பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 30, 2023

வாசகனின் நன்றி

 



எழுத்தாளர் பிரியா மொழிபெயர்த்திருக்கும் 'ஒரு வசீகரமான கைம்பெண்ணின் முகம்' சிறுகதைத் தொகுப்பில் 'ஒரு திடீர் தெரிவு' என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ளது. இக்கதையை ஜூமா அல்ஃபைரூஸ் என்பவர் எழுதியுள்ளார்.

தொடக்கத்திலேயே இக்கதை ஈர்த்துவிட்டது. அடுத்தடுத்த பத்திகளில் நம்மையும் பதைபதைக்க வைக்கிறது. தலையும் புரியாமல் வாலும் புரியாமல்; ஆனால் அதன் வலியை மட்டும் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கதையின் முடிவை நெருங்க நெருங்க சாதக் ஹசன் மண்டோவை ஏதோ ஒரு கதைபோல ஒரு பிம்பத்தைக் கொடுத்தாலும் , இக்கதை நம் மனதிற்கு நெருக்கமாகிவிடுகிறது.

ஏனெனில் அதிகார கரங்களில் சிக்குண்ட சாமாணிய மனிதர்களின் கதைகளை யார்தான் எழுதாமல் இருக்கிறோம். அந்தக் கதைகள் யாரைத்தான் கலங்கடிக்காமல் இருக்கின்றன.

விரைவில் இம்மொழிபெயர்ப்பு புத்தகம் குறித்த என் பார்வையை எழுதுகிறேன். அதுதான் இப்படியாக பல சிறுகதைகளை இத்தொகுப்பிற்காக மொழியாக்கம் செய்திருக்கும் எழுத்தாளர் பிரியாவிற்கு ஒரு வாசகனாய் என் நன்றி...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

விழித்திரு; விழிப்புணர்வாய் இரு

 



இலக்கியம் எந்த அளவு உன்னதமானது என நம்புகின்றோமோ.. சில சமயங்களில்; அதே அளவு அதனை எழுதும் கரங்கள் ரொம்பவும் கீழ்மையானது என நம்ப வைத்துவிடுகிறார்கள். 


இலக்கியம் உன்னதமானது என நம்மை நம்ப வைப்பவர்களேத்தான் அதனையும் எந்த ஒரு குற்றவுணர்ச்சி இன்றி செய்துவிட்டு "இலக்கியம் மனிதனை பக்குவப்படுத்துகிறது .." என பேசவும் செய்கிறார்கள்.


எழுத்தாளர்களே உங்களுக்கு ஒன்றை மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன். 


திடீரென ஒருநாள் உங்களுக்கு ஏதோ ஒரு பெண் முகநூல்வழி நட்பாகிறாள். அல்லது வட்சப்வழி மாணவியாகிறாள் என வைத்துக் கொள்வோம். உங்களின் உரையாடல் மெல்ல மெல்ல வளர்கிறது. முகம் பார்க்காமலேயே நீங்களும் அசடு வழிகிறீர்கள் எனவும் வைத்துக்கொள்வோம்.

அது உங்கள் எழுத்தின் மீதான மரியாதையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இனி நீங்கள் எழுதவும் கூடாது பேசவும் கூடாது என்பதற்காகவும் இருக்கலாம்.


ஒருவரின் பலவீனத்தைக் கண்டறிந்து. அதற்கு மேலும் மேலும் தீனி போட்டு, வளர்த்து, அது அந்த மனிதனையே தின்னும் அளவு மாறி, அந்த மனிதன் தன் நிலை மறக்கும் பொழுது அதனையே வீடியோக்களாக புகைப்படங்களாக ஸ்க்ரீன் ஷாட்டுகளாக எடுத்து அந்த மனிதனை பேச விடாமல் எழுத விடாமல் செயல்பட விடாமல் இன்னும் சொல்லப்போனால் இனி இலக்கிய உலகில் முகமே காட்ட முடியாத அளவுகூட செய்ய முடிகிறது எனில் அதனை வெறும் கீழ்மை என மட்டும் அழைக்க முடியாதுதானே.. 


சில ஆண்டுகளுக்கு முன் எனது முகநூலுக்கும் இஸ்தாகிராமிற்கும் அவ்வளவு ஏன் வட்சப்பின் கூட (வட்சப்பில் வந்தது பற்றி ஏற்கனவே பேசியுள்ளேன்) இதே மாதிரி ஒரு பெண் வந்தார் பேசினார் நானும் பேசினேன். பேச்சு அதன் எல்லையைக் கடந்ததும் எனக்கு சரியாகப்படவில்லை. அது என்னை யோசிக்க வைத்தது. நல்லவேளையாக யோசித்தேன். இல்லையென்றால் இப்போதே நானும் கூடத்தான் தலைமறைவாக வாழ வேண்டி வந்திருக்கும்.


அந்தப் பெண்ணின் போலி சமூகவலைத்தளத்தின் பின்னணியில் ஓர் ஆண் இருந்ததையும் . அதுவும் அந்த நபர் எனக்கு  அறிமுகமானவர் என்பதையும் கண்டுபிடித்து (எப்படி கண்டு பிடித்தேன் என்பது கூட சுவாரஷ்யமானதுதான்) சொன்னதும் உடனே அந்தப் பெண் காணாமல் போய்விட்டார்.


ஒவ்வொருவரையும் பேசவிடாமல் செய்ய ஏதோ ஒன்றை ஆயுதமாக எடுக்கின்றார்கள். அல்லது ஒன்றை உருவாக்குகிறார்கள். அவற்றில் இதுவும் ஒன்று.


ஆக.... வெளியுலகுக்கு வந்தால் குறிப்பாக நீங்கள் எழுத வேண்டும் என வந்தால் கூடுதல் விழிப்புணர்வோடு இருங்கள். 


இதனை நான் ரொம்பவும் வருத்தத்துடன்தான் எழுதுகிறேன். எவ்வளவு பெரிய நம்பிக்கையை உங்கள் ஆணவத்தின் பொருட்டு நீங்களே உடைத்துவிடுகிறீர்கள்!!!!

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்