பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 05, 2023

'அது ஒரு..........'

                        'அது ஒரு.........'

அந்தக் கண்களில் ஒளி தெரிந்தன. தெரிந்தவை மிளிர்ந்தன. மிளிர்ந்தவை பார்வையாளர்களை ஈர்த்தன. அந்த ஈர்ப்பு அவரின் பேச்சில் இவர்களை மயக்கின.

மனம் குறித்து இதுவரை விஞ்ஞானமே சொல்லாததையும் சொல்கிறார். கடவுளே கவுன் போட்டு வந்தது போல தெரிந்தாலும் அவரின் முகத்தில் தெரிந்த தேஜஸை எழுதினால் பக்கங்கள் போதாது.

வாழ்க்கையொன்றும் அவ்வளவு கஷ்டமில்லை என்றார். இல்லையா என்றால் இல்லையென்று அர்த்தமில்லை இருக்கலாம் என்றார். இருக்கலாம் என்றால் இருந்தேதான் ஆகவேண்டுமா என சொல்வதற்கில்லை என்றார். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறதுதானே என்கிறார். அதில் கஷ்டம் வந்தால் என்ன நஷ்டம் வந்தால் என்ன அதிஸ்டம் வந்தால்தான் என்ன. எல்லாமே அதன் இஸ்டம்தானே என்றார். இதற்காக நாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் என்கிறார்.

அட, எவ்வளவு பெரிய தத்துவம் என எல்லோரும் சொன்னார்கள். கைத்தட்டல் வேறு.

அவர் இவ்வுலகிற்கு இன்னொரு ஞான கீற்றை கீறிப்போட நினைத்த பொழுது, அந்தப் உருவம் அங்கு வந்தது. அதுதான் இங்குள்ளவர்களை ஆட்டிப்படைக்கும் ஆணவம். அதுவே இவர்களை இம்சிக்கும் இயந்திரம். மனித வாழ்வின் சாபமே அதுதான். அதோ அது எதையோ சொல்கிறது. அதை நாம் கேட்டுத்தான் ஆகவேண்டும். இன்றைக்கு என்னால் இயன்ற ஞானம் அவ்வளவுதான் என அவர் முடிக்கும் முன் அந்த உருவம் தொடர்ந்தது;

அவ்வளவுதான்.

அவ்வளவுதான்னா?.

அவ்வளவுதான்னா அவ்வளவுதான். மணி ஆறே முக்கால் ஆச்சி. விசிட்டிங் ஹவர் முடிஞ்சது. இதோட நாளைக்குத்தான். எல்லோரும் அவங்கவங்க இடத்துக்கு போங்க டாக்டர் வர நேரமாச்சி.

'..... பைத்தியக்கார ஆஸ்பத்திரி'


ஜூலை 04, 2023

- வெடிகுண்டு -

                     - வெடிகுண்டு -

'நல்ல கூட்டம். சரியான இடம். இங்கு வைக்கலாம். வெடிக்கும். நிறைய பிணம் விழும். விழுமா.?. இல்லையில்லை உடல்கள் சிதறும். அழுகை. ஓலம். மரணம் ஓலம்.....'

மனக்கணக்கு இன்னும் முழுதாய்க் கணக்கிடவில்லை. அதற்குள் எழுந்துவிட்டான். நேரம் ஆக ஆக கூட்டம் குறைந்துவிடும். கூட்டம் குறைந்தால் உடல்களும் குறைந்துவிடும். உடல்கள் குறைந்தால் சிதறல்களும் குறைந்துவிடும். சிதறல்கள் குறைந்தால் வெடிகுண்டுக்கு என்னதான் மரியாதை. வெடிகுண்டுக்கே மரியாதை இல்லாத போது தன்னை யார்தான் நினைப்பார்கள்.

மூன்றாவது மாடியில் இருந்தான். மின் தூக்கி அவனை அடித்தளத்திற்கு கொண்டு போனது. கீழே வைத்து வெடிக்க வைக்கலாம். அதுதான் அதிக சேதாரத்தைக் கொடுக்கும். குழந்தைகள் அதிகம் இருக்கும் இடத்தின் நடுவில் வந்து நின்றான். 

'இந்தக் குழந்தைகள்தான் எவ்வளவு அழகாக சிரித்து விளையாடுகிறார்கள். நாமும் குழந்தையாய் இருந்திருக்கலாமோ. இவர்களுக்கு எந்த சூதும் வாதும் தெரியாது. சும்மாவா குழந்தைகளை தெய்வத்திற்கு சமமானவர்கள்னு சொல்லிக்கறாங்க.'

தன் கைப்பையை கீழே வைத்தான். திறக்கிறான். உள்ளே கையை விட்டு எதையோ செய்கிறான். கையை எடுக்கிறான். அலாரம் தயார். இன்னும் சரியாக பத்து நிமிடத்தில் வெடித்துவிடும்.
ஒரு வாரத்திற்கு அதுதான் தலைப்பு செய்தி. 

இன்னும் ஐந்து நிமிடங்களே உள்ளன.

என்ன நினைத்தானோ தெரியவில்லை. பையைத் திறக்கிறான். அலாரத்தை அடைக்கிறான். பையை எடுக்கிறான். எழுகிறான். நேரே நடக்கிறான். வெளியே வந்துவிட்டான். வெடிக்கவில்லை.

குறுங்கதையில் வெடிகுண்டைக் கொண்டு வந்தால் அது வெடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்களுக்கு வேண்டுமென்றால் வெடிகுண்டு என இருக்கும் தலைப்பை மாற்றி, வெடிக்காத குண்டு என போட்டு மீண்டும் வாசித்துப் பாருங்கள். கதை சரியாக வரும்.

#தயாஜி 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூலை 02, 2023

- அவ என் ஆளு -


                    - அவ என் ஆளு - 


"நீங்களும் அம்மாவும் சம்மதிக்க மாட்டீங்கன்னு நினைச்சி பயந்துட்டேன் பா.." என்று கண்கலங்கி நின்றான் அன்பழகன்.

பெயருக்கு ஏற்றார் போலவே அழகன்தான். அதனால்தான் என்னவோ அவனை சுற்றி எப்போதும்  பல பெண்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அன்பழகனுக்கோ எந்தப் பெண்ணும் அவன் கண்களுக்கு அழகியாகத் தெரியவில்லை.

இன்னும் சொல்லப்போனால், அன்பழகனுக்கு அழகியாகத் தெரிந்த பெண்; பெண்ணே அல்ல. 

அவள் ஒரு திருநங்கை. பார்த்த மாத்திரத்தில் கொஞ்சமும் பழகிப்பார்த்ததில் நஞ்சமும் பிடித்துவிட்டது. அவள்தான் தயங்கினாள். அவள் தோழிகள், காதல் வலையில் சிக்கி ஏமாந்த கதைகள் அவள் போன்றவர்களுக்கு பாடம் அல்லவா.

எப்படியோ இருவரும் இணையராக இணைந்திட முடிவெடுத்துவிட்டனர்.  அவளுக்கு யாருமில்லை. அவள் தன்னை பெண்ணாக அடையாளம் கண்டதும் பெற்றோரும் மற்றோரும் இவளை அவமானம் என அடையாளம் கண்டு விலக்கிவிட்டார்கள்.

ஆனால் அன்பழகனுக்கு எல்லோரும் உண்டு. படித்த குடும்ப பின்னணி. பார்ப்பதற்கே கையெடுத்து கூம்பிடும் குடும்ப தோரணை. கோவிலுக்கு போனால் கூட எப்போதும் சிறப்பு தரிசனம்தான். சில சமயங்களில் இவர்கள் குடும்பம் கோவிலுக்கு வந்தால்தான் சாமிக்கே கலை கட்டும் அந்தப் பூசாரிக்கும் கல்லா கட்டும். 

தன் அப்பா இப்படி ஒரே பேச்சில் ஒப்புக்கொண்டது அன்பழகனுக்கு ஆச்சர்யம். அப்பா மட்டுமல்ல வீட்டில் அனைவருக்குமே சம்மதம்தான். "அவளும் மனுஷிதானே. அவளுக்கும் மனசு இருக்கிறதுதானே. அதுமில்லாம நாம எந்தக் காலத்துல இருக்கோம்.. இது சயிண்ஸ் யுகம்.....கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்.. குழந்தைதானே பெத்துக்க முடியாது ... டெஸ்டியூப் பேபிக்கு போய்க்கலாம்....." என அன்பழகன் பேச வேண்டியதையெல்லாம் வீட்டில் பேசிவிட்டார்கள்.

அப்பாவும் சரி குடும்பத்தில் உள்ள அனைவரும் சரி. அன்பழகனிடம் கேட்ட ஒரே கேள்வி, "சரி சரி...... அந்தப் பொண்ணு என்ன ஜாதி".

அதற்கு அன்பழகன் சொன்ன பதில்தான் அல்டிமெட்;
"எல்லாம் நம்மாளுங்கதான். விசாரிச்சிட்டுதான் லவ் பண்ணவே ஆரம்பிச்சேன் பா...."


#தயாஜி

ஜூலை 01, 2023

- இரகசியம் -

                      - இரகசியம் - 

   இன்று லிங்கம் முதலாளி கடைக்கு வருவார். அவரிடம் இதனைக் கேட்டுவிட வேண்டும். பல நாட்களாக மனதில் வைத்து வைத்து, இனி முடியாது. சேகருக்கு இன்று ஒரு பதில் தெரிந்தாக வேண்டும்.

சில ஆண்டுகளாக இந்தச் சாப்பாட்டுக் கடையில் வேலை செய்கிறவர் சேகர். கடை திறப்பது முதல் கடை சாத்துவது வரை சேகர்தான். வடிவேலுக்கு 'நாய் சேகர்' என்றால் இந்தக் கடைக்கு இவர்தான் 'தாய் சேகர்'.

லிங்கம் முதலாளிக்கு சேகர் மீது அபார நம்பிக்கை. வாரம் ஒரு முறை மட்டுமே கடைக்கு வருவார். கல்லாப்பெட்டியில் அமர்வார். அந்த வார வருமானமாகச் சேகர் எவ்வளவு கொடுத்தாலும் குறை சொல்ல மாட்டார்.

இவ்வளவு நம்பிக்கை உள்ள முதலாளி, ஏன் கடையில் சிசிடிவியை வைத்திருக்கிறார் என சேகருக்கு ஒருநாள் சந்தேகம் வந்தது. அதுவும் அந்தச் சிசிடிவி பதிவைக் கடையில் எங்கும் பார்க்க முடியாது. ஒருவேளை லிங்கம் முதலாளி வீட்டிலிருந்தபடியே தன் கைப்பேசியில் பார்க்கலாம்.

லிங்கம் முதலாளி வந்தார். சேகரின் முகம் வாடியிருந்ததைக் கண்டவர், தானே அழைத்து விபரம் கேட்டார். சேகரும் மனதிலிருந்த சிசிடிவியைக் கேட்டுவிட்டார்.

முதலாளிக்குக் கோவம் வரவில்லை. மாறாகச் சிரிக்கலானார். சேகருக்கு ஏதும் புரியவில்லை.

அது சிசிடிவி அல்ல, சிசிடிவி மாதிரி என்பதை முதலாளி சொன்னார். தன் கடை பணியாளர்களின் மீது நம்பிக்கை கொண்ட முதலாளி, மற்ற வாடிக்கையாளர்களின் பார்வைக்கு இங்குச் சிசிடிவி இருப்பதாகக் காட்டினால் அவர்கள் நாகரீகமாக நடந்து கொள்வார்கள் என நம்பியிருந்தார். அதன்படியே இதுவரை வாடிக்கையாளர்களால் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. லிங்கம் முதலாளி சேகரின் தோளைத் தட்டி "உன்னை நம்பாமல் யாரை நம்புகிறேன்" எனச் சிரித்துவிட்டுப் புறப்பட்டார்.

சேகருக்கு மனசே சரியில்லை. இவ்வளவு நம்பிக்கை வைத்த முதலாளி மீது சந்தேகம் கொண்டோமே என மற்ற பணியாளர்களைக் கடிந்துகொண்டார்.

அன்றிரவு சேகருக்குத் தூக்கமே வரவில்லை. சிசிடிவியும் முதலாளியின் சிரிப்புமே வந்து வந்து போனது.

மறுநாள் சேகர் கடையைத் திறக்கவில்லை. வேலைக்கும் வரவில்லை. கல்லாப்பெட்டியும் சேகரும் காணாமல் போய்விட்டார்கள் எனத் தெரிந்தால் லிங்கம் முதலாளி என்ன செய்வார்.

#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்