பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 10, 2012

வாங்கிய புத்தகங்கள்






7,8.7.2012-ல் வல்லினம் ஏற்பாடு செய்திருந்த இருநாள் மொழியியல் வகுப்பில், கே.பாலமுருகன் எழுதி மிகவும் கவனம் பெற்ற நாவலான ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ நாவலை வாங்கினேன். பாலமுருகனின், ‘தம்பி தயாஜிக்கு’ எனும் கையெழுத்திட்டார்.

1. நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்
- எழுத்து பாலமுருகன் கேசவன்.

9.7.2012-ல் ஜெயபக்தி சென்றிருந்தேன்.

2. வெளியேற்றம் - நாவல்

எழுத்து - யுவன் சந்திரசேகர்.
 

ஜெயமொகனின் புத்தகம் மூலம் அறிமுகமான யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளை சமீபத்தில் வாங்கியிருந்தேன். இன்னும் படிக்கவில்லை. தற்சமயம் தொடர்ந்து நாவல்களைப் படித்துவருவதால், யுவன் சந்திரசேகர் எழுதிய நாவல்களைத் தேடினேன், ‘வெளியேற்றம்’ நாவல் கிடைத்ததில் மகிழ்ச்சி.

3. பெயரற்ற யாத்ரீகன் - ஜென் கவிதைகள்

தமிழில் மொழிபெயர்ப்பு - யுவன் சந்திரசேகர்.
 

இயற்கையாகவே ஜென் என்றால் ஒருவகை ஈர்ப்பு எனக்கு இருக்கிறது, அதிலும் இது கவிதை. தமிழில் மொழிபெயர்த்திருப்பதின் கீழ் ஆங்கிலத்தில் அந்த கவிதை எழுதப்பட்டுள்ளது, உடன் எழுதிவரின் பெயரும் இருக்கிறது.

5. நான் பின் நவீனத்துவ நாடோடி இல்லை (கட்டுரை தொகுப்பு)

எழுதியவர் யமுனா ராஜேந்திரன்.

-பின்நவீனத்துவம், அதன் மீதான விமர்சனம், மார்க்கிசியம், பின்மார்க்கிசியம், சோஷலிசம், கிராம்ஸின் முக்கியத்துவம், போலி அறிவியலின் தோற்றுவாய்கள் போன்ற தலைப்புகளில் கட்டுரைகளும், உரையாடலும் அடங்கிய புத்தகம்.







இப்படிக்கு தயாஜி....

ஜூலை 05, 2012

பயணிப்பவனி பக்கம் 19

பிடித்த ரஜினியும் பிடிக்காத காதலும்;  ஒன்றால்தான் இணைக்கப்பட்டிருக்கிறது





ரஜினியை பிடித்திருந்தது. ஏன் பிடித்திருந்தது. யோசிக்கையில்; பைத்தியமாகத்தான் இருந்திருக்கிறேன். எனக்கு எந்த ஒரு வகையிலும் நன்மை செய்திடாத எங்கோ இருக்கும் ரஜினி என்ற சினிமா பிம்பத்தை என் தூக்கி தலையில் வைத்து கொண்டாடியிருந்தேன். படிக்கும் அறையில், மேஜையின் மேல் ரஜினியின் படம். தலை முடியும் ரஜினியின் பாணி. பணப் பையிலும் என் படத்திற்கு அருகில், ரஜினியின் படம்.

இப்போது அவை எதுவுமே என்னிடம் இல்லை. ரஜினி மீது இருந்த கண்மூடித்தனமான ஈடுபாடும் இல்லை. முன்பு போல கேள்விகளுக்கு இல்லாத இடம் இப்போது இருக்கிறது.

இப்போது எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்கும் போது இருக்கும் கேள்விகள் இன்னமும் ஆழமாகிறது. ஒருவேளை ரஜினிக்கும் என்னைப்போல மூக்கு பெரிதாக இருப்பதோ, தப்புத்தப்பாய் ஆங்கிலம் பேசுவதோ, அகல நெற்றியோ, பரட்டை தலை முடியோ கூட காரணமாய் இருக்கலாம். ஆனால் ஏன் ரஜினி.

பதின்ம வயதில் ரஜினி என்பது என்னை இயக்கிய ஆளூமையாகவே எண்ணி வந்திருக்கிறேன். அதே விறுவிறு நடை. சத்தமாக சிரிப்பது. சினிமாவில் ரஜினி பேசிய வசனங்களை பேசிச் கண்ணாடி முன் என் முகத்தையே உற்றுப் பார்ப்பது. இதுவெல்லாம் இப்போது நினைக்கையில் கேலிக் கூத்தாக இருக்கிறது. ஆனால் அப்போது அதைத்தான் நான் அன்றாட வாழ்வின் அடிப்படையென்றே நம்பி வந்திருக்கிறேன்.

ரஜினி போலவே நெற்றியில் பட்டையெல்லாம் அடித்த காலம் அது. அந்த பிம்பம்தான் எனக்கு கடவுள்கள் மீது பற்றிக் கொண்டது. அவ்வபோது ரஜினியின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு அதிசயங்களும் என் வாழ்விலும் நடக்க வேண்டும். நானும் ஒரு ரஜினியாக வேண்டும் என்பதே லட்சியம் . அந்த எண்ணமே பக்தியாக மாறியது.

காலண்டரில் இருக்கும் சாமி படங்களை எல்லாம் வெட்டி வெட்டி புத்தகங்களில் ஒட்டிவைப்பது. தூங்கும் போது சாமி படத்தை சட்டைப் பையில் வைத்து படுப்பது. பள்ளியிலும் நண்பர்களிடம் இருந்து சாமி படங்களை காசு கொடுத்து வாங்குவது. பத்திரிகையில் வரும் கடவுள் சம்பந்தமான விபரங்களை சேகரித்து வைத்திருந்தேன். இந்த விந்தை செயலுக்கு என்ன காரணம் இருக்கும்.

இந்த வகை செயல்களில் என் காதலையும் நான் வைக்க நினைக்கிறேன், உடன் நண்பர்களையும்.

படிக்கும் போதினில் எனக்கு பல நண்பர்கள் இருந்தார்கள் அதிலும் நண்பிகள் அதிகம். போதாதற்கு பேய்க்கதை சொல்வதின் நான் மன்னனாக இருந்த நேரம் அது. ஆண்களை பேய்க்கதை சொல்லியும் பெண்களை கவிதைகள் சொல்லியும் சுலபமாக நம்வழிக்கு கொண்டு வந்துவிடலாம். கொண்டும் வந்தேன்.

இப்போது அந்த காதலும் இல்லை, எந்த நண்பனும் நம்பியும் உடன் இல்லை. ஒவ்வொன்றையும் யோசிக்கும் போது நடந்து வந்த ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஒரு மெல்லிய சம்பந்தம் இருப்பதாகவே படுகிறது. ஏன் சேர்ந்தோம் பிரிவதற்குத்தானோ. ஏன் காதலித்தோம் வெறுப்பதற்குத்தானோ.

அது எப்படி நண்பர்களும் பகைவர்களாகி விடுகிறார்கள். காதலிகள் துரோகிகளாகி விடுகின்றார்கள்.

எத்தனை நண்பர்கள் இருந்தாலும் நாம் மனம் வந்து பேசும் நண்பன் ஒருவனாகத்தான் இருப்பான். எனக்கும் இருந்தான். அவன் இளவரசன். நண்பர்கள் நாங்கள் தனி ஆளுமைகளாக வளர நேரிட்டது. கோவமும் சண்டையுமே உருவானவனாக அவன் ஆனான். கோவமும் சமாதானமும் சேர்ந்தே நான் ஆனேன். நான் அப்படியே என் அப்பா. அவன் அப்படியே அவன் அப்பா.

எங்களுக்குள் இயற்கையாகவே பிளவு ஏற்பட்டது. காரண காரியம் இல்லாதது போல அப்போது தோன்றினாலும் இப்போது அதன் காரணம் விளங்கும் நேரம் நெருங்குவதை உணர முடிகிறது.

தனியாளுமை வளர காரணமாய் அமைவதே கருத்துகள்தானே. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். இல்லாவிட்டாலும் தங்களுக்கு பிடித்த கருத்துகளுக்கு தலையாட்டிவிடுவார்கள். அப்படி அமையும் கருத்துகளுக்கு தங்களை இயற்கையாகவும் செயற்கையாகவும் தயாராகிறார்கள். கருத்துகளின் வலிமையே ஆளுமையாக உருமாறுகிறது. அப்படித்தான் நண்பர்கள் நாங்கள் பிரிந்தோம்.

தனித்தனி கருத்துகள் வழியே நாங்கள் அறிய விரும்பியிருக்கிறோம். எங்கள் அடையாளமே அதுதான் என நினைத்திருந்தோம். பெரிய புரட்சியெல்லாம் இல்லை. ‘‘நான் சொல்வதை நீ கேள்’’, என்ற வாசகம்தான் இலைமறைக்காயாக எங்களை இயக்கிக் கொண்டிருந்தது.

எத்தனை பிளவுகள் எத்தனை பிரிவுகள். எல்லாமே நாங்கள் எங்களுக்கு என தேடிக் கொண்ட கருத்துகளும், காட்ட நினைத்த எங்கள் ஆளுமைகளும்தான். ஆனால் அவை எல்லாமே ரஜினி படங்கள் போல விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் நிறைந்தவை ஆனால் போலியானவை. ரஜினியைப்போலவே மிகைப்படுத்தபட்ட கருத்துகள் அவை. ஆனால் ஏன் அதிலேயே தேங்கியிருந்தோம்.

அப்படித்தான் எங்கள் காதலும் இருந்தது. எனக்குத் தெரிந்து உடன் படித்த தோழனும் தோழியும் சமீபத்தில்தான் திருமணம் செய்துக் கொண்டார்கள். இவர்கள் காதலிக்கும் போது தோழி குறித்து தோழனும், தோழன் குறித்து தோழியும் மற்றவரிடம் குறை சொல்லாமல் இருந்திருக்கவில்லை.

பெரிய பெரிய பிரச்சனைகளையெல்லாம் சந்தித்தார்கள். எல்லாம் அவர்களுக்கும் இருக்கும் ஈகோ பிரச்சனைகள்தான். இப்போது கணவன் மனைவியாகி விட்டார்கள். எப்படி சாத்தியம் என விசாரித்தால் புரிகிறது. அவர்களின் திருமணம் கூட ஈகோவால்தான் நடந்தேறியதாம்.

பிரிய நினைத்த சமயம், ஊரென்ன சொல்லும், உலகம் என்ன சொல்லும் என்ற காரணத்தால் இணைந்திருக்கிறார்கள். தனக்காக வாழாமல் ஊருக்காக வாழ வைக்கும் காதல் இப்போது வேண்டுமானால் இனிக்கலாம். நாளையும் இனிக்குமா?

ரஜினி ஏற்படுத்திய மாயை போலவே எனக்கு ஒரு காதலி ஏற்படுத்திய மாயையும் இருந்தது. எந்த எதிர்வினையோ தெரியவில்லை. நான் தூக்கியெறிந்துவிட்டேன். நண்பர்களும் சுற்றமும், இதனை பெரும் குற்றமாகவே கருதி என்னை ஒதுக்கினர்.

இப்படி ஒதுக்கி தள்ளுகிறவர்களெல்லாம் ஒரு குணத்தின் அடிப்படையில் சேர்க்கலாம். எப்படி கெட்டவனை அடையாளம் காட்டுகிறவன் மற்றவர் கண்களுக்கு நல்லவனாக தெரிகிறானோ அப்படித்தான். உண்மையில் இவர்கள் இப்படிக் காட்டிக் கொடுப்பது கூட தாங்கள் நல்லவர்கள் என்று பிரகடணப்படுத்தத்தான். இது அரசியலுக்கும் பொருந்திவருகிறது. ஒரு ஊழலை இன்னொரு ஊழல் ஊருக்குக் காட்டி ஓட்டுக் கேட்கிறது!

காதல் என்ற மாயையில் நான் விழித்தது ஓர் ஆச்சர்யம்தாம். எந்த பொழுதில் என யூகிக்க முடியவில்லை. நிச்சயம் நடந்திருந்த ஒவ்வொரு சம்பவத்திற்கும் என் முடிவிற்கும் சம்பந்தம் இருந்திருக்க வேண்டும். இப்படி ஒன்றின் பின் ஒன்றாக நடக்கும் ஒவ்வொன்றும் அதன் விளைவை நோக்கி நாம்மை நகர்த்திக் கொண்டே இருக்கிறது. எந்த நொடியில் எந்த பொழுதில் அது நமக்கு விழிப்பைக் கொடுக்கும் என தெரியவில்லை. எல்லோர்க்கும் விழிப்பு வருவதும் இல்லை.


நன்றி
 http://www.vallinam.com.my/issue43/thayaji.html
இதழ் 43
ஜூலை 2012

‘அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்


     

அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்


 (6.6.2012)
    இன்றுதான், ரெ.கார்த்திகேசு எழுதிய அந்திம காலம்நாவலை படித்து முடித்தேன். 1998-ல் எழுதப்பட்ட இந்நாவல் 2007 இல் மறுபதிப்பு வந்தது.  ரெ.கா-வின் மூன்றாவது நாவல் இது.

      மனைவி ஆசிரியர் பயிற்சி கழகத்தில் படித்த சமயம், திறனாய்வு செய்த நாவல் இதுவென அறிமுகம் செய்தார். இந்நாவலை படிக்கும் முன்  ரெ.கா-வின் சில சிறுகதைகள் தவிர (அதுவும் இப்போது நினைவில் இல்லை)எந்த எழுத்துகளும் எனக்கு பரிச்சயம் இல்லை.

    சுஜாதாவின் தொடர்கள், பின்னாளில் புத்தகமாக வெளிவந்தது. அதை தீவிரமாக வாங்கி படித்தேன். அவ்வாறே இந்திரா சௌந்தரராஜன், ஆர்னிகா நாசர் உடன் ராஜேஷ்குமார் அதில் அடங்குவர். ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் ஒரு எதிர்பார்ப்பும் முடிச்சுகளும் இருக்கும். பரப்ப்புக்கு கொஞ்சமூம் பஞ்சம் இருக்காது.  நாவலின் வடிவமைப்பு இப்படித்தான் இருக்குமனெ எனக்குள் நானே முடிவெடுத்துக் கொண்டேன். தன்னையே தனக்கு குருவாக நினைப்பவன் முட்டாள்என விவேகானந்தர் சொன்னதை படித்திருந்தாலும் அதன் உள் அர்த்தம் புரிந்திருக்கவில்லை.

     கால போக்கில் எழுத்துகளில் இருக்கக் கூடிய வித்தியாசங்கள் வாசிப்பின் வழி தானாகவே புரியத் தொடங்கியது. அதன் காரணமாகவே சில காலம் வரை உடன் சுற்றிவந்த பலரிடம் இருந்து விலகும்படி ஆனது. முரண் படுவதால் மட்டுமே என்னை முட்டாளாக்கி வேடிக்கை காட்டியவர்களும் உண்டு. வெறும் பெண் என்ற அமைப்புகளால் மட்டுமே கொண்டாடப்பட்டவரும் உண்டு. ஜால்ராக்களின் சத்தம் சந்தமாய் ஒலிப்பதால் கூட்டம் கூடியவர்களும் உண்டு.

     கடந்த சில மாதங்களாக ஜெயமோகன் எழுத்துகளை படித்து வந்ததில் இருந்து அவர் அறிமுகம் செய்த கதைகளையும் முன்மொழிந்த எழுத்தாளர்களையும் தேட ஆரம்பித்தேன். ஜெ.மோ தன் புத்தகத்தில் நாவல்கள் குறித்து எழுதியதை/ படிக்கும் போது எனக்கும் நாவல் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதற்கு அடித்தளமாக அமைந்தது, ஒருமுறை வல்லினம் கலை இலக்கிய விழாவில் கலந்து கொண்டு நாவல்கள் குறித்து அமைந்த ஜே.மோ-வின் பேச்சுதான் எனலாம்.
 
   பின்னாளில் வல்லினம் அகப்பக்கத்தின் ஆசிரியர் நவினுடன் நட்பு கிடைத்த பிறகு பலவற்றைப் பகிரும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்றுதான் அன்று பேசிய ஜெ.மோவின் பேச்சு
.
   சிற்றிதழ்கள் குறித்து பேசும் பொருட்டு , மலேசியாவிற்கு வருவதற்கு முன்பே தலைப்பும் கொடுக்கப்பட்டிருந்ததாம். திடீரெனத்தான் நாவல்கள் குறித்து பேசும்வடி ஆனது. அந்த பேச்சினை இப்போதுகூட நீங்கள்   ‘யுடியூப்’-ப்பில் கேட்கலாம். அதிகம் பேரால் கேட்கப்படும் ஜெ.மோவின் பேச்சுகளில் அதுவும் ஒன்று.

    நல்ல கதைகள் தன்னைத்தானே எழுதிக் கொள்வது போலத்தான் என்னவோ நல்ல பேச்சுகள் தனக்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றன போலும்.

   சமீபத்தில் தொடர்ந்து நாவல்களை படிக்கும் வாய்ப்பைக் காலமும் நேரமும் எனக்கு வழங்கியது. ஆர்வம் என்ற பெயரில் எனக்கு நானேப் பெருமை சேர்க்க   விரும்பவில்லை.

   தொடர்ந்து சுந்தர ராமசாமியின் ஒரு புளிமரத்தின் கதை’, தகழி சிவசங்கர பிள்ளை மலையாளத்தில் எழுதி சுந்தர ராமசாமி தமிழில் மொழிபெயர்த்த தோட்டியின் மகன்’, சாரு நிவேதிதா எழுதிய எக்ஸிடென்சியலிசமும் பேன்ஸி பனியனும்’, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி’, வைக்கம் முகமத்து பஷீர் எழுதியஆனைவாரியும் பொன்குருசும்’- (நெடுங்கதை) போன்ற நாவல்களில் மூழ்கியிருந்த பல கேள்விகளை எனக்குள் கேட்டுக் கொண்டே அடுத்த நாவலை எடுக்கும் பொழுதுதான் , மனைவி அந்திம காலம்நாவலை அறிமுகம் செய்தாள்.

    தொடர்ந்து படித்த ஐந்து நாவல்களைக் குறித்து எழுத வேண்டும் என எண்ணினாலும் எழுத்துரு இன்னமும் கிடைக்கவில்லை. அதற்கு ஏன் இந்த அவசரம் அந்திம காலம்குறித்து எழுத..?

   தெரியவில்லை. சில முடிவுகளை நானாக எடுப்பது குறைந்து தானாக நடக்கத் தொடங்கியிருக்கும் நேரம் இது.

   இனி அந்திம காலம்’- நோயாளியில் நெடுந்துயரம் என சொல்லலாமா? அல்லது வயோதிகத்தின் பாவப் பரிகாரம் எனப்  பொருள் கொள்ளலாமா?

  கதையில் நாயகன் சுந்தரம் , தன் வயோதிக காலத்தில் தனக்கு மூளைப் புற்று நோய் இருப்பதைக் தெரிந்துக் கொள்கிறார். அங்கிருந்துதான் நாவல் தொடங்குகிறது.

   தொடக்க அத்தியாயம் வியப்பை எற்படுத்தும் வகையில் எழுதியிருக்கின்றார். குறிப்பாக, ‘காரின் கூரையில் விழுந்த மழை நீர் கண்ணாடியில் ஆறாக வழிந்து கொண்டிருந்தது, அகலாமான கண்ணாடியெங்கும்  மழை வரைகின்ற ஓவியங்கள். காரின் வைப்பர் அந்த ஓவியங்களை இடைவிடாது அழித்துக் கொண்டிருந்தன. டடக்.....ட்டக்... டடக்... அழிக்க அழிக்க/ புதிதாக ஓவியங்கள். அழிவது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத மழை. அழிப்பதைப் பற்றி குற்ற உணர்ச்சியும் தயக்கமும் இல்லாத வைப்பர். ’ .

    நாவலின் தொடக்க அத்தியாயத்தில் வந்திருக்கும், இந்த வரிகள் முழு நாவலின் சாரத்தை ஓரளவேனும் சொல்லியிருக்கிறது எனவே மனதில் பட்டது. அந்த வைப்பர் போலத்தான் வாழ்க்கையும். வாழ்க்கை எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தயக்கமும் இல்லாமல் ஒவ்வொருவரையும் பாடாய்ப்  படுத்துகிறது. மழையால் ஓவியம் போலக் காட்சியளிக்கும் தண்ணீரெல்லாம், எந்த ஒரு பாரபட்சமுமின்றி அழிக்கப்படுவதும். பின் புதிதாக வரையப்படுவதும் இறப்பையும் பிறப்பையும் சொல்கிறதோ ? பிறக்கிறார்கள் இறக்கிறார்கள். இறக்கிறார்கள் பிறக்கிறார்கள். இதுதான் வாழ்க்கையா..?

    பிறப்பையும் இறப்பையும் மிக சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால் இரண்டுக்கும் இடையில் இருக்கும் அனுபவம் எத்தனை வலிகள் நிறைந்தவை. எப்படி அந்த வலியை கணக்கெடுப்பது? வயது மட்டுமே வலியை/ குறித்த பிரக்ஞையை கொடுக்கிறது.

    ‘அந்திம காலம்நாவலில் வயோதிகர் சுந்தரத்திற்கு வந்திருக்கிற அதே புற்றுநோய் அவரது பேரன் பரமாவிற்கும் வந்திருக்கிறது. மரண வாசலில் இருக்கும் இருவரையும் படிக்கும் போதே வயதின் பிரக்ஞை புரிகிறது.

    தலைமையாசிரியராக  இருந்து பதவி ஓய்வு பெற்ற இரண்டாம் ஆண்டில் அவர் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் யாரும் எதிர்பாராதது. சுந்தரத்தின் மனைவி ஜானகி. மகள் ராதா, மருமகன் சிவமணி, மகன் வசந்தன், பேரன் பரமா.

     அவ்வபோது சுந்தரத்தின் பழைய நினைவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சுந்தரம் ஜானகி இருவரின் அறிமுகமும்  , திருமணம் நடந்த கதையெல்லாம் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இவர்களின் அன்பான வாழ்க்கை முறைக்கு முற்றிலும் மாறுபட்டிருந்தாள் மகள் ராதா. ராதாவும் கணவன் சிவமணியும் காதலித்துத்தான் திருமணம் புரிந்திருந்தார்கள் என்றாலும், தன் தாய் தந்தையைப் போல இல்லாமல், மனமுறிவுக்கு செல்கிறார்கள். ராதாவால் சிவமணியின் மிருகக் குணம் பொறுக்க முடியாமல் 3 வயது பரமாவை தன் பெற்றோரான சுந்தரம் ஜானகியிடம் கொடுத்துவிட்டு மறுநாள் வெளிநாடு சென்றுவிடுகிறாள். தனக்கு ஒரு வெள்ளைக்காரனைப் பிடித்திருப்பதாகவும் அவரும் தன்னை விரும்புவதாகாவும் , விரைவில் பரமாவை அங்கே கொண்டு செல்லப்போவதையும் கடிதம் வழி சொல்லியிருந்தாள். மேற்கொண்டு முகவரியோ தொலைபேசி எண்ணோ இருக்கவில்லை. அவளே அடிக்கடி அழைப்பதாக எழுதியிருந்தாள்.

    சுந்தரத்துக்கு நல்ல நண்பனாக இருக்கிறார் ராமச்சந்திரன். நல்ல நட்பிற்கு அடையாளமாக இவர்கள் இருவரையும் சொல்லலாம்.

    சுந்தரத்தின் மறுமகனான நேசமணி மிருகக் குணத்தில் இருந்து, தன் குழந்தை பராமுக்கு எற்பட்டிருந்த நோயால் மனிதனாகின்றான். தன் மாமனாரிடம் அவன் மன்னிப்பு கேட்கும் நேரம் படிக்கும் போதே மனதைக் கனக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் பரமா இறந்துவிடுகிறார். குழந்தையின் மரணத்திற்குக்  காரணம் தங்களின் ஓயாத சண்டைதான் என உணர்கிறார்கள் நேசமணியும் ராதாவும். சண்டைபோட்டு ஆளுக்கு ஒரு புறம் இருந்த நேரங்களுக்கு பதிலாக குழந்தையை கவனித்திருந்தால் , நோயின் அறிகுறி தொடக்கத்தில் இருந்தே கண்டு கொண்டு சிகிச்சை கொடுத்திருக்கலாம்.

    சுந்தரத்தின் குடும்பத்தில் இருக்கும் மற்ற இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை/ சொல்லவேண்டும். ஒருவர் சுந்தரத்தின் அக்கா அன்னபூரணி,  மற்றொருவர் சுந்தரத்தின் அத்தை.

    எல்லா சமயமும்  சூழ்நிலைக் கைதி ஆகாமல் பதட்டமில்லாமல் ஒவ்வொன்றையும் செய்துவருகின்றார் அக்காள் அன்னபூரணி.

    இளம் விதவையான சுந்தரத்தின் அத்தை, கணவன் நீரில் மூழ்கி இறப்பதைப் பார்த்து பீதிக்குள்ளாகி, மனப்பாதிப்பை அடைகிறார். தன் வாழ்நாளில் கடைசி வரை, ‘தண்ணி பக்கம் போகாதேஎன இதையே சொல்லி வருகிறார். துணிகளை துவைப்பது முதல் சமைப்பது வீட்டைச் சுத்தம் செய்வது என எதைச் செய்தாலும் அதற்கான பலனைத் தேவையில்லாமல் போனது அத்தைக்கு. ஒரு தேர்ந்த ஞானியைப் போலவே இவர் எனக்கு தெரிகிறார். வீட்டில் இறப்பு நடந்த சமயம் , சுந்தரத்துக்குப் புற்றுநோய் எனத் தெரிந்த பொழுதும் என எல்லா காலகட்டமும்  மந்திர உபதேசம் போல  ‘தண்ணி பக்கம் போதான்னு சொன்னே கேட்டியாஎன்பதையே கேட்கிறார்.  ஞானிகள் இப்படித்தானோ  

    தனக்கு கடமையாக்கப்பட்டதை  செய்த பிறகும் செய்யும் பொழுதும் மனம் ஒன்றையேதானே நினைத்திருக்கும்..!

   நோயின் பிடியில் ஒவ்வொரு மாறுதல்களியும் சுந்தரத்தின் மூலம் நாமும் தெரிந்து கொள்ள முடிகிறது. படிப்பவர்களுக்கு ஓரளவேனும் புற்று நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பலாம்.

    என்னை/ கவர்ந்த கதாபாத்திரம்  என மதர் மேகியை/ சொல்லலாம். நோயாளிகளுடன் உரையாடவும் தொண்டூழியம் செய்யவும் இருக்கிறார் இவர். அவ்வ/போது நோயாளியான சுந்தரத்துக்கு இவர் சொல்லும் அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும் படி இருக்கிறது.

    சுந்தரம் சொல்லும் கதையில், அவ்வபோது கதை சொல்லியும் கதை சொல்கிறார். சில இடங்களில் விளைவுகளைச் சொல்லிவிட்டு அடுத்த பத்தியில் அதன் சம்பவங்களைச் சொல்வது ரசிக்கும்படி இருந்தது. இடையிடையில், சுந்தரம் படிக்கும் நூல்களில் இருந்த மேற்கோள்களைப்  
 படிப்பது, சுவாரஸ்யமாக இருக்கிறது.

    புற்றுநோய் ஆராய்ச்சியாளராக வரும் மருத்துவர் ராம்லியின் கதாபாத்திரம் திருப்பத்தைக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்க/பட்டு இயல்பாகவே இறுதிவரை செல்கிறது. சுந்தரத்தின் பழைய மாணவர்தான் இந்த ராம்லி. அப்போது, கட்டொழுங்கு ஆசிரியரான சுந்தரத்திற்கும் பிரச்சனை கொண்ட மாணவனான ராம்லிக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனை நேர்மைக்கு அதிகாரத்திற்கும் ஏற்படும் போராகச் சொல்லலாம். அதனை நல்ல சிறுகதையாக கணக்கெடுக்கலாம். நல்ல கதை சொல்லல், திருப்பம், சரளமான நடை.

     மேற்கொண்டு சொல்ல பல இருந்தாலும், நீங்களே இந்நாவலைப் படிக்கும் போது கிடைக்கவிருக்கும் அனுபவத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.

    இந்நாவலை எழுதி ரெ.கா-விற்கு, இந்நாவலை வாசித்தவன் என முறையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆனால் அவரிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். இதுதான் உங்கள் எழுத்துகளின் முதல் நாவலாக நான் படித்தது என்பதால் உங்கள் எழுத்துகளும் கதை சொல்லும் முறைகளும் எனக்கு  பரிச்சயமில்லை. அதனால் இந்த/ கேள்விகள் என நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அல்லது வாசித்தவன் முன் வைக்கும் சந்தேகங்கள் எனவும் நீங்கள் பொருள் கொள்ளலாம்.


1.   சுந்தரத்தின் மகனாக சில இடங்களில் மட்டும் சொல்லப்படும் வசந்தன்  என்ன ஆனான்.? தொடக்கத்தில் அவன் குறித்து/ சொல்கிறீர்கள் அதன் பின் இடையில் ஒரு முறை, அடுத்து கடைசி அத்தியாயத்தில்  வருகிறான். தந்தைக்குப் புற்று நோய் என எல்லாருக்கும் தெரிந்த பிறகும் கூட வெளிநாட்டில் இருக்கும் மகனுக்கு தெரியாதா என்ன..?



2.    300 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை நான் 8 நாள்களில் படித்து முடித்துவிட்டேன். ஆர்வம் மட்டும் காரணமல்ல, உங்கள் கதை சொல்லும் முறையிலும்தான். இப்படி விரைவாகப் படிக்கும் படி இயல்பாக கதை கொண்டு சென்ற நீங்கள் ஏன் கடைசி அத்தியாயத்தில் அப்படி ஒரு காரியத்தைச் செய்தீர்கள்? கடைசி பத்தொன்பதாவது அத்தியாத்தில் நீங்கள் ஐந்து பக்கங்களில் எழுதியிருந்ததை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தீர்களா..? ஏன் அப்படி ஒரு நாடகத்தன்மை (இவ்வார்த்தை புண்படுத்தினால் மன்னியுங்கள் எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை). நீண்ட கதையின் சுருக்கம் போல ஏன் அப்படி அவசரத்தில் முடித்துவிட்டீர்கள்.? யாரோ கதையை முடிக்கும் படி ஒரு மணிநேரம் கொடுத்தது போல அல்லவா  நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்?

3.    ஒருவேளை நாவலில் முடிவு உங்கள் எழுத்தின் பாணியோ..?



4.  சீதை பதிப்பகம் வெளியீடு செய்த நாவலைத்தான் நான் வாசித்தேன். இதில் உள்ள சில மலாய் வார்த்தைகளுக்கு தமிழிலும் அதன் அர்த்தத்தை கீழ் எழுதியிருக்கலாமே..?


வாசகன் என்ற முறையின் படித்த நாவல் குறித்து பதிவு இது.
இப்படிக்கு, தயாஜி.

ஜூலை 02, 2012

ஐம்பது கிலோ நமிதாவும், காணாமல் போன நயன்தாராவும்


    நீங்க எவ்வளவு நேரம் தூங்குவிங்க  ?  நாம சொல்ற  பதிலை வச்சே நம்மை சில பேர் கணிச்சிருவாங்க. சோம்பேறி, தூங்குமூச்சி, அதுக்கும் மேல உருப்படாதவன். சொல்றவங்க என்னத்த உருப்பட்டாங்கன்னு தெரியலை. கேட்டாலும் சொல்ல மாட்டாங்க. அது வேற கதை.

   சரி நம்ப கதைக்கு வருவோம். மனிதனோட சராசரி தூக்கம் ஆறு மணிநேரம்னு யாரு சொல்லியிருப்பா ? எதுக்காக எல்லோரும் அதையே கடைபிடிக்கறாங்கன்னு எனக்கும் தெரியலை. அந்த ஆறு மணிநேர தூக்கத்தையும் தாண்டியும் உங்களைத் தூங்க சொன்னா சுமாரா எத்தனை மணி நேரம் தூங்குவிங்க சொல்லுங்க.
    ஒரு மணிநேரம். ரெண்டு மணிநேரம் . என்னங்க , அவ்வளவு நேரம்தானா. நான் எவ்வளவு நேரம் தூங்குவேன்னு தெரியுமா? ஒரு நாள் முழுவதும். வெளிய இருந்துப் பார்க்கத்தான் இது தூக்கம். ஆனா தூங்கற எனக்கு இது ஒருவகை பயணம். டிக்கட் செலவில்லை, லக்கேஜ் அளக்கவில்லை  துணையாகத் தொல்லை யாரும் இல்லை. தனியான பயணம் ஆனால் சுவையான பயணம். இந்த பயணத்தை நீங்க புரிஞ்சிக்கனும்னா, ஒரு வழி இருக்கு.
   ரொம்ப சாதாரணமான கேள்விகளை நான் கேட்கறேன் பதில் சொல்றிங்களா...? பதிலை மனதில் நினைச்சிக்கோங்க. அது கூட போதுமானதுதான். நமக்கு தேவை நினைப்பு.
கேள்வி 1.
ரஜினியுடன் கோச்சடையானின் நடிக்க ஆசையா..?
கேள்வி 2.
50 கிலோ நமிதாவுடன் நடனம் ஆட ஆசையா..?
கேள்வி 3.
நினைத்த பெண்களின் ஒரே நாயகனாக ஆசையா..?
கேள்வி 4.
காணாமல் போன நயன்தாராவை தேடிக் கிடைக்க ஆசையா..?
கேள்வி 5.
தமிழர்களெல்லாம் தமிழ் பேசிக் கேட்க ஆசையா..?
கேள்வி 6.
எழுத்தாளர் சங்கத்துல இருக்கறவங்க எல்லோரும் வாசிக்கனும் யோசிக்கனும் விவாதிக்கனும் எழுதனும்னு ஆசையா...?
கேள்வி 7.
ஒரு பத்திரிகையும் இன்னொரு பத்திரிக்கையும் மக்களுக்காக மட்டுமே பாடுபடனும்னு ஆசையா...?
கேள்வி 8.
கதையை கதையா மட்டும் பார்க்கற பயபுள்ளைங்க பக்கத்துல இருக்கனும்னு ஆசையா..?

   எட்டு  கேள்விகளோடு நிறுத்திக் கொள்கிறேன். இரண்டு காரணம் இதற்கு உண்டு;
ஒன்று; எனக்கு எட்டு எண் ராசி.
மற்றொன்று; அதுதான் ஏழரையைத் தாண்டி வந்திருக்கு.

    தூக்கம் வெறும் உடல் சோர்வுக்கு மட்டுமில்லைங்க. அதையும் தாண்டிய சூட்சுமம் நிறைந்தது. சூட்சுமம்னு நான் சொன்னதும், இது ஏதோ மர்மக்கதை ஆவிக்கதைன்னு படிக்க ஆரம்பிச்சிடாதிங்க. அப்பறம் தேவையில்லாம என்னை திட்டுவிங்க. அப்படியே போகிற போக்குல படிச்சோமா போனோமான்னு இருங்க. அதான் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. இல்லைன்னா மேல கேட்ட கேள்விகளுக்கேகூட நீங்க என்னை கடுமையான முறையில் விமர்சிப்பிங்க.
    ஒன்னு கவனிச்சிருக்கிங்களா, கருத்தை கவனிக்காம அதை சொன்னப் பாவத்துக்காக பாடாய் படுத்தப்பட்டவங்க நம்மவங்கத்தான். படுத்தறவங்களும் நம்மவங்கத்தான். ஊர்ல உலகத்துல நடக்கறத சொல்லைங்க, எனக்கு தெரிஞ்ச கொஞ்சூண்டு இலக்கியத்துல சொல்றேன். கோவிச்சிக்காதிங்க.
    தூங்கி எழுந்திருக்கும் நேரத்துக்கு முந்தைய பதினைஞ்சு முதல் முப்பது  நிமிடங்களுக்கு, ஆல்பா நிலைன்னு பேரு, தெரியுமா. ஆல்பா நிலை தியானம்னு கூட இதை சொல்றாங்க. இந்த நேரத்துலதான், நம்முடைய மனம் ரொம்ப இலகுவா இருக்குமாம். இலகுன்னா என்னன்னு கேட்கறிங்களா..?
    தனக்கு ஓட்டு போடுவாங்கன்னு தெரிஞ்ச நண்பர்களை , அவங்க தகுதியானவங்களோ இல்லையோ அதெல்லாம் கணக்கில் சேராது. அவங்களை சங்கத்துல சேர்த்துக்கிட்டு வருசா வருசம் தேர்தல் நடத்தற தலைவரா இருக்கறதே கூட இலகுவான காரியம்தான். என்ன ஒன்னு, இந்த பிம்பமெல்லாம் கொஞ்சம் நாள் கம்பத்துல ஏறிடும்.
    இதை படிச்சிட்டு நேரா, அவர்கிட்ட சொல்லிடாதிங்க. ஏற்கனவே எனக்கும் அவிங்களுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு.  என்ன தகராறு....? சரியா சொன்னிங்க ‘எனக்கும் அவிங்களுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு’. ஆனா ஒன்னு அதே வழிமுறைய நீங்க திறம்பட கத்துக்கிட்டிங்கன்னா, வருசத்துக்கு என்ன மாசத்துக்கு ஒரு தடவைகூட தேர்தல் வைக்கலாமே. நீங்கதானே எப்படியும் தலைவரா வருவிங்க, அப்புறம் என்ன கவலை.
    நான் பாருங்க, ஆல்பா-வை விட்டுட்டு அந்த பக்கம் போய்ட்டேன். அந்த பக்கம்னு நான் சொல்றதை அவர் பக்கம்னு புரிஞ்சிக்காதிங்க. அந்த பக்கம் அவ்வளோதான்.
   அந்த ஆல்பா நிலையில நாம தூங்கியும் தூங்காமலும், எழுந்தும் எழாமலும் இருப்போம். இலகுவா இருக்கற மனசுகிட்ட நீங்க எதை தொடர்ச்சியா சொல்றிங்களோ அதையே மனசு கப்புன்னு புடிச்சிக்குமாம். எப்படி.... தொடர்ந்து தலைவரா இருக்கற மாதிரியான்னு கேட்டு என்னை சிக்கலில் மாட்டிவிட்டுடாதிங்க. அது இலகு என்பதற்கு இலகுவா நான் சொன்ன உதாரணம்.
    தொடர்ந்து ஆல்பா நிலையில மனதிடம் பேச பழகிட்டா, மனம் நம் வசமாகிடுமாம். இதில் என்ன ஒரு கஷ்டம்ன்னா, நமக்கு அந்த நேரத்துலதான் கனவு மேல கனவா வரும். அந்த கனவுகளுக்கு காரணம் இருக்கு, அவை வெறும் கனவுகள் அல்ல. மாறாக அவை எல்லாம் நம் ஆழ்மனதின் செயல்பாடு.
    அந்த கனவு எப்படிப்பட்டது தெரியுமா..? அதற்கான பதில்களை பார்ப்போம்.
பதில் 1.
ரஜினியுடன் கோச்சடையானில், அவருக்கு இணையான வில்லனாக நடித்துக் கொண்டிருப்பீர்கள்.
பதில் 2.
50 கிலோ நமிதாவை, அப்படியே தூக்கி இடுப்பில் உட்கார வைத்து பாடல் முழுக்க ஓடி வருவீர்கள்.
பதில் 3.
நினைத்த பெண்களின் நாயகனாக நடந்துவருவீர்கள்.
பதில் 4.
காணாமல் போன நயன்தாராவைத் தனியாளாய் தேடி கண்டு பிடித்துவிடுவீர்கள்.
பதில் 5.
தமிழர்களெல்லாம் ஒருவருக்கொருவர் தமிழைப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
பதில் 6.
எழுத்தாளர் சங்கத்துல இருக்கறவங்க எல்லோரும் தாங்கள் வாசித்ததை, எழுதியதையும் தகுதியானவர்களோடு விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.
பதில் 7.
ஒரு பத்திரிகையும் இன்னொரு பத்திரிக்கையும் மக்களுக்காக மட்டுமே பாடுபடுவது நினைத்து பெருமிதம் கொள்வீர்கள்.
பதில் 8.
கதையை கதையா மட்டும் படித்து அதன் உள்ளடக்கத்தை நேர்மையான முறையில் விமர்சித்துக் கொண்டிருப்பார்கள்.
    இது போன்ற கனவுகள்தான் ஒன்றின்பின் ஒன்றாக வந்துக் கொண்டிருக்கும். கூர்ந்து கவனித்துப் பார்த்தால், மேலே என் கேள்விகளுக்கும் உங்கள் கனவுகளுக்கும் இருக்கும் ஒற்றுமை புலப்படும். எப்போதோ நீங்கள் ஆசைப்பட்ட ஒன்று, எப்போதோ நீங்கள் எதிர்ப்பார்த்த ஒன்று, எப்போதோ நீங்கள் விரும்பிய ஒன்று, அதிகாலை ஆல்பா நிலையில் பதிந்திருக்கிறது.
   அதுவே கனவாக மாறியிருக்கிறது. பின்னர் தொடர் கனவாகிவிட்டிருக்கிறது. அந்த கனவினை நினைவாக்க நீங்கள் நினைத்தால் மட்டுமே முடியும். இதைத்தான் பிரம்ம முகுர்த்தம் என சொன்னார்களோ என்றுகூட எனக்கு சந்தேகம் இருந்தது. தமிழில் வரும் பிரம்ம முகுர்த்தமும், ஆங்கிலத்தில் வரும் ஆல்பா தியானமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஆங்கிலத்தில் சொல்லபடும் ஆல்பாகுத்தானே மதிப்பு அதிகம்.
    யோசித்து பாருங்கள் முன்னமே நான் பிரம்ப முகுர்த்தம் என சொல்லியிருந்தால், கனவின் ஆழத்தை விடவும் கல்யாண வேலைகள்தான் உங்கள் நினைவுக்கு வந்திருக்கும். ஐயார் பெயரில் சில பொய்யர்களை  பணம் கொடுத்துக் கூட்டிவந்திருப்போம். அவரும் மனனம் செய்ததை அர்த்தம் புரியாமல் ஒப்புவிப்பார். கல்யாணத்தை கவனிக்காமல் கண்டகண்ட கதைகளை பேசிக் கொண்டிருக்கும் பெண்கள், அரை தூக்கத்தில் இருக்கும்  ஆண்கள், உழைத்துக் கொண்டிருக்கும் நண்பர்கள். உட்கார்ந்திருக்கும் உறவுகள் இப்படி இல்லாததையும் பொல்லாததையும்  மட்டுமே நினைத்திருப்பீர்கள்.
    நான், ஆல்பா என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும் ஊருக்கும் உலகத்துக்கும் ஏதோ சொல்லவறேன் பேர்விழி மாதிரி என்னை கவனிக்க ஆரம்பிச்சிங்க. நானும் உங்க நினைப்ப முடிந்தவரை காப்பாத்தியிருக்கேன்னு நினைக்கறேன்.
   அது என்னமோ தெரியலைங்க, வெள்ளைக்காரனுங்களை விட நாமதான் அவன் மொழியை நேசிக்கிறோம். இதுவும் ஆல்பா நிலையில் வந்த எண்ணமாக இருக்கலாமோ?
    இருங்க, இருங்க எனக்கு தூகம் வர மாதிரி இருக்கு. இவ்வளவு நேரம் முழிச்சிருந்ததே பெரிய ஆச்சர்யம். நயன்தாராவைத தேடனும் அப்பறம் மிக முக்கியம் கோச்சடையான் இல்லை; நமிதா. அதுவும் ஐம்பது கிலோ. அல்பா.. ஐம்பது கிலோ.. அல்பா.. 50 கிலோ.. ஆல்லோ.. 50 கில்பா.... நமீம்மிம்மிம்மிமிமிம்மிம்ம்.......



- தயாஜி -

ஜூலை 01, 2012

கிறுகிறுவானம் - தெரிகிறது என் பால்யம் !


 1.7.2012

    சமீபத்தில் ஆல்பெர் காம்யு-வின் அந்நியன் நாவலைப் படித்து சில கேள்விகளை எனக்குள்ளே கேட்கத் தொடங்கியிருந்தேன். சரியாக தூங்கவும் முடியவில்லை. தொடர் குழப்பங்கள். அந்த வாசிப்பு அனுபவத்தை எழுதலாம் என உட்கார்ந்தால், கேள்விகள் ஒவ்வொன்றும் சுற்றத்தையும் சமூகத்தையும் நோக்கியே செல்கிறது. அபத்தம் என்பது கூட எனக்கு முழுமையாக புரியவில்லை ஆனால்; நாயகன் எந்த தவறும் செய்யவில்லை என்பதை மட்டும் உணர்ந்திருந்தேன். மேலும் அது குறித்து எழுத வேண்டும்.

      அதற்கு முன், இப்போது கிடைத்த மூன்று நாள் இடைவேளையில், இலகுவாக எதையாவது படிக்கலாம் என , என் அலமாரியில் தேடினேன். கிடைத்தது, எஸ்.ரா-வின் 'கிறுகிறுவானம்' எனும் குழந்தைகளுக்கான நாவல்.

(சில மாதங்கள் நாவல்கள் மட்டும் படிக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.)

     ஒரு கிராமத்து சிறுவன் அவன் மொழியிலேயே கதையை சொல்லிச் செல்கிறான். இருக்கமான சூழலில் இருந்து மீண்டும் என் பால்ய காலத்திற்கு பயணித்தது போல உணர்ந்தேன். நன்றாக சிரித்தேன். சில நண்பர்களை நினைத்துப்பார்த்தேன்.

     பால்ய வயதுக் கேள்விகளை இன்னமும் நாம் கேட்டுக் கொண்டுதால் இருக்கிறோம். முந்தையது மனம் கேட்கும் கேள்வி; பின்னது அறிவு கேட்கும் கேள்வி. இன்னமும் இதற்கான விடைகளைத்தேடிக் கோண்டிருக்கிறோம்.

         நாவலில்;
       
   தன்னை ஓட்டைப்பல்லு என அறிமுகம் செய்துக் கொள்கிறான்  செண்பகராமன். இவனுக்கு மட்டுமல்லாமல் தனக்கு தெரிந்த எல்லோர்க்கும் ஒவ்வொரு பட்டப்பெயர் இருப்பதை பெருமையாய் சொல்கிறான். ஆசிரியர்களும் அதில் அடக்கம்.

       தொடர்ந்து ஒரு சிறுவன் நம் முன் அமர்ந்து , நடந்தையும் நடக்காததையும் மிகைப்படுத்துஇ உணர்வுப்பூர்வமாக சொல்வதுபோது அமைந்திருக்கிறது எஸ்.ரா-வின் எழுத்து நடை.

  குழந்தைகள் கதை சொல்லும் போது கவனித்திருக்கிறீர்களா? (இப்போதெல்லாம் நம்மில் பலர் அதை செய்வதில்லை)  அப்போது ஏற்ற இறக்கமாக , கண் பெரிதாகி, கைகளை வானுக்கும் பூமிக்கும் ஆட்டியெல்லாம் கதை சொல்லுவார்கள். உடன் கதைக்குள், கதைக்குள், கதைக்குள் ஒரு கதையைச் சொல்லி மீண்டும், இடைவேளியில்லா கதையை தொடர்வார்கள்.

       சொல்லிக் கோண்டுபோகும் கதையில் திடீரென நம் அனுபவத்தையும் கேட்டு; கேள்விகள் கேட்டு பதிலுக்கு காத்திராமல் கதையை நகர்த்திக் கொண்டே செல்வார்கள். இந்நாவலில் அந்த சிறுவனும் அதையேத்தான் செய்கிறான்.
  
         உங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பியிருந்தால்,
இந்த  நாவலை படித்துக் காட்டச் சொல்லுங்கள் . கடினமென்றால் பிள்ளைகளை உட்காரவைத்து நீங்கள் இந்நாவலை படித்துக் காட்டுங்கள். உங்கள் பிள்ளைகளோடு இன்னும் நீங்கள் நெருக்கமாவீர்கள்.  மொத்தமே 80 பக்கங்கள்தான். 

      நாவலில் இறுதியில் இப்படியாக சிறுவ கேட்கிறான்;
"எல்லா பெரியவங்களும் ஒரு காலத்துல சின்ன பையனா இருந்தவங்க தானே, ஆனா பலரும் அதை மறந்துருறாங்க. அது தான் ஒரே பிரச்சனை. சரி தானே? "

    அந்த ஓட்டைப்பல்லு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன் அப்போது நான் கதை சொன்ன பெரியவ்ர்களையும்; இப்போது என்னிடம் கதைசொல்லும் குழந்தைகளையும் நினைத்துப் பார்க்கிறேன்.


நன்றி.

- தயாஜி-

   

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்