பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

பிப்ரவரி 15, 2026

வாசிப்பில்


மஹா சிவராத்திரியில் ஜெயமோகனின் 'துளிக் கனவு'.

'ஒன்றின் இலக்கியமதிப்பு என்பது சொல்லப்பட்ட தளத்தில் இருந்து அது விரிந்து பரவும் வீச்சினாலும் தொடர்ந்து முளைத்துக் கொண்டிருக்கும் அதன் விதைத் தன்மையாலும் உருவானது.'
- ஜெயமோகன்

புத்தகச்சிறகுகள் 1

நண்பர்களுக்கு வணக்கம்.

இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், 'புத்தகச்சிறகுகள்' எனும் தொடரைத் தொடங்கியுள்ளேன்.  புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் இதன்வழி உங்களோடு பகிர்கிறேன்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நாளிதழில் தொடர் எழுதுவதில் எனக்கும் மகிழ்ச்சி.

இணையத்தில் வாசிப்பதை தவிர்த்து நாளிதழ்களையும் வார மாத இதழ்களையும் விரும்பி வாசிக்கும் வாசகர்கள் இருக்கவே செய்கிறார்கள். எனக்கும் கூட அப்படி கையில் எடுத்து மடியில் வைத்து நாற்காலியில் சாய்ந்தபடி வாசிப்பதில் அலாதி இன்பம்.

இனி ஒவ்வொரு வாரமும் புத்தகங்கள் குறித்த 'புத்தகச்சிறகுகள்' எனும் எனது தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும். 

வாசிப்போம்... நேசிப்போம்... வளர்வோம்...

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை



பிப்ரவரி 08, 2026

- என்னிடம் உள்ளன ஏராளமான கடிதங்கள் -



என்னால் புகைப்படமாக எடுக்க முடியாதவற்றை எழுத்தில் எழுதி சேமித்து கொள்கிறேன்.

என்னால் புகைப்படமாக எடுக்க முடிந்தவற்றின் பின்னணியில் இருக்கும் அனுபவத்தையும் எழுத்தில் சேமித்து கொள்கிறேன்.

மொத்தத்தில் எழுதுவதுதான் எனக்கு எல்லாம். இதுவொரு முகவரியற்ற கடிதம். என் எழுத்தை வாசித்து முடித்து அது உங்களுக்கானது என நீங்கள் நினைத்தால் உங்கள் பெயரை அதில் எழுதி, அக்கடிதம் உங்களுக்கானதாய்ப் பாவித்து கொள்ளுங்கள்.

என் எழுத்து உங்களுக்கானது அல்ல என நீங்கள் நினைத்தால், யாரோ ஒருவரின் கடிதம் உங்களுக்கு வந்துவிட்டதாகப் பாவித்து அதனை பத்திரப்படுத்தி கொள்ளுங்கள். 

என்றாவது ஒருநாள் அந்தக் கடிதத்திற்கான நபரை நீங்கள் சந்திப்பீர்கள் என எழுதியவனுக்கு நன்றாகவே தெரியும்.

ஏனெனில் என்னிடமும் அப்படி பல கடிதங்கள் இருக்கின்றன. அதற்கானவர்களை நான், தினம் தினம் சந்தித்தபடி இருக்கிறேன்.....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

பிப்ரவரி 07, 2026

பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 5 – நிறைவு)

    பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 5 – நிறைவு)


பத்துமலை படிக்கு கீழ் குடும்பத்துடன் நின்றோம். பொம்மியைத் தூக்கியபடி முதற்படியைத் தொட்டு வணங்கினோம். எங்களின் படியேற்றத்தைத் தொடங்கும் முன்; பொம்மி அவளை கீழே இறக்கிவிடும்படி கேட்டாள். அவளால் அத்தனைப் படிகளையும் ஏற முடியும் என நான் நினைக்கவில்லை. சரி பாதி படிகளில் மீண்டும் தூக்கி கொள்ளலாம் என்று இல்லாளிடம் சொல்லி பொம்மியின் கையைப் பிடித்தபடி நாங்கள் ஒன்றாக படியேற ஆரம்பித்தோம். பொம்மியின் கையை நான் பிடித்திருக்க அவள் என்னை இழுத்துக்கொண்டு படியேறினாள். எந்த இடத்திலும் சோர்ந்திடாது எங்கும் நிற்காது பொம்மி படியேறிக்கொண்டிருந்தாள்.

முதல் படியில் காலை வைத்து ஏறத்தொடங்கியதும், நான் அவள் கையைப் பிடித்திருந்ததாய் நினைத்தது மெல்ல மறந்து பத்துமலையான்தான் எங்கள்  மூவரின் கைகளையும் பிடித்திருக்கிறான் என்கிற எண்ணம் வலு பெற. ‘வேல்… வேல்…’ என கோஷமிட ஆரம்பித்தேன். கோஷம் எங்களுடன் படியேறிக்கொண்டிருந்த எல்லோரிடத்திலும் இருந்து எதிரொலித்தது. நாங்கள் தனியாக இல்லை முருகனை நம்புகிறவர்கள் எல்லாமே அந்தப் பத்துமலையானின் குடும்பம்தானே என்பது போல ‘வேல்… வேல்…’  கோஷம் ஒலிக்கவும். ஒலித்த கோஷம் ஒவ்வொரு திசையில் இருந்தும்  எதிரொலிக்கவும் நாங்கள் படியேறிக்கொண்டிருந்தோம். அந்தப் படி எங்கள் கால்களை சுடவேயில்லை.  

பல முறை பத்துமலை படியில் ஏறியிருக்கிறேன். ஒவ்வொரு இடமாக நின்றபடி மூஞ்சுவாங்கிதான் மெல்ல மெல்ல ஏறியிருக்கிறேன். அதுவும் இப்போதைய என் உடல்நிலை, நான் என்  உடலை வருத்தி செய்வது எதையும் என்னுடல் இப்போது ஏற்றுக்கொள்வதில்லை. சட்டென தலை சுத்தல் ஏற்பட்டு மயக்கம் வந்துவிடும்.

 ஆனால் இம்முறை எங்கள் கையைப் பிடித்து அழைத்தவன் முருகன் என்பதால் எந்தக் களைப்பும் அசதியும் அருகில் வரவில்லை. உடல் உபாதைகளுக்கு சாப்பிட்ட மருந்துகளின் பக்கவிளைவுகளால் நூற்றுக்கும் அதிகமான எடை கொண்டிருந்த என் உடல் எனக்கு எடையற்றதாகவும் தோன்றியது. சாதாரணமாக நடக்கும் போது ஏற்படும் முட்டிவலியும் இன்றி கால்கள் படியேறியபடி இருந்தன.

 பொம்மி எங்கள் இருவரையும் இழுத்தபடி உற்சாகமாய்க் கோஷமிட்டபடி படியேறிக்கொண்டிருந்தாள். பொம்மி கடந்து செல்லும் படியில் நேர்த்திக்கடன்களுடன் பயணிப்பவர்கள் சிலர் அவளின் தலையில் கைவைத்தபடி ‘முருகா…’ என்றே சொல்லி மகிழ்ந்தார்கள். பத்துமலையானைக் காண படியேறும் ஒவ்வொருவருடனும் அந்தப் பத்துமலையானும் ஏதோ ஒரு வடிவில் படியேறிக்கொண்டுதானே இருக்கின்றான்.

பொம்மியின் தலையில் கைவைத்தவர்கள் எல்லாம் அந்த முருகனா, கைப்பிடித்து நடக்கும் பொம்மிதான் முருகனா என தெரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கில்லை. ஆனால் கந்தனை நம்பிவிட்டால் நாம் ஒருபோது தனியாக விடப்படமாட்டோம் என்பதில் எனக்கும் அனுபவம் இருக்கிறது. எனக்கு மட்டுமா தொடர்ந்து இதனை நீங்கள் படித்து வருவதற்கும் அதுதானே; அந்தக் கந்தன்தானே காரணம். இந்த அனுபவங்களின் எண்ணிக்கைதான் பின்னாளில் நமக்கு பக்குவமாக பரிணமிக்கும்.

எந்த இடத்திலும் நிற்கவிடாமல் பத்துமலையான் பொம்மியைக் கைப்பிடித்து அழைக்க; அவளும் எங்களை இழுக்க நாங்களும்  நிற்க வழியின்றி அதற்கான தேவையும் இன்றி ‘வேல்.. வேல்…’ கோஷத்துடன் படியேறி முடித்தோம்.

பத்துமலை கோவிலுக்கு உள்ளே நுழைந்தோம். நாங்கள் செல்லும் வழியில் கூட்டம் அதிகம் இல்லை. நேராக பால்குடத்திற்கான சீட்டை வாங்க சென்றோம். மூன்று பேருக்கு பால்குடம் என்றோம். அங்கு அமர்ந்திருந்தவர் எங்கள் இருவரையும் பார்த்தார். பின் மேஜை உயரமே இருக்கும் பொம்மியைப் பார்த்தார். “குட்டி முருகனுக்கு டிக்கட் இல்லை…” என்றார். நாங்கள் எங்களுக்கு மட்டும் சீட்டை வாங்கி கொண்டு வரிசையில் நிற்கலானோம். நிற்பது போல தோன்றினாலும் எந்தத் தடையும் இன்றி நேரே நடந்து கொண்டிடுந்தோம். மூலஸ்தான முருகனுக்கு பாலுற்றி கொண்டிருந்தார்கள். எங்கள் முன்னே சென்ற குடும்பத்தினரில் ஒருவர் முட்டி போட்டு நடக்க ஆரம்பித்தார். எங்களுக்கு அவர்களைத் கடந்து முன்னே செல்லும் வாய்ப்பு அமைந்தது.


பக்தர்களிடம் இருந்து பால்குடங்களை வாங்கி அதன் முகப்பில் இருக்கும் துணியை கிழித்து அல்லது கழட்டி கொடுப்பதற்கு சிலர் நின்றிருந்தார்கள். அதே போல பாலூற்றும் இடத்திலும் பால்குடங்களை வாங்கி அங்கிருக்கும் ஐயர்களுக்கு கொடுக்கவும் சிலர் நின்றிருந்தார்கள்.

நாங்கள் எங்கள் பால்குடங்களைக் கொடுத்தோம். பொம்மியுடைய தூக்குச் செம்பில் விபூதி இருப்பதாய்ச் சொல்லியபடி கொடுத்தேன்.

பாலையும் பன்னீரையும் வேலவனுக்கு ஊற்றினார்கள். விபூதியை முருகனுக்கு அபிஷேகமாய்க் கொட்டினார்கள். காலையில் ஶ்ரீ மீனாட்சி சுந்தரேசர் ஆலயத்தில் இருந்ததைவிட இம்முறை முருனுக்கு மிக அருகில் இருப்பதாய்த் தோன்றியது.

முருகனின் மீது அபிஷேகம்  செய்யப்பட்டு கீழே கொட்டும் பொம்மியின் விபூதி; கீழே பட்டு வெளியில் நின்ற எங்கள் மீதும் பட்டது. உடல் புல்லரித்தது.

கடந்த ஆண்டுகளில் பால்குடத்தை கொடுக்கவும் அவர்கள் பாலை வேலவனுக்கு ஊற்றி, எங்கள் குடத்தை எங்களுக்கே கொடுப்பதும் மின்னல் வேகத்தில் நடந்தன. இம்முறை அடுத்த பக்தர்கள் வரும்வரை நாங்கள் அங்கேயே நின்றபடி பத்துமலையானை கண்குளிர பார்த்து; குளிர்ந்த கண்கள் கலங்கியபடி அங்கிருந்து நகர்ந்தோம்.

எப்போதும் போல அங்கேயே மற்றவர்களுடன் நாங்களும் அமர்ந்து இளைப்பாறினோம். அப்போதெல்லாம் உடலில் அசதி மிகுந்திருக்கும். ஆனால் இப்போது உடலில் அசதியென எதுவுமில்லை. இருந்தும் அங்கே அமர்ந்து உள்ளே வரும் பக்தர்களைப் பார்த்து கொண்டிருந்தோம்.

பின் பொம்மியைத் தூக்கியபடி உள்ளே வரும் வண்ண வண்ண காவடிகளை பொம்மிக்கு காட்டத் தொடங்கினேன். இல்லாள் அமர்ந்திருக்க, பொம்மியுடன் உள்ளேயே சில சுற்றுகள் சுற்றினேன். அங்கு சில பெரிய சேவல்கள் இருந்தன. அதன் அருகில் சென்றும் தொட்டும் விளையாடினோம்.

          சட்டென வயிறு பசித்தது. சாப்பிட கீழேதான் இறங்கவேண்டும் என  நினைத்து இல்லாளை நோக்கி நடந்தேன். செல்லும் வழியில் ஒருவர் என்னை அழைத்தார். இப்போதுதான் நேர்த்திக்கடனை முடித்திருப்பார் போல வியர்வையால் முழுக்க நனைந்தபடி நெற்றி நிறைய விபூதியுடன் இருந்தார்.

“தம்பி அங்க எங்க போறிங்க.. தோ பாருங்க பொங்க சோறு கொடுக்கறாங்க.. நீங்களும் வாங்கிக்கோங்க… அப்பறம் முடிஞ்சிடப்போகுது…” என்றார்.

அட ஆமாம் நானும் அந்த வழியாகத்தான் வந்தேன் என் கண்ணுக்கு தெரியவில்லை. அவருக்கு நன்றி சொல்ல திரும்பினேன். அதற்குள் அங்குள்ள பக்தர்களுள் கலந்துவிட்டார்.

கணவனும் மனைவியும் வருகிறவர்களுக்கு உள்ளங்கையளவு பொட்டலத்தில் புளிசோறும் கொண்டை கடலையையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் பொம்மியும் ஆளுக்கொரு பொட்டலத்தை வாங்கி கொண்டு இல்லாளிடம் சென்றோம். அவருக்கும் பசிதான் போல. எங்கள் கையைப் பார்த்தவர் உற்சாகமாகிவிட்டார்.

மூவரும் சாப்பிட்டோம். மனம் நிறைந்த அனுபவத்தைக் கொடுத்த பத்துமலையான் எங்கள் வயிறையும் நிறைத்தான். எங்களை அறியாமல் கண்கள் கலங்கின.

இந்த ஆண்டு தைப்பூசத்தை எந்த ஆண்டிலும் மறக்காதபடிக்கு பத்துமலையான் செய்துவிட்டான். மனதில் புதுத்தெம்புடன், இனி அவன் பார்த்துக்கொள்வான் என்ற மன தைரியத்துடன் மீண்டும் அவனை வணங்கிவிட்டு எங்களின் இந்த ஆண்டு பயணத்தைத் தொடங்கினோம்.

‘எதையும் இரட்டைப்படையாய் விடக்கூடாது…’ என அம்மா அடிக்கடி சொல்லுவார். இன்று காலையில் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் ஒருமுறையும் பத்துமலையானுக்கு ஒருமுறையும் என இரண்டு முறைதான் பால்குடம் எடுத்திருந்தோம். மூன்றாவதாக எங்கே எப்போது அமையப்போகிறதோ என்கிற கேள்வி எழுந்தது.

அங்கே ஒர் அம்மா தலையில் பால்குடத்துடன் கண்களில் கண்ணீர் வழிய முருகனை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போதுதான் தெரிந்தது பக்தியாலும் அன்பாலும் மனம் உருகி அழும் கண்ணீரையும் கந்தக்கடவுள் தனக்கான அபிஷேகமாக எடுத்து கொள்கிறவன் தானே.

எங்களின் மூன்றாவது பால்குடமும் அப்படித்தான். என நினைத்தபடி அதுவரை துடைத்துக் கொண்டிருந்த கண்ணீரைத் துடைக்காமலேயே நடக்க ஆரம்பித்தோம். உள்ளிருந்து வெளியே வந்து, இறங்குவதற்கு முன்பாக படியை வணங்கவும் இதுநாள் வரையில் கண்களில் சேமித்து வைத்த கண்ணீர் எல்லாம் அழுது முடிந்ததாய்த் தொன்றியது.

மீண்டும் மனதிற்குள்வேல்… வேல்…’ என்று சொல்லியபடி, பத்துமலை படியில் இறங்க ஆரம்பித்தோம்.

அந்த இறக்கம், நாம் எல்லோருக்குமே வாழ்க்கையில் ஏற்றமாக அமைய, அந்தப் பத்துமலையான் நாம் எல்லோருக்கும் அருள் புரியட்டும்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா….

 

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த

கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்

தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே


(அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் – பாடல் 38)

பிப்ரவரி 06, 2026

‘நாங்களும் மண்ணின் மைந்தர்கள்’ – கவிதைத் தொகுப்பு வெளியீடு.

 


நாளை (பிப்ரவரி 7-ம் நாள்)  வெளியீடு காண்கிறது, மனோகரன் கிருஷ்ணனின் ‘நங்களும் மண்ணின் மைந்தர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு. இவ்வெளியீடு PAPA MESS, No 3, Jalan Metro 1/1 Metro, Puchong-கில் பிற்பகல் மணி நான்குக்கு நடைபெறுகின்றது.

இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நாகம்மாளின் மனக்குறிப்புகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு 2020-ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதனை தொடர்ந்து அவரது முதல் கவிதைத் தொகுப்பு இவ்வாண்டு வெளிவருகிறது. தொடக்கத்தில் தனது வலைப்பூவிலும் பின்னர் முகநூலிலும் தான் எழுதியக் கவிதைகளை இந்தப் புத்தகத்திற்காக தொகுத்திருக்கின்றார்.

இந்தக் கவிதைத் தொகுப்பில் 242 கவிதைகளும் எண்ணிக்கையில் சேர்க்காத குறுங்கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

மனோகரன் கிருஷ்ணன், தன் கவிதைகளில் காதலையும் மொழி மீதான அன்பையும் அலையும் மனதின் பதற்றத்தையும் இளைஞனுக்கு தேவையான தன்னம்பிக்கையையும் நாம் இழந்து கொண்டிருக்கும் அடையாளத்தையும், நமக்கு குறைந்து கொண்டிருக்கும் மரியாதையையும் மனிதத்திற்கு தேவையான தத்துவத்தையும் பேசுபொருளாக ஆக்கியிருக்கின்றார்.

****

கண்ணிமைக்கும் நேரத்தில்

கனவுகள் ஒவ்வொன்றாய்

 களவாடப்படுகின்றன

*****

தாழ்வுற்ற

நிலத்தில் தான்

தலை சாய்கிறது

நதி…

****

அது

காதலின் கண்கள்

மயக்கப் போதையில்

தள்ளாடும் வண்டு

****

ஒரு ரொட்டித் துண்டுக்கு

ஏங்குகிறது

ஏசு வாழ்ந்த பாலஸ்தீனம்

****

இப்படி பல குறுங்கவிதைகளும் 242 கவிதைகளும் அடங்கிய மனோகரன் கிருஷ்ணனின் ‘நாங்களும் மண்ணின் மைந்தர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு வெளியீட்டில் சந்திக்கலாம்.

பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 4)

 

பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 4)



கந்தனின்  கருணை; மேகங்களின் நிழலைக் கொடுக்க நாங்கள் பத்துமலை முருகன் ஆலய வாசலில் நுழைந்தோம்.

உள்ளே கூட்டமாக இருந்தது. இதுவென்ன கூட்டம்! இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்நிலம் முழுக்க மஞ்சள் அலங்கரிக்கும் என  எங்களுக்கு தெரிந்தது. நாங்கள் செல்லும் வழியில் முடி காணிக்கை கொடுக்கும் இடம் இருந்தது. அங்கு ஒருவர் ஒலிபெருக்கியைக் கையில் வைத்து கொண்டு முடிகாணிக்கை செய்யவேண்டியவர்களை அழைத்து கொண்டிருந்தார்.

பொம்மியைத் தூக்கி வைத்துக் கொண்டு அந்த வழியே நடந்து போகும்போது; அந்த நபர் எங்களைப் பார்த்தார். பொம்மியும் அவரைப் பார்த்து கையை ஆட்டினாள். உடனே அவர் ஒலிபெருக்கியில் “என்ன பாப்பா…. அப்பாக்கு முடி காணிக்கை கொடுத்திடுவோமா ?” என்றார். அவர் ஏன்  சம்பந்தமே இல்லாமல் என்னை இழுக்கிறார் என தெரியவில்லை. ஆனால் அதற்கு ஏற்றார் போல என் பரட்டை முடியை பொம்மி அவளின் இரு கைகளாலும் பிடித்து இழுக்கத் தொடங்கினாள்.

நான் அங்கேயே நின்றுவிட்டேன். இல்லாளை திரும்பி பார்த்தேன். “என்ன.. முடி காணிக்கையா…?” என்றார்.

“இல்ல.. அது….”

“அதான் தெரியிதே… வாங்க போய்ட்டு முடி காணிக்கை கொடுத்துட்டு வருவோம்…. இல்லைன்னா உங்க முருகன் கோவிச்சிக்கக் போறாரு… ” என்றபடி அவர் முன்னே நடக்க, நானும் பொம்மியும் அவர் பின்னே நடந்து முடிகாணிக்கை கொடுக்கும் இடத்தை அடைந்தோம்.

எனக்கு முடிகாணிக்கை  கொடுப்பது வேண்டுதல் அல்ல. ஆனால் அது எப்படியோ அமைந்துவிடும். எந்த திட்டமிடலும் இல்லாமல் அதற்கு ஏற்ற ஏற்பாடுகளும் இல்லாமல் போட்டிருந்த ஆடையுடனேயே பலமுறை முடிகாணிக்கை கொடுத்திருக்கிறேன். எனக்கு நினைவு தெரிந்து முருகனுக்கு முடிகாணிக்கை கொடுக்க ஆரம்பித்ததே ஒரு சுவாரஸ்யமான கதைதான். அங்கிருந்துதான் முடிகாணிக்கை கொடுக்கும் பழக்கமே அதன் வழக்கத்திற்கு வந்தது. ஒருநாள் அதைப்பற்றியும் எழுதுகிறேன். எழுதுவதற்குத்தானே நானிங்கு இருக்கிறேன்.

 முடிகாணிக்கைக்கு சீட்டு வாங்கும் போது முடிக்கும் முகத்திற்கும் சேர்த்து இருபத்து ஐந்து வெள்ளி என்றார். முகத்தை ஒன்னும் செய்ய வேண்டாம் தலையில் மட்டும் கத்தி வைங்க என்றேன். அங்குள்ளவரும் சிரித்தபடி தலை முடிக்கு மட்டும் இருபது வெள்ளிக்கான சீட்டைக் கொடுத்தார். வழக்கமாக கடையில்தான் அமர வைப்பார்கள். இம்முறை அதிக ஆட்கள் இருந்ததால் கடைக்கு வெளியிலும் பத்து நாற்காலிகள் வரை  போட்டிருந்தார்கள். நாற்காலி முழுக்க பக்தர்கள் முடிகாணிக்கைக் கொடுத்தபடி இருந்தார்கள்.

ஒரு நாற்காலி காலியானதும் நானும் அங்கு சென்று காலியிடத்தை பூர்த்தி செய்தேன். கடை பணியாளர் தலைமுடியைச் சரிக்க சரிக்க பொம்மி கண்கள் விரிந்த நிலையில் பார்த்து கொண்டிருந்தாள். இனி அவள் கோவப்படும்போதும் உற்சாகமாய் விளையாடும் போது பிடித்து இழுக்க தலையில் முடி இருக்காது என்பது அவளுக்கு கஷ்டம்தான் இல்லையா?.

கொஞ்ச நேரத்தில் பொம்மி அப்பாவை இரசிக்க அரம்பித்துவிட்டாள். தலை மொட்டையானதும் கடைக்குள்ளே சென்று தலையை கழுவினேன். அங்கு ஒரு அம்மா இருப்பார். ஒவ்வொருவரின் தலைக்கும் தண்ணீரை ஊற்றி ஆங்காங்கே ஒட்டிக்கிடக்கும் முடியையும் சுத்தம் செய்து அனுப்புவார். கழுவிய பின் அங்கிருந்த சந்தனத்தை தலையில் அப்படியே அப்பிக்கொண்டேன்.

எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த பொம்மி; வழக்கம் போல தூக்கச்சொல்லி கேட்டாள். அவளுக்கு அப்பாவின் மொட்டைத்தலையில் பக்கத்தில் பார்க்க வேண்டும் அவ்வளவுதான். தூக்கினேன்.  தோளில் சாய்ந்தவள் சட்டென மண்டையில் ஓர் அடி அடித்தாள். காயாத சந்தனம் அவள் முகத்திலும் தெரித்தது. அவள் கையை அப்படியே எடுத்து என் முகத்தில் தேய்த்தாள். நாங்கள் சிரித்து கொண்டோம்.

பிறகு அங்கிருந்து பத்துமலை படிக்கு அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு வந்தோம். சிலர் ஆற்றங்கரைக்குச் சென்று அங்கிருந்து தங்களுடைய நேர்த்திகடனை கொண்டுவருவார்கள். சிலர் இந்த விநாயகர் ஆலயத்தில் இருந்தே அவர்களின் நேர்த்திக்கடனை எடுத்துச் செல்வார்கள். நாங்களும் இங்கிருந்துதான் எங்கள் நேர்த்திகடனை எடுப்போம்.

வெளியிலும் உள்ளேயும் கூட்டமாக இருந்தது. எப்படியோ கோவிலுக்குள்ளே நுழைந்தோம். உள்ளே பால்குடங்களை தயார் செய்வதற்கு ஏற்றபடி மேஜையை வைத்திருந்தார்கள். நாங்கள் அங்கு செல்லவும் எங்களுக்கான இடம் காலியாவதும் சரியாக இருந்தது. எங்களின் குடங்களை மேஜையில் வைத்தோம்.

இல்லாள் அவரது ‘தூக்குச் செம்பில்’ பன்னீரை ஊற்றினார்.  பொம்மியின் தூக்குச் செம்பில் ஏற்கனவே விபூதி இருந்தது. எனது குடத்தில் அரிசி மாவை போட்டு வைத்திருந்தார். இப்போது கொண்டு வந்திருந்த தண்ணீரை குடம் நிரம்ப ஊற்றினார்.

கோவில் கருவறைக்கு சென்று விபூதி பூச முடியாதபடிக்கு கூட்டமாக இருந்தது. ஆனால் எங்கள் மேஜை முழுக்க விபூதி , சந்தனம் , குங்குமம் என பாக்கெட்டுகளிலும் கிண்ணங்களிலும் இருந்தன. அதையே எங்கள் குடங்களுக்கு பூசி எங்களுக்கும் பூசிக்கொண்டோம்.

எங்கள் காலுக்கு கீழேயே சிலர் நேர்த்தி கடன்களை முடித்த அசதியில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு தொல்லை கொடுக்காதபடி நாங்களும் எங்கள் வேலைகளைச் செய்துகொண்டிருந்தோம். அதில் ஒருவர் கீழே நின்றிருந்த பொம்மியைப் பார்த்து அவளது காலைத் தொண்டு வணங்கினார். அதற்கு ஏற்றார்ப்போல பொம்மியும் அவள் குடத்தில் இருந்த விபூதியைத் தொட்டு அவருக்கு வைத்தாள்.

இதனைப் பார்த்த எனக்கே உடல் சிலிர்த்தது. யாரின் கண்களுக்கு, யார் யாராக தெரிய வேண்டும் என்பது நம் கையிலா இருக்கிறது. எல்லாமே கந்தனின் ஏற்பாடுதானே.



இப்போது நாங்கள் மூவரும் பத்துமலை படி முன் நிற்கின்றோம். பொம்மியைத் தூக்கி வைத்தபடி குனிந்து படியைத் தொட்டு வணங்கினோம். பொம்மியும் கீழே இறங்கி படியேற்றப்போவதாகச் சொல்கிறாள். நானும் இல்லாளும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டோம்.

“நடக்க வைப்போம்.. ரெண்டு மூனு படி ஏறினதும் கால் வலிக்க ஆரம்பிச்சிடும்.. அப்பறம் தூக்கிக்கலாம்..” என்றேன்.

என் ஒரு கையில் குடமும் மறு கையில் பொம்மியையும் பிடித்திருந்தேன். பொம்மியின் கையில் அவளுடைய தூக்குச் செம்பும் இல்லாளில் கையில் அவரது தூக்குச் செம்பும் இருந்தன.

மீண்டும் ஒருமுறை பொம்மியுடன் படியைத் தொட்டு வணங்கி எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். நான் கையைப் பிடித்திருந்தாலும் பொம்மிதான் முதலடியை எடுத்து வைத்தாள்.

நான் தான் அவள் கையைப் பிடித்திருக்கிறேன் ஏன நினைத்தேன். அடுத்த நொடியே எங்கள் மூவரின் கைகளையுமே அந்தப் பத்துமலையான்தான் பிடித்திருப்பதாய்க் காட்டினான்.

உண்மையில் அது ஓர் அற்புதம்தான். யாருக்கு தெரியுமோ இல்லையோ முருகனின் பக்தர்களுக்கு அது நிச்சயம் தெரியும்.

பக்தர்களிடம் விளையாட்டு காட்டும் விளையாட்டு பிள்ளையும் அவன்தான்; பக்தர்களின் விளையாட்டு வினையாகும் போது நம்மைத் தாங்கிப்பிடிக்கும் அன்னையும் அவன்தானே.

படியேறும் எங்களுக்கு அந்தப் பத்துமலையான் அன்னையாக மாறிய கதை உங்களுகும் தெரிய வேண்டுமே.

 கந்தனின் அந்தத் திருவிளையாடலை அடுத்த பதிவில் சொல்லவா…?

பிப்ரவரி 04, 2026

பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 3)

 

பொம்மியுடன்  3-வது தைப்பூசம் (பகுதி 3)


எங்கள் வாகனம் பத்துமலையை நெருங்கியது. கோவில் எங்களின் இடது பக்கத்தில் இருந்தது. அதே போல இடது பக்க சாலை முழுக்கவும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இன்னும் சில இடங்களில் வாகனங்கள் நிறுத்த முடியாதபடிக்கு மோட்டார்களை நிறுத்தியிருந்தார்கள். மேற்கொண்டு யாரும் தத்தம் வாகனங்களை நிறுத்தி நெரிசலைக் கூட்டக்கூடாது என்பதற்காக சில பாதுகாவலர்கள் ஆங்காங்கே நின்றிருந்தார்கள்.

வாகனத்தில் இருந்து கொண்டே அதை எங்காவது நிறுத்துவதற்கு இடம் இருக்கிறதா என பார்த்தேன். பார்த்து கொண்டிருந்தபடியே கோவிலைத் தாண்டிவிட்டோம். கடந்த ஆண்டு கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் ஆசிரமத்தில் வாகனத்தை நிறுத்த இடம் கிடைத்தது. பதினைந்து ரிங்கிட்தான் வாங்கினார்கள். அங்கேயே போகலாம் என்று பார்த்தால் இம்முறை அங்கே நுழைய முடியாதபடி மறைத்திருந்தார்கள். ஆக அங்கே போக முடியாது. தூரத்தில் வாகனத்தை நிறுத்தி  வைத்து பொம்மியுடன் நடந்து வர எனக்கு விருப்பம் இல்லை. அதுவும் இந்த வெயிலில் நாங்களே நடக்க சிரமப்படுவோம்.

“முருகா ஒரு பார்க்கிங்கைக் காட்டேன். உன்னையத்தானே பார்க்க வர்றோம்…” என்றபடி சென்றுகொண்டே இருந்தேன். சட்டென ஒரு அறிவிப்பு பலகை கண்ணில் பட்டது. இல்லாள்தான் காட்டினார். வாகனங்களை நிறுத்தி வைக்க இடம் உள்ளதான அறிவிப்பு. அருகில் செல்லவும் அவர்கள் நிர்ணயித்த விலை தூக்கிவாரிப்போட்டது. நான்கு சக்கர வாகனங்களுக்கு ஐம்பது வெள்ளி என இருந்தது.


வருடத்திற்கு ஒருமுறைதான் என்றாலும் பட்ஜெட்டில் வாழ்கிறவர்களுக்கு எல்லா நாளுமே ஒன்றுதானே. இப்போதைக்கு ஐம்பது வெள்ளி கொடுத்து வாகனத்தை நிறுத்தினால் பால் குடங்களுக்கு அர்ச்சனை சீட்டு வாங்குவதில் சிக்கலாகிவிடும். தைப்பூசத்திற்கென்று குறிப்பிட்ட தொகையைத்தான் சேமித்திருந்தோம். அதுவும் காலையில் மீனாட்சி கோவிலில் பால்குடம் எடுப்பதற்காக கொஞ்சம் செலவானது.

இன்னும் கொஞ்ச தூரம் முன்னே சென்று பார்க்கலாம் என்று இல்லாளும் சொல்ல; அப்படியே செய்தேன். அருகில் ‘பெட்ரோனாஸ்’ பெட்ரோல் நிலையம் இருந்தது. அதற்கு அருகில் சில அடுக்குமாடி குடியிருப்புகளும் இருந்தன. அங்கே நுழையும் பாதையிலும் ‘பார்க்கிங்க்’ என அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். ஆனால் எவ்வளவு கட்டணம் என்பதை குறிப்பிடவில்லை.

இவ்வளவுதான் கட்டணம் என இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் கட்டணம் குறித்து அறிவிப்பு இல்லையென்றால் ஆளுக்கு ஒரு விலையைச் சொல்லுவார்கள். இருந்தும் ஏதோ நம்பிக்கையில் உள்ளே நுழைந்தேன்.

வளைந்ததும் உள்ளே இரு பாதைகளாகப் பிரிந்தன. ஒன்று குடியிருப்புக்கு முன்புறமாகவும் இன்னொன்று பின்புறமாகவும் சென்றன. நாங்கள் பின்பக்கமாக சென்று முதலில் பார்க்க நினைத்தோம். அந்த ஒத்தையடிப் பாதையில் கடைசியில் ஒரே ஒரு இடம் மட்டும் காலியாக இருந்தது. யாரோ ஒருவர் அருகில் ஒரு பெரிய லாரியை குறுக்கே நிறுத்தியிருந்ததால் யார் கண்களுக்கும் இந்த இடம் தெரியவில்லை. அருகில் வந்தால் மட்டுமே தெரியும். எங்களுக்காகவே அந்த இடம் காலியாக இருந்தது போல அமைந்தது.

‘நன்றி முருகா.. ‘ என்றபடியே வாகனத்தை உள்ளே கொண்டு போய் நிறுத்தினேன். முதலில் நான்தான் இறங்கினேன். யாரும் வந்து கட்டணத்தைக் கேட்கிறார்களா என சுற்றிப்பார்த்தேன். யாருமில்லை.  இல்லாளிடம் இங்கு  யாருமில்லை என்றபடி பொம்மியைத் தூக்கப் போனேன்.

“அங்க பாருங்க ஒருத்தரு இருக்காரு.. யாரும் இல்லன்னு சொல்றிங்க…” என்று இல்லாள் சொல்லவும்தான் மீண்டும் பார்க்கிறேன். ஒரு கருப்பு உருவம் லாரிக்கு அருகில் நின்றபடி என்னையே பார்த்து கொண்டிருக்கிறது. எங்கிருந்து வந்தார் என தெரியவில்லை. என் கண்ணுக்கு எப்படி தெரியாமல் நின்றார் எனவும் புரியவில்லை. நான் பார்ப்பதைப் பார்த்தவர்; நடக்கலானார். என்னிடம்தான் வருகிறார் என்று நினைத்தேன். என்னையும் கடந்து போகலானார்.

“அண்ணே.. இங்க பார்க்கிங் எவ்வளோ அண்ணே…” என்று கேட்டேன். நடந்தவர் நிற்கலானார். திரும்பினார். என்னையும் வாகனத்தையும் உள்ளே இருப்பவர்களையும் ஒரு பார்வைப் பார்த்தார்.

“என்ன.. முருகனைப் பார்க்கத்தானே வந்திருக்கீங்க… காசெல்லாம் ஒன்னும் வேணாம்.. போய்ட்டு நல்லா கூம்படு வாங்க… எவ்வளோ நேரம்தான் நானும் இங்கயே இருக்கறது… போங்க போங்க..” என்றபடி நகர்ந்தார்.

“யாராச்சும் வந்து காசு கேட்டா என்ன சொல்லட்டும்…”

“ம்… நான் சொன்னேன்னு சொல்லு; எவனும் வரமாட்டான்…” என சொல்லியபடியே நடக்கலானார்.

நானும் காருக்கு திரும்பி அவர் சொன்னதைச் சொன்னேன். பொம்மியைத் தூக்கிக் கொண்டேன். இல்லாளும் பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு இறங்கினார்.

“ஆமா.. அவர் பேர் என்னன்னு கேட்டிங்களா…”

“ஐயயோ ஆமா.. அப்பறம் எப்படி… யார் சொன்னார்னு சொல்றது…?” என்று பதறியபடி திரும்பினேன். அங்கு அவர் இல்லை. இல்லாளும் வந்து பார்க்கிறார். அந்த ஒருவழி பாதையில் ஒருவரும் இருக்கவில்லை.

“ஏங்க… உங்களுக்கு அவரோட பேரை கூட கேட்க தோனலையா..? என்ன நீங்க… அப்பறம் யாராச்சும் வந்து காசு கேட்டா.. இவர்தான் காசு வேணாம்னு சொன்னாருன்னு சொல்லலாம்தான…”

“உங்கிட்ட திரும்பி அப்டேட் பண்ணிட்டு பாக்கறதுகுள்ள அந்த மனுஷன் ஓடிப்போவாருன்னு எனக்கு எப்படிமா தெரியும்.. நீ வேற பேரை கேட்கல ஊரை கேட்கலைன்னு ஆரம்பிக்கற…”

“வண்ணமயில் ஏறும், என் தங்க வடிவேலோன். கந்தன் உனை காண தினம் ஓடிவருவேனோ..” என சாலையோரத்தில் யாரோ அவர்களின் கூடாரத்தில் பாடலை சத்தமாக வைத்தார்கள்.

“ஏன் முருகா… எல்லாம் உன் வேலைதான்னுதான் தெரியிதே… அப்பறம் எதுக்கு பொண்டாட்டிகிட்ட திட்டு வாங்க வைக்கற…” என்று சத்தம் வராதபடி கேட்டுகொண்டே நடக்கலானோம்.

பொம்மி அவளும் கீழிறங்கி எங்களுடன் நடக்கப்போவதாகச் சொன்னாள். இப்போதே நடந்தால், படியேற முடியாது. நான் தான் தூக்கி கொண்டு படியேற  வேண்டும் என தெரியும். ஆனால்; குழந்தைகளின் குறைந்தபட்ச ஆசைகளையாவது உடனுக்குடனே நடத்திக் கொடுப்போம் என கீழே இறக்கிவிட்டேன்.

அங்கிருந்த வளைவு பாதைக்கு அருகில் ஒரு குறுக்குப்பாதையும் இருந்தது. அங்கு நுழைந்து சாலையோரத்திற்கு வந்தோம். அங்குதான் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நடந்து கொண்டிருந்தார்கள்.

எல்லோரும் சொல்லி வைத்தார்போல தலையில் எதையோ வைத்து மறைத்தபடி நடந்தார்கள். சிலர் நாளிதழ், சிலர் தொப்பி, சிலர் துண்டு, சிலர் அவர்களின் கைகளையே வைத்திருந்தார்கள். எங்களுக்கு புரிந்தது. வெயில் சுட்டெரித்து கோண்டிருக்கிறது. பொம்மியும் ‘அப்பா சுடுகிறது’ என்றாள்.

“என்ன முருகா இப்படி வெயிலடிக்கற… நாங்களாம் பாவம் இல்லையா… ” என்று கேட்டபடி நடந்தேன். பாடல் போட்ட கடைக்காரர் ஒரு மாதிரியாய்ப் பார்த்தார். அவர் பார்த்தது கூட பரவாயில்லை. இல்லாளும் ஏதோ மாதிரி பார்த்தார்.

ஏதோ சொல்ல வாயெடுத்தவர் அமைதியானார். சட்டென வெயில் மறைந்தது. ஏதோ ஒரு பெரிய மேகம் எங்கள் மேல் வந்து நிற்பது போன்றதொரு நிழல். எங்களுக்கு மட்டுமல்ல அந்த நிழல் எல்லோருக்குமே போனது. அதுவரையில் தலையில் எதையெதையோ வைத்தவர்கள் அதை எடுத்துவிட்டு நடக்கலானார்கள்.

“பரவாயில்லையே.. முருகன் உங்க பேச்சைக்கூட கேட்கறாரு…!?”

“ஆமா.. பொண்டாட்டிதான் கேட்கல அவராச்சும் கேட்கறாரே..” என சொல்லிவிட்டேன். அது இல்லாளுக்கு புரிவதற்கு முன் வேகமே நடக்கலானேன். பொம்மியும் நடக்கலானாள். இல்லாளும் நடக்கலானார்.

இன்னும் பத்துமலை கோவில் வாசலைக்கூட மிதிக்கவில்லை. அதற்குள் நாங்கள் மிதித்து நடக்கும் சாலையின் சூட்டை தணித்திருக்கிறான் அந்தப் பத்துமலையான்.

குழந்தைகளின் விளையாட்டுகளாய் அதிசயங்களை நடத்தும் நாயகனிடம் நாமே குழந்தைகளாய்த்தானே இருக்கின்றோம்.

பத்துமலை படியேற்றத்தில் எங்களுக்கான இன்னொரு அதிசயத்தையும் அப்பன் விளையாட்டாய்க் காட்டினான். விளையாடி காட்டினான்.

கந்தனின் அந்தத் திருவிளையாடலை அடுத்த பதிவில் சொல்லவா…?


தொடரும்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்