பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 20, 2022

எழுத்தாளர் தமிழ்மகனுடன் சந்திப்பு


எழுத்தாளர் தமிழ்மகன் மலேசியா வந்திருந்தார்.  அவரது ‘படைவீடு’ நாவலுக்கு தேசிய நில நிதி கூட்டுரவு சங்கம்,  ‘தான் ஶ்ரீ கே.ஆர்.சோமா இலக்கிய அறவாரிய விருதினை  அறிவித்திருந்தார்கள்.  அதன் பொருட்டு ரொம்பவும் குறுகிய காலப்பயணமாக வந்திருந்தார். 
சில காரணங்களால் அந்த விருது நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அது என் மனதை நெருடவே செய்தது.

 குறிப்பாக உடல் நலம் பொருட்டும் குடும்பச்சூழல் பொருத்தும் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு செல்வது சாத்தியமற்று இருக்கிறது. இது இயல்பான காரணம்தான் எல்லோரும் சொல்லும் காரணமும்தான். ஆனால் இதன் விளைவு மெல்ல மெல்ல நம்மை நாம் விரும்புகிற மனிதனில் இருந்து கொஞ்சமும் நமக்கு சம்பந்தம் இல்லாத இன்னொரு மனிதனாக நம்மை மாற்றிவிடக்கூடும். 

ஆகவே முடிந்தவரை; குறைந்தபட்சம் சில சந்திப்புகளையாவது தவறவிடக்கூடாது என்கிற அடுத்தாண்டு திட்டத்திற்கு இப்போதே பிள்ளையார் சுழி போட்டுக்கொண்டேன் எப்படியாவது எழுத்தாளர் தமிழ்மகனிடம் ஓரிரு வார்த்தைகளையாவது பேச நினைத்தேன். குறைந்தது நான் அவரின் எழுத்துகளை வாசித்திருக்கிறேன் என சொல்வதற்கான வாய்ப்பாக அது இருந்தாலும் எனக்கும் போதுமானது.

 ஏனெனில் அதுதான் ஓர் எழுத்தாளருக்கு நாம் கொடுக்கும் முதல் மரியாதை.

அவர்களை சந்தித்து அவர்களுடன் விருந்துண்டு அவர்களுடன் புகைப்படங்களில் சிரித்து வைப்பதெல்லாம் ஒன்றுமில்லை. சித்தர்கள் பாணியில் சொல்வதென்றால் அவை எல்லாம் சிற்றின்பம். அப்படியெனின் பேரின்பம்? ஆம் அது அவர்களின் எழுத்துகளை வாசிப்பது. அதனை அவர்களிடம் சொல்வது. அதிலும் எழுத்தாளர்களின் எழுத்திலிருந்து நாம் கண்டடைந்த ஒன்றை அவர்களுடன் பகிர்வது அல்லது சண்டையிடுவது.

எழுத்தாளர் தமிழ்மகன் மீண்டும் தமிழகம் செல்வதற்குள் அவரை சந்திக்க முயன்றேன். அதிஷ்டவசமாக அது சாத்தியமானது. அவர் புறப்படுவதற்கு முன்பாக பார்க்கலாமே என்றார். நல்ல வேளையாக அது காலை சிற்றுண்டியாக இருந்தது.
காலை 9.30க்கு சந்திப்பு முடியானது. காலை 7க்கே நான் எழுத்து தயாராகிவிட்டேன். 
அப்படியிப்படி என சாலை நெரிசல்களில் சிக்கியும் சிக்காமலும் ஒருவழியாக கூகல் காட்டிய குறுக்கு வழிகளில் எல்லாம் நுழைந்து பல சாகசங்களைச் செய்து ஒரு மணி நேரத்திற்கு முன்னமே தங்கும் விடுதியை அடைந்துவிட்டேன்.

 இடத்தை அடைந்ததுதாம் தெரிந்தது, அது என் வீட்டிலிருந்து குறைத்து அரை மணி நேரத்தில் கூட என்னால் வர முடிந்த இடம்தான். ஆனால் காலை நேர வாகன நெரிசலில் இருந்து என்னை காப்பாற்றுகிறேன் பேர்விழி என கூகல் மேப் செய்த காரியத்தில் தலை கொஞ்சம் சுத்திதான் விட்டது.

வீட்டில் இருந்து புறப்படும் முன்னமே அவரின் புத்தகங்களை அலமாரியில் இருந்து எடுத்து வைத்தேன். எந்தப் புத்தகத்தில் கையொப்பம் வாங்கலாம் என்கிற தீவிர யோசனை வந்து சேர்ந்தது.
2012-ஆம் ஆண்டில்தான் நான் அவரின் ‘மீன் மலர்’ சிறுகதைத் தொகுப்பின் வழி அவரை வாசிக்க ஆரம்பித்தேன்; அதில் கையெழுத்து வாங்கலாமா? அதன் பிறகு வாங்கிய ‘ஆண்பால் பெண்பால்’ என்னும் நாவலில் வாங்கலாமா? ஆனால் நான் முழுமையாக வாசித்து முடிக்காத புத்தகங்களில் அதுவும் ஒன்று ‘சரி மீதியை அப்பறம் வாசிச்சிக்கலாம்’ என்று எடுத்து வைத்த அதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியாத நாவலில் அவரிடம் கையொப்பம் வாங்குவது எனக்கு குற்றவுணர்ச்சியைக் கொடுத்தது. சரி சமீபத்தில் வாங்கி, என நண்பருக்கு பரிசாக கொடுத்த புத்தகமான ‘எட்டாயிரம் தலைமுறை’ சிறுகதைத் தொகுப்பில் வாங்கலாம் என யோசிக்கையில் எனக்கு ரொம்பவும் பிடித்த அ.முத்துலிங்கம் முன்மொழிந்த ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் வாங்கலாமா என்று மீண்டும் குழம்பலானேன். 

என் நிலைமையை அறிந்த என் இல்லாள்; “விருது கொடுக்கற புத்தகத்திலேயே ஆட்டோகிராப் வாங்கிடுங்களேன்” என்றார். “அட ஆமாம்ல.. அதைப் பத்திய யோசனையே இல்லா போச்சி” என்றேன். அதற்கு இல்லாள் ஒரு பதில் சொன்னார், அது நமக்கு வேண்டாம்.
ஒர் எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பது எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு நான் சொல்லும் பாலப்பாடம். மீண்டும் ஒரு முறை அவரது எழுத்துகளை மீள்ப்பார்வை செய்தேன். அப்போதுதான் அவருக்கு இம்மாதம் பிறந்த நாள் என  அறிந்து கொண்டேன். புத்தகங்களையும் அங்கீகாரங்களையும் விட சிறந்த பரிசுகளை எழுத்தாளர்களுக்கு எப்படி கொடுக்க முடியும். 

ஆகவே நான் எழுதிய மூன்று புத்தகங்களான ‘ஒளி புகா இடங்களின் ஒலி’ பத்திகள் தொகுப்பையும், எனது சொந்த பதிக்கபத்தில் நான் வெளியிட்ட ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல – 101 குறுங்கதைகள்’ தொகுப்பையும், ‘பொம்மி’ என் முதல் கவிதைத் தொகுப்பையும் அவருக்கு பரிசளிக்க எடுத்து வைத்தேன்.

காலை சிற்றுண்டியில் சந்திக்கலானோம். அவரும் அவரது துணைவியாரும் வந்தார்கள். எங்கள் இருவருக்கும் வழிவிட்டு அவரது துணைவியார் தனியாக அமர்ந்து கொண்டார். அடடே இப்படி பிரித்துவிட்டோமே என்கிற எண்ணம் எழுந்தது, அதனைப் புரிந்து கொண்டவர் ‘நீங்க பேசுங்க’ என்றார். அம்மாவிற்கு என் நன்றி.

எழுத்தாளர் தமிழ்மகன் எதிரில் அமர்ந்து என்னால் முழுமையாகச் சாப்பிட முடியவில்லை. இத்தனை நாடகளாக வாசித்த அவரது எழுத்துகளின் உருவும் குருவும் அவர்தானே. அவரின் கரிசனமாகக் குரல் என்னை இயல்பு நிலைக்கு திருப்பியது.

பலவற்றைப் பேசினோம். ஆனால் இப்போது யோசிக்கையில் நான் தான் அங்கு அதிகம் பேசியிருக்கிறேன் என தோன்றியது. அவர் அதிகம் கேட்பவராகவே இருந்தார். அவருக்கு மலேசிய எழுத்தாளர்களைத் தெரிந்திருந்தது. விசாரிக்கவும் செய்தார்.

அப்போது நான் சுஜாதாவின் தீவிர வாசகனாக இருந்தேன். முடிந்தவரை அவரின் அனைத்து ஆக்கங்களை வாசிக்கும் உத்வேகம் இருந்தது. அதில் ஓரளவிற்கு வெற்றியும் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தமிழ்மகனின்  ‘மீன் மலர்’ சிறுகதைகளை வாசிக்கையில் சுஜாதாவின் பாணி இருந்ததாகப்பட்டது. அதன் பிறகு மேலும் சிலர் இவரின் எழுத்துகளைக் குறித்து சொல்லும் போது ஜூனியர் சுஜாதா என்று சொல்வதையும் வாசித்திருந்தேன்.

அதுவரை கேட்டுக்கொண்டிருந்தவர் சட்டென; “நீங்க சொல்லுங்க தயாஜி நான் சுஜாதா மாதிரி எழுதறேனா?” என கேட்டுவிட்டார்.

அக்கேள்வி என்னை யோசிக்கவும் வைத்தது. அப்போது என் மனதில் ஒரு பதிலும் தோன்றியது. அது நான் சுஜாதாவை தீவிரமாக வாசித்த காலம் என்பதால் வாசிக்கும் எல்லாவற்றிலும் நான் சுஜாதாவை காணவே விரும்பினேன். சின்ன சின்ன வாக்கியங்கள், வித்தியாசமான திருப்பங்கள், கதைச்சொல்லலில் புதுமை போன்றவை அதன் எழுத்தாளர்களைத் தாண்டியும் எனக்கு சுஜாதாவையே நினைவூட்டியதைச் சொன்னேன்.
 தொடர்ந்து ஒரே எழுத்தாளரின் எழுத்துகளை வாசிக்கும் சிலருக்கு ஏற்படும் தடுமாற்றம் எனக்கும் ஏற்பட்டிருந்ததைச் சொன்னேன். 
அதன் பிறகு என்னால் வாசித்து முடிக்க முடியாத அவரது ‘ ஆண்பால் பெண்பால்’ நாவல் குறித்து பேசினேன். அந்நாவலில் இருந்து சிலவற்றை அவரும் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் அவரது மின்னங்காடி பதிப்பகத்தையும் நான் எனது வெள்ளைரோஜா பதிப்பகத்தைப் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் பேசினோம்,  திட்டங்களைப் பகிர்ந்து கொண்டோம். அதோடு அவரது புத்தகங்கள் எனது ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையில்’ எப்போதும் இருக்கும் என்றேன்.

பிறகு நாங்கள் இருவரும் பக்கத்திலிருந்த பணப்பட்டுவாடா இயந்திரம் (ஏ.டி.எம்) வரை சென்று வந்தோம். 

தங்கும் விடுதிக்கு வரவும், வாகனமோட்டி அவருக்காக காத்திருக்கவும் சரியாக இருந்தது. ஏனெனில் விமான நிலையம் செல்வதற்கு முன்பாக சில பொருட்களை வாங்குவதற்கு பிரிக்பீல்ட்ஸ் சென்று வரவேண்டும். வாகன்மோட்டியைக் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லிவிட்டு அவரது துணைவியார் வரவேற்பறைக்கு வர காத்திருந்தோம்.

வாகனமோட்டி பரபரப்பாக உள்ளே நுழைந்தார், “என்ன இன்னும் கிளம்பலையா.. மணியாகுது.. போய்ட்டு திரும்ப வந்து நாம் ஏர்போர்ட் போகனும்ல மணியாகுது” என்றுய கைகடிகாரத்தை பார்த்தார். அவர் பேசிய விதம் எனக்கே ஒருவித பதற்றத்தைக் கொடுத்துவிட்டது. நம்மை நம்பி வந்திருக்கும் விருந்தாளியிடம் இப்படியா இந்த தோரணையிலா பேசவேண்டும். சரி அவர் அவசரம்; அவரின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு அவருக்குத்தானே தெரியும் என என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன். ஆனால்; இதுவே இவ்விடத்தில் ஓர் எழுத்தாளர் இல்லாமல் நடிகர் சூர்யாவோ, உலக நாயகன் கமல்ஹாசனோ இருந்திருந்தால் இப்படித்தான் அவர் பேசியிருப்பாரா என்கிற கேள்வி எழுந்தது. ஒரு வாசகனாக எழுத்தாளரின் முன் முழுமையாக சாப்பிடாமலே வயிறு நிறையும் எனக்கு இப்படித்தானே யோசனை எழும். 

சின்ன ஆலோசனை; இனி இவ்வாரான பிரமுகர்களை கவனிக்கவோ அவர்களுக்கு வாகன்மோட்டியாக வருகின்றவர்களிடம் யாரை அவர்களின் பொறுப்பில் கொடுக்கின்றோம் என சொல்லிவிடுங்கள். ஏனெனில் நானும் இவ்வாறு எழுத்தாளர்களை கவனிக்கும் பொறுப்பில் இருந்திருக்கிறேன் இருக்கவும் செய்கிறேன். இன்னும் சொல்லப்போனால் என் பொறுப்பில் இருந்த எழுத்தாளரை தொலைக்கவும் செய்திருக்கிறேன்; அது வேறொரு சுவாரஷ்யமான கதை.

இவர் மட்டுமல்ல; இக்கேள்வியை இங்குள்ள ஊடகங்களிடமும் நாம் வைக்கலாம். ஒரு சினிமா பிரபலம் மலேசியா வரும் போது வரிந்து கட்டி நிற்கும் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் இப்படியான எழுத்தாளர்களோ அல்லது சமுகம் சார்ந்து இயங்குபவர்கள் வரும் போதோ அவ்வளவாகக் கண்டுக்கொள்வதில்லை.

 மலேசியாவிற்கு வரக்கூடிய எழுத்தாளர்களுக்கே இந்நிலை என்றால் இங்குள்ள எழுத்தாளர்களின் நிலையையும் இங்குள்ள சில ஊடகங்கள் எவ்வாறு அவர்களை பயன்படுத்துகிறது மரியாதை கொடுக்கிறது என யூகித்துக் கொள்ளுங்கள்.

பரபரப்பாய்ப் பேசி முடித்த வாகனமோட்டியிடம் எனது கைப்பேசியைக் கொடுத்து எங்கள் இருவரையும் படம் பிடிக்க சொன்னேன். அவரும் சிரித்த முகத்துடன் செய்தார். அந்த நேரத்தைப் பயன்படுத்தி தமிழ்மகனின் படைவீடு நாவலில் அவரிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டேன். எனது மூன்று புத்தகங்களையும் அவரிடம் சந்திப்பின் நினைவாகவும் முன்னமே பிறந்தநாள் பரிசாகவும் கொடுத்தேன்.

அவரது துணைவியாரும் வந்துவிட்டார். அவர்கள் பொருட்களை வாங்க புறப்பட; என்னையும் எழுத்தாளர் உடன் வரீங்களா என்று அழைத்தார். ஆசையாகத்தான் இருந்தது ஆனால் இயலவில்லை என்று வருந்தினேன்.
பரபரப்பான சூழலிலும் தன் வாசகனுக்கு நேரம் ஒதுக்கிய அவனுக்கு சிற்றுண்டியும் கொடுத்த எழுத்தாளர் தமிழ்மகனுக்கும் அவரது துணைவியருக்கு என அன்பும் நன்றியும்.

இதுதான் அவர் மலேசியாவிற்கு வரும் முதல் முறை. மீண்டும் அவரை மலேசியாவிற்கு அழைப்பேன் என்றேன், இங்கு அவரின் எழுத்துகளுக்கு இருக்கும் வாசகர்கள் அவரை சந்தித்து கலந்துரையாடல் செய்யும் காலம் அதிக தூரமில்லை என்கிற நம்பிக்கையான வார்த்தைகளின் மூலம் அவரிடம் இருந்து விடை பெற்றேன்.

டிசம்பர் 03, 2022

தாய்மடியாகும் தாய்மாமன் மடி

- தாய்மடியாகும் தாய்மாமன் மடி -

ஒன்று இன்னொன்றை, அந்த இன்னொன்று  இன்னொரு ஒன்றை எப்படியும் நமக்கு நினைவுப்படுத்திவிடுகின்றன. நினைவுகளின் ஆதாரம் எங்கிருந்தாவது நம் மனதை தொட்டுவிடுவதை தவிர்க்க முடிவதில்லை; அதனை முன்கூட்டியே நம்மால் கண்டறியவும் முடிவதில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு பிறந்தகம் சென்றிருந்தேன். தங்கை மகளுக்கு காதணி விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். உடல் நிலை பழையபடி இல்லாததாலும் தலைநகரில் இருக்க வேண்டிய அவசியம் இருந்ததாலும் ஒரு நாள் பயணமாக அமைத்துக் கொண்டேன்.

எப்படியும் சொந்த மண்ணுக்கு சென்றால் உடனே திரும்பி வர மனமிருக்காது. ஆனால் இம்முறை என்னை நானே கட்டுப்படித்திக் கொள்ளும்படி ஆனது. அம்மாவும் தங்கையும் கட்டாயம் வர சொல்லியிருந்தார்கள். இல்லாளும் உறவு முறைகளின் சரியாக இருக்க வேண்டும் என சொல்லிக்கொண்டே இருப்பார். தாய்மாமன் உறவு ரொம்ப முக்கியமானது அது அந்த குழந்தைக்கு இன்னொரு தொப்புள்கொடி உறவு என்றார். சொல்லப்போனால் குழந்தைக்கு இன்னொரு தாய் என்றெல்லாம் பேசிப்பேசி என் மனதை புறப்படுவதற்கும் ஏற்பாடுகளைச் செய்வதற்கும் இல்லாள் அவர் வசமாக்கிக்கொண்டார்.

என் தங்கை மகளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எங்கள் இன்றைய தலைமுறையில் எங்கள் குடும்பத்தில் பிறந்திருக்கும் முதல் பெண் வாரிசு என்பதாலும் அவள் பிறந்த பிறகு என் வாழ்விலும் நான் பல மாற்றங்களைக் கண்டேன் என்பதாலும் இருக்கலாம்.

இன்று அக்குழந்தையை என் மடியில் வைத்து காது குத்தி அழகு பார்த்தோம். அக்குழந்தை கண்களில் கண்ணீரே வராமல் அழுவதையும் நாங்கள் பார்த்தோம்.

எனக்கும் இன்றும் நினைவில் இருக்கிறது.
அப்போதுதான் தலைநகருக்கு வேலைக்கு வந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. தங்கை கர்ப்பமாக இருந்தாள். அவளுக்கு அன்று பிரசவம். அவளுக்கு அருகில் கட்டிலில் இருந்த கர்ப்பவதிகள் எல்லாம் ஒவ்வொருவராக பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தங்கைக்கு இன்னும் வலி வரவில்லை என்றும் உடலில் மருந்தை ஏற்றுவதற்கும் வழியில்லை என்பதையும் அம்மா அழைத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அம்மாவிற்கு எப்படி தைரியம் சொல்வது என தெரியவில்லை. உடனே என்னால் அங்கு செல்லவும் முடியாத சூழல். அம்மாவிற்கு ஏதேதோ தைரியம் சொல்லி இணைப்பைத் துண்டித்தேன்.

அம்மாவின் குரலில் இருந்த நடுக்கம் என் உடலில் இப்போது தொற்றிக்கொண்டது. என் தைரியத்தைக் காணவில்லை. என்னைச் சுற்றிலும் இருள் சூழ்வதாகப்பட்டது.

என்னால் தங்கையின் முகத்தைக்கூட நினைவில் கொண்டுவர முடியவில்லை. திக்குத்தெரியாதவன் ஆனேன். கண்களை இறுக்க மூடிக்கொண்டேன்.

அப்போது தமிழகத்தில் இருந்தேன். பழனி முருகன் கோவில். அப்போதே ஒரு வேண்டுதலைப் போட்டேன்.  திக்கற்று நிற்பவருக்கு தெய்வம்தானே எப்போதும் துணை. கண்களை மூடியவாறு கைகளை கூப்பி, “முருகா… தங்கையும் அவளது குழந்தையும் தாயும் சேயும் நலமாக வரவேண்டும்… நான் உனக்கு மொட்டை போட்டுக்கறேன்” என வேண்டிக்கொண்டேன்.

ஆட்கள் அதிகம் இல்லாததால், சீக்கிரத்தில் முடி கணிக்கை முடிந்து அர்ச்சனை செய்து கோவிலை விட்டு வெளியேறினேன் மனதில் இருந்த பயமும் பாரமும் குறைந்தது. அப்போது  அம்மா மீண்டும் அழைக்கவும் சரியாக இருந்தது. என் வேண்டுதல் பலித்துவிட்டதை அம்மாவின் மூலம் அறிந்துகொண்டேன்.

என் வேண்டுதலுக்கு அப்பன் முருகனே வந்திருக்க வேண்டும் ஆனால் அவனுக்கு பதிலாக தேவதையைக் கொடுத்தனுப்பியிருக்கிறான். குறும்புக்கார குமரனுக்கு என்னை நன்றாக தெரியும். அதனால்தான் தேவதைக்கு தாய்மாமனாகும் கூடுதல் பொறுப்பைக் கொடுத்துவிட்டான் போல.

அந்த ஆண்டு தைபூசத்தின் போது என் வேண்டுதலை நிறைவேற்றினேன்.
இன்று அந்த தேவதையை மடியில் அமர்த்திய சில நிமிடங்களில், அன்று நடந்தவை மீண்டும் மனக்கண்ணில் நடந்தேரியது.

தன் தாய்மாமா ஓர் எழுத்தாளர் என்பதை அந்தத் தேவதை தெரிந்து கொள்ளும் வயதில் இதனை அவள் வாசிக்க வேண்டும்.

அது அவள் வாழ்வின் மீதான மாபெரும் நம்பிக்கையைக் கொடுக்கும் என நம்புகிறேன்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

நவம்பர் 21, 2022

ஓட்டு போட்டது ஒரு குத்தமாய்யா ?


கதை எழுத ஆரம்பித்த சமயத்தில் அதிகம் எழுதி அடித்து திருத்தி திரும்ப எழுத நினைப்பேன். ஆனால் செய்ய மாட்டேன். அப்போது கணினியோ தட்டச்சோ கைவசம் இல்லை. கையெழுத்தே சாத்தியம். நான் ஒருமாதிரி எழுதினால் என் கையெழுத்து ஒருமாதிரி போகும்.  

அதனாலேயே கையெழுத்தை மீண்டும் திருத்தி எழுதவோ மாற்றி எழுதவோ சிரமப்படுவேன். ஓரிரு  எழுத்துப்பிழைகளை அழித்திடலாம். இப்பவும் அப்படித்தான். கையெழுத்து அதன் விருப்பத்திற்கு கோணல்மாணலாக இருக்கும். நல்ல வேளையாக கைவசம் கணினி இருப்பதால் தப்பிக்கிறேன்.

அப்படி எழுதியெழுதி திருத்தி, திரும்ப எழுத சோம்பல் பட்ட பல கதைகளை கணினியில் உதவியால் எழுதியிருக்கிறேன். ஆனாலும் சில கதைகள் அந்தந்தக் காலக்கட்டத்தைத் தாண்டிவிட்டால் அதற்கான மதிப்பு இருக்காது. அக்கதை எழுதியது வீண் என நினைத்திருந்தேன். அதனாலேயே குறிப்பு புத்தகத்திலேயே பல கதைகளும் கதைகளுக்கான குறிப்புகளும் உறங்கி கொண்டிருக்கின்றன.

எனது அந்த நினைப்பு தவறு என ரொம்பவும் தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன். காலம் தொடர்ந்து புரிய வைத்துக்கொண்டே இருக்கிறது.

அவ்வகையில் நான் எழுதி, நீண்ட நாட்களுக்கு பிறகு (அது மாதக்கணக்காகி வருடக்கணக்காகி விட்டது) திருத்தி எழுதி அதனை இனி அதற்கு மதிப்பில்லை என்ற ஒரு கதை இன்று என் முன் பல்லிளித்து நிற்கிறது.

கதை அப்படியே இருக்கட்டும். அக்கதைக் கருவை சுருக்கமாக சொல்கிறேன்.

அண்ணன் அஜித் ரசிகன். தம்பி விஜய் ரசிகன். ஒருவருக்கும் ஓயாத சண்டை. (கதை நடப்பது 90கள் காலக்கட்டத்தில், சமூக வலைத்தளங்கள் அவ்வளவாக அறிமுகமாகியிருக்கவில்லை) அஜித்தா? விஜய்யா? அல்லது விஜய்யா? அஜித்தா? என்பதைத் தாண்டி அண்ணனுக்கும் தம்பிக்கும் வேறெதிலும் அக்கறையோ பொறுப்போ இல்லை. ஒருநாள் நோக்கு வர்மத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மூக்கு மண்டை என உடைத்துக் கொள்ளும்படி ஆனது. மருத்துவமனையில் அண்ணனும் தம்பியும் பக்கத்துப்பக்கத்தில் படுத்திருக்க அம்மா வருகிறார். கையில் நாளிதழ். பிள்ளைகள் முன் நாளிதழ் நடுப்பக்கத்தைத் திறக்கிறார். அதில், அண்ணனும் தம்பியும் யாருக்காக அடித்து மண்டையை ஒடித்துக்கொண்டார்களோ அந்த அஜித்தும் அந்த விஜய்யும் சேர்த்து படம் நடிக்கவுள்ளதாக விளம்பரம் வந்திருந்தது. இருவரும் கைகள் பிடித்தபடி தன் ரசிகர்களுக்கு கைகாட்டிக்கொண்டு நிற்கிறார்கள். அவ்வளவுதான் கதை.

இப்போது இந்தக் கதையை வாசிக்கையில், அஜித்தும் விஜய்யும் தங்களுக்குள் போட்டி இல்ல என்பதாக நிலமை மாறியிருக்கிறது.

ஆனால், இக்கதைக்கு இன்றுவரை மதிப்பிருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது;
நீங்கள் ஒரு கட்சிக்கும் நாங்கள் ஒரு கட்சிக்கும் ஆதரவளிக்கிறோம். உங்களையும் உங்கள் கட்சியையும் நாங்கள் கழுவி ஊத்துகிறோம். எங்களையும் எங்கள் கட்சியையும் நீங்கள் கழுவி ஊத்தறீங்க.
நீங்கதான் ஊழல்ன்னு நாங்களும், நாங்கதான் ஊழல்ன்னு நீங்களும் வீடு வீடா போய் நோட்டிஸ் கொடுக்கறோம்.
உங்க கட்சிக்கு நீங்களும், எங்க கட்சிக்கு நாங்களும் ஓட்டு போடறோம்.

கடைசில பார்த்தா நீங்க ஓட்டு போட்டவங்களும் நாங்க ஓட்டு போட்டவங்களும் ஒன்னா சிரிச்சிகிட்டு கைகொடுக்கும் போது நீங்களும் நாங்களும் இவங்களுக்காக அடி வாங்கி மிதி வாங்கி மண்டை வீங்கி கைகால் ஒடிஞ்சி படுத்து கிடக்கப்போறோமோ என்னமோ தெரியல.....

நவம்பர் 17, 2022

- யாரின் நிழலாய் நாம் -


ஒரே மொழி
ஆனால் அது உன் மொழியல்ல
என் மொழியுமல்ல
பின் யாரின் மொழி

ஒரே இனம்
ஆனால் அது உன் இனமல்ல
என் இனமுமல்ல
பின் யாரின் இனம்

ஒரே மதம்
ஆனால் அது உன் மதமல்ல
என் மதமுமல்ல
பின் யாரின் மதம்

ஒரே  நாடு
ஆனால் அது உன் நாடல்ல
என் நாடுமல்ல
பின் யாரின் நாடு

நீ கூட்டத்தில் ஒருவன்
நான் கூட்டத்திற்குள் ஒருவன்
ஆனால்  நாம் இருவருமே
கூட்டத்திற்கானவர்கள் அல்ல

நவம்பர் 15, 2022

- கடமை கண்ணியம் சோறுபோடு -

"சார் உங்க பத்திரிகைலதாங்க... எல்லாத்தையும் புரட்சிகரமா போடறீங்க..."

"எல்லாம் உங்களுக்காகதானே..."

"எங்க பிரச்சனை நடந்தாலும் உங்க பத்திரிகைக்காரங்கதான் முதல்ல போய் நிக்கறாங்க....!"

"அதான் எங்களோட கடமை கண்ணியம் கட்டுப்பாடு..."

"சந்தோஷம் சார்.. அப்படியே உங்க பத்திரிகைல வேலை செய்றவங்களுக்கும் மாதம் தவறாம சம்பளத்தை கொடுத்திட்டா... இன்னும் சந்தோஷம் சார்..."

"என்ன சொல்றிங்க நீங்க.... தமிழுக்காக; தமிழர்களுக்காகதானே செய்றாங்க சம்பளமெல்லாம் முக்கியமா என்ன..?"

"சரியா சொன்னிங்க சார்... ஆனா... தமிழுக்காக செய்தாலும்; தமிழர்களுக்காக செய்தாலும்.... அவங்களும் சாப்பிட சோறு வேணுமே.... அதுக்கு காசு வேணுமே.... உங்க சொத்தையா கேட்கறாங்க... அவங்களோட சம்பளத்தைத்தானே கேட்கறாங்க..."

"என்னதான் இருந்தாலும் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகதானே........."

நவம்பர் 13, 2022

என்செய்வோம் மாமழையே


முன்னெப்போதுமான
மழையல்ல நீ
உன்னோடிப்போது
விளையாட முடிவதில்லை

கொஞ்சமே மழையென்று
கொஞ்சினால்
அஞ்சி விலகும்படி
அலையடிக்க வைக்கிறாய்
சாலைக் குழிகளை
மறைக்கிறாய்
சாக்கடையை வீட்டிற்குள்
நிறைக்கிறாய்

எப்போதோ வீசிய குப்பைகளை
வட்டியுடன் வந்திறக்கி
வைக்கிறாய்
ஆறுகள் மீது கோடுகள்
போட்டு
வீடுகள் கட்டினால்
ஏழரையாய் கூரையில்
எங்களை கூட்டம் போட வைக்கிறாய்

இனி உன்னை நம்பி
நனைந்தாடவோ
முழுக்க குளித்து
விளையாடவோ முடியாது

எங்கள் அலட்சியங்களை எப்போது
நீ கணக்கிட ஆரம்பித்தாயோ
எங்கள் குப்பைகளை எப்போது
உனக்கு அஜீரணம் என கண்டாயோ

இனி நாங்கள் வேறெங்கும்
செல்ல முடியாது
எங்களாலான கழிவுகளுக்கு
நாங்களே பொறுப்பேற்க வேண்டும்
என சொல்வதற்கா
இப்படி பாடம் புகட்டுகிறாய்

தூறு
பொழி
நனை
சொல்
நாங்கள் வேறு
என் செய்ய வேண்டும்
மாமழையே


நவம்பர் 10, 2022

வேறென்ன செய்ய முடியும்


யாரோ சொல்லிய உன்
பெயரில்
ஏதோ மெல்லிய ஓர்
உணர்வு

அந்த யாரோ
அழைத்த எவரோ
நிச்சயம் நீயாக இருக்கக்கூடாது

நீ என் முன்னே
வரவே கூடாதென்று
வாசலிலேயே காத்திருப்பவனால்
வேறென்ன செய்ய முடியும்...

நவம்பர் 09, 2022

அப்பா...


"நான் மர்லின் மன்றோவை கூட்டிட்டு வருவேன். என் கூட காபி குடிக்க கூப்டுவேன்..." என்று கூறியவர் சிரிக்கலானார். நீ என் இனமடா என சொல்லத்தோன்றியது. ஆனால் கையில் ஒலிவாங்கியுடன் ஒலி/ஒளிப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டேன்.

நமக்கு வேலைதான் முக்கியம். இன்னொருவரைக் கேட்டேன். 'சொல்லுங்க.. உங்களுக்கு ஒரு சக்தி இருந்து; ஒருத்தரை உங்க முன்னுக்கு வர வைக்கனும்னா யாரை வர வைப்பீங்க.. என்ன கேட்பீங்க...?

"நான் என் அம்மாவை என் முன்னுக்கு வர வைப்பேன்'' என்றார். அந்தப்பெண் அப்படிச் சொன்னதும் அவர் அம்மா இப்போது உயிருடன் இல்லாதது புரிந்தது. அம்மாவைப் பற்றி யார் பேசி அழுதாலும் நமக்கும் அழுகை வந்துவிடுகிறது. எப்படியாவது அடுத்தக் கேள்வியில் அவரை அழ வைத்து விட்டால், யூடியூப்பில் எங்கள் வீடியோவைப் பார்ப்பவர்களும் கண் கலங்குவார்கள். லைக்குகளும் அள்ளும்.

"கண்ணை மூடிக்கோங்க...நீங்க கூப்டதும் உங்க அம்மா உங்க முன் வந்துட்டாங்கன்னு வச்சிக்குங்க. இப்ப அம்மாகிட்ட என்ன கேட்பீங்க....?"

கொஞ்சமும் யோசிக்காமல், "ஏன்மா என்னையத் தனியா விட்டுட்டுப் போன.... என்னையும் உன்கூடவே கூட்டிட்டு போக வேண்டியதுதான.... நீ அப்பாகிட்ட என்னைய தனியா விட்டுட்டுப் போய்ட்ட.... நீ போனப்பறம் அப்பா....அப்பா......... "

அவரால் அதற்கு பிறகு பேச முடியவில்லை. நாங்கள் இருப்பதையெல்லாம் மறந்து அழத்தொடங்கிவிட்டார். அவரின் கைகள் நடுங்க ஆரம்பித்தன....

நவம்பர் 02, 2022

தகப்பன்சாமி தந்தவேல் அது கந்தவேல்


எல்லோரிடலும் எல்லாவற்றையும் சொல்லவோ கேட்கவோ என்னால் முடியாது. அதற்கான தகுதியும் வாய்ப்பும் இருந்தாலும் என் மனம் ஒப்புக்கொள்ளாத வரை நான் அதனைச் செய்யமாட்டேன்.

புதியவர்களுடன் 'வாங்க டீ குடிப்போம்' என்பதும், கொஞ்சம் பழகியவர்களிடம் 'பிரியாணி' வாங்கி கொடுங்க என்பதையும் உரையாடலின் தொடக்கமாகவும் நகைச்சுவையாகவும் பயன்படுத்துவேன். அதன் தேநீருக்கு நானும் பிரியாணிக்கு அவர்களும் பணம் கட்டிய நிகழ்வுகளை அதிகமாகவெல்லாம் நான் அனுபவிக்கவில்லை.

ஆனால்,  எழுத்து, கதை, புத்தகம் என வரும் போது, இயல்பாகவே நான் உற்சாகமாகிவிடுகிறேன். அவர்களிடம் நெருக்கமாகிவிடுகிறேன். 

ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் ஒரு கதையாவது பகிர்வதற்கு இருக்குமென நம்புகிறேன். அதனை எழுத வைத்துவிட்டால் அடுத்தடுத்த கதைகள் தானாகவே வந்துவிடும். அதற்கு அவர்களும் சிரத்தை எடுக்கவேண்டும் என்பதுதான் எப்போதுமான என் அதார உரையாடல்.

அப்படி எழுத்து மூலமும் சிறுகதை கலந்துரையாடல் மூலமும் புதிய நண்பர்கள் நெருக்கமாகியுள்ளார்கள்/ நெருக்கமாகிக் கொண்டிருக்கிறார்கள். என் அளவுக்கு தவறாத் சட்டையும், தமிழகத்திலிருந்து எனக்கு பிடித்த வண்ணத்தில் அரை கை ஜிப்பாவும், பழங்கள் என இப்படி பலவற்றை சொல்லலாம்.

அதிலொன்றுதான் காக்கும் கந்தனின் கைவேல்.

சமூக/சமய ஆர்வளரும் எழுத்தாளருமாகிய ஏ.கே.ரமேஷ் தன் தமிழகப் பயணத்திலிருந்து நினைவுப்பரிசாகவும் அன்பின் உருவாகவும்  எனக்கு கொடுத்தார்.

"தமிழகத்திலிருந்து உங்களுக்கு என்ன வேணும்..." என கேட்டதும், தயக்கமின்றி வேல் வாங்கிட்டு வாங்க சார் என்றேன். தலையாட்டியவர் தவறாது கந்தவேலை கண்டுபிடித்துவிட்டார். அதிலும் இது கையடக்க கந்தனின் வேல் என்பது கூடுதல் அன்பு. தமிழை நேசிப்பவர்கள் தண்டாயுதபாணியை நேசிக்காமல் இருக்க முடியுமா என யோசிக்கிறேன்.

எதற்கும் அடங்கா கந்தவேலை அவர் தந்தவேளை பக்தனின் கைக்குள் அடக்கமாக கொடுத்ததில் அவ்வேல் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

அவருக்கு என் அன்பு, அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.

- உனக்கென்ன வேணும் சொல்லு -


உனக்கு பரிசளிக்க
விரும்புகிறேன்
எதுவாக இருப்பினும் கேள்
தயக்கம் கொள்ளாதே
தயங்கி நிற்காதே

கைக்கு எட்டா தூரம் என்றாலும்
நீ ஏன் கலங்க வேண்டும்
கொடுக்க வேண்டியவன்
நானல்லவா

எத்துணை தூரம் என்றாலும்
நீ ஏன் கலங்க வேண்டும்
கடக்க வேண்டியவன்
நானல்லவா

பரிசுகள் என்றால் கேட்பவளுக்கு
மட்டுமல்ல
கொடுப்பவனுக்கும் மகிழ்ச்சிதானே

பெற்றுக்கொள்
நீ
கற்றுக்கொடுக்கும் காதலுக்கு
ஈடாக எதுவேண்டுமென்றாலும்
கொடுக்கலாம்

ஒரு விண்ணப்பம் மட்டுமே
கம்பெனியின் போனஸ் போடும்வரை
கொஞ்சம் காத்திரு

சம்பளத்திற்கு செலவிருக்கிறது....

#தயாஜி

அக்டோபர் 23, 2022

பூட்டப்படாதக் கதவுகள்

"இவருக்கு கொஞ்சம் கூட பயமே இல்ல.. காலம் எப்படி கெட்டுக்கிடக்கு வாசல் கதவை லாக் பண்ணாமலேயே வச்சிருக்காரு...." என புலம்பிக்கொண்டே நுழைந்தான். 

"அப்பா... அப்பா... எங்க இருக்கீங்க...?" என அதிகம் தேடாமல், வரவேற்பறை நாற்காலியில் அமர்கிறான். வாங்கி வந்திருந்த சமையல் பொருட்களை கீழே வைக்கிறான். 

எப்படியும் ஒரு மாதத்திற்கான சமையல் பொருட்கள் அதில் இருக்கும். அதற்குள் அவை முடிந்துவிட்டால் ஓரிரு நாட்கள் அப்பா எப்படியும் சமாளித்துக்கொள்வார். ஒத்தையாளுக்கு ஒரு டம்ளர் டீயும் ஒரு ரொட்டிபன்னும் போதாதா என தன்னைத் தானே கேட்டுக்கொள்வான். 

அதுவுமில்லாமல் ஒரு மாதத்திற்கு ஒருமுறை இப்படி வருவதற்கே அவனுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

"குளிச்சிகிட்டு இருக்கேன் பா.. தோ வந்துடறேன்...." குளியல் அறையில் இருந்து சத்தம் வந்தது. குளித்துவிட்டார்.

"வா.. மாதவா.. வா எப்படி இருக்க பொண்டாட்டி புள்ளைங்க எப்படி இருக்காங்க..."

"நாங்க இருக்கிறது இருக்கட்டும் நீங்க ஏன் பா இப்படி இருக்கீங்க..?" என கோவப்பட்டான்.

"எப்படி இருக்கேன். நானும் நல்லாத்தான மாதவா இருக்கேன்..."

"நான் அதைக் கேட்கல.. ஏன் எப்பவும் வாசல் கதவை உள்ள லாக் பண்ணாமலேயே இருக்கீங்க... எத்தனை தடவை சொல்லிருக்கேன்..."

"ஓ அதுவா... நான் குளிக்கும் போது கூடதான் பாத்ரூம் கதவை உள்பக்கம் லாக் பண்ண மாட்டேன்.." என்றவாறு சிரிக்கலானார். வாய்விட்டு சிரித்ததில் வாயில் பல்லில்லாதது அப்படியே தெரிந்தது.

"செய்யறது எல்லாம் கிறுக்குத்தனமான வேல... இதுல சிரிப்பு வேற..."

அப்பா நிதானமானார், "என்னப்பா செய்றது. நானோ ஒண்டிகட்ட, நீயோ மாசத்துக்கு ஒரு தடவைதான் வந்து பாக்கற..... ஒருவேளை நான் வீட்டுலயோ பாத்ரூம்பலயோ விழுந்து செத்துட்டா.... யார் உனக்கு கதவை திறந்துவிடுவா... அதும் இந்த வாசல் கதவை அவ்வளவு சீக்கிரத்தில் ஒடைக்க முடியாதுன்னு நீதான சொன்ன. என்னைய பார்த்துக்கவே நீ ரொம்ப கஷ்டப்படற அதுல நான் செத்தும் உனக்கு சிரமத்தைக் கொடுக்கனுமா சொல்லு...."

"இல்லப்பா அது வந்து...." அவன் மனம் ஏதோ செய்தது.

"அதான் வந்துட்டயே... இதோட அடுத்த மாசம்தான வருவ...." அப்பா இப்போதும் நிதானமாகவே இருக்கிறார்.

அக்டோபர் 22, 2022

சொல்லுதற்சுலபம்

" ஏன் சார் கோவிலுக்கு வரமாட்டறீங்க...?"

"சாமியே இல்லைன்றவனைப் போய் கோவிலுக்கு கூப்டற...?"

"சாமி இல்ல... அதனால கோவிலுக்கு வர மாட்டேன்னு சொல்லத் தெரிஞ்ச உங்களுக்கு..."

"சொல்லத் தெரிஞ்ச எங்களுக்கு...?"

"சாதி இல்லைன்னு சொல்லி, எந்தச் சாதி நிகழ்ச்சிக்கும் போகாம இருக்க முடியலையே... போதாக்குறைக்கு சாதி சங்க தலைவர்களுக்கு உங்க சார்பா மாலையெல்லாம் போடறீங்க.."

"அது வந்து......"

"அது அப்பறம் வரட்டும்.. இதுவாச்சும் பரவால... தாழ்ந்த சாதியெல்லாம் இல்லைன்னு கோஷம் போடுற நீங்க... உயர்ந்த சாதிகளும் இல்லைன்னு கோஷம் போடலாம் தான....."

"சொல்றதுக்கு எல்லாம் ரொம்ப சுலபமாதான் இருக்கும்....."

"அதான் சார், சொல்றதுக்கு எல்லாமே சுலபமாதான் இருக்கும்...."

அக்டோபர் 21, 2022

- God No Where vs God Now Here -

"கடவுள் இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும் பார்க்கறியா?"

"அப்படியா...?"

"நிரூபிக்க முடியும்ன்றேன்... அப்படியான்னு கேட்கற..."

"சரி நிரூபி. பாக்கலாம்..."

அதற்காகவே காத்திருந்தவர், தன் முகநூலில் 'கடவுள் இல்லை' என எழுதி பகிர்ந்தார். பார்த்தவருக்கு ஒரே குழப்பம். இதில் கடவுள் இல்லையென்று எங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது. கேட்டேவிட்டார்.

"இதில் கடவுள் இல்லைன்னு எப்படி நிரூபிச்சிருக்க...?"

"ஹஹஹ... அதான் நிரூபனம். இப்ப கடவுள் இல்லைன்னு எழுதி போட்டிருக்கேனா...?"

"ஆமா... போட்டிருக்க.. நீ அதை மட்டும்தான போட்டிருக்க...."

"கடவுள் இல்லைன்னு நான் போட்டதை, கடவுள்னு ஒருத்தர் இருந்தார்னா வந்து நான் இருக்கேன்னு எழுதிருக்கனும் தான..... அப்ப எதுவும் வரல.. ஆக கடவுள்னு ஒருத்தர் இல்ல.. எப்படி நிரூபிச்சேன் பார்த்தியா...?? "

"அதைவிடு காலம்காலமா இந்த குழப்பம் இருந்துகிட்டுதான் இருக்கு... ஆனா லஞ்சம் ஊழல்  இல்லாத இந்த நாட்டுல நாம் இருக்கறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு..."

"என்னது லஞ்சம் ஊழல் இல்லையா.. என்ன கனவு காண்றயா....?"

"கனவா... நானும் நிரூபிக்கிறேன் பாக்கறியா...?"

"எப்படி..?"

"தோ... இப்படி..."
என்றவர் தன் முகநூலில்  ஊழலும் லஞ்சமும் இல்லை. இல்லவேயில்லைன்னு எழுதி பகிர்ந்தார். பார்த்தவரின் கண்கள் சுருங்கின,

"என்னதிது..?"

"ஆமா பின்ன... லஞ்சம் ஊழன்னு ஒன்னு இருந்திருந்தா நான் சொன்னதுக்கு வந்து 'உள்ளேன் ஐயா'னு எழுதிருக்கனும் தான...."

"இதுக்கு இது பதில் இல்லையே...?"

"அதுக்கும் அது பதிலில்லையே...?"

அக்டோபர் 09, 2022

- 42 குறுங்கதைகள் -

- 42 குறுங்கதைகள் -

இயல் பதிப்பகத்தின் நூலிழை குழு சந்திப்பின் மூலமாக ஆசிரியர் ப.பத்மநாதனை தெரியும். அவருக்கும் என்னை அப்போதுதான் தெரியும் என நினைக்கிறேன். கதைகள் குறித்த காலந்துரையாடல் வழியும் கதைகள் குறித்து நான் முன்வைக்கும் கருத்துகள் வழியும் இருவரும் நட்பானோம். 

ஒவ்வொரு முறையும் அழைத்து பேசும் போது ஒவ்வொரு கதைகள் குறித்து பேசுவார். கதைகளுக்கான கருவைப் பகிர்ந்துகொள்வார். சிறுகதைகளை எழுதி அது பற்றிய உரையாடலை திறந்த மனதுடன் எதிர்க்கொள்வார். 

இவ்வாண்டு சிறுகதை தொகுப்பு கொண்டுவர திட்டம் வைத்திருந்தார். அதையொட்டிய முன் வேலைப்பாடுகளையும் செய்யத்தொடங்கியிருந்தார். அப்போதுதான் குறுங்கதை பயிலரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதுவரை சிறுகதைகள் குறித்த கலந்துரையாடலில் பங்கெடுத்த நான் குறுங்கதை பயிற்றுனராக ஆனேன். தொடர்ந்து குறுங்கதைகளின் சாத்தியக்கூறுகளை முயல்வதாலும் ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல;101 குறுங்கதைகள்’ என்ற குறுங்கதைத் தொகுப்பை நான் வெளியிட்டிருந்ததும் இதற்கான ஆதாரக்காரணங்கள்.


இவர் மட்டுமின்றி குறுங்கதை பட்டறையில் மேலும் சிலர் பங்கெடுத்துக்கொண்டார்கள். குறிப்பாக ஆசிரியர் உமா தேவியையும் சொல்லலாம்; ஏனெனில் அவரும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட திட்டமிட்டு பின்னர் குறுங்கதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். அவர் குறித்து அடுத்த முறை பேசுகிறேன்.

குறுங்கதைகள் பட்டறையில், குறுங்கதைகள் எழுத பயிற்சி கொடுப்பதற்கு முன்பாக அதிலிருக்கும் சுதந்திரத்தைப்பற்றி பேசினேன். அதோடு முக்கியமான எழுத்தாளர்களின் முக்கியமான குறுங்கதைகள் குறித்தும் அது எந்த இடத்தில் குறுங்கதையாக மாறுகிறது என பேசுவேன். அவை; பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகத்தையும் எழுத வேண்டும் என்ற ஆரவத்தையும் கொடுத்தது.

பலர் எழுதினார்கள். பலவிதமான குறுங்கதைகள் வந்தன. வழக்கம் போலவே ‘கதைகள்’ தவிர்த்து தங்களின் அனுபவங்கள், அறிவுரைகள், சம்பவங்கள் என வந்தன. அதிலிருந்து மெல்ல மெல்ல குறுங்கதைக்குள் அவர்களை அழைத்து வந்தோம். 

குறுங்கதைகளில் இருக்கும் பலமும் பலவீனமும் அது கொடுக்கும் சுதந்திரம்தான். என்னவெல்லாம் எழுதலாம் என்கிற கேள்வியும், என்னவெல்லாம் எழுத முடியும் என்கிற பதிலும் குறுங்கதை எழுத ரொம்பவும் அவசியம். அதற்கு குறுங்கதைகளைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும். ‘சின்ன கதைதானே அதிலென்னத்தை சொல்லிடப் போறாங்க’ என மேம்போக்காக நினைப்பவர்களைக் குறுங்கதைகள் ஏமாற்றிவிடுகின்றன. ஒரு சொல், ஒரு வரி, கதைகள் மீதான முழு பார்வையையும் மாற்றிவிடும் என்பதில் எச்சரிக்கை வேண்டும். அதே போல வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகள் மட்டுமே குறுங்கதைகளைக் காப்பாற்றிவிடாது.

ஆசிரியர் ப.பதமநாதனின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஆசிரியர் பணிகளுக்கு இடையே எழுதினார் என்றெல்லாம் அவரை என்னால் பாராட்ட முடியாது. ஆனால் தொடர்ந்து எழுதினார், விமர்சனங்களை எதிர்க்கொண்டார், வாசித்தார். சில சமயங்களில் பின்னிரவுக்கெல்லாம் புலனத்தில் செய்தி வரும். “கதையை அனுப்பியிருக்கேன் வாசிக்கவும்..”. 
கதைகளில் விமர்சனங்கள் வழி நான் கொடுக்கும் சில மாற்றங்களை அவரால் பகுத்துப்பார்த்து ஏற்றுக்கொள்ள முடிந்தது. தன்னை ஓர் ஆசிரியர் என்கிற இடத்தில் வைக்காமல், எழுத்தாளர் என்ற இடத்தில் வைத்து உரையாடுவார். அவரிடம் கேள்விகள் இருந்தன, குழப்பங்கள்  இருந்தன, தேடல்கள் இருந்தன. எல்லாவற்றும் மேலாக “நான் நல்லா எழுதறேனா?” என்கிற பொறுப்பும் இருக்கவே செய்தது.

எழுத்தில் நகைச்சுவைகளைக் கொண்டு வந்து வாசிப்பாவர்களை சிரிக்க வைப்பது அத்தனை எளிதல்ல. தொலைக்காட்சியில் நாம் பார்த்து சிரிக்கும் நகைச்சுவைக் காட்சிகளைப் போல புத்தகத்தில் வாசிப்பின் வழி நம்மை சிரிக்க வைப்பது இயலாது. முன்னதில் காட்சிகள் நகர்கின்றன, பின்னணி இசை, நடிகர்களின் பாவணை என பல அம்சங்கள் உள்ளன.
ப.பத்மநாதனின் குறுங்கதைகளில் நகைச்சுவைகளைப் பல இடங்களில் கையாண்டும் வெற்றியையும் நெருங்கியிருக்கிறார். சில தலைப்புகள் நமக்கு எதிர்ப்ப்பார்ப்பைக் கொடுக்கின்றன. அதோடு நாம் ஏமாந்துவிடாமல் நிற்கின்றன.

இது ப.பத்மநாதனின் ’42 குறுங்கதைகள்’ புத்தகம் குறித்த விமர்சனம் அல்ல; ஓர் எளிய அறிமுகம் மட்டுமே. 

ஏனெனில்;

இன்று (09/10/2022) ஶ்ரீ ஞானானந்த புரம், தெலுக் இந்தானின் அவரது நூல் வெளியீடு உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். அதோடு இயல் பதிப்பகம் வெளியிட்ட ஆசிரியர் ப.பத்மநாதனின் ‘42 குறுங்கதைகள்’, ஆசிரியர் உமாதேவியின் ‘அப்பாவின் கைக்கடிகாரம் – குறுங்கதைத் தொகுப்பு, சமூக & சமய ஆர்வளர் ஏ.கே. ரமேஷின் ‘தீக்ஷா’ சிறுகதைகள், ஆசிரியர் சுமத்ரா அபிமன்னனின் ‘அப்பாவின் அம்மா’ சிறுகதைகள், இளம் எழுத்தாளர் யோகாம்பிகையின் ‘கரு’ சிறுகதைகள் அடங்கிய ஐந்து புத்தகங்களையும் குறைந்த விலையில் வாங்கலாம்.

விரைவில் ஐவரின் புத்தகங்கள் குறித்த என பார்வையையும் பகிர்வேன்; அதற்கு முன் நீங்கள் இவர்களின் படைப்புகளை வாசித்திருந்தால் அது பற்றிய உரையாடலுக்கு அது வழிவகுக்கும்.

இவை நல்ல கதைகளா இல்லையா என்பதை நாம்தான் வாசித்து உரையாடி கண்டுகொள்ள வேண்டும்.

அக்டோபர் 07, 2022

கண்ணீர்க்குடி நாகங்கள்


கண்ணீரைச் சுமக்க கைக்குட்டையொன்று எப்போதும் வேண்டுமோ நமக்கு

இங்கு காரணங்களின்றி கண்ணீர் வருவதில்லை
சிலரின் காரியங்களில்லாமல் நாம் அழுதிடுவதுமில்லை

நம்மை அழவைப்பதில் அப்படியென்ன ஆனந்தத்தைக் கண்டிடப்போகிறார்கள்
சொல்ல முடியாது
அவர்கள் தின்ற சோறு செரிக்க
யாரும் அழத்தான் வேண்டும் போல

கண்களில் என்ன அட்ச்சயப்பாதிரத்தையா வைத்திருக்கிறோம்
அழ அழ கண்ணீர் வர வர
வறட்சியின்றி வருகை தருகிறது த(க)ண்ணீர்

ஒருத்தனுக்கு அழது சாவதா
இல்லை
ஒவ்வொருவருக்குமாகச் சிரித்து வாழ்வதா என்ற
சுயவிசாரனையே நம் சுயத்தின் விசாரணை

கண்ணீர்ப்பட்ட ஈர
கைக்குட்டையைப்
புன்னகையென்னும் குளிர்நெருப்பில் உலர வைப்போம்
கண்ணீரை விட பலம் கொண்ட ஆயுதம்
புன்னகை என
உணர வைப்போம்

கண்ணீர்க்குடி நாகங்களை இன்றுமுதல்
பசியில் வைப்போம்....

#தயாஜி

செப்டம்பர் 29, 2022

- நட்ட கல்லும் ஊற்றும் பாலும் –

 

“கல்லுக்கு ஊத்தற பாலை… பசிக்கு அழும் குழந்தைக்குக் கொடுக்கலாமே..?” ரொம்பவும் பழைய பழகிப்போன கேள்வியை இங்கு விடாது கேட்டுக்கொண்டே இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். வழக்கமாகத் தைப்பூச தினத்தன்றும் அல்லது இதர விழாக்காலங்களில் மட்டுமே இந்தக் கேள்வி பெருமளவு படையெடுக்கும். மற்ற நாட்களில் அதன் வீரியம் குறைவாகவோ அல்லது பெரிதாக அலட்டிக்கொள்ளாதவாரோ இருக்கும்.

இந்த நாட்களில் மட்டும் ஏன் வறுமையில் சிக்கிய மனிதர்கள் மீது இன்னொரு மனிதனுக்கு அத்துணைப் பெரிய கருணை! மற்ற நாட்களில் அம்மனிதன் வயிறார சாப்பிட்டுக்கொண்டா இருக்கிறான்.

பசி கொண்டவனுக்குப் புசி கொள்ள ஏதும் கொடுக்க நினைப்பதே ஆதார நினைப்பு/தேவை என்றால், நாள் கிழமை பார்த்து பசிக்கு பால் கொடுக்க யாரும் சொல்ல மாட்டார்கள். இங்குச் சிக்கல் பசியும் பசிக்கின்ற மனிதனும் அல்ல. நம்பிக்கை;கொள்கை.

“கல்லுக்கு ஊத்தற பாலை…!” என்று தொடங்கும் அதே வார்த்தையின் சாயலில், “பத்து பேருக்கு மாலையும் பொன்னாடையும் வாங்கிப் போடற காசையும் ஒரு குடும்பத்துக்குச் சாப்பிட கொடுக்கலாமே?”, “இவ்வளவு செலவு செய்து மேடை நிகழ்ச்சி செய்றதுக்குப் பதிலா கஷ்டப்படுற பிள்ளைங்களுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கலாமே?” என யாரும் கேட்கிறார்களா எனத் தெரியவில்லை. அப்படிக் கேட்கத்தான் வேண்டும் போல. ஏனெனில் இங்கு எல்லோருக்கும் இன்னொரு மனிதன் இடர்பாடுகளில் இருந்து வெளிவர வேண்டும் என்றுதானே எண்ணுகிறோம்.

ஆனால் அதனை ஏன் நேரடியாகச் செய்யாமல் இன்னொருவன் செய்வதில் இருந்து அதற்குப் பதிலாக இதனைச் செய்யவேண்டும் என அவனுக்கு அறிவுரைகளைச் சொல்லிகொண்டிருக்கிறோம். செய்கின்றவன் பேச மாட்டான் ஏனெனில் அவனுக்கு அதற்கான நேரம் இருக்காது; என என் பள்ளி ஆசிரியர் ஒரு முறை சொன்னதை நினைத்துப்பார்க்கிறேன்.

 

“நட்ட கல்லைத் தெய்வமென்று காலுபுட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொண் மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’’

(சிவ வாக்கியர் பாடல்-5)


கல்லில் என்ன இருக்கிறது எனக் கேட்ட சிவ வாக்கியரை விடவா ஒருவர் கேள்வி எழுப்பிட முடியும். ஆனால் இதனை எப்போதும் பேச்சிற்கிடையில் கொண்டுவர மாட்டார்கள். கொண்டு வந்தால்; ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?’ என்ற கேள்விக்குப் பதில் தரவேண்டிவரும். கல்லும் இல்லை கடவுளும் (நாதனும்) இல்லை என்ற கொள்கை உள்ளவர்களுக்குச் சிவ வாக்கியர் எப்படி உதவுவார்.

உண்மையில் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களாலேயே சிவ வாக்கியரின் கேள்வியை ஆழந்து யோசித்துப் பதில் காண முடியவில்லையே. இதனைப் புரிந்து கொண்டிருந்தால் கோவில்களில் நடக்கும் உள்ளரசியல் இல்லாமலேயே இருந்திருக்கும். வீட்டுக்கு ஒரு கோவில் அதற்கொரு தலைவர் என்கிற குழப்பங்கள் இருந்திருக்காது. மரங்களுக்கு மத்தியிலும், தகரக் கொட்டகைக்குள், அடுத்தவர் நிலத்தில் எனத் தோன்றும் கடவுள்கள் யாரும் உள்ளிருக்கும் நாதனாய் உருமாற முடியவில்லையே.

ஒரு முறை இயல் பதிப்பக நிகழ்ச்சியில் மீதமான உணவு பொட்டலங்களை யாருக்காவது கொடுக்கலாம் எனப் புக்கிட் பிந்தாங் வட்டாரத்திற்கு வண்டியை விட்டோம். வெளியில் இருந்து பார்க்க பணக்காரர்கள் அதிகம் உலாவும் இடமாகத் தெரியும். ஆனால் அன்று நான் பார்த்தது இன்று கூட நினைவில் இருக்கிறது. மலாய்க்காரர், சீனர், இந்தியர், வெளிநாட்டவர் என எந்தப் பாகுபாடும் இன்றியும் கடையோரங்களிலும் சாலையோரங்களிலும் அட்டைப்பெட்டியைப் போட்டு அதில் படுத்திருக்கிறார்கள். சிலருக்கு அதுகூட இல்லை. வெறும் சிமெண்டு தரையில் நாளிதழ்களை விரித்துப் படுத்திருக்கிறார்கள்.

நாங்கள் எங்கள் வண்டியை நிறுத்தி உணவு பொட்டலங்களை வெளியில் எடுக்கவும், பசியில் ஒவ்வொருவரும் ஓடி வந்ததைப் பார்க்கையில் மனம் உடைந்துவிட்டது. உணவு பொட்டலங்கள் முடிந்து வண்டியில் ஏறும் சமயத்தில் ஒரு பாட்டி தாமதமாக வந்து சாப்பிட ஏதும் இருக்கா எனக் கேட்டார். அந்தக் கண்கள் பசியில் பெரிய எதிர்ப்பார்ர்ப்புடன் இருந்தது. சட்டெனப் பாக்கெட்டில் இருந்த பத்துவெள்ளியை எடுத்து கொடுத்துவிட்டு அவர் முகத்தை மேற்கொண்டு பார்க்க இயலாமல் வண்டியில் ஏறிவிட்டேன். ஏதோ ஒரு மன உளைச்சல் கொஞ்ச நேரம் என்னை அமைதியாக வைத்திருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் நான் நண்பர்களுடன் இணைந்து பள்ளிகளுக்கான புத்தக விற்பனையைச் செய்தேன். அப்போதுதான் ஆரம்பித்தோம் என்பதால் எதிர்கால வருமானத்தைக் கணக்கில் கொண்டு எனக்கான சம்பளத்தைக் குறைவாகவே பெற்றுக்கொண்டேன். அப்போதும் கடன்களைக் கட்டுவதற்கும் குடும்பச் செலவுக்குமே அது கைகடிக்கும்படி இருக்கும். ஒரு ரொட்டி துண்டையும் ஒரு பாட்டிலில் தண்ணீரையும் பிடித்துக் கொண்டு வேலைக்குக் கிளம்புவேன். அந்த ரொட்டியை இரண்டு வேலையாகப் பிரித்துக் காலை உணவாகவும் நண்பகல் உணவாகவும் சாப்பிட்டுக்கொள்வேன்.

அப்போதுதான் நண்பர் மூலமாகச் சாய் பாபா செண்டர் குறித்துத் தெரிய வந்தது. தினமும் அங்கு உணவு இருக்கும். யார் வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம் என்றார். அதுவரையில் எனக்கு அது தோன்றவில்லை. அவ்வப்போது சாய் பாபா செண்டருக்கு சென்றாலும் அங்குள்ள உணவை கவனிக்கவில்லை. அப்போது அது எனக்கு தேவையாகவும் இல்லை.

பின்னர் தொடர்ந்து, என் வீட்டிற்கு அருகில் இருக்கும் சாய் பாபா செண்டரில் சாப்பிட ஆரம்பித்தேன். வேலை முடிந்ததும் நேராக அங்குச் சென்று பாபாவிற்கு ஒரு வணக்கத்தைக் போட்டுவிட்டு வயிறார சாப்பிட்டு கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்துவிட்டுதான் திரும்புவேன்.

யாரோ ஒருவர் கொடுக்கும் அரிசியிலும் காய்கறிகளிலும் அவருக்கு நேரடியாகத் தொடர்பில்லாத எனக்குத் தினமும் உணவு கிடைத்தது. இப்போது கூட நான் அங்குச் சென்று சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.

ஒவ்வொரு மாதமும் என் கையிருப்புக்கு தகுந்த மாதிரி சில காய்கறிகளையோ அரிசி பைகளையோ வாங்கிகொண்டு சாய் பாபா செண்டரில் கொடுக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் இப்போது ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணையப் புத்தக அங்காடியை நடத்தி வருகிறேன். என்னிடம் புத்தகம் வாங்குகின்றவர்களின் மூலம் எனக்குக் கிடைக்கும் வருவாயில் ஒரு சிறு பகுதியில் அதனைச் செய்து வருகிறேன்.

யாரோ ஒருவரின் பிரார்த்தனையிலும் நம்பிக்கையிலும் என் வயிறு நிறைந்தது போல, என்னால் முடிந்ததை நான் செய்யும் போது அது இன்னொரு மனிதனின் வயிறை நிறைக்கிறது என்பது எனக்குள் சக மனிதன் மீதான அன்பை அதிகப்படுத்துவதாகப் பார்க்கிறேன்.

சிலர் தெருவோரங்களில் இருப்பவர்களுக்கு உணவுகளைத் தினமும் கொடுக்கிறார்கள். ஆதரவற்ற கால்நடைகளுக்கு மருத்துவம் முதல் உணவுகள் வரை பல தொண்டூழியர்கள் கொடுத்துக்கொண்டும் செய்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே ‘உள்ளிருக்கும் நாதனை’ உணவுகள் கொடுப்பதன் மூலமாகக் கண்டுகொள்கிறார்கள் தானே.

அது கடவுள் ! அது கல் ! என்கிற சண்டைகளுக்கு மத்தியில் அந்த மனிதன் பசியோடு இருக்கிறான், கல்வி இன்றி இருக்கிறான்… என்பதே முதலில் பதிலளிக்க வேண்டிய கேள்வி.

செப்டம்பர் 28, 2022

TikTok பேய்கள்

"அதான இப்ப டிரெண்டு...." என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் கோமதி. டிக்டாக்கில் வந்திருந்த சமீபத்திய விளையாட்டுதான் அது. 

கைப்பேசியில் வீடியோவைத் திறந்து வைக்க வேண்டும். அதனை தனி அறையில் வைத்து நடப்பதை பதிவு செய்ய வேண்டும். அந்த அறையில் நம் வீட்டு சின்ன பையனை வைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு கதவையும் சாத்திவிட்டு ஓடிவிட வேண்டும். அப்போது கைப்பேசி பின்னணியில் மெல்லிய இசையும் அதையடுத்து பயங்கரமான சிரிப்பு சத்தமும் தோன்றும். 

அப்பொழுது தனியாக அறையில் இருக்கும் பையன் பயந்துபோய் கைப்பேசியின் முகப்பில் வீடியோவைப் பார்க்க அதன் தானும் தனக்கு பின்னால் அந்தரத்தில் ஒரு பேய் பறப்பது போலவும் இருக்கும். பயந்து அலறும் பையனின் வீடியோவைப் பிறகு பார்க்கும் போதும் பொதுவில் பகிரும் போதும் பார்ப்பவர்களுக்கு ஒரே ஜாலியாக இருக்கும். 

எல்லாவற்றையும் நேர்த்தியாகத் தயார் செய்துவிட்டாள் கோமதி. தன் பையனை நாசுக்காக அறையில் இருக்க வைக்கிறார். அதற்கு முன்னமே கைப்பேசி தயார் நிலையில் இருக்கிறது. சரியான நேரம் பார்த்து விளக்கை அணைத்துவிட்டு கதவைச் சாத்திவிட்டார்.

உள்ளே பையன் அலறத்தொடங்கிவிட்டான். தனக்கு பின்னால் அந்தரத்தில் பேய் மிதந்துகொண்டிருந்தால் யார்தான் சும்மா இருப்பார்கள். சட்டென பையனின் சத்தம் கேட்கவில்லை. ஒரே அமைதி. பையனுக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று பயந்துவிட்டாள் கோமதி. விளையாட்டு வினையாகிவிட்டதோ என்னவோ?

அவசரமாகக் கதவை திறக்கிறாள். உள்ளே பையனைக் காணவில்லை. அறைமுழுக்கத் தேடிவிட்டாள். என்ன செய்வது என தெரியவில்லை. ஏதோ நினைவுக்கு வந்தவர் ஓடிச்சென்று கைப்பேசியைப் பார்க்கலானார்.

கைப்பேசி ஸ்கீரினுக்குள்ளே , பையன் இருந்து செய்வதறியாது துடித்துக் கொண்டுக்கிறான்.

கைப்பேசிக்குள்ளே பையனும் கைப்பெசிக்கு வெளியே கோமதியும் அதிர்ச்சியில் நிற்கிறார்கள். இருவருக்கும் ஒன்றும் பிடிபடவில்லை....

செப்டம்பர் 26, 2022

- டுரியான் -

குமாருக்கு டுரியான் என்றாலே பயம். அதன் வாசத்தைக் கூட அவனால் அனுபவிக்க முடியாது. ஓடி ஒளிந்துக்கொள்வான். இந்த முப்பத்தைந்து வயதில் இப்படியா ஒருவன் இருப்பான் என தோன்றும். தோன்ற வேண்டும்தானே.

அவனது பயத்தைப் போக்குவதற்காக அவனுக்கே தெரியாமல் ஒரு ஏற்பாடு செய்தேன். வீட்டிற்கு அழைத்தேன். அறைக்குள் வசமே தெரியாத அளவிற்கு மறைத்து வைத்த டுரியானை அவன் முன் கொண்டு வந்தேன்

அவனால் எழுந்து ஓட முடியவில்லை. அந்தத் தனிமையில் டுரியானைக் கண்டதும் அழத்தொடங்கிவிட்டான். அது பயத்தினால் வந்த அழுகை அல்ல. இயலாமையால் வந்துகொண்டிருக்கும் அழுகை. கதறி அழ ஆரம்பித்துவிட்டான்.

மெல்ல மெல்ல அவனை ஆசுவாசப்படுத்தினேன். ஒரு நாள் அவனது அம்மா ஆசையாய் கேட்ட டுரியானை நாளைக்கு வாங்கித்தருவதாக சொல்லியிருக்கிறான். அந்த மறுநாள் அவனது அம்மாவிற்கு வரவேயில்லை.

அந்தக் குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடே டுரியான் மீது பயமாக மாறிவிட்டது. அதனை போக்குவதற்கு வழி தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தான். உடைந்து அழுதப்பின்னே மனபாரம் குறைந்து இயல்பை அவன் மனம் மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்கிறது.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

செப்டம்பர் 25, 2022

- புரட்சியாளர்களின் பரிசு -


அந்தப் பேரணியை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஏற்பாட்டாளர்களே எதிர்ப்பார்க்கவில்லை. வேறு யார்தான் எதிர்ப்பார்த்திருப்பார்கள். எப்போதோ யாரோ முயற்சித்தப் புரட்சியின் தீப்பொறி இன்று கொழுந்துவிட்டு எரிகிறது.

அதிபரின் அரசமாளிகை முழுக்க மக்கள் சூழ்ந்துவிட்டார்கள். தன் வாழ்நாளில் என்னவென்றே தெரியாத; தெரிந்து கொள்ள முடியாத ஏதேதோ பெயர் தெரியாதப் பொருட்களைப் பார்த்த மக்கள் கொஞ்ச நேரம் பதட்டமானார்கள். அடுத்த கணமே புரட்சியின் பக்கம் திரும்பிவிட்டார்கள். மக்களின் பின்னணியில் குறிப்பிட்ட சில புரட்சியாளர்கள் ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டே வந்தார்கள்.

அரசாங்கமே அலறிவிட்டது. அதிபரையும் அதிகாரிகளைக் காணவில்லை. இனி நாடு தாங்காது என புரட்சியாளர்கள் ஒரு சேர முடிவெடுத்தார்கள். பல ஆண்டுகளாக மக்களின் நலனை முன்னிருத்தி ஆளும் அரசாங்கத்திடம் சண்டையிட்ட எதிர்க்கட்சிக்கு நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தது. இனி அவர்கள் எதிர்ப்பார்த்த பல திட்டங்களை செயல்படுத்தி மக்களையும் நாட்டையும் முன்னேறறாலாம்.

புதிய அரசாங்கம். புதிய அதிகாரிகள். புதிய அதிபரின் நன்றியுரை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாட்டின் இன்றைய எதிர்ப்பாராத ஆட்சி மாற்றத்திற்கும் மக்களின் எழுச்சிக்கும் காரணமாக இருந்த புரட்சியாளர்களை அடையாளம் கண்டு  நன்றியும் பாராட்டையும் சொன்னார்.

மறுநாள் அடையாளம் கண்ட எந்த புரட்சியாளர்களையும் காணவில்லை. புதிய அரசாங்கம் அவர்களைத் தேடவுமில்லை.....

செப்டம்பர் 24, 2022

ஏழாம் உலகம் - வாசிப்பு அனுபவம்

ஏழாம் உலகம் வாசிப்பு அனுபவம்
ஜெ.மோவின் ஏழாம் உலகம் நாவலை வாங்கி ஏறக்குறைய பத்தாண்டுகள் இருக்கும். இதற்கிடையில் சில முறை வீடு மாற்றலாகி வந்துகோண்டிருந்ததால் ஏதோ ஒரு புத்தகப்பெட்டியில் அந்நாவல் சிக்கிக்கொண்டது.

 கையில் கிடைத்ததும் உடனே எடுத்து வாசிப்பு பட்டியலில் அடுக்கிவிட்டேன். ஆனால் ஏனோ அந்நாவல் வரிசையில் இருந்து விரைவிலேயே முன்னகர்ந்து என் வாசிப்பிற்கு வந்துவிட்டது. 

அன்று நாவலை வாசிக்க ஆரம்பித்த சமயம் என்னால் சில பக்கங்களுக்கு மேல் போக முடியவில்லை. அதன் மொழி எனக்கு சிக்கலாக இருந்தது. போதாததற்கு அந்த இளம் வயதில் முதல் பக்கத்திலே எல்லாம் புரிந்துவிட வேண்டும் என்ற பேராசையும் இருந்தது. ஆனால் அதன் பிறகு வாசிப்பு கொடுத்த அனுபவம் தைரியமாக இந்நாவலை இன்று வாசிக்க வைத்தது.  

இயக்குனர் பாலாவின் நான் கடவுள்; இந்நாவலைத் தழுவிதான் எடுக்கப்பட்டது என்பது தெரிந்த ஒன்றுதான். அதுவும் அப்போதைய வாசிப்பு தடைக்கு காரணமாக இருந்திருக்கலாம். அதான் கதை தெரிஞ்சிப்போச்சே எதற்கு புத்தகமாகவும் வாசிக்க வேண்டும் என்கிற சிறுபிள்ளைத்தனமான எண்ணத்தை வேறெப்படி சொல்ல. 

இன்று இந்த நாவலை வாசிக்கும் போதும் கூட சில பக்கங்களில் திரையில் பார்த்த முகங்களாகவும் அதே கதாப்பாத்திரங்களாகவும்தான் தெரிந்தன. ஆனால் தொடர்ந்து வாசிக்க வாசிக்க, மனதில் இருந்த நான் கடவுள் காணாமல் போய்; ஏழாம் உலகத்திற்குள் நுழைந்து விட்டேன். இந்நாவலை தவறவிட்டிருந்தால் எத்துணை பெரிய இழப்பாகியிருக்கும்.

நம்மால் சகிக்க முடியாத நம்மால் நினைத்துப்பார்க்க முடியாத போகிற போக்கில் நாம் விசும் சில்லறைகளை வாழ்வாதாரமாக அமைத்துக்கொள்ளும் பிச்சைக்காரர்களின் கதை; அவர்களின் வாழ்வு; அவர்களின் துயரம் இது. இயற்கையாக அல்லாமல் கல்நெஞ்சம் படைத்தவர்களால் கையுடைத்து காலுடைத்து கண்கள் குருடாக்கி பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டவர்களின் கதை.

வாசிப்பின் இடையில் என்னால் தொடர்ந்து வாசிக்க இயலவில்லை. கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. ஒரு வாசகனாக மட்டுமல்லாமல், நானும் ஒரு ஆளாக அவர்களுடன் இணைந்துவிட்டேன். 

மனிதர்களின் பல்வேறான முகங்களை நாவலின் போக்கில் ஆழமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். வாசிக்கையில் பிச்சைக்காரர்களுக்காக அழுவதா அல்லது அவர்களை வதைக்கும் மனிதமிருகங்களைச் சபிப்பதா என்கிற திண்டாட்டம் இருக்கவே செய்தது. 

தனக்கு லாபம் வருகிறது என்பதற்காக மனிதர்கள் எதற்கும் துணிவார்கள். தன் அதிகாரம் தன் தேவை பொருட்டு எல்லோரு மீதும் பாய்வார்கள் போன்ற மனித அவலங்களை மனம் கணக்கும்படி ஏழாம் உலகம் காட்டுகிறது.

உடல் சிதைந்த பிச்சைக்காரர்களாக இருந்தாலும், அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் நம்மையும் சிரிக்க வைக்கிறது. அவர்களால் சிரிக்க முடிகிறதே என வருந்தவும் வைக்கிறது. அவரவர் செய்யும் பாவங்களுக்கு ஆளுக்கொரு பதில் இருக்கவே செய்யும் என்ற தளத்தை மெல்ல மெல்ல நாவல் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. இனியும் இந்த துயர வாழ்வை வாசிக்கத்தான் வேண்டுமா என எண்ணும் பொழுது நாவல் அதன் முடிவை நெருங்கிவிட்டது. 

இந்நாவல் குறித்து அதிகம் பேச வேண்டியுள்ளது. பலரும் எழுதியிருக்கிறார்கள். இனியும் எழுதப்போகிறார்கள். ஏனெனில் ஒரு மனிதனை சிதைத்து அதன் வழி பணம் பார்க்கும் இன்னொரு மனிதன் இருக்கின்றவரை இந்த நாவலில் ஆயுள் நீண்டுகொண்டிருக்கும்.

இன்னும் சொல்வதென்றால் நாவலில் முடிவில் முத்தம்மையின் அலறல் மனித மிருக கொடுரங்களின் உச்சம்….

- நிம்மதியா ஒரு பேய்ப்படம் -

எது நமக்கு பயத்தைக் கொடுக்கிறதோ அதுதான் நமக்கு பலத்தையும் கொடுக்கிறது. புரிகிறதா?. எனக்கு புரிய முப்பது வயது வரை வரவேண்டியதாய் இருந்தது. சின்ன வயசுலயே அங்க போகாத பேய் இருக்கு.. இங்க போகாத நாய் இருக்குன்னு பயங்காட்டி பயங்காட்டியே வளர்த்துட்டாங்க.

இந்த வயசுல நாய்க்கு கூட பயப்படலாம். ஆனா பேய்க்கு பயப்பட்டா ஊரே சிரிக்கும். ஊர் சிரிக்கிறது இருக்கட்டும் உள்ளுக்குள்ளே நானே சிரிச்சிக்குவேன். இந்த பயத்தை போக்கியே ஆகனும். எது பயமோ அதுவே பலம். தெளிவாக புரிந்தது.  பேய் பயம்தான் என்னோட பலம்.

எடுத்ததும் சுடுகாட்டுக்கு போய்ட்டு வந்தெல்லாம் பரிட்சை எழுத முடியாது. சின்னச்சின்னதாய்த் தான் பயத்தைப் போக்க முடியும். சின்ன வயசுல எத்தனைப் பேய்ப்படங்களைப் பார்த்து பயந்திருப்பேன். அது எல்லாத்தையும் ஒன்னொன்னா தனியா வீட்டுல உட்கார்ந்து பாக்கனும். இன்னிக்குத்தான் வீட்டில் யாருமில்ல. நான் மட்டும்தான் ரெண்டு நாளா தனியா இருக்கப்போறேன். அஞ்சாறு பேய்ப்பட விசிடிகளைக் கொண்டு வந்திருக்கேன். இன்னிக்கு விடிய விடிய கொஞ்சமும் பயமில்லாம எல்லா பேய்ப்படங்களையும் பாக்கனும்.

முதல் படம். காட்டுக்குள்ள இருக்கற வீட்டுக்கு எதுக்குத்தான் குரூப்பா போய்ட்டு பேய்ங்க கிட்ட சாகறாங்களோ. எனக்கு பயம் இலலையே.

இரண்டாவது படம். சர்ச் பாதரையே மிரட்டினாலும் கடைசியா எல்லா பேய்ங்களும் மன்னிப்பு கேட்டுட்டு ஓடித்தான் போகுதுங்க. எனக்கு பயம் இல்லையே.

மூணாவது படம். ஆத்தீ கிணத்துல இருந்த பேய், டீவிக்கு உள்ள இருந்துள்ள வருது. யார்தான் அந்த வீடியோவை பார்க்க சொல்றா. அதைப் பார்த்தாதான் பேய் வந்து கொல்லுதுல்ல...!

ஐயோ என்ன இது கரண்டு போச்சி. கடைசில என்ன ஆச்சினு தெரியலயே. விசிடி உள்ளயே மாட்டிக்குமே...

"ச்சே... ஒரு நல்லப் பேய்ப்படத்தை நிம்மதியாப் பார்க்க முடியிதா...!!!?"

ஆமா.. யாரோட குரலு இது?!?!!

செப்டம்பர் 22, 2022

யாருக்குத்தான் சபலமில்லை...?


அம்மா அப்படித்தான் சொன்னார். எனக்கு கோவம் வந்துவிட்டது. இதுவெல்லாம் ஒரு பேச்சா. காதலித்துதான் கல்யாணம் செய்துக்கொண்டோம். அதற்காக இப்படியா பேசுவது. யாருக்குத்தான் சபலமில்லையாம்!! புருஷன் போக்கு சரியில்லைன்னு சொன்னா பெத்த அம்மா புள்ளை கிட்டயே இப்படியா பேசுவாங்க?

ஆனாலும் என்னால் அம்மா மீது முழு கோவத்தையும் காட்ட முடியாது. அம்மா பாவம். உண்மையிலே அம்மா பாவம்தான். ஒரு கால் இல்லாத அப்பாவை வைத்துக் கொண்டு ரொம்பவும் சிரமப்பட்டுத்தான் எங்களை வளர்த்தார். அப்பா கம்பீரமாக நடந்து பார்த்த நினைவுகள் எனக்கு மங்கலாகத்தான் இருக்கிறது. எனக்குக்கூட அப்பாவை இப்படி பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. எத்துணை வருடங்களாக அம்மா பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஒருவேளை அப்பா அப்படி இருப்பதால்தான் அம்மாவிற்கு என் வலி புரியவில்லை என நினைக்கிறேன். நினைத்ததோடு சும்மா இருந்திருக்கலாம். முடியவில்லை. வார்த்தையை விட்டுவிட்டேன்.

யாருக்குத்தான் சபலமில்லையேன்னு கேட்கறியே மா...  எங்க அப்பா அப்படி இருந்திருந்தாதான் உனக்கு என்னோட வலி தெரியும்னு சொல்லிட்டேன்.

ஆச்சரியம். அம்மா கோவப்படவில்லை. எழுந்தார்.  நேராக என்னருகில் வந்தார். "யாருக்குத்தான் சபலமில்ல... ஆமா உங்க அப்பா  காலை யாரு உடைச்சான்னு என்னிக்காவது அவர்கிட்ட கேட்டுறிக்கியா நீ...." என்று கேட்டுவிட்டு பழையபடி தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

செப்டம்பர் 21, 2022

- இளையராஜாக்களும் அனிருத்களும் -

 



காலையிலேயே அழைத்திருந்தார். “என்ன ப்ரோ…” என்றுதான் தொடங்குவார். சமீபத்தில் ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக சந்தித்தோம்.  அங்கிருந்து திரும்ப வந்து, பிறகு மீண்டும் தமிழகப்பயணமும் சென்றுவிட்டு திரும்பியிருக்கிறார். ஆனால் அந்த சிறகுள்ள மனிதரை பார்ப்பதற்கு என்னால் முடியாமல் போனதைச் சொல்லி கொஞ்சம் திட்டவும் செய்தார் போதாக்குறைக்கு கொஞ்சமாக சலித்தும் கொண்டார்.

எனக்கு சட்டென சிரிப்பு வந்துவிட்டது. நம்முடன் பள்ளியில் படித்த நண்பனொருவர் கையாலும் பாணியை அப்படியே கையாண்டார். கண்களைப் மூடிக்கொண்டு கேட்டால் எனது பள்ளி நண்பானின் ஒருவனாகத் தெரிந்தார். இதன் பிறகும் சந்திப்பை தாமதப்படுத்தினால் வீட்டிற்கே வந்து கழுத்தைப் பிடித்து “ஏன் ப்ரோ என்னைய பார்க்க வரல..?” என கேட்டுவிடுவார் என பயந்துவிட்டேன். “இன்னும் மூணு மணிநேரத்தில் பார்க்கலாம் ப்ரோ…” எனறவாறு உடனடியாக வீட்டில் செய்ய வேண்டிய சில வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்தேன்.

திடீரேன்ற பொறுப்பை இல்லாள் யூகித்துவிட்டார். அவராகவே என்னிடம் “சரி எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவீங்க..?” என கேட்டதிலிருந்து அதனை தெரிந்துகொண்டேன். வாழ்க்கை இப்படித்தான். ரொம்ப கடினமான காரியங்கள் அரைநொடியில் நடந்து முடிந்துவிடும். ரொம்பவும் சாதாரணமான காரியங்களுக்கு மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டிருப்போம்.

நமது புத்தகக்கடையில் ப்ரோ ஆடர் செய்திருந்த புத்தகங்களுடன் அவரைப் பார்க்கச் சென்றேன்.

எனக்கு முன்னமே எங்களின் வழக்கமான உணவக கடைசி நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து உணவகம் முழுவதும் ஒரு சுற்று பார்க்க முடியும். அவரின் எதிரில் அமர்ந்தேன். என்னால் அவர் முகத்தையும் அவருக்கு பின்னால் இருக்கும் மரம் செடி கொடிகளைத்தான் பார்க்க முடிந்தது. எவ்வளவு ப்ளான் பார்த்தீங்களா!

நான் அவருக்கு புத்தகங்களைக் கொடுக்க, அவர் எனக்கு சிங்கப்பூர் மிட்டாய்களையும் ரவாங்கில் பிரபாலமான பால்கோவாவையும் கொடுத்தார்.

என்ன சாப்டறீங்க என்று ஆரம்பித்து மட்டன் குழம்பு கண்ணைக் கவர்ந்ததாகச் சொன்னார். உடனே ‘ரொட்டி சானாய்க்கும்’ மட்டன் குழம்புக்கும் ஆடர் கொடுத்தோம். அந்த ஒரு வட்ட மங்கின் மட்டன் குழம்பிற்கு பதிமூன்று வெள்ளி வருமென எங்கள் இருவருக்கும் அப்போது தெரியாது.

‘என்ன படிக்கறோம் என்ன எழுதறோம்’ என எங்கள் பேச்சு, பழக்க வழக்கத்திற்கு வந்தது. அப்போதுதான் வாசித்து முடித்த ஜெயமோகன் அவர்களின் ஏழாம் உலகம் நாவல் குறித்து பேசினேன். சமீபத்தில் உள்ளூர் சினிமாவிற்கு சில எழுத்து வேலைகளைச் செய்துவருவதையும் நண்பர்களின் கதைகளை வாசித்து செறிவாக்கம் செய்து வருவதையும் சொன்னேன்.

அவரும் சமீபத்தில் வெளிவந்த அவரது சிறுகதைகள் குறித்தும் இனி தான் எழுதவிருக்கும் சிறுகதைகள் குறித்தும் பேசினார். மலேசியாவில் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் சிலர் மட்டுமே தனித்தன்மையை எழுத்தில் காட்டக்கூடியவர்கள். அந்த வகையில் இவரையும் சொல்லலாம். ரொம்பவும்  தாமதமாக எழுத வந்துவிட்டதாக சொல்லியவரிடம் சொன்னேன்; “இப்போது அதற்கு எந்த ஒரு குறையும் இல்லை.. வழக்கம் போல தொடர்ந்து எழுதுங்கள். சீக்கிரமே உங்கள் சிறுகதைகளை புத்தகமாக்குங்கள். தனித்தனியாக வாசிக்கும் சிறுகதைக்கும் ஒரு எழுத்தாளரின் சிறுகதைகளைத் தொகுப்பாக வாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கு. உங்கள் புத்தகம்தான் உங்களை இன்னும் பரவலாக அடையாளப்படும்..” என்றேன்.

அப்படி சொல்லும் போதெல்லாம், தவறாது ஒரு பதிலை அவர் கொடுப்பார். “நல்ல கதைகளை எழுதி அறியப்படும் எழுத்தாளராக மாறிவிட்டு அப்பறமா புத்தகம் போடலாம்னு இருக்கேன்..” நான் சிரித்துக்கொண்டே அவரின் கதைகளை இப்போதைக்கு தேர்வு செய்து வைக்கச்சொன்னேன்.

பிறகு எங்கள் பேச்சு இளமை ததும்பும் பக்கம் போனது. அது எப்பவும் போகும். ஒவ்வொரு முறையும் “ஆமா உங்களுக்கு என்ன வயசு…? ” என  கேட்டுக்கொள்வார். நானும் வயதைச் சொல்லி நானும் பெரிய பையன் தான் ப்ரோ என்றதும் சிரித்துக் கொண்டு பேச்சைத் தொடர்வார். இம்முறை அவரின் இளமை காலத்தில் அவருக்கு கிடைத்த கிளுகிளுப்பான புத்தகங்களைச் சொல்லி சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றேன். மாறாக எங்களுக்கு வீடியோ பிறகு வீசீடி அதன் பிறகு கம்பியூட்டர் கடை என வரிசைப்படுத்தினேன். ஆனால் இன்றையப் பிள்ளைகளுக்கு அப்படியல்ல, கையிலேயே நவீன கைப்பேசி இருக்கிறது. நம்மைக் காட்டிலும் சீக்கிரமாக ‘எல்லாவற்றையும்’ அறிந்து கொள்ளும் வாய்ப்பு அபாயமும் ஒருங்கே அமைந்துவிட்டதைப் பேசினோம்.

கடந்த வாரம் இங்குள்ள ஆரம்பநிலை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உரை நிகழ்த்த சென்றிருந்தேன். ‘அகிலம் நீ’ என்னும் யுவதிகள் அமைப்பின் வழி அழைக்கப்பட்டிருந்தேன். ஆண் மாணவர்களுக்கு நானும் பெண் மாணவர்களுக்கு ‘அகிலம் நீ’ யுவதிகள் அமைப்பின் நிறுவனர் தோழர் பொன் கோகிலமும் பேசினார்.

அங்கு நான் சந்தித்த மாணவர்கள் குறித்தும் அவர்களின் நடவடிக்கை குறித்தும் பேசினேன். மாணவர்களுக்கு பணம் குறித்த விழிப்புணர்வையும் கொடுக்க வேண்டிய அவசியம் பற்றி எங்கள் உரையாடல் சென்றது. உண்மைதான், ஒழுக்கும் கல்வி என பலவற்றில் நாம் அக்கரை காட்டினாலும் மாணவர்களின் பார்வையில் பொருளாதார விழிப்புணர்வின் அவசியம் குறித்து நாம் பெரிதாக பேசுவதில்லை. அவர்கள் என்ன வேலையா செய்கிறார்கள் பணத்தைப் பற்றி பேசுவதற்கு என யாரும் கேட்கலாம். ஆனால் எந்த ஒருவனின் கையில் பணம் இருக்கிறதோ அதன் மூலம் பொருளோ (மிட்டாயோ) வாங்கலாம் என நம்புகின்றானோ அவனுக்கு பொருளாதார விழிப்புணர்வு அவசியம். இன்னும் சொல்லப்போனால் பணத்தின் அருமை தெரிவது கட்டாயம்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு வயதானவர் தூரமான நாற்காலியில் அமர்ந்தார். நம்ம ப்ரோ கொஞ்சம் நேரம் அவரைப் பார்த்துவிட்டு, “கொஞ்ச நேரம்..” என சொல்லிவிட்டு அந்த வயதானவரைப் பார்க்க சென்றார். ஒருவேலை இவருக்கு படித்துக் கொடுத்த ஆசிரியராக இருக்கும் என நினைத்துக்கொண்டேன். திரும்பி வந்ததும் ப்ரோ சொன்னார் அவரது பள்ளி நண்பராம். ப்ரோவின் இளமையின் ரகசியத்தை என்றாவது கண்டுபிடிக்க வேண்டும்.

இப்போது கூட இளையராஜாவைப் பற்றிய முகநூல் பதிவில் ப்ரோ கமெண்ட் போட நானும் அவரது கமெண்டுக்கு கீழ இவரை அனிருத் ரசிகர் என்று நினைத்ததாகக் கூறினேன். அந்த இளமையும் துடிப்பும் அதற்கான காரணம் என்று நினைத்தேன். ஆனால் நம்ம ப்ரோ இளையராஜாவின் ‘அந்திமழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது..’ என்ற பாடலை விடவா இளமை துள்ள முடியும் என்றார். அவரின் இளமையின் ரகசியம் ஓரளவு பிடிபட்டது.

தொடர்ந்து சில இணைய இதழ்களுக்கு சிறுகதைகளை அனுப்புவதை சொல்லி அதன் மூலம் அவரின் மன ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். உண்மையில் இது பலரின் மன ஆதங்களில் ஒன்றுதான்.

இணைய இதழுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு அவர்கள் தரும் பதிலுக்கு காத்திருப்பது குறித்த மாற்று கருத்து இல்லை. ஆனால் நாம் அனுப்பிய படைப்புகள் எற்றுக்கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்று கூடவா சொல்வதற்கு அவர்கள் சிரமப்படுவார்கள். சில இணைய இதழ்கள் தங்களுக்கு படைப்புகள் கிடைத்துவிட்டன என்பதைக் கூட எழுத்தாளர்களுக்கு சொல்லுவதில்லை. இங்கு காத்திருப்பது சிக்கல் இல்லை, ஆனால் இதில் மறைந்திருக்கும் அலட்சியம்தான் சில சமயங்களில் நமக்கு மன வருத்தத்தைக் கொடுக்கிறது.

எங்கள் உரையாடலுக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். அடுத்து இன்னும் நிறைய பேசுவோம் என்ற நம்பிக்கையுடன் விடைபெற்றோம். என்னைவிடவும் வேகமாய் நடந்து அவரது வாகனத்தை நெருங்கிகொண்டிருந்தார். சொல்ல மறந்துவிட்டேன் நம்ம ப்ரோவின் பெயர் ஶ்ரீ ராமுலு, ஶ்ரீகாந்தன் என்ற பெயரின் எழுதிக்கொண்டிருக்கிறார்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                


செப்டம்பர் 17, 2022

'மகரந்தம்' ஏற்றமா ஏமாற்றமா?

சமீபத்தில் உள்ளூர் தனியார் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோ விண்மீனில் ‘மகரந்தம்’ என்னும் தொடர் நாடகம் ஒளியேறியது. உங்களில் சிலர் அதனைப் பார்த்திருப்பீர்கள். உங்களில் சிலர் உள்ளூர் நாடகம்தானே எதுக்கு பார்த்துகிட்டு என நினைத்திருப்பீர்கள். என்னதான் தரமான படைப்புகளை நம் கலைஞர்கள் கொடுத்தாலும் வெளிநாட்டு குப்பைகளுக்கு கொடுக்கும் கவனத்தில் பாதியைக் கூட பலரால் உள்ளூர் படைப்புகளுக்குக் கொடுக்க முடிவதில்லை. கொடுக்கவும் அவர்கள் விரும்புவதில்லை. 

இங்கு கலைஞர்களே சக கலைஞர்களின் படைப்புகளைக் குறித்து பேசுகிறார்களா இல்லையா என ஆராய்வதிலிருந்து சிலவற்றைக் கண்டுகொள்ளலாம்  அதையொட்டியப் பார்வைதான் இது. இவர்களுக்குள் என்ன போட்டியா இருக்கிறது? போட்டி யாருக்கிடையில் ஏற்படுகிறது என யோசியுங்கள். இரண்டு பலசாலிகளிடம்தானே. ஆக போட்டி போடுவதற்கு பலசாலிகள் வேண்டும் அவர்களிடம் பலமும் வேண்டும். அங்கு நடப்பதுதான் போட்டி. “ஒன்னு நீ.. இல்ல நானு” என சொல்லு இடம் அது. 

ஆனால் நம் நாட்டு கலையுலக சூழலில் இது சாத்தியமா? சாத்தியமா என கேட்பதைவிட அவசியமா என கேட்கும்படிதான் நிலைமை இருக்கிறது. இன்றும் கூட நம் நாட்டு திரைப்படங்களுக்கு தினம் தினம் கூவிக்கூவி டிக்கட் விற்றுக்கொண்டிருக்கிறோம். டிக்கட்டுகளுக்கு ஸ்பான்சர் வாங்கிக்கொண்டிருக்கிறோம். 

இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்து மக்களிடம் நம்பிக்கையை வாங்கி அதனை காப்பாற்றுவதற்குள் அந்த நம்பிக்கையை இன்னொரு திரைப்படம் மூலம் உடைத்து விடுகிறார்கள். “என்னமா படம் எடுத்திருக்காங்க..!” என பிரமிக்கும் அதே நேரத்தில் “என்னா படம் எடுத்திருக்காங்க..?” என கோவக்கேள்வியையும் கேட்கிறோம்  இரண்டுக்குமான கால இடைவெளிதான் மக்களிடம் உள்ளூர் கலைபடைப்புகள் மீதான ஐயத்திற்கு காரணம்.

சரி இனி தொடர்ந்து உள்ளூர் தொடர் நாடகமான மகரந்தம் என்னும் தொடர் குறித்து என் பார்வையைப் பகிர்கிறேன். இந்நாடகம் என்னை ஈர்ப்பதற்கான காரணங்களில் முதற்காரணம் அதன் தலைப்புதான். இரண்டாவது காரணம் இந்நாடகத்தின் அடிநாதத்தை தலைப்பிலேயே சொல்லிவிட்டார்கள். மகரந்தம் என்பதை தாவரங்களின் இனப்பெருக்கத்தை மகரந்த சேர்க்கை என சொல்கிறோம். அதன் செயல்முறையைப் பேசினால் கூட அவ்வளவு அழகாக இருக்கும். அதனை சுருக்கமாக இப்படி புரிந்து கொள்ளலாம் இரு தரப்பின் சேர்க்கை. இந்நாடகத்திற்கு அது ரொம்பவும் பொருந்தி வந்துள்ளது.

மகரந்தம் தொடர் நாடகத்தின் கதையைச் சுருங்க பார்க்கலாம். மனமுறிவு பெற்ற ஆணும் பெண்ணும் அவர்களின் பெற்றோர்/உறவுகள் மூலம் மறுமணத்தில் இணைகிறார்கள். எற்கனவே மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறுமணத்தில் இணைய முடியவில்லை. அவர்கள் அந்தச் சிக்கலை எப்படி எதிர்க்கொள்கிறார்கள். மறுமணத்தில் மனம் மீண்டும் காதல்வயப்படும் போது முன்னாள் காதலியும் (காதலனும்) வாழ்க்கைக்குள் வருகிறார்கள். மீண்டும் பழைய வாழ்க்கையைப் போலவே சிக்கல்களை இவ்வாழ்விலும் எதிர்க்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் செய்த அதே முடிவை (விவாகரத்தை) மீண்டும் எடுக்க நினைக்கிறார்கள். பிறகு உண்மை தெரிகிறது. தவறுகளைத் திருத்திக்கொள்கிறார்கள். புதிய காதல் அவர்கள் வாழ்க்கையை வசந்தமாக்குகிறது. அந்த சமயத்தில்தான் மனைவியின் முன்னாள் காதலன் அவர்கள் வீட்டு வாசலில் நிற்கிறான். 

ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கான கதாப்பாத்திரத் தேவையை இயல்பாகவே பூர்த்தி செய்திருக்கிறார்கள். நாயகனும் நாயகியும் தவிர மற்ற கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவையும் குடும்ப சிக்கலும் அவசர முடிவும் நல்ல நட்பும் என எல்லாவிதப் பார்வையாளர்களையும் திருப்திபடுத்த முயன்று அதனை சாதித்தும் இருக்கிறார்கள் படக்குழுவினர்.

மனமுறிவு பெற்றவர்கள் மீதும், மறுமணம் செய்பவர்கள் மீதும் சமூகம் ஒரு தவறானப் பார்வையையே வைத்திருக்கிறது. எடுத்தவுடன் அவர்கள் மீது விமர்சனத்தை வைப்போமே தவிர அவர்களின் பின்னணி குறித்து அறிந்து கொள்ள விரும்ப மாட்டோம். அதே சமயம் யாரோ ஒருவர் குற்றவாளியாகத்தான் இருக்க முடியும் என முன்முடிவு எடுத்துக்கொள்கிறோம். அடுத்தவர் வாழ்க்கையில் நமக்கான எல்லை எதுவென நமக்கு எந்த ஒரு அறிதலும் இருப்பதில்லை. மாறாக நாம் எவ்வளவு நல்லவர்கள் என காட்டுவதற்கு யாரோ ஒருவர் மோசமானவர் என காட்டி காட்டி பழகிவிட்டோம்.

மகரந்தம் தொடர் நாடகம் அதன் பார்வையாளர்களுக்கு சொல்ல வந்த விடயங்கள் ரொம்ப முக்கியமானது. வாழ்க்கை அதன் போக்கில் நமக்கு ஒரு செய்தி சொல்வதாக நான் நம்புகிறேன். அது இன்று நமக்கு புரியாவிட்டாலும் நாளை நமக்கு ஒரு சிறு புரிதலைக் கொடுக்கும்.  


தன்னால் எந்தப் பெண்ணையும் உடலளவில் திருப்தி படுத்த முடியாது என தெரிந்தும் ஒரு பெண்ணை திருமணம் செய்து தனது குறையை மறைக்க மனைவி மீது சந்தேகம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தும் நாயகியின் முன்னாள் கணவன்.  உண்மையில் இது கவனிக்க வேண்டிய ஒன்றாகவே பார்க்கிறேன். திருமணத்திற்கு கண்ணுக்குத் தெரியாத கிரகங்களின் நிலவரங்களை பார்க்கத்தெரிந்த நமக்கு கண்ணுக்கு தெரிந்த உடற்கூறுகள் பற்றிய மருத்துவ பரிசோதனை மீது அக்கறை இருப்பதில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒரு சமயத்தில் திருமணத்திற்கு முன் ஆண் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்ட பெண் பற்றிய குறும்படம் வெளிவந்திருந்தது. ஏய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு குறும்படம் அது. மகரந்தம் என்னும் நாடகத்தில் இயல்பாகவே ஒரு சிக்கலுக்கான விழிப்புணர்வைக் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு இத்தொடரின் கதையும் கை கொடுத்திருக்கிறது.

மனமுறிவுக்கு பின்னர் வாழ்க்கை இருப்பதைக் காட்டும் கதையம்சம் கொண்ட மகரந்தம் என்னும் தொடர் நாடகம், மனமுறிவுக்கு அவசரப்படவேண்டாம் எனவும் சொல்கிறது. அதுதான் இந்நாடகத்தைக் குறித்து என்னை எழுதவும் வைத்திருக்கிறது. அதோடு இன்னொன்றும் இருக்கவே செய்கிறது. மனமுறிவு பெற்ற பின் மறுமணம் செய்துக்கொள்பவர்களின் வாழ்க்கையில் முன்னாள் மனைவியோ முன்னாள் கணவனோ மீண்டும் வருவதற்கான சாத்தியங்களின் பின் விளைவுகளையும் இக்கதையின் மேலடுக்கில் காட்டியுள்ளது.


நல்ல கதை. கதையைச் சிதைக்காத திரைக்கதை. திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வசனங்கள். வசனங்களுக்கு உயிர்கொடுக்கும் நடிகர்கள். நடிகர்களை அழகாகவும் எதார்த்தமாகவும் காட்டிய இயக்குனர், என ஒன்றின் பின் ஒன்றாக தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றி பார்வையாளர்களின் மனதில் குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்டது மகரந்தம்.

மகரந்தம் தொடர் நாடகத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனர்க்கும் கதை/திரைக்கதை/வசனம் எழுதியவர்க்கும் நடிகர்களுக்கும் வாழ்த்துகள்.

செப்டம்பர் 16, 2022

மாணவர்களுடன் ஒரு நாள் சந்திப்பு

- மாணவர்களுடன் ஒரு நாள் சந்திப்பு -


சமீபத்தில் செர்டாங் ஆரம்பநிலை தமிழ்ப்பள்ளிக்கு தோழர் பொன் கோகிலத்துடன் சென்றிருந்தேன். அவ்வப்போது இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு இப்படி செல்வது வழக்கம். ஆரம்பநிலை பள்ளி மாணவர்களிடம் பதின்ம வயதை எதிர்க்கொள்வதும் குறித்தும் ‘நல்ல தொடுதல் கெட்ட தொடுதல்’ குறித்தும்  உரையாடுவோம். 


மாணவிகளுக்கு தோழர் பொன் கோகிலமும் மாணவர்களுக்கு நானும் தனித்தனி குழுவாக பிரித்து மாணவர்களுடன் உரையாடுவோம்.
என்னைக் குறித்த அறிமுகத்தை பொறுப்பாசிரியர் சொன்னதும் நான் உரையாடலைத் தொடங்கினேன். மாணவர்களின் குறும்புகள் ரசிக்கும்படி இருந்தன. 

பத்தாண்டுகளுக்கு முந்தைய மாணவர்கள் வாழ்ந்த சூழலையும் இன்று மாணவர்கள் வாழும் சூழல் அதன் வழி அவர்கள் எதிர்நோக்கும் மறைமுக சிக்கல்களைக் குறித்து பேசினேன். 


மாணவர்கள் நமது பேச்சைக் கேட்க வேண்டும் என்றால் முதலில் அவர்களின் கவனத்தை நம் பக்கம் இழுக்க வேண்டும், அதோடு நமது பேச்சின் மீதான அவர்களின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். அவற்றுடன் மணவர்களுக்கு சில பரிசு பொருட்களையும் எடுத்து வைத்திருந்தேன். என் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் மாணவர்களுக்கு பரிசு கொடுத்து மற்ற மாணவர்களையும் உற்சாகப்படுத்தினேன்.


உடல் சுத்தம். சுற்றுப்புற தூய்மை. பெற்றோரை மதித்தல். கல்வியில் கவனம் செலுத்துதல். நல்ல நட்பு. பெண் தோழிகளில் நட்பும் அவர்களுக்கான மரியாதையும். லட்சியத்தை அடைவதற்கான அடிப்படைகள். சமூக ஊடகங்களின் மோகம் எப்படி நம்மை தொந்தரவு செய்கிறது போன்றவற்றைக் குறித்து பேசினேன்.

என்னதான் தினமும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் சொல்லிக்கொண்டிருக்கும் விடயங்கள்தான் என்றாலும் புதிதாக ஒருவர் நன்கு அறிமுகமான ஒருவர் மாணவர்களுடன் பேசும்போது மாணவர்களுக்கு அது கொஞ்சம் நெருக்கமாக அமைகிறது.
மாணவர்களுடன் கலந்து பேசும் வாய்ப்பை எங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த செர்டாங் ஆரம்பப்பள்ளிக்கும் தலைமையாசிரியர்க்கும் பொறுப்பாசிரியர்களுக்கு அன்பும் நன்றியும்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்