- குடிகார குடும்பத்திற்கு ஒரு முட்டாள்த்தனமான யோசனை-
குடித்தால் மட்டுமே அவனோ அவளோ வாழ்வை இரசிக்க தெரிந்த சுதந்திர மனிதர்கள் என்கிற எண்ணத்தை பலர் முழுதுமாய் நம்பி கொண்டிருக்கிறார்கள்.
'பரம்பரை குடிகாரன் கூட குடிச்சா நேரா வீட்டுக்குதான் வரான். ஆனா இந்த புது குடிகாரன்கள் குடிச்சிட்டு பண்ற அட்டாகாசங்களும் அருவருப்புகளும் இருக்கே தாங்கல...' என நாம்கூட குடியைத் தற்காத்துதான் பேச வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டோம்.
மத இன கலாச்சார கொண்டாட்டங்களின் குடியையும் ஓர் அங்கமாக சேர்த்ததில் இருந்து எல்லாமே தொடங்கிவிட்டது.
குடும்பத்தில் யாரும் குடித்திருந்தால் வீட்டின் பின்வாசல் வழியாக வீட்டிற்குள் வருவார்கள். இப்போது அந்த வீட்டில் யார் குடிக்கவில்லையே அவர்தான் வீட்டின் பின்வாசல் வழி வருகிறார். ஏனெனில் வீட்டில் வாசலில் அமர்ந்து ஒரு குடும்பமே குடித்து கொண்டு இருக்கிறது.
இதை படித்துவிட்டு "இவ்வளவு சொல்றியே நீ குடிப்பியா குடிக்கமாட்டியா?" என கேட்பார்களே தவிர தாங்கள் ஏன் குடிக்கிறோம் அதனால் எதையெல்லாம் மெல்ல மெல்ல இழக்கிறோம் என யோசிக்க மாட்டார்கள்.
குடிப்பதால் குடிக்கின்றவர்கள் செத்துப்போவதை விட அதற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாதவர்கள்தான் ஆங்காங்கே இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் துயரத்தின் உச்சம்.
ஒருவன் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுகிறான். சாலையில் விபத்து ஏற்படுகிறது. குடித்தவனுக்கு போதைகூட தெளியவில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் அந்த வழியாக பல கனவுகளுடன் வீட்டில் தனக்காக காத்திருக்கும் குழந்தைகளுடன் தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் குடும்பத்தின் எதிர்ப்பார்ப்புடன் வந்து கொண்டிருந்தவன் அந்த விபத்தில் இறக்கிறான். மருந்துக்கு கூட குடிக்காதவன். குடித்த ஒருவனால் விபத்துல் சிக்கி இறந்து போகிறான்.
அவ்வளவுதான் இறந்தவன் கதை முடிந்துவிட்டது. குடித்தவன் சட்டத்தின் முன் நிற்கிறான். சில சமயம் தண்டனை கிடைக்கிறது. சில சமயம் யாரும் எதிர்ப்பாராத தீர்ப்பும் கிடைக்க வாய்ப்புண்டு.
ஆனால் ஓர் உயிரை இழந்த அந்தக் குடும்பத்தின் நிலை? வாழ்நாள் முழுக்க துயர்தானே.
என்னிடம் ஒரு முட்டாள்த்தனமான யோசனை இருக்கிறது. சரி, வேண்டாம் இப்படி சொல்கிறேன் சினிமாத்தனமான ஒரு யோசனை இருக்கிறது.
இப்படி இறந்து போனவரால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பையும் குறிப்பிட்ட காலம் வரை அந்தக் குடும்பத்திற்கு தேவைப்படும் பிள்ளைகளுக்கான கல்வி செலவு, ஆரோக்கியத்திற்கான செலவு, காப்பீட்டு கட்டணம், வீட்டு வாடகை, வாகனத்திற்கான மாத கட்டணம் என அவற்றை கட்ட வேண்டிய முழு பொறுப்பையும் குடித்து வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவனின் குடும்பமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எவனோ குடித்து எவனையோ கொன்றதற்கு ஒரு குடும்பமே பொறுப்பு எடுக்க வேண்டும என கோவம் வருகிறது தானே. வரட்டும் அந்தக் கோவத்தை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். பயன்படும்.
தன் குடும்பத்திலேயே ஒரு மகனாக அண்ணனாக தம்பியாக அக்காவாக கணவனாக இப்படி பல ஆகக்களைச் சேர்த்து கொள்ளுங்கள்.
இப்படி குடித்து நாசமாய்ப் போவதைத் முதற்கட்டமாக தடுக்காதவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள்தானே. அப்படியிருக்க அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களும்தானே பொறுப்பெடுக்க வேண்டும்.
அல்லது ஒரு குடிகாரனை வீட்டில் வளர்க்காமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அளவு தெரிந்து குடிக்க பழக்கியிருக்க வேண்டும்.
இப்போது கூட பாருங்களேன். குடிப்பவனுக்கு அளவு தெரிய வேண்டும் எனதான் முடிக்கின்றேன். முற்றாக குடிக்காதே என சொல்ல முடியவில்லை. நிலமையை அப்படித்தான் உருவாக்கி இருக்கிறோம்.