பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

பிப்ரவரி 03, 2026

- பொம்மியுடன் 3வது தைப்பூசம் – (பகுதி 1)

 - பொம்மியுடன் 3வது தைப்பூசம் – (பகுதி 1) -

வழக்கம் போல இந்த ஆண்டும், பத்துமலை முருகனுக்கு எங்களின் நேர்த்திக்கடனை செலுத்திவிட்டோம்.

இவ்வாண்டு கூடுதலாக, வீட்டிற்கு அருகில் இருக்கும் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் காலையிலேயே பால் குடம் எடுக்கும் வாய்ப்பும் ஆசீர்வாதமும் கிடைத்தது.

தைப்பூசத்திற்கு சில நாட்களுக்கு முன்; மனைவிக்கு ஏதோ கனவு வந்ததாய்ச் சொல்லி பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு அழைத்தார். மறுத்தால் வீட்டிலேயே சாமி ஆடுவார் என்பதால் ஆடுகிற சாமி  கோவிலிலேயே ஆடட்டும் அப்போதுதான்  எனக்கு அடி விழாது என்று நினைத்தபடி சம்மதித்தேன்.

அதற்கிடையில் பத்துமலைக்கு எப்போது பால் குடம் எடுக்கலாம் என்கிற யோசனையே எங்களுக்கு இருந்தது. ஒரு வாரமாகவே நேர்த்திக்கடனைச் செலுத்த தொடங்கியிருந்தார்கள்.

 இங்கு எங்களுக்கு பெரிய குடும்பம் இல்லை. நான் இல்லாள் பொம்மி என மூன்றுபேர்நான். மற்றவர்கள் எல்லாம் ஆளுக்கு ஓர் இடத்தில் இருக்கிறார்கள். எனக்கு பிடித்தபடி பெரிய கூட்டமாய்க் குடும்பமாய்ச் செல்லும் வாய்ப்பு எளிதல் எனக்கு கிடைத்ததில்லை.  சில நண்பர்கள் பத்துமலைக்கு செல்லும் நேரத்தை கேட்டோம். எப்படியும் வாகன நெரிசலில் மாட்டி யாருமே சரியான நேரத்தில் சரியான இடத்தில் சந்திக்க முடியாது. ஒருவேளை ஒரே வாகனத்தில் அல்லது ஒரே பொது இரயிலிலோ போனால் சாத்தியப்படலாம்.

கடைசியாக தைப்பூச நாளிலேயே காலையில் போகலாம் என்று முடிவானது.

அதற்கு முன் சிவன் கோவிலுக்கு செல்லும் சூழல் வந்தது. இன்னும் இரண்டு நாட்களில் தைப்பூசம் என்பதால் சிவன் கோவிலிலும் தன் சுப்பனுக்காய்ப் பல ஏற்பாடுகளை அப்பன் செய்திருந்தார்.

கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்துவிட்டு மீனாட்சி சொக்கநாதரைச் சுற்றிக்கொண்டிருந்தோம். சட்டென எங்கள் பின்னால் இரு வயதான பாட்டிகள் பேசிக்கொண்டார்கள். “தைப்பூசத்திற்கு பத்துமலைக்கு போகலையா..?” என ஒருவர் கேட்க, “போகனும்னு ஆசைதான்.. அதான் முருகன் இங்கயே பால ஊத்திக்கோ எதுக்கு மலையேறி கஷ்டப்படறன்னு கேட்கறானே…” என சொல்லவும். “இல்லாட்டையும் மலையேறிதான் நீ பாலு ஊத்துவ பாரு…” என்றது இருவரும் சிரிக்கலானார்கள். அச்சிரிப்பு எனக்குமே தொற்றிக்கொண்டதால் அதன் ரிஷிமூலத்தைப் பார்க்க திரும்பினேன்.

அதில் ஒரு பாட்டி என்னிடம் “பாருங்க தம்பி… இவங்களுக்கு குமரின்னு நினைப்பு… என்னைய சொல்றாங்க.. தைப்பூசத்துக்கு இங்கயே பால் குடம் எடுக்கலாம்னு சொல்ல வந்தா… இந்த கிழவிக்கு வாய பார்த்தீங்களா…” என்றார்.

நானும் என்னையறியாமல் அந்தப் பாட்டியின் வாயைப் பார்க்கவும் எங்கள் சுற்று மூலஸ்தானத்தை அடையவும் சரியாக இருந்தது.  ஐயர் அங்கு நிற்கும் ஒருவருக்கு அர்ச்சனை செய்து  தீபாராதணை காட்டவும் நாங்களும் தீபத்தைத் தொட்டு நெற்றியில் வைத்து கொண்டோம். பொம்மியைத் தூக்கி கொண்டேன். அவளுக்கு தீபத்தைத் தொட்டு நெற்றியில் வைத்தேன். ஐயரை பொம்மிக்கு விபூதி வைக்கச் சொன்னேன்.

விபூதி வைத்தவர்; “தைப்பூசத்துக்கு காலையிலேயே வந்துடு முருகா.. இங்கயே பால்குடம் எடுக்கலாம்..” என்றபடி சிரித்து கொண்டே திரும்பினார்.

நானும் தலையாட்டியபடி சிரித்து கொண்டே தூணுக்கு கீழ் இல்லாளுடன் அமர்ந்தேன். அங்குள்ள அறிவிப்பு பலகையில் தைப்பூசம் அன்று காலை 8மணிக்கு பால் குடம் எடுப்பது குறித்து எழுதியிருந்தார்கள்.

கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு, புறப்பட ஆயுத்தமானோம். கோவில் வாசலுக்கு வந்த இல்லாள் மீண்டும் என்னையும் பொம்மியையும் அழைத்துக்கொண்டு அர்ச்சனை கவுண்டருக்கு சென்றார்.

பால்குடம் எடுப்பது குறித்தும் அர்ச்சனை சீட்டு குறித்து மேலும் சிலவற்றை கேட்டு தெரிந்து கொண்டார். பின் நாங்கள் எங்கள் காருக்கு வந்தோம். “தைப்பூச காலையில் பொம்மியை இங்கயே பால்குடம் எடுக்க வைக்கலாமா…?” என்று கேட்டார். அதில் மறுப்பதற்கு ஏதுமில்லாததால் சரியென்றேன்.



       இரவே எங்களின் நேர்த்திக்கடனுக்கு வாங்க வேண்டியதை வாங்கினோம். முருகன் படமும் தமிழ் எழுத்தும் உள்ள சட்டை மீது ஆசை வந்தது. எனக்கும் பொம்மிக்கு வாங்கினேன். மற்ற பூஜைக்கானவற்றை மனைவி வாங்கி வைத்து கொண்டார். பொம்மிக்கு மூடி உள்ள சிறிய குடத்தை வாங்கினோம். எனக்கும் ஒரு குடத்தை மனைவி வாங்கலாமே என்றார். இதுநாள்வரையில் வீட்டில் இருப்பது குடம் அல்ல சொம்பு என எப்போதோ நான் அடித்த ஜோக்குக்கு இன்று இருபது வெள்ளி குடமாக பதில் கொடுத்தார் இல்லாள்.

பத்துமலைக்குச் செல்வதற்கு முன்பாக மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்திலேயே நாமும் பால்குடம் எடுத்துவிடலாம் என பேசிக்கொண்டோம். அதற்கு ஏற்றபடியும் சிலவற்றை அங்கேயே வாங்கினோம்.

நான் எப்போதும் பால் குடம்தான் எடுக்கிறேன். பெரும்பாலும் அதனை மாற்றியதில்லை. இல்லாள் இம்முறை கரும்பு சாறு கொண்ட குடம் எடுப்பதாகவும். பொம்மிக்கு பஞ்சாமிருதத்தை கொடுத்துவிடலாம் என்றார்.

இன்று தைப்பூசம். காலையிலேயே எழுந்துவிட்ட பொம்மி, இல்லாளின் உதவியுடன் அவள் செலுத்த வேண்டிய பஞ்சாமிருத்தை அவளே தயார் செய்தாள். அவளது பிஞ்சு கைகளிலேயே முடிந்த மட்டில் கொடுப்பதை பிசைந்து கொண்டிருந்தாள். குடும்பமாய்க் கோவிலுக்கு உற்சாகத்துடன் சென்றோம். பால் குடம் எடுக்கவுள்ளவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து குடங்களை வரிசையாய் வைத்தார்கள்.

ஐயரின் பூஜைக்கு பின், யாரோ ஒருவரின் "வேல்...வேல்" சத்தத்திற்கு நாங்களும் ஒருசேர கோஷமிட்டபடி கோவிலைச் சுற்றினோம். சிறிய கோவில் என்பதால் சீக்கிரமே பால் குடங்களுடன் முருனிடம் நெருங்கினோம். எங்களின் நேர்த்திக்கடனை இவ்வளவு நெருக்கத்தில் இதுவரை செலுத்தியதில்லை.

தடுக்கி விழுந்தால் முருகன் மேல்தான் விழுவேன் என்கிற நெருக்கம். ஆனால் தன் குழந்தையை விழ வைப்பானா முருகன்? விழாமலேயே நம்மை தாங்கியல்லவா பிடித்துக்கொள்வான் கந்தன்.

சில அடி முன்னே எங்களில் பாலில் குமரன் குழந்தையென குதூகலத்தில் குளித்து  கொண்டிருந்தான். இல்லாளின் கரும்பு குடத்தையும் பொம்மையின் பஞ்சாமிருத குடத்தையும் அடுத்த அபிஷேகத்துக்கு பயனடுத்திக் கொள்வதற்காக கேட்டு வாங்கி கொண்டனர்.

பால் ஊற்றி முடிந்ததும் முருகனுக்கு அபிஷேகமும் தொடங்கியது, கரும்பு தண்ணியும் பஞ்சாமிருதமும் முருகனின் மேனியெங்கும் பட்டு வழிந்தது. கொஞ்சமாய்ப் பஞ்சாமிருதத்தை எடுத்து பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு கொடுத்தார்கள்.

பொம்மி தன் கையால் முதன் முதலில் செய்த பஞ்சாமிருதம் அங்கு வந்த எல்லோர் கைகளுக்கும் போனது.

சிறிய கோவில்தான் சீக்கிரமே நேர்த்திக்கடனை செலுத்திவிட்டோம். ஆனால் உடலில் சொல்ல முடியாத அசதி. சோர்ந்து போய், உடலில் இருந்து பெரிய பாரம் குறைந்தது போல நாங்கள் மட்டுமல்ல அங்கு வந்திருந்த பெரும்பாலானவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

முருகனுக்கு அபிஷேகம் செய்தி விபூதியைக் கொண்டு வந்து வைத்தார்கள். அதனைத் தொட்டதும் உடலில் புது தெம்பு வந்தது. நெற்றி நிறைய பூசிக்கொண்டோம். காலை உணவும் அங்கு தயாராகி கொண்டிருந்தது. இல்லாளையும் பொம்மியையும் அங்கு சென்று காத்திருக்கச் சொல்லிவிட்டு பால்குடத்திற்கான அர்ச்சனையை வாங்கி கொள்ள வரிசையில் நின்றேன். ஒருவர் பின் ஒருவராக அவரவருக்குரியதைப் பெற்றுக்கொண்டோம்.

பிறகு நாங்கள் சாப்பிட்டோம். சிறிய கோவில் என்றாலும் நேர்த்தியாக ஒவ்வொன்றும் நடந்தது. மனதிற்கு நிறைவான தைப்பூசமாகத் தோன்றியது.

சரிதான் அதான் இங்கு பால் ஊற்றிவிட்டோமே பத்துமலைக்கும் போய்ப் பால் ஊற்றனுமா என்ற சிந்தனை வரத்தொடங்கியது.


ஆனால் முருகனின் அழைப்பு வேறுமாதிரி இருந்தது; அதுவும் அவன் அருளிய பொம்மியின் மூலமே பத்துமலைக்கு வர வைத்தான் பால் ஊற்ற வைத்தான் அதிசயங்களை நடத்தினான்.

நம் கந்தனின் அந்தத் திருவிளையாடலை அடுத்த பதிவில் சொல்லவா?


தொடரும்........

ஜனவரி 18, 2026

வாசிப்பில் - ஜனவரி 18


இன்றைய வாசிப்பில்,
கவிக்கோ அப்துல் ரகுமானின் 'பால்வீதி' கவிதைகள்.

-தாகம்-

வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே !
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்...

- கவிக்கோ அப்துல் ரகுமான்

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜனவரி 16, 2026

- ஒழுகிய அன்பு -


எதார்த்தமாக சிலர் பார்த்துவிடுகிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லாமலிருந்தால் அருகில் வந்து நலம் விசாரிக்கிறார்கள். அடுத்த கேள்வியாக 'என்ன வேலை செய்றிங்க..?' என்ற கேள்வி வந்து விழுகிறது.

அவர்களிடமும் வேலை கேட்டிருக்கிறேன். விபரங்களை வாங்கி கொண்டு எனக்கு பதில் சொல்வதாகச் சொன்ன அவர்கள் மறந்திருக்கலாம். நான் மறக்க முடியாதே.

நான் திரும்ப கேட்டிருக்கலாம்தான். "ஏன் தொந்தரவு செய்றீங்க. வேலை இருந்தா நாங்களே சொல்லமாட்டோமா? எங்க வேலைக்கே இவ்வளவு பிரச்சனை இருக்கு.. நீங்க வேற..." என யாரும் உங்களிடம் கேட்டிருந்தால் என் தயக்கம் உங்களுக்கும் புரியும்.

நமக்கு வேலை இல்லை என்பதுதான் பிரச்சனை. அவ்வளவுதான். ஆனால் அவர்களுக்கு செய்கிற வேலையிலேயே ஆயிரம் பிரச்சனைகள். அவர்கள் ரொம்பவும் பாவம்தான் இல்லையா?

மனதில் இவையெல்லாம் ஓடினாலும், கொஞ்சமாய்ப் புன்னகித்து எல்லாவற்றையும் மறைத்தபடி, 'வழக்கம் போலவே இப்போதும் புத்தகங்கள் விற்பதாக' சொல்கிறேன்.

"ஓ இன்னும் புக்குதான் விக்கறீங்களா..." என்றபடி ரொம்பவும் அன்பொழுக சிரித்தபடி கடந்துவிடுகிறார்கள்.

அவர்கள் சிரிப்பிலிருந்து ஒழுகிய அன்பு என் கண்ணெதிரிலேயே சாலையோற சாக்கடையில் கலக்கிறது.

நமக்கு உதவுவதாகக் கூறிய பலரிடமிருந்து ஒழுகிய அன்பு எல்லாமே அங்குதான் வந்து சேர்கிறது போல.

சாக்கடைகள் அடைத்துக்கொள்வதற்கு குப்பைகள்தான் காரணம் என நினைத்து கொண்டிருந்தேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்....

- படரட்டும் ஒளி -


சாப்பாட்டுக்கடையில் வேலை செய்கிறவர்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை. சிலருக்கு சரியாக சாப்பாடே கிடைப்பதுமில்லை.

ஆனால் அவர்கள் சாப்பாடுகள் சூழ இயங்கி கொண்டிருப்பார்கள். வருகிறவர்களுக்கு தட்டு நிறைய போட்டு வயிறு நிறைய சாப்பிட வைப்பார்கள்.

ஏறக்குறைய எனக்கும் அப்படித்தான் 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை' என இணைய புத்தக அங்காடியைப் பல ஆண்டுகளாக நடத்தி வந்தாலும், அவ்வளவு எளிதாக எனக்கு தேவைப்படும் புத்தகங்களை நானே பணம் செலித்தி வாங்கி வாசிக்க முடிவதில்லை.

எனக்கு பிடித்த ஒரு புத்தகம் வாங்கி வாசிக்க குறைந்தது ஐந்து புத்தகங்களில் இருந்து ஏழெட்டு புத்தகங்களையாவது உங்களிடம் நான் விற்க வேண்டும்.

அதிலும் புத்தகங்கள் விற்று கிடைக்கும் வருவாயில் குடும்ப செலவுகள் முதல், கடன்களைக் கட்டுதல் வரை முதற்கட்டமாக ஒதுக்கி வைக்க வேண்டும். சில சமயத்தில் கையைக் கடிக்கும் சில சமயத்தில் கழுத்தை நெறிக்கும்; ஆனாலும் எப்படியாவது உயிர் வாழ வேண்டும். ஏனெனில் இந்த உயிரை நம்பி இன்னும் சில உயிர்கள் இருக்கிறார்கள்.

சரி வேறெதும் வேலைக்கு போகலாம் என்றாலும் அதிக நேரம் நிற்கவும் முடியாமல் அதிக நேரம் உட்காரவும் முடியாமல் உடலில் சில சிக்கல்கள் வந்துவிட்டன. அடிக்கடிவரும் தலைவலியால் அவதிக்கு ஆளாகிறேன். 30 வயதுவரை சளித்தொல்லையைத் தவிர உடலில் சொல்லிக்கொள்ளும்படி வேறெந்த சிக்கலும் எனக்கில்லை. ஆக நான் நன்றாகத்தான் இருந்தேன்.

அதன் பின் ஏற்பட்ட விபத்தொன்றில் (அது விபத்துதானா என்ற கேள்வியை இயற்கையிடம் விட்டுவிட்டேன்; என்னால் வேறென்ன செய்ய முடியும்) தலையில் பட்ட அடியால் வந்த வினைதான் எல்லாம்.

ஒரு முறை தலையில் பலமாய் நீங்கள் அடி வாங்கிவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். நண்பர்களே இனி உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
எண்சாண் உடம்பிற்கு மட்டுமல்ல, நாம் எத்தனை சாண்களாக வளர்ந்திருந்தாலும் நமக்கெல்லாம் நம் சிரசுதான் பிரதானம். ஆகவே அதில் கவனம்.

புத்தகங்களை விற்பதை நான் ஆத்மார்த்தமான ஒன்றாக நினைக்கிறேன். அதனால்தான் நீங்கள் புத்தகங்களைப் பற்றி கேட்கிற போதெல்லாம் அதிகப்படியாகவே புத்தகத்தைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

புத்தகங்களை உங்கள் தலையில் கட்டுவதற்குத்தான் இப்படியெல்லாம் பேசுகிறேன் என நீங்கள் நினைப்பது கூட எனக்கு நன்றாக தெரியும்.

 ஆனால் என்ன செய்ய, இந்தப் புத்தகத்தை நீங்கள் தவறவிடக்கூடாது என்கிற வாசக மனம் அந்த நேரத்தில் உற்சாகமாகிவிடுகிறது. அதிலும் பெரும்பாலும் அவை நான் வாசித்த புத்தகமாக இருந்தால் சொல்லவே வேண்டாம்.

நான் புத்தக விற்பனையாளன் என்பதையும் மறந்து சில புத்தகங்களை இலவசமாகவே கொடுத்தும் விடுகிறேன். ஏனெனில் ஒரு புத்தகத்தை வாசிக்கின்ற வாசகனுக்குத்தான் தெரியும் இந்தப் புத்தகம் இன்னொரு வாசகனுக்கு எவ்வளவு முக்கியம் என்று.

நான் இன்னொரு வேலையில் சம்பளம் வாங்கிகொண்டு பகுதிநேரமாக புத்தகங்களை விற்கவில்லை. என் முழு நேர தொழிலே புத்தகம் விற்பதுதான். அதில்தான் உங்களிடமிருந்து நான் சம்பளமும் வாங்குகின்றேன்.

நமது 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை'யில் புத்தக விரும்பிகளுக்காக மேலும் சில
திட்டங்களைத் தயார் செய்கிறேன் அதற்கு ஒரு முன்னுரையாகவோ உங்களுக்கு நான் சொல்லும் நன்றியாகவே இந்தப் பதிவை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஏனெனில் நீங்கள் யாரும் இல்லையென்றால் எனக்கு ஒரு புத்தகத்தைக் கூட வாசிக்கவோ அது குறித்து எழுதவோ பேசவோ சாத்தியம் இருக்காது.

ஒரு மனிதன் அவன் ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஒன்றைத் தடையின்றியும் தயங்காதும் அவனைச் செய்ய வைப்பது அவ்வளவு எளிதல்ல. இயற்கை அப்படியொரு வாய்ப்பை என் குடும்பத்தின் மூலமாகவுன் உங்கள் மூலமாகவும் எனக்கு கொடுத்திருப்பதாகப் பார்க்கிறேன்.

அதற்கான காரண காரியம் அந்த இயற்கைக்குத்தான் வெளிச்சம் என்றாலும் அந்த வெளிச்சம் நாம் எல்லோருக்கும் வழி காட்டட்டும்.

அந்த ஒளி எங்கெங்கும் பரவட்டும்.

உங்கள் அனைவருக்கும் எப்போதும் எங்கள் அன்பு....

ஜனவரி 11, 2026

வாசிப்பில் - ஜனவரி 11


'பிரியத்தோடு
தந்த
விஷத்திலும்
இல்லாமல்
போகவில்லை

கொஞ்சம்
பிரியம்'
- மனுஷ்ய புத்திரன்.

இன்றைய வாசிப்பில், மனுஷ்ய புத்திரனின் 'மையல்'.
கவிதைகளைத் தேர்வு செய்ததோடு தனது அழகான கையெழுத்தில் அதனை எழுதியிருக்கிறார் பரிசல் கிருஷ்ணா.

கையெழுத்துகளில் ஒவ்வொரு கவிதைகளையும் வாசிக்கும் போது, ஒரு கவிதைப் புத்தகத்தை வாசிப்பது போல அல்லாமல் டைரி குறிப்புகளை வாசிப்பது போன்ற உணர்வையும் நெருக்கத்தையும் கொடுக்கின்றது.



தொடர்ந்து வாசிக்க... வாசிக்க... யாரோ எழுதிய டைரியாய்த் தெரிந்தது எல்லாம் நமக்கு நாமே சில தருணங்களில் எழுதிய கவிதைகளாகவும், இன்னும் சில தருணங்களில் நாம் எழுதத் தவறிய கவிதைகளாகவும் இவை அமைந்துவிடுகின்றன.

உங்களுக்கு மனுஷ்ய புத்திரனைப் பிடிக்குமா? என கேட்டு இந்தப் புத்தகத்தை பரிந்துரைக்காமல்; உங்களுக்கு கவிதைகள் பிடிக்குமா என கேட்டு இந்தப் புத்தகத்தை உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன். இரு கேள்விகளுக்கும் ஒரே அர்த்தம்தான் என்பது கவிதை விரும்பிகளுக்குத் தெரியும்.


ஜனவரி 08, 2026

வாசிப்பில் - ஜனவரி 8



நண்பருக்காக காந்திருந்த போது வாசித்து முடித்த புத்தகம். முன்னமே சில பக்கங்கள் வாசித்திருந்தாலும் இன்று கிடைத்த நேரத்தை; இந்தப் புத்தகத்தை வாசிக்க பயன்படுத்தி கொண்டேன்.

கவிஞர் நரனின் 'மிளகு பருத்தி மற்றும் யானைகள்' கவிதைத் தொகுப்பு. இந்த வாசிப்பு அனுபவத்தை விரிவாகவே எழுதவேண்டும். எழுதியதும் பகிர்கிறேன்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜனவரி 03, 2026

- மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் 1 -

நடுகல்.காம் மின்னிதழில் நான் எழுதும் 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடரின் 13வது புத்தகம்,
ம.நவீன் எழுதிய 'மலேசிய நாவல்கள்;தொகுதி 1' குறித்த எனது அறிமுகமும் வாசிப்பனுபவமும்.

வாய்ப்புள்ள நண்பர்கள் வாசித்து சொல்வதோடு, அடுத்து எழுத வேண்டிய மலேசிய எழுத்தாளரையும் அவரது புத்தகத்தையும் எனக்கி பரிந்துரைக்கவும்..

மாதம் ஒரு மலேசிய புத்தகம் 13 – ‘மலேசிய நாவல்கள்’ தொகுதி 1 - Nadukal https://share.google/ylwtrpDzHLzHlBoNa

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்