பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 21, 2022

ஓட்டு போட்டது ஒரு குத்தமாய்யா ?


கதை எழுத ஆரம்பித்த சமயத்தில் அதிகம் எழுதி அடித்து திருத்தி திரும்ப எழுத நினைப்பேன். ஆனால் செய்ய மாட்டேன். அப்போது கணினியோ தட்டச்சோ கைவசம் இல்லை. கையெழுத்தே சாத்தியம். நான் ஒருமாதிரி எழுதினால் என் கையெழுத்து ஒருமாதிரி போகும்.  

அதனாலேயே கையெழுத்தை மீண்டும் திருத்தி எழுதவோ மாற்றி எழுதவோ சிரமப்படுவேன். ஓரிரு  எழுத்துப்பிழைகளை அழித்திடலாம். இப்பவும் அப்படித்தான். கையெழுத்து அதன் விருப்பத்திற்கு கோணல்மாணலாக இருக்கும். நல்ல வேளையாக கைவசம் கணினி இருப்பதால் தப்பிக்கிறேன்.

அப்படி எழுதியெழுதி திருத்தி, திரும்ப எழுத சோம்பல் பட்ட பல கதைகளை கணினியில் உதவியால் எழுதியிருக்கிறேன். ஆனாலும் சில கதைகள் அந்தந்தக் காலக்கட்டத்தைத் தாண்டிவிட்டால் அதற்கான மதிப்பு இருக்காது. அக்கதை எழுதியது வீண் என நினைத்திருந்தேன். அதனாலேயே குறிப்பு புத்தகத்திலேயே பல கதைகளும் கதைகளுக்கான குறிப்புகளும் உறங்கி கொண்டிருக்கின்றன.

எனது அந்த நினைப்பு தவறு என ரொம்பவும் தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன். காலம் தொடர்ந்து புரிய வைத்துக்கொண்டே இருக்கிறது.

அவ்வகையில் நான் எழுதி, நீண்ட நாட்களுக்கு பிறகு (அது மாதக்கணக்காகி வருடக்கணக்காகி விட்டது) திருத்தி எழுதி அதனை இனி அதற்கு மதிப்பில்லை என்ற ஒரு கதை இன்று என் முன் பல்லிளித்து நிற்கிறது.

கதை அப்படியே இருக்கட்டும். அக்கதைக் கருவை சுருக்கமாக சொல்கிறேன்.

அண்ணன் அஜித் ரசிகன். தம்பி விஜய் ரசிகன். ஒருவருக்கும் ஓயாத சண்டை. (கதை நடப்பது 90கள் காலக்கட்டத்தில், சமூக வலைத்தளங்கள் அவ்வளவாக அறிமுகமாகியிருக்கவில்லை) அஜித்தா? விஜய்யா? அல்லது விஜய்யா? அஜித்தா? என்பதைத் தாண்டி அண்ணனுக்கும் தம்பிக்கும் வேறெதிலும் அக்கறையோ பொறுப்போ இல்லை. ஒருநாள் நோக்கு வர்மத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மூக்கு மண்டை என உடைத்துக் கொள்ளும்படி ஆனது. மருத்துவமனையில் அண்ணனும் தம்பியும் பக்கத்துப்பக்கத்தில் படுத்திருக்க அம்மா வருகிறார். கையில் நாளிதழ். பிள்ளைகள் முன் நாளிதழ் நடுப்பக்கத்தைத் திறக்கிறார். அதில், அண்ணனும் தம்பியும் யாருக்காக அடித்து மண்டையை ஒடித்துக்கொண்டார்களோ அந்த அஜித்தும் அந்த விஜய்யும் சேர்த்து படம் நடிக்கவுள்ளதாக விளம்பரம் வந்திருந்தது. இருவரும் கைகள் பிடித்தபடி தன் ரசிகர்களுக்கு கைகாட்டிக்கொண்டு நிற்கிறார்கள். அவ்வளவுதான் கதை.

இப்போது இந்தக் கதையை வாசிக்கையில், அஜித்தும் விஜய்யும் தங்களுக்குள் போட்டி இல்ல என்பதாக நிலமை மாறியிருக்கிறது.

ஆனால், இக்கதைக்கு இன்றுவரை மதிப்பிருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது;
நீங்கள் ஒரு கட்சிக்கும் நாங்கள் ஒரு கட்சிக்கும் ஆதரவளிக்கிறோம். உங்களையும் உங்கள் கட்சியையும் நாங்கள் கழுவி ஊத்துகிறோம். எங்களையும் எங்கள் கட்சியையும் நீங்கள் கழுவி ஊத்தறீங்க.
நீங்கதான் ஊழல்ன்னு நாங்களும், நாங்கதான் ஊழல்ன்னு நீங்களும் வீடு வீடா போய் நோட்டிஸ் கொடுக்கறோம்.
உங்க கட்சிக்கு நீங்களும், எங்க கட்சிக்கு நாங்களும் ஓட்டு போடறோம்.

கடைசில பார்த்தா நீங்க ஓட்டு போட்டவங்களும் நாங்க ஓட்டு போட்டவங்களும் ஒன்னா சிரிச்சிகிட்டு கைகொடுக்கும் போது நீங்களும் நாங்களும் இவங்களுக்காக அடி வாங்கி மிதி வாங்கி மண்டை வீங்கி கைகால் ஒடிஞ்சி படுத்து கிடக்கப்போறோமோ என்னமோ தெரியல.....

நவம்பர் 17, 2022

- யாரின் நிழலாய் நாம் -


ஒரே மொழி
ஆனால் அது உன் மொழியல்ல
என் மொழியுமல்ல
பின் யாரின் மொழி

ஒரே இனம்
ஆனால் அது உன் இனமல்ல
என் இனமுமல்ல
பின் யாரின் இனம்

ஒரே மதம்
ஆனால் அது உன் மதமல்ல
என் மதமுமல்ல
பின் யாரின் மதம்

ஒரே  நாடு
ஆனால் அது உன் நாடல்ல
என் நாடுமல்ல
பின் யாரின் நாடு

நீ கூட்டத்தில் ஒருவன்
நான் கூட்டத்திற்குள் ஒருவன்
ஆனால்  நாம் இருவருமே
கூட்டத்திற்கானவர்கள் அல்ல

நவம்பர் 15, 2022

- கடமை கண்ணியம் சோறுபோடு -

"சார் உங்க பத்திரிகைலதாங்க... எல்லாத்தையும் புரட்சிகரமா போடறீங்க..."

"எல்லாம் உங்களுக்காகதானே..."

"எங்க பிரச்சனை நடந்தாலும் உங்க பத்திரிகைக்காரங்கதான் முதல்ல போய் நிக்கறாங்க....!"

"அதான் எங்களோட கடமை கண்ணியம் கட்டுப்பாடு..."

"சந்தோஷம் சார்.. அப்படியே உங்க பத்திரிகைல வேலை செய்றவங்களுக்கும் மாதம் தவறாம சம்பளத்தை கொடுத்திட்டா... இன்னும் சந்தோஷம் சார்..."

"என்ன சொல்றிங்க நீங்க.... தமிழுக்காக; தமிழர்களுக்காகதானே செய்றாங்க சம்பளமெல்லாம் முக்கியமா என்ன..?"

"சரியா சொன்னிங்க சார்... ஆனா... தமிழுக்காக செய்தாலும்; தமிழர்களுக்காக செய்தாலும்.... அவங்களும் சாப்பிட சோறு வேணுமே.... அதுக்கு காசு வேணுமே.... உங்க சொத்தையா கேட்கறாங்க... அவங்களோட சம்பளத்தைத்தானே கேட்கறாங்க..."

"என்னதான் இருந்தாலும் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகதானே........."

நவம்பர் 13, 2022

என்செய்வோம் மாமழையே


முன்னெப்போதுமான
மழையல்ல நீ
உன்னோடிப்போது
விளையாட முடிவதில்லை

கொஞ்சமே மழையென்று
கொஞ்சினால்
அஞ்சி விலகும்படி
அலையடிக்க வைக்கிறாய்
சாலைக் குழிகளை
மறைக்கிறாய்
சாக்கடையை வீட்டிற்குள்
நிறைக்கிறாய்

எப்போதோ வீசிய குப்பைகளை
வட்டியுடன் வந்திறக்கி
வைக்கிறாய்
ஆறுகள் மீது கோடுகள்
போட்டு
வீடுகள் கட்டினால்
ஏழரையாய் கூரையில்
எங்களை கூட்டம் போட வைக்கிறாய்

இனி உன்னை நம்பி
நனைந்தாடவோ
முழுக்க குளித்து
விளையாடவோ முடியாது

எங்கள் அலட்சியங்களை எப்போது
நீ கணக்கிட ஆரம்பித்தாயோ
எங்கள் குப்பைகளை எப்போது
உனக்கு அஜீரணம் என கண்டாயோ

இனி நாங்கள் வேறெங்கும்
செல்ல முடியாது
எங்களாலான கழிவுகளுக்கு
நாங்களே பொறுப்பேற்க வேண்டும்
என சொல்வதற்கா
இப்படி பாடம் புகட்டுகிறாய்

தூறு
பொழி
நனை
சொல்
நாங்கள் வேறு
என் செய்ய வேண்டும்
மாமழையே


நவம்பர் 10, 2022

வேறென்ன செய்ய முடியும்


யாரோ சொல்லிய உன்
பெயரில்
ஏதோ மெல்லிய ஓர்
உணர்வு

அந்த யாரோ
அழைத்த எவரோ
நிச்சயம் நீயாக இருக்கக்கூடாது

நீ என் முன்னே
வரவே கூடாதென்று
வாசலிலேயே காத்திருப்பவனால்
வேறென்ன செய்ய முடியும்...

நவம்பர் 09, 2022

அப்பா...


"நான் மர்லின் மன்றோவை கூட்டிட்டு வருவேன். என் கூட காபி குடிக்க கூப்டுவேன்..." என்று கூறியவர் சிரிக்கலானார். நீ என் இனமடா என சொல்லத்தோன்றியது. ஆனால் கையில் ஒலிவாங்கியுடன் ஒலி/ஒளிப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டேன்.

நமக்கு வேலைதான் முக்கியம். இன்னொருவரைக் கேட்டேன். 'சொல்லுங்க.. உங்களுக்கு ஒரு சக்தி இருந்து; ஒருத்தரை உங்க முன்னுக்கு வர வைக்கனும்னா யாரை வர வைப்பீங்க.. என்ன கேட்பீங்க...?

"நான் என் அம்மாவை என் முன்னுக்கு வர வைப்பேன்'' என்றார். அந்தப்பெண் அப்படிச் சொன்னதும் அவர் அம்மா இப்போது உயிருடன் இல்லாதது புரிந்தது. அம்மாவைப் பற்றி யார் பேசி அழுதாலும் நமக்கும் அழுகை வந்துவிடுகிறது. எப்படியாவது அடுத்தக் கேள்வியில் அவரை அழ வைத்து விட்டால், யூடியூப்பில் எங்கள் வீடியோவைப் பார்ப்பவர்களும் கண் கலங்குவார்கள். லைக்குகளும் அள்ளும்.

"கண்ணை மூடிக்கோங்க...நீங்க கூப்டதும் உங்க அம்மா உங்க முன் வந்துட்டாங்கன்னு வச்சிக்குங்க. இப்ப அம்மாகிட்ட என்ன கேட்பீங்க....?"

கொஞ்சமும் யோசிக்காமல், "ஏன்மா என்னையத் தனியா விட்டுட்டுப் போன.... என்னையும் உன்கூடவே கூட்டிட்டு போக வேண்டியதுதான.... நீ அப்பாகிட்ட என்னைய தனியா விட்டுட்டுப் போய்ட்ட.... நீ போனப்பறம் அப்பா....அப்பா......... "

அவரால் அதற்கு பிறகு பேச முடியவில்லை. நாங்கள் இருப்பதையெல்லாம் மறந்து அழத்தொடங்கிவிட்டார். அவரின் கைகள் நடுங்க ஆரம்பித்தன....

நவம்பர் 02, 2022

தகப்பன்சாமி தந்தவேல் அது கந்தவேல்


எல்லோரிடலும் எல்லாவற்றையும் சொல்லவோ கேட்கவோ என்னால் முடியாது. அதற்கான தகுதியும் வாய்ப்பும் இருந்தாலும் என் மனம் ஒப்புக்கொள்ளாத வரை நான் அதனைச் செய்யமாட்டேன்.

புதியவர்களுடன் 'வாங்க டீ குடிப்போம்' என்பதும், கொஞ்சம் பழகியவர்களிடம் 'பிரியாணி' வாங்கி கொடுங்க என்பதையும் உரையாடலின் தொடக்கமாகவும் நகைச்சுவையாகவும் பயன்படுத்துவேன். அதன் தேநீருக்கு நானும் பிரியாணிக்கு அவர்களும் பணம் கட்டிய நிகழ்வுகளை அதிகமாகவெல்லாம் நான் அனுபவிக்கவில்லை.

ஆனால்,  எழுத்து, கதை, புத்தகம் என வரும் போது, இயல்பாகவே நான் உற்சாகமாகிவிடுகிறேன். அவர்களிடம் நெருக்கமாகிவிடுகிறேன். 

ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் ஒரு கதையாவது பகிர்வதற்கு இருக்குமென நம்புகிறேன். அதனை எழுத வைத்துவிட்டால் அடுத்தடுத்த கதைகள் தானாகவே வந்துவிடும். அதற்கு அவர்களும் சிரத்தை எடுக்கவேண்டும் என்பதுதான் எப்போதுமான என் அதார உரையாடல்.

அப்படி எழுத்து மூலமும் சிறுகதை கலந்துரையாடல் மூலமும் புதிய நண்பர்கள் நெருக்கமாகியுள்ளார்கள்/ நெருக்கமாகிக் கொண்டிருக்கிறார்கள். என் அளவுக்கு தவறாத் சட்டையும், தமிழகத்திலிருந்து எனக்கு பிடித்த வண்ணத்தில் அரை கை ஜிப்பாவும், பழங்கள் என இப்படி பலவற்றை சொல்லலாம்.

அதிலொன்றுதான் காக்கும் கந்தனின் கைவேல்.

சமூக/சமய ஆர்வளரும் எழுத்தாளருமாகிய ஏ.கே.ரமேஷ் தன் தமிழகப் பயணத்திலிருந்து நினைவுப்பரிசாகவும் அன்பின் உருவாகவும்  எனக்கு கொடுத்தார்.

"தமிழகத்திலிருந்து உங்களுக்கு என்ன வேணும்..." என கேட்டதும், தயக்கமின்றி வேல் வாங்கிட்டு வாங்க சார் என்றேன். தலையாட்டியவர் தவறாது கந்தவேலை கண்டுபிடித்துவிட்டார். அதிலும் இது கையடக்க கந்தனின் வேல் என்பது கூடுதல் அன்பு. தமிழை நேசிப்பவர்கள் தண்டாயுதபாணியை நேசிக்காமல் இருக்க முடியுமா என யோசிக்கிறேன்.

எதற்கும் அடங்கா கந்தவேலை அவர் தந்தவேளை பக்தனின் கைக்குள் அடக்கமாக கொடுத்ததில் அவ்வேல் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

அவருக்கு என் அன்பு, அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.

- உனக்கென்ன வேணும் சொல்லு -


உனக்கு பரிசளிக்க
விரும்புகிறேன்
எதுவாக இருப்பினும் கேள்
தயக்கம் கொள்ளாதே
தயங்கி நிற்காதே

கைக்கு எட்டா தூரம் என்றாலும்
நீ ஏன் கலங்க வேண்டும்
கொடுக்க வேண்டியவன்
நானல்லவா

எத்துணை தூரம் என்றாலும்
நீ ஏன் கலங்க வேண்டும்
கடக்க வேண்டியவன்
நானல்லவா

பரிசுகள் என்றால் கேட்பவளுக்கு
மட்டுமல்ல
கொடுப்பவனுக்கும் மகிழ்ச்சிதானே

பெற்றுக்கொள்
நீ
கற்றுக்கொடுக்கும் காதலுக்கு
ஈடாக எதுவேண்டுமென்றாலும்
கொடுக்கலாம்

ஒரு விண்ணப்பம் மட்டுமே
கம்பெனியின் போனஸ் போடும்வரை
கொஞ்சம் காத்திரு

சம்பளத்திற்கு செலவிருக்கிறது....

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்