- அடுத்த 30நாட்களின் வாசிப்பு திட்டம் -
மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் ஆகஸ்ட் மாதம் வரை 8 நாவல்களை வாசித்துவிட்டேன். இந்த ஆண்டில் இன்னும் நான்கு நாவல்களை வாசித்துவிட்டால் திட்டம் நிறைவேறிவிடும்.
அதோடு 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடருக்கும் 'மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம்' தொடருக்கும் தலா நான்கு நான்கு புத்தகங்களை தனியே எடுத்து அடுக்கி வைத்துவிட்டேன். ஆகா, அடுத்த நான்கு மாதங்களுக்கான 8 புத்தகங்கள் தயாராய் உள்ளன. அதற்கென அவ்வப்போது தலையை உடைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இப்போதெல்லாம் அதிகம் தேர்வு செய்துதான் புத்தகங்களை வாசிக்கின்றேன். அதிலும் தேர்வு செய்யும் நாவல்களில் கூடுதல் கவனமாய் இருக்கிறேன்.
செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரைக்குமான வாசிப்பு பட்டியலை காலையில் இருந்து செம்மைப்படுத்தி கொண்டிருக்கிறேன். பட்டியலில் புத்தகங்களைச் சேர்ப்பதுதான் நம் வேலை. திட்டமிட்டபடி பட்டியல் உள்ளதைதான் வாசித்து முடிக்கின்றோமா என்பது சாத்தியமில்லாத ஒன்று. வாசிப்பது மட்டுமே நம் வேலையாக இருக்கும். எதை வாசிக்கின்றோம் என்பதை அந்தந்த நேரமும் அந்தந்த சூழலும் முடிவெடுக்கும்.
வாசிப்பதற்கான மனநிலையை எப்படியாவது (அதன் சிரமம் எனக்கும் தெரியும் என்பதால்) பழக்கிவிட்டால் வாசிப்பதற்கான புத்தகங்கள் நம் கைக்கு கிடைத்துவிடும்.
தினமும் ஒரு பக்கம் தொடங்கி ஐந்து பக்கங்கள் வரை கட்டாயமாய் வாசிக்க தொடங்கி, வழக்கமாக்கிவிட்டால் அதுவே தன்னை அடுத்தடுத்த தினங்களுக்கும் அடுத்தடுத்த பக்கங்களுக்கும் தன்னை பழக்கமாக்கி கொள்ளும்.
இதை எழுதி முடிக்கும் நேரத்திற்கு முன்னதாக, அடுத்த நான்கு மாதங்களுக்கான புத்தகங்களை என் வாசிப்பு மேஜையில் அடுக்கி வைத்தேன்.
ஒவ்வொரு மூன்றுமாதங்களின் நான் வாசித்த புத்தகங்களையும் அதன் வாசிப்பு அனுபவத்தின் சிறு குறிப்புகளை செப்டம்பர் கடைசியில் எழுதுகிறேன்.
உங்களுக்கு வாசிக்க ஆர்வமாக இருக்கிறது. ஆனால் அதற்கான திட்டமிடலில் சிக்கல் இருக்கிறது என்றால் தொடர்பு கொள்ளுங்கள். கலந்து பேசி திட்டமிடுவோம்.
உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன்.
செப்டம்பரில் வாசிப்பதற்கான மூன்று புத்தகங்களை; உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யுங்கள். 30 நாட்களில் அந்த மூன்று புத்தகங்களில் ஒன்றை நீங்கள் வாசித்து முடித்தாலும் பெரிய சாதனைதான்.
வாசிப்போம்... நேசிப்போம்... வளர்வோம்....
அன்புடன் தயாஜி