பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 4)
பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 4)
கந்தனின் கருணை; மேகங்களின் நிழலைக் கொடுக்க நாங்கள் பத்துமலை முருகன் ஆலய வாசலில் நுழைந்தோம்.
உள்ளே கூட்டமாக இருந்தது. இதுவென்ன கூட்டம்! இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்நிலம் முழுக்க மஞ்சள் அலங்கரிக்கும் என எங்களுக்கு தெரிந்தது. நாங்கள் செல்லும் வழியில் முடி காணிக்கை கொடுக்கும் இடம் இருந்தது. அங்கு ஒருவர் ஒலிபெருக்கியைக் கையில் வைத்து கொண்டு முடிகாணிக்கை செய்யவேண்டியவர்களை அழைத்து கொண்டிருந்தார்.
பொம்மியைத் தூக்கி வைத்துக் கொண்டு அந்த வழியே நடந்து போகும்போது; அந்த நபர் எங்களைப் பார்த்தார். பொம்மியும் அவரைப் பார்த்து கையை ஆட்டினாள். உடனே அவர் ஒலிபெருக்கியில் “என்ன பாப்பா…. அப்பாக்கு முடி காணிக்கை கொடுத்திடுவோமா ?” என்றார். அவர் ஏன் சம்பந்தமே இல்லாமல் என்னை இழுக்கிறார் என தெரியவில்லை. ஆனால் அதற்கு ஏற்றார் போல என் பரட்டை முடியை பொம்மி அவளின் இரு கைகளாலும் பிடித்து இழுக்கத் தொடங்கினாள்.
நான் அங்கேயே நின்றுவிட்டேன். இல்லாளை திரும்பி பார்த்தேன். “என்ன.. முடி காணிக்கையா…?” என்றார்.
“இல்ல.. அது….”
“அதான் தெரியிதே… வாங்க போய்ட்டு முடி காணிக்கை கொடுத்துட்டு வருவோம்…. இல்லைன்னா உங்க முருகன் கோவிச்சிக்கக் போறாரு… ” என்றபடி அவர் முன்னே நடக்க, நானும் பொம்மியும் அவர் பின்னே நடந்து முடிகாணிக்கை கொடுக்கும் இடத்தை அடைந்தோம்.
எனக்கு முடிகாணிக்கை கொடுப்பது வேண்டுதல் அல்ல. ஆனால் அது எப்படியோ அமைந்துவிடும். எந்த திட்டமிடலும் இல்லாமல் அதற்கு ஏற்ற ஏற்பாடுகளும் இல்லாமல் போட்டிருந்த ஆடையுடனேயே பலமுறை முடிகாணிக்கை கொடுத்திருக்கிறேன். எனக்கு நினைவு தெரிந்து முருகனுக்கு முடிகாணிக்கை கொடுக்க ஆரம்பித்ததே ஒரு சுவாரஸ்யமான கதைதான். அங்கிருந்துதான் முடிகாணிக்கை கொடுக்கும் பழக்கமே அதன் வழக்கத்திற்கு வந்தது. ஒருநாள் அதைப்பற்றியும் எழுதுகிறேன். எழுதுவதற்குத்தானே நானிங்கு இருக்கிறேன்.
முடிகாணிக்கைக்கு சீட்டு வாங்கும் போது முடிக்கும் முகத்திற்கும் சேர்த்து இருபத்து ஐந்து வெள்ளி என்றார். முகத்தை ஒன்னும் செய்ய வேண்டாம் தலையில் மட்டும் கத்தி வைங்க என்றேன். அங்குள்ளவரும் சிரித்தபடி தலை முடிக்கு மட்டும் இருபது வெள்ளிக்கான சீட்டைக் கொடுத்தார். வழக்கமாக கடையில்தான் அமர வைப்பார்கள். இம்முறை அதிக ஆட்கள் இருந்ததால் கடைக்கு வெளியிலும் பத்து நாற்காலிகள் வரை போட்டிருந்தார்கள். நாற்காலி முழுக்க பக்தர்கள் முடிகாணிக்கைக் கொடுத்தபடி இருந்தார்கள்.
ஒரு நாற்காலி காலியானதும் நானும் அங்கு சென்று காலியிடத்தை பூர்த்தி செய்தேன். கடை பணியாளர் தலைமுடியைச் சரிக்க சரிக்க பொம்மி கண்கள் விரிந்த நிலையில் பார்த்து கொண்டிருந்தாள். இனி அவள் கோவப்படும்போதும் உற்சாகமாய் விளையாடும் போது பிடித்து இழுக்க தலையில் முடி இருக்காது என்பது அவளுக்கு கஷ்டம்தான் இல்லையா?.
கொஞ்ச நேரத்தில் பொம்மி அப்பாவை இரசிக்க அரம்பித்துவிட்டாள். தலை மொட்டையானதும் கடைக்குள்ளே சென்று தலையை கழுவினேன். அங்கு ஒரு அம்மா இருப்பார். ஒவ்வொருவரின் தலைக்கும் தண்ணீரை ஊற்றி ஆங்காங்கே ஒட்டிக்கிடக்கும் முடியையும் சுத்தம் செய்து அனுப்புவார். கழுவிய பின் அங்கிருந்த சந்தனத்தை தலையில் அப்படியே அப்பிக்கொண்டேன்.
எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த பொம்மி; வழக்கம் போல தூக்கச்சொல்லி கேட்டாள். அவளுக்கு அப்பாவின் மொட்டைத்தலையில் பக்கத்தில் பார்க்க வேண்டும் அவ்வளவுதான். தூக்கினேன். தோளில் சாய்ந்தவள் சட்டென மண்டையில் ஓர் அடி அடித்தாள். காயாத சந்தனம் அவள் முகத்திலும் தெரித்தது. அவள் கையை அப்படியே எடுத்து என் முகத்தில் தேய்த்தாள். நாங்கள் சிரித்து கொண்டோம்.
பிறகு அங்கிருந்து பத்துமலை படிக்கு அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு வந்தோம். சிலர் ஆற்றங்கரைக்குச் சென்று அங்கிருந்து தங்களுடைய நேர்த்திகடனை கொண்டுவருவார்கள். சிலர் இந்த விநாயகர் ஆலயத்தில் இருந்தே அவர்களின் நேர்த்திக்கடனை எடுத்துச் செல்வார்கள். நாங்களும் இங்கிருந்துதான் எங்கள் நேர்த்திகடனை எடுப்போம்.
வெளியிலும் உள்ளேயும் கூட்டமாக இருந்தது. எப்படியோ கோவிலுக்குள்ளே நுழைந்தோம். உள்ளே பால்குடங்களை தயார் செய்வதற்கு ஏற்றபடி மேஜையை வைத்திருந்தார்கள். நாங்கள் அங்கு செல்லவும் எங்களுக்கான இடம் காலியாவதும் சரியாக இருந்தது. எங்களின் குடங்களை மேஜையில் வைத்தோம்.
இல்லாள் அவரது ‘தூக்குச் செம்பில்’ பன்னீரை ஊற்றினார். பொம்மியின் தூக்குச் செம்பில் ஏற்கனவே விபூதி இருந்தது. எனது குடத்தில் அரிசி மாவை போட்டு வைத்திருந்தார். இப்போது கொண்டு வந்திருந்த தண்ணீரை குடம் நிரம்ப ஊற்றினார்.
கோவில் கருவறைக்கு சென்று விபூதி பூச முடியாதபடிக்கு கூட்டமாக இருந்தது. ஆனால் எங்கள் மேஜை முழுக்க விபூதி , சந்தனம் , குங்குமம் என பாக்கெட்டுகளிலும் கிண்ணங்களிலும் இருந்தன. அதையே எங்கள் குடங்களுக்கு பூசி எங்களுக்கும் பூசிக்கொண்டோம்.
எங்கள் காலுக்கு கீழேயே சிலர் நேர்த்தி கடன்களை முடித்த அசதியில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு தொல்லை கொடுக்காதபடி நாங்களும் எங்கள் வேலைகளைச் செய்துகொண்டிருந்தோம். அதில் ஒருவர் கீழே நின்றிருந்த பொம்மியைப் பார்த்து அவளது காலைத் தொண்டு வணங்கினார். அதற்கு ஏற்றார்ப்போல பொம்மியும் அவள் குடத்தில் இருந்த விபூதியைத் தொட்டு அவருக்கு வைத்தாள்.
இதனைப் பார்த்த எனக்கே உடல் சிலிர்த்தது. யாரின் கண்களுக்கு, யார் யாராக தெரிய வேண்டும் என்பது நம் கையிலா இருக்கிறது. எல்லாமே கந்தனின் ஏற்பாடுதானே.
இப்போது நாங்கள் மூவரும் பத்துமலை படி முன் நிற்கின்றோம். பொம்மியைத் தூக்கி வைத்தபடி குனிந்து படியைத் தொட்டு வணங்கினோம். பொம்மியும் கீழே இறங்கி படியேற்றப்போவதாகச் சொல்கிறாள். நானும் இல்லாளும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டோம்.
“நடக்க வைப்போம்.. ரெண்டு மூனு படி ஏறினதும் கால் வலிக்க ஆரம்பிச்சிடும்.. அப்பறம் தூக்கிக்கலாம்..” என்றேன்.
என் ஒரு கையில் குடமும் மறு கையில் பொம்மியையும் பிடித்திருந்தேன். பொம்மியின் கையில் அவளுடைய தூக்குச் செம்பும் இல்லாளில் கையில் அவரது தூக்குச் செம்பும் இருந்தன.
மீண்டும் ஒருமுறை பொம்மியுடன் படியைத் தொட்டு வணங்கி எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். நான் கையைப் பிடித்திருந்தாலும் பொம்மிதான் முதலடியை எடுத்து வைத்தாள்.
நான் தான் அவள் கையைப் பிடித்திருக்கிறேன் ஏன நினைத்தேன். அடுத்த நொடியே எங்கள் மூவரின் கைகளையுமே அந்தப் பத்துமலையான்தான் பிடித்திருப்பதாய்க் காட்டினான்.
உண்மையில் அது ஓர் அற்புதம்தான். யாருக்கு தெரியுமோ இல்லையோ முருகனின் பக்தர்களுக்கு அது நிச்சயம் தெரியும்.
பக்தர்களிடம் விளையாட்டு காட்டும் விளையாட்டு பிள்ளையும் அவன்தான்; பக்தர்களின் விளையாட்டு வினையாகும் போது நம்மைத் தாங்கிப்பிடிக்கும் அன்னையும் அவன்தானே.
படியேறும் எங்களுக்கு அந்தப் பத்துமலையான் அன்னையாக மாறிய கதை உங்களுகும் தெரிய வேண்டுமே.
கந்தனின் அந்தத் திருவிளையாடலை அடுத்த பதிவில் சொல்லவா…?


