பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

மே 09, 2026

- சமதானம் செய்வேன் -

பேருந்தில் ஒருத்தி
அழுவதைக் கண்டேன்
இடது பக்க
கன்னத்தில் வழிந்த கண்ணீர்
கழுத்தில் இறங்கி
ஆடைக்குள்ளே மறைகிறது

எந்தத் தடையுமில்லாமல்
நீண்ட நதியாய்
வழியும்
கண்ணீரைக் கண்டதும்
எனக்கும் அழத் தோன்றியது

நான் அப்படித்தானே
யாராவது அழுதால்
நானுமே சேர்ந்து கொள்வேன்
பழகிவிட்டது

அழுவதில் நான்
அந்தப் பெண் போல
தேர்ச்சி பெற்றவன்
அல்ல போலும்

அழ தொடங்கிய
ஐந்தாவது வினாடியில்
மூக்கில் சளி உருவாகிவிடும்
மூக்கை உறிஞ்சியபடியே
அழுவேன்

என்
மூக்குறிஞ்ச சத்தத்தை
அந்தப் பெண்
கண்டுகொண்டாள்

என்னைத் திரும்பி பார்த்து
அவளது கண்ணீரைத்
துடைத்தபடி
"ஒன்னுமில்ல ஒன்னுமில்ல..."
என
மெல்லிய குரலில்
சொல்லியபடி
கொஞ்சமாய்ச் சிரிக்க முயன்றாள்

அழுத கண்கள்
இன்னுமே கலங்கியபடி இருக்க
எனக்காக சிரித்து
என்னை சமாதானம் செய்யும்
அவளை

நான் எப்படி
சமாதானம் செய்வேன்...

மே 03, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 10


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 10' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் வார தொடரில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆதி.இராஜகுமாரனின் 'ஆதி.இராஜகுமாரன் சிறுகதைகள்' புத்தகத்தை குறித்த வாசிப்பனுபவ கட்டுரையின் இரண்டாம் பகுதி நிறைவடைகிறது.

அடுத்த வாரம் இன்னொரு புத்தகத்தைக் குறித்து எழுதுகிறேன்.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்.. நேசிப்போம்..வளர்வோம்..
அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


- சொல்லி உதவினால் -

இங்கு
யாருக்கு என்ன கவலை
என்று
யாரால் சொல்ல முடியும்?

எது கவலை என
அடையாளம் தெரியாத
அளவிற்கு பழகிவிட்டேன்

யாராவது
சொல்லி உதவினால்

இரண்டில்
எது நானென
கண்டுகொள்வேன்

மே 02, 2026

- கவிதை விமர்சனம் -

நான்
எழுத நினைக்கும்
கவிதைகளை
எனக்கு முன்னமே
எழுதிவிடுகிறீர்கள்

நீங்களாது கொஞ்சம்
புன்னகைத்தபடி வாழக்கூடாதா
என
வருந்துவதைத் தவிர
எனக்கு வேறு
விமர்சனம் இல்லை...

ஏப்ரல் 30, 2026

- புத்தகங்களைப் பின்தொடரும் பயணம் -


நடுகல்.காம் இணைய பக்கத்திற்கு இரு தொடர்களை எழுதி வருகின்றேன். 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' என்ற தொடரில் மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்த வாசிப்பனுபவத்தையும், 'மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம்' என்ற தொடரில் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்த வாசிப்பு அனுபவத்தையும் எழுதும் தொடர் அது.

இந்த மே மாதம் வரை 17 மலேசிய புத்தகங்கள் குறித்தும், 5 சிங்கப்பூர் புத்தகங்கள் குறித்தும் எழுதியுள்ளேன். அதோடு மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பிலும் 'புத்தகச்சிறகுகள்' என்ற தலைப்பில் புத்தக அறிமுகத்தினை வாராந்திர தொடராக எழுதுகிறேன்.

இந்தத் தொடர்களின் வழி பல புதியவர்கள் எனக்கு அறிமுகம் ஆகின்றார்கள். பலரும் புத்தக பரிந்துரைகளை செய்கிறார்கள். புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு பிடித்த தொடராக இந்தத் தொடர்கள் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

புத்தகங்கள் மீதான எனது காதல்தான் 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை' எனும் இணைய புத்தகக் கடையையும் பல சிக்கல்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியுடன் என்னை நடத்த வைக்கிறது. என்னை வழிநடத்தியும் செல்கிறது.

இந்தத் தொடர், என்னைப் போலவே புத்தகங்களை நேசிக்கின்றவர்களை எனக்கருகில் கொண்டு வந்து சேர்க்கிறது என்றால் மிகையில்லை.

நான் புத்தக வியாபாரி மட்டுமல்ல புத்தகங்களை நேசிக்கும் ஒருவன் என தெரிந்தவர்கள் எனக்கு நண்பர்களாகவும் நமது புத்தகக்கடைக்கு வாடிக்கையாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் என் அன்பு.

இந்தத் தொடருக்காக சிங்கப்பூரில் இருந்து கவிஞர் பாண்டிதுரை 12 சிங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களை பெற்றுகொண்டு எனக்கு அனுப்பி வைத்துள்ளார். தனது புத்தகம் பேசினால் போதும் என ஒதுக்கி இல்லாமால் தனது நண்பர்களின் புத்தகங்களும் பேசப்படவேண்டும் என சிரத்தை எடுத்து புத்தகங்களைச் சேகரித்து எனக்கு அனுப்பிய நண்பருக்கு எனது அன்பும் நன்றியும்.

அதே போல மலேசிய மூத்த எழுத்தாளர்களின் ஒருவரான மனஹரன் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். மறைந்த எழுத்தாளர் கோ.முனியாண்டியின் 'சிறுகதை தொகுப்பை' எனக்கு அனுப்பி வைத்தார். அவருக்கும் எனது அன்பும் நன்றியும்.

வாசிப்பதும் எழுதுவதும் எனக்கு விருப்பமான ஒன்றாக இருப்பதோ என்னுடைய தன்னறமாகவே இருப்பதாக நம்புகிறேன். அதற்காவே எழுதுகிறேன்.

புத்தகங்களைப் பின் தொடர்ந்து செல்கிறேன். இந்தப் பயணத்தில் நான் ஒருபோதும் தனியாக இல்லை. நீங்கள் எல்லோரும் என்னுடனே இருக்கிறீர்கள். வேறென்ன வேண்டும்.

தொடர்ந்து வாசிப்போம். தொடர்ந்து எழுதுவோம்.....

- சிரித்த முகம் -

சிரித்தால்
அழகாய்த் தெரியும்
மனிதர்களை நமக்கு
நன்றாக தெரியும்

ஏனோ அவர்களால் இப்போதெல்லாம்
சிரிக்கவே முடிவதில்லை
என்பது

அவர்களுக்கு
மட்டுமே தெரியும்...

ஏப்ரல் 29, 2026

- காதலே விடை -


காதலிக்காதவர்களால்
ஒருபோதும்
காதல் தோல்விகள்
ஏற்படுவதில்லை...

நேசிக்காத ஒன்றை
எப்படி ஒருவனால்
வெறுக்க முடியும்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்