பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 08, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘ரூஹ்’


புத்தகவாசிப்பு_2021 ‘ரூஹ்’

தலைப்பு –‘ரூஹ்’
வகை – நாவல்
எழுத்து – லஷ்மி சரவணகுமார்
வெளியீடு – எழுத்து பிரசுரம்
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)


- ரூஹ் – மனம் காட்டும் கண்ணாடி -



    வாசித்து முடித்ததும், அழுதுவிட்டேன். உண்மையில் வாசிக்கும் போதே அழ ஆரம்பித்துவிட்டேன்.
        
    நமக்குள் இருக்கும் நமது பலவீனங்களை அதன் நகர்வுகளையும் லஷ்மி சரவணகுமாரால் எளிதில் கண்டறிய முடிகிறது. அப்படித்தான் ‘ரூஹ்’ எனது பழைய நினைவுகளையும் எனது நண்பர்களின் வாழ்க்கையையும் மீள் செய்வதாக அமைந்திருந்தது.

    ல.ச.கு-வின் எழுத்துகளின் நமக்கு தெரியாத மனிதர்கள் பற்றிய அறிமுகம் எப்போதுமிருக்கும். அவர்களின் வன்மம், காமம், கனிவு, அன்பு, நம்பிக்கை, அழுகை, என பல திசையிலிருந்து கதாப்பாத்திரங்களை அவரால் ஒரு மையப்புள்ளியில் இணைக்க வைக்க முடிகிறது.

    வாசகர்களையும் அதில் சேர்ந்து பயணிக்க வைக்கிறது. தொடர்ந்து ல.ச.கு-வின் எழுத்துகளை வாசிக்கின்ற வாசகன் என்கிற முறையில் அவரது ‘ரூஹ்’ நாவலை பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை பகிர நினைக்கின்றேன்.

    ‘ரூஹ்’, தன்னை வெளிகாட்டிய வடிவம் புதுமையாக இருந்தது. காலத்தை முன்னும் பின்னும் நகர்த்தி அதனை ஒற்றை மையத்தில் கொண்டு வரும் யுக்தி நாவலை ஆர்வத்துடன் வாசிக்க வைக்கிறது.
மலாய் மொழியில் ரூஹ் (ROH) என்றால் ஆவி, ஆன்மா என்பதைக் குறிக்கும். புனித ஆத்மாவையும் அப்படி அழைப்பார்கள். இந்நாவலில் அப்படியான புனித ஆன்மாவாக ராபியாவைப் பார்க்க முடிகின்றது.

        பதினெட்டாம் நூற்றாண்டில் விலை மதிப்பற்ற பச்சை நிற கல்லை அதற்கான இடத்திற்கு சேர்ப்பதற்கு அஹமத் என்னும் தேர்ந்த மாலுமியுடன் சில ஞானிகள் பயணமாகிறார்கள். அக்கல் கொள்ளைப்போகிறது. அதனை மீட்க எதனையும் சந்திக்கத் துணிவுடன் அஹமத்தும் ஞானிகளும் மீண்டும் அந்த கடற்கொள்ளையர்களிடமே செல்கிறார்கள். அந்த கல்லால் ஈர்க்கப்பட்ட அரசன் அக்கல்லை கொடுக்க மறுக்கிறார். ஆனால் அந்த அரண்மனையில் இருந்தே கல் வெளியேற்றப்படுகிறது. அந்த பச்சை நிற கல், அரண்மனையில் இருந்து ஊர் ஊராய் செல்லும் பொம்மலாட்டக் கலைஞருக்கு கிடைக்கிறது. அக்கல் வேறொரு பயணத்தை ஆரம்பிக்கிறது.

        இதன் ஊடே இன்னொரு கதையாக, ஜோதியின் வாழ்க்கையும் நகர்கின்றது. ஜோதிக்கு பெண் குரல். அதனால் பல அவமானங்களையும் உதாசினங்களையும் சந்திக்கின்றான். தன் மூதாதையர்கள் தொன்று தொட்டு செய்து வைத்த பொம்மலாட்ட கூத்தில் அவனால் பங்காற்ற முடியவில்லை. ஜொதியை வாசிக்கும் போது நம்மால் அதனை எளிதில் கடந்துவிட முடியாது.

        மனமும் அதன் கட்டற்றத் தன்மையை ஒரு மனிதன் எதிர்க்கொள்வது சமயங்களில் ஆபத்தில் முடிந்துவிடுகிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆண்களால் ஜோதி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆழாகிறான். ல.ச.கு அதனை எழுதியிருக்கும் விதம் நம் தூக்கத்தை தொலைக்கிறது. மனிதனுள் இருக்கும் மிருகம் வேட்டையாட வெளி வரும் பொழுதுகளை அவரால் எளிதில் வாசகர்களுக்கு கடத்திவிட முடிகிறது. என் நண்பர்களில் சிலர் இது போன்ற சிக்கல்களால் காணாமலே போய்விட்டார்கள். அந்த வயதில் என்னால் புரிந்தும் புரியாமல் போன பல கேள்விகளுக்கு ஜோதியின் வாழ்க்கை மூலமாக பதில்களைக் கொடுத்திருக்கிறார்.

        இன்னொரு பக்கத்தில் , ஒரு தேவதை போல, எல்லோர்க்குமான அன்பை தானே சுமந்துக் கொண்டிருப்பதாக ராபியா அறிமுகம் ஆகிறாள்.

        ஒவ்வொருவர் வீட்டிலும் இப்படியான ஒருத்தி இருக்க வேண்டும் என ஆசைப்படும் அளவிற்கு ராபியாவை காட்டியுள்ளார். ராபியாவின் கணவன் அன்வரை நம் அன்றாக வாழ்க்கையில் சந்திப்போம். அன்வர், எல்லா துடிப்பு மிக்க இளைஞர்கள் போலவே தானே செயல்பட நினைத்து, முனைந்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். அன்வருக்கும் ராபியாவிற்கு திருமணமாகிறது. அழகான மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்கிறார்கள். வாழ்க்கை சமயங்களில் நமது எந்த நிலையையும் தூக்கியெறிந்துவிடும். ராபியாவிற்காக நம்மை அழவும் வைக்கிறார். நல்லவர்களுக்குத்தான் எத்தனை சோதனைகள் எத்தனை வேதனைகள் என நினைக்கும் போது நம்மால் எப்படி அழாமல் இருக்க முடியவில்லை.

        கொள்ளைப்போகும் மரகத கல் – அமானுஷ்ய பயணம் , ஜோதியின் நிலையற்ற தன்மை – மன போராட்டம், ராபியாவின் அன்பும் அழுகையும் என மூன்று முடிச்சுகளும் ஒரு மையத்தில் வந்து நிற்கிறது.

நாவலில் ஆங்காங்கு வாசித்தவைகள் ஒரு கோட்டில் வருகின்றன.

            பாலோ கொயலோவின் ‘ரசவாதி’ என்னும் நாவலை சில இடங்களில் ரூஹ் நினைக்க வைத்தது. இரண்டிலுமே மையமாக இருப்பது மானிதனின் மனம் நம்பும் ஒன்றிற்கான பயணத்தை இப்பிரபஞ்சம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்கின்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம்.
ரூஹ்- வாழ்க்கையின் விளையாட்டு எங்கிருந்தும் அடுத்ததொரு பயணத்தை கொடுக்கும் என்கிற நம்பிக்கையைக் கொடுக்கிறது. லாபங்களை போன்றதே இழப்புகளும் , சிரிப்பை போன்றே அழுகையும் என்கிற தேற்றுதலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றது.

            வழக்கத்திற்கு மாறாக இந்நாவல் வாசிப்பைக் குறித்து குறைவாகே எழுதியுள்ளேன். ஒரு கண்ணாடி போல பல இடங்களில் என்னை எனக்கு காட்டிய இந்நாவலில் பல நாட்கள் தொலைந்திருந்தவன் நான். நீங்களும் உங்களை கண்டுணர்ந்து தொலைய வேண்டும் என்பதற்காகவே நாவலின் முழு சித்திரத்தையும் கொடுக்க விரும்பவில்லை.

        நான் எதை எப்படி சொல்லியிருந்தாலும், வாசிப்பவர்களுக்கு வேறொரு வாசிப்பு அனுபவத்தையேக் கொடுக்கக்கூடய நாவல் இது.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்