‘நாங்களும் மண்ணின் மைந்தர்கள்’ – கவிதைத் தொகுப்பு வெளியீடு.
நாளை (பிப்ரவரி 7-ம் நாள்) வெளியீடு காண்கிறது, மனோகரன் கிருஷ்ணனின் ‘நங்களும் மண்ணின் மைந்தர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு. இவ்வெளியீடு PAPA MESS, No 3, Jalan Metro 1/1 Metro, Puchong-கில் பிற்பகல் மணி நான்குக்கு நடைபெறுகின்றது.
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நாகம்மாளின் மனக்குறிப்புகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு 2020-ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதனை தொடர்ந்து அவரது முதல் கவிதைத் தொகுப்பு இவ்வாண்டு வெளிவருகிறது. தொடக்கத்தில் தனது வலைப்பூவிலும் பின்னர் முகநூலிலும் தான் எழுதியக் கவிதைகளை இந்தப் புத்தகத்திற்காக தொகுத்திருக்கின்றார்.
இந்தக் கவிதைத் தொகுப்பில் 242 கவிதைகளும் எண்ணிக்கையில் சேர்க்காத குறுங்கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
மனோகரன் கிருஷ்ணன், தன் கவிதைகளில் காதலையும் மொழி மீதான அன்பையும் அலையும் மனதின் பதற்றத்தையும் இளைஞனுக்கு தேவையான தன்னம்பிக்கையையும் நாம் இழந்து கொண்டிருக்கும் அடையாளத்தையும், நமக்கு குறைந்து கொண்டிருக்கும் மரியாதையையும் மனிதத்திற்கு தேவையான தத்துவத்தையும் பேசுபொருளாக ஆக்கியிருக்கின்றார்.
****
கண்ணிமைக்கும் நேரத்தில்
கனவுகள் ஒவ்வொன்றாய்
களவாடப்படுகின்றன
*****
தாழ்வுற்ற
நிலத்தில் தான்
தலை சாய்கிறது
நதி…
****
அது
காதலின் கண்கள்
மயக்கப் போதையில்
தள்ளாடும் வண்டு
****
ஒரு ரொட்டித் துண்டுக்கு
ஏங்குகிறது
ஏசு வாழ்ந்த பாலஸ்தீனம்
****
இப்படி பல குறுங்கவிதைகளும் 242 கவிதைகளும் அடங்கிய மனோகரன் கிருஷ்ணனின் ‘நாங்களும் மண்ணின் மைந்தர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு வெளியீட்டில் சந்திக்கலாம்.
0 comments:
கருத்துரையிடுக