கு கண்டனக் குரல்கள் இளம் படைப்பாளர்களிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதன் உச்சமாக 21.7-ல் எழுத்தாளர் சங்கம் நடத்தும் சிறுகதை பரிசளிப்பு விழாவை புறக்கணிப்பது என்று ஒரு சில படைப்பாள நண்பர்கள் (நான் உட்பட) முடிவு செய்திருந்தோம். 

இவ்விவகாரம் தொட்டு மேற்கண்ட முடிவு செய்யப்பட்டாலும் என் மனதில் ஓயாது எழுந்து கொண்டிருக்கும் உறுத்தலை வெளிப்படையாக உங்கள் முன் வைக்கிறேன். முகநூலின் வழி வெளிப்பட்ட குழப்பத்திற்கு முகநூலில் வழியே தீர்வு காண்பது என்று முடிவு செய்து விட்டேன். மூடி மறைத்து பேச தேவை இல்லாததால் நேரடியாகவே விஷயத்தை அணுகுவது நல்லது. இதை மீள்பார்வை சிந்தனை என்றும் கொள்ளலாம்.
 
1.முதலாவதாக ராஜேந்திரனின் உரை மீதான ஆத்திரத்தை சிறுகதை நூல் வெளியீட்டு விழாவில் காட்டுவது சரியா? அவருக்கு பெண்ணிய சிந்தனை என்றால் என்ன என்கிற பொது ஞானம் இல்லாததற்கும் நாட்டில் பலரும் உழைத்து எழுதிய படைப்புகள் சிறப்பிக்கப்படுவதை மறுப்பதற்கும் என்ன தொடர்பு?
 
2. சிறுகதை நிகழ்வை நாம் புறக்கணிப்பதன் வழி எதை உணர்த்த உள்ளோம்? நாம் பெண்ணிய சார்பு சிந்தனையாளர்கள் என்பதையா? அல்லது ராஜேந்திரனின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் படுகின்றன என்பதையா?
 
3. சிறுகதை நூல் வெளியீட்டில் வெளியிடப்படப் போகும் படைப்புகள் நமது உழைப்பில் விளைந்தவை என்னும் பட்சத்தில் நாமே அதை புறக்கணிக்கலாமா?
 
4. நாமே மரியாதை தராத நமது படைப்புகளை வேறு யார் மரியாதை தரப்போகிறார்கள்?
 
5. தேர்வாகி இருக்கும் 19 கதைகளை தேர்வு செய்ததில் மரியாதைக்குறிய நடுவர் குழு ஒன்று செயல்பட்டிருக்கும் என்பது உண்மை. நாம் இந்த நிகழ்வை புறக்கணிப்பதன் வாயிலாக அந்த நேர்மையான நடுவர்குழுவையும் புறக்கணிபவர்களாகிறோம். இது சரியா?
 
6. ராஜேந்திரன் சிறப்பிக்கப்போகிறார் என்கிற நோக்கத்தோடு இக்கதைகள் எழுதப்பட்டவை அல்ல. அக்கதைகளின் வெற்றி வாசகர்களால் முடிவு செய்யப்பட்டது. அவற்றை படைத்தவர் என்கிற நிலையில் அதன் வெற்றியில் நாம் பங்கெடுப்பது எப்படி தவறாகும்.
 
7. ஒரு சமுதாய விரோதிக்கு தண்டனை கொடுக்கும் நோக்கோடு நாம் நமது குழந்தையின் கழுத்தில் கத்தி வைப்போமா?
நண்பர்களே, இவை என் மனதில் கிளர்ந்தெழுந்த வினாக்கள். ராஜேந்திரனின் பிழையான கருத்தை சுட்டிக்காட்டிய நாம் மறுப்புக் குரலும் கண்டனமும் தெரிவித்தது முழுக்கச் சரியான செயல். ஆனால் சிறுகதை நிகழ்வை புறக்கணித்தல் என்பது சரியா? உங்கள் கருத்துக்களை ஒழிவு மறைவின்றி கூறலாம்.



நண்பரின் கேள்வி பதில்; 






வெறுமனே கூட்டத்தோடு ஒருவராய் போய் அமர்ந்திருந்து நமது எண்ணத்தை வெளிப்படுத்துவதால் ஏற்படும் விளைவை விட..
நிராகரிப்பதின் வழி, அதிகமாக விளையை நாம் கொண்டு வரலாம்....

///ஒரு அரசியல் வாதியிடமிருந்து மேடையில் பரிசு வாங்குவதையே நான் வெறுத்தேன். இப்போதும் வெறுக்கிறேன். அது பற்றி உங்களிடமும் பேசியிருக்கிறேன். ஆனாலும் அந்த சிறுகதை தொகுப்பை பெறுவதில் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தேன்.//// Pandiyan Anbalagan நண்பரே உங்கள் எண்ணம் எனக்கும் இருந்தது... அதற்கு முன்பாக சிலவற்றை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.. சில ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தாளர் சங்கத்தில் எனக்கு கவிதை துறைக்காக இளம் கவிஞர் விருது கொடுத்தார்கள்.. அப்போது இருந்து சிந்தனையில் எனக்கு அது மிகப்பெரிய கௌரவமாக இருந்தது... எல்லோர் முன்னிலையிலும் மாலை போட்டு, பொன்னாடை போத்தி, சான்றிதழ் கொடுத்து உடன் 500 வெள்ளியையும் கொடுத்தார்கள்.... அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, கௌரவம், அதனை வார்த்தையில் சொல்ல முடியவில்லை....

அதனை முகநூலில் பதிவு செய்தேன்; வாழ்த்து கூறி வந்த செய்திகளின் பாலமுருகன் மட்டும் வாழ்த்துக்கு பதிலாக சூதாரித்துக் கொள், இனிதான் நீ எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்ற தோணியில் எழுதியிருந்தார். முதலில் அவர் மீது கோவம் வந்தாலும், பாலமுருகனின் வாசன் நான் என்ற முறையில் கொஞ்சம் சிந்திக்கவும் செய்தேன்.



அதன் பிறகு; நணபர் ஒருவர்  அந்த விருது குறித்த பின்னனியை  சொன்னார்; அந்த விருது நிகழ்ச்சி குறித்து பேசிக் கொண்டிருந்த போது; என் பெயரை முன்மொழிந்திருக்கிறார் இவர்.. அங்கிருந்த பாதிக்கும் மேற்பட்டோருக்கு இப்படி ஒருவன் எழுதுகிறான் என்றே தெரிந்திருக்கவில்லை...அதன் பிறகு, வேறு யாரும் இல்லாததால் எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.... இதனை தெரிந்துக் கொண்ட நான் அன்றைய தினம், சேகரிந்து வைத்திருந்த எனது கவிதைகளை மீண்டும் வாசித்தேன்... எனக்கே திருப்தி இல்லாமல் இருந்தது..... (எழுதும் போது பெறுமை பட்ட கவிதைகள் அவை.... மீண்டும் வாசிக்க ஒன்றுமில்லாதது போல தோன்ற.. எனது தொடர் வாசிப்பும் ஒரு காரணம்....) கவிதைக்கு என கொடுக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. அவர்கள் யாரும் இவர்களோடு ஒத்துப்போகாததால் , தலைநகருக்கு புதிதாக  வந்திருந்த நான், வானொலியில் பணிசெய்யும் நான் தேவைப்பட்டிருக்கிறேன்.

உடனே ஆண்டு சந்தா எல்லாம்கூட கட்டினேன். சங்கத்தில் முக்கிய பொறுப்புக்கும் தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டேன். வேலை காரணமாக சம்மதிக்கவில்லை..

அதன் பிறகுதான் தூரத்தில் இருந்து வாசித்துக் கொண்டிருந்த ம.நவீனின் நட்பு கிடைத்தது. வல்லினம் இணைய இதழும் (அதற்கு முன்பும் வல்லினம் குறித்து ஓரளவு அறிந்திருந்தேன்) அறிமுகமானது. எனது பாதையை, எனது சிந்தனையை, எனது வாசிப்பின் நோக்கத்தை வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தேன்.

அப்படி எந்த கோணம் மாறாமல் இருந்திதால்;

1. எனது சொந்த பண செலவின்றி அவ்வபோது தமிழகம் சென்றிருக்கலாம். (அழைப்பும் வந்தது)
2. தமிழ்சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்பாளனாய் நான் பரவலாக அழைக்கப்பட்டிருப்பேன்.
3. பத்திரிக்கையொன்றில் என்னையும் என் வானொலி பணியையும், என் எழுத்தையும் அவ்வபோது புகழ்ந்து சிலர் எழுதி எனக்கு விளம்பரம் தந்திருப்பார்கள்.
4. சங்கத்தில் முக்கிய பொருப்பில் இருந்திருப்பேன்.
5. தொடர்ந்து பல போட்டிகளில் நான் எழுதிய கதைகள் என் உறவினர் பெயரில் பரிசு வாங்கியிருக்கும்.


ஆனால் இப்போது மாற்றம் ஏற்படுத்திய கோணத்தில்; நான் சரியாக பயணிக்கிறேன் என்ற திருப்பி இருக்கிறது. மேற்சொன்ன 5 வசதிவாய்ப்புகளும் இந்த நேர்மையான திருப்தியைக் கொடுத்திருக்காது.

இதுவரையில் இதனை யாரிடமும் பகிர்ந்திருக்கவில்லை. இப்போது உங்களின் கேள்விகளுக்கு என்னா முடிந்த பதில்களை தர முயற்சிக்கிறேன், நண்பன் என்ற முறையில்;

/////1.முதலாவதாக ராஜேந்திரனின் உரை மீதான ஆத்திரத்தை சிறுகதை நூல் வெளியீட்டு விழாவில் காட்டுவது சரியா? அவருக்கு பெண்ணிய சிந்தனை என்றால் என்ன என்கிற பொது ஞானம் இல்லாததற்கும் நாட்டில் பலரும் உழைத்து எழுதிய படைப்புகள் சிறப்பிக்கப்படுவதை மறுப்பதற்கும் என்ன தொடர்பு?/////

பதில் 1. அவர் கூறியதை மறுபடியும் இங்கே நினைவுக்கூரலாம். “நான் தலைவராக வந்தப்பிறகு பெண்களின் எழுத்துகளுக்கு கண்டிப்பாக பரிசு கொடுக்கவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் கொண்டுவந்தேன்”.  அப்படியிருக்க புதிதாக எழுதிக் கொண்டிருக்கும் சிலருக்கு கட்டாயமாக பரிசு கொடுக்கவேண்டும் என்றும் கூட எழுதப்படாத சட்டம் இருந்து நம் கதையும் தேர்வு பெற்றிருக்கலாம்.

////2. சிறுகதை நிகழ்வை நாம் புறக்கணிப்பதன் வழி எதை உணர்த்த உள்ளோம்? நாம் பெண்ணிய சார்பு சிந்தனையாளர்கள் என்பதையா? அல்லது ராஜேந்திரனின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் படுகின்றன என்பதையா?////

பதில் 2. நாம் உணர்த்துவது ஒன்றுதான். நாங்கள் சிந்திக்கின்றோம். நேர்மையோடு இருக்கிறோம். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். உங்கள் ஏமாற்று வேலைகள் கேலிக்கூத்துகள் குறித்த பிரக்ஞை எங்களுக்கு இருக்கிறது.

////3. சிறுகதை நூல் வெளியீட்டில் வெளியிடப்படப் போகும் படைப்புகள் நமது உழைப்பில் விளைந்தவை என்னும் பட்சத்தில் நாமே அதை புறக்கணிக்கலாமா?/////

பதில் 3. போட்டிக்காக , பரிசு கிடைக்குமெ என்ற எண்ணத்தில் நாம் எதையும் எழுதியிருக்கவில்லை. (தினக்குரலில் வைத்திருந்த சிறுகதை போட்டிக்கு நம எழுதியது கூட பணம் கிடைக்குமே என்பதற்காக இல்லை, எழுதும் சிறுகதை பலரால் கவனிக்கப்படுகிறது. விமர்சிக்கப்படுகிறது என்ற எண்ணத்தில்தான்) நமது உழைப்புக்கே ஏற்ற ஊதியம் கிடைத்தே தீரும். நாம் உழைப்பை புறக்கணிக்கவில்லை. நமது கேள்வியினை முன்வைக்கிறோம்.
///4. நாமே மரியாதை தராத நமது படைப்புகளை வேறு யார் மரியாதை தரப்போகிறார்கள்?///

பதில் 4. படைப்பிற்கும் படைப்பாளிக்கும் உள்ள நேர்மையே போதும் அதற்கேற்ற மரியாதையை படைப்பிற்கு கொடுக்க. எழுதிய பிறகு எழுதியதை எத்தனை காலம் நாம் காத்துக் கொண்டிருக்க போகிறோம். நீங்களும் நானும் இல்லாத போதும் கூட, நமது படைப்புகளுக்கு கிடைக்ககூடிய அங்கிகாரம், மரியாதை கிடப்பதே நமது நேர்மைக்கான அடையாளம். (அதற்காக இல்லாமல் போகவேண்டிய அவசியமில்லை. போலிகளிடம் போகாமல் இருப்போம்.)
சோடை போனவர்களின் எழுத்துகளைவிட ரோசமானவர்கள் எழுத்து கண்டிப்பாக நிற்கும். பாரதி வாழ்ந்த காலத்தில் பரிசு வாங்கிய எந்தனை கவிஞர்கள் குறித்து நாம் பேசுகிறோம்.

///5. தேர்வாகி இருக்கும் 19 கதைகளை தேர்வு செய்ததில் மரியாதைக்குறிய நடுவர் குழு ஒன்று செயல்பட்டிருக்கும் என்பது உண்மை. நாம் இந்த நிகழ்வை புறக்கணிப்பதன் வாயிலாக அந்த நேர்மையான நடுவர்குழுவையும் புறக்கணிபவர்களாகிறோம். இது சரியா?///

பதில் 5. மீண்டும் முதல் கேள்விக்கான பதிலை படிக்கலாம். அப்படி கட்டாயத்தில் பெயரில் பெண்களுக்கு பரிசு கொடுத்திருக்கிறோம் என்று சொன்ன பிறகுமா, அந்த நடுவர் குழுவை நீங்கள் நம்புகிறீர்கள். நானும்தான் நம்புகிறேன், அந்த நடுவர் குழுவில் இருந்து ஒருவராவது மறுப்பு தெரிவிப்பார் என்று... இதனை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடிவரை அப்படி ஒரு அதிசயம் நிகழவில்லை.. நீங்கள் இதனை வாசிக்கும் போது அந்த அதிசயம் ஏற்பட்டிருந்தால் சொல்லுங்கள்.

////6. ராஜேந்திரன் சிறப்பிக்கப்போகிறார் என்கிற நோக்கத்தோடு இக்கதைகள் எழுதப்பட்டவை அல்ல. அக்கதைகளின் வெற்றி வாசகர்களால் முடிவு செய்யப்பட்டது. அவற்றை படைத்தவர் என்கிற நிலையில் அதன் வெற்றியில் நாம் பங்கெடுப்பது எப்படி தவறாகும்///

பதில் 6. படைத்தவர் என்ற முறையில் வெற்றி என்று நான் கருதுவது, இவர்கள் கொடுக்கும் நேர்மையற்ற மேடையோ, புகைப்படத் தேவைக்கு மாலையோ இல்லை என நினைக்கிறேன்./// அக்கதைகளின் வெற்றி வாசகர்களால் முடிவு செய்யப்பட்டது./// என நீங்களே சொல்லியுள்ளீர்கள்... ஆக நம் படைப்புகளால் பாதிப்பை எதிர்நோக்கிய வாசகனோடு உரையாடுவதுதான் படைப்பாளியின் வெற்றி என்று கருதுகிறேன்.


///7. ஒரு சமுதாய விரோதிக்கு தண்டனை கொடுக்கும் நோக்கோடு நாம் நமது குழந்தையின் கழுத்தில் கத்தி வைப்போமா?///

பதில் 7. எனது god father எனக்கு சொன்ன ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. “தயாஜி.. எல்லா நேரத்திலும் செண்டிமெண்டல் நமது உதவாது... நம்ம காலை வாரிவிட்டுடும்.....”. அந்த சமுதாய விரோதிக்கு தண்டனை கொடுப்பதற்கு என்ன காரணம் என்றால்; நம் குழந்தையின் உடலில் வைரஸ் கிருமியை ஊசியேற்றியதுதான் என்று வையுங்கள். இன்னும் சில நிமிடங்களில் குழந்தை துடிதுடித்து தாங்க முடியாத துயரப்பட்டு மரணமடையபோகிறது. அதோடு குழந்தையில் உடலில் இருக்கும் வைரஸ், குழந்தை இறந்த பிறகு அழிக்க முடியாததாகி பரவப்போகிறது. என்ன செய்வோ; சமூக விரோதிக்கு தண்டனை கொடுக்கும் முன்பாக, நம் குழந்தையை குணமாக்க முயல்வோம். முடிந்தவரை முயல்வோம். முடியாதென முடிவாக தெரிந்த பின்னர்... குழந்தை கழுத்தில் கத்தி என்ன , கருணை கொலைகூட அங்கே நடக்கலாம். நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் செயலிலும், தன் சுற்றத்தாரை, சொந்தங்களை, நண்பர்களை , குடும்பங்களை . மனைவி , பிள்ளைகளை இழந்தவர்கள் கதை நமக்கு தெரிந்தும் ஒரு குழந்தைக்காக இப்படி யோசிப்பது...?  இது சரியான தருணம். அந்த வைரஸ் கிருமிக்கு ஒரு முடிவு கட்டும் நேரம். இனியும் அது பரவக்கூடாது.


///ராஜேந்திரனின் பிழையான கருத்தை சுட்டிக்காட்டிய நாம் மறுப்புக் குரலும் கண்டனமும் தெரிவித்தது முழுக்கச் சரியான செயல். ஆனால் சிறுகதை நிகழ்வை புறக்கணித்தல் என்பது சரியா?////

கொதிப்பதை நிறுத்த எரிவதை எடுக்கத்தானே வேண்டும். எடுக்கவும் மாட்டோம், கொதிப்பதும் கூடாதென்றால் எப்படி.


இத்தனை நீளமாக இதனை எழுதுவதற்கு ; காரணம்.. நீங்கள் உரையாட தயாராக உள்ளீர்கள்.. மற்றவர் கருத்தினை நீங்கள் கேட்க விரும்புகிறீர்கள் என்பதனால்தான். மற்றபடி உங்கள் நண்பன் என்ற முறையிலும், உங்கள் வாசகன் என்ற முறையிலும், நேர்மையோடு என் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேன். மற்றபடு உங்கள் சிந்தனை உங்கள் தேர்வு உங்கள் முடிவு.
நன்றி.

ஜூலை 07, 2013

என் இனிய மர்லின் மன்றோ- பகுதி 1



என் இனிய மர்லின் மன்றோ... இன்னமும் நீ என்னை நினைவில் வைத்திருக்கிறாயா..? உன்னிடம் இப்படி கேட்பதற்கு எனக்கு நெருடலாக இருக்கிறது. என்ன காரணம் சொல்வது எனக்கு உண்மையிலேயே தெரிந்திருக்கவில்லை.

  எத்தனை இரவுகள் நீ என்னை அசந்து தூங்க வைத்திருக்கிறாய். எத்தனை முறை கையாகவும் சுவர்கார நுறையாகவும் என்னிடம் விளையாடியிருக்கிறாய். தூக்கியெரிந்திருந்தாலும் இன்னமும் நினைவில் இருக்கும் நாம் நனைந்த தலையணை.

  தலையணை.

  எனக்காக நீ எப்படியெப்படியோ தலையணையில் நுழைந்தாயே..? எப்படி முடிந்தது உன்னால். உன் தேகத்தை தலையணையில் பூதமாய் நுழைத்து என்னை அணைத்து கொண்ட உன் மேனி வாசம், வேறெங்கினும் எனக்கு கிடைக்கவில்லை.

  தெரியுமா உனக்கு கிட்டதட்ட ஆறேழு மாதங்களாக கதையோ கவிதையோ எதையும் எழுதாமால் உன் நினைவால் தவித்துக் கொண்டே இருக்கிறேன். “பேஸ்புக்கில் உன்னை பார்க்கிறேனே” என்கிறாயா..? என்ன சொல்வது அங்கு எழுதுவதெல்லாம் என்ன எழுத்தா? ஒரே நேரத்துல் காவிய கோட்டையும் குப்பை தொட்டியும் இருப்பது அங்கிதானே.. சில குப்பைகள் கோட்டைச்சுவர்களையே மறைத்துவிடும் சமயம் அங்கு நான் எழுதுவதெல்லாம் உனக்கு எழுத்தாகவா தெரிகிறது. எனக்கு சிரிப்புத்தான் வருகிறது.

  முதன் முறை நீ சிரித்த நேரம் நினைவில் இருக்கிறதா மர்லின். அப்போதுதான் உன்னை , பெயர் கூட தெரிந்திருக்காத உன்னை பார்த்தேன். காலெண்டரில் கால் மேல் கால் போட்டு, ஒரு கையை தலைக்கு மேல் தூக்கியிருந்தாய். அப்போது உன் அரைகுறை ஆடையை விட, வழவழ தொடைகளை விட, பிதுங்கிய மார்பைவிட உன் சிரிப்புதான் எனக்கு தெரிந்தது. அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாத நாள் அன்று,

“டேய் மணி இங்க பாரு”

“என்ன தாஸ் என்ன கொண்டுவந்திருக்க..?”

“யார்கிட்டயும் சொல்லிட மாட்டியே...?”

“இப்படி பயந்து சாகுற அளவுக்கு என்னடா கொண்டு வந்திருக்க, காசு எதையும் எடுத்துட்டு வந்துட்டியா..?”

“யேண்டா அன்னிக்கு நான் வாங்கன அடி பத்தாதா... இன்னமும் வாங்கனுமா..?”

“அப்பறம் என்னடா...சொல்லுடா அடுத்த சாரு வந்திடப் போறாரு... ”

“தோ பாரு டொண்ட டொய்”

“டேய்....!!!

தாஸ்.

   என் நன்றிக்கு உரியவம் அவந்தான். அவன் காட்டிய காலெண்டரில்தான் நீ முதன் முதலாக என் கண்ணில் தெரிந்தாய். அந்த வழவழ தாளில் உன்னை அபப்டியே அங்கேயும் இங்கேயும் கைவைத்த தாஸ் என்னை பார்த்த பார்வை இருக்கிறதே... என்ன ஒரு திருப்தி , நிறைவு அவனது பார்வையில் ஆனால மர்லின் உண்மையை சொல்வதென்றால் உன்னை சிரிப்பு , உனது கண்கள் அதனை தாண்டி என்னால் வேறெங்கும் பிரவேசிக்க முடியவில்லை. அப்படியே என்னை ஸ்தம்பிக்க வைத்துவிட்டாய் நீ. மர்லின் .

யு.பி.பெர்படானான் தமிழ் பள்ளி.

   கெட்டிக்கார மாணவர்கள் முன்வரிசையிலும், வீட்டுப் பாடங்களை சரியாக செய்யும் மாணவர்கள் இரண்டாம் மூன்றாம் வரிசையிலும். அழுக்கு சட்டையும் அசிங்கமான முகமும் கொண்டவர்கள் கடைசி வரிசையிலும் உட்கார்த்திருந்தோம். என் தலை முடியை எத்தனை முறைதான் நான் சீவி தொலைத்தாலும், கொஞ்ச நேரத்தில் ஆங்காங்கே எழுந்து நின்று என்னை அந்த வரிசையில் உட்கார காரணமாகியது. சுமாராக படிக்க வந்ததலும் ஒன்று அல்லது இரண்டு நாற்காலிக்கு முன் சென்றிருக்கலாம்.

   எங்கள் வகுப்பின் கடைசியில் நாங்களும் எங்களுக்கு பின்னால் ஒரு மேஜையும் அதில் வகுப்பில் உள்ளவர்கள் கொண்டுவரும் தண்ணீர் சாப்பாட்டு டப்பாக்களும் இருக்கும். ஒரு முறை மாணவி ஒருத்தி கொண்டு வந்த கோப்பி டப்பா, கவிழ்த்து வகுப்பை நாரடித்ததால் இப்படி ஒரு மேஜையை ஏற்பாடு செய்திருந்தார் வகுப்பாசிரியர்.

   உன்னை என் கண்களும் தாஸின் கைகளும் மேய்ந்துக் கொண்டிருந்ததை பின்னால் இருந்து யாரும் பார்த்திருக்க வேண்டும். கொஞ்ச நேரத்தில் வகுப்பில் சலசலப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு மாணவரும் எங்களை பார்த்தவாரே பக்கத்து நாற்காலி மாணவனிடம் எதையோ சொல்வது தெரிந்தது. வகுப்பு தலைவனாக இருக்கும் மாணவன் தினமணி. அவனுக்கு எங்களுக்கும் அரவே ஆகாது. ஏதோ பெரிய பருப்பு மாதிரிதான் எழுந்து, நெஞ்சை நிமிர்த்தி எங்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.

“என்ன படம்டா அது”

“என்ன படம்...”

“ஒழுங்கா காட்டப் போறிங்களா இல்ல சார்கிட்ட சொல்லவா..?”

எனக்கு கோவம் வந்துவிட்டது. மர்லின் உனக்காக நான் கோவப்பட்டது அப்போதுதான்.

“முதல்ல நீ ஒழுங்க உன் எடுத்துக்கு போ... டா..”

தாஸும் உடன் சேர்ந்துக் கொண்டான்

“போடா.. போய் ஒக்காரு... வந்துட்டான்...”

   பேசிக்கொண்டே மேஜையின் உள் கையை வைத்து எதையோ மறைப்பதை கவனித்த தினமணி. தண்ணி குடிப்பது போல பின்னால் சென்று, சட்டென்று மேஜையின் உள் கையை விட முயன்றான். நாங்கள் இருவரும் அவனை பிடித்து அப்படியே கீழே தள்ளிவிட்டோம். விழுந்தவன் கொஞ்டம் தள்ளி விழுந்திருக்கலாம். வீணாய் போனவன் அந்த டப்பா மேஜையிலா போய் மோதி விழ வேண்டும். அந்த தடியன் மோதிய வேகத்தில் மேஜை அப்படியே விழ, மேஜையில் இருந்த சாப்பாட்டு டப்பாக்களும் கோப்பி டப்பாக்களும், தாறுமாறாக விழுந்தன.

   கோப்பிகளும் , தே தண்ணிகளும், ஜூஸ்களும் ஒன்றாய் கலந்து  தரையில் ஒரு வித கலராய் கழ்ந்தது. கோப்பி டப்பாக்களுக்கே இந்த கதின்னா...? சப்பாட்டு டப்பாவை சொல்லவா வேணும் மர்லின்.

வகுப்பு முழுவதும் கலவரமாகியது.

   நிலமை இன்னும் மோசமானது, அந்தெ நேரம் பார்த்து ஆங்கில ஆசிரியர் நுழைந்த போதுதான். ஏற்பட்ட கலவரத்தில் மர்லின் உன் போட்டோவை மறைக்க மறந்தே போனோம். பிறகு தலைமையாசிர் அறைக்கு சென்றது மறுநாள் அப்பா அம்மாவை வர சொன்னது. வீட்டில் வாங்கிய அடியெல்லாம். எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். இப்படித்தான்  கோவம் மறந்து சிரித்துவிடுவாய்.

   உன்னை எனக்கு முதன் முதலாக அறிமுகம் செய்த அந்த புகைப்படம் இன்றுவவரை வேறெங்கும் நான் பார்க்கவில்லை. எத்தனையோ இடங்கள் இணைய தளங்கள் தேடித்தேடி அதை விட அழகாகவும், அபூர்வமாகவும் உள்ள உன் படங்கள் கிடைத்தன ஆனால்.. அந்த படம், உன் புன்னகையில் நான் உறைந்த படம், உன் கண்கள் உன்னை மட்டும் பார்க்க வைத்த உன் கண்கள் இன்னமும் காணக்கிடைக்கவில்லை.

  உன்னோடு கொஞ்சம் பேச வேண்டியே இப்போது இதனை எழுதுகிறேன் மர்லின்.  உன்னிடம் நான் சொல்லாத சில கதைகள் இருக்கிறது. என்னதான் உன்னை மட்டும்தான் உன்னிட, மட்டும்தான் என நான் சொல்லி வந்திருந்தாலும், அதில் நூறு சதவிதம் உண்மை இல்லை. இது உனக்கு தெரிந்தும் என்னிடம் தெரியாததுபோலதானே மர்லின் இருந்தாய் நீ. அதன் நேர்மைதான் இன்று உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு காரணம். இதனை தெரிந்துக் கொண்ட பின் நீ இன்னும் என்னுடன் நெருங்கலாம். வெறுக்கலாம். தூரப்போகலாம். அல்லது, நீயும் கூட இப்படியாக மறைத்த உண்மைகளை சொல்லலாம். ஆனால் முதலில் என்னை சொல்லவிடு.

சொல்லவா..?

சொல்லத் தோன்றும் போதுதான், எங்கே ஆரம்பிப்பது என தெரியவில்லை.

   புரியாத வயதில் நடந்த ஒரு சம்பவம் பின் ஒரு நாளில் புரிந்த அனுபவம் இருக்கிறதா மர்லின் உனக்கு. அப்போது எனக்கு பதினோரு வயது. தாமான் ரியா ஜயாவில் மாமா புதிதாக வீடு வாங்கியிருந்தார். புது வீடு என்பதாலும் பள்ளி விடுமுறை என்பதாலும் அங்கே ஒரு வாரம் தங்கினோம். நானும் எனது அண்ணனும். வழக்கமாகவே வீட்டில் கடைக்கும் கடன் வாங்குவதற்கும் முதல் மகனை அனுப்ப மாட்டார்கள். கடைசி பிள்ளையைத்தான் அனுப்புவார்கள். சின்னப்பையன் என்பதாலோ, பாவப்பட்ட முகம் என்பதாலோ சரியாக தெரியவில்லை.

   மாமா வீட்டில் இருந்து கடைக்கு அதிக தூரமில்லை. இருந்தாலும் பிரச்சனையில்லை நான்தான் கடைக்கு செல்லவேண்டும். சென்றேன். புதிய இடம் என்பதால் ஒவ்வொரு வீட்டுவாசலை கடக்கும் போது தெரிந்தவர்கள் கண்ணீல் படுவார்களா என்றே தேடினேன். எப்போதும் காணக்கிடைக்கும் தெரிநாய்களைவிட வேறெந்த தெரிந்த முகமும் தெரியவில்லை.
     கடை.

    பெரிதாகத்தான் இருந்தது. ஒரு தாத்தாவும் கூட வேலை செய்ய ஒரு பையனும் இருந்தான். அவனுக்கு என் வயதோ அல்லது குறைந்ததோ இருக்கலாம். கடையில் சாமான்கள் நெரிசலாக அடுக்கபப்ட்டிருந்தது.  ஒருவர் நுழையும் போது இன்னொருவர் வழிவிடும் வகையில் கொஞ்சம் கூனிக்குருகவே வேண்டும். பணம் கட்டும் இடத்தில்உம் நெரிசலாகத்தா இருந்தது. மேஜை. தாத்தா. அவரது தலைக்கு மேலே ஊதுபத்தியும் பெயர் புரியாத எழுத்துகளும் இருந்தன. கடையில் யாரும் இல்லை. நான் நுழைந்ததும், மேஜையின் கீழே எதையோ தேடிக்கொண்டிருந்த பையன் வெளிவந்தான். அவனிடம் அந்த தாத்தா;

“டேய் பையா, போ போய் மின்னுக்கு ரொட்டி வக்கிற இடத்தை சுத்தம் செய்யு..?”

அந்த பையன் என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே சிரித்தான். நானும் சிரித்து வைத்தேன். வாசலின் வெளியே சென்ற அந்த பையன் , ரொட்டியை வைத்திருந்த வக்குலை வாசலுக்கு இழுத்து வந்தான். உள்ளே செல்லும் வழியும் அதுதான் வெளியேறும் வழியும் அதுதான். வாசலில் உட்கார்ந்து ரொட்டி பாக்கேட்டுகளை துடைத்துக் கொண்டிருந்தான். கடைக்கார தாத்தா;

“வா பையா என்ன வாங்க வந்த..”

“தாத்தா, கோதுமாவு வேணும் ஒரு கிலோவோட...”

“ஓ.... ஆமா தம்பி என்ன புதுசா இருக்கியே... யார் வீட்டுக்கு வந்திருக்க...?”

“இங்க மாமா வீடு வாங்கியிருக்காரு.... அதான் லீவுக்கு வந்திருக்கேன்.. எங்க வீடு யு.பி-ல இருக்கு...”

“அப்படியா தம்பி நல்லது, உன்னோட பேரு என்னா...”

“என் பேரு மணி”

“ஓ.. அதான் நீயும் மணி மாதிரியே இருக்க...”

என்றவர் எழுந்தார். அருகில் வந்தார். என் தலையில் கைவைத்து முடியை கோதிவிட்டார். என்னை அப்படியே முன்னுக்கு தள்ளியவர் என் பின்னால் சாய்ந்து என்னை அப்படியே இறுக்கினார். மர்லின் இப்போது போலவே , அப்போதும்  நான் உயரமாகத்தான் இருந்தேன். தாத்தாவின் இடுப்பும் எனது இடுப்பும் ஒரே அளவில்தான் இருந்தது. என்னை இறுக்கியவர் அப்படியே என் கண்ணங்களையும் காதுகளையும் கைகளால் தடவினார். அதுவரையில் நான் கேட்டிடான விதமாய் அவரிடம் இருந்து ஏதோ சத்தம் வந்தது. நினைவுக்கு வந்துவிட்டது மர்லின் , காதில் கோழி இறகை வைத்து நீ குடைந்திருக்கிறாயா..? ஆம்.. அப்போது ஒருவிதமான சுகம் கிடைக்கும். தனியாய் இருந்து இப்படி குடையும் போது நம்மை அறியாமல் நாமே ஒரு வித சத்தம் கொடுப்போம். அதே சத்தம்தான் அந்த தாத்தாவிடம் இருந்து வந்தது.


என் பின்னால் என்னமோ கடினமாய் ஒன்று அழுத்துவதை அப்போது உணர்ந்தேன். எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது.

“தாத்தா... தாத்தா...”

என கூப்பிட்டெனா கெஞ்சினேனா என தெரியவில்லை. அந்த தாத்தா மிக மும்முரமாக என் பின் புறத்தை அழுத்தி தேய்த்துக் கொண்டே இருந்தார்.

சட்டென வாசலில் இருந்து சத்தம் கேட்டது.

“வாங்கண்ணே... இருங்க இதை நகர்த்திடறேன்”

பையனின் குரல் கேட்டது. தாத்தா என்னை விடுவித்தார். அவரின் நாற்காலிக்கு போய் உட்கார்த்து மேஜைக்குள் தன் கால்களை மறைத்துக் கொண்டார்.

“டேய் பையா... இந்த தம்பிக்கு என்னமோ வேணுமா...? எடுத்துக் கொடு டா.. ரொட்டி பையை அப்பறமா துடைக்கலாம்”

கடை வாசலில் இருந்து ரொட்டி வக்குலை பையன் நகர்த்து பழைய இடத்திலேயே வைத்தான். உள்ளே ஒருவர் நுழைத்து சிகிரெட்டுகளை ஒவ்வொன்றாக விலையை கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு பின்னாலேயே நுழைந்த அந்த பையன் , என்னிடம்;

“என்ன வேணும்..”

“கோதுமாவு”

“இங்க இருக்கு...”

“ம்”

அந்த பையன் முன் போக, அவனது பின்னால் நானும் போனேன். வழக்கம் போல என்னால் வேகமாக நடக்க முடியவில்லை மர்லின். இரு கால்களையும் அகலப்படுத்தியே என்னால் நடக்க முடிந்தது மர்லின்.

கோதுமாவை அந்த பையன் என்னிடம் கொடுத்தான். விலையை சொன்னவன் தொடர்ந்து;

“வலிக்குதா...?”

“ம்...”

“இல்ல வலிக்குதான்னு கேட்டேன்...?”

“என்ன வலிக்குது...”

“உங்களுக்கு பரவால... எனக்கு வாந்தியே வந்திருக்கு...”

“ஏன்...”

“நீங்க வர்ரதுக்கு முன்னதான் , அந்த ஆளோட மேஜை கீழ நானு....” முடிப்பதற்குள்;

“டேய் பையா என்னடா கதை அங்க.. சாமானை எடுத்து கொடுக்க இவ்வளோ நேரமா...”

“கோதுமாவு, அலமாரி மேல இருக்குது அதான் ஏறி எடுத்தேன்... கொடுத்துட்டேன்...”

கோதுமாவுக்கான பணத்தைக் கொடுத்த பிறகு, அந்த தாத்தா என் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தமிட்டு கையில் இரண்டு மிட்டாய்களைக் கொடுத்தார். திரும்பி நான் நடக்கும் போது என் பின்னால் தட்டிவிட்டு சிரித்தார். கையில் கோதுமாவுடனும், இரண்டு மிட்டாய்களுடனும் நடக்கத்துடங்கினேன். கடைக்கு வெளியில் வந்து நடந்தேன். யாரோ கூப்பிடுவது போல இருந்தது. திரும்பி பார்த்தேன். அந்த பையன் தான் கடைக்கு வெளியின் நின்றுக் கொண்டிருந்தான். பார்த்தேன். பார்த்தான். தன் கையைக் காட்டினான். அவன் கையின் இரண்டுக்கும் அதிகமான மிட்டாய்கள் இருந்தன.

அதன் பிறகும் நான் கடைக்கு சென்ற இரு சமங்களிலும் அந்த தாத்தாவின் நாற்காலியில் வேறொரு ஆள் இருந்தார். தாத்தாவின் மகன் போலவே இருந்தார் அதே முகம் அதே முடி அதே தடித்த மூக்கு. அந்த பையனும் இருக்கவில்லை.

நான் வேண்டியதை கேட்டதும், அவர் யாரையோ கூப்பிட்டு மலாய் மொழியில் பேசினார். வெளி நாட்டு பெண் ஒருத்தி ஓடிவந்தாள். நான் கேட்டதை , அவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். மர்லின், அவள் என்னை பார்த்து சிரித்ததும் அவளது கறைபடிந்த பற்கள் என்னை கிளியடைய செய்தன. அதிக மிட்டாய் சாப்பிட்டிருப்பால் போல...

ரொம்ப நாளாக அந்த தாத்தாவின் செயல் எனக்கு இனம் புரியாத கேள்வியை கேட்டுக் கொண்டே இருந்தது.



மர்லின் உன் பெயரே எனக்கு முழுமையாக தெரியும் முன்பே, உன் உடல் குறித்து நான் தெரிந்துக் கோண்டேன்.

அன்றொரு நாள்,

உன் மேனியெங்கும் வழிந்து வந்த ஈரத்தை துடைக்க உன்னை , அப்படியே நிற்கவைத்து உன்னை என் கைகளால் துவட்டினேனே..!

உன் ஈரம் படிந்த மார்பின் மேற்பரப்பு ஆடையை உதட்டின் அருகில் வைத்து உஷ்ண காற்று ஊதினேனே...!

கீழே வழிந்து ஓடும் நீரின் காரணம் உன் ஜீன்ஸ்தான் என்ற எனது கண்டுபிடிப்பை ரசித்து சிரித்தாயே..!

ஊதிய உஷ்ண காற்று போதாது என பேசிய பொழுது, என்னை மேலும் ஏங்க விடாது நீயாகவே உன் மேலாடையை கழட்டினாயே...!

ஒன்றோடு ஒன்றென பின்னர் ஆடையற்ற நீ, நிர்வாண மனதுடன் நான்..!

அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திடாது மனது.


அப்போதுகூட , நீதான் நான் கண்ட முதல் நிர்வாணம் என நான் சொன்னதை விரிந்த கண்ணோடு வீங்கிய மார்போடும் கண்டு குலுங்கி சிரித்த போதுகூட நான் உண்மையை சொல்லியிருக்கலாம். அதுவல்ல நான் கண்ட முதல் நிர்வாணம்...!


முதல் நிர்வாணம்.  


நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். ஹோக்கி விளையாட்டு எனக்கு பிடித்த விளையாட்டு. பாடங்களில் பின் தங்கியிருந்தாலும், ஹோக்கியில் பலரையும் முன் தங்கியிருந்தேன். அந்த ஆண்டி இறுதியில் , மாநில அளவிலான ஹோக்கி போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.  பாடமே ஒழுங்கா வெளங்க.... விளையாடி என்னத்த கிழிக்க போற என்ற எனது வகுப்பு ஆசிரியரின் ஆலோசனையின் பேரில் போட்டிக்கு செல்பவர்களின் பட்டியலில் இருந்து என் பெயர் நீக்கப்பட்டது.

எனக்காக பரிந்து பேச வந்திருந்த ஆசிரியை பள்ளிக்கு வந்தே சில வாரங்கள்தான் ஆகியிருந்தன. புதிதாக திருமணம் ஆனவர். என் கல்வி தகுதி குறித்து அறியாதவர் என்பதால் விளையாட்டு ஆசிரியராக இருந்த அவருக்கு என் விளையாட்டில் நம்பிக்கை இருந்தது.

அவர் பேச்சு எடுபடவில்லை, எனது மாதாந்திர ரிப்போட் கார்டை பார்த்த பிறகு அவரும் பின் வாங்கிவிட்டார்.

அவர் எங்களுக்கு விளையாட்டு ஆசிரியராக வந்திருந்த போது, புதிய டீச்சர் என்பதால் நாங்கள் உற்சாகமாக இருந்தோம்.
                                                                                                                                         தொடரும்.......

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்