பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஏப்ரல் 07, 2026

என் 'லக்கி பேம்பூக்கள்' - 2


நேற்று வாங்கிய செடிகளை விளையாடியபடி பூஜாடியில் வைத்து அசதியில் பொம்மி தூங்கிவிட்டாள். காலையில் எழுந்ததும் பால்கனிக்குச் சென்று பார்த்து மீண்டும் விளையாட ஆரம்பித்தால். விபரீதம் அப்போதுதான் என தொடங்கியது.

பால்கனியில் இருந்து அழுதபடி என்னிடம் ஓடி வந்தாள். அவளுடைய செடிகளைக் காணவில்லை என்றாள். எல்லாம் அங்குதான் இருக்கின்றன என நாங்கள் சொன்னோம். இல்லை என்று பொம்மியும் சொன்னாள்.

நாங்கள் சொல்வதை நிரூபிக்க பால்கனிக்கு அவளைக் கூட்டிச்சென்றோம். நாங்கள் காட்டுவதற்கு முன்பாக பொம்மி காட்டினாள்.

நான்கு பூஜாடிகள் காலியாக கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. பொம்மி சொல்வது உண்மைதான் என மண்டையில் சுருக்கென்றது. இல்லாள் நங்கென்று கொட்டியிருந்தாள். தலையைத் தேய்த்தபடி என்னவென்று கேட்டேன்.

பால்கனி தோட்டத்தை நேற்று சுத்தம் செய்யும் போது ரொம்பவும் பழைய பூஜாடிகள் சிலவற்றை வீச சொல்லியிருந்தார். நேற்றிருந்த அசதியில் இன்று காலையில் வீசலாம் என்றிருந்தேன்.

அதைத்தான் பொம்மி பார்த்து அவளுடைய செடிகளைக் காணவில்லை என்று அழுகிறாள். அவளுக்கு வாங்கிய செடிகளை அவள் அதன் பூஜாடிகளோடு கணக்கிட்டு வைத்திருப்பாள் என எங்களுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அவற்றை கருப்பு பையில் கட்டியிருப்பேன்.

பொம்மிக்கு புரியவைக்கப் பார்த்தோம். அவள் புரியாத மாதிரி பார்க்கிறாள்.

எனக்கு சுருக்கென்று கோவம் வந்துவிட்டது,
"இப்போ என்ன.. இன்னிக்கும் செடி கடைக்கு உன்னை கூட்டிட்டு போகனுமா..?" என்றேன்.

என்னைவிட கோவமாக "யெஸ்.. இன்னிக்கும் செடி கடைக்கு போறோம்..." என்று முடிவாகச் சொன்னாள்.

இல்லாள் காலை உணவைத் தயார் செய்தார். நான் காலி பூஜாடிகளை கருப்பு பையில் போட்டு கட்டி கொண்டிருந்தேன். பொம்மி அவளது பொம்மைகளைக் கொண்டு வந்து செடிகளை அறிமுகம் செய்து கொண்டிருந்தாள்.

சாப்பிட்டு முடித்து நாங்கள் செடி கடைக்கு கிளம்பினோம். மனைவி சட்டென இன்னொரு கடைக்கு போகலாம் என அந்தக கடைக்குச் செல்லும் வழியை எனக்கு வட்சப் செய்தார்.

ஏன் புதிய கடைக்கு போகவேண்டும் என கேட்டேன்.

இந்தக் கடை நம் வீட்டு பக்கத்தில்தான் இருக்கிறது. விலையும் குறைவாக கிடைக்கிறது. இல்லாள் வாங்க வேண்டிய செடிகளும் அங்கு இருப்பதாக சொன்னார்.

ஓ அப்படியென்றாள் அம்மாவும் பொம்மியும் சேர்ந்து போட்ட திட்டம்தானா இது.

ஒன்றாகத்தான் இருக்கிறோம். இம்மாதிரி திட்டங்களைத் தாயும் சேயும் எப்போதுதான் போடுகிறார்கள் என பிடிபட மாட்டேன் என்கிறது.

எல்லாம் சரிதான், இதற்கு ஏன் தலையில் கொட்டினாய் என கேட்டேன். இல்லாள் யோசிக்கவில்லை. அப்போதுதான் நாடகம் தத்ரூபமாக இருக்கும் என்று இருவரும் காருக்குள் ஏறிவிட்டார்கள்.

இவர்களின் தத்ரூபத்திற்கு என் தலைதான் கிடைத்தது என நினைத்து கொண்டு கைபேசியில் இருந்த முகவரிக்குச் சென்றேன்.

உண்மையிலேயே நிறைய செடி கொடிகளை வைத்திருந்தார். அதில் ஒரு செடியைப் பார்க்க பல பட்டாம்பூச்சிகள் ஒன்றாய்ப் பறப்பது போலவே இருந்தன. பார்த்ததும் பிடித்துவிட்டது. அருகில் சென்றேன் ஒவ்வொன்றாக தொட்டேன். இல்லாளையும் அழைத்து காட்டினேன். அவருக்கும் பிடித்திருந்தது.

கடைக்காரரிடம் விலையைக் கேட்டேன். எங்கள் பட்ஜெட்டிற்கு ஒத்துவரவில்லை. அந்த ஒரு பூச்செடியை வாங்குவதற்கு பதில் வேறு சில ஜெடிகளை வாங்கிவிடலாம் என்றே யோசித்தோம்.

நடுத்தர குடும்பத்தில் இது ஒரு சிக்கல்தான் இல்லையா. செடி வளர்க்க ஆசைப்படுவோம். அதற்கான இடவசதி இருக்காது. இடம் இருந்தால் அதற்கு ஏற்ற பூச்செடிகள் அமையாது. பூச்செடிகள் அமைந்தால் பூஜாடிகள் சரிதாக இருக்காது. எல்லாமே அமைந்துவிட்டால் நம் பட்ஜெட்டில் பங்கிருக்காது. எல்லாவற்றையும் ஒரு கட்டத்திற்குள் அமுக்கியும் அடுக்கியும் வைக்க வேண்டும்.

இம்முறை பொம்மி அவளது மம்மியும் 'மணி ப்ளாண்ட்' செடிகளையும் நான் எனக்கு ஒரு சின்ன 'ஸ்னேக் ப்ளாண்ட்' செடியையும் வாங்கி கொண்டு கிளம்பினோம்.

வீட்டிற்கு வந்ததும் நேற்று போல் அல்லாமல் ரொம்பவும் சுத்தமாக மீண்டும் ஒருமுறை பால்கனி தோட்டத்தை மேம்படுத்தினோம்.

இல்லாள் சற்றே கிரியேட்டிவிட்டியாக
வீட்டு கொடிக்கம்பியில் தொங்கும் தோட்டத்தை உருவாக்கி கொண்டிருந்தார்.

வீட்டில் என்னைத் தவிர, யார் அங்கு நடந்தாலும் யார் தலையிலும் அது இடிக்காது. இனி நான் மட்டுமே குனிந்து மரியாதை செய்தபடி அங்கு சென்று வரவேண்டும். அந்த அளவிற்கு தாம் தொங்கி கொண்டிருக்கிறது தோட்டம்.

இதுவரை இல்லாளில் அடிக்கெல்லாம் பணிந்து நடந்து பழகியிருந்தேன். இனி அவர் நட்ட செடிகளுக்கெல்லாம் குனிந்து நடக்கப் பழக வேண்டும்.

இதற்கு இடையில் நாளை காலை, எந்தச் செடியும் காணாமல் போகவில்லை என பொம்மியை நம்ப வைக்க வேண்டும்.

இவ்வளவுக்கு மத்தியில் பொம்மி மீன்குஞ்சுகள் வாங்கினாள், வாய்ப்பு இருப்பின் அந்தக் கதையையும் சொல்கிறேன். உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்.

எங்களுக்கு நீங்கள்தானே இருக்கிறீர்கள்....

ஏப்ரல் 06, 2026

என் 'லக்கி பேம்பூக்கள்'

- எனது 'லக்கி பேம்பூக்கள்'
(My lucky bamboo's)

பொம்மிக்கு பிடித்த செடியை அவளே தேர்ந்தெடுக்கலாம் என்றோம். உற்சாகமானவள் அங்கும் இங்கும் ஓடியோடி ஒவ்வொரு செடிகளாக மலர்களாகத்  தொட்டுத்தொட்டு, பார்த்து கொண்டிருந்தாள்.

எல்லாவற்றையும் விட, அவளுக்கு அவள் உயர செடிகளையே பிடித்திருந்தது. எங்கெல்லாம் அவள் உயரத்திற்கு செடிகளும் மலர்களும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் எங்களை அழைத்து அவை அழகாக இருப்பதாக சொல்கிறாளே தவிர எதையும் எடுக்க மாட்டேன் என்கிறாள்.

அவற்றைத் தொட்டுப்பார்ப்பதிலேயே மும்முரமாக இருக்கிறாள். மீண்டும் அவளிடம் நம் வீட்டிற்கும் கொண்டு போகலாம், உனக்கு பிடித்ததை எடு என்றோம்.

சிரித்தபடி ஆரம்பத்திலேயே நாங்கள் பிடித்ததை வாங்க சொன்ன இடத்திற்கு துள்ளி குதித்து ஓடினாள். அவள் விரும்பிய செடியை இவ்வளவு நேரமாய் அங்குதான் வைத்துவிட்டு தோட்டம் முழுக்க ஒவ்வொன்றையும் இரசித்தபடி இருந்திருக்கிறாள்.

சட்டென இரு கைகளிலும் சிறு சிறு மூங்கில் குச்சி போல எதையோ எடுத்து வந்தாள். ஆமாம் அதுதான் 'லக்கி பேம்பூ'.

அதற்கு ஏற்ற சிறிய கண்ணாடி குடுவையையும் அங்கேயே வாங்கிவிட்டோம்.

அவளைத் தொடர்ந்து இல்லாளும் அவருக்கு சில செடிகள் வாங்கி கொண்டார். வீட்டின் 'பால்கனியில்' இருக்கும் 'மினி தோட்டத்தில்' எனக்கான தோட்டக்காரன் வேலை அந்த நொடியில் உறுதியானது.

நினைத்தபடியே நடந்தது. பொம்மியும் அவள் மம்மியும் செய்த வேலையால் பால்கனி தோட்டத்து மண் பாதிக்கு பாதி வீடு முழுக்க ஆனது. கடற்கரை  விளையாட்டு போல பூஜாடி மண்களைக் கொட்டி புது மண்ணை ஒவ்வொரு ஜாடியிலும் போட்டு கொடுத்தார்கள்.

இரவு வரை தோட்ட வேலையிலும் மண் விளையாட்டிலும் மூழ்கியிருந்தோம்.  தோட்ட வேலை முடிந்ததும் பொம்மியும் இல்லாளும் அசதி தாங்காது குளித்து தூங்கலாம் என்று பேசி முடிவு செய்தார்கள்.

இன்னும் தோட்டக்காரன் கதாப்பாத்திரத்தில் இருக்கும் நானோ, அடுத்ததாக வீட்டுக்காரன் கதாப்பாத்திரத்திற்கு மாற வேண்டும். அதாவது வீட்டு வேலைகளை முடிக்க வேண்டும்.

அவர்கள் இருவரும் குளித்து முடித்து சமைக்கவே ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது வரை வீட்டு வேலையையே செய்து கொண்டிருந்தேன்.

இப்போதுதான் வேலை முடிந்தது. சாப்பிட்டு விட்டோம். பொம்மி அவள் வாங்கிய லக்கி பேம்பூவை பார்த்துவிட்டு எங்களையும் பார்த்தாள். அவளுக்கு அவற்றை பிடித்திருக்கிறது.

அவள் எங்களின் லக்கி பேம்பூ என சொன்னேன். புரிந்துவிட்டது போல சிரித்தபடி கொட்டாவி விட்டபடியே அவள் அறைக்கு செல்கிறாள்.

அவள் நடந்து செல்லும் அழகை பார்த்தபடி இருந்தேன். இல்லாள் பார்ப்பதைக் குறித்து கேட்கிறார்.

உண்மையில் பொம்மியும்
இல்லாளுமே எனக்கு கிடைத்த 'லக்கி பேம்பூக்கள்'தானே என்று கட்டியணைக்க போனேன். வெட்கத்தில் என்னை தள்ளிவிட்டு "கிச்சனில் சமைச்ச சாமான்லாம் இருக்கு... கழுவிட்டு வந்து படுங்க... எங்களுக்கு ஒரே அசதியா இருக்கு..." என்றபடி பொம்மியைப் பின் தொடர்ந்தார்.

என் இராஜ தந்திரங்கள் இந்த முறையும் வீணாகிவிட்டதை நினைத்தபடி கிச்சனுக்கு செல்கிறேன்....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


ஏப்ரல் 05, 2026

புத்தகச்சிறகுகள் 7


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 7' வெளிவந்துள்ளது.
புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் எழுத்தாளரும் மருத்துவருமான மா.சண்முகசிவாவின் சிறுகதைகள் குறித்த கட்டுரையின் இரண்டாம் பகுதி வெளிவந்துள்ளது..

இனி ஒவ்வொரு வாரமும் புத்தகங்கள் குறித்த 'புத்தகச்சிறகுகள்' எனும் எனது தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.
வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்...
நேசிப்போம்...
வளர்வோம்...
அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை,

ஏப்ரல் வாசிப்பில் - 2

' முறிந்து விழுந்தால்தான் முருங்கை மரத்திற்கு திருப்தி'
நாவலிலிருந்து.....

ஏப்ரல் மாத நாவல் வாசிப்பில் 'சுமித்ரா'. எழுத்து கல்பற்றா நாராயணன். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு கே.வி.ஷைலஜா.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


ஏப்ரல் 03, 2026

'வாழும் தமிழ் இலக்கிய விழா'

இன்று அமெரிக்க, நியூயார்க் நகரில் 'வாழும் தமிழ் இலக்கிய விழா தொடங்குகிறது'. இவ்விழாவில்
தமிழ்நாட்டு எழுத்தாளர்களும் மற்ற நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களும் கலந்து கொள்கிறார்கள். 


'வாழும் தமிழ் இலக்கிய விழா',  'நவீன தமிழ் இலக்கியம்' என்ற கருப்பொருளில் பிற மொழி இலக்கியவாதிகளும் தமிழ் நவீன இலக்கிய செழிப்பை அறிந்து கொள்ளும் விதமாக நடத்தப்படுகின்றது. 


பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இவ்விழாவின் விளைவுகள் நாளை நவீன தமிழ் இலக்கியத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் அதோடு பல முன்னெடுப்புகளையும் சாத்தியப்படுத்த வேண்டும் என்பதே இங்குள்ள பல இலக்கிய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. 

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இவ்விழாவுக்கு மலேசியாவிலிருந்து எழுத்தாளர் ம.நவீனும், எழுத்தாளர் ஜெ.அரவின் குமாரும் சிங்கப்பூரில் இருந்து எழுத்தாளர் அழகுநிலாவும்
அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.


இந்த மூவரையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இவர்களும் இந்த நேரத்தில் அங்கிருப்பது எங்கள் நாட்டின் இலக்கிய போக்கிற்கும் பயனாக அமையும் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஏப்ரல் 02, 2026

- அதனால் என்ன ? -


எதார்த்தமாக இருக்கிறது
அதனால் என்ன?
நன்றாக இருக்கிறது
அதனால் என்ன?

ஆழமாக இருக்கிறது
அதனால் என்ன?
கண்ணீர்விட வைக்கிறது
அதனால் என்ன?

நினைவை எங்கோ அழைக்கிறது
அதனால் என்ன?
சின்னதாய் சிரிக்கிறோம்
அதனால் என்ன?

மொழி இனிமையாக இருக்கிறது
அதனால் என்ன?
அத்தனையும் உண்மை
அதனால் என்ன?

மறக்கவே முடியாது
அதனால் என்ன?
அதுவொரு ஆன்மீக அனுபவம்
அதனால் என்ன?

ஒருவகையில் அது கண்ணாடி
அதனால் என்ன?
வலியின் அடையாளம்
அதனால் என்ன?

யாருக்காவது
புரியாமல் இருந்தால்தான்
அதை கவிதையென ஒத்துக்கொள்வோம்

அதுவரை எங்களுக்கு
அதனால் என்ன?

ஏப்ரல் வாசிப்பில்

-சிம்மம்-
உண்மையான சிம்மம்
சிம்மத்திற்கு உகந்தவற்றை மட்டும்
எப்போதும் செய்வது அல்ல
சிற்பத்தில்
ஓவியத்தில்
நேரில் காணாதவர்களின் கற்பனையில்
வாழும் சிம்மம்தான்
எப்போதும் சிம்மமாக இருக்கிறது
- கல்பற்றா நாராயணன்.

ஏப்ரல் மாத புத்தக வாசிப்பை, 'தொடுதிரை' என்னும் கல்பற்றா நாராயணன் கவிதைத் தொகுப்பில் இருந்து தொடங்குகின்றேன்.
இம்மலையாளக் கவிதைகளை ஜெயமோகன் தமிழாக்கம் செய்திருக்கின்றார்.

நண்பர்களே நீங்களும் இம்மாதத்தில் எந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளீர்கள் என சொல்லிவிட்டு போங்களேன்...

அன்புடன்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்