Latest Posts
ஜூலை 02, 2026
ஜூலை 01, 2026
ஜூலை மாத நாவல் வாசிப்பு
ஜூலை மாத நாவல் வாசிப்பில்;
கரிச்சான்குஞ்சு எழுதிய 'பசித்த மானிடம்'
மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் வாசித்த நாவல்கள்
1. உபபாண்டவம்
- எஸ்.ராமகிருஷ்ணன்
2. ஆகம்
- மனுஷா ப்ரபானி திஸாநாயக்க (தமிழாக்கம் எம்.ரிஷான் ஷெரிப்
3. தேவமலர்
- ஸெல்மா லாகர் லெவ் (தமிழாக்கம் க.நா.சு)
4. அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்.
- கே.ஆர்.மீரா (தமிழாக்கம் சிற்பி பாலசுப்ரமணியம்)
5. சுமத்ரா
- கல்பட்டா நாராயணன் (தமிழாக்கன் கே.வி.ஷைலஜா)
6. தண்ணீர்
- அசோகமித்திரன்
திட்டமிட்டு மாதம் ஒரு நாவல் என வாசிப்பத்தில் ஒரு வசதி இருக்கிறது அது நம்மை நாமே கட்டாயப்படுத்தி நம் வாக்கை காப்பாற்றி கொள்ள உதவுகிறது.
அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
மாதம் ஒரு மலேசிய புத்தகம் - 19
இம்மாத இணைய இதழில் எனது 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடரில் 19வது மலேசிய புத்தகம் குறித்து எழுதியுள்ளேன்
மலாயா பல்கலைக்கழகத்தின் 40வது பேரவைக் கதைப் போட்டி (2026) நடக்கவுள்ள இந்த நேரத்தில் 1991-ம் ஆண்டு வெளிவந்த 6வது பேரவைக் கதைகள் தொகுப்பு குறித்த என் பார்வையை எழுதியுள்ளேன்.
இன்று இலக்கிய ஆளுமைகளாக அடையாளப்படுத்தப்படும் எழுத்தாளர்களுடன் மொத்தம் பன்னிரெண்டு எழுத்தாளர்களின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் வெளிவந்திருக்கிறது.
35 ஆண்டுகளுக்கு முன் (1991) யார் பேரவைக் கதைப் போட்டியில் வெற்றிபெற்றார்கள். அது என்ன கதை. அந்தக் கதைகளுக்கு இன்றும் ஆயுள் இருக்கின்றதா? புதிய வாசகனுக்கு புதிதாக இந்தக் கதைகள் எதையும் சொல்கிறதா என இந்தக் கட்டுரையை வாசித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
வாய்ப்புள்ளவர்கள் வாசித்து உங்கள் கருத்தினையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அதுதான் இலக்கியச் சூழலில் உரையாடலாக உருவெடுக்கும்.
வாய்ப்பளித்த நடுகல்.காமிற்கும் அதன் நண்பர்களுக்கும் என் அன்பு.
- காற்றிலாடும் இறகின் திசை -
பேராக் மாநில மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம் எழுத்தாளர்கள் வரையிலான பதிமூன்று பேரின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார்கள்.
பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர், எழுத்தாளர் நண்பர் சிவாலெனின் அவர்களைத் தொடர்பு கொண்டு புத்தகம் கேட்டிருந்தேன்.
உடனே அந்தப் புத்தகத்தை அனுப்பியதோடு அவரது புத்தகங்களான 'மலாயா கணபதி', 'இரவைக் கிழிக்கும் ஓநாய்கள்', 'விரல் நுனியில்' போன்ற புத்தகங்களையும் எனக்கு அனுப்பினார்.
"சங்கத்தின் புத்தகத்திற்கு மட்டும் பணம் கொடுங்க நண்பா... என் புத்தகங்கள் உங்களுக்கான பரிசுகள்.... தொடர்ந்து பல புத்தகங்களை வாசித்து எழுதி அறிமுகம் செய்றீங்க... அதெல்லாம் ரொம்ப முக்கியமான காரியம்... தொடர்ந்து எழுதுங்க..."
என்றார் அன்பாகவும் உரிமையாகவும்.
தோழர் சிவாலெனின் அவர்களுக்கும் பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் எனது அன்பும் நன்றியும்.
அவரின் தலைமையில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பல இலக்கிய முன்னெடுப்புகளை செய்துவருகிறது. அவருக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை இதன் வழி சொல்லிக்கொள்கிறேன்.
ஜூன் 30, 2026
வாசிப்பில்
ஜூன் மாத புத்தக வாசிப்பை நிறைவு செய்யும் புத்தகம். சிங்கை எழுத்தாளர் அழகுநிலாவின் 'மில்லேனியல் அவ்வை'; 40 குறுங்கதைகள் அடங்கிய தொகுப்பு.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வாசித்த புத்தகங்களை இன்று இரவு அடுக்கி வைக்க வேண்டும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் அதுவரை வாசித்த புத்தகங்களை அடுக்குவதோடு, அடுத்த மூன்று மாதங்களுக்கு வாசிக்க வேண்டிய புத்தகங்களை தனியே எடுத்து அடுக்க வேண்டும். அதுதான் வாசிக்க புத்தகங்களை எடுக்கும் போது 'புத்தகத் தேர்வு' ஏற்படுத்தும் உளைச்சலில் இருந்து ஓரளவிற்கு தப்பிக்க முடியும்.
நேரம் இருக்கும் போது ஜனவரி முதல் ஜூன் வரை வாசித்தவற்றை சிறிய குறிப்புகளுடன் குறித்து கொள்ள வேண்டும்.
அதோடு மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்திற்கான நாவலையும் கண்டறிய வேண்டும்.
இப்படி முன்னமே சில புத்தகங்களை வாசிப்பதற்கென எடுத்து வைத்தாலும் காலமே அவற்றை எடுத்து வாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்கிறது.
எல்லாவற்றையும் வாசிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை. முடிந்தவரை தேர்வு செய்தே வாசிக்கின்றேன்.
அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
ஜூலை மாத தொடர்கள்
மாதம் ஒரு மலேசிய புத்தகம் தொடர் 19-ல் 1991 ஆண்டு வெளிவந்த 'பேரவைக் கதைகள் 6' சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவத்தை எழுதியுள்ளேன்.
எழுதி 35 ஆண்டுகள் ஆன கதைகளில் எதுவெல்லாம் இன்றைக்கும் வாசிக்க பொருத்தமாக இருக்கிறது என தொடரை வாசித்து தெரிந்து கொள்ளலாம்.
மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடர் 7-லில் சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷின் 'வெண்மையின் நிறங்கள்' சிறுகதைத் தொகுப்பு
குறித்த வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளேன்.
ஜூன் 28, 2026
நன்றி மலர்கள்
மஇகா 80 ஆண்டு நிறைவை முன்னிட்டு.....
தாமான் ஸ்ரீ மஞ்சா 'ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
மருத்துவ முகாமுக்கு அருகிலேயே நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் புத்தக விற்பனைக்கும் வாய்ப்பு கொடுத்திருந்தார்கள்.
என்னிடம் குடை இல்லாததால் வெயில் மேஜை நாற்காலியோடு புத்தகங்களுடன் அமர்ந்திருந்தேன். இதனை கவனித்த இயக்கத்தினர் என்னை கூடாரத்திற்குள் வந்துவிட சொன்னார்கள்.
மருத்துவ பரிசோதனைக்கு வந்திருந்தவர்களில் சிலர் புத்தகங்களை வாங்கினார்கள். சிலர் புத்தகங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்கள்.
திரு.மணிமாறன் என்பவர், அங்கு வந்திருந்த ஐந்து பேருக்கு புத்தகங்களை ஸ்பான்சர் செய்தார்.
இவ்வட்டார இயக்கத்தினர் இன்றைய மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தி முடித்தார்கள். பல புதியவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இவ்வட்டார மஇகா உறுப்பினருக்கும் தாமான் ஸ்ரீ மஞ்சா 'ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலய நிர்வாகத்தினருக்கும் என் அன்பும் நன்றியும்.