பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 08, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி’

 

புத்தகவாசிப்பு_2021 ‘வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி’

தலைப்பு –‘வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி’
வகை – குறுநாவல்
எழுத்து – நக்கீரன்
வெளியீடு – காடோடி பதிப்பகம்
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)



- வண்ணத்துப்பூச்சிகளில் விடுதி – விடுபட்ட அறைகள் -

 


        வாசிப்பில் ஏற்படும் சிக்கல்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் மிக முக்கியக் காரணங்களில் ஒன்று; அதிக எதிர்ப்பார்ப்புடன் ஒரு படைப்பை அணுகுவது. சமயங்களில் அப்புத்தகத்தை எழுதியவருக்காக, புத்தகத் தலைப்பிற்காக, புத்தகத்தின் உள்ளடக்கத்திற்காக இன்னொருவரின் பரிந்துரைக்காக என பல காரணங்கள் உள்ளன. ஏதோ எண்ணத்தில் நாம் வாசிக்க எடுத்த புத்தகம் நாம் நினைத்ததைத் தாண்டியும் நமக்கொரு அனுபவத்தைக் கொடுக்கும். பிரிதொரு சமயத்தில் அவ்வாசிப்பு நம் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்காது. எது எப்படி இருப்பினும் ஒரு வாசகனாய் நாம் என்னவெல்லாம் ஒரு படைப்பில் இருந்து பெற்றுக் கொள்கிறோம் எவ்வாறு விடுபட்டதைப் பூர்த்திச் செய்துக் கொள்கிறோம் என்பது வாசகரின் அகம் சார்ந்த கேள்வி.

        ‘வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி’ கவிஞர் எழுத்தாளர் சூழலியலாளர் என பண்முகத்தைக் கொண்டிருக்கும் நக்கீரன் அவர்கள் எழுதியிருக்கும் குறுநாவல். இவ்வாண்டு காடோடி பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. ‘காடோடி’ நாவல் மூலம் பரவாலக அறியப்பட்டவர். தன் சூழலியல் கட்டுரைகள் மூலம் தொடர்ந்து கவனிக்கப்படுகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                இந்நாவல் பாலியல் தொழிலில் சிக்கிக்கொள்ளும் பெண்களைக் குறித்தும் தெரிந்தே வேறு வழி இன்றி இத்தொழிலுக்கு வந்தவர்கள் பற்றியும் பேசுகின்றது. மொத்தமே 66 பக்கங்கள் கொண்ட நாவல். ஆசிரியர் இக்குறுநாவலை பதினான்கு அத்தியாயங்களாகப் பிரித்துள்ளார். ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் போது, பட்டாம்பூச்சிகள் பற்றியக் குறிப்புகளை இணைத்துள்ளார். இதுவரை நமக்கு தெரிந்த பட்டாம்பூச்சிகள் குறித்தத் தகவல்களாக அல்லாமல் முற்றிலும் வேறு மாதிரியான தகவல்களாக அவை அமைந்துள்ளன. சொல்லப்போனால் பாலியல் விடுதியில் சிக்கிக்கொள்ளும் பெண்களின் மனநிலையையும் அந்த தகவல்களுடன் நாம் இணைத்துப்பார்க்கலாம்.

            உதாரணமாக; ‘ எல்லா வண்ணத்துப்பூசிகளையும் பறவைகளால் உண்ண முடியாது. சில வகைகள் தம் உடலில் தாவரங்களின் நஞ்சை ஏற்றி வைத்திருக்கும்’ என்கிற தகவலை இக்குறுநாவலில் வரும் சில காதாப்பாத்திரத்துடன் இணைத்துக் கொள்ள முடிகிறது. அது பொருந்தவும் செய்கிறது.

            உலகின் எல்லா தேசங்களிலும் பெண்களின் உடல்களை வைத்து வருமானம் ஈட்டும் கூட்டம் இருக்கிறது. அதிகமாய் பணம் புழங்கும் இடமாகவும் அதிகமாய் வன்முறை கட்டவிழ்க்கப்படும் இடமாகவும் அது இருக்கின்றது. அதில் விரும்பியும் கட்டாயத்தின் பெயரிலும் பல பெண்கள் வந்துச்சேர்கிறார்கள். சமயங்களில் ஆண்களும் பாதிக்கப்படுவதுண்டு ஆனால் இதுவரை அவர்கள் பற்றிய பெரிதாக யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

            இந்நாவலிலும் அப்படியான சில பெண்கள் வருகின்றார்கள். ஆளுக்கொரு பின்னணி. மனதை வருத்தும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வாழ்க்கைக் கதை. இதில் விந்தை என்னவென்றால் இவர்களை அறியாமலே யாரோ ஒருவர் இவர்கள் அனைவரையும் இயக்கிக் கொண்டே இருக்கிறார்கள் என இக்குறுநாவல் பேச முற்படுகின்றது. ஆனால் அது முழுமையற்ற ஒன்றாக நாயகனின் சாதாரண உரையாடலில் கடந்துவிடுகின்றது. இப்படி அழுத்தம் கொடுத்திருக்க வேண்டிய பல இடங்களில் சாதாரணமான உரையாடல் மூலமும் உரைநடை மூலமும் ஆசிரியர் கடந்து விடுகின்றார்.

            பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களில் உரையாடல் அதன் இயல்பில் இல்லாமல் தன்னை ஒரு கட்டுப்பாட்டில் வைத்து ஆசிரியர் எழுதியிருப்பதாகவே படுகின்றது. அல்லது இவ்விடத்தை இவ்வளவிற்கு பேசினால் போது மேற்கொண்டதை வாசகர்கள் முடிவெடுத்துக் கொள்வார்கள் என ஆசிரியர் நினைதிருக்கலாம்.


            பாலியல் தொழில் நடக்கும் இடத்தை இயல்பாகவே சொல்லிச்செல்லும் கதைகளில் அவர்கள் அன்றாட தேவைகளை ஆசிரியர் சொல்லும் போது நம்மையும் அது பாதிக்கச்செய்கிறது. நாளொன்றுக்கு தனக்கு கிடைக்கும் வருமானத்தை அறை வாடகைக்கும், தங்களை பாதுகாக்கும் நபருக்கும், தங்களின் தங்குமிட வாடகைக்கும் கொடுக்க வேண்டும். அது போக மீதப் பணமே அப்பெண்களின் சேமிப்பு. இப்படி தினமும் செலுத்த வேண்டிய கட்டணத்திற்காக குறைந்தது மூன்று வாடிக்கையாளர்களாவது தேவை. போதாததிற்கு தினமும் இருநூறு வெள்ளி சம்பாதிக்கலாம் என சொல்லித்தான் நாயகியை அழைத்து வந்திருக்கிறார்கள். அதற்கு தி னம் அவள் பத்து வாடிக்கையாளர்களையாவது சந்திக்க வேண்டும். அவர்கள் வெறும் பத்து வாடிக்கையாளர்கள் அல்ல, பத்துவித வினோதமான மனிதர்கள். அதில் சில மிருகங்களும் உண்டு. சில பார்வையாளர்களும் உண்டு. அவ்விடுதி எல்லாவித வதைகளையும் எல்லாவித ஏமாற்றங்களையும் எல்லாவித எதிர்ப்பார்ப்புகளையும் சுமந்துக் கொண்டே இரவை கழித்துக் கொண்டிருக்கிறது.

            நாயகிக்கு பாதிப்பைக் கொடுப்பதற்காகவே ஒரு மனநலம் பாதித்த! மனிதனை ஆசிரியர் நடமாட விட்டிருக்கின்றார். ஆழமாக காட்டியிருக்க வேண்டிய கதாப்பாத்திரத்தை வெறுமனே அதிர்ச்சிக் கொடுப்பதற்காகவும் கடைசி அத்தியாயத்திற்காகவும் பயன்படுத்திக் கொண்டதாகத் தோன்றுகின்றது.

            ஐயா நக்கீரன் அவர்களால் ஒரு விளைவிற்கு முன்னால் இருக்கும் சர்வதேச அரசியலை எளிதாகச் சொல்ல முடிகின்றது. இக்குறுநாவலில் அதனை முழுமையாக பயன்படுத்திருக்கலாம். எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை மீண்டும் படைப்பாக்கம் செய்வதில் வாசகர்களை அப்படைப்பு ஏமாற்றக்கூடும். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், அவர்கள் சொல்லும் காரணம் அதனை நடத்துகின்றவர்கள், அது நடக்கும் இடம் போன்ற பல விபரங்கள் நம்மில் பல பேருக்குத் தெரிந்திருக்கும். சிலருக்கு நேரடி அனுபவமாகவும் சிலருக்கு இன்னொருவரின் அனுபவத்தின் மூலமாகவும் இன்னும் சிலருக்கு சமூக வலைத்தளங்களிலும் கிடைத்துவிடுகின்றது. இது போன்றவற்றைத் தாண்டி தத்தம் படைப்பில் எப்படி அவர்களை அணுகுகின்றோம் எவ்வாறு வாசகர்களுக்கு அவர்களைக் காட்டுகின்றோம் என்பதைப் பொறுத்தே அப்படைப்பு வாசகர் மத்தியில் வெற்றியா தோல்வியா என்பது தெரியும்.

        இந்நாவலை வாசித்து முடித்தப்பின், நாயகியைச் சுற்றி மட்டும் கதையை நகர்த்திருந்தால் ஆழமானச் சிறுகதையாக இது வந்திருக்கும் எனத் தோன்றியது. அல்லது இன்னும் ஆழமாக கதாப்பாத்திரங்களின் மனங்களையும் சொல்லும் படைப்பாக வந்திருந்தால் குறைந்தது 200 பக்கங்களில் ஒரு முழுமையான நாவலாக அமைந்திருக்கும். இப்போது முழு நாவலை, முடிந்தவரை சுருக்கமாக மீண்டும் சொல்லியது போல அமைந்திருக்கின்றது.

            சொல்லப்போனால், பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றவர்களும் மனிதர்கள்தான் அவர்களுக்குண்டான மரியாதையைக் கொடுப்பதற்கு ‘வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி’ குறுநாவல் ஒரு தொடக்கமாக அமையும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும். ஏனெனில் இதில் விடுபட்டதை இவர்கள் இருவர்தான் மீண்டும் எழுதவிருக்கின்றார்கள்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்