Latest Posts
ஆகஸ்ட் 05, 2026
- கண்ணீரின் கரைதனிலே -
இன்று வேலைக்கு போகவில்லை. மைக்ரீன் (ஒற்றைத் தலைவலி). ஏற்கனவே தலையில் அடிபட்டிருப்பதால் என்னால் மற்றவர் போல அல்லாமல், ஒற்றைத் தலைவலி கூடுதல் வலியைக் கொடுக்கும்.
காலையில் எழுந்ததும் தலை சுற்றியது. குமட்டிக் கொண்டு வாந்தியும் வந்தது. குளியல் அறையிலேயே கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தேன். சட் சட்டென குளிர்ந்த நீரை தலையில் ஊற்றினேன். தலை தொடங்கி உடல் முழுக்க படர்ந்த குளிரால் கொஞ்சம் புத்துணர்ச்சி தோன்றியது.
பின் வழக்கம் போல டெலிவரி வேலைக்கு தயாரானேன். தலைவலி மருந்தை எடுத்து பாக்கெட்டில் வைத்து கொண்டேன். வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. வீட்டில் பொம்மிக்கு வாங்கி வைத்த ரொட்டி இருந்தது. அதை அவளுக்கே வைத்துவிட்டு கடையில் சாப்பிட்டுவிட்டு மருந்து சாப்பிடலாம் என்று எண்ணி புறப்பட்டேன்.
தலைவலியும் பசி வயிறும் படி இறங்கி வரும் போதே அதன் வேலையைக் காட்டத் தொடங்கின.
கடைக்கு சென்று சாப்பிடும் வரை தாங்காது என தெரிந்தது. பக்கத்தில் உள்ள கடையில் ரொட்டியையும் மினரல் பாட்டிலையும் வாங்கினேன்.
காரில் அமர்ந்தபடியே சாப்பிட்டேன். பின் மருந்தையும் சாப்பிட்டேன். உடனே காரை எடுக்க முடியாது. வலி குறைய கொஞ்ச நேரம் எடுக்கும். ஆனால் இன்று ஏனோ வலி எளிதாக குறையவில்லை. தலை சுற்றல் அதிகமானது. கண் முன்னே இருப்பதெல்லாம் அதன் இஸ்டத்திற்கு சுற்ற ஆரம்பித்தன. மீண்டும் குமட்டிக்கொண்டு வந்தது. காரில் இருந்து இறங்கி வாந்தி எடுத்தும் வலியும் மயக்கமும் குறையவில்லை.
இந்த நிலமையில் டெலிவரிக்கு சென்றால் என்னைத்தான் யாராவது டெலிவரி செய்வார்கள் என்கிற பயம் உடல் முழுக்க பரவியது. கார் கதவை மூடினேன். லாக் செய்தேன். குனிந்த தலை நிமிராது மெல்ல மெல்ல நடந்து படி வரை வந்துவிட்டேன்.
கைபிடிகளைப் இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டு ஒவ்வொரு படியாக ஏறினேன். டாக்டர் ஸ்டிரேஞ் படத்தில் வருவது போல ஏறிக்கொண்டிருக்கும் படிகள் எல்லாம் என் முன்னேயே எழுந்து சுற்ற ஆரம்பித்தது. கைப்பிடியை தளர்த்தினால் விழுந்து விடுவேன் என எனக்கு நன்றாகத் தெரியும். ஆகவே தலையை நிமிர்த்தாது தரையைப் பார்த்தபடி, படியைப் பிடித்தபடி மூன்றாவது மாடிக்கு வந்து சேர்ந்தேன்.
வீட்டில் இல்லாளும் பொம்மியும் உறங்கி கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பாமல் வீட்டு வரவேற்பறை சோபாவில் படுத்தேன். தூக்கம் வரவில்லை. ஆனால் மயக்கம் வந்தது. இரண்டிற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ளவே எனக்கு பல ஆண்டுகள் ஆனது.
தூக்கம் வந்தால் கண்களை மூடி உறங்கலாம். ஆனால் மயக்கம் வந்தால் என்னால் தைரியமாக கண்களை மூடி தூங்க முடியாது. ஏனெனில் மீண்டும் எழுவேனா என்பதே எனக்கு தெரியாது.
எழுந்து முகத்தை கழுவிக்கொண்டு எனது அறைக்கு வந்தேன். அலமாரியில் இருக்கும் புத்தகங்களைப் பார்தேன். இம்மாதம் வாசிக்க வேண்டிய புத்தகங்களை மீண்டும் ஒருமுறை என் மேஜையில் வைத்து ஒவ்வொன்றாக பார்த்து கொண்டிருந்தேன்.
நேற்று தட்டச்சு செய்யும் வேலையொன்று கிடைத்தது. சரி அதையாவது செய்யலாமே என கணினி முன் அமர்ந்தேன். பட்டன் தட்டிய பின் கண் திறக்க எப்படியும் அரைமணி நேரமாவது என் கணினி எடுத்து கொள்ளும். கோலாலம்பூருக்கு வந்து ஆறேழு மாதங்களில் சேமித்த சம்பளத்தில் வாங்கிய முதல் சொத்து இந்தக் கணினி அதனால் அதை திட்டவும் மனம் வருவதில்லை.
ஒருவழியாக கணினி கண் திறந்து வழி விட்டது. தலைவலி சுருக் சுருக்கென வந்தபடி இருந்தாலும் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலை என்பதால் பெரிதாக சிக்கல் இருக்காது என்றே நம்பினேன்.
தட்டச்சு வேலையும் தலை வலியும் ஒன்றாக பயணித்து கொண்டிருக்கும் போது தூங்கி எழுந்த பொம்மி நேராக என் அறைக்கு வந்தாள். நான் வீட்டில் இருப்பதைப் பார்த்தவள் குதூகலமாகிவிட்டாள். ஓடி வந்தவள் அப்பா என்று கத்தி கொண்டே என் மேல் பாய்ந்தாள். அவள் வந்ததைச் சரியாக கவனிக்காத நான் என் மேல் பாயும் அவளைப் பிடிக்க முடியாமல் குழம்பி கீழே குனிந்தேன்.
அவளை தூக்கவும் என் தலை மேஜையில் இடிக்கவும் சரியாக இருந்தது. ஏற்கனவே தலைவலி, இப்போ இன்னொரு வலி தலையில் ஏற்பட்டதால் சத்தம் போட்டேன். பொம்மி பயந்துவிட்டாள். அவளை கீழே இறக்கிய வேகத்தில் பட்டென அடித்தும் விட்டேன்.
நான் அடித்ததைக் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத பொம்மி சில நொடிகள் என்னையேப் பார்த்துவிட்டு அழுதபடி என் அறையை விட்டு ஓடினாள்.
அவள் அடித்துவிட்டது எனக்குமே வலித்தது. அந்த வேதனையும் சேர்ந்து என்னை அழ வைத்தது.
தலையில் இரு கைகளையும் வைத்தபடி கீழே பார்த்து கொண்டிருந்தேன். மிருதுவான கையொன்று என் தோளைத் தட்டியது.
நிமிர்ந்து பொம்மியைப் பார்த்தேன். கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த பொம்மி என் கண்களைத் துடைத்துவிட்டாள்.
என்னை அழவேண்டாம் என சொன்னவள், நான் அடித்தது அவளுக்கு வலிக்கவில்லை என்றாள். ஆகவே என்னை அழவேண்டாம் என சொல்லிவிட்டு என் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவளது காலை தூக்கத்தை தொடர்வதற்கு சென்றுவிட்டாள்.
உண்மையில் அவள் என் கண்களைத் துடைத்த பின்னர்தான் எனக்கு அழுகையே அதிகமாய் வந்தது.
பொம்மியை அடித்துவிட்டதால்தான் அப்பாவும் வலியில் அழுகிறார் என நினைத்த பொம்மியை நினைத்து கொண்டேன். அவளுக்கு வலிக்கவில்லை என்பதைச் சொன்னால் நான் அழுவதை நிறுத்துவேன் என அவள் எப்படி யூகித்திருப்பாள் என எனக்கு பிடிபடவில்லை.
நம் வாழ்க்கையே நமக்கு பல சமயங்களில் பிடிபடாமல் போகும்போது இதுவெல்லாம் எம்மாத்திரம் என நினைத்து கொண்டு என் தட்டச்சு வேலையை தட்ட ஆரம்பித்தேன்.
பொம்மி வந்தது, பின் நடந்தது எல்லாவற்றையும் ஒரு கனவு போல நினைக்கலானேன். பொம்மி அவள் அறையில் தூங்கி கொண்டே முனகுகிறாள்.
"அப்பா பொம்மிக்கு வலிக்கல... அப்பா அழ வேண்டாம்...."
நான் மீண்டும் அழத்தொடங்கினேன். கண்களின் வழியே கண்ணீரில் கரைந்து என் மைக்ரீன் தலைவலியும் கரைந்து கொண்டிருக்கிறது. அதனூடே வெளியில் சொல்ல முடியாத ஏதேதோ வழிந்து செல்வதை உணர முடிகிறது.....
அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
ஆகஸ்ட் 01, 2026
ஆகஸ்ட் மாத நாவல் வாசிப்பில்
- நாவலிலிருந்து
--------
மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான நாவல்; எம்.குமாரன் 'செம்மண்ணும் நீலமலர்களும்'.
1969-ல் மலேயா தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல் இது.
பல ஆண்டுகளாக தேடியும், பலரிடம் கேட்டும் கிடைக்காமல் காத்திருந்த நாவல். எதார்த்தமான உரையாடல் வழி கைக்கு வந்து சேர்ந்தது. வாசித்து முடித்து அதன் வாசிப்பனுபவத்தை எழுதும்போது இந்நாவல் கைக்கு கிடைக்க காரணமாக இருந்தவர்களையும் எழுதுகிறேன்.
ஜூலை 26, 2026
அடிக்கடி சந்திக்கலாம்...
வழக்கமாய் நண்பர்களைச் சந்திக்கும் உணவகத்தில் சந்தித்து பேசினோம்.
பில்மோர் பாலசேனாவை எனக்கு முன்னமே தெரியும். இப்படி சொல்கிறேன்; என்னை சின்ன வயதில் இருந்து அவருக்கு தெரியும். அட இப்போதும் கூட எனக்கு சின்ன வயதுதானே.
ஏடம் அசுவினியை அவ்வப்போது இலக்கிய நிகழ்ச்சிகளில் சந்தித்து "உள்ளேன் ஐயா வணக்கம் ஐயா..." என்பது போல பேசியிருந்தேன். முகநூலில் இருப்பது அவர்தான் என தெரிந்த பின் கூடுதலாக சில வார்த்தைகள் பேச தொடங்கி கேலி கிண்டல் வரை பழகினோம்.
அவரது குறுங்கதைகளை இதழ்களிலும் முகநூலிலும் வாசித்திருக்கிறேன். எழுதுவதோடு மலேசியத் தமிழ் ஆர்வலர் நற்பணி களத்தையும் நண்பர்களுடன் இணைத்து நடத்தி வருகின்றார். அடுத்த முறை அவர்களின் நற்பணி களகத்தை குறித்து எழுதுகிறேன்.
எங்களின் உரையாடல் எங்கெங்கோ சென்று பின்னர் இலக்கியத்திற்கு வந்தது. நாங்கள் வாசித்ததைப் பேசினோம். இன்றைய சூழலில் வாசிப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பேசினோம். மலேசிய மூத்த எழுத்தாளர்கள், மறந்த புத்தகங்கள் என எனது அடுத்தடுத்த கட்டுரைகளுக்கானத் தகவல்களையும் அவர்களிடமிருந்து பெற்று கொண்டேன்.
பல ஆண்டுகளாக தேடி கிடைக்காத புத்தகம் ஒன்றை அண்ணன் பில்மோர் பாலசேனா வைத்திருப்பதாகச் சொன்னார். எனக்கு உள்ளம் பூரித்து விட்டது. இந்தச் சந்திப்பைச் சாத்தியப்படித்திய அண்ணன் ஏடம் அசுவினியின் கையைப் பிடித்து நன்றியைத் தெரிவித்து கொண்டேன். அப்படியென்ன புத்தகன் அதுவென அதற்கான வாசிப்பனுபவத்தை எழுதும் போது சொல்கிறேன்.
இன்றைய சந்திப்பில் எனது வேலை, புத்தக விற்பனையோடு மருத்துவமனை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன். அண்ணன் பில்மோர் பாலசேனாவும் அவரது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதை அவர் சிறுகதையாக எழுதியிருந்ததையும் சொன்னார். அதோடு அவர் வெளியிட்ட அவரது புத்தகத்தோடு அடுத்த சந்திப்பை ஏற்பாடு செய்யலாம் என்றபடி இன்றைய சந்திப்பை நிறைவு செய்தோம்.
இனி அடிக்கடி சந்திக்கலாம்.....
ஜூலை 23, 2026
புத்தகச்சிறகுகள் - தொடர் 20
- நண்பர்களுக்கு இன்று விடுமுறை -
முதல் நாள் வேலை அதிகமாக இருந்ததால், மீண்டும் இடுப்பில் வலி வந்துவிட்டது. இரவு உறக்கமின்றி ரொம்பவும் சிரமப்பட வேண்டியதாய்ப் போயிற்று. பொருட்களை டெலிவரி செய்யும் போது சில சமயங்களில் அந்தந்தப் பொருட்களை நாமே தூக்கி கொண்டு படியேறும்படியும் குறிப்பிட இடம் வரை கையில் தூக்கிக் கொண்டே நடக்கும் படியும் ஆகிவிடும்.
பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இது தெரியும். பொருட்களை இப்படி தூக்கி வரும்படி இருந்தாலும் மாடிக்கு கொண்டு வரவேண்டும் என்பதாக இருந்தாலும் கூடுதலாக பணம் செலுத்துவார்கள். ஏறக்குறை இரண்டு வெள்ளியில் இருந்து மூன்று வெள்ளி வரை கூடுதலாக நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. சில வாடிக்கையாளர்களுக்கு இது தெரிந்திருந்தாலும் அவர்களின் ஒரு வெள்ளி இரண்டு வெள்ளியை மிச்சப்படுத்தி டெலிவரியில் எதையும் குறிப்பிட மாட்டார்கள். பொருட்களை அவர்கள் தரும் முகவரிக்கு கொண்டு சென்றதும்தான் நம்மிடம் பொருளை தூக்கி கொண்டு வரும் வேலையையோ படியேறுவதையோ சொல்லுவார்கள்.
அப்படி சொல்லும் போது, அதற்கு அவர்கள் டெலிவரி அப்லிகேஷனில் சொல்லியிருக்க வேண்டும். அப்போதுதான் எங்களால் அப்படி கொண்டு வரமுடியும். ஏனெனில் இவர்கள் கொடுக்கும் கட்டணத்தில் இப்படி பொருட்களை தூக்கி கொண்டு மாடிக்கு ஏறி வருவதெல்லாம் சேர்க்கவில்லை என குறிப்பிடுவோம்.
சிலர் தங்களின் தவறுகளை புரிந்து கொள்வார்கள் இன்னும் சிலர் அப்போது கையில் இரண்டு வெள்ளியைத் திணிப்பார்கள். இன்னும் இலர் இருக்கின்றார்கள், தங்களின் தவறை மறைக்கவோ தங்களின் சாமார்த்தியத்தை காட்டுவதாகவோ நாங்கள் வழங்கிய சேவைக்கு கொடுக்க வேண்டிய 5 ஸ்டார்களுக்கு பதிலாக ஒரு ஸ்டாரையும் கொடுத்து எங்களின் வேலை சரியாக இல்லை என்கிற குறையையும் அப்லிகேஷனின் எழுதிவிடுவார்கள். அப்படி எழுதிவிட்டால் எங்களுக்கு அடுத்தடுத்த வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால் எங்களுக்கு பாதிநாள் வரை வாடிக்கையாளர்கள் கிடைக்காமல் அள்ளாடுவோம்.
எதற்கு இந்த வம்பு என்று, சொன்னதை செய்துவிடுவோம். வேறேன்ன செய்ய முடியும் எங்களால். வாடிக்கையாளர்களாக நீங்கள் வரும்போது உங்களால் முடிந்த எதையாவது எங்களுக்கு செய்யுங்கள்.
நேற்றைய டெலிவரியிலும் அப்படியான அனுபவம் எனக்கு கிடைத்தது. அதுபற்றி இன்னொரு நாள் சொல்கிறேன்.
சில பாரமான பெட்டிகளை டெலிவரி செய்யும் வேலை வந்தது. தூக்கியும் இறக்கியும் செய்த வேலை போதாதென்று மழையும் வந்திருந்தது. ஈரமான தரையில் பாரமான பெட்டியுடன் நடக்கும் போது வலது கால் முன்னே இழுத்து தடுமாற்றம் ஏற்பட்டது. சட்டென என்னையறியாமலேயே என் உடல் இயந்திரத்தனாம பாதுகாப்பு கவசமாக ஏதேதோ அசைவுகளைச் செய்தது. என்னைப் பாதுகாப்பதாக நினைத்து ஏற்கனவே கொஞ்சமாய் இருந்த இடுப்பு வலியை இரட்டிப்பாக்கிவிட்டது.
வலி தாங்காமல் வீட்டிற்கு செல்லலாம் என்றால் முடியாது. இன்றைய சம்பாத்தியம் போதவில்லை. குறைந்தது மூன்று டெலிவரிகளையாவது செய்ய வேண்டும் அப்போதுதான் பட்ஜெட் போட்டபடி சமாளிக்க முடியும். அதோடு இரண்டு நாளில் அடகு கடை நகைக்கு பணம் கட்ட வேண்டியுள்ளது.
உடனே ஒரு ஆடர் வந்தது. காருக்கு தேவையான உதிரி பாகங்களைக் கொண்டு போக வேண்டும். 21 கிலோமீட்டர்தான் ஆனால் மழையாக இருப்பதால் நாற்பத்து ஐந்து நிமிடங்கள் வரை காட்டியது கைப்பேசி. அது டோல் இருக்கும் பாதை. இரண்டு வெள்ளி கட்ட வேண்டும். கஸ்டமரை அழைத்து டோல் குறித்து பேசினேன். சரி என்றார்கள். பொருளை எடுத்துக் கொண்டு ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் அந்த இடத்தை அடைந்தேன்.
தமிழரின் கார் பழுது பார்க்கும் கடை. நடுத்தர வயதில் ஒருவர் காரை பழுது பார்த்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பொருட்களைக் கொடுத்தேன். “வழியில் ரொம்ப மழையா என்றார்..?” ஆமாம் என்று டெலிவரி கட்டணத்தில் டோல் பணத்தையும் சேர்த்து கொள்ளும்படியும் சொன்னேன். ஆம் என்றவர், தூரத்தில் இருக்கும் மகனை அழைத்து எனக்கான பணத்தைக் கொடுக்கச் சொன்னார்.
அங்கிருந்த மகன் வந்தார். நேரடியாக என் வங்கியில் பணம் செலுத்துவதாகச் சொல்லி எவ்வளவு என்றார். நானும் அந்த நடுத்தர வயதுக்காரரிடம் சொன்னது போலவே கட்டணத்தையும் டோல் சாவடிக்கு கட்டிய இரண்டு வெள்ளியையும் கேட்டேன்.
அவரின் முகம் மாறிவிட்டது. “என்னது! என்ன ரெண்டு வெள்ளி கூடுதலா கேட்கறீங்க என் போன்ல அப்படி காட்டலயே..?”
“அதில் இருக்காது…” என சொல்ல வாயெடுத்தேன்.
“அப்லிகேஷன்ல இல்லாம காசு கேட்டா எப்படி கொடுக்கறது. இதுக்கும் சேர்த்துதானே காசு கொடுக்கறோம்.. கூட கேட்ட எப்படி… எல்லாம் புதுசாதான் இருக்கு….”
“அதில் இருக்காது… ஆனா ‘டோல்’ இருந்தா கஷ்டமர்கிட்ட நாம கேட்கலாம். அந்த அண்ணகிட்ட கேட்டுட்டுதான் அந்தப் பாதையில வந்தேன்” என்றேன்.
“அதுக்கு….”
“டொல் காசு கொடுக்கறதும் கொடுக்காததும் கஸ்டமரோட விருப்பம். ஆனால் பொருளை எடுக்கும் போதே நாங்க கஸ்டமரை கூப்டு கேட்போம். டோல் காசு கொடுக்கறதா சொன்னாலும் இல்லைன்னு சொன்னாலும் அதுக்கு ஏத்த மாதிரி பாதையில் வருவோம். அந்த அண்ணகிட்ட கேட்டேன் அவர் கொடுக்கறேன்னு சொன்னாரு அதான் அந்தப் பாதையில் வந்தேன்…”
எங்களது உரையாடல் உள்ளே இருப்பவருக்கு கேட்டிருக்க வேண்டும். “டேய்… நான் தான் கொடுக்கறேன்னு சொன்னேன்.. காசு கொடுத்து அவரை அனுப்பு.. மழையா இருக்குல்ல.. அவரு மத்த இடத்துக்கு போகனும்ல….” என்றார்.
எதிரில் இருந்தவருக்கு கோவம் வந்திருக்க வேண்டும். வங்கியில் பணம் செலுத்துவதாக சொன்னவர். அவரது பாக்கெட்டில் இருந்து டெலிவரிக்கான பணத்தையும் டோல் சாவடிக்கு கட்டிய இரண்டு வெள்ளியையும் கொடுத்துவிட்டு ஏதோ பேசியபடி அவர் வந்த இடத்துக்கே சென்றார்.
எனக்கு அந்த இரண்டு வெள்ளியைப் பார்க்கவும் அவமானமாக இருந்தது. டெலிவரி பணத்தை பாக்கெட்டில் வைத்துவிட்டு, அந்த இரண்டு வெள்ளியை கையில் வைத்து இறுக்கமாக மூடியபடி வெளியேறினேன்.
அவர்களின் கடை வாசலில் மதுரைவீரன் சாமி வைத்திருந்தார்கள். சின்னதாய்ச் சிவப்பு வண்ணத்தில் கூடாரம் போல அமைத்திருந்தார்கள். கையில் இருந்து அந்த இரண்டு வெள்ளியை மதுரை வீரனிடம் கொடுத்துவிட்டு காருக்கு சென்றேன். ஏனோ கைகள் நடுங்கியபடி இருந்தது.
வீட்டுக்கு போகலாமா என்ற் எண்ணமே எழுந்தது. ஆனாலும் இன்னும் இரண்டு டெலிவரிகளைப் பார்க்க வேண்டுமே.
அடுத்ததாய் ஒரு டெலிவரி கிடைத்தது. மோட்டார் வண்டியின் சக்கரத்தை கொண்டு போக வேண்டும். கடைக்கு சென்றேன். கடையில் ஒருவர் கையில் வண்டி சக்கரத்துடன் காத்திருந்தார். அதனை வண்டியில் ஏற்றிவிட்டு கட்டணத்தை எனது வங்கியில் செலுத்துவதாகச் சொல்லி வங்கி எண்ணின் கியூ.ஆரைக் கேட்டார்.
அதனைக் கொடுப்பதற்கு முன் பொருளை கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தை கைப்பேசியில் பார்த்தேன். ஒரே ஒரு டோல் சாவடி இருந்தது. ஒரு வெள்ளி கட்டணத்தை காட்டியது. அவரிடம் சொன்னேன். “ஓ அப்படியா…?” என்றவர் கூடுதலாக ஐந்துவெள்ளியைச் செலுத்தினார். எனக்கு ஆச்சயமாக இருந்தது. நன்றி சொல்லிவிட்டு டெலிவரிக்கு கிளம்பினேன்.
20 நிமிடத்தில் அந்த முகவரியை அடைந்தேன். வீட்டில் இருந்து ஒருவர் வந்தார், அவரேதான் அது. அவர்தான் பொருளைக் கொடுத்து பணத்தையும் கொடுத்து அனுப்பினார். சிரித்தபடி பொருளை வாங்கி கொண்டார். அவரது வீட்டு வாசலில் மூன்று டெலிவரி வேலைகான மோட்டார் சைக்கில்கள் இருந்தது.
இங்கும் எங்களின் நண்பர்கள் இருக்கிறார்களா என்று கெட்டேன். “ஆமாம்.. நாங்களும் பகுதி நேரமா டெலிவரிதான் செய்றோம்… உங்க நண்பர்களுக்கு இன்னிக்கு விடுமுறை…” என்று சிரித்தார்.
எனக்குமே சிரிப்பு வந்தது. மழையும் அதிகமாக சிரிக்க ஆரம்பித்தது. கணக்கு செய்து பார்த்ததில் இன்றைக்கு தேவையான பணம் இருந்தது. அதோடு மணி ஐந்தை நெருங்கியது. வாகன நெரிசலில் சிக்காமல் இருக்க இப்போது கிளம்பினால்தான் சரியாக இருக்கும் என்று நேராக வீட்டிற்கு புறப்பட்டேன்.
மறுநாள் நண்பரும் எழுத்தாளருமான ஶ்ரீகாந்தனைச் சந்தித்தேன். அதைப் பற்றிதான் எழுத தொடங்கினேன். ஆனால் எது எதையோ எழுதிவிட்டேன் பாருங்கள். அந்தச் சந்திப்பு பற்றி பிறகு எழுதுகிறேன்….
ஜூலை 12, 2026
புத்தகச்சிறகுகள் - தொடர் 19
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 19' வெளிவந்துள்ளது.
புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.
இந்தத் தொடரில் எழுத்தாளர் மனோகரன் கிருஷ்ணனின் 'நாகம்மாளின் மனக்குறிப்புகள்' சிறுகதைத் தொகுப்பு குறித்து எழுதியுள்ளேன். எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. கட்டுரையின் முதல்பகுதி இந்த வாரத் தொடரில் இடம்பெற்றுள்ளது.
எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.
அடுத்த வாரம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு வருகிறேன்.
அன்புடன்
#தயாஜி