பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஜூலை 09, 2026

- கவிழும் ஸ்பைடர் மேன்கள் -


வேலையில் மனஉளைச்சல் அதுவும் காலையில். வேலையே இல்லாமல் இருக்கும் போது வந்த மனஉளைச்சலைவிடவும் இந்த உளைச்சல் உயரமாகத் தெரியவில்லை.

காலையிலேயே முதல் ஆடர். கஸ்டமருக்கு பிறந்தநாள் அணிச்சலைக் கொடுக்க வேண்டும். வீட்டிலேயே அணிச்சலைச் செய்து விற்பனை செய்யும் பெண்ணொருவர் வாகனத்தை புக் செய்திருந்தார்.

கார் அவரது வீட்டு வாசலில் நின்றது. வீட்டு எண்ணை ஒருமுறை சரி பார்த்து கொண்டேன். புக் செய்த நபருக்கு அழைத்து நான் வந்துவிட்டதாகச் சொன்னேன்.

கதவு திறந்தது. கை மட்டும் முதலில் தெரிந்தது. கொஞ்சம் காத்திருக்கும்படி செய்கையைச் செய்தார். அதிகம் நேரம் எடுக்காமல் பெட்டி ஒன்றை எடுத்து கொண்டு வந்தார்.

"கார்ல ஏர்கோன் இருக்கா...?" என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருந்தது.

என் காரில் ஏர்கோன் இருக்கிறது உங்கள் கையில் என்ன இருக்கிறது என்றேன். சிரித்தபடி கஸ்டமருக்கு அணிச்சலை அனுப்ப வேண்டும் என்றார். இங்கிருந்து ஏறக்குறைய ஒரு மணிநேரம் வரை ஆகும். கடந்த முறை இப்படி அணிச்சலை அனுப்பும் போது சூட்டால் சில இடங்களில் உருகி விட்டதாகவும் இன்னொரு முறை அனுப்பிய அணிச்சல் கொஞ்சம் சேதமாகியும் கஸ்டமருக்கு கிடைத்ததைக் குறித்து பேசினார்.

தெரிந்தோ தெரியாமலோ டெலிவரி செய்கிறவர்களுக்கும் அவரது இந்தச் சிறு தொழிலுக்கு பாட்னர் போல ஆகிவிட்டார்கள். அழகாய்ச் செய்த அணிச்சல் அதற்குரியவர்களிடம் சென்று சேர்ப்பதும் பெரிய வேலைதானே என்றார்.

பெட்டியை வாங்கி, கோ டிரைவர் சீட்டில் வைத்து விட்டு, காரில் ஏர்கோன் வசதி இருப்பதை மீண்டும் ஒரு முறை அவரிடம் சொல்லிவிட்டு சிரித்தேன்.

அவரும் சிரித்தபடி ஐந்து ரிங்கிட்டை எடுத்து கொடுத்தார். நான் கைபேசியை எடுத்துப் பார்த்தேன். அப்லிக்கேஷ்னில் அவர் பணம் செலுத்தியுள்ளதாகக் காட்டியது. பெட்டியைச் சேர்த்ததும் எனக்கு அந்தப் பணம் கிடைக்கும். அதனை அவரிடம் சொன்னேன்.

"இது உங்களுக்கு... நீங்கள் எங்களுக்கு பாட்னர்தான.. இது உங்க பங்கு கமிஷன் என்றபடி விடைபெற்றார்.

அந்த அணிச்சல் பெட்டியைப் பார்த்தேன். அழகாய் இருந்ததும் உள்ளே இருக்கும் அணிச்சலையும் பார்க்க முடிந்தது. யாரோ ஒருவர் தன் குழந்தையின் இரண்டு வயது அணிச்சலை ஆடர் கொடுத்திருக்கின்றான். அதில் எழுதிய பெயரை வாசிக்க முடியவில்லை. ஆனால் அதில் அமர்ந்திருந்த ஸ்பைடர்மேன் பொம்மையைப் பார்த்ததும் அது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று யூகித்து கொண்டேன்.

காலையிலேயே இப்படிபட்ட கஸ்டமர்கள் நமக்கு கிடைப்பது எவ்வளவு நல்லாருக்கு. என்று நினைத்தபடி கிளம்பினேன்.

அடுத்ததாய் நடக்கப் போவதை நான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.
*******

எனக்கு சரியாக 45 நிமிடங்கள் என காட்டியது கைப்பேசி. வாகனத்தில் அணிச்சல் இருப்பதால் வேகமாக ஓட்ட முடியாது. ஓரளவிற்கு வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்தபடி வாகனத்தைச் செலுத்தினேன்.

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சமயம் என் வழியில் சட்டென ஒரு மஞ்சள் நிற வாகனம் குறுக்கிட்டது. முன்னறிப்பாக வலதுபக்க சமிக்ஞை இல்லாமல் அந்த வாகனம் நுழைந்ததால் சட்டென எனது வேகத்தைக் குறைக்கவும். நாற்காலியில் வைத்திருந்த அணிச்சல் கொஞ்சம் முன்னகர்ந்து பின் செல்லவும் சரியாக இருந்தது.

ஹார்னை அடித்தேன். என் வாகனத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. அவ்வப்போது ஹார்ன் அடிக்காது. வேகமாக அழுத்த வேண்டும். அந்த நினைப்பிலேயே ஹார்னை வேகமாக அழுத்த, இன்றும் மட்டும் ஏனோ பயங்கர சத்தமாய்க் கேட்டது.

அந்தச் சத்தம், குறுக்கே வந்த வாகனமோட்டியைக் கோவப்படுத்தியிருக்க வேண்டும். சட்டென இடது பக்கமாக வாகனத்தை செலுத்தினார். நான் வழக்கம் போல நேரே செல்லத் தொடங்கினேன்.

அந்த மஞ்சள் வாகனத்தில் யாரென நான் பார்க்கவும், எவண்டா எனக்கு ஹார்ன் அடிச்சது என அவர் என்னைப் பார்க்கவும் சரியாக இருந்தது.

'ஓ தமிழரா...?' என நானும், 'டேய் தமிழனா நீ...!!' என அவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம்.

அவரது பக்கத்தில் அவரது நண்பரும் இருந்தார். அதனால்தான் என்னவோ அவருக்கு என் மீது கோவம் அதிகமாகியது. அவர் தனியாக வந்திருந்திருந்தால் கூட இப்படி ஆவேசப்பட்டிருக்க மாட்டார் போல.

அந்த மஞ்சள் வாகனம் எனது வாகனத்தை இடிப்பது போல வரத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் என் வழியில் குறுக்கே வருவது போல வித்தை காட்டியது.

எனக்கும் வயிற்றில் புளியில் இருந்து ஏதேதோ கரையத் தொடங்கியது. வாகனத்தை ஓரத்தில் நிறுத்தவும் முடியாது. தமிழன் என்ற ஒரே காரணம் போதும் இன்னொரு தமிழன் என்னை அடித்துவிட்டு அப்பறம் நடந்ததைப் பற்றி விசாரிப்பதற்கு.

இதனால் அணிச்சலுக்கு ஏதும் ஆகிவிட்டால் அது என் வேலைக்கே சிக்கலாகிவிடும். இப்போதுதான் 3 முதல் 4 ஸ்டார்கள் வரை வாங்க ஆரம்பித்திருக்கின்றேன்.

வாகனத்தை நிறுத்தாமலேயே அந்த மஞ்சள் வாகனத்தைச் சமாளித்தவாறு சென்று கொண்டிருந்தேன். இப்போதுதான் கவனித்தேன் அணிச்சலில் அமர்ந்திருந்த ஸ்பைடர்மேன் அதிலேயே கவிழ்ந்து கிடக்கின்றான்.

இன்றைக்கு அவ்வளவுதான் என நினைத்தபடி இருபது நிமிட போராட்டத்திற்கு பின் அந்த வாகனத்தில் இருந்து தனியாய்ப் பிரிந்து கஸ்டமரின் முகவரியை அடைந்தேன்.

அது அடுக்குமாடி குடியிருப்பு. என் விபரங்களை அங்குள்ள காவலாலியிடம் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்து வாகனத்தை நிறுத்தத்தில் நிறுத்திவைத்தேன்.

அணிச்சல் பெட்டியை எடுத்தேன். உள்ளே கவிழ்ந்து கிடக்கும் ஸ்பைடர் மேன் பாவமாக பார்த்தேன். இன்று அவன் பாவமல்ல இவந்தான் பாவம் என சொல்வது போல என் முகத்தில் ஒரு பகுதி அந்த அட்டைப்பெட்டியின் ஒரு பக்க நெகிழியில் தெரிந்தது.

கஸ்டமரை அழைத்தேன். அப்பாவும் மகனுமாய் உற்சாகமாக என்னை நோக்கி வருகிறார்கள். அணிச்சலைப் பார்த்ததும் அந்த உற்சாகம் இருக்குமா என தெரியவில்லை.

தூரத்தில் இருந்தபடியே கையை அசைத்தபடி வந்து கொண்டிருக்கிறார் அப்பா. உற்சாகத்தில் குதித்து கொண்டே வருகிறான் குட்டி ஸ்பைடர் மேன்.
அவன் குதித்த குதியில் கால் வழுக்கி விழுந்தான். அழதான். அப்பா அவனை சமாதானம் செய்தபடி இருந்தார் நானும் பெட்டியுடன் அவர்களிடம் ஓடினேன்.

பையன் எழுந்து நின்று என்னைப் பார்த்தான். அப்பாவும் என்னைப் பார்த்தார். அணிச்சலை வாங்கினார். அதில் கவிழ்ந்து கிடக்கும் ஸ்பைடர் மேனைப் பார்த்தார். மகனும் பார்க்கலானான். இருவரும் ஒருவரையொருவர் பார்க்கலானார்கள்.

"பாரு தம்பி ஸ்பைடர் மேனும் உன்னைப் போலவே விழுந்துட்டாரு..." என்றேன் பையனும் அப்பாவும் ஒருசேர சிரிக்கிறார்கள். எனக்குமே சிரிப்பு வந்தது.

பின் அணிச்சலை வாங்கி கொண்டார்கள். குட்டி ஸ்பைடர் மேனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லியபடி விடைபெற்றேன்.

வாகனத்தில் ஏறி அமர்கிறேன். கைப்பேசியில் ஒரு சத்தம். இன்றைத முதல் வேலைக்கான பணம் சேர்ந்ததாய்ச் சொன்னது. அதோடு என் வேலைக்கு இன்று 5 ஸ்டார்
இன்று அங்கிகாரமும் கிடைத்தது.

கவிழ்ந்த ஸ்பைடர் மேனுக்கும் அந்த குட்டி ஸ்பைடர் மேனுக்கும் நன்றி சொல்லியபடி வாகனத்தை கிளப்பினேன்.

எங்கள் வட்சப் குழுவில் ஒரு செய்தி வந்தது. நான் வந்த வழியில் ஏதோ விபத்து நடந்து கார் ஒன்று கவிழ்ந்து கிடப்பதைப் படம் எடுத்து அனுப்பியிருந்தார்கள்.

அந்தக் கார் மஞ்சளாக இருக்கிறது.

ஜூலை 05, 2026

புத்தகச்சிறகுகள் தொடர் 18


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 18' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் எழுத்தாளர் அ.பாண்டியனின் இரண்டாவது நாவலான 'கரிப்புத் துளிகள்' நாவலைக் குறித்த கட்டுரையின் இரண்டாம் பகுதி வெளிந்துள்ளது.

என் வாசிப்பில் நான் முன்மொழியும் மலேசிய நாவல்களில் இதுவும் ஒன்று. நீங்கள் இந்நாவலை வாசிப்பது புதிய வாசிப்பனுபவமாக இருக்கும்.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

அடுத்த வாரம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு வருகிறேன்.

அன்புடன்
#தயாஜி

வரப்புயர - 2

எனது முந்தைய பதிவான 'வரப்புயர' எனும் பத்தியை வாசித்த நண்பர்கள் அ.முத்துலிங்கத்தின் 'ஒரு சாதம்' கதை படிக்க கிடைக்குமா என கேட்டனர்.

உங்களுக்கு கொடுக்காமல் யாருக்கு கொடுப்பேன் என்று தேடி கதை உள்ள லிங்கைக் கண்டுபிடித்து அனுப்பி கொண்டிருக்கிறேன்.

நண்பர்களே, இந்தக் கதையை நீங்களும் வாசியுங்கள்.
குறிப்பாக எப்படிங்க கதையை எழுதறது...? என் அனுபவத்தைக் கதையாக்க முடியுமா..? போன்ற கேள்விகள் உள்ள இளம் எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கத்தை தவறாது வாசியுங்கள். உங்கள் வாசிப்பை 'ஒரு சாதம்' சிறுகதையில் இருந்தும் வாசிக்கலாம்; இப்படி குறிப்பிட்டு சொல்வதற்கான காரணமும் அந்தக் கதையில் உண்டு. அதுவும் ஒரு உத்திதான்.

இந்தக் கதையைக் குறித்து இன்னமும் பேச வேண்டும். அதற்கு முன் நீங்கள் வாசித்து விடுங்களேன்.


சிறுகதை இணைப்பு இதில் உள்ளது....
👉 'ஒரு சாதம்'

https://share.google/5nz0sgeewJxL7rRnf

அன்புடன்
#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை





- வரப்புயர .... -


வாசிப்பில்,
'அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்' கட்டுரைத் தொகுப்பு....
*******
இன்று வேலையில் கொஞ்சம் பாரம் அதிகமாகிவிட்டது. பல பெட்டிகளில் உள்ள பொருட்களை ஒரே ஆளாய் வண்டியில் ஏற்ற வேண்டியிருந்தது.

அது போதாதென்று கஸ்டமரின் வீட்டை தேடி கண்டுபிடிக்க படாத பாடு படவேண்டியதாய்ப் போயிற்று.

அவர்கள் சரியான முகவரியைக் கொடுக்கவில்லை. அதோடு அவர்கள் வெளிநாட்டினர். அவர்கள் ஒரு இடத்தில் இருக்க அவகளுக்கு நேர் எதிரான இடத்தின் முகவரியை அனுப்பியிருந்தனர். எப்படியோ பேசி அவர்களையும் அவர்களின் இடத்தையும் கண்டுபிடித்து பொருட்களை ஒப்படைத்துவிட்டேன்.

அடுத்த ஆடருக்கு ஆர்வமாய் காத்திருந்த சமயம்;

"நீ மட்டுமா வேலை செய்கிறாய் இதோ நானும் வந்துவிட்டேன் என் வேலையைச் செய்ய..." என்று வந்து பெய்த மழையில் என் வேலை அப்படியே நின்றது.

இன்றைய 'தார்கெட்' பாதிகூட அதன் இலக்கை அடையவில்லை.
சோர்ந்து போய் வீடு திரும்பினேன்.
மனைவி சூடா தேநீரை கலக்கி கொடுத்தார்.

சாப்பிட்டுவிட்டு, நேநீரைக் குடித்து கொண்டே என் அறைக்குள் நுழைந்தேன்.

மனதில் ஏதோ ஒரு சோகம் தொற்றிக்கொண்டது. அதை உற்சகப்படுத்த வேண்டுமே. உடனே புத்தக அலமாரியில் என் கைக்கு எட்டிய இடத்தில் இருந்த புத்தகங்களில் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தேன்.

என் உலகத்திற்கு என்ன ஆனது ஏன் இப்படியானது என யோசித்தபடி ஒரு புத்தகத்தை எடுத்தேன்.
'அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்' புத்தகம் கிடைத்தது.

அ.முத்துலிங்கம் படைப்புலகம் குறித்து 14 எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சுப்ரபாரதிமணியன் தொகுத்திருந்தார். நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருந்தார்கள்.

என் வாசிப்பின் ஆரம்பத்தில் சுஜாதாவிற்கு பின் அதே சுவாரஸ்யத்தோடு வாசித்த படைப்புகள் அ.முத்துலிங்கத்தின் படைப்புகள்தான். அவரின் எழுத்துகள் அவ்வளவு பிடிக்கும் எனக்கு.

கதைக்கும் கட்டுரைக்கும் இடையில் அவர் எதையும் எடுத்து சொல்லும் விதம் அபாரமாக இருக்கும். வாசித்து முடிக்கும் வரை அது எந்த வடிவத்தில் சொல்லப்பட்டிருக்கும் என யூகிக்க முடியாது.

இத்தனை அனுபங்கள் அவருக்கு கிடைத்திருக்கிறதே என்கிற ஆச்சர்யப்படுவதைவிட, ஒவ்வொன்றையும் எழுத்துகளாக எழுத்து வைக்கின்றாரே என்கிற பிரமிப்பு இருக்கவே செய்கிறது.

நான் என் அன்றாடங்களை பதிவுகளாக எழுதுவதற்கு அவருமே ஒரு காரணம்தான்.

அவரின் கதைகள் எப்போதுமே வாசிக்க ஏற்றவை. அது வாசகனுக்கான செய்தியைச் சொல்லுபவை. அழுவதற்கு முன் நம்மை அறியாமலேயே நம்மை சிரிக்க வைப்பார். அழு கண்ணீர் வெளியில் வந்து விழுவதற்கு முன்னே நம்மை சிரிக்க வைப்பார்.


இன்று வேலையில் எனக்கு கிடைத்த அனுபவத்தில் இருந்து கற்க வேண்டிய பாடத்தை என்றோ ஒருநாள் அவர் கதையில் வாசித்திருந்தேன். அவரின் முழு தொகுப்பில் தேடலானேன்.

ஆரம்பத்தில் வாங்கிய அவரது தனித்தனி சிறுகதைத் தொகுப்புகளை நண்பர்களுக்கு கொடுத்து விட்டு முழு தொகுப்பையும் (சிறுகதைகள்)/வாங்கியிருந்தேன். அதில் நான் வாசித்து எழுதிய குறிப்புகள் இருக்காது. பழைய தனித்தனி தொகுப்புகளில்தான் குறிப்புகள் இருக்கும்.

சரி வாசித்தது மனதில்தானே இருக்கும் என்ற பேராசையில் முழு தொகுப்பில் ஒவ்வொரு கதையாக ஒரு பார்வை பார்த்தேன்.

கிடைத்தது. அந்தச் சிறுகதையின் தலைப்பு 'ஒரு சாதம்'.

இன்று மீண்டும் வாசிக்கையில் முன்னமே வாசித்த அனுபவத்தைத் தள்ளி வைத்தே வாசிக்க முயன்றேன். தலைப்பே வித்தியாசமாக இருப்பதாக உணர்த்திய முதல் வாசிப்பின் மனநிலையை மீண்டும் உருவாக்கி கொண்டேன்.

சிறுகதையில் ஓரிடத்தில் அ.முத்துலிங்கம் சொல்வார், அரசனை வாழ்த்த நினைத்த ஔவை இப்படி சொல்லுவார்;

வரப்புயர, நீர் உயரும்
நீர் உயர, நெல் உயரும்
நெல் உயர, குட் உயரும்
குடி உயர, கோல் உயரும்
கோல் உயர, கோன் உயர்வான்'

'ஒருதுளி காரியம் எப்படிப் பிரமாண்டமான தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதற்கு இது சான்று.

'கேயாஸ் தியரிக்கும்' இதற்குமான தொடர்பையும் எழுத்தாளர் இணைத்து இலகுவாக புரியும்படி கதையில் சொல்லியிருப்பார்.

இப்போது மனதில் பளீர் என படுகிறது. சமீப காலமாக 'கோன் உயரவேண்டும்' என்றே அதிகம் சிந்தித்திருக்கிறேன். அதாவது விளைவுகளைப் பற்றியே சிந்தித்திருக்கிறேன்.

ஆனால் எல்லாவற்றுக்கும் 'வரப்புயர' வேண்டுமே என்கிற பளீர்தான் அது. மனம் இப்போது இன்னொரு கோணத்தில் சிந்திக்கிறது.

'ஒரு சாதம்' என்கிற கதையில் அதன் தலைப்பு தரும் அதிர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் உழைக்க தயாராய் இருக்கும் மனிதனுக்கான இடம் உயர்ந்து கொண்டே போகும் என்கிற நம்பிக்கையையும் கொடுக்கும் சுவாரஸ்யமான கதைதான்.

இந்தச் சனிக்கிழமை இரவை நீளமாக்க கையில் எடுத்த அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் தொகுப்பை எடுத்திருக்கிறேன். மொத்தம் 14 எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம் குறித்து எழுதிய கட்டுரைத் தொகுப்பு என குறைவாகச் சொல்லிவிட்டேன்.

மொத்தம் 15 கட்டுரைகள் உள்ளது. புத்தகத்தில் இல்லாத அந்தப் பதினைந்தாவது கட்டுரையைத்தான் நீங்கள் இப்போது வாசித்து முடித்தீர்கள். என்னவொன்று இது அவரது படைப்புலகில் இருந்து என்னைப் பார்க்கவில்லை. என்னுலகில் இருந்து அவரைப் பார்த்திருக்கிறது.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்