பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

பிப்ரவரி 23, 2026

சின்னச்சின்ன கனவுகள்


பெரிய பெரிய
கனவுகளில் அவர்கள்
தொலைந்து போகிறார்கள்

சின்னச் சின்ன
கனவுகளில் நாம்
வாழ்ந்துவிட்டு போவேமே

என்ன குறைந்துவிடப் போகிறது
நம்மை தவிர
யாருக்கு நிறைந்துவிடப் போகிறது

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


பிப்ரவரி 22, 2026

- 'ஒளி'க்கும் கற்பூரத்துளிகள் -


இங்கு
எல்லா கற்பூரங்களும்

கடவுளுக்காய் 
'ஒளி'ப்பதில்லை

சில
கற்பூரங்கள்

வெறுமனே
காற்றில் கரைந்து

தன்னைத்தானே
அழித்து கொள்கின்றன

அதில் விருப்பமும்
கொண்டிருக்கின்றன...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

பிப்ரவரி 20, 2026

- தகப்பனின் சாமி -


பொம்மி
என் தோளில் அமர்ந்து
நீ 
காணும் உயரங்கள்
ஒவ்வொன்றும்
உனக்கானது மட்டுமல்ல
எனக்கானதும் கூட

அது
நமக்கானதும் கூட

நான் காணாத 
உயரங்களையும்
உனக்கு காட்டவே
என்
வலித்த தோள்களுக்கு
வலு 
சேர்த்து கொண்டிருக்கிறேன்

உன்னைச் சுமப்பது போல
நான் 
என்னையும் சுமந்தபடி
பயணிக்கிறேன்

இன்னும் 
எத்தனை எத்தனை
படிகளோ
அத்தனையும் 
உன் துணையால்
கடந்திட வேண்டுகிறேன்

இனி 
நீதான்
என் விதியின்
கையெழுத்து

என் புதிய 
தலையெழுத்து

தகப்பனாய் 
உனைச் சுமந்தாலும்
தகப்பன்சாமியாய் 

நீயே
எனை வழிநடத்து

#பொம்மி #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

பெயர் சொல்லி அழைக்கிறேன்...

இன்று எனக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை. முன்னமே எடுத்த பரிசோதனை முடிவுகளும் இனி அடித்தடுத்த பரிசோதனைகளுக்கான நாட்களையும் சொல்லுவார்கள்.

எப்போதும் சொல்வதுதான் தலையில் அடி படாதவரை நான் வேறொரு ஆள். தலையில் அடிவாங்கிய பின் நான் வேறொரு ஆள். இந்தப் புதிய ஆளுக்கு தலையில் தொடங்கி தலைகால் புரியாத சிக்கல்கள் பல உள்ளன.

எல்லாவற்றையும் கடந்துதான் வரவேண்டியுள்ளது. நம்பிக்கையோடு வாழ வேண்டியுள்ளது.

ஒவ்வொரு முறையும் மருத்துவ பரிசோதனைக்கு வரும்போதும் மருத்துவரின் ஆலோசனைகளோடு மனதுக்கு தேவையான சிலரின் கதைகளும் கிடைக்கவே செய்கின்றன.

இன்றும் ஒருவரைச் சந்தித்தேன். வயதானவராக தெரிந்தார். சோர்ந்து போயிருந்தார்.  அவருக்கு நாற்பது வயதாவதைச் சொன்னவர், இதுவரையில் பெயர் சொல்லும் வகையில் எதையுமே செய்ததில்லை என்று சொல்லி முடிக்கவும் அவர் பெயரை நர்ஸ் அழைக்கவும் சரியாக இருந்தது.

"தோ... உங்க பேரை சொல்லிட்டாங்க நீங்களும் பெரிய ஆளுதான்... இன்னொரு நாற்பது வருசத்தை இதை வச்சே ஓட்டிடலாமே..." என்றேன்.

சிரித்துக்கொண்டே மருத்துவரின் அறைக்கு சென்றார். எனக்கும் சிரிக்கத் தோன்றியது. நான் சொன்னது அவருக்கு மட்டுமல்ல. அவர் சொன்ன கதை எனக்கு மட்டுமல்ல.

எல்லோரிடமும் எல்லோருக்குமான குறைந்தபட்சம் யாரோ ஒருவருக்கான கதைகள் இருக்கவே செய்கின்றன.

அவருடன் நிகழ்ந்த உரையாடலை ஏதாவது ஒருவகையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அதுவரை, நானும் உங்களைப் பெயர் சொல்லி அழைத்ததாய் நினைத்து கொண்டு உற்சாகமாக களம் இறங்குங்கள். இல்லை. வேண்டாம். இறங்க வேண்டாம். களம் ஏறுங்கள். இனி வரும் காலம் நமக்கு ஏற்றங்களோடே இருக்கட்டும்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

பிப்ரவரி 15, 2026

வாசிப்பில்


மஹா சிவராத்திரியில் ஜெயமோகனின் 'துளிக் கனவு'.

'ஒன்றின் இலக்கியமதிப்பு என்பது சொல்லப்பட்ட தளத்தில் இருந்து அது விரிந்து பரவும் வீச்சினாலும் தொடர்ந்து முளைத்துக் கொண்டிருக்கும் அதன் விதைத் தன்மையாலும் உருவானது.'
- ஜெயமோகன்

புத்தகச்சிறகுகள் 1

நண்பர்களுக்கு வணக்கம்.

இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், 'புத்தகச்சிறகுகள்' எனும் தொடரைத் தொடங்கியுள்ளேன்.  புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் இதன்வழி உங்களோடு பகிர்கிறேன்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நாளிதழில் தொடர் எழுதுவதில் எனக்கும் மகிழ்ச்சி.

இணையத்தில் வாசிப்பதை தவிர்த்து நாளிதழ்களையும் வார மாத இதழ்களையும் விரும்பி வாசிக்கும் வாசகர்கள் இருக்கவே செய்கிறார்கள். எனக்கும் கூட அப்படி கையில் எடுத்து மடியில் வைத்து நாற்காலியில் சாய்ந்தபடி வாசிப்பதில் அலாதி இன்பம்.

இனி ஒவ்வொரு வாரமும் புத்தகங்கள் குறித்த 'புத்தகச்சிறகுகள்' எனும் எனது தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும். 

வாசிப்போம்... நேசிப்போம்... வளர்வோம்...

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை



பிப்ரவரி 08, 2026

- என்னிடம் உள்ளன ஏராளமான கடிதங்கள் -



என்னால் புகைப்படமாக எடுக்க முடியாதவற்றை எழுத்தில் எழுதி சேமித்து கொள்கிறேன்.

என்னால் புகைப்படமாக எடுக்க முடிந்தவற்றின் பின்னணியில் இருக்கும் அனுபவத்தையும் எழுத்தில் சேமித்து கொள்கிறேன்.

மொத்தத்தில் எழுதுவதுதான் எனக்கு எல்லாம். இதுவொரு முகவரியற்ற கடிதம். என் எழுத்தை வாசித்து முடித்து அது உங்களுக்கானது என நீங்கள் நினைத்தால் உங்கள் பெயரை அதில் எழுதி, அக்கடிதம் உங்களுக்கானதாய்ப் பாவித்து கொள்ளுங்கள்.

என் எழுத்து உங்களுக்கானது அல்ல என நீங்கள் நினைத்தால், யாரோ ஒருவரின் கடிதம் உங்களுக்கு வந்துவிட்டதாகப் பாவித்து அதனை பத்திரப்படுத்தி கொள்ளுங்கள். 

என்றாவது ஒருநாள் அந்தக் கடிதத்திற்கான நபரை நீங்கள் சந்திப்பீர்கள் என எழுதியவனுக்கு நன்றாகவே தெரியும்.

ஏனெனில் என்னிடமும் அப்படி பல கடிதங்கள் இருக்கின்றன. அதற்கானவர்களை நான், தினம் தினம் சந்தித்தபடி இருக்கிறேன்.....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்