பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

பிப்ரவரி 27, 2026

- இந்தப் பதிவரும் ஒருவர் -


- இந்தப் பதிவரும் ஒருவர் -

'முதல் முறை தோற்கும்போதே
மரணித்துவிட வேண்டும்.
தொடர் தோல்விகள்
மரணத்தைத் தோற்கடிக்கக்
கற்றுக்கொடுத்து விடுகின்றன'
- கவிஞர் யோகி

வாசித்து முடித்தது, கவிஞர் யோகியின் 'எனும் போது' கவிதைத் தொகுப்பு.

வாசித்து முடித்த கையோடு என் வாசிப்பனுபவத்தையும் எழுதிவிட்டேன். இரண்டொரு நாட்களில் பகிர்கிறேன். நீங்களும் வாசித்து சொல்லலாம்.

நான் எழுதவந்த காலகட்டத்தில் சிலரின் படைப்புகளை வாசித்து அதன்பால் ஈர்க்கப்பட்டு  நம்பிக்கையோடு அவர்களின் கைகளைப் பிடித்து நடந்தவர்களில் கவிஞர் யோகியும் ஒருவர். 

வாசிப்பை அடிப்படையாக வைத்து அன்று தொடங்கிய அந்தப் பயணம்தான் எனது இன்றைய எழுத்துக்கான அஸ்திவாரம்.

இன்றைய தலைமுறையில் புதிதாக எழுத வந்திருக்கும் எழுத்தாளர்களுக்கு
கிடைக்காத ஒரு வாய்ப்பு எனக்கும் என்னுடைய காலகட்டத்தில் எழுத வந்தவர்களுக்கும் இருந்தது.

என்ன தெரியுமா.?

யார் என்று அறியாமலேயே அவர்கள் எழுதியதை வாசித்து பழகினோம்.
எழுதியவர் எப்படி இருப்பார் என்றுகூட சரியாக தெரியாது. ஏதாவது ஒரு வார மாத இதழிலோ பத்திரிகைகளிலோ இருக்கும் அவர்களின் படைப்பும் அதன் கீழ் இருக்கும் அவர்களின் பெயருமே அவர்களுக்கான அடையாளம். அதுவே எங்கள் வாசிப்பிற்கான பயிற்சி .

அதை வைத்துதான் எங்கள்
வாசிப்பை வழி நடத்தினோம்.

சமூக ஊடகங்களில் இருக்கும் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை வைத்து அவர்களை வாசிக்கவில்லை. ஊடக வெளிச்சம் அதிகம் உள்ளதாலேயே அவர்கள் எழுதியது சிறந்த எழுத்து என எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ளவில்லை. யாராவது நமக்கும் புத்தகம் போட்டு கொடுப்பார்கள் என்று அவர்களை எங்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொள்ளவில்லை.

இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் எந்த ஒரு எழுத்தாளரையும் அவரின் படைப்புகளை வாசிக்காமல் அவர் குறித்த மாய பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டு நாங்களும் வாசிப்பதாக எங்களையே ஏமாற்றிக்கொள்ளவில்லை.

ஒருவேளை இன்று எழுதவந்திருக்கும் நீங்கள் இப்படியெல்லாம் இல்லை என்று நினைத்தால்; உங்களுக்கும் ஒன்றைச் சொல்லவேண்டியுள்ளது. நீங்கள் தனியாக இல்லை நண்பர்களே உங்கள் பின்னால் ஒரு பெரிய, வாசிப்பின் வரலாறே இருக்கிறது...

இன்னொன்றையும் சொல்லலாம், அப்படியென்றால் அன்றைய காலகடத்தில் எழுதிய எல்லாருமே சிறந்த எழுத்தாளர்களா? எல்லா படைப்புகளுமே சிறந்த படைப்புகளா?
அப்படியொன்றும் பெருமைபட ஒன்றுமில்லை.

இன்று தங்களையும் நவீன எழுத்தாளர்கள் எனச் சொல்லிக்கொள்ள நவீன எழுத்தாளர்களுக்கு நண்பர்களாக இருந்தாலே போதும் எதையும் வாசிக்கவோ எழுதவோ பேசவோ தேவையில்லை என்ற கவனிக்கப்படாத  சிக்கல் இருப்பது போலவே எல்லா காலகட்டத்திலும் ஏதோ ஒரு சிக்கல் இருக்கத்தானே செய்கிறது.

வாசிப்போம் அதுதான் எல்லாம்.

இந்தப்பதிவின் தொடக்கத்தில் யோகியின் கவிதையை வாசித்தீர்களே, அந்தக் கவிதையில் வரும் மரணத்தைத் தோற்கடிக்க கற்றுக் கொண்டவர்களில் உங்களைப் போலவே இந்தப் பதிவரும் ஒருவர்.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


பிப்ரவரி 24, 2026

வாசிப்பில்


அழும் குழந்தைக்கு
மிட்டாய் தருவதுபோல
விலக நினைக்கும் 
ஒவ்வொரு முறையும்
முத்தங்களைப் பரிசளிக்கிறாய்....
- Ganga Baskaran 

வாசிப்பில், கவிஞர் கங்கா பாஸ்கரனின் 'நீராம்பல்' கவிதைத் தொகுப்பு....
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

பிப்ரவரி 23, 2026

சின்னச்சின்ன கனவுகள்


பெரிய பெரிய
கனவுகளில் அவர்கள்
தொலைந்து போகிறார்கள்

சின்னச் சின்ன
கனவுகளில் நாம்
வாழ்ந்துவிட்டு போவேமே

என்ன குறைந்துவிடப் போகிறது
நம்மை தவிர
யாருக்கு நிறைந்துவிடப் போகிறது

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


பிப்ரவரி 22, 2026

- 'ஒளி'க்கும் கற்பூரத்துளிகள் -


இங்கு
எல்லா கற்பூரங்களும்

கடவுளுக்காய் 
'ஒளி'ப்பதில்லை

சில
கற்பூரங்கள்

வெறுமனே
காற்றில் கரைந்து

தன்னைத்தானே
அழித்து கொள்கின்றன

அதில் விருப்பமும்
கொண்டிருக்கின்றன...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

பிப்ரவரி 20, 2026

- தகப்பனின் சாமி -


பொம்மி
என் தோளில் அமர்ந்து
நீ 
காணும் உயரங்கள்
ஒவ்வொன்றும்
உனக்கானது மட்டுமல்ல
எனக்கானதும் கூட

அது
நமக்கானதும் கூட

நான் காணாத 
உயரங்களையும்
உனக்கு காட்டவே
என்
வலித்த தோள்களுக்கு
வலு 
சேர்த்து கொண்டிருக்கிறேன்

உன்னைச் சுமப்பது போல
நான் 
என்னையும் சுமந்தபடி
பயணிக்கிறேன்

இன்னும் 
எத்தனை எத்தனை
படிகளோ
அத்தனையும் 
உன் துணையால்
கடந்திட வேண்டுகிறேன்

இனி 
நீதான்
என் விதியின்
கையெழுத்து

என் புதிய 
தலையெழுத்து

தகப்பனாய் 
உனைச் சுமந்தாலும்
தகப்பன்சாமியாய் 

நீயே
எனை வழிநடத்து

#பொம்மி #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

பெயர் சொல்லி அழைக்கிறேன்...

இன்று எனக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை. முன்னமே எடுத்த பரிசோதனை முடிவுகளும் இனி அடித்தடுத்த பரிசோதனைகளுக்கான நாட்களையும் சொல்லுவார்கள்.

எப்போதும் சொல்வதுதான் தலையில் அடி படாதவரை நான் வேறொரு ஆள். தலையில் அடிவாங்கிய பின் நான் வேறொரு ஆள். இந்தப் புதிய ஆளுக்கு தலையில் தொடங்கி தலைகால் புரியாத சிக்கல்கள் பல உள்ளன.

எல்லாவற்றையும் கடந்துதான் வரவேண்டியுள்ளது. நம்பிக்கையோடு வாழ வேண்டியுள்ளது.

ஒவ்வொரு முறையும் மருத்துவ பரிசோதனைக்கு வரும்போதும் மருத்துவரின் ஆலோசனைகளோடு மனதுக்கு தேவையான சிலரின் கதைகளும் கிடைக்கவே செய்கின்றன.

இன்றும் ஒருவரைச் சந்தித்தேன். வயதானவராக தெரிந்தார். சோர்ந்து போயிருந்தார்.  அவருக்கு நாற்பது வயதாவதைச் சொன்னவர், இதுவரையில் பெயர் சொல்லும் வகையில் எதையுமே செய்ததில்லை என்று சொல்லி முடிக்கவும் அவர் பெயரை நர்ஸ் அழைக்கவும் சரியாக இருந்தது.

"தோ... உங்க பேரை சொல்லிட்டாங்க நீங்களும் பெரிய ஆளுதான்... இன்னொரு நாற்பது வருசத்தை இதை வச்சே ஓட்டிடலாமே..." என்றேன்.

சிரித்துக்கொண்டே மருத்துவரின் அறைக்கு சென்றார். எனக்கும் சிரிக்கத் தோன்றியது. நான் சொன்னது அவருக்கு மட்டுமல்ல. அவர் சொன்ன கதை எனக்கு மட்டுமல்ல.

எல்லோரிடமும் எல்லோருக்குமான குறைந்தபட்சம் யாரோ ஒருவருக்கான கதைகள் இருக்கவே செய்கின்றன.

அவருடன் நிகழ்ந்த உரையாடலை ஏதாவது ஒருவகையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அதுவரை, நானும் உங்களைப் பெயர் சொல்லி அழைத்ததாய் நினைத்து கொண்டு உற்சாகமாக களம் இறங்குங்கள். இல்லை. வேண்டாம். இறங்க வேண்டாம். களம் ஏறுங்கள். இனி வரும் காலம் நமக்கு ஏற்றங்களோடே இருக்கட்டும்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

பிப்ரவரி 15, 2026

வாசிப்பில்


மஹா சிவராத்திரியில் ஜெயமோகனின் 'துளிக் கனவு'.

'ஒன்றின் இலக்கியமதிப்பு என்பது சொல்லப்பட்ட தளத்தில் இருந்து அது விரிந்து பரவும் வீச்சினாலும் தொடர்ந்து முளைத்துக் கொண்டிருக்கும் அதன் விதைத் தன்மையாலும் உருவானது.'
- ஜெயமோகன்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்