பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 14, 2016

கதை வாசிப்பு - 29 'எங்கே அந்த வெண்ணிலா'

கதை வாசிப்பு 29

ஞாயிறு மக்கள் ஓசையில் (11/12/2016) 'எங்கே அந்த வெண்ணிலா ' சிறுகதையை சரஸ்வதி வீரபுத்திரன் எழுதியுள்ளார்.

கதைச்சுருக்கம் கொடுப்பதற்கு பதிலாக இக்கதையை ஒற்றை வாக்கியத்தில் சொல்லிவிடலாம்.

கதை  - தனிமையில் இருக்கும் பெண்ணுக்கு முகநூலில் புதிய  தோழியால் நிம்மதி கிடைக்கின்ற போதில் அத்தோழி இறந்துவிட மீண்டும் தனிமையாகிறாள் நாயகி.

கதை குறித்து ,
 தற்சமயம் தொடர்பில் இல்லாமல் போன காவியாவின் நினைவில் இருந்து கதையை தொடங்கியுள்ளார் . அத்தொடக்கம் வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது. ஆனால் அந்த ஆவலை கடைசிவரை காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் கேள்வி.

கணவன் விட்டுச்சென்றுவிட்டார். பல்கலைக்கழகம் படிக்கும் பிள்ளைகளும் விடுமுறைக்கு மட்டுமே வருகிறார்கள். மற்றபடி தனிமையில் இருக்கும் நாயகிக்கு முகநூலிலும் காவியா நட்பாகிறாள். தனிமை குறித்தும் தனிமையில் நாயகியின் மனநிலை குறித்தும் சரியாக சொல்லப்படாததால் , முகநூல் நட்பு அவ்வளவு முக்கியத்துவமாகப்படவில்லை.

திடீரென தொடர்பில் இல்லாமல் போகும் காவியா குறித்து நாயகி முகநூலில் தேடாமல் தொடர்ந்து தொலைபேசியிலேயே அழைத்து முயல்கிறாள் நாயகி.

சில நாட்களுக்கு பிறகு காவியாவின் கைபேசியில் ஆணின் குரல் பதில் சொல்கிறது. காவியாவின் அண்ணன் என அறிமுகம் செய்துகொண்டு அந்நபர் பேசுவது நாடகத்தன்மையாக அமைந்துவிட்டது இக்கதையில் முக்கிய பலவீனம் என கருதுகிறேன்.

 இயல்பாகவே சிறுகதைகளில் வரும் உரையாடல்கள் மீது எழுதுகின்றவர்களுக்கு  அக்கறை குறைவாகவே இருக்கிறது .

பொதுவாக இங்கு, உரையாடல்களில் ஏற்படும் கவனக்குறைவு குறித்து பார்க்கலாம்.

1. உரையாடலுக்கும் கதைக்கும் ஒரே மொழிநடை.

2. உரையாடுபவர் எதார்த்தமாக பேசாமல் நாடகத்தன்மையாக பேசுவார்.

3. சில கதைகளுக்கு முக்கிய திருப்பத்தை உரையாடல் மூலம் கொடுப்பதாக நினைத்து சொதப்பியிருப்பார்கள்.

4. கதாப்பாத்திரத்தன்மைக்கு புறம்பாக அவர் உரையாடுவார்.

இவ்வளவு போதும் . கதைக்குச்செல்வோம்.

இக்கதையில் கூட முக்கிய திருப்பத்தைக் கொடுக்கக்கூடிய அண்ணனின் தொலைபேசி உரையாடல் அதன் தன்மையைக் காப்பாற்றவில்லை.

இறப்பதற்கு முன்பாக காவியா ஏன் நாயகிக்கு அத்தனை நெருக்கமாக அன்பு பாராட்டினாள்  என்ற கேள்வியை  அவளுக்கான இரங்கல் கவிதையை முகநூலில் போட்டுவிட்டு அவள் ஆத்மா சாந்தியடையும் என நம்பிக்கை கொள்வதாக கதையை முடித்திருக்கிறார். பலவீனமான முடிவை இக்கதை கொண்டிருக்கிறது.

இன்னும் முயன்றிருந்தால் சில இடங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் இக்கதை இன்னும்கூட சிறந்த கதையாக வந்திருக்கும் வாய்ப்புள்ளது.



- நன்றி

செப்டம்பர் 01, 2016

கதை வாசிப்பு 28- என்னமோ ஏதோ..?

கதை வாசிப்பு 28- என்னமோ ஏதோ..?


   ஆகஸ்ட் மாத மக்கள் ஓசையில் (2016), தேசிய தின சிறப்புச் சிறுகதையாக வந்துள்ள சிறுகதை 'என்னமோ, ஏதோ..?'.
சிப்பாங் எம்.ராஜசேகரன் எழுதியுள்ளார் . இவரின் எழுத்தை நாளிதழில் வாசிப்பது இதுதான் முதன் முறை . ஆனாலும் நம்பிக்கைக் கொடுத்துள்ளார் . சமீபத்தில் இப்படியான திரில்லர் கதையைப் நம் நாளிதழ்களில் வாசிக்கவில்லை. 


கதைச்சுருக்கம் 

   கோலாலம்பூர் பேரங்காடியில் மோட்டார் ஒன்று ஆபத்தைக் கொடுக்கும் விதமாக போகிறது. காவலர்களை அங்குள்ள சீசீடிவியை பார்க்கிறார்கள். பின்னோக்கி ஒவ்வொரு காட்சியாக பார்க்கும் அவர்களுக்கு அதிர்ச்சி கிடைக்கிறது . சந்தேகம் ஏற்பட மோட்டார் ஓட்டியை பின் தொடர்கிறார்கள். மோட்டார் அசுர வேகத்தில் தப்பித்துச் செல்கிறது .

   பேரங்காடியில் வெடிகுண்டு வைத்திருப்பது தெரிய வருகிறது. காவல்துறையினர் அவ்விடத்தில் இருந்து மக்களை அப்புறப்படுத்துகிறார்கள். அவ்விடம் பரபரப்பாகிறது .சமூக வலைத்தளங்களில் அம்மோட்டாரோட்டி குறித்து தகவல் அனுப்பப்படுகிறது . 

  அந்த மோட்டார் தப்பித்து, ஒற்றையடி பாதையில் சென்று நிற்கிறது . அங்கு ஒரு பெண் இவனுக்காக காத்திருக்கிறாள் . தன் காதலன் சில நாட்களாக தன்னிடம் பேசவில்லை என்பதால், தன்னை யாரோ கடத்திவிட்டார்கள் என குறுஞ்செய்தி அனுப்பியதாக சொல்லிச்சிரிக்கிறாள். அவன் அவளை அறைந்துவிடுகிறான். அவளுக்கு அவனது அறையும் அவனது பதட்டமும்  புதிதாக இருந்தது.

   மேலிடம் ஏற்கனவே அவனிடம் எச்சரிக்கை விட்டிருந்தது . உணர்ச்சிவசப்பட்டால் எடுத்த காரியம் முடிக்க முடியாதென. அங்கிருந்து அவன் விரைந்து செல்ல முயன்று விபத்துக்குள்ளாகி  மாட்டிக்கொள்கிறான்.

   காதலியும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறாள். வெளியூரில் இருந்து வந்த மாணவன் என மட்டுமே அவளுக்கு அவனைப்பற்றி தெரிந்துள்ளது. பணக்கார குடும்பம் என்பதால் அவள் விடுவிக்கப்படுகிறாள். காரில் செல்லும்போதும் இனி அவன் குறித்து பேசக்கூடாது என தந்தை கட்டளையிட்டுவிட்டார்.

  அவன் சுயநினைவு இன்றி பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனையில் இருக்கிறான். அவனது தலைவன் அவனை கொள்வதற்காக ஏற்பாடுகளை செய்யச்சொல்லிவிட்டான். 

  சிகிச்சை அவனை சுயநினைவுக்கு அழைத்துவருகிறது. காவல் துறையினருக்கு புது நம்பிக்கை கிடைக்கிறது . நிறைவாக அந்த காலையில் பெரங்காடி பாதை திறக்கப்படுகிறது. நாட்டில் 59 தின சுதந்திரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


கதையைக்குறித்து 

  இக்கதையில் இருக்கும் பலவீனங்களை முதலில் பார்க்கலாம்.திரில்லர் கதைகளுக்கு பரபரப்பு மிக முக்கியம் . அந்த பரபரப்பு கொடுக்கும் சுவாரஷ்யம் மிக முக்கியம் . இக்கதையில்  பெரும்பாலான வாக்கியங்கள் நீளமாகவே உள்ளன.

  உதாரணமாக முதல் பத்தியைச் சொல்லலாம். தொடக்கமே பரபரப்பில் இருப்பது அவசியம். இதன் தொடக்கம் ஆறு வரிகளாக ஒரே வாக்கியத்தில் அமைந்திருக்கிறது . நீளத்தை உடைத்து மூன்று வாக்கியங்களாக ஆக்கியிருக்கலாம். இவ்வகை சிக்கல் கதையில் ஆங்காங்கே தென்பட்டு விறுவிறுப்பை தடை செய்கிறது.

   இக்கதையின் பலம் இக்கதையில் இருக்கும் வேகம். 59வது சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்கு முன் நாட்டின் அமைதியை கெடுக்கும் கூட்டம் குறித்து இக்கதை பேசுகிறது . பணக்கார குடும்பம் என்பதால் விசாரணையில் இருந்து தப்பிப்பது,  வெளியூரில் இருந்து வந்திருப்பவன் குறித்து எதுவும் தெரியாமல் காதல் வலையில் விழுவது போன்றவையை இக்கதை கவனப்படுத்துகிறது.

   இக்கதை என்னை கவர்ந்திருப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு. பொதுவானப்பார்வையில் காவல்துறையினரின் சாகசங்கள் குறித்து சொல்வதுபோல இருக்கிறது . ஆனால் அது அப்படியல்ல என்றே எண்ணுகிறேன்.

  அந்த மோட்டார் அசுர வேகத்தில் மற்றவருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சென்றதுதான் காவல் துறைக்கு சந்தேகத்தைக் கொடுத்தது . அதன் பிறகே சீசீடிவியை பார்த்தார்கள். பின்னர் அதனைப் பின்னோக்கிப் பார்த்து அவன் குண்டு வைத்தது கண்டுபிடிக்கப்படுகிறது . 

  அந்த மோட்டார்க்காரனுக்கு அவனது காதலி ஆபத்தில் இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பியதுதான் அவனது அந்த பரபரப்புக்கும் வேகத்துக்கும் காரணம் . இல்லையெனில் எந்த பரபரப்பும் இன்றி சகஜமாக குண்டு வைந்துவிட்டு சாகவாசமாக வெளிவந்து அந்த குண்டை வெடிக்க வைத்திருப்பான் . 
நாட்டின் சுதந்திரம் உயிர்பலிகளைக் கொண்டிருக்கும். மறைமுகமாக இச்சிறுகதை எதை விமர்சிக்கிறது என வாசக மனம் கருத்தில் கொள்ளவேண்டும்.

நிறைவாக,

  எழுத்தாளர் தொடர்ந்து எழுதவேண்டும் . அவரிடம் இருந்து இன்னும் எதிர்ப்பார்க்கலாம்.

- தயாஜி-

கதை வாசிப்பு 27 - குளவி

 கதை வாசிப்பு 27 - குளவி

ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழில் உமா மகேஸ்வரியின் குளவி என்னும் சிறுகதை வந்துள்ளது. மூன்று பக்க கதைதான்.  

   இன்னமும் பெண்களை அவளின் உடல் கொண்டு அறியும் ஆண்களின் மனப்போக்கையும் அதன் மூலம் பெண்ணுக்கு ஏற்படும் உளவியல் துன்பத்தையும் காட்டுகிறது.

கதை.

   அழைப்பு மணியோசையுடன் கதை தொடங்குகின்றது. கதவை திறக்க யாருமில்லாதது அதிர்ச்சியைக் கொடுக்கிறது. குழப்பத்தில் இருப்பவளின் காதில் குளவியின் ரீங்காரம் கேட்கிறது. பின்னர் வீட்டில் குளவி கூடை கண்டுபிடிக்கிறாள். அதனை சுத்தம் செய்ய சொல்கிறாள். குளவி கூடு கட்டினால் நல்லது என சொல்லும் வேலைக்காரியிடம் அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்கிறாள். 

    குளவி, மணல் , கூடு போன்ற விசித்திர கனவுகளால் இம்சைக்கு ஆளாகிறாள். கணவனிடம் சொல்கிறாள். கணவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மகன் பள்ளிக்கும் கணவன் அலுவலமும் செல்கிறார்கள்.

 மருத்துவ பரிசோதனைக்கு செல்கிறாள். சிகிச்சை தன்னை பாதியாக்கிவிட்டதை உணர்கிறாள். இனி அவள் பாதிப்பெண்தான் என்கிறாள்.

   இரவில் அவளது கழுத்தில் முத்தமிட்டு ரவிக்கையின் பித்தான்களை அவிழ்த்த கணவன் அரைபட்டவன் போல அவளிடமிருந்து விலகி அறையைவிட்டு வெளியேறுகிறான். அவள் மெதுவாக எழுந்து மேலாடையை விலக்கி கண்ணாடி முன் நிற்கிறாள். கரிய வெற்றிடம் தெரிய அவள் தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.

கதையைக்குறித்து,

 சட்டென இக்கதை எனக்கு பிடிகொடுக்கவில்லை. இருந்தும் ஏதோ ஒன்றைத் தவறவிடக்கூடாதென எனக்கு தோன்றியது. மீண்டும் கதையை ஒவ்வொரு வரியாக படிக்க அரம்பித்தேன். இப்போது கதையின் கடைசி வரை என் முகத்திலும் அரைந்தது.

   கதையை புரிந்துக்கொண்டேன். அவள், ஏதோ காரணத்தால் மார்பகங்கள் அகற்றப்பட்டுவிட்டாள். குளவி கூடை தன் மார்பின் படிமமாகத்தான் அவள் பார்க்கிறாள். அதுதான் அவளின் உளவியல் சிக்கலாக அமைந்துவிட்டிருக்கிறது. தன் உடலில் இருந்து அகற்றப்பட்டுவிட்ட மார்பகத்தால் தான் இனி பாதிப்பெண்தான் என அவளை நம்ப வைத்திருப்பது சமூக அவலங்களில் ஒன்றாகவே பார்க்கிறேன். 

  மார்பக புற்றுநோய்களின் விளைவாக மார்பகங்கள் அகற்றப்பட்ட பெண்கள் மேலாடையின்றி புகைப்படம் எடுத்து விழிப்புணர்வுக்காக பிரசுரிக்கும் இக்காலத்திலும் ஒரு பெண்ணை அவளில் உடல் மூலமே அவளை பெண்ணாக பாவிக்கும் அவல நிலையைத்தான் இக்கதை சொல்கிறது. குழந்தை பெற்ற பின்னரும் கூட அவளிடமிருந்து விலகிப்போகும் கணவன் தான் நம் சமூகத்தின்  உருவம். 
இதுதான் காரணம் என சொல்லியிருந்தால் கூட இக்கதை நம்மை இவ்வாறு யோசிக்க வைத்திருக்காது.

   சொல்லவந்த விசயத்தை சொல்லாமல் சுற்றியும் அமைந்துள்ள சிக்கலைச் சொல்லி வாசகனை அதன் மையத்தை நோக்கி அழைத்துச்செல்வதில் எழுத்தாளர் வெற்றிகண்டுள்ளார். 

 நல்ல கதையைப் படித்துவிட்டத் திருப்தியை வாசக மனம் உணர்கிறது.


-தயாஜி

ஆகஸ்ட் 24, 2016

கதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி

கதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி

   ஆகஸ்ட் மாத (2016) உயிர்மையில் வந்திருக்கும் மொழிப்பெயர்ப்பு சிறுகதை. மலையாளத்தில் அர்ஷாத் பத்தேரி எழுதியுள்ளதை ஶ்ரீபதி பத்மநாபா தமிழாக்கம் செய்துள்ளார்.

   இப்போதெல்லாம் ஶ்ரீபதி பத்மநாபா மொழிபெயர்த்த கதையென்றால் நம்பிக்கையாக படிக்கலாம் என தோன்றுகிறது . தொடர்ந்து அவ்வாறான முக்கியத்துவம் கொண்ட கதைகளையே அவர் தமிழாக்கம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கதை.

    தன்னிடம் வரும் நோயாளிகள் யாராயினும் அவர்களின் இதயத்தை லேபுக்கு மாற்றுகிறார். பின்னர் அவர்களுக்கு  பிளாஸ்டிக் இதயத்தை பொருத்துகிறர் . விரைவாகவே நல்ல இதயத்துக்கு தட்டுப்பாடு வரப்போவதாகய்வும் தன்னைச்சார்ந்தவர்கள் இதயத்தை தேடி அலையும் நிலை வரக்கூடாது என்கிறார்.
 அவரின் செயலுக்கு மனதால் சம்மதமின்றி உதவியாய் இருக்கிறார் மேரி.

   தன் தங்கை உட்பட , கறுத்த அழகிகள், ஆரோக்கியமான ஆண்கள் என பலரின் இதயத்தையும் களவாட உதவிய மேரிக்கு மருத்துவரை விருப்பத்தை உடைக்க முடியவில்லை. 

    இதயம் மாற்றப்பட்ட சிலர் மருத்துவரை சந்திக்கிறார்கள். அவர்களால் அழமுடியவில்லை. சிரிக்க முடியவில்லை. கனவுகள் வருவதில்லை என்று புகார் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு ஆயுட்கால கேரண்டி மட்டுமே கொடுக்க முடியும் என்கிறார் மருத்துவர் ஜோ. இம்முறை அவரது குரலில் கட்டளை தொனி இருக்கிறது.

    நிறைவாக மருத்துவர் தனக்கு இதுவரை உதவிவந்த தாதி மேரியின் இதயத்திற்கு வருகிறார். மேரி மருத்துவரிடம் அவளது கடைசி ஆசையாக அவரின் இதயத்தை பார்க்கச்சொல்கிறார் .

  மருத்துவர் அவரின் இதயத்தைப் பார்க்கிறார்.  ரத்தம் சதை இல்லாத பிளாஸ்டிக் இதயம். அழுகிறார் . சிரிக்கிறார் . 
  
     பின்னர் அவரது ஒவ்வொரு உணர்ச்சியாக கழன்று விழுகிறது . ஏதுமில்லாமல் ஆகிறார்.
கதை இவ்வாறு முடிகிறது.

கதையைக்குறித்து ,

   தலைப்பு படிக்கும் ஆவலைத்தூண்டுகிறது. கதையின் போக்கை யூகிக்க முடியாத்து அதன் பலம்.

  இக்கதையை பலவாறு பார்க்கலாம் எனத்தோன்றுகிறது . இக்கதையினை நான் எவ்வாறு பார்க்க நினைக்கிறேனெனில் ,
மற்ற இதயங்களை களவாடி, பிளாஸ்டிக் இதயம் பொருத்தி அவர்களின் உணர்ச்சியை மழுங்கச்செய்து இயந்திரம் போல நடமாடவைக்கிறார் மருத்துவர் . தனக்கு பல நாள் உதவியாக இருப்பவரின் இதயத்தை களவாட முடிவெடுக்கிறார். அவரின் இதயத்தையும் யாரோ களவாடி பிளாஸ்டிக் இதயத்தை பொருத்தியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகி தன் உணர்ச்சிகளை இழக்கிறார்.

   நாம் மற்றவர்க்கு என்ன செய்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். நம் குரோதம் பழியுணர்ச்சி நமக்கானதாக இல்லாமல் யாருக்கோ நாம் பலியாடாகிவிடுகிறோம். மருத்துவர் அவர் சார்ந்தவர்களுக்காக இதயத்தை களவாடி வைக்கிறார் . அவராக செயல்படுவதாக நினைக்கிறார். தான் செய்யும் ஆய்வில் வேற்றி பெறுவதாக நினைத்தாலும் அவர் யாருக்காகவோ அதனை செய்கிறார்.

   யோசிக்கையில் நாமும் பல சமயங்களில் நமக்கான செயல்களாக நினைத்து யாருடைய புத்திசாலித்தனத்திற்கோ நம்மையும் சேர்த்து  பலியாகிக் கொண்டிருக்கிறோம்.


-தயாஜி-

கதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி

கதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி

   ஆகஸ்ட் மாத (2016) உயிர்மையில் வந்திருக்கும் மொழிப்பெயர்ப்பு சிறுகதை. மலையாளத்தில் அர்ஷாத் பத்தேரி எழுதியுள்ளதை ஶ்ரீபதி பத்மநாபா தமிழாக்கம் செய்துள்ளார்.

   இப்போதெல்லாம் ஶ்ரீபதி பத்மநாபா மொழிபெயர்த்த கதையென்றால் நம்பிக்கையாக படிக்கலாம் என தோன்றுகிறது . தொடர்ந்து அவ்வாறான முக்கியத்துவம் கொண்ட கதைகளையே அவர் தமிழாக்கம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கதை.

    தன்னிடம் வரும் நோயாளிகள் யாராயினும் அவர்களின் இதயத்தை லேபுக்கு மாற்றுகிறார். பின்னர் அவர்களுக்கு  பிளாஸ்டிக் இதயத்தை பொருத்துகிறர் . விரைவாகவே நல்ல இதயத்துக்கு தட்டுப்பாடு வரப்போவதாகய்வும் தன்னைச்சார்ந்தவர்கள் இதயத்தை தேடி அலையும் நிலை வரக்கூடாது என்கிறார்.
 அவரின் செயலுக்கு மனதால் சம்மதமின்றி உதவியாய் இருக்கிறார் மேரி.

   தன் தங்கை உட்பட , கறுத்த அழகிகள், ஆரோக்கியமான ஆண்கள் என பலரின் இதயத்தையும் களவாட உதவிய மேரிக்கு மருத்துவரை விருப்பத்தை உடைக்க முடியவில்லை. 

    இதயம் மாற்றப்பட்ட சிலர் மருத்துவரை சந்திக்கிறார்கள். அவர்களால் அழமுடியவில்லை. சிரிக்க முடியவில்லை. கனவுகள் வருவதில்லை என்று புகார் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு ஆயுட்கால கேரண்டி மட்டுமே கொடுக்க முடியும் என்கிறார் மருத்துவர் ஜோ. இம்முறை அவரது குரலில் கட்டளை தொனி இருக்கிறது.

    நிறைவாக மருத்துவர் தனக்கு இதுவரை உதவிவந்த தாதி மேரியின் இதயத்திற்கு வருகிறார். மேரி மருத்துவரிடம் அவளது கடைசி ஆசையாக அவரின் இதயத்தை பார்க்கச்சொல்கிறார் .

  மருத்துவர் அவரின் இதயத்தைப் பார்க்கிறார்.  ரத்தம் சதை இல்லாத பிளாஸ்டிக் இதயம். அழுகிறார் . சிரிக்கிறார் . 
  
     பின்னர் அவரது ஒவ்வொரு உணர்ச்சியாக கழன்று விழுகிறது . ஏதுமில்லாமல் ஆகிறார்.
கதை இவ்வாறு முடிகிறது.

கதையைக்குறித்து ,

   தலைப்பு படிக்கும் ஆவலைத்தூண்டுகிறது. கதையின் போக்கை யூகிக்க முடியாத்து அதன் பலம்.

  இக்கதையை பலவாறு பார்க்கலாம் எனத்தோன்றுகிறது . இக்கதையினை நான் எவ்வாறு பார்க்க நினைக்கிறேனெனில் ,
மற்ற இதயங்களை களவாடி, பிளாஸ்டிக் இதயம் பொருத்தி அவர்களின் உணர்ச்சியை மழுங்கச்செய்து இயந்திரம் போல நடமாடவைக்கிறார் மருத்துவர் . தனக்கு பல நாள் உதவியாக இருப்பவரின் இதயத்தை களவாட முடிவெடுக்கிறார். அவரின் இதயத்தையும் யாரோ களவாடி பிளாஸ்டிக் இதயத்தை பொருத்தியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகி தன் உணர்ச்சிகளை இழக்கிறார்.

   நாம் மற்றவர்க்கு என்ன செய்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். நம் குரோதம் பழியுணர்ச்சி நமக்கானதாக இல்லாமல் யாருக்கோ நாம் பலியாடாகிவிடுகிறோம். மருத்துவர் அவர் சார்ந்தவர்களுக்காக இதயத்தை களவாடி வைக்கிறார் . அவராக செயல்படுவதாக நினைக்கிறார். தான் செய்யும் ஆய்வில் வேற்றி பெறுவதாக நினைத்தாலும் அவர் யாருக்காகவோ அதனை செய்கிறார்.

   யோசிக்கையில் நாமும் பல சமயங்களில் நமக்கான செயல்களாக நினைத்து யாருடைய புத்திசாலித்தனத்திற்கோ நம்மையும் சேர்த்து  பலியாகிக் கொண்டிருக்கிறோம்.


-தயாஜி-

ஆகஸ்ட் 21, 2016

கதை வாசிப்பு 25 - கதவு

கி.ராஜநாராயணனின் 'கதவு'


முதலில் இச்சிறுகதை இத்தனை ஆண்டுகளாகியும் பேசப்படுவது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. இக்கதை சொல்வது ஓர் ஏழ்மை குடும்பத்தைப்பற்றி. வெளியூருக்கு வேலைக்கு போன தந்தை, போனவர் போனவர்தான். ஐந்து மாதங்கள் ஆகியும் எந்த விபரமும் இல்லை. ஒரு சிறுமி ஒரு சிறுவன் ஒரு கைக்குழந்தையை வைத்திருக்கும் அம்மா எதிர்கொள்ளும் சிக்கல்தான் கதை.

 அப்படியொன்றும் கதையில் இருப்பதாக தெரியவில்லையே என்கிற நினைப்பு வராததற்கு எழுத்தாளர் கையாண்டிருக்கும் படிமமும் வாசகர்களை யார் மீது கவனம் வைக்கவிடுகிறார் என்பதும் முக்கிய காரணமாகிறது.

இந்த மாதிரி வறுமையைச் சொல்லும் கதைகள் ஏராளம் உண்டு ஆனால் இக்கதை அதில் இருந்து தன்னை மாறுபடுத்திக்காட்டுகிறது. கதவின் பயன்பாடுதான் அதற்கான காரணம் .

கதவு. இதுவரை திறக்கவும் மூடவும் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் நமக்கு கதவை படிமமாக்கி அதற்குள்ளே ஆன்மாவை மறைத்து வைத்திருக்கிறார் கி.ரா .

இக்கதவு குழந்தைகளுக்கு ரயில் , சிறுமிக்கும் சிறுனுக்கும்  அப்பா, கைக்குழந்தைக்கு பாதுகாப்பு, வீட்டிற்கு கௌரவம். குழந்தைகளால் மட்டுமே ஜடப்பொருள்கள் மீது தாங்கள் விரும்பும் ஒன்றை ஏற்றி வைத்துக் கொண்டாட முடிகிறது.

குழந்தைகளுக்கும் கதவுக்குமான ஆத்மார்த்தமான உறவு இக்கதையை இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 இப்போதெல்லாம் கதவின் மீது கைபடாதவாறு ரிமோட்டில் அதனை இயக்குகிறோம். இக்கதை மனிதன் தொலைத்துக்கொண்டிருக்கும் வாழ்வின் அர்த்தத்தை காட்டுவதாகவே மனதில் படுகிறது. இக்கதையை படித்து முடித்தபின் என் வீட்டுக்கதை ஒருமுறை ஆழமாக தொட்டுத் தடவிப் பார்க்கிறேன். சட்டென கதவு என்னையும் குழந்தையாக்கி ரயில் ஏற அழைக்கிறது.


-தயாஜி-

கதை வாசிப்பு 24 - பிரயாணம்

அசோகமித்திரனின் பிரயாணம்.

     குரு, சீடன்,ஓநாய்களைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது .குருவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பலகை மீது தன் குருவை வைத்து இழுத்துப்போகிறான் சீடன். கடந்துச் செல்லவேண்டிய தூரம் முன்பை விட இப்பொழுது அதிகமாகப் படுகிறது. இடையில் ஓநாய்களை சீடன் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

    பயண்த்தில் எதிர்பாராதவிதமாக குரு இறந்துவிடுகிறார்.  சிகிச்சைக்காக தொடங்கிய பயணம் பின்னர் குருவை சமபரப்பில் புதைக்கவேண்டிய நோக்கமாக மாறுகிறது.

     பயணத்தின் அடுத்த இரவில் ஓநாய் கூட்டங்களொடு சிஷ்யன் போராடும் சூழல் ஏற்படுகிறது. அதற்கிடையில் சில ஓநாய்கள் குருவின் சடலத்தை பள்ளத்தாக்கில் போட்டுவிடுகிறது. மயங்கி விழுந்துவிட்ட சிஷ்யன் மறுநாள் அதிர்ச்சிக்கொண்டு எழுகிறான் . குருவின் உடலைத்தேடி பள்ளத்தாக்குக்கு போகிறான். ஓநாய்கள் தின்று மிச்சம் வைத்திருந்த உடலை காண்கிறான் சிஷ்யன்.
ஆனால் குருவின் கையில் கட்டியிருந்த துணி அறுபட்டுக் கிடந்தது. ஒரு ஓநாயின் கால்
அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு,  குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது. கதை அங்கு முடிகிறது .

     அப்படியெனில் குரு இறக்கவில்லையோ என்கிற சந்தேகம்  வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

    மீண்டும் ஒரு முறை கதையை மனதிற்குள் அசைபோட்டேன் . குரு,சிஷ்யன்,ஓநாய்,நிஜம்,  நம்பிக்கை போன்றவை மனதில் வந்து நிற்கிறது.

    குருவின் சிகிச்சைக்கான பயணத்தில் குரு இறந்துவிட்டதாக சிஷ்யன் நம்புகிறான் . அதனை அவன் பரிசோதிக்கவில்லை. பரிசீலனையும் செய்யவில்லை. தான் நம்பியதற்கு ஏற்றார் போல தன் பயண நோக்கத்தை மாற்றுகிறான் . அதே பயணம்தான் ஆனால் இப்போது அதன் நோக்கம் மாறிவிட்டிருக்கிறது.

    ஆன்மிக தேடலை இதைக்கொண்டு அணுக நினைக்கிறேன். தனக்கு போதிக்கப்படும் போதனைகளை எந்த பரிசீலனையும் இன்றி எந்த கேள்வியும் இன்றி பின்தொடரும் மனிதன் . குருவின் இறப்பை தவறாக புரிந்துகொண்டு ஓநாய்களுக்கு இரையாக்கியது போல கிடைக்கவேண்டிய  ஞானத்தை தவறான புரிந்துணர்வின் மூலம் கேள்விகளற்று எதற்கோ இரையாக்கிவிடுகிறோம். அர்த்தமின்றி வாழ்வில் நாமும் கூட ஓநாய்களோடு போராடிக்கொண்டிருக்கிறோம்.

-தயாஜி-

ஆகஸ்ட் 20, 2016

கதை வாசிப்பு 23 - அக்னி


கதை வாசிப்பு 23


 

     அக்னி மற்றும் பிற கதைகள் என்ற சிறுகதை தொகுப்பை படித்தேன். ஸிதாரா.எஸ் எழுதிய மலையாள கதைகளின் தமிழாக்கம் . முதல் கதையானஅக்னிஎன்னும் கதை என்னை பீதி கொள்ள செய்தது. இப்படியொரு கதையை சமீபத்தில் படித்ததாய் நினைவு இல்லை. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு மாதிரியானதுதான்.  ஆனால் அக்கதையில் இருக்கும் புதுமையை வாசகர் கண்டுக்கொள்வார்காள்.

    ஒரு பெண் மூன்று நபர்களால் கற்பழிக்கப்படுகிறாள். அப்போது அவளுக்கு மாதவிடாய். அவளின் ஆடைகளை கிழித்தெறியும்  சமயம் சில நொடி அதிர்ச்சியில் அவர்கள் ஸ்தம்பிக்கின்றார்கள். ஆனாலும் அவளது ஆடையினை அவர்களால் முழுமையாக அவிழ்க்கப்படுகிறது. உலகில் மிகவும் அவமானப்பட்ட பெண்ணாக அவள் ஆகிறாள். இருவரும் அவளை பழிவாங்க மூன்றாவது பதின்ப வயது பையனையும் சேர்த்துக் கொண்டார்கள். அவனும் அவனால் முடிந்ததை அவளுக்கு செய்கிறான்.
 
    அவள் வீடு செல்கிறாள். மறுநாள், அலுவலகம் செல்ல வாசலில் அவளுக்கு அந்த இருவர் காத்திருந்தார்கள். குரூரம் கொண்ட கண்களுடன் விசயத்தை வெளியில் சொன்னால் அவளுக்கும் அவளது குடும்பத்தினர்க்கும்  ஆபத்தென எச்சரித்து, வன்மத்துடன் முதல் நாளை குறித்து கேட்டு சிரிக்கிறார்கள். அவள் சில வினாடிகளில் அவர்களின் கண்களையே உற்று நோக்கி , ஒருவனை பார்த்து இவ்வாறு சொல்கிறாள். “நீங்க ரொம்பவும் போராயிரிந்திங்க, உங்களுக்கு வீரியம் குறைவாக்கும் ஒரு பொண்ணை பூரணமா திருப்தி படுத்த உங்களால முடியும்னு எனக்கு தொணலஎன்று கூறி மற்றொருவனை பார்த்து நீதான் சரியான ஆம்பள உன்னை எனக்கு பிடிச்சிருக்கு  என்கிறாள். 

    முதலாமவன் தான் கொண்ட குரூர சிரிப்பை தொலைத்து பழியுணர்ச்சிக்கு ஆளாகிறான். இனி அவன் அடுத்தடுத்த நொடிகளை எப்படி கழிக்க போகிறான் என நினைக்கையில் வாசகர்களை அது பீதிக்குள்ளாக்கிறது. அவனது வாழ்நாளில் இனி எந்த பெண்ணையும் அவன் நெருங்கமாட்டான் என்றே தோன்றியது. அடுத்தவனுக்கான பழியுணர்ச்சியும் சில தினங்கள் அவள் ஏற்படுத்துகிறாள்.

  வாசர் மனதில் இக்கதை தங்கிவிடும் என்பது இக்கதையின் சிறப்பு. பெண்ணின் பலத்தை காட்டும் சிறுகதைகளில் இக்கதை தனித்து நிற்கும். தனக்கு ஏற்பட்ட வலியை அவமானத்தை இழுக்கை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் எப்படி பழிவாங்குகிறாள் என்பதை பார்க்கும்போது நமக்குள் இயல்பாகவே ஓரு அச்சம் ஏற்படுகிறது.


-தயாஜி-
 

 

 

ஆகஸ்ட் 10, 2016

கதை வாசிப்பு 22 - 'மத்திய சிறைவாசி எண் 3718'

கதை வாசிப்பு 22 -
 'மத்திய சிறைவாசி எண் 3718'

    விகடன் (10/8/16) இதழில் லஷ்மி சரவணகுமாரின் 'மத்திய சிறைவாசி எண் 3718' என்ற சிறுகதை வந்துள்ளது.

    இன்னொருவர் மனைவிமீதான ஈர்ப்பை காதலை வேறொரு கோணத்தில் இருந்து சொல்லியுள்ளார். கதை சொல்லப்பட்ட விதம் படிப்பவரின் மனதில் பாதிப்பைக் கொடுக்க தவறவில்லை.

கதை.

   சிறையில் இருக்கும் விஜிக்கு அமுதா எழுதிய கடிதத்தில் இருந்து கதை தொடங்குகிறது. அமுதாவின் கணவன் மனோ இராணுவத்தில் இருப்பவர். பாதிநாள் விடுமுறையில் ஊரிலேயே இருப்பார் அவர்களுக்கு ஆதிரா என்ற குழந்தையும் இருக்கிறது.
விஜி தன் மீது கொண்டிருக்கும் இனம் புரியாத ஈர்ப்பை புரிந்துக்கொண்டும் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாள் அமுதா.
அமுதாவின் கணவன் ஊரில் இருக்கும் போதெல்லாம் அவரை சந்திப்பதை தவிர்க்கிறான் விஜி. மனோ ஊர் திரும்பும்போது மட்டும் வழியனுப்ப வந்த விஜியை இராணுவத்தில் சேர்வதற்கு தயாராக சொல்லி வீட்டில் பழுது பார்க்கும் வேலை இருப்பதாகவும் சரி செய்ய ஆள் அனுப்பவும் சொல்லி விஜியின் தேவைக்கு பணம் கொடுக்கிறார் மனோ.
வீட்டில் அமுதாவும் குழந்தையும் மட்டும் இருக்கிறார்கள்.

   வீட்டிற்கு வந்திருந்த விஜி அமுதாவிற்கும் எதிர்பாராத விதமாக முத்தம் கொடுத்துவிடுகிறான். அதனை பெற்றுகொண்ட அமுதா சுயநினைவு வந்து அதனை தவிர்த்து அவனுக்கு இதெல்லாம் வயது கோளாறு அவன் மீது எந்த வெறுப்பும் இல்லையென்று அனுப்புகிறாள்.

   பின்னர் ஒரு நாள், ஊர் பிரச்சனையில் மனோ வெட்டிக்கொல்லப்படுகிறார்.
மனோவைக் கொலை செய்த இருவர்  நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுகிறார்கள். எதிர்பாராத விதமாக விஜி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு வெட்டிக்கொல்கிறான். அவ்விடமே கைதாகி கொண்டுச்செல்லப்படுகிறான். அங்கிருக்கும் கூட்டத்தில் அமுதாவை கண்டு அவள் மட்டு புரியும் விதம் புன்னகைக்கிறான்.

    சிறைச்சாலையிலும் அமுதாவிற்கு தொல்லை கொடுக்காமல் தானே தவறான வழிகளில் பணம் சம்பாதிக்க முயன்று பின்னர் காவலாளிகளால் தண்டிக்கப்படுகின்றான். வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றலாகிறான். அங்கு அவனை சந்திக்க வரும் அமுதாவுடனான உரையாடலில் அவள் இப்படியாக சொல்கிறாள், 'இனி நான் உனக்கு தேவையில்லாமல் இருக்கலாம் ஆனா நீ எனக்கு தேவை'.

    விஜிக்கு உணவு கொடுக்கும் முன்பாக அங்குள்ள விண்ணப்பத்தில் தன்னை விஜியின் மனைவி என குறிப்பிட்டு எழுதுகிறாள்.

கதை குறித்து,

    பொது புத்தியில் இருந்து மறக்கப்படும் மறுக்கப்படும் மனிதனின் கதையாக இதனைச்சொல்லலாம். சமூகம் சொல்லிக்காப்பாற்ற நினைக்கும் நன்னெறிகூறுகளை இதில் காண முயன்றால் இக்கதை மீது இயல்பாகவே ஓர் வெறுப்பு ஏற்படும்.

    கதை சொல்லும் விதம் வாசகர்களை கவர்ந்துள்ளது. யூகிக்க முடியாமலும் தான் யூகித்ததை நம்பாமலும் கதை செல்கிறது. உதாரணமாக விஜி கொலை செய்வான் என நாமே நம்புகிறோம். பின்னர் ஏன் கொலை செய்தான் என நம்ப மறுக்கின்றோம்.

    விஜிக்கும் அமுதாவுக்குமான ஈர்ப்பை அழகாகவும் நேர்த்தியாகவும் சொல்லியுள்ளார் எழுத்தாளர். கதை காட்சிகளாக கண் முன் விரிவது கதையின் பலம்.

    தன் கணவன் மனோவின் மரணத்தை அவள் எதிர்கொள்ளும் விதம் அவள் மீது நமக்கு பரிதாபத்தைக்கொடுக்கிறது. விஜி் தனக்கு கொடுத்த முத்தத்திலும் , பின்னர் விஜியின் மனைவி என தன்னை சொல்லிக்கொள்ளும் போதும் அமுதா மீது கோவமோ வெறுப்போ வரவில்லை.  அமுதா செய்தது சரியென விஜியின் வருகைக்காக நம்மையும் காக்க வைப்பது மூலம் கதையில் வென்றுள்ளார் லஷ்மி சரவணகுமார்.
இக்கதை அவரின் வாசகர்களை அதிகப்படுத்தும் என நம்பலாம்.


- தயாஜி

ஆகஸ்ட் 05, 2016

கதை வாசிப்பு 21- 'பிரிவென்ற உறவு'

கதை வாசிப்பு 21- 'பிரிவென்ற உறவு'

   ஆகஸ்ட் மாத மயில் இதழில் 'பிரிவென்ற உறவு' என்ற கதையை கூலிம் கேடாவைச் சேர்ந்த சு.சத்தியா எழுதியிருக்கின்றார். குறுங்கதை என்ற குறிப்புடன் இக்கதையை பிரசுரம் செய்திருந்தார்கள். ஆனால் சிறுகதைக்கான அம்சத்தையே இக்கதை கொண்டிருக்கிறது.

கதை.

    விவாகரத்து மனுவை நீதிபதி ஒத்தி வைக்குமிடத்தில் கதை ஆரம்பமாகிறது. கையெழுத்திட்டுவிட்டு மகள் அப்பாவையே பார்த்து ஏங்க, மகள் கனிமொழியை இழுத்துப்போகிறார் அம்மா. காரில் மகளுடன் செல்லும்போது எல்லாவற்றையும் மகளுக்காகத்தான் செய்தாலும் அப்பாவையே ஏக்கப்பார்வைப் பார்த்த மகளை கடிந்துக்கொள்கிறார். அந்நேரம் மகளை திசைதிருப்ப பூங்காவிற்கு வாகனத்தைச் செலுத்துகிறார்.
பூங்காவில் அம்மா கைபேசியில் இருக்க,  
     பழைய நினைவுகள் வர, அதனை ஒதுக்கி மீண்டும் நிகழ்காலத்துக்கு வருகிறார். கனிமொழிக்கு விளையாட இன்னொரு சிறுமி அங்கு கிடைக்கிறாள் அம்மாவின் பக்கத்திலேயே இருவரும் விளையாடுகிறார்கள். அவர்கள் பேச்சு அப்பா அம்மா குறித்து மாறுகிறது. கனிமொழி தன் பெற்றோர் பிரிந்ததை சொல்லிவிட்டு புதிய தோழியின் பெற்றோர் சண்டை போடுவார்களா என கேட்டுவிடுகிறாள். அதற்கு அந்த தோழி, சண்டை வரும், அம்மாவும் அப்பாவும் மாற்றி மாற்றி ஏசிக்கொள்வார்கள் பின்னர் அப்பா தன்னையும் கூட்டிக்கொண்டு இரவு உணவுக்கு பிறகு சமாதானமாகிவிடுவார்கள் என சொல்கிறாள். இதனையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கனிமொழியின் அம்மாவிற்கு சுறுக்கென்கிறது. எல்லோர் வீட்டிலும் இப்படித்தானோ , கணவர் ஏன் விட்டுக்கொடுக்கவில்லை பெண் என்றால் ஆண்களிடம் அடிமைப்பட்டிருக்கத்தான் வேண்டுமா இனி தான் சுதந்திரமாக வாழ போவதாக தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கனிமொழியை அழைத்துக்கொண்டு புறப்படுகின்றார்.
அச்சமயம் கனிமொழியின் புதிய தோழியின் பெற்றோர் வருவது தெரிகிறது. கனிமொழி அவர்களை மட்டுமே பார்க்கிறாள், கதை முடிகிறது.

கதை குறித்து.

    இக்கதையை வாசிக்கையில் அதன் முடிவு கனிமொழியின் அம்மா தன் தவறை உணர்ந்து கணவருடன் சேர்வதாக இருக்கும் என்கிற மனநிலையை மாற்றி இக்கதையை முடித்திருக்கிறார் எழுத்தாளர். இங்குதான் சிறுகதைக்கான அம்சத்தை உணர முடிகிறது. சிறுகதைக்கு என்ன தேவை. எந்த இடத்தில் திருப்பம் வைக்கலாம் போன்ற நுணுக்கம் இவருக்கு கைவந்துள்ளது. கதை தொடங்கிய இடத்தில் இருந்து முடிவை நோக்கி சோர்வின்றி வாசகர்களை அழைத்துச்செல்கிறது.

   அதோடு சிலவற்றை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இக்கதையில் வரும் சிறுமிகள் பாத்திரம் அதற்கேற்ற மொழியை பயன்படுத்தவில்லை. இதுபோன்ற கதைகளில் அல்லது குழந்தைகள் சிறுமிகள் பேசுவது போல இருந்தால் அவர்களின் மொழியைக் கவனிக்கவேண்டும். அவர்களின் உரையாடலில் இருக்கும் எதார்த்தமே சிறுகதைக்கு பலம் சேர்க்கும்.
தொடர்ந்த வாசிப்பும் தொடர்ந்த எழுத்தும் இவருக்கு நல்ல வழிகாட்டியாக அமையும். அதன் மூலம் நல்ல சிறுகதைகளை நமக்கு அவர் வழங்குவார் என நம்புகிறேன்.

அதோடு,

      இரு பக்க குறுங்கதைக்கு இப்படியான பகிர்வு வேண்டுமா என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். ஏனெனின் இருக்கும் காலம் கொஞ்சமோ என உள்ளூர பயம் கொஞ்சநாளாக இருந்துவருகிறது.
அரைபக்கமே இருந்தாலும் சிறுகதைக்கான கூறுகள் இருப்பின் அதனை கவனப்படுத்துவது அவசியம் என நினைக்கிறேன். வாசகரின் கடமையும் அதுதான். 


-தயாஜி

ஆகஸ்ட் 01, 2016

கதை வாசிப்பு 20 - 'தொடாத எல்லை'

      இவ்வார மலேசிய நண்பன் (2016 ஜூலை 31) நாளேட்டில் ந.பச்சைபாலன் எழுதியிருக்கும் 'தொடாத எல்லை ' என்கிற சிறுகதை வெளிவந்துள்ளது.

   நா.பச்சைபாலனின் கவிதைகளில் பழக்கமுள்ள நான் முதலாவதாக அவரது சிறுகதையை வாசிப்பது இதுதான் முதன் முறை. என் நினைவில் அவரின் வேறெந்த சிறுகதையும் பதிந்திருக்கவில்லை.

    கவிஞர்கள் சிறுகதை எழுதும் போது வாசகர்களுக்கு ஓர் இனிய அனுபவம் ஏற்படும். வாக்கியங்கள் கவிதைகளாகவும் காட்சி விவரணை ரசிக்கும்படியும் அமைந்து வாசகர்களை குதூகலப்படுத்தும். புதிய சொற்கள் கிடைக்கும். படிப்பவரும்  தான் சிறுகதையை வாசிப்பதை மறந்து கதைக்குள்ளாகவே ஈர்க்கப்பட்டுவிடுவார்கள். அப்படி நினைக்கையில் கவிஞர் ந.பச்சைபாலனில் இக்கதை ஏமாற்றிவிட்டது. அவரின் கவிதைகளில் வந்துவிழும் அழகுச்சொற்களை இங்கு காண முடியவில்லை. அல்லது தான் எந்த தருணத்தில் கவிஞனாக இக்கதையில் தெரிந்துவிடக்கூடாது என. வெகு கவனமாக இதனை எழுதியிருக்கலாம்.

கதை.

    மாலனுக்கு தாத்தாவின் கையெழுத்தில் புத்தகம் ஒன்று கிடைக்கிறது.  சயாம் மரண ரயில் தண்டவாளத்தில் வேலை செய்ததை அதில் பதிவு செய்திருக்கிறார் . அதனை கண்டதும் மாலனுக்கும் கதை கவிதை எழுதுவதில் ஆர்வம் எழுகிறது. மகனும் தாத்தாவை போல கதை பத்திரிகை என வீணாகிவிடுவானோ என அப்பா தடை போடுகிறார். மாலன் படித்து டாக்டராக வேண்டும் என்கிறார். அம்மா மாலனுக்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுக்கிறார் . மாலன் டியூசனுக்கு செல்லாமல் எழுத்தாளர் ஒருவரின் உரைக்கு செல்கிறான். வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் சிக்கிக்கொள்கிறான். அம்மா வந்து காப்பாற்றுகிறார் . மீண்டும் மீண்டும் டாக்டராக வேண்டும் என அப்பா சொல்ல , தாத்தாவழி தனக்கு கிடைத்திருக்கும் எழுத்து என்பது சொத்து. அதனை இழக்க மாட்டேன். இலக்கியத்தில் படித்து டாக்டர் பட்டம் பெறுகிறேன் என மாலன் பதில் சொல்லிவிடுகிறான். மாலனின் தெளிவான பேச்சு அம்மாவையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. எது எப்படியோ படிப்பும் முக்கியம் அங்கிருந்துதான் லட்சியத்தை அடைய முடியும் என அம்மா தன் பங்குக்கு சொல்லிவிடுகிறார். தாத்தா தொடாத எல்லையை தான் தொடவேண்டும் என எண்ணுகிறான்.


கதைக்குறித்து

     மாணவர்களை கருத்தில் கொண்டே கதை சொல்லப்பட்டிருக்கிறது. கதைச் சொல்லியைவிடவும் ஆசிரியரைத்தான் இக்கதை முழுக்க பார்க்க நம்மால்  முடிகிறது. 

   நிகழ்கால கதையைவிட , தாத்தாவின் புத்தகத்தில் இருக்கும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். தாத்தாவின் அனுபவம் சரியாகச் சொல்லப்படாததால் மாலனின் செயல்கள் மீது நாடகத்தன்மை மேலோங்கிவிடுகிறது. மாலனின் அப்பாவிற்கு தாத்தா மீதான வருத்தமும் விரிவாக்கமின்றி சட்டென கடந்து செல்வதும் பலவீனம்தான்.

  தாத்தாவின் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கும் எழுத்து பாணிக்கும் கதைச்சொல்லியின் கதைச்சொல்லும் எழுத்து பாணிக்கும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லை. தாத்தாவின் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்தை அவரின் வலியை சொல்லும் விதம் வாசகர்களை கவர்ந்திருக்க வேண்டும். கிழிந்த ஏடுகளில் இருப்பதை வாசிக்கும் மாலனின் மனநிலையை வாசகர்களும் உணர்ந்து பதட்டமடைய வேண்டாம். அந்த பதட்டம்தான் இக்கதையை வெற்றியடைய வைத்திருக்கும். கதையின் ஆழத்தை காட்டவேண்டிய இடம் அது, ஆனால் தவறிவிட்டது.  ஒரே ஆள் கதையை சொல்லிச்செல்வது வாசகர்களை கதையில் இருந்து அந்நியப்படுத்திவிடுகிறது.


நிறைவாக,

    எழுத்தாளரின் உள்ளிருக்கும் ஆசிரியருக்கு பதில் கவிஞர் வெளிவந்திருந்தால் இக்கதை முக்கிய கதையாக வந்திருக்கும். வாசகர்கள் மனதிலும் இக்கதை வலியை பதிவு செய்திருக்கும்.


- தயாஜி 

ஜூலை 31, 2016

கதை வாசிப்பு 19 - 'கண்களை விற்றால் ஓவியம்'

கதை வாசிப்பு 19 – 'கண்களை விற்றால் ஓவியம்'


    இவ்வார (2016 ஜூலை 31 ) ஞாயிறு மக்கள் ஓசையில், டாக்டர்.முனீஸ்வரன் எழுதியிருக்கும் ’கண்களை விற்றால் ஓவியம்’ என்ற சிறுகதை வந்துள்ளது. கடிகாரக்கதை வரிசையில் ஜூலை மாதத்திற்கான கடைசி கதை.

கதை.
   கணவன் மனைவியை மையப்படுத்தியுள்ளது. மாமணிக்கு எந்த கெடுதலும் வரக்கூடாது என்றும் தங்களின் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்றும் பூஜைகளில் ஈடுபடுகிறாள் மனைவி வடிவுக்கரசி. மனைவியின் அச்செயலே கணவனுக்கு எரிச்சலை கொடுக்கிறது. பெரும்பாலும் பூஜைகளை  முடித்து வீட்டிற்கு வருவதற்கு தாமதமாகிறது. பலமுறை கணவன் சொல்லியும் எல்லாம் குடும்ப நன்மைக்குத்தானே என தன் பக்க நியாயத்தை சொல்லிச்செல்கிறாள். திருமணமாகி இரண்டாடுகள் ஆனப்பின்னரும் பூஜை ,தீட்டு, தோன்றவில்லை போன்ற காரணங்களைச்சொல்லி குழந்தை பெறுவதை தவிர்த்து வந்தாள். குழந்தையின் வருகை அவளது பூஜைகளுக்கு தொந்தரவாக இருக்கும் என உள்ளுக்குள் நினைக்கிறாள். மார்கழி மாதம் அம்மா வீட்டிற்கு சென்ற வடிவுக்கு ஒருமாத காலம் எந்த தொல்லைகளும் இன்றி பூஜைகளில் ஈடுபட முடிந்தது. மார்கழி முடிந்தும் அவள் வீடு திரும்பவில்லை. இப்போது மாமணி மனதில் அவளுக்கு இடமில்லை என்று தெரிகிறது . ‘வாழாவெட்டி’ என அம்மாவிடம் திட்டு வாங்குவதைவிட வடிவுக்கு எந்த தொல்லைகளும் இன்றி சுதந்திரமாக பூஜைகளில் கலந்துக்கொள்ள முடிகிறது.

கதையைக்குறித்து;
   பலர் இக்கருவை கொண்டு ஒரு பக்க கதைகளாக நிறைய எழுதியுள்ளார்கள். இம்மாதிரி கதைகளில் சுவாரஷ்யம் முக்கியம். அப்படியில்லாமல் இக்கதையை சிறுகதையாக்க முயல்கையில் சிலவற்றை கவனித்து கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது. சுவாரஷ்யத்தையும் தாண்டி ஒரு தேடலோ ஒரு நிறைவோ இக்கதைகளில் இடம்பெற வேண்டும். 

    இக்கதையில் இரண்டு இடங்களில் மட்டுமே இந்தோனேசிய வீட்டுப்பணிப்பெண் வருகிறாள். வேலை முடிந்து வீட்டிற்கு வந்து மனைவி இல்லாததுக் குறித்து எரிச்சல் கொண்டிருப்பவனுக்கு சூடாக தேநீர் கொடுப்பதுதான் அவள் வேலை. அந்த பணிப்பெண் வடிவுக்கரசியின் இடத்தை பூர்த்தி செய்கிறாளா? கணவன் மனைவியிடம் ஏற்பட்டிருக்கும் இடைவெளியில் அவளுக்கான இடம் எதுவென கதையை கொண்டுச்சென்றிருந்தால் ஒருபக்க கதையாக இதனை கணிக்க முடியாதபடி அமைந்திருக்கும். இக்கதை சிறுகதையாக முழுமையடைந்திருக்கும் . இக்கதையினை வாசிக்கும் போதே கதையின் முடிவை கண்டுக்கொள்ள முடிவது பலவீனம். 

  திருப்பங்கள் இல்லாததும் சோர்வைக்கொடுக்கிறது. அதே சமயம் அச்சோர்வில் இருந்து வாசகர்களைக் காப்பாற்றுவது எழுத்தாளரின் வார்த்தை விளையாட்டுதான் . எள்ளல் நடையும் புதிய வார்த்தைகளும் வாகருக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.  உதாரணமாக, ‘காப்பி ஆறிக்கொண்டிருந்தது, மாமணி சூடேறிக்கொண்டிருந்தான்’, மாமணிக்கு வேலைப்பளு வடிவுக்கரசிக்கு பூஜைப்பளு போன்றதைச் சொல்லலாம்.

தலைப்பு,
     பலமுறை படிக்கவேண்டியதாக இருந்தது. அதெப்படி ’கண்களை விற்றால் ஓவியம்’ என வரும். ஒருவேளை கண்களை விற்றால்தான் ஓவியம் வாங்க முடியும் என சொல்கிறதோ ?. இக்கதைப்படிப் பார்த்தால் ‘கண்களை விற்று ஓவியம்…’ என்பதுதான் சரியாக வரலாம் என எண்ணத்தோன்றுகிறது. 

   இங்கு கதைகளுக்கு தலைப்பு வைப்பதில் சிலருக்கு அதிக சிக்கல் இல்லை. ஏதாவது ஒன்றை வைத்துவிடுகிறார்கள். சிலர் அதிகம் சிரத்தை எடுத்துக்கொண்டு தலைப்பை கெடுத்துவிடுகிறார்கள். ஒரு சிலருக்கே தலைப்புகளில் இருக்கும் சூட்சுமம் பிடிகொடுக்கிறது.

நிறைவாக,
   இது டாகடர். முனீஸ்வரின் சமீபத்திய கதையாகத் தெரியவில்லை. அவரின் பல கதைகளைப் படித்திருக்கும் வாசகன் என்ற முறையில் இது எப்போதோ எழுதி நான் படிக்கத்தவறிய கதையாக இருக்கலாம்.

-தயாஜி-


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்