பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

மே 25, 2026

- கடவுளின் கரங்களில் ஒன்று -

- கடவுளின் கரங்களில் ஒன்று -

வல்லினம் ஏற்பாடு செய்திருந்த 'முதல் எழுத்து இலக்கிய விழாவிற்கு' சென்றிருந்தேன்.

சமீபத்தில் நடந்த குறுநாவல் போட்டியின் வெற்றியாளர்கள் நால்வருக்கு பரிசுகள் கிடைத்தன. கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தியின் 'அப்சரா' புத்தகம் வெளியீடு கண்டது. தேர்ந்தெடுத்த மலேசிய சிறுகதைகளை வாசிப்பதற்கான அகப்பக்கமும் இன்று வெளியீடு கண்டது. அதோடு காமன் ரதி விழாவின் ஆவணப்படத்தின் பதினைந்து நிமிட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரைகளை வல்லினம் இணைய பக்கத்தில் வாசித்திருக்கின்றேன். பிடித்திருந்தது. தனித்தனியாக வாசித்ததௌ  இன்று தொகுப்பாக பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.


தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் சு.வேணுகோபால் இன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளர்களில் ஒருவராக வந்திருந்தார்.

எனக்கு அவரது பேச்சும் எழுத்தும் பிடிக்கும். இரண்டாவது முறையாக அவரை இன்று சந்தித்தேன். முதன்முறையாக தமிழகத்தில் நடந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் அவரை சந்தித்தேன். அன்றைய சந்திப்பில் அதிகம் பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. அன்று அவர் சந்தித்த பல வாசகர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

ஆனால் இன்றைய இரண்டாவது சந்திப்பு அப்படியாக இருக்கவில்லை. நான் என் பெயரைச் சொன்னதுந் அவருக்கு தெரிந்திருந்தது.

2021-ஆம் ஆண்டு சு.வேணுகோபால் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' என்கிற விமர்சன கட்டுரைத் தொகுப்பைக் குறித்து கட்டுரைகள் எழுதியிருந்தேன்.

குறிப்பாக பதிமூன்று இலக்கிய ஆளுமைகளின் கட்டுரைகள் அடங்கிய அந்தப் புத்தகத்தில் இருந்து ஒவ்வொரு கட்டுரையை வாசித்து முடிக்கும் போது என் வாசிப்பு அனுபவத்தை கட்டுரையாக எழுதினேன். நான் எழுதிய அந்தப் பதிமூன்று கட்டுரைகளும் எனது வலைப்பூவிலும் முகநூலிலும் பகிரப்பட்டது.

அதோடு பலரின் வாசிப்பிற்கும் சென்றது. பலர் அந்தக் கட்டுரையை வாசித்தப்பின் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்படி பேசிய பலருக்கும் அந்தப் புத்தகத்தை பரிந்துரை செய்தேன்.

அதோடு எங்களின் 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை' மூலம் குறைந்த விலையில் அந்தப் புத்தகத்தை விற்பனைக்கும் கொண்டு வந்தோம்.


இன்றளவும் நான் எழுதும் இரசனை விமர்சனக் கட்டுரைகளுக்கும் சு.வேணுகோபாலின் 'தமிழ்ச் சிறுகதையில் பெருவெளி' புத்தகமும் துணையாக இருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரையின் மூலம் எனக்கு பிடித்த எழுத்தாளருக்கு என் பெயர் பரிச்சயம் ஆகியிருக்கிறது என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.


என் வீட்டு நூலகத்தில் அவரின் பெரும்பாலான புத்தகங்கள் இருக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த 'பனங்காய் மயிலை' என்னும் இரு குறுநாவல் தொகுப்பில் அவரிடம் கையொப்பம் வாங்கினேன். அதே போல இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எனது இரு குறுங்கதைகள் தொகுப்பை அவரிடம் வாசிக்க கொடுத்தேன். என்றாவது ஒருநாள் அவரிடம் இருந்து ஏதாவதொரு சொல் என்னை நோக்கி வருமென்ற நம்பிக்கையோடு அவருக்கு கைகொடுதேன்.

இன்றைய உரையில் அவர், இலக்கியத்தில் இயங்கும்  எழுத்தாளர்களிடம் இருக்கும் 'கடவுளின் கையைக்' குறித்து பேசியிருந்தார். நானும் அந்த கடவுளின் கைகளில் ஒன்றைத் தொட்டு பார்த்த திருப்தியுடன்
திரும்பினேன்.

இலக்கியத்தில் ஆர்வம் உள்ள பல நண்பர்களை வழக்கம் போலவே இன்றும் சந்தித்தேன்.  சுவாமிஜி, டாக்டர் சண்முகசிவா போன்றோர் தவறாது எனது உடல்நிலையைக் குறித்து விசாரித்தார்கள்.
டாக்டர் சண்முகசிவா அவரது புதிய புத்தகமான  'அன்பேற்றுதல்' என்னும் கட்டுரைத் தொகுப்பை  எனக்கு கொடுத்தார்.


இந்தப் புத்தகத்தை அவர் எழுதிய சமயத்தில் என்னுடன் பேசும்போது "தயாஜி... அன்பை நம்மால இன்னொருத்தருக்கு கத்து கொடுக்க முடியுமா ?" என்று கேட்டார்
நான் அதிகம் யோசிக்காது "முடியாது!!!" என்றேன்.

அவர் சிரித்தபடி "ஆனா நம்மால ஒருத்தரை வெறுப்பேற்ற முடியும்தானே தயாஜி??" என்று கேட்கவும் எனக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை.

அதற்குத்தான் தான் ஒரு புத்தகத்தை எழுதுவதாக சொன்னார். இன்று அந்தப் புத்தகத்தை கையில் எடுத்ததும் அன்றைய உரையாடல் நினைவிற்கு வருகிறது.

டாக்டர் சண்முகசிவாவின் 'அன்பேற்றுதல்' புத்தகம் இனி நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையிலும் கிடைக்கும்.

நிகழ்ச்சி முடிந்து புறப்படும்போது மலேசிய எழுத்தாளர்களில் ஒருவரான ஸ்ரீகாந்தனும் நானும் சக எழுத்தாளரான அ.பாண்டியனோடு கொஞ்ச நேரம் செலவழித்தோம்.


இன்றைய நிகழ்ச்சியில் எனது பார்வையிலிருந்து ஒரு சிறு பகிர்வாக இதனை எழுதியிருக்கின்றேன். மற்றபடி இந்நிகழ்ச்சி குறித்தும் அதன் முன்னெடுப்புகள் குறித்தும் ஒவ்வொருவரும் எழுதுவார்கள் என நம்பலாம்.

வல்லினம் குழுவினர்க்கும் அவர்களின் இலக்கிய முன்னெடுப்புகளுக்கும் என் அன்பு.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


மே 20, 2026

- நானற்ற நானாக -

 நாடகத்திற்கு அழைத்திருந்தார்கள். துணை கதாப்பாத்திரமாக நாயகனுடன் சில காட்சிகளில் நடித்தேன்.

மயக்கத்தில் இருக்கும் நாயகனுக்கு மயக்கம் தெளிந்து குழப்பத்தில் ஆவேசமாக கத்த, மருத்துவரான நான் சென்று சமாதானம் செய்யும்படியான முதற்கட்ட படபிடிப்பு நடந்தது. மேற்கொண்டு காட்சிகளை இப்போதைக்கு பகிர முடியாது.


இதற்கு முன் நான் இணைந்து பணி செய்த நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.


படபிடிப்பு அனுபவங்கள் முன்னமே இருந்தாலும் ஒவ்வொரு முறையும் கேமரா முன்  இதுவரை இருந்த நான், இப்போது இன்னொரு ஆளாக நிற்பதில் எப்போதும் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


மே 18, 2026

அன்பும் நன்றியும்


'40+ என்ற wildcard entry'யோடு மீண்டும் இந்த வாழ்விற்குள் வருகின்றேன். இந்த வாழ்வை ரொம்பவும் நேசிக்கும் ஒரு மனிதனாகவே என்னை உணர்கிறேன். நான் உணர்வதையே எழுதவும் செய்கிறேன். 

பிறந்தநாள் வாழ்த்துகள் பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு என் நன்றியும் அன்பும்...

ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு காரணத்தில்  நாம் அனைவரும் இணைந்தே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். யார் யாரோடு எதுவரை இப்பயணம் தொடரும் என தெரியவில்லை. பலர் பாதியில் காணாமல் போகிறார்கள். பலர் எப்படியும் என்னை தேடி கண்டடைந்துவிடுகிறார்கள். அந்த மாயம் முழுதாய்ப் புலப்படுவதுமில்லை.

என் மீதான உங்கள் அன்பிற்கு எப்போதும் அன்பு. 
நீங்கள் அனைவரும் என் ஆசீர்வாதமே.
எப்போதும் மகிழ்ந்திருப்போம் 💙

#தயாஜி 
#பொம்மி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 
#புத்தகச்சிறகுகள்_வாசிப்பாளர்_குழு

மே 16, 2026

- பசிக்கும் வயிறுகள் -


அறிவிப்பின்றிய மழையில்
முழுதும்
நனைவதற்கு முன்
இறகில் ஈரம் ஏற்றிய
பாரத்தோடு
பசித்த வயிற்றுடன்

எம்பி எம்பி
எப்படியோ பறந்த
பட்டாம்பூச்சியொன்று

சுவரோரம் வந்து
ஈரம் காயவும்
மழை மறையவும்
காத்திருக்கிறது

எங்கிருந்தோ
வீசி வந்த
நாக்கொன்றின் நுனி பட்டு
பல்லியின் வாய்க்குள்
நுழைகிறது

ஈரம் காய
பல்லிக்கும் பொறுமையில்லை
ஈரம் காய
பட்டாம்பூச்சிக்கும் வாய்க்கவில்லை

வாசிப்பில்


" ....இது காதலின் பெருங்களிப்பு. காதல் என்பது விசித்திரமான மரம்தான். தழைத்து நிற்கும் போது தலைகீழாய் விழும். பச்சை மறந்து பட்டுப் போனதென்று நினைக்கும் போது காய்க்கத் தொடங்கும். வெட்டி முறித்தாலும் வெடித்துத் துளிர் விடும்.'
நாவலிலிருந்து......

இன்றைய இரவு கே.ஆர்.மீராவின் 'அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்' நாவலோடு விடியப்போகிறது. சிற்பி பாலசுப்பிரமணியம் இந்நாவலை தமிழாக்கம் செய்திருக்கிறார்.

நான் வாசிக்கும் கே.ஆர்.மீராவின் இரண்டாவது நாவல் இது. இந்நாவலின் முதல் பக்கமே எனக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியையும்  பதட்டத்தையும் அடுத்தடுத்த பக்கங்களில் சரி செய்ய முடியுமா என இன்னும் புலப்படவில்லை.

நாவலில் வரும் நாயகி ராதிகா, அவளைச் சுற்றியும் சுழன்று அவளை வதைக்கும் காதல், காமம், வன்முறை, தனிமை என்னும் பல சிக்கலான உணர்வுகளின் இருந்து அவள் தப்பிப்பாளா அல்லது அவளும் அதனோடு கரைந்துதான் போவாளா என்கிற பதட்டம் எனக்குமே தொற்றிக்கொண்டது....

மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் மே மாதத்தித்கான ஐந்தாவது நாவல் வாசிப்பு இது.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மே 14, 2026

- சுவாரஸ்யமான திருப்பம் -


சமீபத்தில் இலக்கியவாதி ஒருவரைச் சந்தித்தேன். முன்னமே கொடுத்திருந்த குறுங்கதைகளில் அவர் வாசித்திருந்த சில குறுங்கதைகளைப் பற்றி பேசலானார்.

தனக்கு இப்படி குட்டிகுட்டியாக வாசிப்பது பிடிக்கவில்லை என்றார். கதையைப் புரிந்து கொள்ளும் முன்பே கதை முடிந்துவிடுவதை ஒரு குறையாகவே சொன்னார். எழுத்தாளர்கள் இப்படி எழுத சோம்பல்பட்டு குறைவாக எழுதாமல் இன்னும் விலாவாரியாக எழுதினால்தான் என்ன என்றார்?

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஒரு முறை அவர் வாசித்த சிறுகதைத் தொகுப்பைப் பற்றி சொல்லும்போது, வாசிக்கறவங்களை யோசிக்க விடாம எல்லாத்தையுமே கதையில் சொல்லிடறாங்க. ஒரு வாசகனா எனக்கும் அதில் கொஞ்சம் உழைப்பும் தேடலும் இருக்க வேணாமா. இப்படி எழுத்தாளரே கதையை சொல்லிட்டு போய்ட்டா வாசகனா என்னோட வேலை சும்மா வாசிச்சிட்டு போறதுதானா? சொற்சிக்கனம்தான் கதைகளுக்கு முக்கியம் என்றார்.

சரி இன்னொரு முறை முயற்சிக்கலாமே என்று, உள்நாட்டு எழுத்தாளரின் புத்தகமொன்றை வாசிக்க கொடுத்தேன். 

இதெல்லாம் வேணாம் தம்பி, உள்நாட்டுல என்ன எழுதறாங்க எல்லோரும் ஒரே கதையைத்தான் சுத்தி சுத்தி எழுதறாங்க. அதனால நான் உள்நாட்டு புத்தகங்களை வாசிக்கறதில்ல என்றவர் சட்டென ஏதோ நினைவுக்கு வந்தவராய், "ஏன் தம்பி... இந்த விஜய் முதலமைச்சர் ஆகிட்டாருன்னா இனிமே படம் நடிக்க மாட்டாரா?" என்ற கேட்கவும் எனக்கு புரிந்தது மலேசிய இலக்கியச் சூழலில் பலரும் பாராட்டும் இலக்கியவாதியாக 
நூறு சதவீதம் பொருந்தகூடிய ஒருவராக அவர் மாறிகொண்டிருந்தார்.  

நிச்சயம் ஒருநாள் அவருக்கு விருது கொடுப்பார்கள்; ஊடகங்களில் அவரை பேட்டி எடுப்பார்கள், மலேசிய இலக்கியம் குறித்து பேச மேடை அமைத்து அழைப்பார்கள்  என்பதால் அவர் யார் என்பதை இப்போது நான் சொல்லவில்லை.

பிறகு நீங்களே தெரிந்து கொண்டு ஒரு முடிவுக்கு வாங்களேன். 

அடடே இதுவல்லவா இந்தப் பத்தியில் வந்த திருப்பம். சுவாரஸ்யமாக இருக்கிறதுதானே....

மே 09, 2026

- சமாதானம் செய்வேன் -

பேருந்தில் ஒருத்தி
அழுவதைக் கண்டேன்
இடது பக்க
கன்னத்தில் வழிந்த கண்ணீர்
கழுத்தில் இறங்கி
ஆடைக்குள்ளே மறைகிறது

எந்தத் தடையுமில்லாமல்
நீண்ட நதியாய்
வழியும்
கண்ணீரைக் கண்டதும்
எனக்கும் அழத் தோன்றியது

நான் அப்படித்தானே
யாராவது அழுதால்
நானுமே சேர்ந்து கொள்வேன்
பழகிவிட்டது

அழுவதில் நான்
அந்தப் பெண் போல
தேர்ச்சி பெற்றவன்
அல்ல போலும்

அழ தொடங்கிய
ஐந்தாவது வினாடியில்
மூக்கில் சளி உருவாகிவிடும்
மூக்கை உறிஞ்சியபடியே
அழுவேன்

என்
மூக்குறிஞ்ச சத்தத்தை
அந்தப் பெண்
கண்டுகொண்டாள்

என்னைத் திரும்பி பார்த்து
அவளது கண்ணீரைத்
துடைத்தபடி
"ஒன்னுமில்ல ஒன்னுமில்ல..."
என
மெல்லிய குரலில்
சொல்லியபடி
கொஞ்சமாய்ச் சிரிக்க முயன்றாள்

அழுத கண்கள்
இன்னுமே கலங்கியபடி இருக்க
எனக்காக சிரித்து
என்னை சமாதானம் செய்யும்
அவளை

நான் எப்படி
சமாதானம் செய்வேன்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்