பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 29, 2023

குறுங்கதை எழுதும் வகுப்பு 1 - நிறைவடைகிறது

 


குறுங்கதை எழுதும் வகுப்பு 1 - நிறைவடைகிறது


  செப்டம்பரில் தொடங்கிய வகுப்பு அக்டோபரில் நிறைவடைந்தது. இரு மாத வகுப்பாக திட்டமிட்டு அதன்படி அதனை வழிநடத்தி முடித்தோம். பல புதியவர்கள் கலந்து கொண்டார்கள். கவனிக்கத்தக்க எழுத்தாளர்களும் கலந்து கொண்டது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

  குறுங்கதை எழுதுவதில் இருக்கும் சுதந்திரம் குறித்தும் அதிலிருந்து அடுத்த படைப்பாக்கத்திற்கு எப்படி நகர்வது எனவும் கலந்து பேசினோம். ஒவ்வொருவரும் அவர்களின் எழுதும் திறனை குறுங்கதை எழுதுவதில் இருந்து கண்டுகொண்டார்கள்.

 ஏற்கனவே நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களின் கருத்துகளும் அவர்களில் பகிர்தலும் வகுப்பிற்கு பயனாக அமைந்தது.

  தொடக்கமாக குறுங்கதைகள் குறித்த அறிமுகம் வழக்கப்பட்டது.  அதன் பின் பயிற்சிகளும் இடுபணிகளும் வழங்கப்பட்டன. பங்கெடுத்தவர்கள் தங்களின் திறமைகளைச் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

   கதைகளை எழுத கண்ணுக்கு எட்டிய காட்சிகள் கூட போதும்; அதிலிருந்து பல கதைகளுக்கான கருக்களை நாம் கண்டுகொள்ளலாம் என்பதை ஒவ்வொருவரும் நன்கு புரிந்து கொண்டார்கள்.

  இவ்வகுப்பில் கொடுக்கப்பட்ட இடுபணிகளில் இருந்து மொத்தமாக 20க்கும் அதிகமான குறுங்கதைகளைத் தேர்வு செய்துள்ளோம். ஒவ்வொரு கதையும்  நிச்சயம் கவனத்தை ஈர்க்கும் கதையாக அமைந்திருக்கின்றது.

    விரைவில் இக்கதைகளை குறுங்கதைத் தொகுப்பாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

   குடும்ப மாதுவின் சுதந்திரம் நோக்கிய குரலாய் ஒலிக்கும் கதைகள், திருவள்ளுவரின் கடைசி குறள் குறித்த கதை, அபலநகைச்சுவையை மையப்படுத்திய கதைகள், மக்களால் குற்றம் சுமத்தப்பட்டவரின் மறுபக்கம், பேய்கள் என்பவை இருக்கிறதா என நம்மையே கேட்க வைக்கும் கதை, சினிமாவின் தாக்கம் மாணவச்சமூகத்தில் எந்த விளைவுகளைக் கொடுக்கின்றன,  பூமியை தூய்மைப்படுத்த சொல்லி விண்வெளியை வீணாக்கும் அறிவியலில் கதை, கனவையும் நினைவையும் ஒரே மாதிரி அணுகும் கதை, மனமுறிவுகளால் மூன்றாம் தரப்பிற்கு ஏற்படும் பாதிப்பு என பலவேறுபட்ட கதைக்களன்களையும் ஓரளவிற்கு மாறுபட்ட கதைச்சொல்லும் யுக்தியையும் பயன்படுத்தி இக்கதைகளை இவர்கள் எழுதியிருந்தார்கள். 

     அவர்களின் அனுமதியுடன் அக்கதைகளை விரைவில் உங்களோடு பகிர்கிறேன்.

   இவ்வாறு எங்களின் முதல் குறுங்கதை எழுதும் வகுப்பு நிறைவடைந்தது. நவம்பரில் இரண்டாம் வகுப்பை தொடங்குகின்றோம். 

    உங்களுக்கும் குறுங்கதைகள் எழுத ஆர்வம் இருந்தால் கலந்து கொள்ளுங்கள். 

 குறுங்கதைகளைப் புரிந்து கொள்வதிலிருந்து உங்களுள் மறைந்திருக்கும் எழுத்தாற்றலை நீங்க கண்டுபிடித்து எழுதலாம்.


எழுதுவோம்… 

அதுதான் இரகசியம்…

அதுவேதான் தியானம்…


அன்புடன் தயாஜி 

அக்டோபர் 28, 2023

🙏எழுத்தாளர், ஆசிரியர் இராஜேஸ்கன்னி நினைவாக... 🙏

 


காலை, தம்பி பிருத்வி அழைத்திருந்தார். ஆசிரியை இராஜேஸ்கன்னி காலமாகிவிட்டதைக் கூறினார். இன்று என் முதல் தொலைபேசி அழைப்பு அதுதான். செய்தி கேட்டதிலிருந்து அதிக நேரம் என்னால் என் இயல்பு நாளுக்கு திரும்ப முடியவில்லை. பாராங்கல்லை சுமப்பது போல இதயம் கணக்கத்தொடங்கியது; அத்தனையும் ஆசிரியை இராஜேஸ்கன்னியின் நினைவுகள்தான்.

பல ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருப்பவர். நாளிதழ்கள் முதல் இதர ஊடகங்கள் வரை புனைப்பெயரிலும் தன் பெயரிலும் எழுதி வந்தவர். முகநூல் வழி அவருடன் எனது பழக்கும் இன்னும் நெருக்கமானது. என் கதைகளைக் குறித்து அவர் சொல்லும் கருத்துகளுக்கு நான் கொடுக்கும் பதில்கள் எங்கள் நட்பை இன்னும் அதிகமாக்கியது.

அதன் பின் ‘வெண்பலகை’ மூலம் எங்கள் பேச்சு இன்னும் ஆழமாகியது. இங்கும் அவர் ஆர்வமாக எழுதினார். கவிதைகள் மீது அவருக்குள்ள ஆர்வத்தை அறிந்த பின் சில கவிதைப்புத்தகங்களை அவருக்கு பரிந்துரைச் செய்தேன். அவரும் அவற்றை வாங்கி ஒவ்வொன்றையும் வாசிக்கும் போதெல்லாம் அது பற்றி என்னுடன் பேசலானார்.

‘வெண்பலகை’ சிறுகதை கலந்துரையாடலுக்கு அவர் அனுப்பிய சிறுகதைக் குறித்து பேசினேன். பின் தனிப்பட்ட முறையில் என்னை அழைத்து அச்சிறுகதையில் மேலும் என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம் என ஒரு மாணவி போல கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். அதன் பின் ‘வெப்பம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதி எனக்கு வாசிக்கக் கொடுத்தார். அதிலும் சில மாற்றங்கள் செய்யவேண்டும் என சொன்னதும் உடனே என்னை அழைத்தார்.

அவருடனான உரையாடலில் மேலும் பலவற்றைப் பேசலானோம். விரைவில் தானும் புத்தகம பதிப்பிக்க ஆவல் கொண்டிருப்பதைச் சொன்னார். இப்படியான  ஆசைகள் பலருக்கும் இருக்கிறதுதான். பணம் இருந்தால் யாரும் புத்தகம் போடலாம் என்கிற நிலைக்கு மெல்ல மெல்ல தள்ளுப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இராஜேஸ்கன்னி அதற்காக உழைக்க தயாராய் இருந்தார்.

குறிப்பாக தனது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு ஏதும் ஆலோசனை உண்டா எனவும் கேட்டார்.
உண்மையில் இப்படி கேட்பவர்களை எனக்கு எப்பவும் பிடிக்கும். தான் செய்ய வேண்டிய செயல் அல்லது தான் எழுதவுள்ள படைப்பு எப்படி இருக்க வேண்டும் என மற்றவருடன் கலந்து ஆலோசிப்பது ரொம்பவும் முக்கியம். அதுதான் நம்மை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும்.

நீரலைகளும் நினைவலைகளும் என்ற தலைப்பில் கடலை களமாகக் கொண்ட சிறுகதையை எழுதினார். பின்  வெப்பம் என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதினார். நிலம், காற்று, ஆகாயம் என்ற கதைக்களத்தில் அடுத்த மூன்று கதைகளை எழுதிவிட்டால் பஞ்சபூதங்கள் பற்றியக் கதைகளாக அவை அமைந்துவிடும் என்றேன். உடனே அவர், அடுத்த கதை காற்றைப் பற்றித்தான் பாதி எழுதியுள்ளதாகச் சொன்னார். அவர் இதனை யோசிக்கவில்லையென்றும் ஆனால் நல்ல யோசனை என்றும் குறித்து கொண்டார்.

அவருக்கு கவிதைகள் மீதும் ஆர்வம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் முகநூலில் தொடர்ந்து கவிதைகளையே அதிகம் எழுதி வந்தார்.

ரொம்பவும் சமீபத்தில் நாங்கள் ஆரம்பித்த ‘குறுங்கதை எழுதும் வகுப்பில்’ ஆர்வமாக பங்கெடுத்தார். முதல் வகுப்பு முடிந்ததும் அவர் எனக்கு அனுப்பிய கருத்துகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
குறுங்கதைகளையும் எழுத அவர் ஆர்வமாக இருந்தார்.

அவர் பல சமயங்களில் அவர் காணாமல் போய்விடுவது வழக்கமானது. அது பற்றி விசாரித்தேன். உடல் நிலை குறித்தும் அதற்கான மருத்துவ பரிசோதனைகள் குறித்தும் பேசினார். நானும் அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்கு ஆளாகும் ஆள் என்பதால் இரு நோயாளிகளும் நோய்களையும் எப்படியெல்லாம் அதனிடமிருந்து தப்பிக்கின்றோம் எனவும் பேசி சிரித்திருக்கிறோம்.

வெறும் பெயருக்காகவும்; தனிப்பட்ட லாபக்கணக்கிலும் தங்களை எழுத்தாளர்கள்  என சொல்லிக்கொள்பவர்கள் மத்தியில் உண்மையாக தன்னை எழுத்தாளராக நிலைநிறுத்த தொடர்ந்து முயன்றவர். முயன்றவர் என்பதை விடவும் தொடர்ந்து எழுதியவர் என்றே சொல்ல வேண்டும்.

இவ்வளவு சீக்கிரத்தில் அவரின் காலம் முடிந்திருக்க வேண்டாம். ஆனால் ஏதாவது ஒரு வகையில் அவரின் எழுத்துகள் இங்கு வாழும் என அவரின் படைப்புகளை வாசித்தவன் என்கிற முறையும் நான் நம்புகின்றேன்.

இந்நேரத்தை பயன்படுத்தி இன்னொன்றையும் இங்கு பதிவு செய்ய நினைக்கிறேன். இதில் ஏதும் தவறு இருப்பின் சுட்டுங்கள்; திருத்திக்கொள்கிறேன்.

ஆசிரியைக்கு இரங்கல் தெரிவிக்கும் சில பதாகைகளைப் பார்க்க நேர்ந்தது. அதிலொன்று சிறு நெருடலைக் கொடுத்தது. அதனால் அதனை இவ்விடத்தில் சொல்கிறேன்.

ஒரு பதாகையில், ‘இயல் எழுத்தாளர், ஆசிரியர் இராஜேஸ்கன்னி ஆறுமுகம்’ என குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

அவர் இயல் எழுத்தாளரா? இயல் குழும எழுத்தாளரா? எது சரி எது பொருந்தும் என உங்களுக்கு தெரியாதா?
இயல் என்னும் அமைப்பு எப்போது தொடங்கியது? இராஜேஸ்கன்னி எப்போதிலிருந்து எழுதுகிறார்? என்று கூடவாக யாருக்கும் யோசிக்க நேரமில்லை.

இறந்தவர் மீது அதுவரை அவருக்கு ஒன்றுமே செய்யாத கட்சியொன்று தன் கட்சி கொடியை அவரின் உடலில் போர்த்தும் சினிமா காட்சியை இச்செயல் நினைக்க வைக்கிறது.

இது இத்தனை ஆண்டுகாலமாக எழுதிவந்த ஓர் எழுத்தாளரை தன் குறுகிய வட்டத்தில் நிற்க வைத்து அவமானப்படுத்துவது போல் ஆகாதா?

உங்களிடம் வரும் ஒவ்வொருவர் மீதும் நீங்கள் உங்கள் பிராண்டுகளைக் குத்துவீர்கள் என்றால்; அவர்கள் உயிரோடு இருக்கும் போதே உங்கள் ப்ராண்டின் பெயர் அவர்கள் பெயர் முன்னால் குறிப்பாக அவர்களை எழுத்தாளர் என அழைக்கும் முன்னமே உங்கள் பிராண்டை சொல்ல வேண்டும் என சொல்லிவிடுங்கள்.

எழுத்தாளரே தன்னை எங்கிருந்து வந்தேன் என சொல்வதுதானே எந்த பிராண்டுக்கும் மரியாதை. பிராண்டாக சென்று மற்றவர் உழைப்பின் முன்னே அமர்ந்து கொள்வது எவ்வளவு அவலம்.
உங்களுடன் பயணிப்பவர்களிடமும் இதையே நானும் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் செய்யும் செயல்கள்தான் நம்மை விளம்பரப்படுத்தவேண்டுமே தவிர நாம் நம்மை விளம்பரப்படுத்துவதையே செயலாக செய்யக்கூடாது என்பது எல்லோருக்குமே பொருந்தும்.

உங்கள் பிராண்ட் தெரியவேண்டும் என்றால் எழுத்தாளர் இராஜேஸ்கன்னி அவர்களின் படைப்புகளை உரியவரிடம் தொடர்பு கொண்டு வாங்கி அதனை நல்ல முறையில் செறிவாக்கம் செய்து புத்தகமாக வெளியிடுவதுதான். அப்படி செய்தால் அல்லது அப்படி செய்ய முற்பட்டாலே போதும் நீங்கள் எதை விளம்பரப்படுத்த நினைக்கிறீர்களோ அது தன்னைத்தானே விளம்பரப்படுத்திக்கொள்ளும். ஏனெனில் நீங்கள்; செயலில் இறங்கிவிட்டீர்கள்.

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம்  இல்லாது இதனை எழுத முயன்றுள்ளேன்.

தவறு இருப்பின் நீங்கள் யாரும் தாராளமாக சுட்டுலாம்.

அதே போல என் கேள்விகளில் நியாயம் இருப்பின் உங்கள் செயலில் மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். அல்லது அடுத்தும் இப்படியே செய்யுங்கள்; என்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

#தயாஜி


அக்டோபர் 22, 2023

மனமுறிவு

 

 



அம்மா அப்படித்தான் சொல்லியிருந்தார். இனி இவர்தான் எனக்கு அப்பாவாம். ஆமாம் அப்பாவாம்.  அப்பாவா? எப்படி இவர் எனக்கு அப்பாவாக இருக்க முடியும். 

அப்பா இனிமேல் வீட்டிற்கு வரமாட்டாராம். வரக்கூடாதாம். வாரம் ஒரு முறை மட்டும் வருவாராம். இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அப்பா ஏன் இன்னமும் வரவில்லை.

அம்மா இருக்கும் போதெல்லாம் புது அப்பா ரொம்ப கண்டிப்பானவராக இருப்பார். ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது. சாக்லெட் சாப்பிடக்கூடாது. மழையில் நனையக்கூடாது. சத்தம் போட்டு சிரிக்க கூடாது. வீட்டில் ஓடி பிடித்து விளையாடக்கூடாது. சுவற்றில் கிறுக்க கூடாது என்று எப்பவும் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். 

என் அப்பா எப்பவும் அப்படி சொல்ல மாட்டார். சொல்லவே மாட்டார். அவரும் என்னுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவார். மழையில் என்னுடன் ஓடி பிடித்து விளையாடுவார். கலர் பென்சில்களை வாங்கி கொடுத்துக்கொண்டே இருப்பார்.

அப்போது என் அப்பா செய்ததையெல்லாம் புது அப்பா இப்போது செய்யக் கூடாது என்கிறார். அப்போது என் அப்பா செய்யாததையெல்லாம் இப்போது புது அப்பா செய்கிறார்......

அக்டோபர் 21, 2023

எப்படித்தான் வாழ்கிறார்கள்

 


- எப்படித்தான் வாழ்கிறார்கள் -

சிறந்த தம்பதிக்கு விருது கொடுக்கும் விழா. அதற்கென்றே சில தம்பதியினர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். அவர்களுக்கு தெரியாமலேயே ஒரு குழு ஒவ்வொரு தம்பதியையும் பின் தொடர்ந்தது.

தம்பதியரில் யார் சிறந்த தம்பதி என  அறிவித்தார்கள். பலரும் தங்களுக்கு அந்த இடம் கிடைக்காதது குறித்து வருத்தம் இருந்தது. எப்படி அவர்களால் இப்படி வாழ முடிகிறது என்று பொறாமையும் பட்டார்கள்.

ஐம்பதை நெருங்கிய மனமொத்த தம்பதியினர் விழா மேடையில் ஏறுகிறார்கள். பார்த்துக்கொண்டிருக்கும் பல தம்பதிகள் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள்.

பலரும் அவர்களை முன்னுதாரணமாக எடுத்தார்கள். எப்படி வாழ்கிறார்கள் பாரேன் என பேசவும் செய்தார்கள்.

மேடையில் கணவனிடம் கேள்வி கேட்கப்பட்டது. "ஐயா உங்க கல்யாண நாள் எப்போ?"

அவருக்கு பதில் நினைவில் இல்லை. கூட்டத்தில் ஏதோ சலசலப்பு. பின் மனைவியிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது. அவருக்கும் நினைவில் இல்லை.

இருவருக்குமே திருமண நாள் நினைவில் இல்லை இவர்கள் எப்படி மனமொத்த தம்பதிகளாக வாழ்வதாகச் சொல்கிறார்கள் என்று குழம்பினார்கள்.

சிலருக்கு மட்டும் அதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு நன்றாகத்தெரியும். எப்படித்தான் வாழ்கிறார்கள் என்ற கேள்விக்கு இப்படித்தான் வாழ்கிறோம் என்ற பதில்தான் அவர்களுடையதும்.


அக்டோபர் 18, 2023

தீவிரவாதி

 

அவனைக் கொல்வதற்கு முன்பாக விசாரித்தார்கள். விசாரிக்காமல் யாரையும் அதிகாரிகள் ஒருபோதும் கொல்வதில்லை. இல்லை இது கொலையில்லை. தண்டனை.

 அதிகாரிகள் விசாரிக்காமல் இதுவரை எவருக்கும் தண்டனை வழங்கியதில்லை.

அவன் முதலில் அழத்தொடங்கினான். அழுகிறான் அழுதுக்கொண்டே இருக்கிறான். இது அவனது நாடகமாகக்கூட இருக்கலாம். உடலில் உள்ள காயங்களும் முகத்திலிருக்கும் வீக்கமும் தலையிலிருந்து வழியும் இரத்தமும் அப்படியொன்றும்  வலிக்காது என அதிகாரிகளுக்கு தெரியும்.

வாயில் காய்ந்த ரொட்டியைத் திணித்தார்கள். அது தொண்டையில் சிக்காமலிருக்க எதையோ வாயில் ஊற்றினார்கள். அவனால் எதையும் விழுங்க முடியவில்லை. எதையும் சொல்லவும் முடியவில்லை. வாந்தி எடுத்தான். திணித்ததிலிருந்து திணிக்காததும் அவன் தின்னாததும் வெளியில் தெரித்தன. 

அவனை  சிறிது நேரம் ஓய்வெடுக்க வைத்தார்கள்.

மீண்டும் ஒரு முறை விசாரித்தார்கள்.  இம்முறை அழுகை குறைந்திருந்தது. மூச்சு மட்டும் அதிகப்படியாக ஏறியேறி இறங்குகிறது.

அவனிடமிருந்து எந்த விபரங்களையும் வாங்க முடியவில்லை. அப்படியொரு பயிற்சியை அவன் பெற்றிருக்கக் கூடும். 

 தாங்கள்  தாக்குதல் நடத்திய இடத்தில் மயங்கிய நிலையில் இவனை கண்டுபிடித்திருந்தார்கள். தெளிவாக இருந்தால் இவனும் ஓடியிருப்பான்.

அவனிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காது என உறுதியானது. உண்மையைச் சொல்லாத குற்றத்திற்காகவும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத குற்றத்திற்காகவும் அதிகாரி முன் வாந்தி எடுத்த குற்றத்திற்காகவும் தாக்குதல் நடந்த இடத்தில் பிடிபட்ட குற்றத்திற்காகவும் இன்னும் சில இதுவரை கண்டுபிடிக்காத குற்றத்திற்காகவும் தீவிரவாதி என உறுதி செய்து அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இது இங்கு நடந்துகொண்டிருக்கும் போது, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சிலர் தங்களில் உறவினர்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். 

அதில் ஓர் அம்மா தேடுவது; எப்போதும் அழுதுக்கொண்டிருக்கும் தனது ஐந்து வயதான வாய்ப்பேச வராத குழந்தையை..... குழந்தையை...... குழந்தைகளை.... குழந்தைகளையும்.....

அக்டோபர் 17, 2023

ஈரம்

 

அந்த அதிகாரியின் மனதில் ஈரம் இருக்கத்தான் செய்கிறது. 

இந்த யுத்தம் யாருக்காக இருந்தாலும் எந்த மதத்திற்காக இருந்தாலும் யாருடைய ஆணவத்திற்காக இருந்தாலும் அங்கு குழந்தைகளும் பெண்களும்  வயதானவர்களும் நோயாளிகளும் பாதிக்கப்படக்கூடாது. கைகளில் ஆயுதம் ஏந்தி நிற்காத அப்படி எந்த தெரியாத எந்த மனிதனையும் கொல்வது தர்மமாகாது.

ஆனால் வேறு வழியில்லை. யுத்தம் அதன் கோரத்தாண்டவத்தை ஆடத் தொடங்கிவிட்டது. அதிகாரியின் அறையிலிருந்து ஊர் முழுக்க கேட்கும் ஒலிபெருக்கி அதிரத்தொடங்கியது.

"அப்பாவி மக்களை கொல்வது எங்கள் நோக்கமல்ல. ஆனால் இது யுத்தம் இரு தரப்புகளுக்குமே இழப்புகள் இருக்கும். உங்களுக்கு இன்னும் 6 மணிநேரம் அவகாசம் கொடுக்கிறோம். உடனே இவ்விட்டத்தைவிட்டு வெளியேறுங்கள்.   உங்கள் நிலைமை எங்களுக்கு தெரியும். இந்த யுத்தத்தில் நாங்கள் ஜெயித்த பின் உங்களுக்கான சிறந்த வாழ்வை நாங்களே உங்களுக்கு அமைப்போம். அதுவரை ஊர் எல்லையில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் நீங்கள் தஞ்சம் புகுங்கள். "

அறிவிப்பைக் கேட்ட மக்கள் மிச்சமிருந்த உயிரையும் மிச்சமே இல்லாத உடமைகளின் எச்சங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். ஊரே இப்போது மயானமாக இருந்தது. சின்ன வித்தியாசம் முன்பு நடமாடும் பிணங்கள் இருந்தார்கள். இப்போது நடமாடாத பிணங்கள் இருக்கின்றன.

சரியாக ஆறு மணிநேரம் முடிந்தது. அதிகாரி தன் அறையில் யாருடனோ பேசுகிறார்.

"உன்னிடம் இன்னும் எத்தனை குண்டுகள் மிச்சமுள்ளன..?"

"200"

"அதில்  180 குண்டுகளை நீ மிச்சப்படுத்து, மற்றதை பயன்படுத்து..... குண்டுகள் நமக்கு முக்கியம்.... வீணாக்காதே...."

பேசி முடித்ததும், மக்கள் நுழைந்த மருத்துவமனை வெடித்து மனித உடல் சிதறி விழுகின்றன.

அந்த அதிகாரியின் மனதில் ஈரம் இருக்கத்தான் செய்கிறது. அது முழுக்க முழுக்க அப்பாவி மக்களின் செங்குருதியினால் நனைந்திருந்தது...


- தயாஜி

அக்டோபர் 13, 2023

- வசுமதியின் சிறகுகள் - 2




தலைப்பு : சிறகுகள்
எழுத்து : அறிமுக எழுத்தாளர் வசுமதி 
வகை : குறுங்கதை 
(எங்கள் குறுங்கதை எழுதும் வகுப்பின் பங்கேற்பாளர்)

 

                 என் உடம்பில் பொருத்தப்பட்ட ஒவ்வொரு கருவியின் பயன்பாடும் என்னவென்று  என் பயிற்றுவிப்பாளர், கிளி பிள்ளைக்குச் சொல்வதைப்போல் எனக்கு சொல்லிக்கொண்டிருந்தார். நேரம் நெருங்க நெருங்க என்னுடய இதயம் மின்னலின் வேகத்தை விட பன்மடங்கு வேகமாகத் துடித்தது, லப் டப் லப் டப்..... “லெட்சுமி, இட்ஸ் யுவர் டென் நாவ், லெட்ஸ் கோ!!”. என்னுடைய பயிற்றுவிப்பாளாரை பின்தொடர்ந்து ஒரு சிறிய விமானத்தில் ஏறினேன். சரியாக கடலின் மட்டத்திலிருந்து 15,000 அடி தூரத்தில் அந்த விமானம் பறந்து கொண்டிருக்கையில், விமானி பச்சை விளக்கை அழுத்தி, “இது உனக்கான நேரம், லெட்சுமி!” என்று “thumbs up” காட்டினார். விமானத்தின் நுழைவாயிலில் என்னுடைய பாதங்கள் பலமாக ஒட்டி கொண்டன. எட்டி பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒன்றுமே தெரியவில்லை. ஒன்று, இரண்டு, மூலெட்சுமி என்கிற நான், வானில் பறக்கத் தொடங்கினேன். 

            அடப்பாவி மனுசா!! 1,2,3 சொல்லிய பிறகு நாம் குதிப்போம் என்று கூறிவிட்டு, மூன்று சொல்வதற்கு முன்பே என்னை வானத்தில் தள்ளிவிட்ட என்னுடைய பயிற்றுவிப்பாளாரின் மீது கடுங்கோபம் வந்தது. ஆனால் அது ஒரு வினாடிக்கூட நிலைக்கவோ நீடிக்கவோயில்லை. நான் ஒரு பறவயைப்போல் பறக்க உதவி புரிந்த அந்த ஜீவனிடம் நான் எப்படி என்னுடய சீற்றத்தைக் காண்பிக்க முடியும்.

            5 வினாடிகள் “free fall”-க்கு (எந்தவொரு தடையுமின்றி வீழ்தல்) பிறகு என்னுடய பயிற்றுவிப்பாளர் பாராசூட் பட்டணைக் கிளிக் செய்தார். துப்பாக்கியின் தோட்டாவைப்போல் என்னுடைய உடம்பு சர்ரென மேலே இழுத்து செல்லப்பட, என் வயிற்றில் யாரோ ஓங்கி உதைத்தது போல் ஓர் உணர்வு. 

            மறுபடியும் அதே உதை, “அம்மா ஆஆஆஆ... என்று கத்தியபடியே திடுக்கிட்டு எழுந்தேன். அட! இவ்வளவு நேரம் என் மகள் தூக்கத்தில் உதைத்ததால் ஏற்பட்ட வலிதான் அது என்பதை உணர்ந்தேன். என்ன ஒரு அசாதாரணமான கனவு. நான் கண்ட கனவு நிச்சயமாக மெய்ப்படும் என்ற நம்பிகையோடு படுக்கையிலிருந்து எழுந்து என்னுடய அன்றைய வேலைகளைப் பார்க்கத் தாயரானேன்

            லெட்சுமியின் பல வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், அவளது மனம் முழுவதும் அவள் கண்ட கனவை ஆக்கிரமித்திருந்தது. லெட்சுமி அன்றைய இரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். இரவுகள் அவளுக்கு முக்கியமானவை. அவள் ஒரு சுதந்திர பறவையாக வாழ்வது அந்த இரவு நேர தூக்கத்திலும் அது கொடுக்கும் கனவுலகிலும்தான். நேற்றைய கனவில் ஸ்கை டைவிங் செய்தாள் ஆனால் தரையிறங்கும் முன்பே அவளின் கனவு கலைந்து விட்டது. 

            இன்றைய கனவில் எப்படியும் தரையிறங்காமல் அவள் உறக்கத்திலிருந்து விழிக்கப் போவதில்லை. 

குறுங்கதை எழுதும் வகுப்பு (வகுப்பு 4)

 

வசுமதியின் சிறகுகள் - 1


 செப்டம்பரில் குறுங்கதை எழுதும் வகுப்பைத் தொடங்கினோம். இரு மாத வகுப்பாக அதனை கட்டமைத்தோம். இம்மாத இறுதியில் அவ்வகுப்பு நிறைவடைகிறது.

முதல் மாத வகுப்புகளில் குறுங்கதைகள் குறித்து விரிவாகவே பேசினேன். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வகுப்பில் நடந்தவற்றைக் குறித்து என் வலைப்பூவிலும் முகநூலிலும் பகிரவும் செய்தேன். வகுப்பு முடிந்த பின்னரும் கூட பங்கேற்பாளர்களுக்கு மீள்பார்வை செய்ய உதவும் வகையிலேயே அவற்றை எழுதியிருந்தேன். செப்டம்பர் மாத கடைசி குறுங்கதை வகுப்பை கேள்வி பதில்களாக அமைத்தோம். பலவிதமான கேள்விகள் வந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் பதில்களை சற்று விரிவாகவே அலசினோம்.

இவ்வகுப்பின் அடிப்படை நோக்கம் ‘வாசிக்கவும் எழுதவும் வைப்பது’ என்பதால் வாசிக்க வேண்டிய கதைகளைப் பகிரும் அதே சமயம்; முக்கியமான எழுத்தாளர்களின் குறுங்கதைகளை வாசித்து அதுபற்றிய பார்வையை ஒவ்வொருவரும் பகிர்ந்தார்கள். குறுங்கதைகளைப் பொறுத்தவரை எழுதுகின்றவர்களுக்கு இணையாகவே வாசிப்பவர்களும் கதைக்குள் நுழைய வேண்டியுள்ளது. எழுத்தாளர் சொன்ன இடத்திலிருந்து அவர் சொல்லாத இடத்தை வாசகன் தானே பயணித்து கண்டறிவது அவ்வளவு எளிதல்லவே.

முதல் மாத வகுப்பிலிருந்து இரண்டாம் மாத வகுப்பிற்கு அக்டோபரில் நுழைந்தோம். இம்மாதம் பங்கேற்பாளர்களை எழுத வைக்க வேண்டும். ஒரு குறிப்புச்சொல்லைக் கொடுத்து எழுதச் சொன்னோம்.

‘நான் கண்ட கனவு’ என்கிற குறிப்புச்சொல்தான் அது. ரொம்ப சாதாரணமாகத்தானே தெரிகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளைக் கொடுத்தோம். இச்சொல்லை தலைப்பிலோ , கதையின் நடுவிலோ அல்லது கதையின் முடிவிலோ ஏதாவது ஓரிடத்தில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் தலைப்பில் பயன்படுத்தினால் ஐந்து புள்ளிகள் கூடுதலாகவும் , கதை நடுவில் பயன்படுத்தினால் பத்து புள்ளிகளும் கதை முடிவில் பயன்படுத்தினால் ஒரே ஒரு புள்ளிதான் கூடுதலாகக் கிடைக்கும் படி செய்திருந்தோம்.

மொத்தம் பதினொரு எழுத்தாளர்கள் குறுங்கதைகளை எழுதி அனுப்பியிருந்தார்கள். ஒவ்வொரு கதையும் வித்தியாசமாக அமைந்திருந்தது. ஒரு மாத கால வகுப்பு பயனாக அமைந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.

வழக்கமான கூகுள் வகுப்பில் கதைகளை எழுதிய எழுத்தாளர்களோடு கதைகளைக் குறித்து பேசினேன். அதிலிருந்து சில கதைகளைச் சொல்ல வேண்டும்.

ராஜலெட்சுமி; துணை என்கிற தலைப்பில் குறுங்கதை எழுதியிருந்தார். தான் கண்ட கனவு பலித்தே விடுகிறது என்பதுதான் இக்கதையின் ஆதாரம். அதனை திறன்பட சொல்லியிருந்தார். அதே போல தனக்கொரு சம்பவம் நடந்ததையும் பகிர்ந்து கொண்டார்.

மோஹனா; மயக்கம் என்னும் குறுங்கதையை எழுதியிருந்தார். உறவினர் ஒருவர் பொதுவில் மயங்கி விழுந்ததைப் பார்த்த நாயகி தன் வாழ்நாளில் இப்படி மயங்கி யார் முன்னும் விழக்கூடாது என்று முடிவெடுக்கின்றார். ஆனால் அது அவருக்கு சாத்தியமில்லாமல் போகிறது. எதிர்ப்பார்த்த கதை முடிவில் எதிர்ப்பாராத சம்பவம் ஒன்றை இணைத்திருந்தார்.

பிருத்விராஜு; ‘பிரபஞ்ச நாயகன்’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். நடிகனின்  மகன் இன்னொரு நடிகனுக்கு பரம விசிரியாக இருப்பதால் ஏற்படும் சிக்கலைச் சொல்லும் கதை. இதனை சிறுகதையாக கூட விரிவாக்கன் செய்து எழுதலாம்.

தேவி; ‘நான் கண்ட கனவு’ என்ற தலைப்பிலேயே குறுங்கதையை எழுதியிருந்தார். லாவகமாக  கதையின் நடுவில் குறிப்புச்சொல் சினிமா பாடலில் வருவதாக எழுதியிருந்தார். கணவன் தான் இல்லாத சூழலில் மனைவி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்கு வழியமைக்கிறார். அவர் நினைத்தபடியே அவர் இல்லாமலாகிறார். ஆனால் அவரின் எண்ணம் மனைவியை தனித்து வாழ பழக்கிவிட்டது என்ற கருவில் எழுதியிருந்தார்.

கிரேஸ்; ‘மனிதருக்கு புரியுமா’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். பூமி மாசு படுகிறது என கவலைப்படும் யாரும் விண்வெளி எப்படியெல்லாம் மாசு பட்டுக்கொண்டிருக்கிறது என யோசிப்பதில்லை என்ற அடிப்படையில் ராக்கெட்டை வைத்து அதுவே தன்னைக் குறித்து சொல்வதாக எழுதியிருந்தார்.

மு.பா.செல்வா; மனிதாபிமானம் என்ற தலைப்பில் எழுதியிருந்தார். பள்ளி மாணவனின் காதல் கதையாக தொடங்கி நகைச்சுவை கதையாக மாறி நம்மை சிந்திக்க வைக்கும் கதையாக அமைந்தது. அது நடந்த சம்பவம் எனவும் தெரியப்படுத்தினார்.

கிடைத்த கதைகளில் சிலவற்றை குறித்து எழுதியுள்ளேன். இதில் ஒருவரான வசுமதி எழுதிய கதை எனக்கு ரொம்பவும் பிடித்த கதையாக அமைந்தது. சிறகுகள் என்ற தலைப்பில் இல்லத்தரசிகள் எதிர்நோக்கும் மனச்சிக்களையும் மன அழுத்தத்தையும் எழுதியிருந்தார். குடும்பச் சூழலில் ஒரு பெண் ஏன் கனவு காண்கிறாள் எது அவளுக்கு கனவாக வருகிறது என்பதுதான் ஆதார கேள்விகள். இக்கேள்விகளுக்கு பதில் தேட முயன்றாலே நமக்கு பல கதைகள் கிடைத்துவிடும். ஒரு கனவில் விட்டதை மறுகனவில் பிடிப்பேன் என கதாநாயகி நினைக்கிறார். அந்த நினைப்பே இக்குறுங்கதையை அடுத்த நகர்வுக்கு கொண்டு செல்கிறது. அவள் சுதந்திரமாக அவள் விரும்பியதை செய்வது அவளுக்கு வாய்த்த கனவில்தான் என்று கதையை நாம் புரிந்து கொண்ட அடுத்த நொடி; தூக்கம்தான் இவளுக்கு நிம்மதியென்றால் அந்தத் தூக்கமே கிடைக்காத எத்தனையோ பெண்கள் இருக்கிறார்களே என்று யோசிக்க வைக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டுமெனின் கதையின் தலைப்பிற்கும் கதையின் நாயகி காணும் கனவிற்கும் கதையின் முடிவிற்கும் ஓர் ஒற்றுமை இருக்கவே செய்கிறது. சிறகுகள், ஆகாயத்தில் இருந்து குதித்து பறத்தல், உறக்கமே சுதந்திரமாக கனவு காண வழியமைக்கிறது, என்கிற மூன்றும் இக்குறுங்கதையின் ஒரு வரிசையில் வந்தமைகிறது.

 விரைவில் எங்கள் வெள்ளைரோஜா பதிப்பகம் வெளியிடவிருக்கும் குறுங்கதைத் தொகுப்பு நூலில் வசுமதியின் ‘சிறகுகள்’ குறுங்கதையும் இடம்பெறும் என்பது எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.

சிறகுகள் குறுங்கதையை அடுத்த பதிவில் பகிர்கிறேன். நீங்களும் வாசித்துப்பாருங்கள். நான் சொன்னதைவிடவும் அதிகம் பேசுவதற்கு ஏற்ற கதைதான் இக்குறுங்தை.

நிறைவாக; மீண்டும் அடுத்த மாதம் அடுத்த குறுங்கதை எழுதும் வகுப்பை தொடங்குகின்றோம். ஆர்வம் உள்ளவர்கள் எங்களை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்