Latest Posts
ஆகஸ்ட் 11, 2026
ஆகஸ்ட் 06, 2026
ஆர்.சூடாமணி
ஆகஸ்ட் 05, 2026
புத்தகச்சிறகுகள் - தொடர் 21
- கண்ணீரின் கரைதனிலே -
இன்று வேலைக்கு போகவில்லை. மைக்ரீன் (ஒற்றைத் தலைவலி). ஏற்கனவே தலையில் அடிபட்டிருப்பதால் என்னால் மற்றவர் போல அல்லாமல், ஒற்றைத் தலைவலி கூடுதல் வலியைக் கொடுக்கும்.
காலையில் எழுந்ததும் தலை சுற்றியது. குமட்டிக் கொண்டு வாந்தியும் வந்தது. குளியல் அறையிலேயே கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தேன். சட் சட்டென குளிர்ந்த நீரை தலையில் ஊற்றினேன். தலை தொடங்கி உடல் முழுக்க படர்ந்த குளிரால் கொஞ்சம் புத்துணர்ச்சி தோன்றியது.
பின் வழக்கம் போல டெலிவரி வேலைக்கு தயாரானேன். தலைவலி மருந்தை எடுத்து பாக்கெட்டில் வைத்து கொண்டேன். வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. வீட்டில் பொம்மிக்கு வாங்கி வைத்த ரொட்டி இருந்தது. அதை அவளுக்கே வைத்துவிட்டு கடையில் சாப்பிட்டுவிட்டு மருந்து சாப்பிடலாம் என்று எண்ணி புறப்பட்டேன்.
தலைவலியும் பசி வயிறும் படி இறங்கி வரும் போதே அதன் வேலையைக் காட்டத் தொடங்கின.
கடைக்கு சென்று சாப்பிடும் வரை தாங்காது என தெரிந்தது. பக்கத்தில் உள்ள கடையில் ரொட்டியையும் மினரல் பாட்டிலையும் வாங்கினேன்.
காரில் அமர்ந்தபடியே சாப்பிட்டேன். பின் மருந்தையும் சாப்பிட்டேன். உடனே காரை எடுக்க முடியாது. வலி குறைய கொஞ்ச நேரம் எடுக்கும். ஆனால் இன்று ஏனோ வலி எளிதாக குறையவில்லை. தலை சுற்றல் அதிகமானது. கண் முன்னே இருப்பதெல்லாம் அதன் இஸ்டத்திற்கு சுற்ற ஆரம்பித்தன. மீண்டும் குமட்டிக்கொண்டு வந்தது. காரில் இருந்து இறங்கி வாந்தி எடுத்தும் வலியும் மயக்கமும் குறையவில்லை.
இந்த நிலமையில் டெலிவரிக்கு சென்றால் என்னைத்தான் யாராவது டெலிவரி செய்வார்கள் என்கிற பயம் உடல் முழுக்க பரவியது. கார் கதவை மூடினேன். லாக் செய்தேன். குனிந்த தலை நிமிராது மெல்ல மெல்ல நடந்து படி வரை வந்துவிட்டேன்.
கைபிடிகளைப் இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டு ஒவ்வொரு படியாக ஏறினேன். டாக்டர் ஸ்டிரேஞ் படத்தில் வருவது போல ஏறிக்கொண்டிருக்கும் படிகள் எல்லாம் என் முன்னேயே எழுந்து சுற்ற ஆரம்பித்தது. கைப்பிடியை தளர்த்தினால் விழுந்து விடுவேன் என எனக்கு நன்றாகத் தெரியும். ஆகவே தலையை நிமிர்த்தாது தரையைப் பார்த்தபடி, படியைப் பிடித்தபடி மூன்றாவது மாடிக்கு வந்து சேர்ந்தேன்.
வீட்டில் இல்லாளும் பொம்மியும் உறங்கி கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பாமல் வீட்டு வரவேற்பறை சோபாவில் படுத்தேன். தூக்கம் வரவில்லை. ஆனால் மயக்கம் வந்தது. இரண்டிற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ளவே எனக்கு பல ஆண்டுகள் ஆனது.
தூக்கம் வந்தால் கண்களை மூடி உறங்கலாம். ஆனால் மயக்கம் வந்தால் என்னால் தைரியமாக கண்களை மூடி தூங்க முடியாது. ஏனெனில் மீண்டும் எழுவேனா என்பதே எனக்கு தெரியாது.
எழுந்து முகத்தை கழுவிக்கொண்டு எனது அறைக்கு வந்தேன். அலமாரியில் இருக்கும் புத்தகங்களைப் பார்தேன். இம்மாதம் வாசிக்க வேண்டிய புத்தகங்களை மீண்டும் ஒருமுறை என் மேஜையில் வைத்து ஒவ்வொன்றாக பார்த்து கொண்டிருந்தேன்.
நேற்று தட்டச்சு செய்யும் வேலையொன்று கிடைத்தது. சரி அதையாவது செய்யலாமே என கணினி முன் அமர்ந்தேன். பட்டன் தட்டிய பின் கண் திறக்க எப்படியும் அரைமணி நேரமாவது என் கணினி எடுத்து கொள்ளும். கோலாலம்பூருக்கு வந்து ஆறேழு மாதங்களில் சேமித்த சம்பளத்தில் வாங்கிய முதல் சொத்து இந்தக் கணினி அதனால் அதை திட்டவும் மனம் வருவதில்லை.
ஒருவழியாக கணினி கண் திறந்து வழி விட்டது. தலைவலி சுருக் சுருக்கென வந்தபடி இருந்தாலும் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலை என்பதால் பெரிதாக சிக்கல் இருக்காது என்றே நம்பினேன்.
தட்டச்சு வேலையும் தலை வலியும் ஒன்றாக பயணித்து கொண்டிருக்கும் போது தூங்கி எழுந்த பொம்மி நேராக என் அறைக்கு வந்தாள். நான் வீட்டில் இருப்பதைப் பார்த்தவள் குதூகலமாகிவிட்டாள். ஓடி வந்தவள் அப்பா என்று கத்தி கொண்டே என் மேல் பாய்ந்தாள். அவள் வந்ததைச் சரியாக கவனிக்காத நான் என் மேல் பாயும் அவளைப் பிடிக்க முடியாமல் குழம்பி கீழே குனிந்தேன்.
அவளை தூக்கவும் என் தலை மேஜையில் இடிக்கவும் சரியாக இருந்தது. ஏற்கனவே தலைவலி, இப்போ இன்னொரு வலி தலையில் ஏற்பட்டதால் சத்தம் போட்டேன். பொம்மி பயந்துவிட்டாள். அவளை கீழே இறக்கிய வேகத்தில் பட்டென அடித்தும் விட்டேன்.
நான் அடித்ததைக் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத பொம்மி சில நொடிகள் என்னையேப் பார்த்துவிட்டு அழுதபடி என் அறையை விட்டு ஓடினாள்.
அவள் அடித்துவிட்டது எனக்குமே வலித்தது. அந்த வேதனையும் சேர்ந்து என்னை அழ வைத்தது.
தலையில் இரு கைகளையும் வைத்தபடி கீழே பார்த்து கொண்டிருந்தேன். மிருதுவான கையொன்று என் தோளைத் தட்டியது.
நிமிர்ந்து பொம்மியைப் பார்த்தேன். கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த பொம்மி என் கண்களைத் துடைத்துவிட்டாள்.
என்னை அழவேண்டாம் என சொன்னவள், நான் அடித்தது அவளுக்கு வலிக்கவில்லை என்றாள். ஆகவே என்னை அழவேண்டாம் என சொல்லிவிட்டு என் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவளது காலை தூக்கத்தை தொடர்வதற்கு சென்றுவிட்டாள்.
உண்மையில் அவள் என் கண்களைத் துடைத்த பின்னர்தான் எனக்கு அழுகையே அதிகமாய் வந்தது.
பொம்மியை அடித்துவிட்டதால்தான் அப்பாவும் வலியில் அழுகிறார் என நினைத்த பொம்மியை நினைத்து கொண்டேன். அவளுக்கு வலிக்கவில்லை என்பதைச் சொன்னால் நான் அழுவதை நிறுத்துவேன் என அவள் எப்படி யூகித்திருப்பாள் என எனக்கு பிடிபடவில்லை.
நம் வாழ்க்கையே நமக்கு பல சமயங்களில் பிடிபடாமல் போகும்போது இதுவெல்லாம் எம்மாத்திரம் என நினைத்து கொண்டு என் தட்டச்சு வேலையை தட்ட ஆரம்பித்தேன்.
பொம்மி வந்தது, பின் நடந்தது எல்லாவற்றையும் ஒரு கனவு போல நினைக்கலானேன். பொம்மி அவள் அறையில் தூங்கி கொண்டே முனகுகிறாள்.
"அப்பா பொம்மிக்கு வலிக்கல... அப்பா அழ வேண்டாம்...."
நான் மீண்டும் அழத்தொடங்கினேன். கண்களின் வழியே கண்ணீரில் கரைந்து என் மைக்ரீன் தலைவலியும் கரைந்து கொண்டிருக்கிறது. அதனூடே வெளியில் சொல்ல முடியாத ஏதேதோ வழிந்து செல்வதை உணர முடிகிறது.....
அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
ஆகஸ்ட் 01, 2026
ஆகஸ்ட் மாத நாவல் வாசிப்பில்
- நாவலிலிருந்து
--------
மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான நாவல்; எம்.குமாரன் 'செம்மண்ணும் நீலமலர்களும்'.
1969-ல் மலேயா தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல் இது.
பல ஆண்டுகளாக தேடியும், பலரிடம் கேட்டும் கிடைக்காமல் காத்திருந்த நாவல். எதார்த்தமான உரையாடல் வழி கைக்கு வந்து சேர்ந்தது. வாசித்து முடித்து அதன் வாசிப்பனுபவத்தை எழுதும்போது இந்நாவல் கைக்கு கிடைக்க காரணமாக இருந்தவர்களையும் எழுதுகிறேன்.
ஜூலை 26, 2026
அடிக்கடி சந்திக்கலாம்...
வழக்கமாய் நண்பர்களைச் சந்திக்கும் உணவகத்தில் சந்தித்து பேசினோம்.
பில்மோர் பாலசேனாவை எனக்கு முன்னமே தெரியும். இப்படி சொல்கிறேன்; என்னை சின்ன வயதில் இருந்து அவருக்கு தெரியும். அட இப்போதும் கூட எனக்கு சின்ன வயதுதானே.
ஏடம் அசுவினியை அவ்வப்போது இலக்கிய நிகழ்ச்சிகளில் சந்தித்து "உள்ளேன் ஐயா வணக்கம் ஐயா..." என்பது போல பேசியிருந்தேன். முகநூலில் இருப்பது அவர்தான் என தெரிந்த பின் கூடுதலாக சில வார்த்தைகள் பேச தொடங்கி கேலி கிண்டல் வரை பழகினோம்.
அவரது குறுங்கதைகளை இதழ்களிலும் முகநூலிலும் வாசித்திருக்கிறேன். எழுதுவதோடு மலேசியத் தமிழ் ஆர்வலர் நற்பணி களத்தையும் நண்பர்களுடன் இணைத்து நடத்தி வருகின்றார். அடுத்த முறை அவர்களின் நற்பணி களகத்தை குறித்து எழுதுகிறேன்.
எங்களின் உரையாடல் எங்கெங்கோ சென்று பின்னர் இலக்கியத்திற்கு வந்தது. நாங்கள் வாசித்ததைப் பேசினோம். இன்றைய சூழலில் வாசிப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பேசினோம். மலேசிய மூத்த எழுத்தாளர்கள், மறந்த புத்தகங்கள் என எனது அடுத்தடுத்த கட்டுரைகளுக்கானத் தகவல்களையும் அவர்களிடமிருந்து பெற்று கொண்டேன்.
பல ஆண்டுகளாக தேடி கிடைக்காத புத்தகம் ஒன்றை அண்ணன் பில்மோர் பாலசேனா வைத்திருப்பதாகச் சொன்னார். எனக்கு உள்ளம் பூரித்து விட்டது. இந்தச் சந்திப்பைச் சாத்தியப்படித்திய அண்ணன் ஏடம் அசுவினியின் கையைப் பிடித்து நன்றியைத் தெரிவித்து கொண்டேன். அப்படியென்ன புத்தகன் அதுவென அதற்கான வாசிப்பனுபவத்தை எழுதும் போது சொல்கிறேன்.
இன்றைய சந்திப்பில் எனது வேலை, புத்தக விற்பனையோடு மருத்துவமனை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன். அண்ணன் பில்மோர் பாலசேனாவும் அவரது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதை அவர் சிறுகதையாக எழுதியிருந்ததையும் சொன்னார். அதோடு அவர் வெளியிட்ட அவரது புத்தகத்தோடு அடுத்த சந்திப்பை ஏற்பாடு செய்யலாம் என்றபடி இன்றைய சந்திப்பை நிறைவு செய்தோம்.
இனி அடிக்கடி சந்திக்கலாம்.....