பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2023

குறுங்கதை எழுதும் வகுப்பு (வகுப்பு 3) பகுதி 2

 பகுதி 2 – தொடங்குகிறது

 

                               - சொல்லிச்சொல்லி எழுதச் சொல்லுவோம் 2 –

 

மூன்றாம் வகுப்பையொட்டிய பதிவின் இரண்டாம் பகுதியில் சந்திக்கின்றோம். கதைகளை வாய்விட்டு வாசிக்கும் போது அக்கதை நமக்கு கூடுதல் புரிதலைக் கொடுப்பதாகச் சொன்னேன். அதேபோல புதிய எழுத்தாளர்களும் கதைகளை எழுதும் போது வாய்விட்டு சொல்லிச்சொல்லி எழுதுவது அவர்களுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும் எனவும் பார்த்தோம்.

எங்களின் குறுங்கதை எழுதும் வகுப்பில் பலரும் அவர்களில் கருத்துகளை அதைனையொட்டி பகிர்ந்து கொண்டார்கள்.

இன்றைய வகுப்பில் பயன்படுத்திய இரண்டாவது குறுங்கதையைப் பார்ப்போம். இது ஜென் கதை. சிறுவயதில் இருந்து ஜென் கதைகள் மீதும் குறிப்பிட்ட வயது வந்ததும் ஜென் கவிதைகள் மீதும் எனக்கு ஆர்வம் எழுந்தது. இந்தக் குறுங்கதை வகுப்பிற்காக இரு துறவிகள் பேசிக்கொள்ளும் கதையை தேர்வு செய்தேன். இது குறுங்கதையா? ஜென் துறவிகள் குறுங்கதைகள் எழுதியிருக்கிறார்களா? என்ற கேள்விகள் எழுந்தன. 

இதற்கு முன்னமே கூட நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அப்படியான கேள்விகள் எழுந்தன. ஜென் கதைகளை நம்மால் சுலபமாக குறுங்கதை வடிவத்தில் கொண்டுவர முடியும். அதோடு; அங்கிருந்து ஓர் உரையாடலையும் நம்மால் தொடங்க முடியும். எங்கள் குறுங்கதை எழுதும் வகுப்பில் இவற்றை குறித்து மேலும் விரிவேக பேசுவேன்.

இன்று நான் பகிர்ந்த ஜென் கதையில் ; மரணத்தருவாயில் இருக்கும் ஒரு துறவியிடம் இன்னொரு துறவி ஏதும் உதவி வேண்டுமா என கேட்கிறார். அதற்கு அவர்; நான் தனியாகத்தாமே வந்தேன் தனியாகத்தானே போகவேண்டும் என்கிறார். அதுவரை அது வழக்கமான ஒரு கதையாக இருக்கிறது. உண்மையில் நாமே பல முறை இப்படி பேசியிருப்போம் தானே. தனியாக வந்தோம் தனியாகத்தானே போகப்போகின்றோம் என.

அதற்கு அந்தத் துறவி கொடுக்கும் பதிலில்தான் இக்கதை குறுங்கதை வடிவத்திற்குள் வந்துவிடுவதாக உணர்கின்றேன். இவர் என்ன சொல்கிறார் என்றால் இங்கு யாரும் வரவும் இல்லை யாரும் போகவுமில்லை. அப்படி நினைப்பது பிரமை. வருவதும் போவதும் இல்லாத பாதை ஒன்று இருக்கிறது என்கிறார். இதை வாசித்ததும் நமக்கும் ஒரு சந்தேகம் வருகிறது. இதுவரை நாம் நம்பியிருந்த கற்பிதமான தனியாக் வந்தோம் தனியாக போவோம் என்பது தன்னை மறுத்து இன்னொரு இடத்துக்கு போகிறது; அவ்விடம் , இங்கு யாரும் வரவுமில்லை போகவுமில்லை என நம்மை சிந்திக்க வைக்கிறது.

இச்சிந்தனையை நாம் அப்படியே பல்வேறு கேள்விகளாக வார்த்து எடுக்கலாம். உடல் அழிகிறது ஆத்மா அழிவதில்லை; ஆத்மா ஓர் சுழல் வடிவில் முடிவில்லாத வட்டத்ததில் சுழல்கின்றது; மறுபிறவி என்பது என்ன; இப்படியாக பலவற்றை நம்மால் கேள்வியாக்கி அதற்கான பதிலை நோக்கி பயணிக்க இக்கதை உதவுகின்றது. அதிலும் இது குறுங்கதை வடிவத்தில் வைத்து யோசிக்கும் போது அது நமக்கு சாத்தியமாகிறது.

இக்கதையைக் குறித்து வகுப்பு பங்கேற்பாளர்களிடம் சில கேள்விகள் எழுந்தன. ஒவ்வொன்றுக்கும் வகுப்பிலேயே பதில் கொடுத்துவிட்டேன்.

மூன்றாவது குறுங்கதையாக; சந்தோஷ் நாராயணன் எழுதிய ‘பொம்மைகள்’ குறுங்கதையைக் குறித்து வகுப்பில் பேசினேன்.

நான்கு பத்திகளில் இக்கதை முடிந்துவிடுகிறது. முதல் பத்தி தன் அப்பாவின் மார்புக்கு நேராக பொம்மைத் துப்பாக்கியை காட்டி விளையாடுகிறது குழந்தை.

இரண்டாம் பத்தியில் அந்த அப்பா யார், என்ன வேலை செய்கிறார், இக்கதையில் திருப்பத்தை அமைக்கப்போகும் காரணம் என்ன என்று நமக்கு தெரிந்துவிடுகிறது. அதாவது சீனா விளையாட்டு துப்பாக்கிகள் என்கிற பெயரில் நிஜ துப்பாக்கிகளை இந்தியாவிற்குள் அனுப்பிவிட்டன. அவை இன்றோடு செயல்படப்போகின்றன என தனது இன்டெலிஜென்ஸ் துறையினர் மூலமாக அப்பா தெரிந்து கொள்கிறார்.

மூன்றாம் பத்தியில் தன் மகன் தன் மார்பு மீது குறி வைத்திருக்கும் விளையாட்டு துப்பாக்கியை அப்பா பார்க்கிறார்.

நான்காவது பத்தியில், அந்தத் துப்பாக்கியில் மேட் இன் சீனா என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

அவ்வளவுதான் குறுங்கதை முடிந்துவிட்டது. ஆனால் இக்கதையின் பின்னணியில் ஒரு துயர்மிகுந்த உண்மை ஒன்று இருக்கிறது.  

உங்களில் பலருக்கும் அது தெரிந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட நாட்டில் பல குழந்தைகள் ஊனமாக இருக்கிறார்களாம். அது ஒரு சூழ்ச்சியினால் நடந்தது. மக்களில் யாரும் வருங்காலத்தில் தங்களுடன் யுத்தத்தில் ஈடுபடக்கூடாது போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அங்குள்ள சாலைகளில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை கொட்டுகிறார்கள். அதனை ஆசையாசையாய் விளையாட எடுத்து செல்கிறார்கள் சிறுவர்கள். கொஞ்ச நேரத்தில் அந்த விளையாட்டு பொருட்கள் வெடிக்கின்றன. அந்த வெடிவிபத்தால் (சூழ்ச்சியால்) பல சிறுவர்கள் கை கால்களை இழக்கின்றார்கள்.

கண்பார்வையைப் பறிகொடுக்கின்றார்கள். கேட்கும் திறனை இழக்கிறார்கள். நாம் வாழும் உலகத்தில் ஏதோ ஒரு நாட்டில் இப்படியாக ஒரு கொடுமை நடக்கிறது.

நானும் எனது குறுங்கதை புத்தகத்தில் இப்படியான போரில் பாதிப்புக்குள்ளாகும் மக்களின் குரலாகவும் போர்ச் சூழலை மையப்படுத்தியும் சில குறுங்கதைகளை எழுதினேன். அது பரவலான வாசிப்பிற்கு சென்றது. அந்த வரிசையில் ஆசிரியை உமாதேவி அவர்களும் போர்ச்சூழலை மையப்படுத்தி சில குறுங்கதைகளை எழுதியிருந்தார்.

ஒரு சம்பவத்தை குறுங்கதையாக்கி அதனை வாசிக்கையில் இவ்வுலகத்தில் அதிகார வர்க்கம் செய்யும் கொடுமைகளில் ஒன்றைக் குறித்து நம்மை சிந்திக்க வைக்கிறது பொம்மைகள் என்னும் இக்கதை.

வகுப்பில் இக்கதையைக் குறித்தும் அவ்வாறு நடந்த சில போர்க்குற்றங்களைக் குறித்தும் பேசும் போது பலர் பேச்சற்று இருந்தார்கள். ஓர் எழுத்தாளனாக நமது எழுத்து குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டிய அவசியத்தைக் குறித்து பேசினேன்.

    நான்காவது குறுங்கதையாக எனக்கு பிடித்த கவிஞர் பெருந்தேவியின் ‘பக்கத்து வீடு’ என்னும் குறுங்கதை.           

இரண்டே பத்திகளில் இக்கதையினை எழுதியிருக்கிறார். இப்படி குறிப்பிட்டுச் சொல்வதற்கு காரணம் என்னவெனில் இக்கதையை அவர் எழுதிய விதம்தான்.

    முதற்பத்தியில் வாசகர்களிடம் ஒன்றை சொல்லிக்கொண்டே தனது அடுத்த பத்தியில் அதுவல்ல என்று இறங்கி வந்து, கடைசி ஒரு வரியில்; ஒரு வரியில் என்று கூட சொல்ல வேண்டாம். ஒரு சொல்லில் முழு கதையும் இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார்.

இக்கதையை மேலோட்டமாக வாசித்தால்; பக்கத்து வீடு சத்தமாக இருக்கிறது என புகார் கொடுத்தவரே தன் வீட்டை காலி செய்யும்படி ஆகிவிட்டது என இருக்கும். ஆனால் பெருந்தேவியின் கதைகள் அதன் மேல் போர்த்தியிருக்கும் எளிமையைக் கொஞ்சம் விலக்கிவிட்டு பார்த்தால் நமக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒருங்கே கொடுக்கும்.

    ஒரு பேய்க்கதையின் தொடக்கமாகவே முதல் பத்தியை எழுத்தாளர் எழுதியிருக்கிறார். ஆனால் இது பேய்க்கதையா என்றால் இல்லை. ஆனால் கடைசி வரியில் ‘காவல்துறையிடம்’ என வரும் இடத்தில் ‘சாமியார்/போதகர்’ என எழுதியிருந்தால் இக்கதை அதன் சுவை குன்றாத பேய்க்கதையாக அமைந்திருக்கும்.

இப்போது இக்கதையில் இருக்கும் மூன்றாவது சாத்தியத்தைப் பார்ப்போம்; இதுவரை இன்னொரு வீடாக நம்மை வாசிக்க வைத்தவரேதான் பிரச்சனைக்கு காரணம். அவர்ன் வீட்டில்தான் அந்த சத்தகங்கள் எழுகின்றன. அவர்தான் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கிறார். அதனால்தான் கடைசியில் அவரே ‘நான் உடனடியாகக் காலி செய்யாவிட்டால்’ என்கிறார். 

இக்கதையில் இருக்கும் ‘நான்’ என்னும் சொல்லை கடைசியில் இல்லாமல் வேறு இடத்தில் அதாவது ‘நான் புகார் கொடுத்தேன்’ என வரும்படி எழுதியிருந்தால்; உண்மையில் இது பாதிக்கப்பட்டவரின் குரலாக மாறியிருக்கும்.

ரொம்பவும் கவனமாக இக்கதை எழுதப்பட்டிருப்பதை அதன் ஒவ்வொரு வரியிலும் நம்மால் உணர முடிகிறது. இப்படி இக்குறுங்கதையின் பல்வேறு சாத்தியப்பாடுகளை வகுப்பில் விளக்கினேன். நாம் எழுதும் கதைகளில் ஒவ்வொரு வரியும் எவ்வளவு முக்கியம் என; அதிலும் குறிப்பாக குறுங்கதைகளுக்கு ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு முக்கியம் என இக்கதையின் மூலம் வகுப்பினர்களுடன் பேசினேன்.

அதன் பின், வகுப்பில் நான் எழுதிய குறுங்கதைத் தொகுப்பு புத்தகத்திலிருந்து , ‘அங்கே ஓரிடம் வேண்டும்’ என்ற கதையையும் ‘கடவுள் VS சாத்தான்’ என்ற கதையையும் பேசும்படி கேட்டுக்கொண்டதால் பேசினேன். அதனைப்பற்றி இங்கு நான் எழுதப்போவதில்லை. எப்படி மற்ற எழுத்தாளர்களின் கதைகளைக் குறித்து நான் பேசி எழுதுகின்றேனோ, அப்படி மற்றவர்கள் யாரும் என் குறுங்கதைகளை வாசித்து பேச வேண்டும் என ஆசைப்படுகின்றேன்.      

 இதுவரையில் எங்கள் ‘குறுங்கதை எழுதும் வகுப்பின்’ மூன்றாம் வார வகுப்பில் நடந்தவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டேன். அடுத்தடுத்த வாரங்களுக்கு பின் வகுப்பின் பங்கேற்பாளர்களும் அவர்களின் கதைகளை அவர்களே எழுதுவார்கள். எழுத வேண்டும்.

 உங்கள் யாருக்கும் எங்கள் குறுங்கதை எழுதும் வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் தாராளமாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

 

நாம் சேர்ந்தே எழுதுவோம்.

எழுதுங்கள்..

அதுதான் ரகசியம்..

அதுவேதான் தியானம்…

அன்புடன் தயாஜி.

 

குறுங்கதை எழுதும் வகுப்பு (வகுப்பு 3) - 24/9/23

 

 


                                      - சொல்லிச்சொல்லி எழுதச் சொல்லுவோம் –

 

ஞாயிறு; மூன்றாம் ‘குறுங்கதை எழுதும் வகுப்பு’ சிறப்பாய் நடந்தது. வழக்கமாக சனிக்கிழமை நடைபெறும் வகுப்பு இம்முறை ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

இன்றைய வகுப்பிற்கான பாடமாக வாரத்தின் தொடக்கத்திலேயே ஒரு இடுபணியைக் கொடுத்திருந்தேன். தங்களுக்கு பிடித்த திரைப்படமும் அதற்கான காரணமும் என்பதுதான் அது. இது கதை எழுதும் வகுப்புதானே? அதற்கு ஏன் பிடித்த திரைப்படங்களையும் அதற்கான காரணத்தையும் எழுத வேண்டும் என்கிற கேள்வி எழலாம்.

இன்றைய நம் வாழ்வில் குறிப்பாக தமிழர்களின் வாழ்வில் சினிமா ஒரு அங்கமாகவே ஆக்கிரமித்துவிட்டது. வாசிப்பவர்களின் நேரத்தையும் இன்னும் சொல்லப்போனால் எழுத வேண்டும் என ஆசைப்படுகின்றவர்களின் நேரத்தையும் அது தனக்காய் எடுத்துக் கொண்டது. அதிலிருந்து முழுமையாக யாரையும் விடுவிக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். ஆனாலும் அதன் மூலம் நக்கான சில நன்மைகளை நாம் செய்துக்கொள்ளலாம். அதனை நமக்காக வேலை செய்ய வைக்கலாம். நமது படைப்பாற்றலையும் கற்பனைத் திறனையும் அதன் வழியில் சென்று கூர்மைப்படுத்தலாம். கொஞ்சம் பிசகினாலும் இருக்கும் கூர்மையைக் கூட அது மொக்கையாக்கிவிடும் என்கிற எச்சரிக்கையுடன் தான் இதனை செய்கிறேன். 

ஒரு திரைப்படத்தை நாம் எப்படி அணுகுகின்றோம் என்பது ரொம்பவும் முக்கியம். அவர்கள் நமக்கு என்ன காட்டுகிறார்கள் என்பதைவிடவும் நம்மால் அதில் எதை கண்டறிய முடிகிறது என்பது அதைவிட முக்கியம்.

எங்கள் குறுங்கதை வகுப்பில் பங்கெடுத்தவர்கள் அவர்களுக்கு பிடித்த திரைப்படத்தையும் அது தங்களுக்கு பிடித்ததன் காரணம் குறித்தும் எழுதி அனுப்பியிருந்தார்கள். இன்றைய நிகழ்ச்சியில் அவற்றைப் பற்றிதான் பேச வேண்டியிருந்தது. ஆனால் பேசவில்லை. அதனை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துவிட்டோம். 

அதைவிட இப்போது அவசியமாக இருப்பது; கதைகளை வாசித்து நாம் எப்படி உள்வாங்குகின்றோம் என்பது என தோன்றியது. அதற்கு ஏற்றார்ப்போல நான்கு குறுங்கதைகளைத் தேர்வு செய்து கூகுள் வகுப்பில் பகிர்ந்தேன்.


1. ‘ஓஷோவின் குட்டிக்கதை’ தொகுப்பிலிருந்து; மாமியாரைக் கொல்ல முயன்ற குடிகார மருமகன் பற்றிய கதை.

2. ‘ஜென் கதை- உன்னையறிய உனக்கொரு திறவுகோல்லென்னும்’ புத்தகத்திலிருந்து, ‘உண்மையான பாதை’ என்னும் கதை. இக்கதை நாம் இறக்கவும் இல்லை பிறக்கவும் இல்லை என நிறுவும் இரண்டு ஜென் துறவிகள் பற்றியது.

3. கவிஞர் பெருந்தேவியின் ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தின் வாழும் பேய்’ என்னும் குறுங்கதை தொகுப்பில் இருந்து ‘பக்கத்து வீடு’ என்னும் குறுங்கதை – பக்கத்து வீட்டில் யார் யாருக்கு தொந்தரவாக இருக்கிறார் என சொல்லும் குறுங்கதை.

4. சந்தோஷ் நாராயணனின் ‘அஞ்ஞானச் சிறுகதைகள்’ தொகுப்பிலிருந்து பொம்மைகள் என்னும் குறுங்கதை.

 

நான்கு கதைகளையும் வாசிக்க அனுப்பிவிட்டு மீண்டும் ஒரு முறை நான் கதைகளை வாசித்து என்னை தயார் செய்து கொண்டேன். ஆனால் நிகழ்ச்சியின் போதே அதிஷ்டவசமாக எனது இரண்டு குறுங்கதைகளையும் நண்பரின் கேள்வியின் மூலம் இந்தப் பட்டியலில் இணைத்தேன்.

 

5. எனது ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ தொகுப்பிலிருந்து ‘அங்கே எனக்கோர் இடம் வேண்டும்’ என்னும் குறுங்கதை. இது அகத்தில் கவனம் செலுத்தாமல் புறத்தில் கவனம் வைக்கும் பக்திமான் பற்றிய கதை.

 

6. எனது ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ தொகுப்பிலிருந்து மேலும் ஒரு கதையா கடவுள் VS சாத்தான் என்னும் குறுங்கதை. இது மனிதனின் இயல்பை கிண்டல் செய்யும் கதை.

 

கதைகளை வாசித்தவர்கள் அவர்களின் பார்வையைப் பகிர்ந்துகொண்டார்கள். இப்படியாக ஓஷோவின் குட்டிக்கதையை வாசித்த நண்பர் அவரது புரிதலைச் சொன்னார். ஆனால் அவரால் அதையும் தாண்டி கதைக்குள் செல்ல முடியும் என யூகித்தேன். 

பின் நானே அக்கதையை வாசிக்கலானேன். நிறுத்தி நிதானமாக வாசித்தேன். சில இடங்களில் அழுத்தமும் சில இடங்களில் மெல்லிய தொணியிலும் கதையை வாசித்துக் காட்டினேன். இப்போது நண்பர் அக்கதையின் அடிநாதத்தைப் பிடித்துக்கொண்டார்.

    இது ஒரு சிக்காலாக இருக்கிறது. நாம் வாய் திறந்து வாசிக்காமல் மனதிலேயே வாசித்துக் கொள்கிறோம். வாய்த்திறந்து வாசிக்கும் போது கதை நமக்கு இன்னும் கூடுதலாப் புரிதலைக் கொடுக்கின்றது. அதே சமயம் நாம் எழுதும் போது வாய்த்திறந்து சொல்லிச்சொல்லி எழுதுவதில்லை.

தேர்ந்த எழுத்தாளர்களுக்கு அது அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்க கால எழுத்தாளர்களுக்கு அது அவசியம் என பரிந்துரைத்தேன். நாம் எழுதும் கதைகளை நாமே சொல்லிச் சொல்லி எழுதும் போது உரைநடையில் சிக்கல் வராமல் அது தடுக்கின்றது. குறிப்பாக வசனங்கள் எழுதும் போது அது பெரிதும் உதவுகின்றது.

ஒருவேளை சொல்லிச்சொல்லி எழுத முடியாதவர்கள்; எழுதி முடித்த பின் ஒரு முறைக்கு இரு முறையாவது வாய்விட்டு வாசிக்க வேண்டும். ஏனெனில் நாம் எழுதியவற்றை வாசகன் எப்படி வாசிக்கிறான். எங்கே அவனது தொணி மேலும் எங்கே அவனது தொணி கீழும் போய்வருகின்றன, எங்கே அவன் நிறுத்தி நிதானிக்கப்போகின்றான் என நாம் கண்டுக்கொள்ளலாம். நாம் எழுதும் கதைகளை வாசித்து திருத்தும் சிலாகிக்கும் முதல் வாசகன் நாம் தானே.!

 

                                           பகுதி 1 - நிறைவடைகிறது

 


குறுங்கதை எழுதும் வகுப்பு 2 (16/9/23)

 


எங்களின் 'குறுங்கதை வகுப்பின்' இரண்டாம் அமர்வு சிறப்பாக அமைந்தது. இவ்வகுப்பில் சம்பவங்களில் இருந்து கதைகளையும் கதைக்கருக்களையும் கண்டறிவது குறித்துப் பேசினேன்.

கவனித்தவரையில் புதிய எழுத்தாளர்கள் பெரும்பாலும் சம்பவங்களையே எழுதி அதனை சிறுகதையென நினைத்துக் கொள்கிறார்கள். அதற்கான விமர்சனத்தையோ பார்வையையோ நாம் முன்வைக்கும் போது அவர்கள் சொல்லும் காரணம், 'இது எனக்கு நடந்தது!', 'பக்கத்து வீட்டு கதை!' ‘தெரிந்தவர் சொன்ன அனுபவம்' இப்படி அடுக்குகிறார்கள்.

அனுபவங்களையும் சம்பவங்களையும் சிறுகதைகளாக எழுதக்கூடாதா என்றால் இல்லை, தாராளமாக எழுதலாம். அப்படி எழுதி கவனம் ஈர்த்த படைப்புகள் பல உள்ளன. ஆனால் அதில் மேலோங்கியிருக்கும் உணர்வுகளின் குறைபாடுதான் புதியவர்களுக்கு பலவீனமாக இருக்கிறது.

வெறுமனே என்ன நடந்தது? எப்படி நடந்தது? என சொல்லிச்செல்வது செய்தியாகவும் தகவல்களாகவும் நின்றுவிடுகின்றன. அதிலிருந்து கதைகளை கண்டறிவதற்கான பயிற்சி அவசியம் என நினைக்கிறேன். அதிலிருந்து ஓர் உரையாடலைத் தொடங்கவேண்டும் என விரும்புகிறேன்.

சம்பவங்களின் பின்னணி என்ன ? யாரின் அனுபவம்? அந்த அனுபவத்தின் நீட்சி என்ன? என்ன பாதிப்பு? யாருக்கு பாதிப்பு? அதில் நாம் கதாப்பாத்திரமா அல்லது கதைச்சொல்லியா? என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே சம்பவத்திலிருந்து கதையைக் கண்டறிய வேண்டும்.

அதற்கு ஏற்ற வகையில் இவ்வகுப்பினை வடிவமைத்தேன். பங்கேற்பாளர்களுக்கு முன்னமே, தங்களை பாதித்த ஏதாவது ஒரு சம்பவத்தை பேசுவதற்கு தயார் செய்ய சொல்லிவிட்டேன். தொடக்கமாக எது சம்பவம் எது கதை எது கதைக்கரு எது கதாப்பாத்திரம் என ஒன்றிலிருந்து இன்னொன்றையும் அந்த இன்னொன்றிலிருந்து வேறொன்றையும் பிரித்து பேசினேன்.

எனக்கு நடந்த சம்பவத்தையும் அதனை எப்படி குறுங்கதையாக மாற்றினேன் என்பதையும் அதிலிருந்து எப்படி சிறுகதைவரைச் செல்லலாம் என்பது பற்றியும் விளக்கினேன்.

அதன்பின் அவர்களுடனான உரையாடலை ஆரம்பித்தேன்.

பின் சிலர் அவர்களை பாதித்த சம்பவங்களைப் பகிர்ந்தார்கள். இதிலிருந்து எப்படி கதையைக் கண்டறியலாம் என்றும் எது அங்கு கதைக்கருவாக மறைந்திருக்கிறது என்றும் விளக்கினேன். அவர்களின் உரையாடலை மெல்ல மெல்ல அதற்கு ஏற்ற இடத்திற்கு இழுத்தேன்.

நடந்த சம்பவத்திலிருந்தும் அவ்வனுபவத்தில் இருந்தும் இன்னொரு சம்பவத்திற்கான கதைக்கருவை கண்டுபிடித்தோம். பலருக்கு ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் அது கொடுத்ததை உணர்ந்தேன்.

பொதுவில் பகிர முடியாத அனுபவங்களையும் கூட சிலர் தனிப்பட்ட முறையில் என்னிடம் பகிர்ந்தார்கள். அவற்றை கதையாக்கும் விதம் குறித்து விளக்கினேன். நிச்சயம் பல மாறுபட்ட கதைகளை இவர்களிடமிருந்து நாம் எதிர்ப்பார்க்கலாம்.

இந்தக் கட்டண வகுப்பில் கலந்து கொண்ட சிலரின் கருத்துகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நீங்கள் எங்கள் குறுங்கதை வகுப்பில் கலந்து கொள்ள விரும்பினால் தாராளமாக தொடர்பு கொள்ளுங்கள். இங்கு குறுங்கதை எழுதுவது குறித்து மட்டுமல்லாது நம்முள் இருக்கும் கதைகளை எப்படி நாமே எழுதுவது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

 

எழுதுங்கள்.

அதுதான் ரகசியம்.

அதுவேதான் தியனம்.

அன்புடன்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

 

குறுங்கதை எழுதும் வகுப்பு (முதல் வகுப்பு)

 


எங்களின் 'குறுங்கதை வகுப்பு' இனிதே இன்று தொடங்கியது. இரண்டு மாத வகுப்பாக திட்டமிட்டுள்ளோம்.

வாராந்திர கூகுள் சந்திப்பும் கூகுள் வகுப்பில் பயிற்சிகளும் இடம்பெறும்.
முதல் வகுப்பு என்பதால் ஒட்டுமொத்தமாக குறுங்கதைகள் குறித்தும் எங்கிருந்தெல்லாம் அந்த வடிவத்தை கண்டறியலாம் எனவும் பேசினேன்.
குறுங்கதைக்கும் ஒருபக்க கதைக்கும் என்ன வித்தியாசம்? அதனை எப்படி புரிந்துகொள்வது?
எது குறுங்கதை? அறிவுரைகள் சொல்லலாமா? போன்ற கேள்விகளும் வந்தன.
இவ்வகுப்பில் எழுத்தாளர்களும் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்களும் பங்கெடுத்துள்ளார்கள். குறிப்பாக வெவ்வெறு பணி செய்பவர்கள் இருக்கிறார்கள்.
தத்தம் துறை சார்ந்தே அவர்கள் இனி மாறுபட்ட சிந்தனையில் படைப்புகளைக் கொடுக்கலாம். அதற்கான அடிப்படை பயிற்சிகளையும் உரையாடல்களையும் இவ்வகுப்பில் நடத்துவோம்.
வகுப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்துகளை இதனுடன் இணைத்துள்ளேன்.
உங்களுக்கும் எழுதும் ஆர்வம் இருந்தால், குறுங்கதை எழுதும் வகுப்பில் கலந்துகொள்ள தொடர்பு கொள்ளுங்கள். இங்கிருந்தும் நீங்கள் உங்கள் எழுத்து பயணத்தை தொடரலாம்....
எழுதுவோம்...
அதுதான் ரகசியம்...
அதுவே தியானம்...
அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்




செப்டம்பர் 17, 2023

மாணவ எழுத்தாளர்கள்


கோலாலும்பூர், மெத்தடிஷ் ஆண்கள் இடைநிலைப்பள்ளியில்  அழைத்திருந்தார்கள். மாணவர்களுக்கு  சிறுகதை பட்டறையை நடத்தவேண்டும். சென்றேன். பட்டறையை வழிநடத்தினேன்.



மாணவர்களுக்கு பரிட்சையில் ஒரு தேர்வாக சிறுகதை எழுதுவதும் இருப்பது பாராட்டத்தக்கது. நான் பரிட்சை எழுதிய  காலக்கட்டத்தில் இருந்து பெரும்பாலும் சிறுகதை அல்லது கற்பனை கட்டுரையையே தேர்வு செய்து எழுதியுள்ளேன். சிலமுறை ஆசிரியரால் பாராட்டும் வாங்கியுள்ளேன். சில முறை திட்டும் வாங்கியுள்ளேன். இதில்  ருசிகரமான நிகழ்வு என்னெவெனின் அப்போது எந்தக் கதை பாராட்டு வாங்கியதோ அக்கதையின் கருவைக் கொண்டு ஒரு கதையை பின்னர் எழுதினேன். அவ்வளவாக கண்டுக்கொள்ளப்படவில்லை. ஆனால் என்னை திட்டு வாங்க வைத்த கதைக்கருவை வைத்து ஒரு கதையை எழுதினேன். அது பரவலாக வாசிக்கப்பட்டு பலரின் கவனத்திற்கு சென்றது.


மாணவர்களிடம் பேச என்னை அழைக்கும் ஒவ்வொருமுறையும் எந்த வயது மாணவர்கள் என்ன பேச வேண்டும் என முன்னமே தெளிவாகப் பேசிக்கொள்வேன். ஏனெனில் பங்குபெறும் மாணவர்களுக்கு சில பரிசுகளைக் கொண்டு செல்ல உதவியாக இருக்கும். சிறுகதை பட்டறை என்றாலும்; மாணவர்களின் நோக்கமும் ஆசிரியர்களின் நோக்கம் பரிட்சைக்கு எடுக்கவிருக்கும் புள்ளிகள் மீது இருக்கும். அது நியாயமும் கூட.


என்னால் ஒரு ஆசிரியர் போல முழுமையாக பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுடன் பேச முடியாது. ஏனெனில் அதற்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களைவிடவா நான் சொல்லிக்கொடுத்துவிடப்போகிறேன்.


அதேசமயம்; ஏன் எழுத வேண்டும், சிறுகதையைத் தேர்ந்தெடுத்து எழுதுவதால் என்னென்ன நன்மைகளை மாணவர்கள் அடைகிறார்கள். சிறுகதையை எழுதும் மனநிலையில்  மாணவர்கள் இதர பாடங்களில் எப்படி கவனத்தைச் செலுத்தலாம் போன்றவற்றின் மூலமாக வெளியில் இருந்து பாடத்திட்டத்திற்குள் நுழைவேன். அது மாணவர்களை கவரவும் செய்யும். சம்பத்தப்பட்ட ஆசிரியர்களிடம் முன்னமே அதைப்பற்றி சிறு உரையாடலை நடத்துவதால் அவர்களிடமிருந்தும் பல வகைகளில் ஒத்துழைப்பு கிடைக்கும்.


இம்முறை, பட்டறைக்கு வரவிருக்கும் மாணவர்களிடம் அவர்கள் விரும்பும் தலைப்பில் ஒரு கதையை எழுதி வாங்க யோசித்தேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரியை சுலோச்சனா மகாலிங்கம் எனக்கு உற்சாகத்தையும் ஒத்துழைப்பையும் கொடுத்தார். சிரத்தை எடுத்து மாணவர்களை கதைகளை எழுத வைத்த,. அதனை சேமித்து. என்னிடம் சேர்த்தார். பட்டறைக்கு முன்னமே மாணவர்களின் கணிசமான கதைகள் வாசிக்க கிடைத்தன. வாசித்தேன்.


முன்னமே நாம் கேள்விப்பட்ட கதைகளை நன்னெறிக்கதைகளை நகைச்சுவைக்கதைகளை சில மாணவர்கள் திரும்ப எழுதியிருந்தார்கள். கோவிட் காலக்கட்டத்தைப் பற்றியும் கதைகள் இருந்தன.  அதில் சில மாணவர்கள், கதைகளை உள்வாங்கி அவர்களின் பாணியில் அக்கதைகளைக் கொடுத்தார்கள். சில கதைகள் ரசிக்கத்தக்கவையாக இருந்தன. அனைத்திற்கும் குறிப்புகளை எடுத்துக்கொண்டேன். நானும் மாணவர்களைச் சந்திக்க தயாரானேன்.


சிறுகதை பட்டறை ஆரம்பமானது. வழக்கம் போல முதலில் மாணவர்களின் கவனம் என் மீது திரும்புவதற்கு சிலவற்றைப் பேசினேன். அதன் மூழம் அவர்கள் நெருங்கினார்கள். இனி நாம் பேசுவதை அவர்கள் கவனிப்பார்கள் என தெரிந்த பின் சிறுகதைக்குள் சென்றேன்.



மாணவர்களின் பங்கேற்பு சிறப்பாக இருந்தது. சில மாணவர்களிடம் இயல்பாகவே எதை எழுதலாம் என்ற புரிதல் இருந்தது. உதாரணமாக ஒரு மாணவனின் கதையில் இருந்ததைப் பகிர்கிறேன்;


‘எனக்கு சின்னவனாகத்தான் இருப்பான். முப்பத்தைந்து இருந்தால் அதிகம். ஆண் பிள்ளைக்கு கொஞ்சம் குட்டை. நல்ல நிறம். தடித்த உதடுகள். கறுப்பு மீசை. மைனஸ் இரண்டு என்று சொல்லும் கண்ணாடி’


மாணவனிடம் இப்படி ஒரு பத்தியை நான் எதிர்ப்பார்க்கவில்லை. கதைச்சொல்லியின் குரலில் கதை நகர்கிறது. ஒரு மனிதனின் அழகை நேர்த்தியைச் சொல்லிச்செல்கிறார் கதைச்சொல்லி. ஆனால் அம்மனிதன் கண்ணாடி போட்டிருப்பதை இதுவரையில் இருந்த அழகிலும் நேர்த்தியிலும் இரண்டு புள்ளிகள்ௐ மைனசாகப் பார்க்கிறார் கதைச்சொல்லி. அழகானப் பார்வையாக இதனைப் பார்க்கிறேன். இதுபோன்ற மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தினான் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் நிச்சயம் உருவாவார்கள்.


ஏறக்குறைய நான்கு மணிநேரம் இப்பட்டறையை வழிநடத்தினேன். ஒவ்வொரு மாணவரிடமும் பேசினேன். சிலருக்கு கதைகள் எழுதுவதிலும் கதைகளைச் சொல்வதிலும் ஆர்வம் இருந்தது. அப்போதே அவர்களை ஆசிரியர்களுக்கு அடையாளம் காட்டிவிட்டேன்.


நிகழ்ச்சி முடியும் தறுவாயில் பள்ளிக்கூடத்தின் சார்பாம எனக்கு நினைவுப்பரிசு கொடுத்தார்கள். பள்ளிக்கூட நூல்நிலையத்திற்கு நான் எழுதிய புத்தகங்களின் சில பிரதிகளை அன்பளிப்பாகத் தந்தேன். நல்லதொரு பொழுதாகஅ அன்றைய தினம் அமைந்தது.



நிறைவாக; அவ்வாசிரியர் மீண்டும் அழைத்திருந்தார். மாணவர்கள் எனது புத்தகங்களை நூல்நிலையத்தில் இருந்து எடுத்து வாசித்து முடித்துவிட்டதாகக் கூறினார். அவர்களும் அடுத்தடுத்த சில கதைகளை எழுதியுள்ளதாகக் கூறினார். பட்டறையில் கலந்து கொண்ட இரு மாணவர்கள் போட்டிக்கு சென்றுள்ளதாகவும் கூறினார். அம்மாணவர்களுக்கு இம்முறை வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ நமக்கு எழுத்தாளர்கள் கிடைக்கப்போகிறார்கள் என்பதில் எனக்கும் ஆசிரியருக்கும் ஏன் உங்களுக்கும்தான் மகிழ்ச்சிதானே.


எழுதுவோம்..💙

அதுதான் ரகசியம்…💙

அதுவேதான் தியானம்..💙


அன்புடன் #தயாஜி 

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்