பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 29, 2022

- நட்ட கல்லும் ஊற்றும் பாலும் –

 

“கல்லுக்கு ஊத்தற பாலை… பசிக்கு அழும் குழந்தைக்குக் கொடுக்கலாமே..?” ரொம்பவும் பழைய பழகிப்போன கேள்வியை இங்கு விடாது கேட்டுக்கொண்டே இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். வழக்கமாகத் தைப்பூச தினத்தன்றும் அல்லது இதர விழாக்காலங்களில் மட்டுமே இந்தக் கேள்வி பெருமளவு படையெடுக்கும். மற்ற நாட்களில் அதன் வீரியம் குறைவாகவோ அல்லது பெரிதாக அலட்டிக்கொள்ளாதவாரோ இருக்கும்.

இந்த நாட்களில் மட்டும் ஏன் வறுமையில் சிக்கிய மனிதர்கள் மீது இன்னொரு மனிதனுக்கு அத்துணைப் பெரிய கருணை! மற்ற நாட்களில் அம்மனிதன் வயிறார சாப்பிட்டுக்கொண்டா இருக்கிறான்.

பசி கொண்டவனுக்குப் புசி கொள்ள ஏதும் கொடுக்க நினைப்பதே ஆதார நினைப்பு/தேவை என்றால், நாள் கிழமை பார்த்து பசிக்கு பால் கொடுக்க யாரும் சொல்ல மாட்டார்கள். இங்குச் சிக்கல் பசியும் பசிக்கின்ற மனிதனும் அல்ல. நம்பிக்கை;கொள்கை.

“கல்லுக்கு ஊத்தற பாலை…!” என்று தொடங்கும் அதே வார்த்தையின் சாயலில், “பத்து பேருக்கு மாலையும் பொன்னாடையும் வாங்கிப் போடற காசையும் ஒரு குடும்பத்துக்குச் சாப்பிட கொடுக்கலாமே?”, “இவ்வளவு செலவு செய்து மேடை நிகழ்ச்சி செய்றதுக்குப் பதிலா கஷ்டப்படுற பிள்ளைங்களுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கலாமே?” என யாரும் கேட்கிறார்களா எனத் தெரியவில்லை. அப்படிக் கேட்கத்தான் வேண்டும் போல. ஏனெனில் இங்கு எல்லோருக்கும் இன்னொரு மனிதன் இடர்பாடுகளில் இருந்து வெளிவர வேண்டும் என்றுதானே எண்ணுகிறோம்.

ஆனால் அதனை ஏன் நேரடியாகச் செய்யாமல் இன்னொருவன் செய்வதில் இருந்து அதற்குப் பதிலாக இதனைச் செய்யவேண்டும் என அவனுக்கு அறிவுரைகளைச் சொல்லிகொண்டிருக்கிறோம். செய்கின்றவன் பேச மாட்டான் ஏனெனில் அவனுக்கு அதற்கான நேரம் இருக்காது; என என் பள்ளி ஆசிரியர் ஒரு முறை சொன்னதை நினைத்துப்பார்க்கிறேன்.

 

“நட்ட கல்லைத் தெய்வமென்று காலுபுட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொண் மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’’

(சிவ வாக்கியர் பாடல்-5)


கல்லில் என்ன இருக்கிறது எனக் கேட்ட சிவ வாக்கியரை விடவா ஒருவர் கேள்வி எழுப்பிட முடியும். ஆனால் இதனை எப்போதும் பேச்சிற்கிடையில் கொண்டுவர மாட்டார்கள். கொண்டு வந்தால்; ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?’ என்ற கேள்விக்குப் பதில் தரவேண்டிவரும். கல்லும் இல்லை கடவுளும் (நாதனும்) இல்லை என்ற கொள்கை உள்ளவர்களுக்குச் சிவ வாக்கியர் எப்படி உதவுவார்.

உண்மையில் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களாலேயே சிவ வாக்கியரின் கேள்வியை ஆழந்து யோசித்துப் பதில் காண முடியவில்லையே. இதனைப் புரிந்து கொண்டிருந்தால் கோவில்களில் நடக்கும் உள்ளரசியல் இல்லாமலேயே இருந்திருக்கும். வீட்டுக்கு ஒரு கோவில் அதற்கொரு தலைவர் என்கிற குழப்பங்கள் இருந்திருக்காது. மரங்களுக்கு மத்தியிலும், தகரக் கொட்டகைக்குள், அடுத்தவர் நிலத்தில் எனத் தோன்றும் கடவுள்கள் யாரும் உள்ளிருக்கும் நாதனாய் உருமாற முடியவில்லையே.

ஒரு முறை இயல் பதிப்பக நிகழ்ச்சியில் மீதமான உணவு பொட்டலங்களை யாருக்காவது கொடுக்கலாம் எனப் புக்கிட் பிந்தாங் வட்டாரத்திற்கு வண்டியை விட்டோம். வெளியில் இருந்து பார்க்க பணக்காரர்கள் அதிகம் உலாவும் இடமாகத் தெரியும். ஆனால் அன்று நான் பார்த்தது இன்று கூட நினைவில் இருக்கிறது. மலாய்க்காரர், சீனர், இந்தியர், வெளிநாட்டவர் என எந்தப் பாகுபாடும் இன்றியும் கடையோரங்களிலும் சாலையோரங்களிலும் அட்டைப்பெட்டியைப் போட்டு அதில் படுத்திருக்கிறார்கள். சிலருக்கு அதுகூட இல்லை. வெறும் சிமெண்டு தரையில் நாளிதழ்களை விரித்துப் படுத்திருக்கிறார்கள்.

நாங்கள் எங்கள் வண்டியை நிறுத்தி உணவு பொட்டலங்களை வெளியில் எடுக்கவும், பசியில் ஒவ்வொருவரும் ஓடி வந்ததைப் பார்க்கையில் மனம் உடைந்துவிட்டது. உணவு பொட்டலங்கள் முடிந்து வண்டியில் ஏறும் சமயத்தில் ஒரு பாட்டி தாமதமாக வந்து சாப்பிட ஏதும் இருக்கா எனக் கேட்டார். அந்தக் கண்கள் பசியில் பெரிய எதிர்ப்பார்ர்ப்புடன் இருந்தது. சட்டெனப் பாக்கெட்டில் இருந்த பத்துவெள்ளியை எடுத்து கொடுத்துவிட்டு அவர் முகத்தை மேற்கொண்டு பார்க்க இயலாமல் வண்டியில் ஏறிவிட்டேன். ஏதோ ஒரு மன உளைச்சல் கொஞ்ச நேரம் என்னை அமைதியாக வைத்திருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் நான் நண்பர்களுடன் இணைந்து பள்ளிகளுக்கான புத்தக விற்பனையைச் செய்தேன். அப்போதுதான் ஆரம்பித்தோம் என்பதால் எதிர்கால வருமானத்தைக் கணக்கில் கொண்டு எனக்கான சம்பளத்தைக் குறைவாகவே பெற்றுக்கொண்டேன். அப்போதும் கடன்களைக் கட்டுவதற்கும் குடும்பச் செலவுக்குமே அது கைகடிக்கும்படி இருக்கும். ஒரு ரொட்டி துண்டையும் ஒரு பாட்டிலில் தண்ணீரையும் பிடித்துக் கொண்டு வேலைக்குக் கிளம்புவேன். அந்த ரொட்டியை இரண்டு வேலையாகப் பிரித்துக் காலை உணவாகவும் நண்பகல் உணவாகவும் சாப்பிட்டுக்கொள்வேன்.

அப்போதுதான் நண்பர் மூலமாகச் சாய் பாபா செண்டர் குறித்துத் தெரிய வந்தது. தினமும் அங்கு உணவு இருக்கும். யார் வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம் என்றார். அதுவரையில் எனக்கு அது தோன்றவில்லை. அவ்வப்போது சாய் பாபா செண்டருக்கு சென்றாலும் அங்குள்ள உணவை கவனிக்கவில்லை. அப்போது அது எனக்கு தேவையாகவும் இல்லை.

பின்னர் தொடர்ந்து, என் வீட்டிற்கு அருகில் இருக்கும் சாய் பாபா செண்டரில் சாப்பிட ஆரம்பித்தேன். வேலை முடிந்ததும் நேராக அங்குச் சென்று பாபாவிற்கு ஒரு வணக்கத்தைக் போட்டுவிட்டு வயிறார சாப்பிட்டு கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்துவிட்டுதான் திரும்புவேன்.

யாரோ ஒருவர் கொடுக்கும் அரிசியிலும் காய்கறிகளிலும் அவருக்கு நேரடியாகத் தொடர்பில்லாத எனக்குத் தினமும் உணவு கிடைத்தது. இப்போது கூட நான் அங்குச் சென்று சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.

ஒவ்வொரு மாதமும் என் கையிருப்புக்கு தகுந்த மாதிரி சில காய்கறிகளையோ அரிசி பைகளையோ வாங்கிகொண்டு சாய் பாபா செண்டரில் கொடுக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் இப்போது ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணையப் புத்தக அங்காடியை நடத்தி வருகிறேன். என்னிடம் புத்தகம் வாங்குகின்றவர்களின் மூலம் எனக்குக் கிடைக்கும் வருவாயில் ஒரு சிறு பகுதியில் அதனைச் செய்து வருகிறேன்.

யாரோ ஒருவரின் பிரார்த்தனையிலும் நம்பிக்கையிலும் என் வயிறு நிறைந்தது போல, என்னால் முடிந்ததை நான் செய்யும் போது அது இன்னொரு மனிதனின் வயிறை நிறைக்கிறது என்பது எனக்குள் சக மனிதன் மீதான அன்பை அதிகப்படுத்துவதாகப் பார்க்கிறேன்.

சிலர் தெருவோரங்களில் இருப்பவர்களுக்கு உணவுகளைத் தினமும் கொடுக்கிறார்கள். ஆதரவற்ற கால்நடைகளுக்கு மருத்துவம் முதல் உணவுகள் வரை பல தொண்டூழியர்கள் கொடுத்துக்கொண்டும் செய்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே ‘உள்ளிருக்கும் நாதனை’ உணவுகள் கொடுப்பதன் மூலமாகக் கண்டுகொள்கிறார்கள் தானே.

அது கடவுள் ! அது கல் ! என்கிற சண்டைகளுக்கு மத்தியில் அந்த மனிதன் பசியோடு இருக்கிறான், கல்வி இன்றி இருக்கிறான்… என்பதே முதலில் பதிலளிக்க வேண்டிய கேள்வி.

செப்டம்பர் 28, 2022

TikTok பேய்கள்

"அதான இப்ப டிரெண்டு...." என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் கோமதி. டிக்டாக்கில் வந்திருந்த சமீபத்திய விளையாட்டுதான் அது. 

கைப்பேசியில் வீடியோவைத் திறந்து வைக்க வேண்டும். அதனை தனி அறையில் வைத்து நடப்பதை பதிவு செய்ய வேண்டும். அந்த அறையில் நம் வீட்டு சின்ன பையனை வைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு கதவையும் சாத்திவிட்டு ஓடிவிட வேண்டும். அப்போது கைப்பேசி பின்னணியில் மெல்லிய இசையும் அதையடுத்து பயங்கரமான சிரிப்பு சத்தமும் தோன்றும். 

அப்பொழுது தனியாக அறையில் இருக்கும் பையன் பயந்துபோய் கைப்பேசியின் முகப்பில் வீடியோவைப் பார்க்க அதன் தானும் தனக்கு பின்னால் அந்தரத்தில் ஒரு பேய் பறப்பது போலவும் இருக்கும். பயந்து அலறும் பையனின் வீடியோவைப் பிறகு பார்க்கும் போதும் பொதுவில் பகிரும் போதும் பார்ப்பவர்களுக்கு ஒரே ஜாலியாக இருக்கும். 

எல்லாவற்றையும் நேர்த்தியாகத் தயார் செய்துவிட்டாள் கோமதி. தன் பையனை நாசுக்காக அறையில் இருக்க வைக்கிறார். அதற்கு முன்னமே கைப்பேசி தயார் நிலையில் இருக்கிறது. சரியான நேரம் பார்த்து விளக்கை அணைத்துவிட்டு கதவைச் சாத்திவிட்டார்.

உள்ளே பையன் அலறத்தொடங்கிவிட்டான். தனக்கு பின்னால் அந்தரத்தில் பேய் மிதந்துகொண்டிருந்தால் யார்தான் சும்மா இருப்பார்கள். சட்டென பையனின் சத்தம் கேட்கவில்லை. ஒரே அமைதி. பையனுக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று பயந்துவிட்டாள் கோமதி. விளையாட்டு வினையாகிவிட்டதோ என்னவோ?

அவசரமாகக் கதவை திறக்கிறாள். உள்ளே பையனைக் காணவில்லை. அறைமுழுக்கத் தேடிவிட்டாள். என்ன செய்வது என தெரியவில்லை. ஏதோ நினைவுக்கு வந்தவர் ஓடிச்சென்று கைப்பேசியைப் பார்க்கலானார்.

கைப்பேசி ஸ்கீரினுக்குள்ளே , பையன் இருந்து செய்வதறியாது துடித்துக் கொண்டுக்கிறான்.

கைப்பேசிக்குள்ளே பையனும் கைப்பெசிக்கு வெளியே கோமதியும் அதிர்ச்சியில் நிற்கிறார்கள். இருவருக்கும் ஒன்றும் பிடிபடவில்லை....

செப்டம்பர் 26, 2022

- டுரியான் -

குமாருக்கு டுரியான் என்றாலே பயம். அதன் வாசத்தைக் கூட அவனால் அனுபவிக்க முடியாது. ஓடி ஒளிந்துக்கொள்வான். இந்த முப்பத்தைந்து வயதில் இப்படியா ஒருவன் இருப்பான் என தோன்றும். தோன்ற வேண்டும்தானே.

அவனது பயத்தைப் போக்குவதற்காக அவனுக்கே தெரியாமல் ஒரு ஏற்பாடு செய்தேன். வீட்டிற்கு அழைத்தேன். அறைக்குள் வசமே தெரியாத அளவிற்கு மறைத்து வைத்த டுரியானை அவன் முன் கொண்டு வந்தேன்

அவனால் எழுந்து ஓட முடியவில்லை. அந்தத் தனிமையில் டுரியானைக் கண்டதும் அழத்தொடங்கிவிட்டான். அது பயத்தினால் வந்த அழுகை அல்ல. இயலாமையால் வந்துகொண்டிருக்கும் அழுகை. கதறி அழ ஆரம்பித்துவிட்டான்.

மெல்ல மெல்ல அவனை ஆசுவாசப்படுத்தினேன். ஒரு நாள் அவனது அம்மா ஆசையாய் கேட்ட டுரியானை நாளைக்கு வாங்கித்தருவதாக சொல்லியிருக்கிறான். அந்த மறுநாள் அவனது அம்மாவிற்கு வரவேயில்லை.

அந்தக் குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடே டுரியான் மீது பயமாக மாறிவிட்டது. அதனை போக்குவதற்கு வழி தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தான். உடைந்து அழுதப்பின்னே மனபாரம் குறைந்து இயல்பை அவன் மனம் மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்கிறது.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

செப்டம்பர் 25, 2022

- புரட்சியாளர்களின் பரிசு -


அந்தப் பேரணியை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஏற்பாட்டாளர்களே எதிர்ப்பார்க்கவில்லை. வேறு யார்தான் எதிர்ப்பார்த்திருப்பார்கள். எப்போதோ யாரோ முயற்சித்தப் புரட்சியின் தீப்பொறி இன்று கொழுந்துவிட்டு எரிகிறது.

அதிபரின் அரசமாளிகை முழுக்க மக்கள் சூழ்ந்துவிட்டார்கள். தன் வாழ்நாளில் என்னவென்றே தெரியாத; தெரிந்து கொள்ள முடியாத ஏதேதோ பெயர் தெரியாதப் பொருட்களைப் பார்த்த மக்கள் கொஞ்ச நேரம் பதட்டமானார்கள். அடுத்த கணமே புரட்சியின் பக்கம் திரும்பிவிட்டார்கள். மக்களின் பின்னணியில் குறிப்பிட்ட சில புரட்சியாளர்கள் ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டே வந்தார்கள்.

அரசாங்கமே அலறிவிட்டது. அதிபரையும் அதிகாரிகளைக் காணவில்லை. இனி நாடு தாங்காது என புரட்சியாளர்கள் ஒரு சேர முடிவெடுத்தார்கள். பல ஆண்டுகளாக மக்களின் நலனை முன்னிருத்தி ஆளும் அரசாங்கத்திடம் சண்டையிட்ட எதிர்க்கட்சிக்கு நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தது. இனி அவர்கள் எதிர்ப்பார்த்த பல திட்டங்களை செயல்படுத்தி மக்களையும் நாட்டையும் முன்னேறறாலாம்.

புதிய அரசாங்கம். புதிய அதிகாரிகள். புதிய அதிபரின் நன்றியுரை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாட்டின் இன்றைய எதிர்ப்பாராத ஆட்சி மாற்றத்திற்கும் மக்களின் எழுச்சிக்கும் காரணமாக இருந்த புரட்சியாளர்களை அடையாளம் கண்டு  நன்றியும் பாராட்டையும் சொன்னார்.

மறுநாள் அடையாளம் கண்ட எந்த புரட்சியாளர்களையும் காணவில்லை. புதிய அரசாங்கம் அவர்களைத் தேடவுமில்லை.....

செப்டம்பர் 24, 2022

ஏழாம் உலகம் - வாசிப்பு அனுபவம்

ஏழாம் உலகம் வாசிப்பு அனுபவம்
ஜெ.மோவின் ஏழாம் உலகம் நாவலை வாங்கி ஏறக்குறைய பத்தாண்டுகள் இருக்கும். இதற்கிடையில் சில முறை வீடு மாற்றலாகி வந்துகோண்டிருந்ததால் ஏதோ ஒரு புத்தகப்பெட்டியில் அந்நாவல் சிக்கிக்கொண்டது.

 கையில் கிடைத்ததும் உடனே எடுத்து வாசிப்பு பட்டியலில் அடுக்கிவிட்டேன். ஆனால் ஏனோ அந்நாவல் வரிசையில் இருந்து விரைவிலேயே முன்னகர்ந்து என் வாசிப்பிற்கு வந்துவிட்டது. 

அன்று நாவலை வாசிக்க ஆரம்பித்த சமயம் என்னால் சில பக்கங்களுக்கு மேல் போக முடியவில்லை. அதன் மொழி எனக்கு சிக்கலாக இருந்தது. போதாததற்கு அந்த இளம் வயதில் முதல் பக்கத்திலே எல்லாம் புரிந்துவிட வேண்டும் என்ற பேராசையும் இருந்தது. ஆனால் அதன் பிறகு வாசிப்பு கொடுத்த அனுபவம் தைரியமாக இந்நாவலை இன்று வாசிக்க வைத்தது.  

இயக்குனர் பாலாவின் நான் கடவுள்; இந்நாவலைத் தழுவிதான் எடுக்கப்பட்டது என்பது தெரிந்த ஒன்றுதான். அதுவும் அப்போதைய வாசிப்பு தடைக்கு காரணமாக இருந்திருக்கலாம். அதான் கதை தெரிஞ்சிப்போச்சே எதற்கு புத்தகமாகவும் வாசிக்க வேண்டும் என்கிற சிறுபிள்ளைத்தனமான எண்ணத்தை வேறெப்படி சொல்ல. 

இன்று இந்த நாவலை வாசிக்கும் போதும் கூட சில பக்கங்களில் திரையில் பார்த்த முகங்களாகவும் அதே கதாப்பாத்திரங்களாகவும்தான் தெரிந்தன. ஆனால் தொடர்ந்து வாசிக்க வாசிக்க, மனதில் இருந்த நான் கடவுள் காணாமல் போய்; ஏழாம் உலகத்திற்குள் நுழைந்து விட்டேன். இந்நாவலை தவறவிட்டிருந்தால் எத்துணை பெரிய இழப்பாகியிருக்கும்.

நம்மால் சகிக்க முடியாத நம்மால் நினைத்துப்பார்க்க முடியாத போகிற போக்கில் நாம் விசும் சில்லறைகளை வாழ்வாதாரமாக அமைத்துக்கொள்ளும் பிச்சைக்காரர்களின் கதை; அவர்களின் வாழ்வு; அவர்களின் துயரம் இது. இயற்கையாக அல்லாமல் கல்நெஞ்சம் படைத்தவர்களால் கையுடைத்து காலுடைத்து கண்கள் குருடாக்கி பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டவர்களின் கதை.

வாசிப்பின் இடையில் என்னால் தொடர்ந்து வாசிக்க இயலவில்லை. கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. ஒரு வாசகனாக மட்டுமல்லாமல், நானும் ஒரு ஆளாக அவர்களுடன் இணைந்துவிட்டேன். 

மனிதர்களின் பல்வேறான முகங்களை நாவலின் போக்கில் ஆழமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். வாசிக்கையில் பிச்சைக்காரர்களுக்காக அழுவதா அல்லது அவர்களை வதைக்கும் மனிதமிருகங்களைச் சபிப்பதா என்கிற திண்டாட்டம் இருக்கவே செய்தது. 

தனக்கு லாபம் வருகிறது என்பதற்காக மனிதர்கள் எதற்கும் துணிவார்கள். தன் அதிகாரம் தன் தேவை பொருட்டு எல்லோரு மீதும் பாய்வார்கள் போன்ற மனித அவலங்களை மனம் கணக்கும்படி ஏழாம் உலகம் காட்டுகிறது.

உடல் சிதைந்த பிச்சைக்காரர்களாக இருந்தாலும், அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் நம்மையும் சிரிக்க வைக்கிறது. அவர்களால் சிரிக்க முடிகிறதே என வருந்தவும் வைக்கிறது. அவரவர் செய்யும் பாவங்களுக்கு ஆளுக்கொரு பதில் இருக்கவே செய்யும் என்ற தளத்தை மெல்ல மெல்ல நாவல் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. இனியும் இந்த துயர வாழ்வை வாசிக்கத்தான் வேண்டுமா என எண்ணும் பொழுது நாவல் அதன் முடிவை நெருங்கிவிட்டது. 

இந்நாவல் குறித்து அதிகம் பேச வேண்டியுள்ளது. பலரும் எழுதியிருக்கிறார்கள். இனியும் எழுதப்போகிறார்கள். ஏனெனில் ஒரு மனிதனை சிதைத்து அதன் வழி பணம் பார்க்கும் இன்னொரு மனிதன் இருக்கின்றவரை இந்த நாவலில் ஆயுள் நீண்டுகொண்டிருக்கும்.

இன்னும் சொல்வதென்றால் நாவலில் முடிவில் முத்தம்மையின் அலறல் மனித மிருக கொடுரங்களின் உச்சம்….

- நிம்மதியா ஒரு பேய்ப்படம் -

எது நமக்கு பயத்தைக் கொடுக்கிறதோ அதுதான் நமக்கு பலத்தையும் கொடுக்கிறது. புரிகிறதா?. எனக்கு புரிய முப்பது வயது வரை வரவேண்டியதாய் இருந்தது. சின்ன வயசுலயே அங்க போகாத பேய் இருக்கு.. இங்க போகாத நாய் இருக்குன்னு பயங்காட்டி பயங்காட்டியே வளர்த்துட்டாங்க.

இந்த வயசுல நாய்க்கு கூட பயப்படலாம். ஆனா பேய்க்கு பயப்பட்டா ஊரே சிரிக்கும். ஊர் சிரிக்கிறது இருக்கட்டும் உள்ளுக்குள்ளே நானே சிரிச்சிக்குவேன். இந்த பயத்தை போக்கியே ஆகனும். எது பயமோ அதுவே பலம். தெளிவாக புரிந்தது.  பேய் பயம்தான் என்னோட பலம்.

எடுத்ததும் சுடுகாட்டுக்கு போய்ட்டு வந்தெல்லாம் பரிட்சை எழுத முடியாது. சின்னச்சின்னதாய்த் தான் பயத்தைப் போக்க முடியும். சின்ன வயசுல எத்தனைப் பேய்ப்படங்களைப் பார்த்து பயந்திருப்பேன். அது எல்லாத்தையும் ஒன்னொன்னா தனியா வீட்டுல உட்கார்ந்து பாக்கனும். இன்னிக்குத்தான் வீட்டில் யாருமில்ல. நான் மட்டும்தான் ரெண்டு நாளா தனியா இருக்கப்போறேன். அஞ்சாறு பேய்ப்பட விசிடிகளைக் கொண்டு வந்திருக்கேன். இன்னிக்கு விடிய விடிய கொஞ்சமும் பயமில்லாம எல்லா பேய்ப்படங்களையும் பாக்கனும்.

முதல் படம். காட்டுக்குள்ள இருக்கற வீட்டுக்கு எதுக்குத்தான் குரூப்பா போய்ட்டு பேய்ங்க கிட்ட சாகறாங்களோ. எனக்கு பயம் இலலையே.

இரண்டாவது படம். சர்ச் பாதரையே மிரட்டினாலும் கடைசியா எல்லா பேய்ங்களும் மன்னிப்பு கேட்டுட்டு ஓடித்தான் போகுதுங்க. எனக்கு பயம் இல்லையே.

மூணாவது படம். ஆத்தீ கிணத்துல இருந்த பேய், டீவிக்கு உள்ள இருந்துள்ள வருது. யார்தான் அந்த வீடியோவை பார்க்க சொல்றா. அதைப் பார்த்தாதான் பேய் வந்து கொல்லுதுல்ல...!

ஐயோ என்ன இது கரண்டு போச்சி. கடைசில என்ன ஆச்சினு தெரியலயே. விசிடி உள்ளயே மாட்டிக்குமே...

"ச்சே... ஒரு நல்லப் பேய்ப்படத்தை நிம்மதியாப் பார்க்க முடியிதா...!!!?"

ஆமா.. யாரோட குரலு இது?!?!!

செப்டம்பர் 22, 2022

யாருக்குத்தான் சபலமில்லை...?


அம்மா அப்படித்தான் சொன்னார். எனக்கு கோவம் வந்துவிட்டது. இதுவெல்லாம் ஒரு பேச்சா. காதலித்துதான் கல்யாணம் செய்துக்கொண்டோம். அதற்காக இப்படியா பேசுவது. யாருக்குத்தான் சபலமில்லையாம்!! புருஷன் போக்கு சரியில்லைன்னு சொன்னா பெத்த அம்மா புள்ளை கிட்டயே இப்படியா பேசுவாங்க?

ஆனாலும் என்னால் அம்மா மீது முழு கோவத்தையும் காட்ட முடியாது. அம்மா பாவம். உண்மையிலே அம்மா பாவம்தான். ஒரு கால் இல்லாத அப்பாவை வைத்துக் கொண்டு ரொம்பவும் சிரமப்பட்டுத்தான் எங்களை வளர்த்தார். அப்பா கம்பீரமாக நடந்து பார்த்த நினைவுகள் எனக்கு மங்கலாகத்தான் இருக்கிறது. எனக்குக்கூட அப்பாவை இப்படி பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. எத்துணை வருடங்களாக அம்மா பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஒருவேளை அப்பா அப்படி இருப்பதால்தான் அம்மாவிற்கு என் வலி புரியவில்லை என நினைக்கிறேன். நினைத்ததோடு சும்மா இருந்திருக்கலாம். முடியவில்லை. வார்த்தையை விட்டுவிட்டேன்.

யாருக்குத்தான் சபலமில்லையேன்னு கேட்கறியே மா...  எங்க அப்பா அப்படி இருந்திருந்தாதான் உனக்கு என்னோட வலி தெரியும்னு சொல்லிட்டேன்.

ஆச்சரியம். அம்மா கோவப்படவில்லை. எழுந்தார்.  நேராக என்னருகில் வந்தார். "யாருக்குத்தான் சபலமில்ல... ஆமா உங்க அப்பா  காலை யாரு உடைச்சான்னு என்னிக்காவது அவர்கிட்ட கேட்டுறிக்கியா நீ...." என்று கேட்டுவிட்டு பழையபடி தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

செப்டம்பர் 21, 2022

- இளையராஜாக்களும் அனிருத்களும் -

 



காலையிலேயே அழைத்திருந்தார். “என்ன ப்ரோ…” என்றுதான் தொடங்குவார். சமீபத்தில் ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக சந்தித்தோம்.  அங்கிருந்து திரும்ப வந்து, பிறகு மீண்டும் தமிழகப்பயணமும் சென்றுவிட்டு திரும்பியிருக்கிறார். ஆனால் அந்த சிறகுள்ள மனிதரை பார்ப்பதற்கு என்னால் முடியாமல் போனதைச் சொல்லி கொஞ்சம் திட்டவும் செய்தார் போதாக்குறைக்கு கொஞ்சமாக சலித்தும் கொண்டார்.

எனக்கு சட்டென சிரிப்பு வந்துவிட்டது. நம்முடன் பள்ளியில் படித்த நண்பனொருவர் கையாலும் பாணியை அப்படியே கையாண்டார். கண்களைப் மூடிக்கொண்டு கேட்டால் எனது பள்ளி நண்பானின் ஒருவனாகத் தெரிந்தார். இதன் பிறகும் சந்திப்பை தாமதப்படுத்தினால் வீட்டிற்கே வந்து கழுத்தைப் பிடித்து “ஏன் ப்ரோ என்னைய பார்க்க வரல..?” என கேட்டுவிடுவார் என பயந்துவிட்டேன். “இன்னும் மூணு மணிநேரத்தில் பார்க்கலாம் ப்ரோ…” எனறவாறு உடனடியாக வீட்டில் செய்ய வேண்டிய சில வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்தேன்.

திடீரேன்ற பொறுப்பை இல்லாள் யூகித்துவிட்டார். அவராகவே என்னிடம் “சரி எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவீங்க..?” என கேட்டதிலிருந்து அதனை தெரிந்துகொண்டேன். வாழ்க்கை இப்படித்தான். ரொம்ப கடினமான காரியங்கள் அரைநொடியில் நடந்து முடிந்துவிடும். ரொம்பவும் சாதாரணமான காரியங்களுக்கு மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டிருப்போம்.

நமது புத்தகக்கடையில் ப்ரோ ஆடர் செய்திருந்த புத்தகங்களுடன் அவரைப் பார்க்கச் சென்றேன்.

எனக்கு முன்னமே எங்களின் வழக்கமான உணவக கடைசி நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து உணவகம் முழுவதும் ஒரு சுற்று பார்க்க முடியும். அவரின் எதிரில் அமர்ந்தேன். என்னால் அவர் முகத்தையும் அவருக்கு பின்னால் இருக்கும் மரம் செடி கொடிகளைத்தான் பார்க்க முடிந்தது. எவ்வளவு ப்ளான் பார்த்தீங்களா!

நான் அவருக்கு புத்தகங்களைக் கொடுக்க, அவர் எனக்கு சிங்கப்பூர் மிட்டாய்களையும் ரவாங்கில் பிரபாலமான பால்கோவாவையும் கொடுத்தார்.

என்ன சாப்டறீங்க என்று ஆரம்பித்து மட்டன் குழம்பு கண்ணைக் கவர்ந்ததாகச் சொன்னார். உடனே ‘ரொட்டி சானாய்க்கும்’ மட்டன் குழம்புக்கும் ஆடர் கொடுத்தோம். அந்த ஒரு வட்ட மங்கின் மட்டன் குழம்பிற்கு பதிமூன்று வெள்ளி வருமென எங்கள் இருவருக்கும் அப்போது தெரியாது.

‘என்ன படிக்கறோம் என்ன எழுதறோம்’ என எங்கள் பேச்சு, பழக்க வழக்கத்திற்கு வந்தது. அப்போதுதான் வாசித்து முடித்த ஜெயமோகன் அவர்களின் ஏழாம் உலகம் நாவல் குறித்து பேசினேன். சமீபத்தில் உள்ளூர் சினிமாவிற்கு சில எழுத்து வேலைகளைச் செய்துவருவதையும் நண்பர்களின் கதைகளை வாசித்து செறிவாக்கம் செய்து வருவதையும் சொன்னேன்.

அவரும் சமீபத்தில் வெளிவந்த அவரது சிறுகதைகள் குறித்தும் இனி தான் எழுதவிருக்கும் சிறுகதைகள் குறித்தும் பேசினார். மலேசியாவில் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் சிலர் மட்டுமே தனித்தன்மையை எழுத்தில் காட்டக்கூடியவர்கள். அந்த வகையில் இவரையும் சொல்லலாம். ரொம்பவும்  தாமதமாக எழுத வந்துவிட்டதாக சொல்லியவரிடம் சொன்னேன்; “இப்போது அதற்கு எந்த ஒரு குறையும் இல்லை.. வழக்கம் போல தொடர்ந்து எழுதுங்கள். சீக்கிரமே உங்கள் சிறுகதைகளை புத்தகமாக்குங்கள். தனித்தனியாக வாசிக்கும் சிறுகதைக்கும் ஒரு எழுத்தாளரின் சிறுகதைகளைத் தொகுப்பாக வாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கு. உங்கள் புத்தகம்தான் உங்களை இன்னும் பரவலாக அடையாளப்படும்..” என்றேன்.

அப்படி சொல்லும் போதெல்லாம், தவறாது ஒரு பதிலை அவர் கொடுப்பார். “நல்ல கதைகளை எழுதி அறியப்படும் எழுத்தாளராக மாறிவிட்டு அப்பறமா புத்தகம் போடலாம்னு இருக்கேன்..” நான் சிரித்துக்கொண்டே அவரின் கதைகளை இப்போதைக்கு தேர்வு செய்து வைக்கச்சொன்னேன்.

பிறகு எங்கள் பேச்சு இளமை ததும்பும் பக்கம் போனது. அது எப்பவும் போகும். ஒவ்வொரு முறையும் “ஆமா உங்களுக்கு என்ன வயசு…? ” என  கேட்டுக்கொள்வார். நானும் வயதைச் சொல்லி நானும் பெரிய பையன் தான் ப்ரோ என்றதும் சிரித்துக் கொண்டு பேச்சைத் தொடர்வார். இம்முறை அவரின் இளமை காலத்தில் அவருக்கு கிடைத்த கிளுகிளுப்பான புத்தகங்களைச் சொல்லி சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றேன். மாறாக எங்களுக்கு வீடியோ பிறகு வீசீடி அதன் பிறகு கம்பியூட்டர் கடை என வரிசைப்படுத்தினேன். ஆனால் இன்றையப் பிள்ளைகளுக்கு அப்படியல்ல, கையிலேயே நவீன கைப்பேசி இருக்கிறது. நம்மைக் காட்டிலும் சீக்கிரமாக ‘எல்லாவற்றையும்’ அறிந்து கொள்ளும் வாய்ப்பு அபாயமும் ஒருங்கே அமைந்துவிட்டதைப் பேசினோம்.

கடந்த வாரம் இங்குள்ள ஆரம்பநிலை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உரை நிகழ்த்த சென்றிருந்தேன். ‘அகிலம் நீ’ என்னும் யுவதிகள் அமைப்பின் வழி அழைக்கப்பட்டிருந்தேன். ஆண் மாணவர்களுக்கு நானும் பெண் மாணவர்களுக்கு ‘அகிலம் நீ’ யுவதிகள் அமைப்பின் நிறுவனர் தோழர் பொன் கோகிலமும் பேசினார்.

அங்கு நான் சந்தித்த மாணவர்கள் குறித்தும் அவர்களின் நடவடிக்கை குறித்தும் பேசினேன். மாணவர்களுக்கு பணம் குறித்த விழிப்புணர்வையும் கொடுக்க வேண்டிய அவசியம் பற்றி எங்கள் உரையாடல் சென்றது. உண்மைதான், ஒழுக்கும் கல்வி என பலவற்றில் நாம் அக்கரை காட்டினாலும் மாணவர்களின் பார்வையில் பொருளாதார விழிப்புணர்வின் அவசியம் குறித்து நாம் பெரிதாக பேசுவதில்லை. அவர்கள் என்ன வேலையா செய்கிறார்கள் பணத்தைப் பற்றி பேசுவதற்கு என யாரும் கேட்கலாம். ஆனால் எந்த ஒருவனின் கையில் பணம் இருக்கிறதோ அதன் மூலம் பொருளோ (மிட்டாயோ) வாங்கலாம் என நம்புகின்றானோ அவனுக்கு பொருளாதார விழிப்புணர்வு அவசியம். இன்னும் சொல்லப்போனால் பணத்தின் அருமை தெரிவது கட்டாயம்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு வயதானவர் தூரமான நாற்காலியில் அமர்ந்தார். நம்ம ப்ரோ கொஞ்சம் நேரம் அவரைப் பார்த்துவிட்டு, “கொஞ்ச நேரம்..” என சொல்லிவிட்டு அந்த வயதானவரைப் பார்க்க சென்றார். ஒருவேலை இவருக்கு படித்துக் கொடுத்த ஆசிரியராக இருக்கும் என நினைத்துக்கொண்டேன். திரும்பி வந்ததும் ப்ரோ சொன்னார் அவரது பள்ளி நண்பராம். ப்ரோவின் இளமையின் ரகசியத்தை என்றாவது கண்டுபிடிக்க வேண்டும்.

இப்போது கூட இளையராஜாவைப் பற்றிய முகநூல் பதிவில் ப்ரோ கமெண்ட் போட நானும் அவரது கமெண்டுக்கு கீழ இவரை அனிருத் ரசிகர் என்று நினைத்ததாகக் கூறினேன். அந்த இளமையும் துடிப்பும் அதற்கான காரணம் என்று நினைத்தேன். ஆனால் நம்ம ப்ரோ இளையராஜாவின் ‘அந்திமழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது..’ என்ற பாடலை விடவா இளமை துள்ள முடியும் என்றார். அவரின் இளமையின் ரகசியம் ஓரளவு பிடிபட்டது.

தொடர்ந்து சில இணைய இதழ்களுக்கு சிறுகதைகளை அனுப்புவதை சொல்லி அதன் மூலம் அவரின் மன ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். உண்மையில் இது பலரின் மன ஆதங்களில் ஒன்றுதான்.

இணைய இதழுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு அவர்கள் தரும் பதிலுக்கு காத்திருப்பது குறித்த மாற்று கருத்து இல்லை. ஆனால் நாம் அனுப்பிய படைப்புகள் எற்றுக்கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்று கூடவா சொல்வதற்கு அவர்கள் சிரமப்படுவார்கள். சில இணைய இதழ்கள் தங்களுக்கு படைப்புகள் கிடைத்துவிட்டன என்பதைக் கூட எழுத்தாளர்களுக்கு சொல்லுவதில்லை. இங்கு காத்திருப்பது சிக்கல் இல்லை, ஆனால் இதில் மறைந்திருக்கும் அலட்சியம்தான் சில சமயங்களில் நமக்கு மன வருத்தத்தைக் கொடுக்கிறது.

எங்கள் உரையாடலுக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். அடுத்து இன்னும் நிறைய பேசுவோம் என்ற நம்பிக்கையுடன் விடைபெற்றோம். என்னைவிடவும் வேகமாய் நடந்து அவரது வாகனத்தை நெருங்கிகொண்டிருந்தார். சொல்ல மறந்துவிட்டேன் நம்ம ப்ரோவின் பெயர் ஶ்ரீ ராமுலு, ஶ்ரீகாந்தன் என்ற பெயரின் எழுதிக்கொண்டிருக்கிறார்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                


செப்டம்பர் 17, 2022

'மகரந்தம்' ஏற்றமா ஏமாற்றமா?

சமீபத்தில் உள்ளூர் தனியார் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோ விண்மீனில் ‘மகரந்தம்’ என்னும் தொடர் நாடகம் ஒளியேறியது. உங்களில் சிலர் அதனைப் பார்த்திருப்பீர்கள். உங்களில் சிலர் உள்ளூர் நாடகம்தானே எதுக்கு பார்த்துகிட்டு என நினைத்திருப்பீர்கள். என்னதான் தரமான படைப்புகளை நம் கலைஞர்கள் கொடுத்தாலும் வெளிநாட்டு குப்பைகளுக்கு கொடுக்கும் கவனத்தில் பாதியைக் கூட பலரால் உள்ளூர் படைப்புகளுக்குக் கொடுக்க முடிவதில்லை. கொடுக்கவும் அவர்கள் விரும்புவதில்லை. 

இங்கு கலைஞர்களே சக கலைஞர்களின் படைப்புகளைக் குறித்து பேசுகிறார்களா இல்லையா என ஆராய்வதிலிருந்து சிலவற்றைக் கண்டுகொள்ளலாம்  அதையொட்டியப் பார்வைதான் இது. இவர்களுக்குள் என்ன போட்டியா இருக்கிறது? போட்டி யாருக்கிடையில் ஏற்படுகிறது என யோசியுங்கள். இரண்டு பலசாலிகளிடம்தானே. ஆக போட்டி போடுவதற்கு பலசாலிகள் வேண்டும் அவர்களிடம் பலமும் வேண்டும். அங்கு நடப்பதுதான் போட்டி. “ஒன்னு நீ.. இல்ல நானு” என சொல்லு இடம் அது. 

ஆனால் நம் நாட்டு கலையுலக சூழலில் இது சாத்தியமா? சாத்தியமா என கேட்பதைவிட அவசியமா என கேட்கும்படிதான் நிலைமை இருக்கிறது. இன்றும் கூட நம் நாட்டு திரைப்படங்களுக்கு தினம் தினம் கூவிக்கூவி டிக்கட் விற்றுக்கொண்டிருக்கிறோம். டிக்கட்டுகளுக்கு ஸ்பான்சர் வாங்கிக்கொண்டிருக்கிறோம். 

இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்து மக்களிடம் நம்பிக்கையை வாங்கி அதனை காப்பாற்றுவதற்குள் அந்த நம்பிக்கையை இன்னொரு திரைப்படம் மூலம் உடைத்து விடுகிறார்கள். “என்னமா படம் எடுத்திருக்காங்க..!” என பிரமிக்கும் அதே நேரத்தில் “என்னா படம் எடுத்திருக்காங்க..?” என கோவக்கேள்வியையும் கேட்கிறோம்  இரண்டுக்குமான கால இடைவெளிதான் மக்களிடம் உள்ளூர் கலைபடைப்புகள் மீதான ஐயத்திற்கு காரணம்.

சரி இனி தொடர்ந்து உள்ளூர் தொடர் நாடகமான மகரந்தம் என்னும் தொடர் குறித்து என் பார்வையைப் பகிர்கிறேன். இந்நாடகம் என்னை ஈர்ப்பதற்கான காரணங்களில் முதற்காரணம் அதன் தலைப்புதான். இரண்டாவது காரணம் இந்நாடகத்தின் அடிநாதத்தை தலைப்பிலேயே சொல்லிவிட்டார்கள். மகரந்தம் என்பதை தாவரங்களின் இனப்பெருக்கத்தை மகரந்த சேர்க்கை என சொல்கிறோம். அதன் செயல்முறையைப் பேசினால் கூட அவ்வளவு அழகாக இருக்கும். அதனை சுருக்கமாக இப்படி புரிந்து கொள்ளலாம் இரு தரப்பின் சேர்க்கை. இந்நாடகத்திற்கு அது ரொம்பவும் பொருந்தி வந்துள்ளது.

மகரந்தம் தொடர் நாடகத்தின் கதையைச் சுருங்க பார்க்கலாம். மனமுறிவு பெற்ற ஆணும் பெண்ணும் அவர்களின் பெற்றோர்/உறவுகள் மூலம் மறுமணத்தில் இணைகிறார்கள். எற்கனவே மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறுமணத்தில் இணைய முடியவில்லை. அவர்கள் அந்தச் சிக்கலை எப்படி எதிர்க்கொள்கிறார்கள். மறுமணத்தில் மனம் மீண்டும் காதல்வயப்படும் போது முன்னாள் காதலியும் (காதலனும்) வாழ்க்கைக்குள் வருகிறார்கள். மீண்டும் பழைய வாழ்க்கையைப் போலவே சிக்கல்களை இவ்வாழ்விலும் எதிர்க்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் செய்த அதே முடிவை (விவாகரத்தை) மீண்டும் எடுக்க நினைக்கிறார்கள். பிறகு உண்மை தெரிகிறது. தவறுகளைத் திருத்திக்கொள்கிறார்கள். புதிய காதல் அவர்கள் வாழ்க்கையை வசந்தமாக்குகிறது. அந்த சமயத்தில்தான் மனைவியின் முன்னாள் காதலன் அவர்கள் வீட்டு வாசலில் நிற்கிறான். 

ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கான கதாப்பாத்திரத் தேவையை இயல்பாகவே பூர்த்தி செய்திருக்கிறார்கள். நாயகனும் நாயகியும் தவிர மற்ற கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவையும் குடும்ப சிக்கலும் அவசர முடிவும் நல்ல நட்பும் என எல்லாவிதப் பார்வையாளர்களையும் திருப்திபடுத்த முயன்று அதனை சாதித்தும் இருக்கிறார்கள் படக்குழுவினர்.

மனமுறிவு பெற்றவர்கள் மீதும், மறுமணம் செய்பவர்கள் மீதும் சமூகம் ஒரு தவறானப் பார்வையையே வைத்திருக்கிறது. எடுத்தவுடன் அவர்கள் மீது விமர்சனத்தை வைப்போமே தவிர அவர்களின் பின்னணி குறித்து அறிந்து கொள்ள விரும்ப மாட்டோம். அதே சமயம் யாரோ ஒருவர் குற்றவாளியாகத்தான் இருக்க முடியும் என முன்முடிவு எடுத்துக்கொள்கிறோம். அடுத்தவர் வாழ்க்கையில் நமக்கான எல்லை எதுவென நமக்கு எந்த ஒரு அறிதலும் இருப்பதில்லை. மாறாக நாம் எவ்வளவு நல்லவர்கள் என காட்டுவதற்கு யாரோ ஒருவர் மோசமானவர் என காட்டி காட்டி பழகிவிட்டோம்.

மகரந்தம் தொடர் நாடகம் அதன் பார்வையாளர்களுக்கு சொல்ல வந்த விடயங்கள் ரொம்ப முக்கியமானது. வாழ்க்கை அதன் போக்கில் நமக்கு ஒரு செய்தி சொல்வதாக நான் நம்புகிறேன். அது இன்று நமக்கு புரியாவிட்டாலும் நாளை நமக்கு ஒரு சிறு புரிதலைக் கொடுக்கும்.  


தன்னால் எந்தப் பெண்ணையும் உடலளவில் திருப்தி படுத்த முடியாது என தெரிந்தும் ஒரு பெண்ணை திருமணம் செய்து தனது குறையை மறைக்க மனைவி மீது சந்தேகம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தும் நாயகியின் முன்னாள் கணவன்.  உண்மையில் இது கவனிக்க வேண்டிய ஒன்றாகவே பார்க்கிறேன். திருமணத்திற்கு கண்ணுக்குத் தெரியாத கிரகங்களின் நிலவரங்களை பார்க்கத்தெரிந்த நமக்கு கண்ணுக்கு தெரிந்த உடற்கூறுகள் பற்றிய மருத்துவ பரிசோதனை மீது அக்கறை இருப்பதில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒரு சமயத்தில் திருமணத்திற்கு முன் ஆண் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்ட பெண் பற்றிய குறும்படம் வெளிவந்திருந்தது. ஏய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு குறும்படம் அது. மகரந்தம் என்னும் நாடகத்தில் இயல்பாகவே ஒரு சிக்கலுக்கான விழிப்புணர்வைக் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு இத்தொடரின் கதையும் கை கொடுத்திருக்கிறது.

மனமுறிவுக்கு பின்னர் வாழ்க்கை இருப்பதைக் காட்டும் கதையம்சம் கொண்ட மகரந்தம் என்னும் தொடர் நாடகம், மனமுறிவுக்கு அவசரப்படவேண்டாம் எனவும் சொல்கிறது. அதுதான் இந்நாடகத்தைக் குறித்து என்னை எழுதவும் வைத்திருக்கிறது. அதோடு இன்னொன்றும் இருக்கவே செய்கிறது. மனமுறிவு பெற்ற பின் மறுமணம் செய்துக்கொள்பவர்களின் வாழ்க்கையில் முன்னாள் மனைவியோ முன்னாள் கணவனோ மீண்டும் வருவதற்கான சாத்தியங்களின் பின் விளைவுகளையும் இக்கதையின் மேலடுக்கில் காட்டியுள்ளது.


நல்ல கதை. கதையைச் சிதைக்காத திரைக்கதை. திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வசனங்கள். வசனங்களுக்கு உயிர்கொடுக்கும் நடிகர்கள். நடிகர்களை அழகாகவும் எதார்த்தமாகவும் காட்டிய இயக்குனர், என ஒன்றின் பின் ஒன்றாக தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றி பார்வையாளர்களின் மனதில் குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்டது மகரந்தம்.

மகரந்தம் தொடர் நாடகத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனர்க்கும் கதை/திரைக்கதை/வசனம் எழுதியவர்க்கும் நடிகர்களுக்கும் வாழ்த்துகள்.

செப்டம்பர் 16, 2022

மாணவர்களுடன் ஒரு நாள் சந்திப்பு

- மாணவர்களுடன் ஒரு நாள் சந்திப்பு -


சமீபத்தில் செர்டாங் ஆரம்பநிலை தமிழ்ப்பள்ளிக்கு தோழர் பொன் கோகிலத்துடன் சென்றிருந்தேன். அவ்வப்போது இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு இப்படி செல்வது வழக்கம். ஆரம்பநிலை பள்ளி மாணவர்களிடம் பதின்ம வயதை எதிர்க்கொள்வதும் குறித்தும் ‘நல்ல தொடுதல் கெட்ட தொடுதல்’ குறித்தும்  உரையாடுவோம். 


மாணவிகளுக்கு தோழர் பொன் கோகிலமும் மாணவர்களுக்கு நானும் தனித்தனி குழுவாக பிரித்து மாணவர்களுடன் உரையாடுவோம்.
என்னைக் குறித்த அறிமுகத்தை பொறுப்பாசிரியர் சொன்னதும் நான் உரையாடலைத் தொடங்கினேன். மாணவர்களின் குறும்புகள் ரசிக்கும்படி இருந்தன. 

பத்தாண்டுகளுக்கு முந்தைய மாணவர்கள் வாழ்ந்த சூழலையும் இன்று மாணவர்கள் வாழும் சூழல் அதன் வழி அவர்கள் எதிர்நோக்கும் மறைமுக சிக்கல்களைக் குறித்து பேசினேன். 


மாணவர்கள் நமது பேச்சைக் கேட்க வேண்டும் என்றால் முதலில் அவர்களின் கவனத்தை நம் பக்கம் இழுக்க வேண்டும், அதோடு நமது பேச்சின் மீதான அவர்களின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். அவற்றுடன் மணவர்களுக்கு சில பரிசு பொருட்களையும் எடுத்து வைத்திருந்தேன். என் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் மாணவர்களுக்கு பரிசு கொடுத்து மற்ற மாணவர்களையும் உற்சாகப்படுத்தினேன்.


உடல் சுத்தம். சுற்றுப்புற தூய்மை. பெற்றோரை மதித்தல். கல்வியில் கவனம் செலுத்துதல். நல்ல நட்பு. பெண் தோழிகளில் நட்பும் அவர்களுக்கான மரியாதையும். லட்சியத்தை அடைவதற்கான அடிப்படைகள். சமூக ஊடகங்களின் மோகம் எப்படி நம்மை தொந்தரவு செய்கிறது போன்றவற்றைக் குறித்து பேசினேன்.

என்னதான் தினமும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் சொல்லிக்கொண்டிருக்கும் விடயங்கள்தான் என்றாலும் புதிதாக ஒருவர் நன்கு அறிமுகமான ஒருவர் மாணவர்களுடன் பேசும்போது மாணவர்களுக்கு அது கொஞ்சம் நெருக்கமாக அமைகிறது.
மாணவர்களுடன் கலந்து பேசும் வாய்ப்பை எங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த செர்டாங் ஆரம்பப்பள்ளிக்கும் தலைமையாசிரியர்க்கும் பொறுப்பாசிரியர்களுக்கு அன்பும் நன்றியும்.

செப்டம்பர் 06, 2022

காற்றிலே மிதக்கலாம்


உயரம் என்றால் உள்ளூர பயம். அது உள்ளே ஊறும் சமயம் உடம்பு வியர்த்து கொட்டும். ஏணியின் ஏறி நிற்பதற்கு முன்னமே உடல் உரோமங்கள் எல்லாம் நின்றுவிடும். இது போதாதென்று ஒரு முறை தலையில் அடிபட்டதால் உயரம் ஏறுதல் எனக்கு கூடுதல் பயத்தையும் மயக்கத்தையும் கொடுக்க ஆரம்பித்து விட்டது. 

ஆனால், எனக்கு உயரம் ஏறுவது சிறுவயதில் இருந்து மிகவும் பிடித்த ஒன்று. ஆரம்பத்தில் நண்பர்களுடன் எங்கள் தோட்டபுற வீடுகளுக்கு அருகில் இருக்கும் காடு மலைகளில் ஓடிப்பிடித்து விளையாடுவோம். மலைகளில் ஆளுக்கு ஒரு பக்கமாக பாறைகளை பிடித்து ஏறி நிற்போம். மரத்தின் உச்சியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்போம்.


 நாளாக நாளாக இன்னும் சொல்லப்போனால் நாளை என்ன நடக்கும் என்ற எண்ணம் தோன்றியதும் பல பயங்கள் வந்து சேர்ந்து கொண்டன. மலையில் சறுக்கி விழுந்தால் என்ன ஆகும்? மரக்கிளை ஒடிந்து கீழே விழுந்தால் என்ன ஆகும்? வீட்டில் தெரிந்தால் இன்னொரு காலையும் ஒடித்துவிடுவார்களே எப்படி நொண்டிக்காலுடன் பள்ளிக்கூடம் போவது? போன்ற அடிப்படையற்ற குழப்பங்களுக்கு பதில் கிடைக்காது பயம்தான் எங்களுக்கு கிடைத்தது.

ஆனால், எது நமக்கு பயம் காட்டுகிறதோ அதுதான் நம்மை வளரவும் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால், நம்மை பயங்காட்டுவதை நாம் பயம் காட்ட வேண்டும். எதுவெல்லாம் என்னை பயமூட்டுகிறதோ அதனை ஒவ்வொன்றாக நேருக்கு நேர் சந்தித்து வருகிறேன். ஆனால் சொல்வது போல எளிமையாக அதனை சாத்தியப்படுத்த முடியாது. 

உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் வீடியோக்களாக இருக்கட்டும், கயிறை பிடித்துக்கொண்டு மலைகளில் இருந்து விழுவதாக இருக்கட்டும், வான்குடையுடன் குதித்து பறப்பதாக இருக்கட்டும் எனக்கு சட்டென ஒரு புல்லரிப்பை ஏற்படுத்திவிடும். ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் நானும் இப்படி காற்றில் பறந்து காட்டுகிறேன் என்று இல்லாளிடம் பேசினேன். எப்போதோ பேசியதை சமயம் பார்த்து நிறைவேற்றும் வாய்ப்பை இல்லாள் ஏற்பாடு செய்திருந்தார். ‘WINDLAB INDOOR SKYDIVING’  மூலமாக காற்றில் பறப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தாள். 


இல்லாளின் தோழிக்கு அவரது வேலையிடத்தில் கிடைத்த வாய்ப்பை அவரது நண்பர்களுக்கு அவர் பயன்படுத்த; இல்லாள் அதனை எனக்காக பயன்படுத்தினாள்.

குறிப்பிட்ட இடத்திற்கு சீக்கிரமே சென்றுவிட்டோம். உடலில் உற்சாகம் இருந்தாலும், அங்கு எங்களுக்கு முன்னே காற்றில் மிதப்பவர்களைப் பார்க்க வயிற்றில் ஏதோ சுழன்றது. அடுத்த நாள் பார்க்கலாம் என மனதில் நினைத்து என்ன சொல்லி சமாளிக்கலாம் என நினைத்தேன். அப்போதுதான் தோழியின் உறவினர்கள் பிள்ளைகளுடன் வந்தார்கள். எல்லோரும் ஜாலியாக பறக்கலாம் என்றுதான் வந்தார்கள். 

ஆனால் அங்கு வந்ததும் ஆளுக்கு ஆள் பயம் தொற்றிக்கொண்டது. அவர்களுடன் சுவர் காற்றாடியின் காற்றுக்கே பறக்கக்கூடிய பையன் ஒருவனும் வந்திருந்தான். ஒருமுறை குழு புகைப்படம் எடுக்கும் போது அந்தப்பையன் சரியாக நிற்காததால், இடது கையினாலேயே அந்தப்பையனைத் தூக்கி எனது வலது பக்கத்தில் நிற்க வைத்துவிட்டேன். இன்று அவனும் இருந்ததால் என் மானத்தைக் காப்பாற்றும் கட்டாயம் வேறு வந்துவிட்டது. மனதில் தைரியத்தை வரவைத்துக்கொண்டேன்.


குழுவாக பேசி உற்சாகத்தை ஏற்படுத்திக்கோண்டோம். எங்களுக்கான நேரம் வந்தது. பறப்பதற்கு ஏற்ற ஆடைகளை அவர்களே கொடுத்தார்கள். தலைக்கவசம், காதுக்குள் வைக்க வேண்டிய தக்கை, கண்ணாடி போன்றவற்றை உடலில் பொருத்திக்கொண்டோம்.


 பதினைந்து நிமிடத்திற்கு எங்களுக்கு வகுப்பும் நடந்தது. முக்கியமாக காற்றில் மிதக்கும் போது கால்கள் மூலம் எப்படி மேலே போவது கீழே வருவது, கைகளைப் பயன்படுத்தி எப்படி வலது இடது பக்கங்களுக்கு திரும்புவது என தெரியப்படுத்தினார்கள். உள்ளே பேச முடியாது என்பதால், முக்கியமான கை கால் அசைவுகளை எப்படி செய்ய வேண்டும் என்கிற குறியீட்டு மொழிகளைக் கற்றுக்கொடுத்தார்கள். என்ன ஒன்று, சொல்லிக் கொடுத்து பறக்க தயாரான உற்சாகத்தில் குறியீடுகள் மறந்துவிட்டன. நல்லவேளையே உள்ளே அதனை ஓவியமாக ஒட்டி வைத்திருந்தார்கள்.


எங்கள் முறை வந்தது. பெயர்களை வரிசையாக அழைக்கத்தொடங்கினர். ஒவ்வொருவராக சென்றோம்.

பெரிய குழாய் வடிவிலான அறை. கீழே ராட்ச்சச காற்றாடி, உள்ளே ஓர் உதவியாளர். குழாயின் கதவு திறந்ததும் கைகளைத் தூக்கிகொண்டு அப்படியே சாய வேண்டும். நாம் சாய்வதை காற்றோடு இணைந்து உதவியாளரும் நம்மை தாங்கி பறக்கவிடுவார். நம்மால் நம் கை கால்களை கட்டுப்பாட்டில் வைத்து காற்றில் பறக்க முடியும் என அவர் நம்பினால் அவர் விலகுவார். இல்லையெனின் ஒரு கை எப்போதும் நம் மேல் இருக்கும். 

முதல் சுற்றில் என்னால் எதனையும் சரிவர செய்ய முடியவில்லை. ஆனால் கற்றுக்கொள்ள முடிந்தது. புதிய அனுபவம். ஆனால் இரண்டாம் முறை கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தினேன். உடல் எடை அற்ற மனிதனாய் காற்றில் அப்படியே சுற்றுச்சுற்றி பறந்தேன். வித்தியாசமான அனுபவமாகவும் அது அமைந்தது. ஒரு தியானம் போல சுற்றி நடப்பது, சுற்றி இருப்பவர் என எதுவும் கண்களுக்கு தெரியவில்லை. பறவை போல முழு சுதந்திரமாக பறந்து கொண்டிருந்தேன். 
அதிக செலவில்லை, ஆனால் அளவிட முடியாத அனுபவமாய் அது அமைந்தது. வாய்ப்புள்ளவர்களும் ஒரு நாள் பறவை போல காற்றில் மிதந்து பாருங்களேன். விவரிக்க முடியாத அனுபவமாக அது அமையும்.

செப்டம்பர் 03, 2022

வாங்க லா... வணக்கம் லா...

"உலகில் பல நாடுகளில் தமிழ் இருக்கிறது; ஆனால் மலேசியாவில் மட்டுமே தமிழ் வாழ்கிறது "

மலேசியாவிற்கு வரக்கூடிய சினிமா பிரபலங்கள் பொதுவாக மேடைகளில் இதைத்தான் கட்டாயம் பேசுவார்கள். அதற்கு நாம் கைத்தட்டி அவர்களை மேலும் உற்சாகப்படுத்துவோம்.

ஆனால், அவர்கள் எடுக்கும் சினிமாக்களில் காட்டக்கூடிய பெரும்பாலான மலேசிய கதாப்பாத்திரங்கள் அவர்கள் செல்வதற்கு முரணாக இருக்கும்.

'ஹேய் என்னலா.. இங்க வா லா....'
'என்க்கு உன்ன்னை பிடிக்குது.. உன்க்கு என்ன்னை பிடிக்குதா...'
இப்படித்தான் பேசுவார்கள். நாம் கூட அப்படி பேசுபவர்களைப் பார்த்திருக்க மாட்டோம். இவர்களை எங்கிருந்து கண்டுபிடிக்கிறார்கள் என தெரியவில்லை. அதிலும் பல கதாப்பாத்திரங்கள் பாதி லூசுகளாக இருக்கும். 

சந்தேகம் இருந்தால் சில திரைப்படங்களைப் பார்க்கலாம். ஏதோ இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நம்மூர் நாயகன் முகேன் ராவை திரை நாயகனாகப் பார்க்கும் மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது.

எனது சிறுவயதில் 'மலேசிய ரவிச்சந்திரனின்' காதலிக்க நேரமில்லை, அதே கண்கள், போன்ற திரைப்படங்களைக் பார்த்து ரசித்த பொழுதுகள் உண்டு. பின்னர்தான் தெரிந்தது அவர் மலேசியர் என்று. வருத்தம் என்னவெனில் நான் தெரிந்துகொண்டு தேடும் சமயங்களில் அவர் நாயகன் அந்தஸ்த்தை தவறவிட்டிருந்தார். அதற்கு பின்னணி காரணமாக எம்.ஜி.ஆரை இணைத்து ஒரு கதையை இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

 மலேசிய ரவிச்சந்திரனின் குரலும் மலேசிய வாசுதேவனின் குரலும் அவர்களின் தமிழும்தான் எத்தனை இனிமையானது என யோசிக்காமலிருக்க  முடியவில்லை.

செப்டம்பர் 01, 2022

'உப்புரொட்டி சிதம்பரம்' செய்தது நியாயமா..?

(உள்ளூர் நாடகம் குறித்தப்பார்வை)


-உப்புரொட்டி சிதம்பரம் செய்தது நியாயமா ? -
-----------------------------------------------------------

கதையில் ஏமாற்றம் இருக்கலாம் ஆனால் கதையே ஏமாற்றமாக இருக்கலாமா?     கதை என்பது என்ன என்பதிலேயே பலருக்கு குழப்பங்கள் இருக்கின்றன. சினிமா, சின்னத்திரை, மேடை நாடகம், வானொலி நாடகம், கதை, சிறுகதை, குறுங்கதை, நாவல் என்ன எல்லா வகையையும் எடுத்துக் கொண்டாலும் அதன் ஆதாரம் அதன் கதைதான்.

சொல்கிற முறையில் காட்டுகிற காட்சியில் கோர்த்துவிடுகிற சம்பவங்களில் வசீகரிக்கும் வார்த்தை ஜாலங்களில் என என்னதான் அதன் வடிவத்தை உயர்த்திப்பிடித்தாலும் கதை என்கிற அஸ்த்திவாரம் சரியாக இல்லையென்றால் அது தோல்வியைத்தான் தழுவி நிற்கும்.

‘கதை’ என்பதை எப்படி புரிந்து கொள்ளலாம். இதற்கு பல படிநிலைகளில் பல பதில்கள் நம்மை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால் இப்போதைக்கு மிக எளிமையாகச் சொல்வதென்றால் ‘முழுமை’ என புரிந்துகொள்ளலாம். கற்பனையில் தோன்றிய கருவோ, நேரடி அனுபவமோ, கேட்டு பார்த்த சம்பவங்களோ இப்படி ஏதோ ஒரு தீப்பொறியில் தோன்றி ஒரு முழுமையான வடிவத்தில் வந்தமர்வது கதை. முழுமையான வடிவத்தில் வந்து அமர்வது மட்டுமல்ல, அந்த வடிவத்தை முழுமையாக்குவதே அந்தக்கதைதான். அதனால்தான் கதை என்றால் முழுமை என இப்போதைக்கு புரிந்து கொள்ளலாம் என்கிறேன்.

ஓர் உதாரணம் தரவா ?

ரஜினிகாந்தின் முத்து திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். (ஜப்பான்லயே பார்த்துட்டாங்கலாம்) அதையே கொஞ்சம் நிகழ்லாமக மாற்றிக்கொள்வோம்.

திரையரங்கில் இருக்கின்றோம். சூப்பர் ஸ்டாருக்கு கைத்தட்டி, அவரது ஸ்டைல்களுக்கு விசில் அடித்து, மீனாவின் அழகில் மயங்குகிறோம், செந்தில் வடிவேலு செய்யும் நகைச்சுவைகளுக்கு சிரித்து, யாரந்த சாமியார் ரஜினி என யோசித்து, ராதாரவியைக் கண்டு அச்சப்படுகிறோம். இப்படியே இடைவேளை வரை வந்துவிட்டோம். இப்போது இடைவேளை காட்சியைச் சொல்கிறேன்.

எஜமான் தன் மீது உயிரினும் மேலான விசுவாசத்தை வைத்திருந்த ரஜினியை அடித்துகொண்டிருக்கிறார். மற்ற வேலைக்காரர்கள் அழுகிறார்கள். ரஜினி அழுததும் நாமும் அழுகிறோம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நம்மை ஆழத்திற்கு கொண்டுப்போகின்றார். இரத்தக்காயங்களுடன் என்ன நடக்கிறது என தெரியாத முகத்துடனும் துணியை வாயில் வைத்து அழுகையை முடிந்தவரை அடுக்கிக்கொண்டு ரஜினி வீட்டை விட்டு வெளியேறுகிறார். அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலில் நாமும் நம் இருக்கையில் அசைந்து அமர்கிறோம். இனிதான் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கப்போகிறது. மீனா யாரை திருமணம் செய்வார். யாரந்த சாமியார் ரஜினி, எஜமானனின் அம்மா ஏன் ரஜினிமீது பாசமாக இருக்கிறார், ராதாரவியின் சூழ்ச்சிக்கு என்ன பதிலடி என பல கேள்விகளும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் எகிறிக்கொண்டுருக்க……..

திரை கறுப்பாகிறது, திரையரங்கம் வெளிச்சமாகிறது. அத்துடன் முத்து திரைப்படம் முடிந்துவிட்டதென அதன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வழக்கமான வணக்கத்துடன் வந்து நின்று சிரிக்கின்றார்.

இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? இதுவரை நல்ல படத்தைப் பார்த்துவிட்டோம் என்ற  எண்ணமா ? அதான் நகைச்சுவைகளுக்குச்  சிரிச்சிட்டோமே என்ற மன நிறைவா ? கொடுத்த காசுக்கான மனநிறைவு கிடைச்சாச்சி ? என எது உங்களுக்கு இப்போது தோன்றுகிறது? இதற்கான முடிவை நீங்கதான் சொல்ல வேண்டும்.

மேற்சொன்ன திரைப்படம் எப்படி முழுமையற்று நம்மை ஏமாற்றியதோ அதே போலதான் நமது உள்நாட்டு நாடகமான ‘உப்புரொட்டி சிதம்பரம்’ தொடரும் நம்மை ஏமாற்றியதோடு முட்டாளாக்கியும் உள்ளது. கடினமான சொல்லாக இருந்தால் மன்னிக்கவும். ஆனால் கதை மீதான இத்தனை பெரிய அலட்சியத்தை என்னால் இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மேற்கொண்டு பேசுவதற்கு முன்பாக எனக்கொரு ஐயம்! சமீபகாலமாக ஆஸ்ட்ரோவில் பல நல்லநல்ல தொடர் நாடகங்களையும் புதிய முயற்சிகளையும் நாம் பார்த்தோம். நானும் அவற்றை குறித்து எழுதியும் இருந்தேன். அவ்வகையில் எல்லா நாடகங்களும் நான் அறிந்தவரை இருபத்து இரண்டு தொடர்கள்தான் இருந்தன. அதன் பொருட்டே சில நல்ல கதையம்சம் கொண்ட தொடர்கள் 22-வது தொடரில் வேறு வழியின்றி அவசர அவசரமாக முடிந்தன. நல்ல வேளையாக அந்தக்கதைகள் தன் வரையில் முழுமையடைந்தன.

ஆனால் உப்புரொட்டி சிதம்பரம் தொடர் மட்டும் எப்படி 35-தொடர்கள் வரை வந்தன. வழக்கமானத் தொடர்களைக் காட்டிலும் பதிமூன்று தொடர்கள் கூடுதலாக கிடைப்பதற்கு என்ன காரணம். அப்படி கூடுதலாகக் கிடைத்தும் முழுமை அடையாத கதையை எப்படி ஏற்றுக்கொண்டார்கள். இந்த நாடகத்தை ஏற்றுக்கொள்ள வைத்த அம்சங்கள் எதுவென விளக்கினால் அல்லது சிறு குறிப்புகள் கொடுத்தாலும் கூட புதிய இயக்குனர்களுக்கும் அதற்காக உழைப்பவர்களுக்கும் பெரிய உதவியாக இருக்கும் என்பதால் கேட்டுக்கொள்கிறேன்.

இதே வேளையில் இன்னொன்றையும் யோசிக்க வேண்டியுள்ளது.

“அதான் அடுத்த சீசன் வருமே… உப்புரொட்டி சிதம்பரம் பாகம் இரண்டு.. அதுல கதையை முழுசா தெரிஞ்சிக்கலாம்” என யாராவது ஒருவர் வரப்போகிறார் என்பதால் அவருக்கும் சேர்த்து ஒரு பதிலை இங்கே கொடுத்துவிடலாம் என நினைக்கிறேன்.

இந்நாடகத்தில் இருக்கும் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து கடைசியாக ஒரு எதிர்ப்பார்ப்பில் அல்லது ஒரு சுபத்தில் முடிந்து, மீண்டும் இதே குடும்பத்தில் தோன்றும் புதிய முடிச்சிகளும் அதனை அவிழ்க்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் சந்திக்கும் சோதனைகளும்தான் பாகம் இரண்டிற்கான கதையாக அமையுமே தவிர இப்படி முழுமையற்ற ஏமாற்று வேலை அல்ல.

அதென்ன ஏமாற்று வேலை எனதானே கேட்க தோன்றுகிறது. 35-வது தொடரில் அடைப்புக்குறியில் கடைசி அத்தியாயம் என முன்னெச்சரிக்கையாக போடாமல் இருந்திருந்தால் இந்நாடகத்தின் இடைவேளைக்கான உச்சம் தொடும் பாகமாக இத்தொடர் இருந்திருக்கும். முத்து படத்தில் எஜமானனிடம் அடிவாங்கிய ரஜினி அரண்மனையை விட்டு வெளியேறுகிறார் பின்னணியில் ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ என பாடல் இசைக்க, திரையில் கே.எஸ்.ரவிக்குமார் தோன்றி நன்றி வணக்கம் சொல்வதற்கு இணையானததைதான் இவர்கள் நமக்கு  நடத்தியிருக்கிறார்கள்.

இன்னொரு சந்தேகமும் இல்லாமலில்லை, முன்னமே இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்பு உறுதியாகிவிட்டதால் என்னவோ முதல் பாகத்தில் முழுமையைக் காட்ட விரும்பவில்லையோ, அதான் அடுத்த சீசன்ல சொல்லப்போறோமே அதுக்கு என்ன அவசரம்!!!!!!

மற்றபடி நம்பிக்கையான இயக்குனர், நல்ல நடிகர்கள், ரசிக்க வைக்கும் பாடல், உறவுகளின் பொறாமை, காழ்ப்புணர்ச்சி, அன்பிற்காக எல்லாவற்றையும் சுமக்கும் பெண், பேச்சு எடுபடாத அப்பா, நட்பு என பல உள்ளன. பாராட்ட வேண்டிய நடிப்பை பலர் கொடுத்திருந்தார்கள், சிரிக்க வைத்தார்கள் ரசிக்க வைத்தார்கள்.

இந்நாடக முடிவைத் தெரிந்துகொண்டு இவற்றையெல்லாம்தான் எழுத எண்ணியிருந்தேன். ஆனால் நாடகத்தின்  முடிவு அதற்கு கொஞ்சமும் வழிவிடாதது என் தவறாக இருக்க முடியாதுதானே.

#தயாஜி


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்