பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 08, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘கானகன்’

புத்தகவாசிப்பு_2021 ‘கானகன்’

தலைப்பு –‘கானகன்’ (யுவ புரஸ்கார் விருது பெற்ற நாவல்)
வகை – நாவல்
எழுத்து – லஷ்மி சரவணகுமார்
வெளியீடு – எழுத்து பிரசுரம்
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

        லஷ்மி சரவணகுமாரின் நாவல்; ‘கானகன்’. இந்நாவலைப் பற்றி எழுதும் போது பெரும்பாலானவர்கள் ஒரே வரியில் எழுதி சென்றதை கவனித்துள்ளேன். ‘புலியின் வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் நாவல்’ என எழுதுவதன் மூலம் தாங்களும் இந்நாவலை வாசித்துவிட்டோம் என காட்டுகின்றார்களே தவிர இன்னொரு வாசகர்களுக்கு இந்நாவலை அறிமுகம் செய்யும் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. இந்த ஒற்றை வரி விமர்சனத்தையும் ! (விமர்சனமா…?) நாவலின் பின்னட்டையில் பேராசிரியர் எஸ்.வி.ஆர் சொன்னதில் இருந்து எடுத்திருக்கின்றார்கள்.
வழக்கமாக எழுதுவது போல நாவல் வாசிப்பு குறித்து இம்முறை நான் எழுதப்போவதில்லை. இந்நாவலில் நான் கண்ட வேறொன்றை எழுத முயல்கிறேன்.

அதற்கு முன்;

        இயல்பாகவே லஷ்மி சரவணகுமாரின் எழுத்துகளில் மனதின் வெளிப்பாடுகளை காணலாம். அன்பாக கருணையாக காமமாக வன்மமாக மனிதனை அலைக்கழிக்கும் உணர்வுகளின் வெளிப்பாடுகளாகவே கதாப்பாத்திரங்கள் அமைந்திருக்கும். ல.ச.கு எழுதும் பெண்கள் பெரும்பாலும் வாசிக்கின்றவர்களை வசீகரிக்கவே செய்வார்கள். அப்படியும் பெண்களால் முடியுமா என்கிற கேள்வியை எழ வைத்து, அவள் நினைத்தால் இன்னும் கூட செய்ய முடிந்தவள் என்கிற எண்ணத்தை வாசகர்கள் மனதில் வர வைக்கும்.

        விரைவிலேயே ல.ச.குவின் எழுத்துகளின் பெண்கள் என யாரும் ஆயுவுகள் செய்தாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை.

        அவரின் சிறுகதைகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். கானகன் நான் வாசித்திருக்கும் ல.ச.குவின் மூன்றாவது நாவல். ‘உப்பு நாய்கள்’ நாவலில் தொடங்கி ‘ரூஹ்’ பிறகு கானவன் நாவலை வாசித்து முடித்தேன். ரூஹ் நாவல் வாசிப்பு அனுபவம் குறித்து எழுதியுள்ளேன். ஆனால் இன்னவரைக்கும் அவரது ‘உப்பு நாய்கள்’ நாவல் பற்றி என்னால் முழுமையாக எழுத முடியவில்லை. மீண்டும் அதனுள் செல்ல இயலவில்லை.

இன்றுவரை அந்நாவலில் வரும் சம்பத்தை மறக்கவும் மறுக்கவும் முடியவில்லை.

        அந்நாவல் வாசித்த சில ஆண்டுகளில் அது போலவே; அதனைக் காட்டிலும் பல சம்பவங்களை கேள்விப்பட்டும் பார்த்தும் வந்திருந்தாலும் அந்த உப்பு நாய்கள் கொடுத்த அதிர்ச்சியும் காட்டிய வாழ்க்கையும் மனதில் அப்படியே இருக்கிறது.

இனி…

        கானகன், எழுத்துகள் வழி காட்சிகளை காட்டியபடி நகர்ந்துச் செல்கிறது. தங்கப்பனின் புலி வேட்டையில் நாவல் ஆரம்பமாகின்றது. அப்பழுக்கற்ற ஒரு வேட்டைக்காரனாக நாவல் முழுக்க தங்கப்பன் வருகிறான். அவனை எதற்காக நேசிக்கின்றோமோ அதற்காகவே அவனை வெறுக்கவும் செய்கிறோம். இவனல்லவா வேட்டைக்காரன் என சொல்ல வைத்து, ச்சே இவனெல்லாம் ஒரு வேட்டைக்காரனா என்கிற கேள்வியை எழ வைக்கின்றார் ஆசிரியர். எண்ணம் செயல் முழுக்க வேட்டைக்காரனான தங்கப்பன் காட்டின் வேட்டையிலும் கட்டிலின் வேட்டையிலும் தான் ஒரு தேர்ந்த வேட்டைக்காரன் என்பதை காட்டிக் கொண்டே இருக்கின்றான்.

        தன் மூன்றாம் மனைவிக்கு பிறந்த வாசியை முழுமனதாக தங்கப்பன் ஏற்றுக் கொள்ளும் போது அவன் செய்த எல்லா தவறுகளுக்கும் நாம் அவனை மன்னித்துவிடுகின்றோம். தனக்கு துரோகத்தால் தான் ஏமாற்றப்பட்டு கொலை செய்யப்பட போகின்றோம் என தங்கப்பன் அதிர்ச்சியாகும் போது நாமும் அதிர்ச்சியாகின்றோம். அதற்கு காரணமான வாசியை வெறுக்கின்றோம். ஆனால் நிலமையை அடுத்த சில வினாடிகளிலேயே உணர்ந்துவிட்ட தங்கப்பன் தனக்கு இதைவிட கௌரவமான சாவு வாய்க்காது என முழுமனதாக புலிக்கு தன்னை கொடுக்கின்றான். உண்மையில் நான் தங்கப்பனுக்காக வருத்தப்படுகின்றேன்.

            தான் நம்பியதை நம்பியபடியே செய்த ஒரு தேர்ந்த வேட்டைக்காரனுக்கு இப்படியா சூது செய்து சாவு வரவேண்டும். ஆனால், அவன் சாவு இந்த வனத்தை அபகரிக்க நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையப்போகின்றது என நினைக்கையில் அவனது சாவிற்கு வாசி கொடுத்திருக்கும் அர்த்தம் புரிகிறது.

            செல்லாயிக்கும் சடையனுக்கும் பிறந்தவன் வாசி. சடையனும் ஒரு சித்தன் போல சில இடங்களில் தென்படுகின்றான். அவன் ஓர் அப்பாவி பைத்தியம் என நம்ப வைக்கின்றான். துரத்திக் கொண்டு வரும் யானை கூட்டத்தின் முன்னே பெரிய யானையின் தோளில் அமர்ந்து அவற்றை விரட்டி மாவீரனாக மாறியும் விடுகின்றான். ஆசிரியர் அக்காட்சியை சொல்லியிருக்கும் விதம் வாசிக்கையில் அந்த யானை கூட்டத்தில் நாமும் சிக்கிக் கொண்டதாக நினைக்க வைக்கிறது.

            சடையனுக்கு பிறந்து அம்மா செல்லாயி உடன் தங்கப்பன் இருப்பிடத்தில் வாழ்ந்தாலும் தனக்குள் இருக்கும் தன் அப்பா சடையனை கண்டுக்கொள்ளவே வாசி முயல்கிறான். அவனைச் சுற்றி நடக்கும் அமானுஷ்யங்கள் ஆச்சர்யங்கள் எல்லாம் அவனை அவன் பிறப்பின் நோக்கம் அறிய அழைத்துச் செல்கிறது.

            தங்கப்பனின் நண்பனாக அவனை மனிதனாக பாவிப்பவனாக அன்சாரி வருகிறான். நாவலில் அன்சாரிக்கு முக்கிய இடம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், ஆண்களின் மனம் எத்தனை கொடுமை செய்யக்கூடியது எத்தனை அன்பு காட்டக்கூடியது என சொல்வதற்கு உதாரணமாக அமைந்திருக்கின்றது. அன்சாரிக்கு தங்கப்பனின் இரண்டாவது மனைவி மாரி மீது ஈர்ப்பு இருக்கின்றது. மாரிக்கும் இது ஓரளவிற்கு புரிந்தாலும் அவள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

        மாரியிடம் அன்பாகவும் பண்பாகவும் பழகிக் கொண்டிருந்த அன்சாரி, அவளை அடைவதற்கான வாய்ப்பு கை நழுவி செல்வதை தாங்காது மாரியிடம் மிருகமாக மாறுகின்றான். முரண்டு பிடித்தவள் இறுதியில் இறங்கிவிடுகிறாள். அன்பும் காமமும் யார் யாரை விட முக்கியமானவர்கள் என்கிற கேள்விக்கு இவர்கள் இருவருமே பதிலை தேடிக் கொள்கிறார்கள்.

        நாவலில் காட்டப்பட்டிருக்கும் முக்கியமான பெண் கதாப்பாத்திரங்கள்; தங்கப்பனின் மனைவி சகாயராணி , இரண்டாவது மனைவி மாரி, மூன்றாவது மனைவி செல்லாயி (சடையனின் மனைவி), ஜமிந்தாரின் மனைவி, குயிலம்மாள் (வாசியின் மனைவி).

        தன் கணவனின் இரண்டாம் மனைவில் மாரி, அன்சாரியை பிடித்திருப்பதாக சகாயராணியிடம் சொல்லும் போது அவள் அதனை புரிந்துக் கொண்டு பேசுவது முக்கியமான ஒன்று. ஒரு தாயைப் போல மகளின் உணர்வுகளை புரிந்துக் கொண்டவளாய் சகாயராணி தெரிகிறாள்.

          தான் பிறந்த குலத்தில் பெண்கள் வேட்டைக்கு செல்பவர்கள் அல்ல. மாறாக காட்டையும் அதன் ஜீவராசிகளையும் பாதுகாப்பவர்கள். ஆனாலும் தனக்குள் இருக்கும் வேட்டைக்காரியை இழந்துவிடாமல் அதற்காகவே தேர்ந்த வேட்டைக்காரனான தங்கப்பனிடம் செல்கிறாள் செல்லாயி. அவளை திரும்ப அழைக்கவும் விரும்பாத சடையன். அவள் விருப்பத்திற்கு எந்த தடையும் சொல்லவில்லை.


        நாவலில் வரும் ஜமீந்தாரின் பகுதி, தனி ஒரு நாவலாக நம்மை எழுத வைக்கிறது. மது மயக்கத்தில் எல்லோரும் மயங்கி உறங்கிவிட வாசியிடம் உறவு கொள்கிறாள் ஜமிந்தாரின் மனைவி.

        ஒரு பெண்ணை எத்தனை பூட்டு போட்டு பூட்டி வைத்தாலும் அவள் விரும்பினால் அன்றி எந்த பூட்டும் அவளை பூட்டிவிடுவதில்லை. அங்குதான் வாசி தான் ஒரு முழுமையான ஆணாகிவிட்டதை உணர்கிறான். மறுநாள் அனைவரும் வேட்டைக்கு கிளம்ப, கர்ப்பிணி மானை பலர் தடுத்தும் சுட்டுவிகிறார் ஜமிந்தார். வாசி உடனே மானிடம் சென்று அதன் வயிற்றில் இருந்து மான் குட்டியை வெளியில் எடுக்கின்றான். இக்காட்சி ஜமிந்தாரை ஏதோ செய்தது. அலறிக்கொண்டே ஓடியவர்தான் அதன் பின் திரும்பவே இல்லை. சில நாட்கள் கழித்து ஜமிந்தார் இல்லாமலேயே அவரின் குடும்பம் திரும்ப அவர்கள் ஊருக்கு செல்கிறது.

            யானை ஏன் ஊருக்குள் வருகிறது. கொல்லும் புலியை ஏன் கடவுளாக பார்க்கிறார்கள். காட்டில் வசிப்பவர்களை ஏன் விரட்டுகிறார்கள். அழியும் காடு யாருக்கு லாபத்தைக் கொடுக்கின்றது. போன்ற பலவற்றை இந்நாவல் வழி அறிய செய்கிறார் ஆசிரியர்.

        வழக்கமான வாசிப்பு அனுபவத்தை எழுதாமல், கானகன் நாவலில் உள்ள கதாப்பாத்திரங்களை எழுதியுள்ளேன். நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல்தான்.

            இன்னும் சொல்லப்போனால் ஒரு வரியில் இந்நாவலை சொல்லிவிட்டு கடந்து போகவே முடியாது. நான் சொல்லியிருப்பது மிகவும் குறைவுதான் இன்னும் அதிகம் எழுதலாம். அதற்கான அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கிய நாவல்தான் கானகன். நாவலை கொடுத்த லஷ்மி சரவணகுமாருக்கு அன்பும் நன்றியும்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்