பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஜூலை 01, 2026

- காற்றிலாடும் இறகின் திசை -


பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சமீபத்தில் 'காற்றிலாடும் இறகின் திசை' என்னும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார்கள்.

பேராக் மாநில மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம் எழுத்தாளர்கள் வரையிலான பதிமூன்று பேரின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார்கள்.

பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர், எழுத்தாளர் நண்பர் சிவாலெனின் அவர்களைத் தொடர்பு கொண்டு புத்தகம் கேட்டிருந்தேன்.

உடனே அந்தப் புத்தகத்தை அனுப்பியதோடு அவரது புத்தகங்களான 'மலாயா கணபதி', 'இரவைக் கிழிக்கும் ஓநாய்கள்', 'விரல் நுனியில்' போன்ற புத்தகங்களையும் எனக்கு அனுப்பினார்.

"சங்கத்தின் புத்தகத்திற்கு மட்டும் பணம் கொடுங்க நண்பா... என் புத்தகங்கள் உங்களுக்கான பரிசுகள்.... தொடர்ந்து பல புத்தகங்களை வாசித்து எழுதி அறிமுகம் செய்றீங்க... அதெல்லாம் ரொம்ப முக்கியமான காரியம்... தொடர்ந்து எழுதுங்க..."
என்றார் அன்பாகவும் உரிமையாகவும்.

தோழர் சிவாலெனின் அவர்களுக்கும் பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் எனது அன்பும் நன்றியும்.

அவரின் தலைமையில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பல இலக்கிய முன்னெடுப்புகளை செய்துவருகிறது. அவருக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை இதன் வழி சொல்லிக்கொள்கிறேன்.

ஜூன் 30, 2026

வாசிப்பில்


ஜூன் மாத புத்தக வாசிப்பை நிறைவு செய்யும் புத்தகம். சிங்கை எழுத்தாளர் அழகுநிலாவின் 'மில்லேனியல் அவ்வை'; 40 குறுங்கதைகள் அடங்கிய தொகுப்பு.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வாசித்த புத்தகங்களை இன்று இரவு அடுக்கி வைக்க வேண்டும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் அதுவரை வாசித்த புத்தகங்களை அடுக்குவதோடு, அடுத்த மூன்று மாதங்களுக்கு வாசிக்க வேண்டிய புத்தகங்களை தனியே எடுத்து அடுக்க வேண்டும். அதுதான் வாசிக்க புத்தகங்களை எடுக்கும் போது 'புத்தகத் தேர்வு' ஏற்படுத்தும் உளைச்சலில் இருந்து ஓரளவிற்கு தப்பிக்க முடியும்.

நேரம் இருக்கும் போது ஜனவரி முதல் ஜூன் வரை வாசித்தவற்றை சிறிய குறிப்புகளுடன் குறித்து கொள்ள வேண்டும்.

அதோடு மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்திற்கான நாவலையும் கண்டறிய வேண்டும்.

இப்படி முன்னமே சில புத்தகங்களை வாசிப்பதற்கென எடுத்து வைத்தாலும் காலமே  அவற்றை எடுத்து வாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்கிறது.

எல்லாவற்றையும் வாசிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை. முடிந்தவரை தேர்வு செய்தே வாசிக்கின்றேன்.

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூலை மாத தொடர்கள்

ஜூலை மாத நடுகல்.காமிற்கான இரு தொடர்கள்.


மாதம் ஒரு மலேசிய புத்தகம் தொடர் 19-ல் 1991 ஆண்டு வெளிவந்த 'பேரவைக் கதைகள் 6' சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவத்தை எழுதியுள்ளேன்.
எழுதி 35 ஆண்டுகள் ஆன கதைகளில் எதுவெல்லாம் இன்றைக்கும் வாசிக்க பொருத்தமாக இருக்கிறது என தொடரை வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடர் 7-லில் சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷின் 'வெண்மையின் நிறங்கள்' சிறுகதைத் தொகுப்பு
குறித்த வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளேன்.



இரண்டில் ஒரு கட்டுரை கொஞ்சம் காரம் தூக்கலாக இருப்பதாக தோன்றுகிறது. நீங்கள் வாசித்து பார்த்து சொல்லுங்கள்.

ஜூலை முதல் நாள், நடுகல்.காமை வாசிக்க மறவாதீர்கள்..

அன்புடன் 

ஜூன் 28, 2026

நன்றி மலர்கள்





மஇகா 80 ஆண்டு நிறைவை முன்னிட்டு.....
தாமான் ஸ்ரீ மஞ்சா 'ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.


மருத்துவ முகாமுக்கு அருகிலேயே நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் புத்தக விற்பனைக்கும் வாய்ப்பு கொடுத்திருந்தார்கள்.

என்னிடம் குடை இல்லாததால் வெயில் மேஜை நாற்காலியோடு புத்தகங்களுடன் அமர்ந்திருந்தேன். இதனை கவனித்த இயக்கத்தினர் என்னை கூடாரத்திற்குள் வந்துவிட சொன்னார்கள்.


மருத்துவ பரிசோதனைக்கு வந்திருந்தவர்களில் சிலர் புத்தகங்களை வாங்கினார்கள். சிலர் புத்தகங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்கள்.

திரு.மணிமாறன் என்பவர், அங்கு வந்திருந்த ஐந்து பேருக்கு புத்தகங்களை ஸ்பான்சர் செய்தார்.


இவ்வட்டார இயக்கத்தினர் இன்றைய மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தி முடித்தார்கள். பல புதியவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.


இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இவ்வட்டார மஇகா உறுப்பினருக்கும் தாமான் ஸ்ரீ மஞ்சா 'ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலய நிர்வாகத்தினருக்கும் என் அன்பும் நன்றியும்.

புத்தகச்சிறகுகள் - தொடர் 17


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 17' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் எழுத்தாளர் அ.பாண்டியனின் இரண்டாவது நாவலான 'கரிப்புத் துளிகள்' நாவலைக் குறித்து எழுதியுள்ளேன். கட்டுரையின் முதல் பகுதி இந்த வார தொடரில் வெளிவந்துள்ளது.

என் வாசிப்பில் நான் முன்மொழியும் மலேசிய நாவல்களில் இதுவும் ஒன்று. நீங்கள் இந்நாவலை வாசிப்பது புதிய வாசிப்பனுபவமாக இருக்கும்.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

அடுத்த வாரம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு வருகிறேன்.

அன்புடன்
#தயாஜி 

மருத்துவ முகாம்


மஇகா 80 ஆண்டு நிறைவை முன்னிட்டு.....
தாமான் ஸ்ரீ மஞ்சா 'ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இன்று (ஜூன் 28) காலை 8 மணி தொடங்கி பிற்பகல் 1 மணி  வரை இம்முகாம் நடைபெறும்.


இன்றைய முகாமிற்கு அருகிலேயே நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் புத்தக விற்பனையும் நடைபெறுகிறது.
10 ரிங்கிட் முதல் 30 ரிங்கிட் வரையிலான தள்ளுபடி விலையில் இன்று நீங்கள் புத்தகங்களை வாங்கலாம்.


உடல் ஆரோக்கியத்தை சரி பார்ப்பதோடு மன ஆரோக்கியத்திற்கான புத்தகங்களையும் நீங்கள் வாங்கி சென்று பயன் பெறலாம்

சுற்று வட்டார நண்பர்களுடன் இந்த செய்தியைப் பகிர்ந்து உதவவும்.

அன்புடன்
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #தயாஜி


ஜூன் 26, 2026

வாசிப்பில்


////சுற்றி எதுவும் மாறாமல் வாழ்ந்து கொண்டிருப்பதென்பது ஒருவனுக்கு மிகுந்த வலியும் தாங்கமுடியாத துயரத்தையும் கொடுப்பதாகும். அது அவனது ஆன்மாவை முழுமையாகக் கொல்லாமல் இருக்கும் போது, அவன் எவ்வளவு காலம் வாழ்கிறானோ அவ்வளவிற்கு நீளும் அந்த வேதனையான சலிப்பு////
- நாவலிலிருந்து..

******************

நண்பரிடம் வேலை கேட்டு பேசியிருந்தேன். இன்று காலை சந்தித்து பேசலாம் கவலைப்பட வேண்டாம் என்றார்.

காலையுணவை விடவும் இப்போதைக்கு வேலை முக்கியம் என்பதால் சொன்ன நேரத்திற்கு முன்னமே சென்று காத்திருந்தேன். 

அலாரம் போல அழைத்து, நான் வந்துவிட்டேன் என்றேன். அவரும் இன்றா பார்ப்பதாக சொன்னோம் என கேட்டுவிட்டு அவரே ஆமாம் ஆமாம், இதோ வந்துவிடுகிறேன் என்றார்.

காலை உணவு விற்று முடிந்து மதிய உணவுகளையே விற்க தொடங்கிவிட்டார்கள். நண்பர் இன்னுமே வந்து கொண்டிருந்தார்.

காலி வயிற்றில் வழக்கம் போல ஒரு இஞ்சி டீயை ஆடர் கொடுத்தேன். எப்போதும் சில புத்தகங்கள் என்னுடன் இருக்கும் அதிலிருந்து ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். 

கடைசிவரை நண்பர் வரவில்லை. வாசித்த புத்தகத்தின் கடைசி பக்கம்தான் வந்தது. அது தந்த கேள்விகளோடும் இன்று கற்ற பாடத்தோடும் வீட்டிற்கு நடக்கலானேன்.

இதனைப் பகிர்வதற்கு காரணம், வராத நண்பருக்காகவோ வேலை தேடுவதற்காகவோ அல்ல. இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் ஒருவனால் புத்தகம் வாசிக்க முடிகிறதே என்பதற்காக.

ஆனால் சிலருக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இன்னும் சொல்லப்போனால் கேலியாக கூட இருக்கலாம்தான். நாள் சம்பளக்காரனுக்கும் மாத சம்பளக்காரனுக்கும் சம்பளமாக எதையும் வாங்காதவர்களுக்கும்
இருக்கும் வித்தியாசங்கள் எல்லோருக்குமா தெரிந்துவிடப் போகிறது.

"எப்படி புத்தகங்களை வாசிக்கறீங்க...?" என கேட்கும் நண்பர்களுக்கு "இதோ இப்படித்தான் புத்தகங்களோடு வாழ்ந்து கொண்டும் வாசித்து கொண்டும் இருக்கிறேன் என சொல்வதற்குத்தான் இந்தப் பகிர்வு.

******************
வாசிப்பில் 'இருபத்தாறு ஆண்களும் ஓர் இளம்பெண்ணும்'. எழுத்து மாக்சிம் கார்க்கி. தமிழாக்கம் ஜான்ஸி ராணி. வெளியீடு தமிழ்வெளி.

இதிகாசம் தொடங்கி இன்றுவரை பெண்களைச் சர்வ சாதாரணமாக பணயம் வைத்து விடுகின்றோம் எல்லா பழியையும் பெண்கள் மீதே செலுத்தியும் விடுகின்றோம், என்கிற சிந்தனையோடு இந்த நாவலை வாசித்து முடித்தேன்.

இந்த வாழ்வில் இன்னொருவர் நம்மை பணயம் வைத்து அவர் விருப்பப்படி விளையாடுவதைவிட நம்மை நாமே பணயம் வைத்து விளையாடும் இந்த வாழ்வின் சூதாட்டத்தில் வெற்றியோ தோல்வியோ எந்த நிர்பந்தமும் இல்லாமல் நாமே விளையாடினோம் என்கிற சிறு திருப்தி கிடைத்தாலும் போதும் என்றுதான் தோன்றுகிறது.

குறைந்தபட்சம் நம்மிடம் பணயம் வைக்க நாமாவது இருக்கின்றோம். ஒரு முறை விளையாடிதான் பார்க்கலாமே....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்