பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

பிப்ரவரி 06, 2026

பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 4)

 

பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 4)



கந்தனின்  கருணை; மேகங்களின் நிழலைக் கொடுக்க நாங்கள் பத்துமலை முருகன் ஆலய வாசலில் நுழைந்தோம்.

உள்ளே கூட்டமாக இருந்தது. இதுவென்ன கூட்டம்! இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்நிலம் முழுக்க மஞ்சள் அலங்கரிக்கும் என  எங்களுக்கு தெரிந்தது. நாங்கள் செல்லும் வழியில் முடி காணிக்கை கொடுக்கும் இடம் இருந்தது. அங்கு ஒருவர் ஒலிபெருக்கியைக் கையில் வைத்து கொண்டு முடிகாணிக்கை செய்யவேண்டியவர்களை அழைத்து கொண்டிருந்தார்.

பொம்மியைத் தூக்கி வைத்துக் கொண்டு அந்த வழியே நடந்து போகும்போது; அந்த நபர் எங்களைப் பார்த்தார். பொம்மியும் அவரைப் பார்த்து கையை ஆட்டினாள். உடனே அவர் ஒலிபெருக்கியில் “என்ன பாப்பா…. அப்பாக்கு முடி காணிக்கை கொடுத்திடுவோமா ?” என்றார். அவர் ஏன்  சம்பந்தமே இல்லாமல் என்னை இழுக்கிறார் என தெரியவில்லை. ஆனால் அதற்கு ஏற்றார் போல என் பரட்டை முடியை பொம்மி அவளின் இரு கைகளாலும் பிடித்து இழுக்கத் தொடங்கினாள்.

நான் அங்கேயே நின்றுவிட்டேன். இல்லாளை திரும்பி பார்த்தேன். “என்ன.. முடி காணிக்கையா…?” என்றார்.

“இல்ல.. அது….”

“அதான் தெரியிதே… வாங்க போய்ட்டு முடி காணிக்கை கொடுத்துட்டு வருவோம்…. இல்லைன்னா உங்க முருகன் கோவிச்சிக்கக் போறாரு… ” என்றபடி அவர் முன்னே நடக்க, நானும் பொம்மியும் அவர் பின்னே நடந்து முடிகாணிக்கை கொடுக்கும் இடத்தை அடைந்தோம்.

எனக்கு முடிகாணிக்கை  கொடுப்பது வேண்டுதல் அல்ல. ஆனால் அது எப்படியோ அமைந்துவிடும். எந்த திட்டமிடலும் இல்லாமல் அதற்கு ஏற்ற ஏற்பாடுகளும் இல்லாமல் போட்டிருந்த ஆடையுடனேயே பலமுறை முடிகாணிக்கை கொடுத்திருக்கிறேன். எனக்கு நினைவு தெரிந்து முருகனுக்கு முடிகாணிக்கை கொடுக்க ஆரம்பித்ததே ஒரு சுவாரஸ்யமான கதைதான். அங்கிருந்துதான் முடிகாணிக்கை கொடுக்கும் பழக்கமே அதன் வழக்கத்திற்கு வந்தது. ஒருநாள் அதைப்பற்றியும் எழுதுகிறேன். எழுதுவதற்குத்தானே நானிங்கு இருக்கிறேன்.

 முடிகாணிக்கைக்கு சீட்டு வாங்கும் போது முடிக்கும் முகத்திற்கும் சேர்த்து இருபத்து ஐந்து வெள்ளி என்றார். முகத்தை ஒன்னும் செய்ய வேண்டாம் தலையில் மட்டும் கத்தி வைங்க என்றேன். அங்குள்ளவரும் சிரித்தபடி தலை முடிக்கு மட்டும் இருபது வெள்ளிக்கான சீட்டைக் கொடுத்தார். வழக்கமாக கடையில்தான் அமர வைப்பார்கள். இம்முறை அதிக ஆட்கள் இருந்ததால் கடைக்கு வெளியிலும் பத்து நாற்காலிகள் வரை  போட்டிருந்தார்கள். நாற்காலி முழுக்க பக்தர்கள் முடிகாணிக்கைக் கொடுத்தபடி இருந்தார்கள்.

ஒரு நாற்காலி காலியானதும் நானும் அங்கு சென்று காலியிடத்தை பூர்த்தி செய்தேன். கடை பணியாளர் தலைமுடியைச் சரிக்க சரிக்க பொம்மி கண்கள் விரிந்த நிலையில் பார்த்து கொண்டிருந்தாள். இனி அவள் கோவப்படும்போதும் உற்சாகமாய் விளையாடும் போது பிடித்து இழுக்க தலையில் முடி இருக்காது என்பது அவளுக்கு கஷ்டம்தான் இல்லையா?.

கொஞ்ச நேரத்தில் பொம்மி அப்பாவை இரசிக்க அரம்பித்துவிட்டாள். தலை மொட்டையானதும் கடைக்குள்ளே சென்று தலையை கழுவினேன். அங்கு ஒரு அம்மா இருப்பார். ஒவ்வொருவரின் தலைக்கும் தண்ணீரை ஊற்றி ஆங்காங்கே ஒட்டிக்கிடக்கும் முடியையும் சுத்தம் செய்து அனுப்புவார். கழுவிய பின் அங்கிருந்த சந்தனத்தை தலையில் அப்படியே அப்பிக்கொண்டேன்.

எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த பொம்மி; வழக்கம் போல தூக்கச்சொல்லி கேட்டாள். அவளுக்கு அப்பாவின் மொட்டைத்தலையில் பக்கத்தில் பார்க்க வேண்டும் அவ்வளவுதான். தூக்கினேன்.  தோளில் சாய்ந்தவள் சட்டென மண்டையில் ஓர் அடி அடித்தாள். காயாத சந்தனம் அவள் முகத்திலும் தெரித்தது. அவள் கையை அப்படியே எடுத்து என் முகத்தில் தேய்த்தாள். நாங்கள் சிரித்து கொண்டோம்.

பிறகு அங்கிருந்து பத்துமலை படிக்கு அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு வந்தோம். சிலர் ஆற்றங்கரைக்குச் சென்று அங்கிருந்து தங்களுடைய நேர்த்திகடனை கொண்டுவருவார்கள். சிலர் இந்த விநாயகர் ஆலயத்தில் இருந்தே அவர்களின் நேர்த்திக்கடனை எடுத்துச் செல்வார்கள். நாங்களும் இங்கிருந்துதான் எங்கள் நேர்த்திகடனை எடுப்போம்.

வெளியிலும் உள்ளேயும் கூட்டமாக இருந்தது. எப்படியோ கோவிலுக்குள்ளே நுழைந்தோம். உள்ளே பால்குடங்களை தயார் செய்வதற்கு ஏற்றபடி மேஜையை வைத்திருந்தார்கள். நாங்கள் அங்கு செல்லவும் எங்களுக்கான இடம் காலியாவதும் சரியாக இருந்தது. எங்களின் குடங்களை மேஜையில் வைத்தோம்.

இல்லாள் அவரது ‘தூக்குச் செம்பில்’ பன்னீரை ஊற்றினார்.  பொம்மியின் தூக்குச் செம்பில் ஏற்கனவே விபூதி இருந்தது. எனது குடத்தில் அரிசி மாவை போட்டு வைத்திருந்தார். இப்போது கொண்டு வந்திருந்த தண்ணீரை குடம் நிரம்ப ஊற்றினார்.

கோவில் கருவறைக்கு சென்று விபூதி பூச முடியாதபடிக்கு கூட்டமாக இருந்தது. ஆனால் எங்கள் மேஜை முழுக்க விபூதி , சந்தனம் , குங்குமம் என பாக்கெட்டுகளிலும் கிண்ணங்களிலும் இருந்தன. அதையே எங்கள் குடங்களுக்கு பூசி எங்களுக்கும் பூசிக்கொண்டோம்.

எங்கள் காலுக்கு கீழேயே சிலர் நேர்த்தி கடன்களை முடித்த அசதியில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு தொல்லை கொடுக்காதபடி நாங்களும் எங்கள் வேலைகளைச் செய்துகொண்டிருந்தோம். அதில் ஒருவர் கீழே நின்றிருந்த பொம்மியைப் பார்த்து அவளது காலைத் தொண்டு வணங்கினார். அதற்கு ஏற்றார்ப்போல பொம்மியும் அவள் குடத்தில் இருந்த விபூதியைத் தொட்டு அவருக்கு வைத்தாள்.

இதனைப் பார்த்த எனக்கே உடல் சிலிர்த்தது. யாரின் கண்களுக்கு, யார் யாராக தெரிய வேண்டும் என்பது நம் கையிலா இருக்கிறது. எல்லாமே கந்தனின் ஏற்பாடுதானே.



இப்போது நாங்கள் மூவரும் பத்துமலை படி முன் நிற்கின்றோம். பொம்மியைத் தூக்கி வைத்தபடி குனிந்து படியைத் தொட்டு வணங்கினோம். பொம்மியும் கீழே இறங்கி படியேற்றப்போவதாகச் சொல்கிறாள். நானும் இல்லாளும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டோம்.

“நடக்க வைப்போம்.. ரெண்டு மூனு படி ஏறினதும் கால் வலிக்க ஆரம்பிச்சிடும்.. அப்பறம் தூக்கிக்கலாம்..” என்றேன்.

என் ஒரு கையில் குடமும் மறு கையில் பொம்மியையும் பிடித்திருந்தேன். பொம்மியின் கையில் அவளுடைய தூக்குச் செம்பும் இல்லாளில் கையில் அவரது தூக்குச் செம்பும் இருந்தன.

மீண்டும் ஒருமுறை பொம்மியுடன் படியைத் தொட்டு வணங்கி எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். நான் கையைப் பிடித்திருந்தாலும் பொம்மிதான் முதலடியை எடுத்து வைத்தாள்.

நான் தான் அவள் கையைப் பிடித்திருக்கிறேன் ஏன நினைத்தேன். அடுத்த நொடியே எங்கள் மூவரின் கைகளையுமே அந்தப் பத்துமலையான்தான் பிடித்திருப்பதாய்க் காட்டினான்.

உண்மையில் அது ஓர் அற்புதம்தான். யாருக்கு தெரியுமோ இல்லையோ முருகனின் பக்தர்களுக்கு அது நிச்சயம் தெரியும்.

பக்தர்களிடம் விளையாட்டு காட்டும் விளையாட்டு பிள்ளையும் அவன்தான்; பக்தர்களின் விளையாட்டு வினையாகும் போது நம்மைத் தாங்கிப்பிடிக்கும் அன்னையும் அவன்தானே.

படியேறும் எங்களுக்கு அந்தப் பத்துமலையான் அன்னையாக மாறிய கதை உங்களுகும் தெரிய வேண்டுமே.

 கந்தனின் அந்தத் திருவிளையாடலை அடுத்த பதிவில் சொல்லவா…?

பிப்ரவரி 04, 2026

பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 3)

 

பொம்மியுடன்  3-வது தைப்பூசம் (பகுதி 3)


எங்கள் வாகனம் பத்துமலையை நெருங்கியது. கோவில் எங்களின் இடது பக்கத்தில் இருந்தது. அதே போல இடது பக்க சாலை முழுக்கவும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இன்னும் சில இடங்களில் வாகனங்கள் நிறுத்த முடியாதபடிக்கு மோட்டார்களை நிறுத்தியிருந்தார்கள். மேற்கொண்டு யாரும் தத்தம் வாகனங்களை நிறுத்தி நெரிசலைக் கூட்டக்கூடாது என்பதற்காக சில பாதுகாவலர்கள் ஆங்காங்கே நின்றிருந்தார்கள்.

வாகனத்தில் இருந்து கொண்டே அதை எங்காவது நிறுத்துவதற்கு இடம் இருக்கிறதா என பார்த்தேன். பார்த்து கொண்டிருந்தபடியே கோவிலைத் தாண்டிவிட்டோம். கடந்த ஆண்டு கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் ஆசிரமத்தில் வாகனத்தை நிறுத்த இடம் கிடைத்தது. பதினைந்து ரிங்கிட்தான் வாங்கினார்கள். அங்கேயே போகலாம் என்று பார்த்தால் இம்முறை அங்கே நுழைய முடியாதபடி மறைத்திருந்தார்கள். ஆக அங்கே போக முடியாது. தூரத்தில் வாகனத்தை நிறுத்தி  வைத்து பொம்மியுடன் நடந்து வர எனக்கு விருப்பம் இல்லை. அதுவும் இந்த வெயிலில் நாங்களே நடக்க சிரமப்படுவோம்.

“முருகா ஒரு பார்க்கிங்கைக் காட்டேன். உன்னையத்தானே பார்க்க வர்றோம்…” என்றபடி சென்றுகொண்டே இருந்தேன். சட்டென ஒரு அறிவிப்பு பலகை கண்ணில் பட்டது. இல்லாள்தான் காட்டினார். வாகனங்களை நிறுத்தி வைக்க இடம் உள்ளதான அறிவிப்பு. அருகில் செல்லவும் அவர்கள் நிர்ணயித்த விலை தூக்கிவாரிப்போட்டது. நான்கு சக்கர வாகனங்களுக்கு ஐம்பது வெள்ளி என இருந்தது.


வருடத்திற்கு ஒருமுறைதான் என்றாலும் பட்ஜெட்டில் வாழ்கிறவர்களுக்கு எல்லா நாளுமே ஒன்றுதானே. இப்போதைக்கு ஐம்பது வெள்ளி கொடுத்து வாகனத்தை நிறுத்தினால் பால் குடங்களுக்கு அர்ச்சனை சீட்டு வாங்குவதில் சிக்கலாகிவிடும். தைப்பூசத்திற்கென்று குறிப்பிட்ட தொகையைத்தான் சேமித்திருந்தோம். அதுவும் காலையில் மீனாட்சி கோவிலில் பால்குடம் எடுப்பதற்காக கொஞ்சம் செலவானது.

இன்னும் கொஞ்ச தூரம் முன்னே சென்று பார்க்கலாம் என்று இல்லாளும் சொல்ல; அப்படியே செய்தேன். அருகில் ‘பெட்ரோனாஸ்’ பெட்ரோல் நிலையம் இருந்தது. அதற்கு அருகில் சில அடுக்குமாடி குடியிருப்புகளும் இருந்தன. அங்கே நுழையும் பாதையிலும் ‘பார்க்கிங்க்’ என அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். ஆனால் எவ்வளவு கட்டணம் என்பதை குறிப்பிடவில்லை.

இவ்வளவுதான் கட்டணம் என இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் கட்டணம் குறித்து அறிவிப்பு இல்லையென்றால் ஆளுக்கு ஒரு விலையைச் சொல்லுவார்கள். இருந்தும் ஏதோ நம்பிக்கையில் உள்ளே நுழைந்தேன்.

வளைந்ததும் உள்ளே இரு பாதைகளாகப் பிரிந்தன. ஒன்று குடியிருப்புக்கு முன்புறமாகவும் இன்னொன்று பின்புறமாகவும் சென்றன. நாங்கள் பின்பக்கமாக சென்று முதலில் பார்க்க நினைத்தோம். அந்த ஒத்தையடிப் பாதையில் கடைசியில் ஒரே ஒரு இடம் மட்டும் காலியாக இருந்தது. யாரோ ஒருவர் அருகில் ஒரு பெரிய லாரியை குறுக்கே நிறுத்தியிருந்ததால் யார் கண்களுக்கும் இந்த இடம் தெரியவில்லை. அருகில் வந்தால் மட்டுமே தெரியும். எங்களுக்காகவே அந்த இடம் காலியாக இருந்தது போல அமைந்தது.

‘நன்றி முருகா.. ‘ என்றபடியே வாகனத்தை உள்ளே கொண்டு போய் நிறுத்தினேன். முதலில் நான்தான் இறங்கினேன். யாரும் வந்து கட்டணத்தைக் கேட்கிறார்களா என சுற்றிப்பார்த்தேன். யாருமில்லை.  இல்லாளிடம் இங்கு  யாருமில்லை என்றபடி பொம்மியைத் தூக்கப் போனேன்.

“அங்க பாருங்க ஒருத்தரு இருக்காரு.. யாரும் இல்லன்னு சொல்றிங்க…” என்று இல்லாள் சொல்லவும்தான் மீண்டும் பார்க்கிறேன். ஒரு கருப்பு உருவம் லாரிக்கு அருகில் நின்றபடி என்னையே பார்த்து கொண்டிருக்கிறது. எங்கிருந்து வந்தார் என தெரியவில்லை. என் கண்ணுக்கு எப்படி தெரியாமல் நின்றார் எனவும் புரியவில்லை. நான் பார்ப்பதைப் பார்த்தவர்; நடக்கலானார். என்னிடம்தான் வருகிறார் என்று நினைத்தேன். என்னையும் கடந்து போகலானார்.

“அண்ணே.. இங்க பார்க்கிங் எவ்வளோ அண்ணே…” என்று கேட்டேன். நடந்தவர் நிற்கலானார். திரும்பினார். என்னையும் வாகனத்தையும் உள்ளே இருப்பவர்களையும் ஒரு பார்வைப் பார்த்தார்.

“என்ன.. முருகனைப் பார்க்கத்தானே வந்திருக்கீங்க… காசெல்லாம் ஒன்னும் வேணாம்.. போய்ட்டு நல்லா கூம்படு வாங்க… எவ்வளோ நேரம்தான் நானும் இங்கயே இருக்கறது… போங்க போங்க..” என்றபடி நகர்ந்தார்.

“யாராச்சும் வந்து காசு கேட்டா என்ன சொல்லட்டும்…”

“ம்… நான் சொன்னேன்னு சொல்லு; எவனும் வரமாட்டான்…” என சொல்லியபடியே நடக்கலானார்.

நானும் காருக்கு திரும்பி அவர் சொன்னதைச் சொன்னேன். பொம்மியைத் தூக்கிக் கொண்டேன். இல்லாளும் பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு இறங்கினார்.

“ஆமா.. அவர் பேர் என்னன்னு கேட்டிங்களா…”

“ஐயயோ ஆமா.. அப்பறம் எப்படி… யார் சொன்னார்னு சொல்றது…?” என்று பதறியபடி திரும்பினேன். அங்கு அவர் இல்லை. இல்லாளும் வந்து பார்க்கிறார். அந்த ஒருவழி பாதையில் ஒருவரும் இருக்கவில்லை.

“ஏங்க… உங்களுக்கு அவரோட பேரை கூட கேட்க தோனலையா..? என்ன நீங்க… அப்பறம் யாராச்சும் வந்து காசு கேட்டா.. இவர்தான் காசு வேணாம்னு சொன்னாருன்னு சொல்லலாம்தான…”

“உங்கிட்ட திரும்பி அப்டேட் பண்ணிட்டு பாக்கறதுகுள்ள அந்த மனுஷன் ஓடிப்போவாருன்னு எனக்கு எப்படிமா தெரியும்.. நீ வேற பேரை கேட்கல ஊரை கேட்கலைன்னு ஆரம்பிக்கற…”

“வண்ணமயில் ஏறும், என் தங்க வடிவேலோன். கந்தன் உனை காண தினம் ஓடிவருவேனோ..” என சாலையோரத்தில் யாரோ அவர்களின் கூடாரத்தில் பாடலை சத்தமாக வைத்தார்கள்.

“ஏன் முருகா… எல்லாம் உன் வேலைதான்னுதான் தெரியிதே… அப்பறம் எதுக்கு பொண்டாட்டிகிட்ட திட்டு வாங்க வைக்கற…” என்று சத்தம் வராதபடி கேட்டுகொண்டே நடக்கலானோம்.

பொம்மி அவளும் கீழிறங்கி எங்களுடன் நடக்கப்போவதாகச் சொன்னாள். இப்போதே நடந்தால், படியேற முடியாது. நான் தான் தூக்கி கொண்டு படியேற  வேண்டும் என தெரியும். ஆனால்; குழந்தைகளின் குறைந்தபட்ச ஆசைகளையாவது உடனுக்குடனே நடத்திக் கொடுப்போம் என கீழே இறக்கிவிட்டேன்.

அங்கிருந்த வளைவு பாதைக்கு அருகில் ஒரு குறுக்குப்பாதையும் இருந்தது. அங்கு நுழைந்து சாலையோரத்திற்கு வந்தோம். அங்குதான் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நடந்து கொண்டிருந்தார்கள்.

எல்லோரும் சொல்லி வைத்தார்போல தலையில் எதையோ வைத்து மறைத்தபடி நடந்தார்கள். சிலர் நாளிதழ், சிலர் தொப்பி, சிலர் துண்டு, சிலர் அவர்களின் கைகளையே வைத்திருந்தார்கள். எங்களுக்கு புரிந்தது. வெயில் சுட்டெரித்து கோண்டிருக்கிறது. பொம்மியும் ‘அப்பா சுடுகிறது’ என்றாள்.

“என்ன முருகா இப்படி வெயிலடிக்கற… நாங்களாம் பாவம் இல்லையா… ” என்று கேட்டபடி நடந்தேன். பாடல் போட்ட கடைக்காரர் ஒரு மாதிரியாய்ப் பார்த்தார். அவர் பார்த்தது கூட பரவாயில்லை. இல்லாளும் ஏதோ மாதிரி பார்த்தார்.

ஏதோ சொல்ல வாயெடுத்தவர் அமைதியானார். சட்டென வெயில் மறைந்தது. ஏதோ ஒரு பெரிய மேகம் எங்கள் மேல் வந்து நிற்பது போன்றதொரு நிழல். எங்களுக்கு மட்டுமல்ல அந்த நிழல் எல்லோருக்குமே போனது. அதுவரையில் தலையில் எதையெதையோ வைத்தவர்கள் அதை எடுத்துவிட்டு நடக்கலானார்கள்.

“பரவாயில்லையே.. முருகன் உங்க பேச்சைக்கூட கேட்கறாரு…!?”

“ஆமா.. பொண்டாட்டிதான் கேட்கல அவராச்சும் கேட்கறாரே..” என சொல்லிவிட்டேன். அது இல்லாளுக்கு புரிவதற்கு முன் வேகமே நடக்கலானேன். பொம்மியும் நடக்கலானாள். இல்லாளும் நடக்கலானார்.

இன்னும் பத்துமலை கோவில் வாசலைக்கூட மிதிக்கவில்லை. அதற்குள் நாங்கள் மிதித்து நடக்கும் சாலையின் சூட்டை தணித்திருக்கிறான் அந்தப் பத்துமலையான்.

குழந்தைகளின் விளையாட்டுகளாய் அதிசயங்களை நடத்தும் நாயகனிடம் நாமே குழந்தைகளாய்த்தானே இருக்கின்றோம்.

பத்துமலை படியேற்றத்தில் எங்களுக்கான இன்னொரு அதிசயத்தையும் அப்பன் விளையாட்டாய்க் காட்டினான். விளையாடி காட்டினான்.

கந்தனின் அந்தத் திருவிளையாடலை அடுத்த பதிவில் சொல்லவா…?


தொடரும்...

பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 2)

 

பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 2)


ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்தோம். நண்பகல் மணி 12ஐ தொட்டிருந்தது. பத்துமலை படியேறியது போல நாங்கள் அசந்து போயிருந்தோம். அப்படித்தான் பேசிக்கொண்டோம். சின்ன கோவிலாக இருந்தாலும் ஏன் இப்படியொரு அசதி என தெரியவில்லை

சரி; அதுதான் காலையிலேயே குடும்பமாக இந்தக் கோவிலில் பால் ஊற்றிவிட்டோம். தரிசனமும் கிடைத்தது. மீண்டும் பத்துமலை படியேறி பால் ஊற்ற வேண்டுமா. பத்துமலைக்குச் சென்று கீழிருந்தே முருகனைக் கூம்பிட்டுவிட்டு வந்துவிடலாமா என்றேன். வரலாற்றில் முதன் முறையாக நான் சொல்லிய உடனே இல்லாள் எந்த மறுப்பும் சொல்லாமல் சரி என்றார். அதோடு என்னையும் பொம்மியையும் முதலில் உறங்கி ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார்.

ஹப்பாடா… என்றபடி பொம்மியுடன் உறங்கிவிட்டேன். பிற்பகல் மணி 3க்கு; பொம்மி என்னை எழுப்பினாள். பின்னர் என் கையைப் பிடித்து இழுத்து கொண்டு பூஜையறைக்குச் சென்றாள். அங்கு மூன்று குடங்கள் தயார் நிலையில் இருந்தன.

என்னடா இது!. இந்தக் குடும்பத் தலைவன் வார்த்தைக்கு மரியாதை இல்லையா என்று கொஞ்சம் சத்தமாக கேட்டுவிட்டேன். இல்லாள் எந்த பதிலும் இல்லாமல் என்னைப் பார்த்தார். கொட்டாவி வந்தது போல பாவணை செய்துவிட்டு “என்னம்மா இதெல்லாம்..?” என்று நானே என்னை மன்னித்துவிட்டேன்.

“நீங்கதானே… தூங்கு எழுந்திருப்பதற்குள் எல்லாவற்றையும் செய்ய சொன்னீங்க .. அதான் ” என்றவர் அப்பாவியாய் என்னைப் பார்க்கலானார். அடிப்பாவி!

“ஓ அப்போ பத்துமலை முருகனுக்கும் பால்குடம் எடுக்கறோமா?”

“நீங்க என்ன இஷ்டத்துக்கு பேசறிங்க.. சொல்லியிருந்தா நானும் கொஞ்ச நேரம் தூங்கியிருப்பேன் தான..”

“சரி இப்ப என்னதான் முடிவு”

“இருங்க.. என்கிட்ட ஒரு யோசனை இருக்கு…”

என்றபடி என்னுடைய குறிப்பு புத்தககத்தில் இருந்து என்னுடைய அனுமதியைக் கேட்காமலேயே கடைசி பக்கங்களை கிழித்தார். அதனை இரண்டாக்கினார். ஒன்றில் ‘பத்துமலையில் பால்குடம் எடுக்க வேண்டும்’ என்றும் இன்னொரு துண்டில் ‘பத்துமலையில் பால்குடம் எடுக்க வேண்டாம்’ என்றும் இருந்தது.

இரண்டையும் குலுக்கி போட்டு; பொம்மியை எடுக்கச்சொல்வோம் என்றார். எனக்கும் அது சரி என்றே பட்டது.

பூஜையறையில் சீட்டுகளை வைத்தோம். பொம்மியை எடுக்கச் சொன்னோம். ஏதோ புதுவித விளையாட்டு போல கைகளைத் தட்டிக்கொண்டே ஒரு சீட்டை எடுத்து அம்மாவிடம் கொடுத்தாள். அதில் ‘பத்துமலையில் பால்குடம் எடுக்க வேண்டும்’ என இருந்தது. எனக்கு இப்போதே கால் வலிக்க ஆரம்பித்துவிட்டது.

“என்ன முருகா என்னை பார்த்தா உனக்கு பாவமா இல்லையா.. நீதான் எல்லா இடத்துலயும் இருக்கயே… இங்க பால் ஊத்தனா அங்க உனக்கு வராதா…” என்று கேட்டபடி பொம்மியை இன்னொரு முறை சீட்டெடுக்க சொன்னேன்.

“இவ என்ன குழந்தையா இல்ல கிளியா…? இஷ்டத்துக்கு சீட்டு எடுக்க சொல்றீங்க..” என்றபடி இல்லாளும் சீட்டுகளை மீண்டும் சுருட்டி போட்டு பொம்மியை எடுக்கச் சொன்னார். அதற்கு ஏன் என்னை திட்டவேண்டும் எனவும் எனக்கு தோன்றாமல் இல்லை.

இரண்டாவது சீட்டும் பத்துமலையில் பால்குடம் எடுக்க வேண்டும் என இருந்தது. பொம்மி சிரித்தாள். இல்லாளும் இணைந்து கொண்டாள். இல்லாள் குழந்தையொடு சிரிப்பதைப் பார்ப்பதற்கு எனக்கு சிரிப்பு வந்தது.

“சரி எதையும் இரட்டைப்டையாய் விடக்கூடாதுன்னு எங்கம்மா சொல்லிருக்காங்க.. மூணாவதா ஒரு முறை சீட்டை எடுப்போம் அதில் இருப்பது போல செய்வோம்” என்றேன்.

தாமதிக்காது இரண்டு சீட்டுகளையும் மீண்டும் தட்டில் வைத்து பொம்மியை எடுக்கச் சொன்னோம்.

பொம்மி சீட்டை எடுக்கும் போது ஒரு சீட்டு தவறி கீழே விழுந்தது. அவள் இன்னொரு சீட்டை கையில் எடுத்தபடி, கீழே விழுந்த சீட்டை என்னை எடுக்கும்படி சொல்லி, இதுவும் விளையாட்டு என எண்ணி கைத்தட்டி சிரிக்கலானாள். அதற்குள் பொம்மியிடம் இருந்த சீட்டை வாங்கி இல்லாள் பிரித்தாள். அதில் ‘பத்துமலையில் பால்குடம் எடுக்க வேண்டாம்’ என இருந்தது.

“நீங்க ஆசைப்பட்டது மாதிரியே முருகன் உங்களை பத்துமலையில் படியேறி பால் ஊத்த வேண்டாம்னு சொல்லிட்டாரு.. சந்தோசமா?” என்றார்.

என் கையில் இருந்த சீட்டை எடுத்து பிரித்தேன். அதில் ‘பத்துமலையில் பால் குடம் எடுக்க வேண்டும்’ என இருக்கிறது. பொம்மியும் சிரித்தபடி இருந்தாள்.

இம்முறை முருகனே என்னை இந்தச் சீட்டை எடுக்க வைத்ததற்கு ஏதாவது காரணம் இருக்கும் என தோன்றியது. இனியும் தாமதிக்க வேண்டாம் என்று உடனே பத்துமலைக்கு கிளம்ப தயாரானோம்.

இம்முறை எனக்கு அரிசி மாவும், பொம்மிக்கு விபூதியும், இல்லாளுக்கு பன்னீரும் பால்குடத்திற்கு தயாரானது.

மாலை மணி நான்கிற்கு காரில் ஏறினோம். வழி முழுக்க நெரிசலாக இருக்கும். எப்படியும் கோவிலுக்கு சென்று சேர இரண்டு மணி நேரம் வரைகூட ஆகலாம் என்று பேசிக்கொண்டு பயணமானோம்.

காரில் பொம்மிக்கு பிடித்த ‘சின்னச் சின்ன முருகையா…’ பாடல் ஒலியேறிக்கொண்டிருந்தது. அவளும் அதற்கு ஏற்றபடி ஆடிக்கொண்டே தலையாட்டிக்கொண்டே வந்தாள்.

நாங்கள் செல்லும் வழி எங்குமே நெரிசல் இல்லை. சரியாக அரைமணி நேரத்தில் கோவிலை நெருங்கிவிட்டோம். எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது.

இன்றைய நாளில் இங்கு வாகனத்தை ‘பார்க்’ செய்வது என்ன எளிதா சொல்லுங்கள். வாகனத்தை எங்கோ நிறுத்தி எங்கோ நடந்து கோவிலுக்கு வர வேண்டும்,. அல்லது அதிகப்படியான பணம் கொடுத்து வாகனத்தை நிறுத்த வேண்டும். எந்த சிக்கலும் இல்லாத பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வாகனத்தை வைத்த இடத்திற்கு சரியாக வந்து நல்லபடியாக வாகனத்தை எடுத்து இந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும். இப்படி பல குழப்பங்கள் அந்த நேரத்தில் வருது இயல்புதானே.

ஆனால் நம்மை தன் வீட்டிற்கு அழைத்தது முருகனாயிற்றே; அப்படியா நம்மை  சிக்கலுக்கு ஆளாக்கிவிடுவான். இல்லை. இல்லவே இல்லை. இதுவரை நான் சந்திக்காக ஓர் அதிசயத்தை பத்துமலையான்  அங்கு எங்களுக்காய் நடத்தினான்.

பத்துமலையான் நடத்திய அந்த திருவிளையாடலை அடுத்த பதிவில் சொல்லவா…?

தொடரும்..

பிப்ரவரி 03, 2026

- பொம்மியுடன் 3வது தைப்பூசம் – (பகுதி 1)

 - பொம்மியுடன் 3வது தைப்பூசம் – (பகுதி 1) -

வழக்கம் போல இந்த ஆண்டும், பத்துமலை முருகனுக்கு எங்களின் நேர்த்திக்கடனை செலுத்திவிட்டோம்.

இவ்வாண்டு கூடுதலாக, வீட்டிற்கு அருகில் இருக்கும் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் காலையிலேயே பால் குடம் எடுக்கும் வாய்ப்பும் ஆசீர்வாதமும் கிடைத்தது.

தைப்பூசத்திற்கு சில நாட்களுக்கு முன்; மனைவிக்கு ஏதோ கனவு வந்ததாய்ச் சொல்லி பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு அழைத்தார். மறுத்தால் வீட்டிலேயே சாமி ஆடுவார் என்பதால் ஆடுகிற சாமி  கோவிலிலேயே ஆடட்டும் அப்போதுதான்  எனக்கு அடி விழாது என்று நினைத்தபடி சம்மதித்தேன்.

அதற்கிடையில் பத்துமலைக்கு எப்போது பால் குடம் எடுக்கலாம் என்கிற யோசனையே எங்களுக்கு இருந்தது. ஒரு வாரமாகவே நேர்த்திக்கடனைச் செலுத்த தொடங்கியிருந்தார்கள்.

 இங்கு எங்களுக்கு பெரிய குடும்பம் இல்லை. நான் இல்லாள் பொம்மி என மூன்றுபேர்நான். மற்றவர்கள் எல்லாம் ஆளுக்கு ஓர் இடத்தில் இருக்கிறார்கள். எனக்கு பிடித்தபடி பெரிய கூட்டமாய்க் குடும்பமாய்ச் செல்லும் வாய்ப்பு எளிதல் எனக்கு கிடைத்ததில்லை.  சில நண்பர்கள் பத்துமலைக்கு செல்லும் நேரத்தை கேட்டோம். எப்படியும் வாகன நெரிசலில் மாட்டி யாருமே சரியான நேரத்தில் சரியான இடத்தில் சந்திக்க முடியாது. ஒருவேளை ஒரே வாகனத்தில் அல்லது ஒரே பொது இரயிலிலோ போனால் சாத்தியப்படலாம்.

கடைசியாக தைப்பூச நாளிலேயே காலையில் போகலாம் என்று முடிவானது.

அதற்கு முன் சிவன் கோவிலுக்கு செல்லும் சூழல் வந்தது. இன்னும் இரண்டு நாட்களில் தைப்பூசம் என்பதால் சிவன் கோவிலிலும் தன் சுப்பனுக்காய்ப் பல ஏற்பாடுகளை அப்பன் செய்திருந்தார்.

கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்துவிட்டு மீனாட்சி சொக்கநாதரைச் சுற்றிக்கொண்டிருந்தோம். சட்டென எங்கள் பின்னால் இரு வயதான பாட்டிகள் பேசிக்கொண்டார்கள். “தைப்பூசத்திற்கு பத்துமலைக்கு போகலையா..?” என ஒருவர் கேட்க, “போகனும்னு ஆசைதான்.. அதான் முருகன் இங்கயே பால ஊத்திக்கோ எதுக்கு மலையேறி கஷ்டப்படறன்னு கேட்கறானே…” என சொல்லவும். “இல்லாட்டையும் மலையேறிதான் நீ பாலு ஊத்துவ பாரு…” என்றது இருவரும் சிரிக்கலானார்கள். அச்சிரிப்பு எனக்குமே தொற்றிக்கொண்டதால் அதன் ரிஷிமூலத்தைப் பார்க்க திரும்பினேன்.

அதில் ஒரு பாட்டி என்னிடம் “பாருங்க தம்பி… இவங்களுக்கு குமரின்னு நினைப்பு… என்னைய சொல்றாங்க.. தைப்பூசத்துக்கு இங்கயே பால் குடம் எடுக்கலாம்னு சொல்ல வந்தா… இந்த கிழவிக்கு வாய பார்த்தீங்களா…” என்றார்.

நானும் என்னையறியாமல் அந்தப் பாட்டியின் வாயைப் பார்க்கவும் எங்கள் சுற்று மூலஸ்தானத்தை அடையவும் சரியாக இருந்தது.  ஐயர் அங்கு நிற்கும் ஒருவருக்கு அர்ச்சனை செய்து  தீபாராதணை காட்டவும் நாங்களும் தீபத்தைத் தொட்டு நெற்றியில் வைத்து கொண்டோம். பொம்மியைத் தூக்கி கொண்டேன். அவளுக்கு தீபத்தைத் தொட்டு நெற்றியில் வைத்தேன். ஐயரை பொம்மிக்கு விபூதி வைக்கச் சொன்னேன்.

விபூதி வைத்தவர்; “தைப்பூசத்துக்கு காலையிலேயே வந்துடு முருகா.. இங்கயே பால்குடம் எடுக்கலாம்..” என்றபடி சிரித்து கொண்டே திரும்பினார்.

நானும் தலையாட்டியபடி சிரித்து கொண்டே தூணுக்கு கீழ் இல்லாளுடன் அமர்ந்தேன். அங்குள்ள அறிவிப்பு பலகையில் தைப்பூசம் அன்று காலை 8மணிக்கு பால் குடம் எடுப்பது குறித்து எழுதியிருந்தார்கள்.

கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு, புறப்பட ஆயுத்தமானோம். கோவில் வாசலுக்கு வந்த இல்லாள் மீண்டும் என்னையும் பொம்மியையும் அழைத்துக்கொண்டு அர்ச்சனை கவுண்டருக்கு சென்றார்.

பால்குடம் எடுப்பது குறித்தும் அர்ச்சனை சீட்டு குறித்து மேலும் சிலவற்றை கேட்டு தெரிந்து கொண்டார். பின் நாங்கள் எங்கள் காருக்கு வந்தோம். “தைப்பூச காலையில் பொம்மியை இங்கயே பால்குடம் எடுக்க வைக்கலாமா…?” என்று கேட்டார். அதில் மறுப்பதற்கு ஏதுமில்லாததால் சரியென்றேன்.



       இரவே எங்களின் நேர்த்திக்கடனுக்கு வாங்க வேண்டியதை வாங்கினோம். முருகன் படமும் தமிழ் எழுத்தும் உள்ள சட்டை மீது ஆசை வந்தது. எனக்கும் பொம்மிக்கு வாங்கினேன். மற்ற பூஜைக்கானவற்றை மனைவி வாங்கி வைத்து கொண்டார். பொம்மிக்கு மூடி உள்ள சிறிய குடத்தை வாங்கினோம். எனக்கும் ஒரு குடத்தை மனைவி வாங்கலாமே என்றார். இதுநாள்வரையில் வீட்டில் இருப்பது குடம் அல்ல சொம்பு என எப்போதோ நான் அடித்த ஜோக்குக்கு இன்று இருபது வெள்ளி குடமாக பதில் கொடுத்தார் இல்லாள்.

பத்துமலைக்குச் செல்வதற்கு முன்பாக மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்திலேயே நாமும் பால்குடம் எடுத்துவிடலாம் என பேசிக்கொண்டோம். அதற்கு ஏற்றபடியும் சிலவற்றை அங்கேயே வாங்கினோம்.

நான் எப்போதும் பால் குடம்தான் எடுக்கிறேன். பெரும்பாலும் அதனை மாற்றியதில்லை. இல்லாள் இம்முறை கரும்பு சாறு கொண்ட குடம் எடுப்பதாகவும். பொம்மிக்கு பஞ்சாமிருதத்தை கொடுத்துவிடலாம் என்றார்.

இன்று தைப்பூசம். காலையிலேயே எழுந்துவிட்ட பொம்மி, இல்லாளின் உதவியுடன் அவள் செலுத்த வேண்டிய பஞ்சாமிருத்தை அவளே தயார் செய்தாள். அவளது பிஞ்சு கைகளிலேயே முடிந்த மட்டில் கொடுப்பதை பிசைந்து கொண்டிருந்தாள். குடும்பமாய்க் கோவிலுக்கு உற்சாகத்துடன் சென்றோம். பால் குடம் எடுக்கவுள்ளவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து குடங்களை வரிசையாய் வைத்தார்கள்.

ஐயரின் பூஜைக்கு பின், யாரோ ஒருவரின் "வேல்...வேல்" சத்தத்திற்கு நாங்களும் ஒருசேர கோஷமிட்டபடி கோவிலைச் சுற்றினோம். சிறிய கோவில் என்பதால் சீக்கிரமே பால் குடங்களுடன் முருனிடம் நெருங்கினோம். எங்களின் நேர்த்திக்கடனை இவ்வளவு நெருக்கத்தில் இதுவரை செலுத்தியதில்லை.

தடுக்கி விழுந்தால் முருகன் மேல்தான் விழுவேன் என்கிற நெருக்கம். ஆனால் தன் குழந்தையை விழ வைப்பானா முருகன்? விழாமலேயே நம்மை தாங்கியல்லவா பிடித்துக்கொள்வான் கந்தன்.

சில அடி முன்னே எங்களில் பாலில் குமரன் குழந்தையென குதூகலத்தில் குளித்து  கொண்டிருந்தான். இல்லாளின் கரும்பு குடத்தையும் பொம்மையின் பஞ்சாமிருத குடத்தையும் அடுத்த அபிஷேகத்துக்கு பயனடுத்திக் கொள்வதற்காக கேட்டு வாங்கி கொண்டனர்.

பால் ஊற்றி முடிந்ததும் முருகனுக்கு அபிஷேகமும் தொடங்கியது, கரும்பு தண்ணியும் பஞ்சாமிருதமும் முருகனின் மேனியெங்கும் பட்டு வழிந்தது. கொஞ்சமாய்ப் பஞ்சாமிருதத்தை எடுத்து பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு கொடுத்தார்கள்.

பொம்மி தன் கையால் முதன் முதலில் செய்த பஞ்சாமிருதம் அங்கு வந்த எல்லோர் கைகளுக்கும் போனது.

சிறிய கோவில்தான் சீக்கிரமே நேர்த்திக்கடனை செலுத்திவிட்டோம். ஆனால் உடலில் சொல்ல முடியாத அசதி. சோர்ந்து போய், உடலில் இருந்து பெரிய பாரம் குறைந்தது போல நாங்கள் மட்டுமல்ல அங்கு வந்திருந்த பெரும்பாலானவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

முருகனுக்கு அபிஷேகம் செய்தி விபூதியைக் கொண்டு வந்து வைத்தார்கள். அதனைத் தொட்டதும் உடலில் புது தெம்பு வந்தது. நெற்றி நிறைய பூசிக்கொண்டோம். காலை உணவும் அங்கு தயாராகி கொண்டிருந்தது. இல்லாளையும் பொம்மியையும் அங்கு சென்று காத்திருக்கச் சொல்லிவிட்டு பால்குடத்திற்கான அர்ச்சனையை வாங்கி கொள்ள வரிசையில் நின்றேன். ஒருவர் பின் ஒருவராக அவரவருக்குரியதைப் பெற்றுக்கொண்டோம்.

பிறகு நாங்கள் சாப்பிட்டோம். சிறிய கோவில் என்றாலும் நேர்த்தியாக ஒவ்வொன்றும் நடந்தது. மனதிற்கு நிறைவான தைப்பூசமாகத் தோன்றியது.

சரிதான் அதான் இங்கு பால் ஊற்றிவிட்டோமே பத்துமலைக்கும் போய்ப் பால் ஊற்றனுமா என்ற சிந்தனை வரத்தொடங்கியது.


ஆனால் முருகனின் அழைப்பு வேறுமாதிரி இருந்தது; அதுவும் அவன் அருளிய பொம்மியின் மூலமே பத்துமலைக்கு வர வைத்தான் பால் ஊற்ற வைத்தான் அதிசயங்களை நடத்தினான்.

நம் கந்தனின் அந்தத் திருவிளையாடலை அடுத்த பதிவில் சொல்லவா?


தொடரும்........

ஜனவரி 18, 2026

வாசிப்பில் - ஜனவரி 18


இன்றைய வாசிப்பில்,
கவிக்கோ அப்துல் ரகுமானின் 'பால்வீதி' கவிதைகள்.

-தாகம்-

வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே !
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்...

- கவிக்கோ அப்துல் ரகுமான்

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜனவரி 16, 2026

- ஒழுகிய அன்பு -


எதார்த்தமாக சிலர் பார்த்துவிடுகிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லாமலிருந்தால் அருகில் வந்து நலம் விசாரிக்கிறார்கள். அடுத்த கேள்வியாக 'என்ன வேலை செய்றிங்க..?' என்ற கேள்வி வந்து விழுகிறது.

அவர்களிடமும் வேலை கேட்டிருக்கிறேன். விபரங்களை வாங்கி கொண்டு எனக்கு பதில் சொல்வதாகச் சொன்ன அவர்கள் மறந்திருக்கலாம். நான் மறக்க முடியாதே.

நான் திரும்ப கேட்டிருக்கலாம்தான். "ஏன் தொந்தரவு செய்றீங்க. வேலை இருந்தா நாங்களே சொல்லமாட்டோமா? எங்க வேலைக்கே இவ்வளவு பிரச்சனை இருக்கு.. நீங்க வேற..." என யாரும் உங்களிடம் கேட்டிருந்தால் என் தயக்கம் உங்களுக்கும் புரியும்.

நமக்கு வேலை இல்லை என்பதுதான் பிரச்சனை. அவ்வளவுதான். ஆனால் அவர்களுக்கு செய்கிற வேலையிலேயே ஆயிரம் பிரச்சனைகள். அவர்கள் ரொம்பவும் பாவம்தான் இல்லையா?

மனதில் இவையெல்லாம் ஓடினாலும், கொஞ்சமாய்ப் புன்னகித்து எல்லாவற்றையும் மறைத்தபடி, 'வழக்கம் போலவே இப்போதும் புத்தகங்கள் விற்பதாக' சொல்கிறேன்.

"ஓ இன்னும் புக்குதான் விக்கறீங்களா..." என்றபடி ரொம்பவும் அன்பொழுக சிரித்தபடி கடந்துவிடுகிறார்கள்.

அவர்கள் சிரிப்பிலிருந்து ஒழுகிய அன்பு என் கண்ணெதிரிலேயே சாலையோற சாக்கடையில் கலக்கிறது.

நமக்கு உதவுவதாகக் கூறிய பலரிடமிருந்து ஒழுகிய அன்பு எல்லாமே அங்குதான் வந்து சேர்கிறது போல.

சாக்கடைகள் அடைத்துக்கொள்வதற்கு குப்பைகள்தான் காரணம் என நினைத்து கொண்டிருந்தேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்....

- படரட்டும் ஒளி -


சாப்பாட்டுக்கடையில் வேலை செய்கிறவர்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை. சிலருக்கு சரியாக சாப்பாடே கிடைப்பதுமில்லை.

ஆனால் அவர்கள் சாப்பாடுகள் சூழ இயங்கி கொண்டிருப்பார்கள். வருகிறவர்களுக்கு தட்டு நிறைய போட்டு வயிறு நிறைய சாப்பிட வைப்பார்கள்.

ஏறக்குறைய எனக்கும் அப்படித்தான் 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை' என இணைய புத்தக அங்காடியைப் பல ஆண்டுகளாக நடத்தி வந்தாலும், அவ்வளவு எளிதாக எனக்கு தேவைப்படும் புத்தகங்களை நானே பணம் செலித்தி வாங்கி வாசிக்க முடிவதில்லை.

எனக்கு பிடித்த ஒரு புத்தகம் வாங்கி வாசிக்க குறைந்தது ஐந்து புத்தகங்களில் இருந்து ஏழெட்டு புத்தகங்களையாவது உங்களிடம் நான் விற்க வேண்டும்.

அதிலும் புத்தகங்கள் விற்று கிடைக்கும் வருவாயில் குடும்ப செலவுகள் முதல், கடன்களைக் கட்டுதல் வரை முதற்கட்டமாக ஒதுக்கி வைக்க வேண்டும். சில சமயத்தில் கையைக் கடிக்கும் சில சமயத்தில் கழுத்தை நெறிக்கும்; ஆனாலும் எப்படியாவது உயிர் வாழ வேண்டும். ஏனெனில் இந்த உயிரை நம்பி இன்னும் சில உயிர்கள் இருக்கிறார்கள்.

சரி வேறெதும் வேலைக்கு போகலாம் என்றாலும் அதிக நேரம் நிற்கவும் முடியாமல் அதிக நேரம் உட்காரவும் முடியாமல் உடலில் சில சிக்கல்கள் வந்துவிட்டன. அடிக்கடிவரும் தலைவலியால் அவதிக்கு ஆளாகிறேன். 30 வயதுவரை சளித்தொல்லையைத் தவிர உடலில் சொல்லிக்கொள்ளும்படி வேறெந்த சிக்கலும் எனக்கில்லை. ஆக நான் நன்றாகத்தான் இருந்தேன்.

அதன் பின் ஏற்பட்ட விபத்தொன்றில் (அது விபத்துதானா என்ற கேள்வியை இயற்கையிடம் விட்டுவிட்டேன்; என்னால் வேறென்ன செய்ய முடியும்) தலையில் பட்ட அடியால் வந்த வினைதான் எல்லாம்.

ஒரு முறை தலையில் பலமாய் நீங்கள் அடி வாங்கிவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். நண்பர்களே இனி உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
எண்சாண் உடம்பிற்கு மட்டுமல்ல, நாம் எத்தனை சாண்களாக வளர்ந்திருந்தாலும் நமக்கெல்லாம் நம் சிரசுதான் பிரதானம். ஆகவே அதில் கவனம்.

புத்தகங்களை விற்பதை நான் ஆத்மார்த்தமான ஒன்றாக நினைக்கிறேன். அதனால்தான் நீங்கள் புத்தகங்களைப் பற்றி கேட்கிற போதெல்லாம் அதிகப்படியாகவே புத்தகத்தைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

புத்தகங்களை உங்கள் தலையில் கட்டுவதற்குத்தான் இப்படியெல்லாம் பேசுகிறேன் என நீங்கள் நினைப்பது கூட எனக்கு நன்றாக தெரியும்.

 ஆனால் என்ன செய்ய, இந்தப் புத்தகத்தை நீங்கள் தவறவிடக்கூடாது என்கிற வாசக மனம் அந்த நேரத்தில் உற்சாகமாகிவிடுகிறது. அதிலும் பெரும்பாலும் அவை நான் வாசித்த புத்தகமாக இருந்தால் சொல்லவே வேண்டாம்.

நான் புத்தக விற்பனையாளன் என்பதையும் மறந்து சில புத்தகங்களை இலவசமாகவே கொடுத்தும் விடுகிறேன். ஏனெனில் ஒரு புத்தகத்தை வாசிக்கின்ற வாசகனுக்குத்தான் தெரியும் இந்தப் புத்தகம் இன்னொரு வாசகனுக்கு எவ்வளவு முக்கியம் என்று.

நான் இன்னொரு வேலையில் சம்பளம் வாங்கிகொண்டு பகுதிநேரமாக புத்தகங்களை விற்கவில்லை. என் முழு நேர தொழிலே புத்தகம் விற்பதுதான். அதில்தான் உங்களிடமிருந்து நான் சம்பளமும் வாங்குகின்றேன்.

நமது 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை'யில் புத்தக விரும்பிகளுக்காக மேலும் சில
திட்டங்களைத் தயார் செய்கிறேன் அதற்கு ஒரு முன்னுரையாகவோ உங்களுக்கு நான் சொல்லும் நன்றியாகவே இந்தப் பதிவை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஏனெனில் நீங்கள் யாரும் இல்லையென்றால் எனக்கு ஒரு புத்தகத்தைக் கூட வாசிக்கவோ அது குறித்து எழுதவோ பேசவோ சாத்தியம் இருக்காது.

ஒரு மனிதன் அவன் ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஒன்றைத் தடையின்றியும் தயங்காதும் அவனைச் செய்ய வைப்பது அவ்வளவு எளிதல்ல. இயற்கை அப்படியொரு வாய்ப்பை என் குடும்பத்தின் மூலமாகவுன் உங்கள் மூலமாகவும் எனக்கு கொடுத்திருப்பதாகப் பார்க்கிறேன்.

அதற்கான காரண காரியம் அந்த இயற்கைக்குத்தான் வெளிச்சம் என்றாலும் அந்த வெளிச்சம் நாம் எல்லோருக்கும் வழி காட்டட்டும்.

அந்த ஒளி எங்கெங்கும் பரவட்டும்.

உங்கள் அனைவருக்கும் எப்போதும் எங்கள் அன்பு....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்