- இந்தப் பதிவரும் ஒருவர் -
- இந்தப் பதிவரும் ஒருவர் -
'முதல் முறை தோற்கும்போதே
மரணித்துவிட வேண்டும்.
தொடர் தோல்விகள்
மரணத்தைத் தோற்கடிக்கக்
கற்றுக்கொடுத்து விடுகின்றன'
- கவிஞர் யோகி
வாசித்து முடித்தது, கவிஞர் யோகியின் 'எனும் போது' கவிதைத் தொகுப்பு.
வாசித்து முடித்த கையோடு என் வாசிப்பனுபவத்தையும் எழுதிவிட்டேன். இரண்டொரு நாட்களில் பகிர்கிறேன். நீங்களும் வாசித்து சொல்லலாம்.
நான் எழுதவந்த காலகட்டத்தில் சிலரின் படைப்புகளை வாசித்து அதன்பால் ஈர்க்கப்பட்டு நம்பிக்கையோடு அவர்களின் கைகளைப் பிடித்து நடந்தவர்களில் கவிஞர் யோகியும் ஒருவர்.
வாசிப்பை அடிப்படையாக வைத்து அன்று தொடங்கிய அந்தப் பயணம்தான் எனது இன்றைய எழுத்துக்கான அஸ்திவாரம்.
இன்றைய தலைமுறையில் புதிதாக எழுத வந்திருக்கும் எழுத்தாளர்களுக்கு
கிடைக்காத ஒரு வாய்ப்பு எனக்கும் என்னுடைய காலகட்டத்தில் எழுத வந்தவர்களுக்கும் இருந்தது.
என்ன தெரியுமா.?
யார் என்று அறியாமலேயே அவர்கள் எழுதியதை வாசித்து பழகினோம்.
எழுதியவர் எப்படி இருப்பார் என்றுகூட சரியாக தெரியாது. ஏதாவது ஒரு வார மாத இதழிலோ பத்திரிகைகளிலோ இருக்கும் அவர்களின் படைப்பும் அதன் கீழ் இருக்கும் அவர்களின் பெயருமே அவர்களுக்கான அடையாளம். அதுவே எங்கள் வாசிப்பிற்கான பயிற்சி .
அதை வைத்துதான் எங்கள்
வாசிப்பை வழி நடத்தினோம்.
சமூக ஊடகங்களில் இருக்கும் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை வைத்து அவர்களை வாசிக்கவில்லை. ஊடக வெளிச்சம் அதிகம் உள்ளதாலேயே அவர்கள் எழுதியது சிறந்த எழுத்து என எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ளவில்லை. யாராவது நமக்கும் புத்தகம் போட்டு கொடுப்பார்கள் என்று அவர்களை எங்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொள்ளவில்லை.
இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் எந்த ஒரு எழுத்தாளரையும் அவரின் படைப்புகளை வாசிக்காமல் அவர் குறித்த மாய பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டு நாங்களும் வாசிப்பதாக எங்களையே ஏமாற்றிக்கொள்ளவில்லை.
ஒருவேளை இன்று எழுதவந்திருக்கும் நீங்கள் இப்படியெல்லாம் இல்லை என்று நினைத்தால்; உங்களுக்கும் ஒன்றைச் சொல்லவேண்டியுள்ளது. நீங்கள் தனியாக இல்லை நண்பர்களே உங்கள் பின்னால் ஒரு பெரிய, வாசிப்பின் வரலாறே இருக்கிறது...
இன்னொன்றையும் சொல்லலாம், அப்படியென்றால் அன்றைய காலகடத்தில் எழுதிய எல்லாருமே சிறந்த எழுத்தாளர்களா? எல்லா படைப்புகளுமே சிறந்த படைப்புகளா?
அப்படியொன்றும் பெருமைபட ஒன்றுமில்லை.
இன்று தங்களையும் நவீன எழுத்தாளர்கள் எனச் சொல்லிக்கொள்ள நவீன எழுத்தாளர்களுக்கு நண்பர்களாக இருந்தாலே போதும் எதையும் வாசிக்கவோ எழுதவோ பேசவோ தேவையில்லை என்ற கவனிக்கப்படாத சிக்கல் இருப்பது போலவே எல்லா காலகட்டத்திலும் ஏதோ ஒரு சிக்கல் இருக்கத்தானே செய்கிறது.
வாசிப்போம் அதுதான் எல்லாம்.
இந்தப்பதிவின் தொடக்கத்தில் யோகியின் கவிதையை வாசித்தீர்களே, அந்தக் கவிதையில் வரும் மரணத்தைத் தோற்கடிக்க கற்றுக் கொண்டவர்களில் உங்களைப் போலவே இந்தப் பதிவரும் ஒருவர்.
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை