பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஏப்ரல் 20, 2026

- விரல் முளைத்த இலை -


என்
உள்ளங்கை நிறம் கொண்ட
ஏதோ ஒரு
மரத்தின் இலையை
இன்று கண்டேன்

உதிர்ந்த இலையா
என் உஷ்ணத்தை
உணர்ந்த இலையா என
பிடிபடவில்லை

இந்த நெடுஞ்சாலையில்
இன்னும்
சூரியனே முழுதாய் விழிக்காத
நேரத்தில்
என்னிடம் ஏன் வந்ததென
தெரியவில்லை

அதற்கும்
விரல் முளைக்கும் ஆசை
வந்திருக்க வேண்டும்

உள்ளங்கையில் அது
என் விரல்களைக் கொஞ்சநேரம்
தனதாக்கி கொண்டது

விரலாசை இன்று
நிறைவேறிய பின்பு
அணில் குஞ்சு போல
வலிக்காது பிடித்து
மெல்ல மெல்ல நடந்து
அருகிலிருந்த
மரத்தின் அடியில்
இறக்கிவைத்தேன்

முத்த ஈரத்தை விரலிடுக்களில்
விட்டுவிட்டு
சட்டென துள்ளி குதித்து
மரத்தில் ஏறி
காய்ந்திருந்த கிளையில்
ஒட்டி
துளிர்க்கத் தொடங்கியது

தன் வாலை
மெல்ல அசைத்து
என்னையும் வழியனுப்பியது...

#தயாஜி
(நன்றி - புகைப்படம் குமரன்)

ஏப்ரல் 19, 2026

எஸ்.ராவின் 'வான் கேட்கிறது'


இந்த வார வாசிப்பில், எஸ்.ராவின் 'வான் கேட்கிறது' கட்டுரைகள்.
36 கட்டுரைகள் அடங்கிய கட்டுரை தொகுப்பு.

எஸ்.ராமகிருஷ்ணன் தான் வாசித்த இந்தி இலக்கியங்கள், அயல்மொழி இலக்கங்களுடன் தமிழில் முக்கியமான படைப்பாளிகள் குறித்து எழுதியிருக்கிறார்.

இதில் சில கட்டுரைகளை முன்னமே அவரது இணைய பக்கத்தில் வாசித்திருந்தாலும் ஒரு தொகுப்பாக தற்போது வாசிப்பதில் மனதிற்கு நெருக்கமாகின்றது.

இணையத்தில் வாசித்த போது அவர் அறிமுகம் செய்த புத்தகங்களில் சிலவற்றை வாங்கியிருக்கிறேன் சிலவற்றை வாசித்தும் இருக்கிறேன் என்பது எழுதுவதை மட்டுமே தனது வாழ்வாக கொண்டிருக்கும் எஸ்.ராவிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவர் அறிமுகம் செய்யும் புத்தகங்களை அவரது வாசகர்களும் தேடி வாசித்து பேசுவது அவருக்கு அதைத்தானே கொடுக்கும்.

இந்தத் தொகுப்பில் இருந்தும் சில புத்தகங்களைக் குறித்து கொண்டேன். என்றாவது ஒரு நாள் என் வாசிப்பு பட்டியலில் அந்தப் புத்தகம் இடம்பெறும்.

ஒரு புத்தகம் பல்வேறு கதவுகளை அதன் வாசகர்களுக்கு காட்டுகிறது. எஸ்.ராவின் 'வான் கேட்கிறது' எனும் இந்தப் புத்தகத்திலும் பல கதவுகள் இருக்கின்றன.

ஒவ்வொரு கதவிலும் ஒவ்வொரு குறிப்புகள் இருக்கின்றன. அவை இந்தக் கதவின் வழியே நமக்கு முன் சென்ற தேர்ந்த பயணியின் வழிகாட்டி குறிப்புகள். இந்தக் குறிப்புகள், இன்னும் ஆழமான நம் பயணத்திற்கு வழி காட்டுகின்றன.

இந்தத் தொகுப்பில் இரு பகுதிகள் உள்ளன முதல் 21 கட்டுரைகளும் புத்தகங்களைக் குறித்தும் அதன் பின்னணிகள் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசுகின்றன.

22முதல் 36 கட்டுரைகள் வரை 'காலத்தின் திரைகள்' என்ற தலைப்பின் கீழ் இருக்கின்றன. இந்தப் பகுதியில் தமிழில் முக்கியமான படைப்பாளியாக அவர் கருதும் படைப்பாளிகள் குறித்த கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இவற்றிலும் புத்தகங்கள் பற்றிய குறிப்புகளும் முக்கியத்துவத்துடன் இடம்பெற்றுள்ளன.

'தொடுதிரை மீன்கள்' என்ற கட்டுரையில் கவிஞர் நகுலனின் கவிதையுலகை விவரிக்கின்றார். நகுலனின் கவிதைகளில் நிழலாக வந்து போகும் 'ஜான் டன்' பற்றிய அறிமுகம் எனக்கு புதிதாக இருந்தது. இந்த இருவரின் கவிதைகளையும் விரிவாகவும் ஒப்பிட்டும் ஆய்வு செய்யவேண்டிய அவசியத்தையும் முன்மொழிகின்றார். இந்தக் கட்டுரையில் சமகால கவிதைகள் மீதான விமர்சனத்தையும் முன்வைக்க தவறவில்லை.

'மகிழ்ச்சியின் அடையாளம்' என்ற கட்டுரைதான் இத்தொகுப்பில் சிறிய கட்டுரை. ஷங்கர ராமசுப்ரமணியன் மொழியாக்கம் செய்திருக்கும் மேரி ஆலிவரின் கவிதையைக் குறித்து எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையையும் நம்மால் முழுமையாக இரசிக்கும்படியே இருக்கிறது.

செல்மா லாகர்லெவ்வின் நாவலை 'மதகுரு' என்ற பெயரில் க.நா.சு மொழிபெயர்த்திருப்பார். பலமுறை எஸ்.ரா அந்த நாவல் குறித்து பேசியிருப்பதைக் கேட்டிருக்கிறேன். 'மதகுரு எனும் நவீனகாவியம்' என்ற தலைப்பில் இந்நாவல் குறித்து விரிவாகவே எஸ்.ரா எழுதியிருக்கின்றார். இந்தக் கட்டுரையை வாசிக்கும் போதும் அவர் குரலிலேயே வாசிக்க முடிந்ததில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.


புத்தகங்களை அறிமுகம் செய்யும் அதே சமயம் பிறமொழி இலக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், ஓரான் பாமுக்கின் 'என் பெயர் சிவப்பு' நாவல் தமிழுக்கு வந்த சுவாரஸ்யமான பின்னணி, கவிஞர் பாஷோ மேற்கொண்ட நீண்ட பயணத்தையே முந்நூறு ஆண்டுகள் கழித்து தனது பயணப்பாதையாக தேர்வு செய்த 'லெஸ்லி டவ்னர்' எழுதுய புத்தகம், என வாசகர்களுக்கு எஸ்.ரா திறந்து காட்டும் புத்தக உலகம் ரொம்பவும் பெரியது பரந்துபட்டது.

இந்தப் புத்தகத்தைப் பற்றி இன்னும் விரிவாக எழுதி உங்கள் வாசக அனுபவத்திற்கு தடைபோட விரும்பாது சுருக்கமாகவே முடித்து கொள்கிறேன்.

தேசாந்திரி பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். அவகளிடம் வங்கலாம். அல்லது
மலேசியாவில் இந்தப் புத்தகத்தை 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையில்' வாங்கலாம். புத்தகம் வாங்க +60164734794

அன்புடன் தயாஜி

ஏப்ரல் 17, 2026

- உடையாத நாற்காலிகள் -


அதாவது நண்பர்களே.. இப்போ என்ன நடந்ததுன்னா.....

புத்தக அலமாரியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தேன். இவ்வாண்டு வாசிக்க நினைக்கும் புத்தகங்களை முன்னமே பெட்டியில் அடுக்கிவிட்டேன். இருந்தும் அவ்வப்போது சுத்தம் செய்கிற சாக்கில் புதிதாக ஏதும் புத்தகங்களை பெட்டியில் சேர்த்துவிடுவதும் உண்டு.

சாவதற்குள் எல்லாவற்றையும் வாசித்து விடலாம் என்கிற பேராசைதான் வேறென்ன.

அப்படி மே மாதத்திற்கு வாசிக்க வேண்டிய நாவலை எடுத்தேன். மே எனது பிறந்தநாள் மாதம். அதற்கு ஏற்றபடி நாவல் இருக்க வேண்டும் என யோசித்தேன்.

இவ்வாண்டு 'மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில்' மீதமுள்ள 8 நாவல்களில் ஒவ்வொன்றாக எடுத்து சில பக்கங்களை வாசித்தபடி இருந்தேன்.

பெட்டியில் இருந்து ஒவ்வொரு புத்தகமாக எடுத்து பார்த்து விட்டு என் மேஜையில் வைத்தேன். ஒரு புத்தகம் நழுவி கீழே விழுந்தது. அவரசத்தில் சட்டென குனித்து சடாரென நிமிர்ந்தேன். பட்டாரென சத்தம்.

நிமிர்ந்த வேகத்தில், அதிகபட்சமாகவோ நாற்காலியில் பின்னால் சாய்ந்துவிட்டேன். எதிர்பாராத தாக்குதல் நடந்தது போல ஐந்து டயர்களில் ஒரு டயரில் அழுத்தம் ஏற்பட்டு உடைந்துவிட்டது.

நாற்காலியில், குனிந்து நிமிர்ந்த வேகத்தில் அப்படியே பின்னால் விழுந்துவிட்டேன். பக்கத்தில் இருந்து புத்தக அலமாரியில் வலது கை முட்டி இடித்து, கீழே இருந்த சிறிது குப்பை தொட்டி பின்னந்தலையில் மோதி நிலைகுலைந்து பப்பரப்பா என கவிழ்ந்தேன்.

பொம்மி உறங்கி கொண்டிருந்தாள். வீட்டில் மாமனார் இருந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்தவர்.

"ஐயயோ என்ன ஆச்சி!!" பதறியாபடி ஓடி வந்தவர் உடனே கையைக் கொடுக்கும்படி நீட்டினார்.

அந்த நேரத்தில் எப்போதோ பார்த்த இணைந்த கைகள் படத்தில் கீழே விழும் ராம்கியைக் காப்பாற்ற தானும் கீழே குதிக்கும் அருண்பாண்டியன் நினைவுக்கு வந்தார். என்னால் 'ப்பரப்பா' நிலையில் சிரிக்கவும் முடியவில்லை.

"கொஞ்சம் பொறுங்க... உடம்புல எதை அசைக்க முடியிதுன்னு பாக்கறேன்... " என்றபடி எங்கெல்லாம் வலி என அசைத்து அசைத்து பார்த்தேன்.

பின்னந்தலையும் கழுத்தும் வலி. இடுப்பு இரட்டிப்பு வலி. ஏற்கனவே எனக்கும் இடுப்புக்கும் பல ஆண்டுகளான வாய்க்கா தகராறு இருக்கிறது. வலது கை முட்டி நல்ல அடி. இடது கையை , நாற்காலியில் கை வைக்கும் இடத்தில் இடித்ததால் அங்குள்ள பஞ்சு காப்பாற்றிவிட்டது.

எப்படியோ தட்டுத்தடுமாறி அருண்பாண்டியனின் கையைப் பிடித்தபடி எழுந்து நின்றேன்.

தலை சுற்றியது. சமீப காலமாக நான் சுற்றியதைவிட என் தலை சுற்றியதுதான் அதிகமாய் இருக்கிறது.

மாமனார் இன்னொரு நாற்காலியைக் கொடுத்தார். அப்படியே உட்கார்ந்தேன்.

மலிவாக வாங்கிய நாற்காலி சரியாக ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில் குறிப்பாக நாற்காலிக்கு 'கேரண்டி' முடிந்த சில வாரங்களில் ஒடிந்துவிட்டது.

நான் கொஞ்சம் 'ஒபிசிட்டி'. 'ஒபிசிட்டி' என்பதே கூடுதலான எடையைத்தான் குறிக்கும். அதிலென்ன கொஞ்சம் 'ஒபிசிட்டி' என்ற உங்களின் கேள்வி நியாயம்தான்.

என் பாரம் தாங்காதுதான் நாற்காலி தற்கொலை செய்திருக்க வேண்டும். இது நான் உடைக்கும் இரண்டாவது நாற்காலி. முதல் நாற்காலியும் இதே போலத்தான் டயர் உடைந்து நான் கீழே விழாமல் சமாளித்தேன். இம்முறை நான் எடை குறைந்துவிட்டதாக நம்பியபடியால் நாற்காலியின் தாங்கும் சக்தியை அதிகப்படியாக நம்பி நானே அதன் முடிவிற்கு காரணமாகிவிட்டேன்.


இந்த நாற்காலியில் நான் அமர்ந்து வாசிக்கும் அல்லது எழுதும் நேரங்களில் பெரும்பாலும் பொம்மி என் மடியில் ஏறி அமர்ந்து இருப்பாள். இந்த நாற்காலியில் ஏறி இரண்டு மூன்று சுற்று சுற்றினால்தான் அவளுக்கு மகிழ்ச்சி. பொம்மியின் மகிழ்ச்சிக்காவும் இந்த நாற்காலி கூடுதல் எடையைத் தாங்கியிருக்கிறது பாருங்களேன்.

வெளியே சென்றிருந்த இல்லாளும் சரியாக நான் விழுந்து எழுந்து மயக்கம் தெளிகின்ற சமயத்தில் வீட்டிற்கு வந்தார். மயக்கம் தெளியாத போது வந்திருந்தாலும் திட்டுவது தெரியாமல் இருந்திருக்கும். இப்போது தெளிவாக வேறு இருக்கிறேன்.

ஆனால் நான் நினைத்தபடி இல்லை. இல்லாள் இன்று அவ்வளவாக என்னை திட்டவில்லை. ஒரு குழந்தையை எவ்வளவுதான் திட்டுவார்கள் பெரியவர்கள்.

வீட்டில் இருக்கும் பழைய பிளாஸ்டிக் நாற்காலியைக் கொடுத்தவர். அடுத்த நாற்காலி வாங்கும் வரைக்கும் இதையாவது உடையாமல் பார்த்து கொள்ள சொன்னார்.

இன்று காலையில்தான் உடலில் பல இடங்களில் வலி இருப்பது தெரிந்தது. வலது கை முட்டியிலும் உள்ளடிதான்; ஆனாலும் வலித்தது. நடக்கும் போது லேசான தலை சுற்றலும் இடுப்பு வலியும் இருக்கிறது.

காலையிலேயே எல்லா இடத்திலும் தைலத்தைப் பூசிய இல்லாளின் கண்களைப் பார்த்தேன். கலங்கியிருந்தது. கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவார் போல தெரிந்தது.

நாற்காலி அளவு பலவீனமானவர் அல்ல அவர். அவ்வளவு சீக்கிரம் உடைந்துவிடமாட்டார் என எனக்கு தெரியும். இத்தனை ஆண்டுகளாக என்னை தாங்குகின்றவர் அவர்தானே எனக்கு தெரியாதா என்ன.

இது தெரிந்த எனக்கு இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அவருக்கு நான் சுமையாக இருப்பேன் எனதான் தெரியவில்லை. நினைத்து பார்க்க பாரமாகவும் அவமானமாகவும்தான் இருக்கிறது.

என்ன செய்வது எல்லாமே தெரிந்துவிட்டால் வாழ்வில் சுவாரஸ்யம் என்று எதுவும் இருக்காதே.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்