Latest Posts
ஜூலை 23, 2026
- நண்பர்களுக்கு இன்று விடுமுறை -
முதல் நாள் வேலை அதிகமாக இருந்ததால், மீண்டும் இடுப்பில் வலி வந்துவிட்டது. இரவு உறக்கமின்றி ரொம்பவும் சிரமப்பட வேண்டியதாய்ப் போயிற்று. பொருட்களை டெலிவரி செய்யும் போது சில சமயங்களில் அந்தந்தப் பொருட்களை நாமே தூக்கி கொண்டு படியேறும்படியும் குறிப்பிட இடம் வரை கையில் தூக்கிக் கொண்டே நடக்கும் படியும் ஆகிவிடும்.
பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இது தெரியும். பொருட்களை இப்படி தூக்கி வரும்படி இருந்தாலும் மாடிக்கு கொண்டு வரவேண்டும் என்பதாக இருந்தாலும் கூடுதலாக பணம் செலுத்துவார்கள். ஏறக்குறை இரண்டு வெள்ளியில் இருந்து மூன்று வெள்ளி வரை கூடுதலாக நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. சில வாடிக்கையாளர்களுக்கு இது தெரிந்திருந்தாலும் அவர்களின் ஒரு வெள்ளி இரண்டு வெள்ளியை மிச்சப்படுத்தி டெலிவரியில் எதையும் குறிப்பிட மாட்டார்கள். பொருட்களை அவர்கள் தரும் முகவரிக்கு கொண்டு சென்றதும்தான் நம்மிடம் பொருளை தூக்கி கொண்டு வரும் வேலையையோ படியேறுவதையோ சொல்லுவார்கள்.
அப்படி சொல்லும் போது, அதற்கு அவர்கள் டெலிவரி அப்லிகேஷனில் சொல்லியிருக்க வேண்டும். அப்போதுதான் எங்களால் அப்படி கொண்டு வரமுடியும். ஏனெனில் இவர்கள் கொடுக்கும் கட்டணத்தில் இப்படி பொருட்களை தூக்கி கொண்டு மாடிக்கு ஏறி வருவதெல்லாம் சேர்க்கவில்லை என குறிப்பிடுவோம்.
சிலர் தங்களின் தவறுகளை புரிந்து கொள்வார்கள் இன்னும் சிலர் அப்போது கையில் இரண்டு வெள்ளியைத் திணிப்பார்கள். இன்னும் இலர் இருக்கின்றார்கள், தங்களின் தவறை மறைக்கவோ தங்களின் சாமார்த்தியத்தை காட்டுவதாகவோ நாங்கள் வழங்கிய சேவைக்கு கொடுக்க வேண்டிய 5 ஸ்டார்களுக்கு பதிலாக ஒரு ஸ்டாரையும் கொடுத்து எங்களின் வேலை சரியாக இல்லை என்கிற குறையையும் அப்லிகேஷனின் எழுதிவிடுவார்கள். அப்படி எழுதிவிட்டால் எங்களுக்கு அடுத்தடுத்த வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால் எங்களுக்கு பாதிநாள் வரை வாடிக்கையாளர்கள் கிடைக்காமல் அள்ளாடுவோம்.
எதற்கு இந்த வம்பு என்று, சொன்னதை செய்துவிடுவோம். வேறேன்ன செய்ய முடியும் எங்களால். வாடிக்கையாளர்களாக நீங்கள் வரும்போது உங்களால் முடிந்த எதையாவது எங்களுக்கு செய்யுங்கள்.
நேற்றைய டெலிவரியிலும் அப்படியான அனுபவம் எனக்கு கிடைத்தது. அதுபற்றி இன்னொரு நாள் சொல்கிறேன்.
சில பாரமான பெட்டிகளை டெலிவரி செய்யும் வேலை வந்தது. தூக்கியும் இறக்கியும் செய்த வேலை போதாதென்று மழையும் வந்திருந்தது. ஈரமான தரையில் பாரமான பெட்டியுடன் நடக்கும் போது வலது கால் முன்னே இழுத்து தடுமாற்றம் ஏற்பட்டது. சட்டென என்னையறியாமலேயே என் உடல் இயந்திரத்தனாம பாதுகாப்பு கவசமாக ஏதேதோ அசைவுகளைச் செய்தது. என்னைப் பாதுகாப்பதாக நினைத்து ஏற்கனவே கொஞ்சமாய் இருந்த இடுப்பு வலியை இரட்டிப்பாக்கிவிட்டது.
வலி தாங்காமல் வீட்டிற்கு செல்லலாம் என்றால் முடியாது. இன்றைய சம்பாத்தியம் போதவில்லை. குறைந்தது மூன்று டெலிவரிகளையாவது செய்ய வேண்டும் அப்போதுதான் பட்ஜெட் போட்டபடி சமாளிக்க முடியும். அதோடு இரண்டு நாளில் அடகு கடை நகைக்கு பணம் கட்ட வேண்டியுள்ளது.
உடனே ஒரு ஆடர் வந்தது. காருக்கு தேவையான உதிரி பாகங்களைக் கொண்டு போக வேண்டும். 21 கிலோமீட்டர்தான் ஆனால் மழையாக இருப்பதால் நாற்பத்து ஐந்து நிமிடங்கள் வரை காட்டியது கைப்பேசி. அது டோல் இருக்கும் பாதை. இரண்டு வெள்ளி கட்ட வேண்டும். கஸ்டமரை அழைத்து டோல் குறித்து பேசினேன். சரி என்றார்கள். பொருளை எடுத்துக் கொண்டு ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் அந்த இடத்தை அடைந்தேன்.
தமிழரின் கார் பழுது பார்க்கும் கடை. நடுத்தர வயதில் ஒருவர் காரை பழுது பார்த்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பொருட்களைக் கொடுத்தேன். “வழியில் ரொம்ப மழையா என்றார்..?” ஆமாம் என்று டெலிவரி கட்டணத்தில் டோல் பணத்தையும் சேர்த்து கொள்ளும்படியும் சொன்னேன். ஆம் என்றவர், தூரத்தில் இருக்கும் மகனை அழைத்து எனக்கான பணத்தைக் கொடுக்கச் சொன்னார்.
அங்கிருந்த மகன் வந்தார். நேரடியாக என் வங்கியில் பணம் செலுத்துவதாகச் சொல்லி எவ்வளவு என்றார். நானும் அந்த நடுத்தர வயதுக்காரரிடம் சொன்னது போலவே கட்டணத்தையும் டோல் சாவடிக்கு கட்டிய இரண்டு வெள்ளியையும் கேட்டேன்.
அவரின் முகம் மாறிவிட்டது. “என்னது! என்ன ரெண்டு வெள்ளி கூடுதலா கேட்கறீங்க என் போன்ல அப்படி காட்டலயே..?”
“அதில் இருக்காது…” என சொல்ல வாயெடுத்தேன்.
“அப்லிகேஷன்ல இல்லாம காசு கேட்டா எப்படி கொடுக்கறது. இதுக்கும் சேர்த்துதானே காசு கொடுக்கறோம்.. கூட கேட்ட எப்படி… எல்லாம் புதுசாதான் இருக்கு….”
“அதில் இருக்காது… ஆனா ‘டோல்’ இருந்தா கஷ்டமர்கிட்ட நாம கேட்கலாம். அந்த அண்ணகிட்ட கேட்டுட்டுதான் அந்தப் பாதையில வந்தேன்” என்றேன்.
“அதுக்கு….”
“டொல் காசு கொடுக்கறதும் கொடுக்காததும் கஸ்டமரோட விருப்பம். ஆனால் பொருளை எடுக்கும் போதே நாங்க கஸ்டமரை கூப்டு கேட்போம். டோல் காசு கொடுக்கறதா சொன்னாலும் இல்லைன்னு சொன்னாலும் அதுக்கு ஏத்த மாதிரி பாதையில் வருவோம். அந்த அண்ணகிட்ட கேட்டேன் அவர் கொடுக்கறேன்னு சொன்னாரு அதான் அந்தப் பாதையில் வந்தேன்…”
எங்களது உரையாடல் உள்ளே இருப்பவருக்கு கேட்டிருக்க வேண்டும். “டேய்… நான் தான் கொடுக்கறேன்னு சொன்னேன்.. காசு கொடுத்து அவரை அனுப்பு.. மழையா இருக்குல்ல.. அவரு மத்த இடத்துக்கு போகனும்ல….” என்றார்.
எதிரில் இருந்தவருக்கு கோவம் வந்திருக்க வேண்டும். வங்கியில் பணம் செலுத்துவதாக சொன்னவர். அவரது பாக்கெட்டில் இருந்து டெலிவரிக்கான பணத்தையும் டோல் சாவடிக்கு கட்டிய இரண்டு வெள்ளியையும் கொடுத்துவிட்டு ஏதோ பேசியபடி அவர் வந்த இடத்துக்கே சென்றார்.
எனக்கு அந்த இரண்டு வெள்ளியைப் பார்க்கவும் அவமானமாக இருந்தது. டெலிவரி பணத்தை பாக்கெட்டில் வைத்துவிட்டு, அந்த இரண்டு வெள்ளியை கையில் வைத்து இறுக்கமாக மூடியபடி வெளியேறினேன்.
அவர்களின் கடை வாசலில் மதுரைவீரன் சாமி வைத்திருந்தார்கள். சின்னதாய்ச் சிவப்பு வண்ணத்தில் கூடாரம் போல அமைத்திருந்தார்கள். கையில் இருந்து அந்த இரண்டு வெள்ளியை மதுரை வீரனிடம் கொடுத்துவிட்டு காருக்கு சென்றேன். ஏனோ கைகள் நடுங்கியபடி இருந்தது.
வீட்டுக்கு போகலாமா என்ற் எண்ணமே எழுந்தது. ஆனாலும் இன்னும் இரண்டு டெலிவரிகளைப் பார்க்க வேண்டுமே.
அடுத்ததாய் ஒரு டெலிவரி கிடைத்தது. மோட்டார் வண்டியின் சக்கரத்தை கொண்டு போக வேண்டும். கடைக்கு சென்றேன். கடையில் ஒருவர் கையில் வண்டி சக்கரத்துடன் காத்திருந்தார். அதனை வண்டியில் ஏற்றிவிட்டு கட்டணத்தை எனது வங்கியில் செலுத்துவதாகச் சொல்லி வங்கி எண்ணின் கியூ.ஆரைக் கேட்டார்.
அதனைக் கொடுப்பதற்கு முன் பொருளை கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தை கைப்பேசியில் பார்த்தேன். ஒரே ஒரு டோல் சாவடி இருந்தது. ஒரு வெள்ளி கட்டணத்தை காட்டியது. அவரிடம் சொன்னேன். “ஓ அப்படியா…?” என்றவர் கூடுதலாக ஐந்துவெள்ளியைச் செலுத்தினார். எனக்கு ஆச்சயமாக இருந்தது. நன்றி சொல்லிவிட்டு டெலிவரிக்கு கிளம்பினேன்.
20 நிமிடத்தில் அந்த முகவரியை அடைந்தேன். வீட்டில் இருந்து ஒருவர் வந்தார், அவரேதான் அது. அவர்தான் பொருளைக் கொடுத்து பணத்தையும் கொடுத்து அனுப்பினார். சிரித்தபடி பொருளை வாங்கி கொண்டார். அவரது வீட்டு வாசலில் மூன்று டெலிவரி வேலைகான மோட்டார் சைக்கில்கள் இருந்தது.
இங்கும் எங்களின் நண்பர்கள் இருக்கிறார்களா என்று கெட்டேன். “ஆமாம்.. நாங்களும் பகுதி நேரமா டெலிவரிதான் செய்றோம்… உங்க நண்பர்களுக்கு இன்னிக்கு விடுமுறை…” என்று சிரித்தார்.
எனக்குமே சிரிப்பு வந்தது. மழையும் அதிகமாக சிரிக்க ஆரம்பித்தது. கணக்கு செய்து பார்த்ததில் இன்றைக்கு தேவையான பணம் இருந்தது. அதோடு மணி ஐந்தை நெருங்கியது. வாகன நெரிசலில் சிக்காமல் இருக்க இப்போது கிளம்பினால்தான் சரியாக இருக்கும் என்று நேராக வீட்டிற்கு புறப்பட்டேன்.
மறுநாள் நண்பரும் எழுத்தாளருமான ஶ்ரீகாந்தனைச் சந்தித்தேன். அதைப் பற்றிதான் எழுத தொடங்கினேன். ஆனால் எது எதையோ எழுதிவிட்டேன் பாருங்கள். அந்தச் சந்திப்பு பற்றி பிறகு எழுதுகிறேன்….
ஜூலை 12, 2026
புத்தகச்சிறகுகள் - தொடர் 19
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 19' வெளிவந்துள்ளது.
புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.
இந்தத் தொடரில் எழுத்தாளர் மனோகரன் கிருஷ்ணனின் 'நாகம்மாளின் மனக்குறிப்புகள்' சிறுகதைத் தொகுப்பு குறித்து எழுதியுள்ளேன். எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. கட்டுரையின் முதல்பகுதி இந்த வாரத் தொடரில் இடம்பெற்றுள்ளது.
எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.
அடுத்த வாரம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு வருகிறேன்.
அன்புடன்
#தயாஜி
ஜூலை 10, 2026
வாசிப்பில்
கடவுளே
தூண்டிலில் ஏன் உதடுகளை
மாட்டிக்கொள்ள வைக்கிறாய்
நான் மீனவனிடம்
"உதவி உதவி" எனக் கெட்க நினைக்கிறேன்
- பாலைவன லாந்தர்
வாசிப்பில் 'பெருந்தச்சன்'. பாலைவன லாந்தர் கவிதைகள். யாவரும் பப்ளிஷர் வெளியீடு.
அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
ஜூலை 09, 2026
- கவிழும் ஸ்பைடர் மேன்கள் -
காலையிலேயே முதல் ஆடர். கஸ்டமருக்கு பிறந்தநாள் அணிச்சலைக் கொடுக்க வேண்டும். வீட்டிலேயே அணிச்சலைச் செய்து விற்பனை செய்யும் பெண்ணொருவர் வாகனத்தை புக் செய்திருந்தார்.
கார் அவரது வீட்டு வாசலில் நின்றது. வீட்டு எண்ணை ஒருமுறை சரி பார்த்து கொண்டேன். புக் செய்த நபருக்கு அழைத்து நான் வந்துவிட்டதாகச் சொன்னேன்.
கதவு திறந்தது. கை மட்டும் முதலில் தெரிந்தது. கொஞ்சம் காத்திருக்கும்படி செய்கையைச் செய்தார். அதிகம் நேரம் எடுக்காமல் பெட்டி ஒன்றை எடுத்து கொண்டு வந்தார்.
"கார்ல ஏர்கோன் இருக்கா...?" என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருந்தது.
என் காரில் ஏர்கோன் இருக்கிறது உங்கள் கையில் என்ன இருக்கிறது என்றேன். சிரித்தபடி கஸ்டமருக்கு அணிச்சலை அனுப்ப வேண்டும் என்றார். இங்கிருந்து ஏறக்குறைய ஒரு மணிநேரம் வரை ஆகும். கடந்த முறை இப்படி அணிச்சலை அனுப்பும் போது சூட்டால் சில இடங்களில் உருகி விட்டதாகவும் இன்னொரு முறை அனுப்பிய அணிச்சல் கொஞ்சம் சேதமாகியும் கஸ்டமருக்கு கிடைத்ததைக் குறித்து பேசினார்.
தெரிந்தோ தெரியாமலோ டெலிவரி செய்கிறவர்களுக்கும் அவரது இந்தச் சிறு தொழிலுக்கு பாட்னர் போல ஆகிவிட்டார்கள். அழகாய்ச் செய்த அணிச்சல் அதற்குரியவர்களிடம் சென்று சேர்ப்பதும் பெரிய வேலைதானே என்றார்.
பெட்டியை வாங்கி, கோ டிரைவர் சீட்டில் வைத்து விட்டு, காரில் ஏர்கோன் வசதி இருப்பதை மீண்டும் ஒரு முறை அவரிடம் சொல்லிவிட்டு சிரித்தேன்.
அவரும் சிரித்தபடி ஐந்து ரிங்கிட்டை எடுத்து கொடுத்தார். நான் கைபேசியை எடுத்துப் பார்த்தேன். அப்லிக்கேஷ்னில் அவர் பணம் செலுத்தியுள்ளதாகக் காட்டியது. பெட்டியைச் சேர்த்ததும் எனக்கு அந்தப் பணம் கிடைக்கும். அதனை அவரிடம் சொன்னேன்.
"இது உங்களுக்கு... நீங்கள் எங்களுக்கு பாட்னர்தான.. இது உங்க பங்கு கமிஷன் என்றபடி விடைபெற்றார்.
அந்த அணிச்சல் பெட்டியைப் பார்த்தேன். அழகாய் இருந்ததும் உள்ளே இருக்கும் அணிச்சலையும் பார்க்க முடிந்தது. யாரோ ஒருவர் தன் குழந்தையின் இரண்டு வயது அணிச்சலை ஆடர் கொடுத்திருக்கின்றான். அதில் எழுதிய பெயரை வாசிக்க முடியவில்லை. ஆனால் அதில் அமர்ந்திருந்த ஸ்பைடர்மேன் பொம்மையைப் பார்த்ததும் அது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று யூகித்து கொண்டேன்.
காலையிலேயே இப்படிபட்ட கஸ்டமர்கள் நமக்கு கிடைப்பது எவ்வளவு நல்லாருக்கு. என்று நினைத்தபடி கிளம்பினேன்.
அடுத்ததாய் நடக்கப் போவதை நான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.
*******
எனக்கு சரியாக 45 நிமிடங்கள் என காட்டியது கைப்பேசி. வாகனத்தில் அணிச்சல் இருப்பதால் வேகமாக ஓட்ட முடியாது. ஓரளவிற்கு வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்தபடி வாகனத்தைச் செலுத்தினேன்.
நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சமயம் என் வழியில் சட்டென ஒரு மஞ்சள் நிற வாகனம் குறுக்கிட்டது. முன்னறிப்பாக வலதுபக்க சமிக்ஞை இல்லாமல் அந்த வாகனம் நுழைந்ததால் சட்டென எனது வேகத்தைக் குறைக்கவும். நாற்காலியில் வைத்திருந்த அணிச்சல் கொஞ்சம் முன்னகர்ந்து பின் செல்லவும் சரியாக இருந்தது.
ஹார்னை அடித்தேன். என் வாகனத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. அவ்வப்போது ஹார்ன் அடிக்காது. வேகமாக அழுத்த வேண்டும். அந்த நினைப்பிலேயே ஹார்னை வேகமாக அழுத்த, இன்றும் மட்டும் ஏனோ பயங்கர சத்தமாய்க் கேட்டது.
அந்தச் சத்தம், குறுக்கே வந்த வாகனமோட்டியைக் கோவப்படுத்தியிருக்க வேண்டும். சட்டென இடது பக்கமாக வாகனத்தை செலுத்தினார். நான் வழக்கம் போல நேரே செல்லத் தொடங்கினேன்.
அந்த மஞ்சள் வாகனத்தில் யாரென நான் பார்க்கவும், எவண்டா எனக்கு ஹார்ன் அடிச்சது என அவர் என்னைப் பார்க்கவும் சரியாக இருந்தது.
'ஓ தமிழரா...?' என நானும், 'டேய் தமிழனா நீ...!!' என அவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம்.
அவரது பக்கத்தில் அவரது நண்பரும் இருந்தார். அதனால்தான் என்னவோ அவருக்கு என் மீது கோவம் அதிகமாகியது. அவர் தனியாக வந்திருந்திருந்தால் கூட இப்படி ஆவேசப்பட்டிருக்க மாட்டார் போல.
அந்த மஞ்சள் வாகனம் எனது வாகனத்தை இடிப்பது போல வரத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் என் வழியில் குறுக்கே வருவது போல வித்தை காட்டியது.
எனக்கும் வயிற்றில் புளியில் இருந்து ஏதேதோ கரையத் தொடங்கியது. வாகனத்தை ஓரத்தில் நிறுத்தவும் முடியாது. தமிழன் என்ற ஒரே காரணம் போதும் இன்னொரு தமிழன் என்னை அடித்துவிட்டு அப்பறம் நடந்ததைப் பற்றி விசாரிப்பதற்கு.
இதனால் அணிச்சலுக்கு ஏதும் ஆகிவிட்டால் அது என் வேலைக்கே சிக்கலாகிவிடும். இப்போதுதான் 3 முதல் 4 ஸ்டார்கள் வரை வாங்க ஆரம்பித்திருக்கின்றேன்.
வாகனத்தை நிறுத்தாமலேயே அந்த மஞ்சள் வாகனத்தைச் சமாளித்தவாறு சென்று கொண்டிருந்தேன். இப்போதுதான் கவனித்தேன் அணிச்சலில் அமர்ந்திருந்த ஸ்பைடர்மேன் அதிலேயே கவிழ்ந்து கிடக்கின்றான்.
இன்றைக்கு அவ்வளவுதான் என நினைத்தபடி இருபது நிமிட போராட்டத்திற்கு பின் அந்த வாகனத்தில் இருந்து தனியாய்ப் பிரிந்து கஸ்டமரின் முகவரியை அடைந்தேன்.
அது அடுக்குமாடி குடியிருப்பு. என் விபரங்களை அங்குள்ள காவலாலியிடம் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்து வாகனத்தை நிறுத்தத்தில் நிறுத்திவைத்தேன்.
அணிச்சல் பெட்டியை எடுத்தேன். உள்ளே கவிழ்ந்து கிடக்கும் ஸ்பைடர் மேன் பாவமாக பார்த்தேன். இன்று அவன் பாவமல்ல இவந்தான் பாவம் என சொல்வது போல என் முகத்தில் ஒரு பகுதி அந்த அட்டைப்பெட்டியின் ஒரு பக்க நெகிழியில் தெரிந்தது.
கஸ்டமரை அழைத்தேன். அப்பாவும் மகனுமாய் உற்சாகமாக என்னை நோக்கி வருகிறார்கள். அணிச்சலைப் பார்த்ததும் அந்த உற்சாகம் இருக்குமா என தெரியவில்லை.
தூரத்தில் இருந்தபடியே கையை அசைத்தபடி வந்து கொண்டிருக்கிறார் அப்பா. உற்சாகத்தில் குதித்து கொண்டே வருகிறான் குட்டி ஸ்பைடர் மேன்.
அவன் குதித்த குதியில் கால் வழுக்கி விழுந்தான். அழதான். அப்பா அவனை சமாதானம் செய்தபடி இருந்தார் நானும் பெட்டியுடன் அவர்களிடம் ஓடினேன்.
பையன் எழுந்து நின்று என்னைப் பார்த்தான். அப்பாவும் என்னைப் பார்த்தார். அணிச்சலை வாங்கினார். அதில் கவிழ்ந்து கிடக்கும் ஸ்பைடர் மேனைப் பார்த்தார். மகனும் பார்க்கலானான். இருவரும் ஒருவரையொருவர் பார்க்கலானார்கள்.
"பாரு தம்பி ஸ்பைடர் மேனும் உன்னைப் போலவே விழுந்துட்டாரு..." என்றேன் பையனும் அப்பாவும் ஒருசேர சிரிக்கிறார்கள். எனக்குமே சிரிப்பு வந்தது.
பின் அணிச்சலை வாங்கி கொண்டார்கள். குட்டி ஸ்பைடர் மேனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லியபடி விடைபெற்றேன்.
வாகனத்தில் ஏறி அமர்கிறேன். கைப்பேசியில் ஒரு சத்தம். இன்றைத முதல் வேலைக்கான பணம் சேர்ந்ததாய்ச் சொன்னது. அதோடு என் வேலைக்கு இன்று 5 ஸ்டார்
இன்று அங்கிகாரமும் கிடைத்தது.
கவிழ்ந்த ஸ்பைடர் மேனுக்கும் அந்த குட்டி ஸ்பைடர் மேனுக்கும் நன்றி சொல்லியபடி வாகனத்தை கிளப்பினேன்.
எங்கள் வட்சப் குழுவில் ஒரு செய்தி வந்தது. நான் வந்த வழியில் ஏதோ விபத்து நடந்து கார் ஒன்று கவிழ்ந்து கிடப்பதைப் படம் எடுத்து அனுப்பியிருந்தார்கள்.
அந்தக் கார் மஞ்சளாக இருக்கிறது.