பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 20, 2022

எழுத்தாளர் தமிழ்மகனுடன் சந்திப்பு


எழுத்தாளர் தமிழ்மகன் மலேசியா வந்திருந்தார்.  அவரது ‘படைவீடு’ நாவலுக்கு தேசிய நில நிதி கூட்டுரவு சங்கம்,  ‘தான் ஶ்ரீ கே.ஆர்.சோமா இலக்கிய அறவாரிய விருதினை  அறிவித்திருந்தார்கள்.  அதன் பொருட்டு ரொம்பவும் குறுகிய காலப்பயணமாக வந்திருந்தார். 
சில காரணங்களால் அந்த விருது நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அது என் மனதை நெருடவே செய்தது.

 குறிப்பாக உடல் நலம் பொருட்டும் குடும்பச்சூழல் பொருத்தும் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு செல்வது சாத்தியமற்று இருக்கிறது. இது இயல்பான காரணம்தான் எல்லோரும் சொல்லும் காரணமும்தான். ஆனால் இதன் விளைவு மெல்ல மெல்ல நம்மை நாம் விரும்புகிற மனிதனில் இருந்து கொஞ்சமும் நமக்கு சம்பந்தம் இல்லாத இன்னொரு மனிதனாக நம்மை மாற்றிவிடக்கூடும். 

ஆகவே முடிந்தவரை; குறைந்தபட்சம் சில சந்திப்புகளையாவது தவறவிடக்கூடாது என்கிற அடுத்தாண்டு திட்டத்திற்கு இப்போதே பிள்ளையார் சுழி போட்டுக்கொண்டேன் எப்படியாவது எழுத்தாளர் தமிழ்மகனிடம் ஓரிரு வார்த்தைகளையாவது பேச நினைத்தேன். குறைந்தது நான் அவரின் எழுத்துகளை வாசித்திருக்கிறேன் என சொல்வதற்கான வாய்ப்பாக அது இருந்தாலும் எனக்கும் போதுமானது.

 ஏனெனில் அதுதான் ஓர் எழுத்தாளருக்கு நாம் கொடுக்கும் முதல் மரியாதை.

அவர்களை சந்தித்து அவர்களுடன் விருந்துண்டு அவர்களுடன் புகைப்படங்களில் சிரித்து வைப்பதெல்லாம் ஒன்றுமில்லை. சித்தர்கள் பாணியில் சொல்வதென்றால் அவை எல்லாம் சிற்றின்பம். அப்படியெனின் பேரின்பம்? ஆம் அது அவர்களின் எழுத்துகளை வாசிப்பது. அதனை அவர்களிடம் சொல்வது. அதிலும் எழுத்தாளர்களின் எழுத்திலிருந்து நாம் கண்டடைந்த ஒன்றை அவர்களுடன் பகிர்வது அல்லது சண்டையிடுவது.

எழுத்தாளர் தமிழ்மகன் மீண்டும் தமிழகம் செல்வதற்குள் அவரை சந்திக்க முயன்றேன். அதிஷ்டவசமாக அது சாத்தியமானது. அவர் புறப்படுவதற்கு முன்பாக பார்க்கலாமே என்றார். நல்ல வேளையாக அது காலை சிற்றுண்டியாக இருந்தது.
காலை 9.30க்கு சந்திப்பு முடியானது. காலை 7க்கே நான் எழுத்து தயாராகிவிட்டேன். 
அப்படியிப்படி என சாலை நெரிசல்களில் சிக்கியும் சிக்காமலும் ஒருவழியாக கூகல் காட்டிய குறுக்கு வழிகளில் எல்லாம் நுழைந்து பல சாகசங்களைச் செய்து ஒரு மணி நேரத்திற்கு முன்னமே தங்கும் விடுதியை அடைந்துவிட்டேன்.

 இடத்தை அடைந்ததுதாம் தெரிந்தது, அது என் வீட்டிலிருந்து குறைத்து அரை மணி நேரத்தில் கூட என்னால் வர முடிந்த இடம்தான். ஆனால் காலை நேர வாகன நெரிசலில் இருந்து என்னை காப்பாற்றுகிறேன் பேர்விழி என கூகல் மேப் செய்த காரியத்தில் தலை கொஞ்சம் சுத்திதான் விட்டது.

வீட்டில் இருந்து புறப்படும் முன்னமே அவரின் புத்தகங்களை அலமாரியில் இருந்து எடுத்து வைத்தேன். எந்தப் புத்தகத்தில் கையொப்பம் வாங்கலாம் என்கிற தீவிர யோசனை வந்து சேர்ந்தது.
2012-ஆம் ஆண்டில்தான் நான் அவரின் ‘மீன் மலர்’ சிறுகதைத் தொகுப்பின் வழி அவரை வாசிக்க ஆரம்பித்தேன்; அதில் கையெழுத்து வாங்கலாமா? அதன் பிறகு வாங்கிய ‘ஆண்பால் பெண்பால்’ என்னும் நாவலில் வாங்கலாமா? ஆனால் நான் முழுமையாக வாசித்து முடிக்காத புத்தகங்களில் அதுவும் ஒன்று ‘சரி மீதியை அப்பறம் வாசிச்சிக்கலாம்’ என்று எடுத்து வைத்த அதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியாத நாவலில் அவரிடம் கையொப்பம் வாங்குவது எனக்கு குற்றவுணர்ச்சியைக் கொடுத்தது. சரி சமீபத்தில் வாங்கி, என நண்பருக்கு பரிசாக கொடுத்த புத்தகமான ‘எட்டாயிரம் தலைமுறை’ சிறுகதைத் தொகுப்பில் வாங்கலாம் என யோசிக்கையில் எனக்கு ரொம்பவும் பிடித்த அ.முத்துலிங்கம் முன்மொழிந்த ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் வாங்கலாமா என்று மீண்டும் குழம்பலானேன். 

என் நிலைமையை அறிந்த என் இல்லாள்; “விருது கொடுக்கற புத்தகத்திலேயே ஆட்டோகிராப் வாங்கிடுங்களேன்” என்றார். “அட ஆமாம்ல.. அதைப் பத்திய யோசனையே இல்லா போச்சி” என்றேன். அதற்கு இல்லாள் ஒரு பதில் சொன்னார், அது நமக்கு வேண்டாம்.
ஒர் எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பது எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு நான் சொல்லும் பாலப்பாடம். மீண்டும் ஒரு முறை அவரது எழுத்துகளை மீள்ப்பார்வை செய்தேன். அப்போதுதான் அவருக்கு இம்மாதம் பிறந்த நாள் என  அறிந்து கொண்டேன். புத்தகங்களையும் அங்கீகாரங்களையும் விட சிறந்த பரிசுகளை எழுத்தாளர்களுக்கு எப்படி கொடுக்க முடியும். 

ஆகவே நான் எழுதிய மூன்று புத்தகங்களான ‘ஒளி புகா இடங்களின் ஒலி’ பத்திகள் தொகுப்பையும், எனது சொந்த பதிக்கபத்தில் நான் வெளியிட்ட ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல – 101 குறுங்கதைகள்’ தொகுப்பையும், ‘பொம்மி’ என் முதல் கவிதைத் தொகுப்பையும் அவருக்கு பரிசளிக்க எடுத்து வைத்தேன்.

காலை சிற்றுண்டியில் சந்திக்கலானோம். அவரும் அவரது துணைவியாரும் வந்தார்கள். எங்கள் இருவருக்கும் வழிவிட்டு அவரது துணைவியார் தனியாக அமர்ந்து கொண்டார். அடடே இப்படி பிரித்துவிட்டோமே என்கிற எண்ணம் எழுந்தது, அதனைப் புரிந்து கொண்டவர் ‘நீங்க பேசுங்க’ என்றார். அம்மாவிற்கு என் நன்றி.

எழுத்தாளர் தமிழ்மகன் எதிரில் அமர்ந்து என்னால் முழுமையாகச் சாப்பிட முடியவில்லை. இத்தனை நாடகளாக வாசித்த அவரது எழுத்துகளின் உருவும் குருவும் அவர்தானே. அவரின் கரிசனமாகக் குரல் என்னை இயல்பு நிலைக்கு திருப்பியது.

பலவற்றைப் பேசினோம். ஆனால் இப்போது யோசிக்கையில் நான் தான் அங்கு அதிகம் பேசியிருக்கிறேன் என தோன்றியது. அவர் அதிகம் கேட்பவராகவே இருந்தார். அவருக்கு மலேசிய எழுத்தாளர்களைத் தெரிந்திருந்தது. விசாரிக்கவும் செய்தார்.

அப்போது நான் சுஜாதாவின் தீவிர வாசகனாக இருந்தேன். முடிந்தவரை அவரின் அனைத்து ஆக்கங்களை வாசிக்கும் உத்வேகம் இருந்தது. அதில் ஓரளவிற்கு வெற்றியும் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தமிழ்மகனின்  ‘மீன் மலர்’ சிறுகதைகளை வாசிக்கையில் சுஜாதாவின் பாணி இருந்ததாகப்பட்டது. அதன் பிறகு மேலும் சிலர் இவரின் எழுத்துகளைக் குறித்து சொல்லும் போது ஜூனியர் சுஜாதா என்று சொல்வதையும் வாசித்திருந்தேன்.

அதுவரை கேட்டுக்கொண்டிருந்தவர் சட்டென; “நீங்க சொல்லுங்க தயாஜி நான் சுஜாதா மாதிரி எழுதறேனா?” என கேட்டுவிட்டார்.

அக்கேள்வி என்னை யோசிக்கவும் வைத்தது. அப்போது என் மனதில் ஒரு பதிலும் தோன்றியது. அது நான் சுஜாதாவை தீவிரமாக வாசித்த காலம் என்பதால் வாசிக்கும் எல்லாவற்றிலும் நான் சுஜாதாவை காணவே விரும்பினேன். சின்ன சின்ன வாக்கியங்கள், வித்தியாசமான திருப்பங்கள், கதைச்சொல்லலில் புதுமை போன்றவை அதன் எழுத்தாளர்களைத் தாண்டியும் எனக்கு சுஜாதாவையே நினைவூட்டியதைச் சொன்னேன்.
 தொடர்ந்து ஒரே எழுத்தாளரின் எழுத்துகளை வாசிக்கும் சிலருக்கு ஏற்படும் தடுமாற்றம் எனக்கும் ஏற்பட்டிருந்ததைச் சொன்னேன். 
அதன் பிறகு என்னால் வாசித்து முடிக்க முடியாத அவரது ‘ ஆண்பால் பெண்பால்’ நாவல் குறித்து பேசினேன். அந்நாவலில் இருந்து சிலவற்றை அவரும் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் அவரது மின்னங்காடி பதிப்பகத்தையும் நான் எனது வெள்ளைரோஜா பதிப்பகத்தைப் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் பேசினோம்,  திட்டங்களைப் பகிர்ந்து கொண்டோம். அதோடு அவரது புத்தகங்கள் எனது ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையில்’ எப்போதும் இருக்கும் என்றேன்.

பிறகு நாங்கள் இருவரும் பக்கத்திலிருந்த பணப்பட்டுவாடா இயந்திரம் (ஏ.டி.எம்) வரை சென்று வந்தோம். 

தங்கும் விடுதிக்கு வரவும், வாகனமோட்டி அவருக்காக காத்திருக்கவும் சரியாக இருந்தது. ஏனெனில் விமான நிலையம் செல்வதற்கு முன்பாக சில பொருட்களை வாங்குவதற்கு பிரிக்பீல்ட்ஸ் சென்று வரவேண்டும். வாகன்மோட்டியைக் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லிவிட்டு அவரது துணைவியார் வரவேற்பறைக்கு வர காத்திருந்தோம்.

வாகனமோட்டி பரபரப்பாக உள்ளே நுழைந்தார், “என்ன இன்னும் கிளம்பலையா.. மணியாகுது.. போய்ட்டு திரும்ப வந்து நாம் ஏர்போர்ட் போகனும்ல மணியாகுது” என்றுய கைகடிகாரத்தை பார்த்தார். அவர் பேசிய விதம் எனக்கே ஒருவித பதற்றத்தைக் கொடுத்துவிட்டது. நம்மை நம்பி வந்திருக்கும் விருந்தாளியிடம் இப்படியா இந்த தோரணையிலா பேசவேண்டும். சரி அவர் அவசரம்; அவரின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு அவருக்குத்தானே தெரியும் என என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன். ஆனால்; இதுவே இவ்விடத்தில் ஓர் எழுத்தாளர் இல்லாமல் நடிகர் சூர்யாவோ, உலக நாயகன் கமல்ஹாசனோ இருந்திருந்தால் இப்படித்தான் அவர் பேசியிருப்பாரா என்கிற கேள்வி எழுந்தது. ஒரு வாசகனாக எழுத்தாளரின் முன் முழுமையாக சாப்பிடாமலே வயிறு நிறையும் எனக்கு இப்படித்தானே யோசனை எழும். 

சின்ன ஆலோசனை; இனி இவ்வாரான பிரமுகர்களை கவனிக்கவோ அவர்களுக்கு வாகன்மோட்டியாக வருகின்றவர்களிடம் யாரை அவர்களின் பொறுப்பில் கொடுக்கின்றோம் என சொல்லிவிடுங்கள். ஏனெனில் நானும் இவ்வாறு எழுத்தாளர்களை கவனிக்கும் பொறுப்பில் இருந்திருக்கிறேன் இருக்கவும் செய்கிறேன். இன்னும் சொல்லப்போனால் என் பொறுப்பில் இருந்த எழுத்தாளரை தொலைக்கவும் செய்திருக்கிறேன்; அது வேறொரு சுவாரஷ்யமான கதை.

இவர் மட்டுமல்ல; இக்கேள்வியை இங்குள்ள ஊடகங்களிடமும் நாம் வைக்கலாம். ஒரு சினிமா பிரபலம் மலேசியா வரும் போது வரிந்து கட்டி நிற்கும் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் இப்படியான எழுத்தாளர்களோ அல்லது சமுகம் சார்ந்து இயங்குபவர்கள் வரும் போதோ அவ்வளவாகக் கண்டுக்கொள்வதில்லை.

 மலேசியாவிற்கு வரக்கூடிய எழுத்தாளர்களுக்கே இந்நிலை என்றால் இங்குள்ள எழுத்தாளர்களின் நிலையையும் இங்குள்ள சில ஊடகங்கள் எவ்வாறு அவர்களை பயன்படுத்துகிறது மரியாதை கொடுக்கிறது என யூகித்துக் கொள்ளுங்கள்.

பரபரப்பாய்ப் பேசி முடித்த வாகனமோட்டியிடம் எனது கைப்பேசியைக் கொடுத்து எங்கள் இருவரையும் படம் பிடிக்க சொன்னேன். அவரும் சிரித்த முகத்துடன் செய்தார். அந்த நேரத்தைப் பயன்படுத்தி தமிழ்மகனின் படைவீடு நாவலில் அவரிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டேன். எனது மூன்று புத்தகங்களையும் அவரிடம் சந்திப்பின் நினைவாகவும் முன்னமே பிறந்தநாள் பரிசாகவும் கொடுத்தேன்.

அவரது துணைவியாரும் வந்துவிட்டார். அவர்கள் பொருட்களை வாங்க புறப்பட; என்னையும் எழுத்தாளர் உடன் வரீங்களா என்று அழைத்தார். ஆசையாகத்தான் இருந்தது ஆனால் இயலவில்லை என்று வருந்தினேன்.
பரபரப்பான சூழலிலும் தன் வாசகனுக்கு நேரம் ஒதுக்கிய அவனுக்கு சிற்றுண்டியும் கொடுத்த எழுத்தாளர் தமிழ்மகனுக்கும் அவரது துணைவியருக்கு என அன்பும் நன்றியும்.

இதுதான் அவர் மலேசியாவிற்கு வரும் முதல் முறை. மீண்டும் அவரை மலேசியாவிற்கு அழைப்பேன் என்றேன், இங்கு அவரின் எழுத்துகளுக்கு இருக்கும் வாசகர்கள் அவரை சந்தித்து கலந்துரையாடல் செய்யும் காலம் அதிக தூரமில்லை என்கிற நம்பிக்கையான வார்த்தைகளின் மூலம் அவரிடம் இருந்து விடை பெற்றேன்.

டிசம்பர் 03, 2022

தாய்மடியாகும் தாய்மாமன் மடி

- தாய்மடியாகும் தாய்மாமன் மடி -

ஒன்று இன்னொன்றை, அந்த இன்னொன்று  இன்னொரு ஒன்றை எப்படியும் நமக்கு நினைவுப்படுத்திவிடுகின்றன. நினைவுகளின் ஆதாரம் எங்கிருந்தாவது நம் மனதை தொட்டுவிடுவதை தவிர்க்க முடிவதில்லை; அதனை முன்கூட்டியே நம்மால் கண்டறியவும் முடிவதில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு பிறந்தகம் சென்றிருந்தேன். தங்கை மகளுக்கு காதணி விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். உடல் நிலை பழையபடி இல்லாததாலும் தலைநகரில் இருக்க வேண்டிய அவசியம் இருந்ததாலும் ஒரு நாள் பயணமாக அமைத்துக் கொண்டேன்.

எப்படியும் சொந்த மண்ணுக்கு சென்றால் உடனே திரும்பி வர மனமிருக்காது. ஆனால் இம்முறை என்னை நானே கட்டுப்படித்திக் கொள்ளும்படி ஆனது. அம்மாவும் தங்கையும் கட்டாயம் வர சொல்லியிருந்தார்கள். இல்லாளும் உறவு முறைகளின் சரியாக இருக்க வேண்டும் என சொல்லிக்கொண்டே இருப்பார். தாய்மாமன் உறவு ரொம்ப முக்கியமானது அது அந்த குழந்தைக்கு இன்னொரு தொப்புள்கொடி உறவு என்றார். சொல்லப்போனால் குழந்தைக்கு இன்னொரு தாய் என்றெல்லாம் பேசிப்பேசி என் மனதை புறப்படுவதற்கும் ஏற்பாடுகளைச் செய்வதற்கும் இல்லாள் அவர் வசமாக்கிக்கொண்டார்.

என் தங்கை மகளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எங்கள் இன்றைய தலைமுறையில் எங்கள் குடும்பத்தில் பிறந்திருக்கும் முதல் பெண் வாரிசு என்பதாலும் அவள் பிறந்த பிறகு என் வாழ்விலும் நான் பல மாற்றங்களைக் கண்டேன் என்பதாலும் இருக்கலாம்.

இன்று அக்குழந்தையை என் மடியில் வைத்து காது குத்தி அழகு பார்த்தோம். அக்குழந்தை கண்களில் கண்ணீரே வராமல் அழுவதையும் நாங்கள் பார்த்தோம்.

எனக்கும் இன்றும் நினைவில் இருக்கிறது.
அப்போதுதான் தலைநகருக்கு வேலைக்கு வந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. தங்கை கர்ப்பமாக இருந்தாள். அவளுக்கு அன்று பிரசவம். அவளுக்கு அருகில் கட்டிலில் இருந்த கர்ப்பவதிகள் எல்லாம் ஒவ்வொருவராக பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தங்கைக்கு இன்னும் வலி வரவில்லை என்றும் உடலில் மருந்தை ஏற்றுவதற்கும் வழியில்லை என்பதையும் அம்மா அழைத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அம்மாவிற்கு எப்படி தைரியம் சொல்வது என தெரியவில்லை. உடனே என்னால் அங்கு செல்லவும் முடியாத சூழல். அம்மாவிற்கு ஏதேதோ தைரியம் சொல்லி இணைப்பைத் துண்டித்தேன்.

அம்மாவின் குரலில் இருந்த நடுக்கம் என் உடலில் இப்போது தொற்றிக்கொண்டது. என் தைரியத்தைக் காணவில்லை. என்னைச் சுற்றிலும் இருள் சூழ்வதாகப்பட்டது.

என்னால் தங்கையின் முகத்தைக்கூட நினைவில் கொண்டுவர முடியவில்லை. திக்குத்தெரியாதவன் ஆனேன். கண்களை இறுக்க மூடிக்கொண்டேன்.

அப்போது தமிழகத்தில் இருந்தேன். பழனி முருகன் கோவில். அப்போதே ஒரு வேண்டுதலைப் போட்டேன்.  திக்கற்று நிற்பவருக்கு தெய்வம்தானே எப்போதும் துணை. கண்களை மூடியவாறு கைகளை கூப்பி, “முருகா… தங்கையும் அவளது குழந்தையும் தாயும் சேயும் நலமாக வரவேண்டும்… நான் உனக்கு மொட்டை போட்டுக்கறேன்” என வேண்டிக்கொண்டேன்.

ஆட்கள் அதிகம் இல்லாததால், சீக்கிரத்தில் முடி கணிக்கை முடிந்து அர்ச்சனை செய்து கோவிலை விட்டு வெளியேறினேன் மனதில் இருந்த பயமும் பாரமும் குறைந்தது. அப்போது  அம்மா மீண்டும் அழைக்கவும் சரியாக இருந்தது. என் வேண்டுதல் பலித்துவிட்டதை அம்மாவின் மூலம் அறிந்துகொண்டேன்.

என் வேண்டுதலுக்கு அப்பன் முருகனே வந்திருக்க வேண்டும் ஆனால் அவனுக்கு பதிலாக தேவதையைக் கொடுத்தனுப்பியிருக்கிறான். குறும்புக்கார குமரனுக்கு என்னை நன்றாக தெரியும். அதனால்தான் தேவதைக்கு தாய்மாமனாகும் கூடுதல் பொறுப்பைக் கொடுத்துவிட்டான் போல.

அந்த ஆண்டு தைபூசத்தின் போது என் வேண்டுதலை நிறைவேற்றினேன்.
இன்று அந்த தேவதையை மடியில் அமர்த்திய சில நிமிடங்களில், அன்று நடந்தவை மீண்டும் மனக்கண்ணில் நடந்தேரியது.

தன் தாய்மாமா ஓர் எழுத்தாளர் என்பதை அந்தத் தேவதை தெரிந்து கொள்ளும் வயதில் இதனை அவள் வாசிக்க வேண்டும்.

அது அவள் வாழ்வின் மீதான மாபெரும் நம்பிக்கையைக் கொடுக்கும் என நம்புகிறேன்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்