பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஏப்ரல் 25, 2026

- முதல் பரிசு -


குழந்தைகளுக்கான
ஓவியப்போட்டியில்
விதிமுறைகளுக்கு உட்பட்டு
பெற்றோரின் கண்காணிப்பில்
வண்ணம் தீட்டிய
குழந்தைக்கு
முதல் பரிசு கிடைத்தது

தன்
கை போன
போக்கில்
வண்ணங்களை அலையவிட்டு
பரிசு நிராகரிக்கப்பட்ட
குழந்தையின்
ஓவியம்

அவள் வீட்டில்
அழகான சட்டகத்தில்
தேதி நாள் விபரங்கள்
அறிவித்தபடி
அந்தக் குழந்தையைப் போலவே
அங்கும் இங்கும்
குதித்து விளையாடி கொண்டிருக்கிறது

அது
அந்தக் குழந்தைக்கு
ஒவ்வொருநாளும்
பரிசு கொடுத்தபடி
இருக்கிறது...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஏப்ரல் 24, 2026

- கருணைக்கரம்-



ஆகக்கடைசியாக
என் மீது
கருணை கொண்ட
இரு கரங்களைச்
சந்தித்தேன்

இறுக்கமாய்ப் பற்றினேன்
அணைத்தேன்
ஆசுவாசம் கொண்டேன்

இத்தனை நாட்களாய்
அவை
எனது வலப்பக்கத்திலும்
இடப்பக்கத்திலுமே
இருந்திருக்கின்றன....

- அங்கும் இங்கும் எங்கும் -

நான்
அங்கில்லை என
அவர்கள் தெரிந்து கொள்ளும்
முன்னமே

நான்
எங்குமில்லை என
நானே புரிந்து கொண்டேன்
எண்ணமே...

ஏப்ரல் 22, 2026

- வலைக்குள் குழு -


சர்க்கஸ் வலை
அவிழ்ந்து விழுந்தது

சரி செய்வதற்குள்
உள்ளிருந்த
புலிகளில் ஒன்று
சட்டென தாவி
பார்வையாளர்கள் மத்தியில்
குதித்தது

யாருக்கும்
என்ன செய்வதென புரியவில்லை
அலறல் சத்தங்களுடன்
அங்கும் இங்கும்
ஓடத்தொடங்கினர்

எல்லோரும் தன்னைவிட்டு
ஓடுவதைப் பார்த்த
புலிக்கு மிகுந்த ஏமாற்றம்

அதற்கும்
அடுத்தென்ன என்பது
புரியவில்லை

சர்க்கஸ் வலைக்கே
திரும்பலாம் என்றது

வலைக்குள் இருந்த
புலிகளில் ஒன்று
அதன் பயிற்சியாளரைப்
பாதி தின்றுவிட்டிருந்தது

எங்கிருந்தோ வெடித்த
துப்பாக்கி தோட்டா
வலைக்கு வெளியில்
திகைத்து நின்ற புலியை
முதலில் துளைத்தது

வலைக்குள் குழுக்குள்ளும்
இருக்கும்வரை
எல்லோருக்குமே
பாதுகாப்புதான் போல...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

லேசும் தூசும்


லேசும் தூசும்

தூக்கி
சுமக்கும் அளவிற்கு
துயரங்கள்
லேசானவைதான்

நானோ
அதைவிடவும் தூசானவனாக
மாறிவிட்டேனே
என்ன செய்ய...

சங் கன்ச்சில்


வாசிப்பில் சிங்கை எழுத்தாளர் அழகுநிலாவின் சிறுகதைகள் 'சங் கன்ச்சில்'.

ஒருசிலரை மட்டும்தான் எந்தத் தயக்கமும் இன்றி, இயல்பாகவே 'அக்கா' என்று அன்புடன் அழைக்கிறேன். 
அப்படி நான் எப்போதும் அன்புடன் 'அக்கா' என்று அழைக்கும் எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு. 
இது அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஏப்ரல் 20, 2026

- விரல் முளைத்த இலை -


என்
உள்ளங்கை நிறம் கொண்ட
ஏதோ ஒரு
மரத்தின் இலையை
இன்று கண்டேன்

உதிர்ந்த இலையா
என் உஷ்ணத்தை
உணர்ந்த இலையா என
பிடிபடவில்லை

இந்த நெடுஞ்சாலையில்
இன்னும்
சூரியனே முழுதாய் விழிக்காத
நேரத்தில்
என்னிடம் ஏன் வந்ததென
தெரியவில்லை

அதற்கும்
விரல் முளைக்கும் ஆசை
வந்திருக்க வேண்டும்

உள்ளங்கையில் அது
என் விரல்களைக் கொஞ்சநேரம்
தனதாக்கி கொண்டது

விரலாசை இன்று
நிறைவேறிய பின்பு
அணில் குஞ்சு போல
வலிக்காது பிடித்து
மெல்ல மெல்ல நடந்து
அருகிலிருந்த
மரத்தின் அடியில்
இறக்கிவைத்தேன்

முத்த ஈரத்தை விரலிடுக்களில்
விட்டுவிட்டு
சட்டென துள்ளி குதித்து
மரத்தில் ஏறி
காய்ந்திருந்த கிளையில்
ஒட்டி
துளிர்க்கத் தொடங்கியது

தன் வாலை
மெல்ல அசைத்து
என்னையும் வழியனுப்பியது...

#தயாஜி
(நன்றி - புகைப்படம் குமரன்)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்