பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஏப்ரல் 24, 2026

- கருணைக்கரம்-



ஆகக்கடைசியாக
என் மீது
கருணை கொண்ட
இரு கரங்களைச்
சந்தித்தேன்

இறுக்கமாய்ப் பற்றினேன்
அணைத்தேன்
ஆசுவாசம் கொண்டேன்

இத்தனை நாட்களாய்
அவை
எனது வலப்பக்கத்திலும்
இடப்பக்கத்திலுமே
இருந்திருக்கின்றன....

- அங்கும் இங்கும் எங்கும் -

நான்
அங்கில்லை என
அவர்கள் தெரிந்து கொள்ளும்
முன்னமே

நான்
எங்குமில்லை என
நானே புரிந்து கொண்டேன்
எண்ணமே...

ஏப்ரல் 22, 2026

- வலைக்குள் குழு -


சர்க்கஸ் வலை
அவிழ்ந்து விழுந்தது

சரி செய்வதற்குள்
உள்ளிருந்த
புலிகளில் ஒன்று
சட்டென தாவி
பார்வையாளர்கள் மத்தியில்
குதித்தது

யாருக்கும்
என்ன செய்வதென புரியவில்லை
அலறல் சத்தங்களுடன்
அங்கும் இங்கும்
ஓடத்தொடங்கினர்

எல்லோரும் தன்னைவிட்டு
ஓடுவதைப் பார்த்த
புலிக்கு மிகுந்த ஏமாற்றம்

அதற்கும்
அடுத்தென்ன என்பது
புரியவில்லை

சர்க்கஸ் வலைக்கே
திரும்பலாம் என்றது

வலைக்குள் இருந்த
புலிகளில் ஒன்று
அதன் பயிற்சியாளரைப்
பாதி தின்றுவிட்டிருந்தது

எங்கிருந்தோ வெடித்த
துப்பாக்கி தோட்டா
வலைக்கு வெளியில்
திகைத்து நின்ற புலியை
முதலில் துளைத்தது

வலைக்குள் குழுக்குள்ளும்
இருக்கும்வரை
எல்லோருக்குமே
பாதுகாப்புதான் போல...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

லேசும் தூசும்


லேசும் தூசும்

தூக்கி
சுமக்கும் அளவிற்கு
துயரங்கள்
லேசானவைதான்

நானோ
அதைவிடவும் தூசானவனாக
மாறிவிட்டேனே
என்ன செய்ய...

சங் கன்ச்சில்


வாசிப்பில் சிங்கை எழுத்தாளர் அழகுநிலாவின் சிறுகதைகள் 'சங் கன்ச்சில்'.

ஒருசிலரை மட்டும்தான் எந்தத் தயக்கமும் இன்றி, இயல்பாகவே 'அக்கா' என்று அன்புடன் அழைக்கிறேன். 
அப்படி நான் எப்போதும் அன்புடன் 'அக்கா' என்று அழைக்கும் எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு. 
இது அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஏப்ரல் 20, 2026

- விரல் முளைத்த இலை -


என்
உள்ளங்கை நிறம் கொண்ட
ஏதோ ஒரு
மரத்தின் இலையை
இன்று கண்டேன்

உதிர்ந்த இலையா
என் உஷ்ணத்தை
உணர்ந்த இலையா என
பிடிபடவில்லை

இந்த நெடுஞ்சாலையில்
இன்னும்
சூரியனே முழுதாய் விழிக்காத
நேரத்தில்
என்னிடம் ஏன் வந்ததென
தெரியவில்லை

அதற்கும்
விரல் முளைக்கும் ஆசை
வந்திருக்க வேண்டும்

உள்ளங்கையில் அது
என் விரல்களைக் கொஞ்சநேரம்
தனதாக்கி கொண்டது

விரலாசை இன்று
நிறைவேறிய பின்பு
அணில் குஞ்சு போல
வலிக்காது பிடித்து
மெல்ல மெல்ல நடந்து
அருகிலிருந்த
மரத்தின் அடியில்
இறக்கிவைத்தேன்

முத்த ஈரத்தை விரலிடுக்களில்
விட்டுவிட்டு
சட்டென துள்ளி குதித்து
மரத்தில் ஏறி
காய்ந்திருந்த கிளையில்
ஒட்டி
துளிர்க்கத் தொடங்கியது

தன் வாலை
மெல்ல அசைத்து
என்னையும் வழியனுப்பியது...

#தயாஜி
(நன்றி - புகைப்படம் குமரன்)

ஏப்ரல் 19, 2026

எஸ்.ராவின் 'வான் கேட்கிறது'


இந்த வார வாசிப்பில், எஸ்.ராவின் 'வான் கேட்கிறது' கட்டுரைகள்.
36 கட்டுரைகள் அடங்கிய கட்டுரை தொகுப்பு.

எஸ்.ராமகிருஷ்ணன் தான் வாசித்த இந்தி இலக்கியங்கள், அயல்மொழி இலக்கங்களுடன் தமிழில் முக்கியமான படைப்பாளிகள் குறித்து எழுதியிருக்கிறார்.

இதில் சில கட்டுரைகளை முன்னமே அவரது இணைய பக்கத்தில் வாசித்திருந்தாலும் ஒரு தொகுப்பாக தற்போது வாசிப்பதில் மனதிற்கு நெருக்கமாகின்றது.

இணையத்தில் வாசித்த போது அவர் அறிமுகம் செய்த புத்தகங்களில் சிலவற்றை வாங்கியிருக்கிறேன் சிலவற்றை வாசித்தும் இருக்கிறேன் என்பது எழுதுவதை மட்டுமே தனது வாழ்வாக கொண்டிருக்கும் எஸ்.ராவிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவர் அறிமுகம் செய்யும் புத்தகங்களை அவரது வாசகர்களும் தேடி வாசித்து பேசுவது அவருக்கு அதைத்தானே கொடுக்கும்.

இந்தத் தொகுப்பில் இருந்தும் சில புத்தகங்களைக் குறித்து கொண்டேன். என்றாவது ஒரு நாள் என் வாசிப்பு பட்டியலில் அந்தப் புத்தகம் இடம்பெறும்.

ஒரு புத்தகம் பல்வேறு கதவுகளை அதன் வாசகர்களுக்கு காட்டுகிறது. எஸ்.ராவின் 'வான் கேட்கிறது' எனும் இந்தப் புத்தகத்திலும் பல கதவுகள் இருக்கின்றன.

ஒவ்வொரு கதவிலும் ஒவ்வொரு குறிப்புகள் இருக்கின்றன. அவை இந்தக் கதவின் வழியே நமக்கு முன் சென்ற தேர்ந்த பயணியின் வழிகாட்டி குறிப்புகள். இந்தக் குறிப்புகள், இன்னும் ஆழமான நம் பயணத்திற்கு வழி காட்டுகின்றன.

இந்தத் தொகுப்பில் இரு பகுதிகள் உள்ளன முதல் 21 கட்டுரைகளும் புத்தகங்களைக் குறித்தும் அதன் பின்னணிகள் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசுகின்றன.

22முதல் 36 கட்டுரைகள் வரை 'காலத்தின் திரைகள்' என்ற தலைப்பின் கீழ் இருக்கின்றன. இந்தப் பகுதியில் தமிழில் முக்கியமான படைப்பாளியாக அவர் கருதும் படைப்பாளிகள் குறித்த கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இவற்றிலும் புத்தகங்கள் பற்றிய குறிப்புகளும் முக்கியத்துவத்துடன் இடம்பெற்றுள்ளன.

'தொடுதிரை மீன்கள்' என்ற கட்டுரையில் கவிஞர் நகுலனின் கவிதையுலகை விவரிக்கின்றார். நகுலனின் கவிதைகளில் நிழலாக வந்து போகும் 'ஜான் டன்' பற்றிய அறிமுகம் எனக்கு புதிதாக இருந்தது. இந்த இருவரின் கவிதைகளையும் விரிவாகவும் ஒப்பிட்டும் ஆய்வு செய்யவேண்டிய அவசியத்தையும் முன்மொழிகின்றார். இந்தக் கட்டுரையில் சமகால கவிதைகள் மீதான விமர்சனத்தையும் முன்வைக்க தவறவில்லை.

'மகிழ்ச்சியின் அடையாளம்' என்ற கட்டுரைதான் இத்தொகுப்பில் சிறிய கட்டுரை. ஷங்கர ராமசுப்ரமணியன் மொழியாக்கம் செய்திருக்கும் மேரி ஆலிவரின் கவிதையைக் குறித்து எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையையும் நம்மால் முழுமையாக இரசிக்கும்படியே இருக்கிறது.

செல்மா லாகர்லெவ்வின் நாவலை 'மதகுரு' என்ற பெயரில் க.நா.சு மொழிபெயர்த்திருப்பார். பலமுறை எஸ்.ரா அந்த நாவல் குறித்து பேசியிருப்பதைக் கேட்டிருக்கிறேன். 'மதகுரு எனும் நவீனகாவியம்' என்ற தலைப்பில் இந்நாவல் குறித்து விரிவாகவே எஸ்.ரா எழுதியிருக்கின்றார். இந்தக் கட்டுரையை வாசிக்கும் போதும் அவர் குரலிலேயே வாசிக்க முடிந்ததில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.


புத்தகங்களை அறிமுகம் செய்யும் அதே சமயம் பிறமொழி இலக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், ஓரான் பாமுக்கின் 'என் பெயர் சிவப்பு' நாவல் தமிழுக்கு வந்த சுவாரஸ்யமான பின்னணி, கவிஞர் பாஷோ மேற்கொண்ட நீண்ட பயணத்தையே முந்நூறு ஆண்டுகள் கழித்து தனது பயணப்பாதையாக தேர்வு செய்த 'லெஸ்லி டவ்னர்' எழுதுய புத்தகம், என வாசகர்களுக்கு எஸ்.ரா திறந்து காட்டும் புத்தக உலகம் ரொம்பவும் பெரியது பரந்துபட்டது.

இந்தப் புத்தகத்தைப் பற்றி இன்னும் விரிவாக எழுதி உங்கள் வாசக அனுபவத்திற்கு தடைபோட விரும்பாது சுருக்கமாகவே முடித்து கொள்கிறேன்.

தேசாந்திரி பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். அவகளிடம் வங்கலாம். அல்லது
மலேசியாவில் இந்தப் புத்தகத்தை 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையில்' வாங்கலாம். புத்தகம் வாங்க +60164734794

அன்புடன் தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்