பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

#குறுங்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#குறுங்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அக்டோபர் 29, 2023

குறுங்கதை எழுதும் வகுப்பு 1 - நிறைவடைகிறது

 


குறுங்கதை எழுதும் வகுப்பு 1 - நிறைவடைகிறது


  செப்டம்பரில் தொடங்கிய வகுப்பு அக்டோபரில் நிறைவடைந்தது. இரு மாத வகுப்பாக திட்டமிட்டு அதன்படி அதனை வழிநடத்தி முடித்தோம். பல புதியவர்கள் கலந்து கொண்டார்கள். கவனிக்கத்தக்க எழுத்தாளர்களும் கலந்து கொண்டது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

  குறுங்கதை எழுதுவதில் இருக்கும் சுதந்திரம் குறித்தும் அதிலிருந்து அடுத்த படைப்பாக்கத்திற்கு எப்படி நகர்வது எனவும் கலந்து பேசினோம். ஒவ்வொருவரும் அவர்களின் எழுதும் திறனை குறுங்கதை எழுதுவதில் இருந்து கண்டுகொண்டார்கள்.

 ஏற்கனவே நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களின் கருத்துகளும் அவர்களில் பகிர்தலும் வகுப்பிற்கு பயனாக அமைந்தது.

  தொடக்கமாக குறுங்கதைகள் குறித்த அறிமுகம் வழக்கப்பட்டது.  அதன் பின் பயிற்சிகளும் இடுபணிகளும் வழங்கப்பட்டன. பங்கெடுத்தவர்கள் தங்களின் திறமைகளைச் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

   கதைகளை எழுத கண்ணுக்கு எட்டிய காட்சிகள் கூட போதும்; அதிலிருந்து பல கதைகளுக்கான கருக்களை நாம் கண்டுகொள்ளலாம் என்பதை ஒவ்வொருவரும் நன்கு புரிந்து கொண்டார்கள்.

  இவ்வகுப்பில் கொடுக்கப்பட்ட இடுபணிகளில் இருந்து மொத்தமாக 20க்கும் அதிகமான குறுங்கதைகளைத் தேர்வு செய்துள்ளோம். ஒவ்வொரு கதையும்  நிச்சயம் கவனத்தை ஈர்க்கும் கதையாக அமைந்திருக்கின்றது.

    விரைவில் இக்கதைகளை குறுங்கதைத் தொகுப்பாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

   குடும்ப மாதுவின் சுதந்திரம் நோக்கிய குரலாய் ஒலிக்கும் கதைகள், திருவள்ளுவரின் கடைசி குறள் குறித்த கதை, அபலநகைச்சுவையை மையப்படுத்திய கதைகள், மக்களால் குற்றம் சுமத்தப்பட்டவரின் மறுபக்கம், பேய்கள் என்பவை இருக்கிறதா என நம்மையே கேட்க வைக்கும் கதை, சினிமாவின் தாக்கம் மாணவச்சமூகத்தில் எந்த விளைவுகளைக் கொடுக்கின்றன,  பூமியை தூய்மைப்படுத்த சொல்லி விண்வெளியை வீணாக்கும் அறிவியலில் கதை, கனவையும் நினைவையும் ஒரே மாதிரி அணுகும் கதை, மனமுறிவுகளால் மூன்றாம் தரப்பிற்கு ஏற்படும் பாதிப்பு என பலவேறுபட்ட கதைக்களன்களையும் ஓரளவிற்கு மாறுபட்ட கதைச்சொல்லும் யுக்தியையும் பயன்படுத்தி இக்கதைகளை இவர்கள் எழுதியிருந்தார்கள். 

     அவர்களின் அனுமதியுடன் அக்கதைகளை விரைவில் உங்களோடு பகிர்கிறேன்.

   இவ்வாறு எங்களின் முதல் குறுங்கதை எழுதும் வகுப்பு நிறைவடைந்தது. நவம்பரில் இரண்டாம் வகுப்பை தொடங்குகின்றோம். 

    உங்களுக்கும் குறுங்கதைகள் எழுத ஆர்வம் இருந்தால் கலந்து கொள்ளுங்கள். 

 குறுங்கதைகளைப் புரிந்து கொள்வதிலிருந்து உங்களுள் மறைந்திருக்கும் எழுத்தாற்றலை நீங்க கண்டுபிடித்து எழுதலாம்.


எழுதுவோம்… 

அதுதான் இரகசியம்…

அதுவேதான் தியானம்…


அன்புடன் தயாஜி 

அக்டோபர் 22, 2023

மனமுறிவு

 

 



அம்மா அப்படித்தான் சொல்லியிருந்தார். இனி இவர்தான் எனக்கு அப்பாவாம். ஆமாம் அப்பாவாம்.  அப்பாவா? எப்படி இவர் எனக்கு அப்பாவாக இருக்க முடியும். 

அப்பா இனிமேல் வீட்டிற்கு வரமாட்டாராம். வரக்கூடாதாம். வாரம் ஒரு முறை மட்டும் வருவாராம். இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அப்பா ஏன் இன்னமும் வரவில்லை.

அம்மா இருக்கும் போதெல்லாம் புது அப்பா ரொம்ப கண்டிப்பானவராக இருப்பார். ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது. சாக்லெட் சாப்பிடக்கூடாது. மழையில் நனையக்கூடாது. சத்தம் போட்டு சிரிக்க கூடாது. வீட்டில் ஓடி பிடித்து விளையாடக்கூடாது. சுவற்றில் கிறுக்க கூடாது என்று எப்பவும் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். 

என் அப்பா எப்பவும் அப்படி சொல்ல மாட்டார். சொல்லவே மாட்டார். அவரும் என்னுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவார். மழையில் என்னுடன் ஓடி பிடித்து விளையாடுவார். கலர் பென்சில்களை வாங்கி கொடுத்துக்கொண்டே இருப்பார்.

அப்போது என் அப்பா செய்ததையெல்லாம் புது அப்பா இப்போது செய்யக் கூடாது என்கிறார். அப்போது என் அப்பா செய்யாததையெல்லாம் இப்போது புது அப்பா செய்கிறார்......

அக்டோபர் 21, 2023

எப்படித்தான் வாழ்கிறார்கள்

 


- எப்படித்தான் வாழ்கிறார்கள் -

சிறந்த தம்பதிக்கு விருது கொடுக்கும் விழா. அதற்கென்றே சில தம்பதியினர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். அவர்களுக்கு தெரியாமலேயே ஒரு குழு ஒவ்வொரு தம்பதியையும் பின் தொடர்ந்தது.

தம்பதியரில் யார் சிறந்த தம்பதி என  அறிவித்தார்கள். பலரும் தங்களுக்கு அந்த இடம் கிடைக்காதது குறித்து வருத்தம் இருந்தது. எப்படி அவர்களால் இப்படி வாழ முடிகிறது என்று பொறாமையும் பட்டார்கள்.

ஐம்பதை நெருங்கிய மனமொத்த தம்பதியினர் விழா மேடையில் ஏறுகிறார்கள். பார்த்துக்கொண்டிருக்கும் பல தம்பதிகள் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள்.

பலரும் அவர்களை முன்னுதாரணமாக எடுத்தார்கள். எப்படி வாழ்கிறார்கள் பாரேன் என பேசவும் செய்தார்கள்.

மேடையில் கணவனிடம் கேள்வி கேட்கப்பட்டது. "ஐயா உங்க கல்யாண நாள் எப்போ?"

அவருக்கு பதில் நினைவில் இல்லை. கூட்டத்தில் ஏதோ சலசலப்பு. பின் மனைவியிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது. அவருக்கும் நினைவில் இல்லை.

இருவருக்குமே திருமண நாள் நினைவில் இல்லை இவர்கள் எப்படி மனமொத்த தம்பதிகளாக வாழ்வதாகச் சொல்கிறார்கள் என்று குழம்பினார்கள்.

சிலருக்கு மட்டும் அதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு நன்றாகத்தெரியும். எப்படித்தான் வாழ்கிறார்கள் என்ற கேள்விக்கு இப்படித்தான் வாழ்கிறோம் என்ற பதில்தான் அவர்களுடையதும்.


அக்டோபர் 18, 2023

தீவிரவாதி

 

அவனைக் கொல்வதற்கு முன்பாக விசாரித்தார்கள். விசாரிக்காமல் யாரையும் அதிகாரிகள் ஒருபோதும் கொல்வதில்லை. இல்லை இது கொலையில்லை. தண்டனை.

 அதிகாரிகள் விசாரிக்காமல் இதுவரை எவருக்கும் தண்டனை வழங்கியதில்லை.

அவன் முதலில் அழத்தொடங்கினான். அழுகிறான் அழுதுக்கொண்டே இருக்கிறான். இது அவனது நாடகமாகக்கூட இருக்கலாம். உடலில் உள்ள காயங்களும் முகத்திலிருக்கும் வீக்கமும் தலையிலிருந்து வழியும் இரத்தமும் அப்படியொன்றும்  வலிக்காது என அதிகாரிகளுக்கு தெரியும்.

வாயில் காய்ந்த ரொட்டியைத் திணித்தார்கள். அது தொண்டையில் சிக்காமலிருக்க எதையோ வாயில் ஊற்றினார்கள். அவனால் எதையும் விழுங்க முடியவில்லை. எதையும் சொல்லவும் முடியவில்லை. வாந்தி எடுத்தான். திணித்ததிலிருந்து திணிக்காததும் அவன் தின்னாததும் வெளியில் தெரித்தன. 

அவனை  சிறிது நேரம் ஓய்வெடுக்க வைத்தார்கள்.

மீண்டும் ஒரு முறை விசாரித்தார்கள்.  இம்முறை அழுகை குறைந்திருந்தது. மூச்சு மட்டும் அதிகப்படியாக ஏறியேறி இறங்குகிறது.

அவனிடமிருந்து எந்த விபரங்களையும் வாங்க முடியவில்லை. அப்படியொரு பயிற்சியை அவன் பெற்றிருக்கக் கூடும். 

 தாங்கள்  தாக்குதல் நடத்திய இடத்தில் மயங்கிய நிலையில் இவனை கண்டுபிடித்திருந்தார்கள். தெளிவாக இருந்தால் இவனும் ஓடியிருப்பான்.

அவனிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காது என உறுதியானது. உண்மையைச் சொல்லாத குற்றத்திற்காகவும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத குற்றத்திற்காகவும் அதிகாரி முன் வாந்தி எடுத்த குற்றத்திற்காகவும் தாக்குதல் நடந்த இடத்தில் பிடிபட்ட குற்றத்திற்காகவும் இன்னும் சில இதுவரை கண்டுபிடிக்காத குற்றத்திற்காகவும் தீவிரவாதி என உறுதி செய்து அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இது இங்கு நடந்துகொண்டிருக்கும் போது, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சிலர் தங்களில் உறவினர்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். 

அதில் ஓர் அம்மா தேடுவது; எப்போதும் அழுதுக்கொண்டிருக்கும் தனது ஐந்து வயதான வாய்ப்பேச வராத குழந்தையை..... குழந்தையை...... குழந்தைகளை.... குழந்தைகளையும்.....

அக்டோபர் 13, 2023

- வசுமதியின் சிறகுகள் - 2




தலைப்பு : சிறகுகள்
எழுத்து : அறிமுக எழுத்தாளர் வசுமதி 
வகை : குறுங்கதை 
(எங்கள் குறுங்கதை எழுதும் வகுப்பின் பங்கேற்பாளர்)

 

                 என் உடம்பில் பொருத்தப்பட்ட ஒவ்வொரு கருவியின் பயன்பாடும் என்னவென்று  என் பயிற்றுவிப்பாளர், கிளி பிள்ளைக்குச் சொல்வதைப்போல் எனக்கு சொல்லிக்கொண்டிருந்தார். நேரம் நெருங்க நெருங்க என்னுடய இதயம் மின்னலின் வேகத்தை விட பன்மடங்கு வேகமாகத் துடித்தது, லப் டப் லப் டப்..... “லெட்சுமி, இட்ஸ் யுவர் டென் நாவ், லெட்ஸ் கோ!!”. என்னுடைய பயிற்றுவிப்பாளாரை பின்தொடர்ந்து ஒரு சிறிய விமானத்தில் ஏறினேன். சரியாக கடலின் மட்டத்திலிருந்து 15,000 அடி தூரத்தில் அந்த விமானம் பறந்து கொண்டிருக்கையில், விமானி பச்சை விளக்கை அழுத்தி, “இது உனக்கான நேரம், லெட்சுமி!” என்று “thumbs up” காட்டினார். விமானத்தின் நுழைவாயிலில் என்னுடைய பாதங்கள் பலமாக ஒட்டி கொண்டன. எட்டி பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒன்றுமே தெரியவில்லை. ஒன்று, இரண்டு, மூலெட்சுமி என்கிற நான், வானில் பறக்கத் தொடங்கினேன். 

            அடப்பாவி மனுசா!! 1,2,3 சொல்லிய பிறகு நாம் குதிப்போம் என்று கூறிவிட்டு, மூன்று சொல்வதற்கு முன்பே என்னை வானத்தில் தள்ளிவிட்ட என்னுடைய பயிற்றுவிப்பாளாரின் மீது கடுங்கோபம் வந்தது. ஆனால் அது ஒரு வினாடிக்கூட நிலைக்கவோ நீடிக்கவோயில்லை. நான் ஒரு பறவயைப்போல் பறக்க உதவி புரிந்த அந்த ஜீவனிடம் நான் எப்படி என்னுடய சீற்றத்தைக் காண்பிக்க முடியும்.

            5 வினாடிகள் “free fall”-க்கு (எந்தவொரு தடையுமின்றி வீழ்தல்) பிறகு என்னுடய பயிற்றுவிப்பாளர் பாராசூட் பட்டணைக் கிளிக் செய்தார். துப்பாக்கியின் தோட்டாவைப்போல் என்னுடைய உடம்பு சர்ரென மேலே இழுத்து செல்லப்பட, என் வயிற்றில் யாரோ ஓங்கி உதைத்தது போல் ஓர் உணர்வு. 

            மறுபடியும் அதே உதை, “அம்மா ஆஆஆஆ... என்று கத்தியபடியே திடுக்கிட்டு எழுந்தேன். அட! இவ்வளவு நேரம் என் மகள் தூக்கத்தில் உதைத்ததால் ஏற்பட்ட வலிதான் அது என்பதை உணர்ந்தேன். என்ன ஒரு அசாதாரணமான கனவு. நான் கண்ட கனவு நிச்சயமாக மெய்ப்படும் என்ற நம்பிகையோடு படுக்கையிலிருந்து எழுந்து என்னுடய அன்றைய வேலைகளைப் பார்க்கத் தாயரானேன்

            லெட்சுமியின் பல வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், அவளது மனம் முழுவதும் அவள் கண்ட கனவை ஆக்கிரமித்திருந்தது. லெட்சுமி அன்றைய இரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். இரவுகள் அவளுக்கு முக்கியமானவை. அவள் ஒரு சுதந்திர பறவையாக வாழ்வது அந்த இரவு நேர தூக்கத்திலும் அது கொடுக்கும் கனவுலகிலும்தான். நேற்றைய கனவில் ஸ்கை டைவிங் செய்தாள் ஆனால் தரையிறங்கும் முன்பே அவளின் கனவு கலைந்து விட்டது. 

            இன்றைய கனவில் எப்படியும் தரையிறங்காமல் அவள் உறக்கத்திலிருந்து விழிக்கப் போவதில்லை. 

குறுங்கதை எழுதும் வகுப்பு (வகுப்பு 4)

 

வசுமதியின் சிறகுகள் - 1


 செப்டம்பரில் குறுங்கதை எழுதும் வகுப்பைத் தொடங்கினோம். இரு மாத வகுப்பாக அதனை கட்டமைத்தோம். இம்மாத இறுதியில் அவ்வகுப்பு நிறைவடைகிறது.

முதல் மாத வகுப்புகளில் குறுங்கதைகள் குறித்து விரிவாகவே பேசினேன். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வகுப்பில் நடந்தவற்றைக் குறித்து என் வலைப்பூவிலும் முகநூலிலும் பகிரவும் செய்தேன். வகுப்பு முடிந்த பின்னரும் கூட பங்கேற்பாளர்களுக்கு மீள்பார்வை செய்ய உதவும் வகையிலேயே அவற்றை எழுதியிருந்தேன். செப்டம்பர் மாத கடைசி குறுங்கதை வகுப்பை கேள்வி பதில்களாக அமைத்தோம். பலவிதமான கேள்விகள் வந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் பதில்களை சற்று விரிவாகவே அலசினோம்.

இவ்வகுப்பின் அடிப்படை நோக்கம் ‘வாசிக்கவும் எழுதவும் வைப்பது’ என்பதால் வாசிக்க வேண்டிய கதைகளைப் பகிரும் அதே சமயம்; முக்கியமான எழுத்தாளர்களின் குறுங்கதைகளை வாசித்து அதுபற்றிய பார்வையை ஒவ்வொருவரும் பகிர்ந்தார்கள். குறுங்கதைகளைப் பொறுத்தவரை எழுதுகின்றவர்களுக்கு இணையாகவே வாசிப்பவர்களும் கதைக்குள் நுழைய வேண்டியுள்ளது. எழுத்தாளர் சொன்ன இடத்திலிருந்து அவர் சொல்லாத இடத்தை வாசகன் தானே பயணித்து கண்டறிவது அவ்வளவு எளிதல்லவே.

முதல் மாத வகுப்பிலிருந்து இரண்டாம் மாத வகுப்பிற்கு அக்டோபரில் நுழைந்தோம். இம்மாதம் பங்கேற்பாளர்களை எழுத வைக்க வேண்டும். ஒரு குறிப்புச்சொல்லைக் கொடுத்து எழுதச் சொன்னோம்.

‘நான் கண்ட கனவு’ என்கிற குறிப்புச்சொல்தான் அது. ரொம்ப சாதாரணமாகத்தானே தெரிகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளைக் கொடுத்தோம். இச்சொல்லை தலைப்பிலோ , கதையின் நடுவிலோ அல்லது கதையின் முடிவிலோ ஏதாவது ஓரிடத்தில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் தலைப்பில் பயன்படுத்தினால் ஐந்து புள்ளிகள் கூடுதலாகவும் , கதை நடுவில் பயன்படுத்தினால் பத்து புள்ளிகளும் கதை முடிவில் பயன்படுத்தினால் ஒரே ஒரு புள்ளிதான் கூடுதலாகக் கிடைக்கும் படி செய்திருந்தோம்.

மொத்தம் பதினொரு எழுத்தாளர்கள் குறுங்கதைகளை எழுதி அனுப்பியிருந்தார்கள். ஒவ்வொரு கதையும் வித்தியாசமாக அமைந்திருந்தது. ஒரு மாத கால வகுப்பு பயனாக அமைந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.

வழக்கமான கூகுள் வகுப்பில் கதைகளை எழுதிய எழுத்தாளர்களோடு கதைகளைக் குறித்து பேசினேன். அதிலிருந்து சில கதைகளைச் சொல்ல வேண்டும்.

ராஜலெட்சுமி; துணை என்கிற தலைப்பில் குறுங்கதை எழுதியிருந்தார். தான் கண்ட கனவு பலித்தே விடுகிறது என்பதுதான் இக்கதையின் ஆதாரம். அதனை திறன்பட சொல்லியிருந்தார். அதே போல தனக்கொரு சம்பவம் நடந்ததையும் பகிர்ந்து கொண்டார்.

மோஹனா; மயக்கம் என்னும் குறுங்கதையை எழுதியிருந்தார். உறவினர் ஒருவர் பொதுவில் மயங்கி விழுந்ததைப் பார்த்த நாயகி தன் வாழ்நாளில் இப்படி மயங்கி யார் முன்னும் விழக்கூடாது என்று முடிவெடுக்கின்றார். ஆனால் அது அவருக்கு சாத்தியமில்லாமல் போகிறது. எதிர்ப்பார்த்த கதை முடிவில் எதிர்ப்பாராத சம்பவம் ஒன்றை இணைத்திருந்தார்.

பிருத்விராஜு; ‘பிரபஞ்ச நாயகன்’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். நடிகனின்  மகன் இன்னொரு நடிகனுக்கு பரம விசிரியாக இருப்பதால் ஏற்படும் சிக்கலைச் சொல்லும் கதை. இதனை சிறுகதையாக கூட விரிவாக்கன் செய்து எழுதலாம்.

தேவி; ‘நான் கண்ட கனவு’ என்ற தலைப்பிலேயே குறுங்கதையை எழுதியிருந்தார். லாவகமாக  கதையின் நடுவில் குறிப்புச்சொல் சினிமா பாடலில் வருவதாக எழுதியிருந்தார். கணவன் தான் இல்லாத சூழலில் மனைவி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்கு வழியமைக்கிறார். அவர் நினைத்தபடியே அவர் இல்லாமலாகிறார். ஆனால் அவரின் எண்ணம் மனைவியை தனித்து வாழ பழக்கிவிட்டது என்ற கருவில் எழுதியிருந்தார்.

கிரேஸ்; ‘மனிதருக்கு புரியுமா’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். பூமி மாசு படுகிறது என கவலைப்படும் யாரும் விண்வெளி எப்படியெல்லாம் மாசு பட்டுக்கொண்டிருக்கிறது என யோசிப்பதில்லை என்ற அடிப்படையில் ராக்கெட்டை வைத்து அதுவே தன்னைக் குறித்து சொல்வதாக எழுதியிருந்தார்.

மு.பா.செல்வா; மனிதாபிமானம் என்ற தலைப்பில் எழுதியிருந்தார். பள்ளி மாணவனின் காதல் கதையாக தொடங்கி நகைச்சுவை கதையாக மாறி நம்மை சிந்திக்க வைக்கும் கதையாக அமைந்தது. அது நடந்த சம்பவம் எனவும் தெரியப்படுத்தினார்.

கிடைத்த கதைகளில் சிலவற்றை குறித்து எழுதியுள்ளேன். இதில் ஒருவரான வசுமதி எழுதிய கதை எனக்கு ரொம்பவும் பிடித்த கதையாக அமைந்தது. சிறகுகள் என்ற தலைப்பில் இல்லத்தரசிகள் எதிர்நோக்கும் மனச்சிக்களையும் மன அழுத்தத்தையும் எழுதியிருந்தார். குடும்பச் சூழலில் ஒரு பெண் ஏன் கனவு காண்கிறாள் எது அவளுக்கு கனவாக வருகிறது என்பதுதான் ஆதார கேள்விகள். இக்கேள்விகளுக்கு பதில் தேட முயன்றாலே நமக்கு பல கதைகள் கிடைத்துவிடும். ஒரு கனவில் விட்டதை மறுகனவில் பிடிப்பேன் என கதாநாயகி நினைக்கிறார். அந்த நினைப்பே இக்குறுங்கதையை அடுத்த நகர்வுக்கு கொண்டு செல்கிறது. அவள் சுதந்திரமாக அவள் விரும்பியதை செய்வது அவளுக்கு வாய்த்த கனவில்தான் என்று கதையை நாம் புரிந்து கொண்ட அடுத்த நொடி; தூக்கம்தான் இவளுக்கு நிம்மதியென்றால் அந்தத் தூக்கமே கிடைக்காத எத்தனையோ பெண்கள் இருக்கிறார்களே என்று யோசிக்க வைக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டுமெனின் கதையின் தலைப்பிற்கும் கதையின் நாயகி காணும் கனவிற்கும் கதையின் முடிவிற்கும் ஓர் ஒற்றுமை இருக்கவே செய்கிறது. சிறகுகள், ஆகாயத்தில் இருந்து குதித்து பறத்தல், உறக்கமே சுதந்திரமாக கனவு காண வழியமைக்கிறது, என்கிற மூன்றும் இக்குறுங்கதையின் ஒரு வரிசையில் வந்தமைகிறது.

 விரைவில் எங்கள் வெள்ளைரோஜா பதிப்பகம் வெளியிடவிருக்கும் குறுங்கதைத் தொகுப்பு நூலில் வசுமதியின் ‘சிறகுகள்’ குறுங்கதையும் இடம்பெறும் என்பது எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.

சிறகுகள் குறுங்கதையை அடுத்த பதிவில் பகிர்கிறேன். நீங்களும் வாசித்துப்பாருங்கள். நான் சொன்னதைவிடவும் அதிகம் பேசுவதற்கு ஏற்ற கதைதான் இக்குறுங்தை.

நிறைவாக; மீண்டும் அடுத்த மாதம் அடுத்த குறுங்கதை எழுதும் வகுப்பை தொடங்குகின்றோம். ஆர்வம் உள்ளவர்கள் எங்களை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.


செப்டம்பர் 28, 2023

குறுங்கதை எழுதும் வகுப்பு (வகுப்பு 3) பகுதி 2

 பகுதி 2 – தொடங்குகிறது

 

                               - சொல்லிச்சொல்லி எழுதச் சொல்லுவோம் 2 –

 

மூன்றாம் வகுப்பையொட்டிய பதிவின் இரண்டாம் பகுதியில் சந்திக்கின்றோம். கதைகளை வாய்விட்டு வாசிக்கும் போது அக்கதை நமக்கு கூடுதல் புரிதலைக் கொடுப்பதாகச் சொன்னேன். அதேபோல புதிய எழுத்தாளர்களும் கதைகளை எழுதும் போது வாய்விட்டு சொல்லிச்சொல்லி எழுதுவது அவர்களுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும் எனவும் பார்த்தோம்.

எங்களின் குறுங்கதை எழுதும் வகுப்பில் பலரும் அவர்களில் கருத்துகளை அதைனையொட்டி பகிர்ந்து கொண்டார்கள்.

இன்றைய வகுப்பில் பயன்படுத்திய இரண்டாவது குறுங்கதையைப் பார்ப்போம். இது ஜென் கதை. சிறுவயதில் இருந்து ஜென் கதைகள் மீதும் குறிப்பிட்ட வயது வந்ததும் ஜென் கவிதைகள் மீதும் எனக்கு ஆர்வம் எழுந்தது. இந்தக் குறுங்கதை வகுப்பிற்காக இரு துறவிகள் பேசிக்கொள்ளும் கதையை தேர்வு செய்தேன். இது குறுங்கதையா? ஜென் துறவிகள் குறுங்கதைகள் எழுதியிருக்கிறார்களா? என்ற கேள்விகள் எழுந்தன. 

இதற்கு முன்னமே கூட நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அப்படியான கேள்விகள் எழுந்தன. ஜென் கதைகளை நம்மால் சுலபமாக குறுங்கதை வடிவத்தில் கொண்டுவர முடியும். அதோடு; அங்கிருந்து ஓர் உரையாடலையும் நம்மால் தொடங்க முடியும். எங்கள் குறுங்கதை எழுதும் வகுப்பில் இவற்றை குறித்து மேலும் விரிவேக பேசுவேன்.

இன்று நான் பகிர்ந்த ஜென் கதையில் ; மரணத்தருவாயில் இருக்கும் ஒரு துறவியிடம் இன்னொரு துறவி ஏதும் உதவி வேண்டுமா என கேட்கிறார். அதற்கு அவர்; நான் தனியாகத்தாமே வந்தேன் தனியாகத்தானே போகவேண்டும் என்கிறார். அதுவரை அது வழக்கமான ஒரு கதையாக இருக்கிறது. உண்மையில் நாமே பல முறை இப்படி பேசியிருப்போம் தானே. தனியாக வந்தோம் தனியாகத்தானே போகப்போகின்றோம் என.

அதற்கு அந்தத் துறவி கொடுக்கும் பதிலில்தான் இக்கதை குறுங்கதை வடிவத்திற்குள் வந்துவிடுவதாக உணர்கின்றேன். இவர் என்ன சொல்கிறார் என்றால் இங்கு யாரும் வரவும் இல்லை யாரும் போகவுமில்லை. அப்படி நினைப்பது பிரமை. வருவதும் போவதும் இல்லாத பாதை ஒன்று இருக்கிறது என்கிறார். இதை வாசித்ததும் நமக்கும் ஒரு சந்தேகம் வருகிறது. இதுவரை நாம் நம்பியிருந்த கற்பிதமான தனியாக் வந்தோம் தனியாக போவோம் என்பது தன்னை மறுத்து இன்னொரு இடத்துக்கு போகிறது; அவ்விடம் , இங்கு யாரும் வரவுமில்லை போகவுமில்லை என நம்மை சிந்திக்க வைக்கிறது.

இச்சிந்தனையை நாம் அப்படியே பல்வேறு கேள்விகளாக வார்த்து எடுக்கலாம். உடல் அழிகிறது ஆத்மா அழிவதில்லை; ஆத்மா ஓர் சுழல் வடிவில் முடிவில்லாத வட்டத்ததில் சுழல்கின்றது; மறுபிறவி என்பது என்ன; இப்படியாக பலவற்றை நம்மால் கேள்வியாக்கி அதற்கான பதிலை நோக்கி பயணிக்க இக்கதை உதவுகின்றது. அதிலும் இது குறுங்கதை வடிவத்தில் வைத்து யோசிக்கும் போது அது நமக்கு சாத்தியமாகிறது.

இக்கதையைக் குறித்து வகுப்பு பங்கேற்பாளர்களிடம் சில கேள்விகள் எழுந்தன. ஒவ்வொன்றுக்கும் வகுப்பிலேயே பதில் கொடுத்துவிட்டேன்.

மூன்றாவது குறுங்கதையாக; சந்தோஷ் நாராயணன் எழுதிய ‘பொம்மைகள்’ குறுங்கதையைக் குறித்து வகுப்பில் பேசினேன்.

நான்கு பத்திகளில் இக்கதை முடிந்துவிடுகிறது. முதல் பத்தி தன் அப்பாவின் மார்புக்கு நேராக பொம்மைத் துப்பாக்கியை காட்டி விளையாடுகிறது குழந்தை.

இரண்டாம் பத்தியில் அந்த அப்பா யார், என்ன வேலை செய்கிறார், இக்கதையில் திருப்பத்தை அமைக்கப்போகும் காரணம் என்ன என்று நமக்கு தெரிந்துவிடுகிறது. அதாவது சீனா விளையாட்டு துப்பாக்கிகள் என்கிற பெயரில் நிஜ துப்பாக்கிகளை இந்தியாவிற்குள் அனுப்பிவிட்டன. அவை இன்றோடு செயல்படப்போகின்றன என தனது இன்டெலிஜென்ஸ் துறையினர் மூலமாக அப்பா தெரிந்து கொள்கிறார்.

மூன்றாம் பத்தியில் தன் மகன் தன் மார்பு மீது குறி வைத்திருக்கும் விளையாட்டு துப்பாக்கியை அப்பா பார்க்கிறார்.

நான்காவது பத்தியில், அந்தத் துப்பாக்கியில் மேட் இன் சீனா என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

அவ்வளவுதான் குறுங்கதை முடிந்துவிட்டது. ஆனால் இக்கதையின் பின்னணியில் ஒரு துயர்மிகுந்த உண்மை ஒன்று இருக்கிறது.  

உங்களில் பலருக்கும் அது தெரிந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட நாட்டில் பல குழந்தைகள் ஊனமாக இருக்கிறார்களாம். அது ஒரு சூழ்ச்சியினால் நடந்தது. மக்களில் யாரும் வருங்காலத்தில் தங்களுடன் யுத்தத்தில் ஈடுபடக்கூடாது போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அங்குள்ள சாலைகளில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை கொட்டுகிறார்கள். அதனை ஆசையாசையாய் விளையாட எடுத்து செல்கிறார்கள் சிறுவர்கள். கொஞ்ச நேரத்தில் அந்த விளையாட்டு பொருட்கள் வெடிக்கின்றன. அந்த வெடிவிபத்தால் (சூழ்ச்சியால்) பல சிறுவர்கள் கை கால்களை இழக்கின்றார்கள்.

கண்பார்வையைப் பறிகொடுக்கின்றார்கள். கேட்கும் திறனை இழக்கிறார்கள். நாம் வாழும் உலகத்தில் ஏதோ ஒரு நாட்டில் இப்படியாக ஒரு கொடுமை நடக்கிறது.

நானும் எனது குறுங்கதை புத்தகத்தில் இப்படியான போரில் பாதிப்புக்குள்ளாகும் மக்களின் குரலாகவும் போர்ச் சூழலை மையப்படுத்தியும் சில குறுங்கதைகளை எழுதினேன். அது பரவலான வாசிப்பிற்கு சென்றது. அந்த வரிசையில் ஆசிரியை உமாதேவி அவர்களும் போர்ச்சூழலை மையப்படுத்தி சில குறுங்கதைகளை எழுதியிருந்தார்.

ஒரு சம்பவத்தை குறுங்கதையாக்கி அதனை வாசிக்கையில் இவ்வுலகத்தில் அதிகார வர்க்கம் செய்யும் கொடுமைகளில் ஒன்றைக் குறித்து நம்மை சிந்திக்க வைக்கிறது பொம்மைகள் என்னும் இக்கதை.

வகுப்பில் இக்கதையைக் குறித்தும் அவ்வாறு நடந்த சில போர்க்குற்றங்களைக் குறித்தும் பேசும் போது பலர் பேச்சற்று இருந்தார்கள். ஓர் எழுத்தாளனாக நமது எழுத்து குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டிய அவசியத்தைக் குறித்து பேசினேன்.

    நான்காவது குறுங்கதையாக எனக்கு பிடித்த கவிஞர் பெருந்தேவியின் ‘பக்கத்து வீடு’ என்னும் குறுங்கதை.           

இரண்டே பத்திகளில் இக்கதையினை எழுதியிருக்கிறார். இப்படி குறிப்பிட்டுச் சொல்வதற்கு காரணம் என்னவெனில் இக்கதையை அவர் எழுதிய விதம்தான்.

    முதற்பத்தியில் வாசகர்களிடம் ஒன்றை சொல்லிக்கொண்டே தனது அடுத்த பத்தியில் அதுவல்ல என்று இறங்கி வந்து, கடைசி ஒரு வரியில்; ஒரு வரியில் என்று கூட சொல்ல வேண்டாம். ஒரு சொல்லில் முழு கதையும் இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார்.

இக்கதையை மேலோட்டமாக வாசித்தால்; பக்கத்து வீடு சத்தமாக இருக்கிறது என புகார் கொடுத்தவரே தன் வீட்டை காலி செய்யும்படி ஆகிவிட்டது என இருக்கும். ஆனால் பெருந்தேவியின் கதைகள் அதன் மேல் போர்த்தியிருக்கும் எளிமையைக் கொஞ்சம் விலக்கிவிட்டு பார்த்தால் நமக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒருங்கே கொடுக்கும்.

    ஒரு பேய்க்கதையின் தொடக்கமாகவே முதல் பத்தியை எழுத்தாளர் எழுதியிருக்கிறார். ஆனால் இது பேய்க்கதையா என்றால் இல்லை. ஆனால் கடைசி வரியில் ‘காவல்துறையிடம்’ என வரும் இடத்தில் ‘சாமியார்/போதகர்’ என எழுதியிருந்தால் இக்கதை அதன் சுவை குன்றாத பேய்க்கதையாக அமைந்திருக்கும்.

இப்போது இக்கதையில் இருக்கும் மூன்றாவது சாத்தியத்தைப் பார்ப்போம்; இதுவரை இன்னொரு வீடாக நம்மை வாசிக்க வைத்தவரேதான் பிரச்சனைக்கு காரணம். அவர்ன் வீட்டில்தான் அந்த சத்தகங்கள் எழுகின்றன. அவர்தான் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கிறார். அதனால்தான் கடைசியில் அவரே ‘நான் உடனடியாகக் காலி செய்யாவிட்டால்’ என்கிறார். 

இக்கதையில் இருக்கும் ‘நான்’ என்னும் சொல்லை கடைசியில் இல்லாமல் வேறு இடத்தில் அதாவது ‘நான் புகார் கொடுத்தேன்’ என வரும்படி எழுதியிருந்தால்; உண்மையில் இது பாதிக்கப்பட்டவரின் குரலாக மாறியிருக்கும்.

ரொம்பவும் கவனமாக இக்கதை எழுதப்பட்டிருப்பதை அதன் ஒவ்வொரு வரியிலும் நம்மால் உணர முடிகிறது. இப்படி இக்குறுங்கதையின் பல்வேறு சாத்தியப்பாடுகளை வகுப்பில் விளக்கினேன். நாம் எழுதும் கதைகளில் ஒவ்வொரு வரியும் எவ்வளவு முக்கியம் என; அதிலும் குறிப்பாக குறுங்கதைகளுக்கு ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு முக்கியம் என இக்கதையின் மூலம் வகுப்பினர்களுடன் பேசினேன்.

அதன் பின், வகுப்பில் நான் எழுதிய குறுங்கதைத் தொகுப்பு புத்தகத்திலிருந்து , ‘அங்கே ஓரிடம் வேண்டும்’ என்ற கதையையும் ‘கடவுள் VS சாத்தான்’ என்ற கதையையும் பேசும்படி கேட்டுக்கொண்டதால் பேசினேன். அதனைப்பற்றி இங்கு நான் எழுதப்போவதில்லை. எப்படி மற்ற எழுத்தாளர்களின் கதைகளைக் குறித்து நான் பேசி எழுதுகின்றேனோ, அப்படி மற்றவர்கள் யாரும் என் குறுங்கதைகளை வாசித்து பேச வேண்டும் என ஆசைப்படுகின்றேன்.      

 இதுவரையில் எங்கள் ‘குறுங்கதை எழுதும் வகுப்பின்’ மூன்றாம் வார வகுப்பில் நடந்தவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டேன். அடுத்தடுத்த வாரங்களுக்கு பின் வகுப்பின் பங்கேற்பாளர்களும் அவர்களின் கதைகளை அவர்களே எழுதுவார்கள். எழுத வேண்டும்.

 உங்கள் யாருக்கும் எங்கள் குறுங்கதை எழுதும் வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் தாராளமாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

 

நாம் சேர்ந்தே எழுதுவோம்.

எழுதுங்கள்..

அதுதான் ரகசியம்..

அதுவேதான் தியானம்…

அன்புடன் தயாஜி.

 

குறுங்கதை எழுதும் வகுப்பு (வகுப்பு 3) - 24/9/23

 

 


                                      - சொல்லிச்சொல்லி எழுதச் சொல்லுவோம் –

 

ஞாயிறு; மூன்றாம் ‘குறுங்கதை எழுதும் வகுப்பு’ சிறப்பாய் நடந்தது. வழக்கமாக சனிக்கிழமை நடைபெறும் வகுப்பு இம்முறை ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

இன்றைய வகுப்பிற்கான பாடமாக வாரத்தின் தொடக்கத்திலேயே ஒரு இடுபணியைக் கொடுத்திருந்தேன். தங்களுக்கு பிடித்த திரைப்படமும் அதற்கான காரணமும் என்பதுதான் அது. இது கதை எழுதும் வகுப்புதானே? அதற்கு ஏன் பிடித்த திரைப்படங்களையும் அதற்கான காரணத்தையும் எழுத வேண்டும் என்கிற கேள்வி எழலாம்.

இன்றைய நம் வாழ்வில் குறிப்பாக தமிழர்களின் வாழ்வில் சினிமா ஒரு அங்கமாகவே ஆக்கிரமித்துவிட்டது. வாசிப்பவர்களின் நேரத்தையும் இன்னும் சொல்லப்போனால் எழுத வேண்டும் என ஆசைப்படுகின்றவர்களின் நேரத்தையும் அது தனக்காய் எடுத்துக் கொண்டது. அதிலிருந்து முழுமையாக யாரையும் விடுவிக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். ஆனாலும் அதன் மூலம் நக்கான சில நன்மைகளை நாம் செய்துக்கொள்ளலாம். அதனை நமக்காக வேலை செய்ய வைக்கலாம். நமது படைப்பாற்றலையும் கற்பனைத் திறனையும் அதன் வழியில் சென்று கூர்மைப்படுத்தலாம். கொஞ்சம் பிசகினாலும் இருக்கும் கூர்மையைக் கூட அது மொக்கையாக்கிவிடும் என்கிற எச்சரிக்கையுடன் தான் இதனை செய்கிறேன். 

ஒரு திரைப்படத்தை நாம் எப்படி அணுகுகின்றோம் என்பது ரொம்பவும் முக்கியம். அவர்கள் நமக்கு என்ன காட்டுகிறார்கள் என்பதைவிடவும் நம்மால் அதில் எதை கண்டறிய முடிகிறது என்பது அதைவிட முக்கியம்.

எங்கள் குறுங்கதை வகுப்பில் பங்கெடுத்தவர்கள் அவர்களுக்கு பிடித்த திரைப்படத்தையும் அது தங்களுக்கு பிடித்ததன் காரணம் குறித்தும் எழுதி அனுப்பியிருந்தார்கள். இன்றைய நிகழ்ச்சியில் அவற்றைப் பற்றிதான் பேச வேண்டியிருந்தது. ஆனால் பேசவில்லை. அதனை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துவிட்டோம். 

அதைவிட இப்போது அவசியமாக இருப்பது; கதைகளை வாசித்து நாம் எப்படி உள்வாங்குகின்றோம் என்பது என தோன்றியது. அதற்கு ஏற்றார்ப்போல நான்கு குறுங்கதைகளைத் தேர்வு செய்து கூகுள் வகுப்பில் பகிர்ந்தேன்.


1. ‘ஓஷோவின் குட்டிக்கதை’ தொகுப்பிலிருந்து; மாமியாரைக் கொல்ல முயன்ற குடிகார மருமகன் பற்றிய கதை.

2. ‘ஜென் கதை- உன்னையறிய உனக்கொரு திறவுகோல்லென்னும்’ புத்தகத்திலிருந்து, ‘உண்மையான பாதை’ என்னும் கதை. இக்கதை நாம் இறக்கவும் இல்லை பிறக்கவும் இல்லை என நிறுவும் இரண்டு ஜென் துறவிகள் பற்றியது.

3. கவிஞர் பெருந்தேவியின் ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தின் வாழும் பேய்’ என்னும் குறுங்கதை தொகுப்பில் இருந்து ‘பக்கத்து வீடு’ என்னும் குறுங்கதை – பக்கத்து வீட்டில் யார் யாருக்கு தொந்தரவாக இருக்கிறார் என சொல்லும் குறுங்கதை.

4. சந்தோஷ் நாராயணனின் ‘அஞ்ஞானச் சிறுகதைகள்’ தொகுப்பிலிருந்து பொம்மைகள் என்னும் குறுங்கதை.

 

நான்கு கதைகளையும் வாசிக்க அனுப்பிவிட்டு மீண்டும் ஒரு முறை நான் கதைகளை வாசித்து என்னை தயார் செய்து கொண்டேன். ஆனால் நிகழ்ச்சியின் போதே அதிஷ்டவசமாக எனது இரண்டு குறுங்கதைகளையும் நண்பரின் கேள்வியின் மூலம் இந்தப் பட்டியலில் இணைத்தேன்.

 

5. எனது ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ தொகுப்பிலிருந்து ‘அங்கே எனக்கோர் இடம் வேண்டும்’ என்னும் குறுங்கதை. இது அகத்தில் கவனம் செலுத்தாமல் புறத்தில் கவனம் வைக்கும் பக்திமான் பற்றிய கதை.

 

6. எனது ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ தொகுப்பிலிருந்து மேலும் ஒரு கதையா கடவுள் VS சாத்தான் என்னும் குறுங்கதை. இது மனிதனின் இயல்பை கிண்டல் செய்யும் கதை.

 

கதைகளை வாசித்தவர்கள் அவர்களின் பார்வையைப் பகிர்ந்துகொண்டார்கள். இப்படியாக ஓஷோவின் குட்டிக்கதையை வாசித்த நண்பர் அவரது புரிதலைச் சொன்னார். ஆனால் அவரால் அதையும் தாண்டி கதைக்குள் செல்ல முடியும் என யூகித்தேன். 

பின் நானே அக்கதையை வாசிக்கலானேன். நிறுத்தி நிதானமாக வாசித்தேன். சில இடங்களில் அழுத்தமும் சில இடங்களில் மெல்லிய தொணியிலும் கதையை வாசித்துக் காட்டினேன். இப்போது நண்பர் அக்கதையின் அடிநாதத்தைப் பிடித்துக்கொண்டார்.

    இது ஒரு சிக்காலாக இருக்கிறது. நாம் வாய் திறந்து வாசிக்காமல் மனதிலேயே வாசித்துக் கொள்கிறோம். வாய்த்திறந்து வாசிக்கும் போது கதை நமக்கு இன்னும் கூடுதலாப் புரிதலைக் கொடுக்கின்றது. அதே சமயம் நாம் எழுதும் போது வாய்த்திறந்து சொல்லிச்சொல்லி எழுதுவதில்லை.

தேர்ந்த எழுத்தாளர்களுக்கு அது அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்க கால எழுத்தாளர்களுக்கு அது அவசியம் என பரிந்துரைத்தேன். நாம் எழுதும் கதைகளை நாமே சொல்லிச் சொல்லி எழுதும் போது உரைநடையில் சிக்கல் வராமல் அது தடுக்கின்றது. குறிப்பாக வசனங்கள் எழுதும் போது அது பெரிதும் உதவுகின்றது.

ஒருவேளை சொல்லிச்சொல்லி எழுத முடியாதவர்கள்; எழுதி முடித்த பின் ஒரு முறைக்கு இரு முறையாவது வாய்விட்டு வாசிக்க வேண்டும். ஏனெனில் நாம் எழுதியவற்றை வாசகன் எப்படி வாசிக்கிறான். எங்கே அவனது தொணி மேலும் எங்கே அவனது தொணி கீழும் போய்வருகின்றன, எங்கே அவன் நிறுத்தி நிதானிக்கப்போகின்றான் என நாம் கண்டுக்கொள்ளலாம். நாம் எழுதும் கதைகளை வாசித்து திருத்தும் சிலாகிக்கும் முதல் வாசகன் நாம் தானே.!

 

                                           பகுதி 1 - நிறைவடைகிறது

 


குறுங்கதை எழுதும் வகுப்பு 2 (16/9/23)

 


எங்களின் 'குறுங்கதை வகுப்பின்' இரண்டாம் அமர்வு சிறப்பாக அமைந்தது. இவ்வகுப்பில் சம்பவங்களில் இருந்து கதைகளையும் கதைக்கருக்களையும் கண்டறிவது குறித்துப் பேசினேன்.

கவனித்தவரையில் புதிய எழுத்தாளர்கள் பெரும்பாலும் சம்பவங்களையே எழுதி அதனை சிறுகதையென நினைத்துக் கொள்கிறார்கள். அதற்கான விமர்சனத்தையோ பார்வையையோ நாம் முன்வைக்கும் போது அவர்கள் சொல்லும் காரணம், 'இது எனக்கு நடந்தது!', 'பக்கத்து வீட்டு கதை!' ‘தெரிந்தவர் சொன்ன அனுபவம்' இப்படி அடுக்குகிறார்கள்.

அனுபவங்களையும் சம்பவங்களையும் சிறுகதைகளாக எழுதக்கூடாதா என்றால் இல்லை, தாராளமாக எழுதலாம். அப்படி எழுதி கவனம் ஈர்த்த படைப்புகள் பல உள்ளன. ஆனால் அதில் மேலோங்கியிருக்கும் உணர்வுகளின் குறைபாடுதான் புதியவர்களுக்கு பலவீனமாக இருக்கிறது.

வெறுமனே என்ன நடந்தது? எப்படி நடந்தது? என சொல்லிச்செல்வது செய்தியாகவும் தகவல்களாகவும் நின்றுவிடுகின்றன. அதிலிருந்து கதைகளை கண்டறிவதற்கான பயிற்சி அவசியம் என நினைக்கிறேன். அதிலிருந்து ஓர் உரையாடலைத் தொடங்கவேண்டும் என விரும்புகிறேன்.

சம்பவங்களின் பின்னணி என்ன ? யாரின் அனுபவம்? அந்த அனுபவத்தின் நீட்சி என்ன? என்ன பாதிப்பு? யாருக்கு பாதிப்பு? அதில் நாம் கதாப்பாத்திரமா அல்லது கதைச்சொல்லியா? என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே சம்பவத்திலிருந்து கதையைக் கண்டறிய வேண்டும்.

அதற்கு ஏற்ற வகையில் இவ்வகுப்பினை வடிவமைத்தேன். பங்கேற்பாளர்களுக்கு முன்னமே, தங்களை பாதித்த ஏதாவது ஒரு சம்பவத்தை பேசுவதற்கு தயார் செய்ய சொல்லிவிட்டேன். தொடக்கமாக எது சம்பவம் எது கதை எது கதைக்கரு எது கதாப்பாத்திரம் என ஒன்றிலிருந்து இன்னொன்றையும் அந்த இன்னொன்றிலிருந்து வேறொன்றையும் பிரித்து பேசினேன்.

எனக்கு நடந்த சம்பவத்தையும் அதனை எப்படி குறுங்கதையாக மாற்றினேன் என்பதையும் அதிலிருந்து எப்படி சிறுகதைவரைச் செல்லலாம் என்பது பற்றியும் விளக்கினேன்.

அதன்பின் அவர்களுடனான உரையாடலை ஆரம்பித்தேன்.

பின் சிலர் அவர்களை பாதித்த சம்பவங்களைப் பகிர்ந்தார்கள். இதிலிருந்து எப்படி கதையைக் கண்டறியலாம் என்றும் எது அங்கு கதைக்கருவாக மறைந்திருக்கிறது என்றும் விளக்கினேன். அவர்களின் உரையாடலை மெல்ல மெல்ல அதற்கு ஏற்ற இடத்திற்கு இழுத்தேன்.

நடந்த சம்பவத்திலிருந்தும் அவ்வனுபவத்தில் இருந்தும் இன்னொரு சம்பவத்திற்கான கதைக்கருவை கண்டுபிடித்தோம். பலருக்கு ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் அது கொடுத்ததை உணர்ந்தேன்.

பொதுவில் பகிர முடியாத அனுபவங்களையும் கூட சிலர் தனிப்பட்ட முறையில் என்னிடம் பகிர்ந்தார்கள். அவற்றை கதையாக்கும் விதம் குறித்து விளக்கினேன். நிச்சயம் பல மாறுபட்ட கதைகளை இவர்களிடமிருந்து நாம் எதிர்ப்பார்க்கலாம்.

இந்தக் கட்டண வகுப்பில் கலந்து கொண்ட சிலரின் கருத்துகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நீங்கள் எங்கள் குறுங்கதை வகுப்பில் கலந்து கொள்ள விரும்பினால் தாராளமாக தொடர்பு கொள்ளுங்கள். இங்கு குறுங்கதை எழுதுவது குறித்து மட்டுமல்லாது நம்முள் இருக்கும் கதைகளை எப்படி நாமே எழுதுவது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

 

எழுதுங்கள்.

அதுதான் ரகசியம்.

அதுவேதான் தியனம்.

அன்புடன்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

 

குறுங்கதை எழுதும் வகுப்பு (முதல் வகுப்பு)

 


எங்களின் 'குறுங்கதை வகுப்பு' இனிதே இன்று தொடங்கியது. இரண்டு மாத வகுப்பாக திட்டமிட்டுள்ளோம்.

வாராந்திர கூகுள் சந்திப்பும் கூகுள் வகுப்பில் பயிற்சிகளும் இடம்பெறும்.
முதல் வகுப்பு என்பதால் ஒட்டுமொத்தமாக குறுங்கதைகள் குறித்தும் எங்கிருந்தெல்லாம் அந்த வடிவத்தை கண்டறியலாம் எனவும் பேசினேன்.
குறுங்கதைக்கும் ஒருபக்க கதைக்கும் என்ன வித்தியாசம்? அதனை எப்படி புரிந்துகொள்வது?
எது குறுங்கதை? அறிவுரைகள் சொல்லலாமா? போன்ற கேள்விகளும் வந்தன.
இவ்வகுப்பில் எழுத்தாளர்களும் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்களும் பங்கெடுத்துள்ளார்கள். குறிப்பாக வெவ்வெறு பணி செய்பவர்கள் இருக்கிறார்கள்.
தத்தம் துறை சார்ந்தே அவர்கள் இனி மாறுபட்ட சிந்தனையில் படைப்புகளைக் கொடுக்கலாம். அதற்கான அடிப்படை பயிற்சிகளையும் உரையாடல்களையும் இவ்வகுப்பில் நடத்துவோம்.
வகுப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்துகளை இதனுடன் இணைத்துள்ளேன்.
உங்களுக்கும் எழுதும் ஆர்வம் இருந்தால், குறுங்கதை எழுதும் வகுப்பில் கலந்துகொள்ள தொடர்பு கொள்ளுங்கள். இங்கிருந்தும் நீங்கள் உங்கள் எழுத்து பயணத்தை தொடரலாம்....
எழுதுவோம்...
அதுதான் ரகசியம்...
அதுவே தியானம்...
அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்




ஜூன் 14, 2022

அதனால் என்ன...?



கடற்கன்னியை நீங்கள் பார்த்தது உண்டா?. ரொம்பவும் அழகாக இருக்கும். பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. பார்த்துவிட்டால் மறப்பதற்கு வாய்ப்பே இல்லை. 

கடற்கன்னியை நீங்கள் பார்த்தது உண்டா?. அவளின் கண்களையாவது நீங்கள் பார்க்க வேண்டும். பால் வண்ண வானத்தில் ஓர் வண்ண ஊதா பொட்டு போல இருக்கும். அவளை நேராகப் பார்க்கும் போது ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவளது கண்களைப் பார்க்காதீர்கள். பின் வேறெப்போதும் அங்கிருந்து உங்களால் மீள முடியாது.

கடற்கன்னியை நீங்கள் பார்த்தது உண்டா?. சில சமயங்களில் வருடத்தின் மூன்றாம் பௌர்ணமியில் பார்க்கலாம். நள்ளிரவு நிலவு முழுமையாய் ஒளி வீசும் போது, கடலின் வடக்கு திசை நோக்கி பார்க்க வேண்டும். உலகைக் காண்பதற்கு தயாரான ஏதாவது ஒரு கடற்கன்னி அப்போதுதான் தலை காட்டுவாள். மிகச்சரியாக பத்து நிமிடங்களே அவளுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவளைப் பார்த்துவிட வேண்டும்.

கடற்கன்னியை நீங்கள் பார்த்தது உண்டா?. சொல்ல மறந்துவிட்டேன். அவள் பார்க்காது நீங்கள் அவளைப் பார்க்க வேண்டும். தன்னைப் பார்க்காதவர் மீதுதான் அவளுக்கு ஈர்ப்பு ஏற்படும். அது அவள் மமதையை உசுப்பிவிடும். ஒரு முறையாவது தன்னை யாருக்கும் காட்டிவிடுதான் அவள் கடலுக்குள் நீந்துவாள். அதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். 

கடற்கன்னியை நீங்கள் பார்த்தது உண்டா?. பார்க்கவில்லையா?. நானும்தான் பார்க்கவில்லை. அதனாலென்ன....

#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

ஜனவரி 31, 2022

- காதல் துரோகி -


நம்பிக்கை துரோகம். ஜீரணிக்க முடியாதது. தன் கண்முன்னே நடந்து கொண்டிருப்பதை மேற்கொண்டு பார்க்க முடியவில்லை.

அவள் சிரித்துக்கொண்டிருக்கிறாள். முகம் பிரகாசமாக இருக்கிறது. யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள். யாராக இருக்கும். தன்னைவிடப் பணக்காரன் போலத் தெரிகிறது. அதனால்தான் மயங்கிவிட்டாளா. தன்னைவிடா அவனால் அவளைக் காதலித்துவிட முடியும். தன் உயிருக்கு இணையாக நினைத்த காதலி; எப்படி அவளால் தன்னை ஏமாற்ற முடிந்தது.

துரோகம் செய்த காதலியைக் கொல்லவேண்டுமென மனம் துடிக்கிறது. இந்த உணவகத்திலேயே அதனைச் செய்ய வேண்டுமென முடிவெடுத்தான். புனிதமான தன் காதலுக்கு இப்படியொரு துரோகம் செய்து காதலை மாசுபடுத்தியவளை உடனே பலி தீர்க்க வேண்டும். 

மேஜையில் இருந்த கத்தியுடன் எழுந்தான். 
"என்னங்க.. டாய்லெட் போக எதுக்கு கத்தி.." என மனைவி கேட்கவும், மகள் சிரிக்கலானாள்.

சமாளித்துக்கொண்டு அமர்ந்தான். இவர்கள் மட்டும் இயங்கில்லாமல் இருந்திருந்தால் அந்தக் காதல் துரோகியை கொன்றுவிட்டுதான் மறுவேலை பார்த்திருப்பான்.

ஜனவரி 25, 2022

- தப்புக்கணக்கு -


- தப்புக்கணக்கு -

உலகநாடுகளில் இருந்து உதவித்தொகை வந்துவிட்டது. இனி மக்கள் கவலைக்கொள்ள வேண்டாம் என்கிற அறிவிப்பு பலறையும் பெருமூச்சு விட வைத்தது.

யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் நாட்டில் ஏற்பட்ட புயல் காற்று, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகள் வரலாறு காணாதது. இனி கிடைத்த உதவித்தோகையை மக்களுக்காக, மக்களின் அடுத்த கட்டத்திற்காக, மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்வதற்காக பயன்படுத்த வேண்டியக் கடப்பாட்டை ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஒரு சேர பரப்புரை செய்கிறார்கள்.

ஆயினும் முறையான கணக்கை மக்களிடம் சேர்ப்பிப்பதுதான் முறை.

மக்கள் கவனத்திற்கு;

- உதவிக்கரம் நீட்டிய நாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் 20% கொடுக்கப்பட்டது.

- ஒத்துழைத்த எதிர்க்கட்சிக்கு நிதி உதவியாக 20% கொடுக்கப்பட்டது.

- பணம் கிடைத்த செய்திகளை மக்களிடம் சேர்ப்பிக்க ஊடகங்களுக்கு 15% கொடுக்கப்பட்டது.

- இரவு பகலாக மக்கள் பணியில் இருக்கும் கட்சிகளுக்கு 15% கொடுக்கப்பட்டது.

- உலக நாடுகளிடம் சமகால அவசர நிலையைத் தெரியப்படுத்திய அரசியல்வாதிகளுக்கு உக்கத்தொகையாக 15% கொடுக்கப்பட்டது.

- பாதிக்கப்பட்ட மக்களை கண்டறியும் பணியில் இருக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு 10% கொடுக்கப்பட்டது.

- இது போக மீதமிருக்கும் 5%மும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்று சேரும் என்பதை தன்னார்வலர்கள் உறுதி செய்யும் படிக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு மக்களால் நாங்கள்; மக்களுக்கு நாங்கள்;  மக்களுக்காகவே நாங்கள்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
#குறுங்கதை

ஜனவரி 19, 2022

பொறுத்திரு; பிரியாதிரு

பொறுத்திரு; பிரியாதிரு

என்னால் அவரின் அடி உதைகளைத் தாங்க முடியவில்லை. தாலி கட்டிக்கொண்டேன் என்பதற்காக எவ்வளவு நாள் வாழ்வேன். முடிந்த மட்டும் முயன்றேன். வார்த்தைகளின் வேதனையையும் வாய்த்துவிட்ட வலியினையும் தாங்கிக்கொண்டேன். இனி உடம்பிலும் மனதிலும் தெம்பில்லை. பிரிந்துவிடலாம். அவரின் வாழ்வை அவர் வாழட்டும் என் வாழ்வை நான் வாழ்ந்து கொள்கிறேன் என்றேன்.

அம்மா, உன்னிடம்தான் முதலில் என் முடிவைச் சொன்னேன். மாப்பிள்ளையை விட என் அப்பா ஆரம்பத்தில் செய்த கொடுமைகள் அதிகம் என்றாய். பூமாதேவி போல பொறுத்துக்கொண்டேன் என்றாய். கொஞ்ச நாளில் எல்லாமே சரியானது என்றாய். என் மகனுக்காக பொறுத்துக்கச் சொன்னாய். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

அப்பா உங்களிடம் இரண்டாவதாய்ச் சொன்னேன். ஆப்பளைங்கன்னா அப்படித்தான் என்றீர். தன்மையாக கணவனை திருத்து என்றீர். துணையில்லாமல் வாழ்வது பிழையே என்றீர். என் பிள்ளைக்காக யோசி என்றீர். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

சகோதரனே உனக்கும் சொன்னேன். கணவனை திருத்துவது மனைவியில் கடமை என்றாய். அம்மாவைப் பார் அக்காவைப் பார் என்றாய். அண்ணியையும் நீ அடித்திருப்பதாய் சொன்னாய். இதெல்லாம் சகஜம்தான் என்றாய். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

சகோதரியே உனக்கும் சொன்னேன். உன் தழும்புகளுக்கு நீ தடவும் மருத்து பாட்டில்களைத் தந்தாய். தகுந்த நேரம் பார்த்து தடவிக்கொள் என்றாய். கணவனை எப்படி திருத்துவது என்கிற பாடத்தை கற்கச் சொன்னாய். நீயே கற்றுக்கொடுப்பதாய் சொன்னாய். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

தோழி உன்னிடமும் சொன்னேன். தனியான சூழலில் வாழ்வது சிரமம் என்றாய். ஆனாலும் சமாளிக்கலாம். கொஞ்சம் அவகாசம் எடுக்க சொன்னாய். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

தோழா உன்னிடமும் சொன்னேன். வீட்டில் வந்து பேசுவதாகச் சொன்னாய். நேரம் பார்த்துதான் வரவேண்டும் என்றாய். அதற்குள் உனக்கும் ஆயிரம் சிக்கல்கள். வீட்டில் வந்து பேசும் வரை காத்திரு என்றாய். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

பொறுத்திரு; பிரியாதிரு என அறிவு புகட்டியவர்களுக்கு நன்றி. புரிந்து கொண்டேன். உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டேன். நான் பொறுத்துக்கொள்கிறேன் நான் பிரியாதிருக்கிறேன். ஆனால் என் உடலில் பேச்சை என் உயிர் கேட்கவில்லையே.

டிசம்பர் 27, 2021

- உயர்திணையும் அஃறிணையும் -

   "நாய்ங்களுக்கு இடமில்ல......" என சொல்லிவிட்டார்கள். குமாருக்கும் அவனது அம்மாவிற்குமே இடம் போதுமானதாக இருப்பதாக சொன்னார்கள். அந்த நாயை தான் கையிலேயே பிடித்துக் கொள்வதாக குமார் கேட்டாலும்,  சொன்னாலும், கெஞ்சினாலும், கண்ணீர் மல்கினாலும் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.

    தன் வீட்டு நாயைத்தான் காப்பாற்ற முடியவில்லை. இந்த நாயையாவது காப்பாற்றலாம் என்கிற முயற்சியும் வீண். இந்த திடீர் வெள்ளம் பல எதிர்ப்பாராதவற்றை ஏற்படுத்திவிட்டது. எதை இழந்தோம் எதை மறந்தோம் என்கிற பிரக்ஞை இன்றியே உயிர் பயத்தில் பலரும் பலவாறு ஆகிப்போனார்கள். 


    வரலாறு காணாத வெள்ளம், வீட்டுக்கூரை வறை உயர்ந்து கொண்டுக்கிறது. அவசரகால உதவிகளை அரசாங்கத்தை எதிர்ப்பார்க்காமல் அரசியல்வாதிகள் தூங்கி விழிப்பதற்கு முன்னமே மக்கள் தாங்களாகவே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 


       இரண்டாவது முறையாக வந்த படகில் சென்றுக்கொண்டிருக்கும் போதுதான் குமாருக்கு அந்த நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.  அது ஒரு பாவப்பட்ட குரலாக இனி என்னால் முடியவே முடியாது என்கிற ஒலியாக அது கேட்பதை குமார் மட்டுமே உணர்ந்தான்.


     உடல் முழுக்க வெள்ளத்தில் நனைந்த மனிதர்களின் வெறும் கைகளின் தங்களின் உயிரை பிடித்துக் கொண்ட இந்தப் பயணத்தில் அஃறிணைகளுக்கு இடமிருக்கவில்லை.


     தூரத்தில் அந்நாய் மெல்ல மெல்ல மூழ்கத்தொடங்குகிறது, அதன் அருகில் குழந்தையொன்று மெத்தையோடு மிதந்தவண்ணம் மெல்லியக்குரலில் கத்திக்கொண்டிருக்கிறது.


     எப்படியாவது அந்த உயர்திணையை  இந்த அஃறிணை காப்பாற்றியப் பிறகே  முழுவதுமாக மூழ்கும்; அதுவரை அது குரைத்துக்கொண்டுதானே இருக்கும். 

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்