பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

மே 16, 2026

- பசிக்கும் வயிறுகள் -


அறிவிப்பின்றிய மழையில்
முழுதும்
நனைவதற்கு முன்
இறகில் ஈரம் ஏற்றிய
பாரத்தோடு
பசித்த வயிற்றுடன்

எம்பி எம்பி
எப்படியோ பறந்த
பட்டாம்பூச்சியொன்று

சுவரோரம் வந்து
ஈரம் காயவும்
மழை மறையவும்
காத்திருக்கிறது

எங்கிருந்தோ
வீசி வந்த
நாக்கொன்றின் நுனி பட்டு
பல்லியின் வாய்க்குள்
நுழைகிறது

ஈரம் காய
பல்லிக்கும் பொறுமையில்லை
ஈரம் காய
பட்டாம்பூச்சிக்கும் வாய்க்கவில்லை

வாசிப்பில்


" ....இது காதலின் பெருங்களிப்பு. காதல் என்பது விசித்திரமான மரம்தான். தழைத்து நிற்கும் போது தலைகீழாய் விழும். பச்சை மறந்து பட்டுப் போனதென்று நினைக்கும் போது காய்க்கத் தொடங்கும். வெட்டி முறித்தாலும் வெடித்துத் துளிர் விடும்.'
நாவலிலிருந்து......

இன்றைய இரவு கே.ஆர்.மீராவின் 'அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்' நாவலோடு விடியப்போகிறது. சிற்பி பாலசுப்பிரமணியம் இந்நாவலை தமிழாக்கம் செய்திருக்கிறார்.

நான் வாசிக்கும் கே.ஆர்.மீராவின் இரண்டாவது நாவல் இது. இந்நாவலின் முதல் பக்கமே எனக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியையும்  பதட்டத்தையும் அடுத்தடுத்த பக்கங்களில் சரி செய்ய முடியுமா என இன்னும் புலப்படவில்லை.

நாவலில் வரும் நாயகி ராதிகா, அவளைச் சுற்றியும் சுழன்று அவளை வதைக்கும் காதல், காமம், வன்முறை, தனிமை என்னும் பல சிக்கலான உணர்வுகளின் இருந்து அவள் தப்பிப்பாளா அல்லது அவளும் அதனோடு கரைந்துதான் போவாளா என்கிற பதட்டம் எனக்குமே தொற்றிக்கொண்டது....

மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் மே மாதத்தித்கான ஐந்தாவது நாவல் வாசிப்பு இது.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மே 14, 2026

- சுவாரஸ்யமான திருப்பம் -


சமீபத்தில் இலக்கியவாதி ஒருவரைச் சந்தித்தேன். முன்னமே கொடுத்திருந்த குறுங்கதைகளில் அவர் வாசித்திருந்த சில குறுங்கதைகளைப் பற்றி பேசலானார்.

தனக்கு இப்படி குட்டிகுட்டியாக வாசிப்பது பிடிக்கவில்லை என்றார். கதையைப் புரிந்து கொள்ளும் முன்பே கதை முடிந்துவிடுவதை ஒரு குறையாகவே சொன்னார். எழுத்தாளர்கள் இப்படி எழுத சோம்பல்பட்டு குறைவாக எழுதாமல் இன்னும் விலாவாரியாக எழுதினால்தான் என்ன என்றார்?

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஒரு முறை அவர் வாசித்த சிறுகதைத் தொகுப்பைப் பற்றி சொல்லும்போது, வாசிக்கறவங்களை யோசிக்க விடாம எல்லாத்தையுமே கதையில் சொல்லிடறாங்க. ஒரு வாசகனா எனக்கும் அதில் கொஞ்சம் உழைப்பும் தேடலும் இருக்க வேணாமா. இப்படி எழுத்தாளரே கதையை சொல்லிட்டு போய்ட்டா வாசகனா என்னோட வேலை சும்மா வாசிச்சிட்டு போறதுதானா? சொற்சிக்கனம்தான் கதைகளுக்கு முக்கியம் என்றார்.

சரி இன்னொரு முறை முயற்சிக்கலாமே என்று, உள்நாட்டு எழுத்தாளரின் புத்தகமொன்றை வாசிக்க கொடுத்தேன். 

இதெல்லாம் வேணாம் தம்பி, உள்நாட்டுல என்ன எழுதறாங்க எல்லோரும் ஒரே கதையைத்தான் சுத்தி சுத்தி எழுதறாங்க. அதனால நான் உள்நாட்டு புத்தகங்களை வாசிக்கறதில்ல என்றவர் சட்டென ஏதோ நினைவுக்கு வந்தவராய், "ஏன் தம்பி... இந்த விஜய் முதலமைச்சர் ஆகிட்டாருன்னா இனிமே படம் நடிக்க மாட்டாரா?" என்ற கேட்கவும் எனக்கு புரிந்தது மலேசிய இலக்கியச் சூழலில் பலரும் பாராட்டும் இலக்கியவாதியாக 
நூறு சதவீதம் பொருந்தகூடிய ஒருவராக அவர் மாறிகொண்டிருந்தார்.  

நிச்சயம் ஒருநாள் அவருக்கு விருது கொடுப்பார்கள்; ஊடகங்களில் அவரை பேட்டி எடுப்பார்கள், மலேசிய இலக்கியம் குறித்து பேச மேடை அமைத்து அழைப்பார்கள்  என்பதால் அவர் யார் என்பதை இப்போது நான் சொல்லவில்லை.

பிறகு நீங்களே தெரிந்து கொண்டு ஒரு முடிவுக்கு வாங்களேன். 

அடடே இதுவல்லவா இந்தப் பத்தியில் வந்த திருப்பம். சுவாரஸ்யமாக இருக்கிறதுதானே....

மே 09, 2026

- சமாதானம் செய்வேன் -

பேருந்தில் ஒருத்தி
அழுவதைக் கண்டேன்
இடது பக்க
கன்னத்தில் வழிந்த கண்ணீர்
கழுத்தில் இறங்கி
ஆடைக்குள்ளே மறைகிறது

எந்தத் தடையுமில்லாமல்
நீண்ட நதியாய்
வழியும்
கண்ணீரைக் கண்டதும்
எனக்கும் அழத் தோன்றியது

நான் அப்படித்தானே
யாராவது அழுதால்
நானுமே சேர்ந்து கொள்வேன்
பழகிவிட்டது

அழுவதில் நான்
அந்தப் பெண் போல
தேர்ச்சி பெற்றவன்
அல்ல போலும்

அழ தொடங்கிய
ஐந்தாவது வினாடியில்
மூக்கில் சளி உருவாகிவிடும்
மூக்கை உறிஞ்சியபடியே
அழுவேன்

என்
மூக்குறிஞ்ச சத்தத்தை
அந்தப் பெண்
கண்டுகொண்டாள்

என்னைத் திரும்பி பார்த்து
அவளது கண்ணீரைத்
துடைத்தபடி
"ஒன்னுமில்ல ஒன்னுமில்ல..."
என
மெல்லிய குரலில்
சொல்லியபடி
கொஞ்சமாய்ச் சிரிக்க முயன்றாள்

அழுத கண்கள்
இன்னுமே கலங்கியபடி இருக்க
எனக்காக சிரித்து
என்னை சமாதானம் செய்யும்
அவளை

நான் எப்படி
சமாதானம் செய்வேன்...

மே 03, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 10


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 10' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் வார தொடரில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆதி.இராஜகுமாரனின் 'ஆதி.இராஜகுமாரன் சிறுகதைகள்' புத்தகத்தை குறித்த வாசிப்பனுபவ கட்டுரையின் இரண்டாம் பகுதி நிறைவடைகிறது.

அடுத்த வாரம் இன்னொரு புத்தகத்தைக் குறித்து எழுதுகிறேன்.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்.. நேசிப்போம்..வளர்வோம்..
அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


- சொல்லி உதவினால் -

இங்கு
யாருக்கு என்ன கவலை
என்று
யாரால் சொல்ல முடியும்?

எது கவலை என
அடையாளம் தெரியாத
அளவிற்கு பழகிவிட்டேன்

யாராவது
சொல்லி உதவினால்

இரண்டில்
எது நானென
கண்டுகொள்வேன்

மே 02, 2026

- கவிதை விமர்சனம் -

நான்
எழுத நினைக்கும்
கவிதைகளை
எனக்கு முன்னமே
எழுதிவிடுகிறீர்கள்

நீங்களாது கொஞ்சம்
புன்னகைத்தபடி வாழக்கூடாதா
என
வருந்துவதைத் தவிர
எனக்கு வேறு
விமர்சனம் இல்லை...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்