பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 23, 2021

‘மலேசிய நாவல்கள்’ – நான்காவது கட்டுரையை முன் வைத்து


‘மலேசிய நாவல்கள்’ – நான்காவது
கட்டுரையை முன் வைத்து

     தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார். 

   நான்காவது கட்டுரையாக, ‘முதல் சுடர்’ என்ற தலைப்பில் எம்.குமாரன் நாவல் குறித்து எழுதியுள்ளார்.

    மலேசிய இலக்கியச் சூழலில் நிகழும் அரசியல் போலித்தனங்களால் எழுத்தில் இருந்து விரக்தி கொண்டு விலகியவர் பற்றிய கட்டுரை.



போலிகளின் பளபளப்பால் பலரின் கண்கள் கண்டுகொள்ளத் தவறிய சுடர்தான்  எம்.குமாரன். அதற்கு ஏற்றார் போலவே தலைப்பும் அமைந்து விட்டது.

கு.அழகிரிசாமிக்குப் பிறகு நவீன இலக்கியம் என மலேசியாவில் உரையாடல்கள் தொடங்கிய இரண்டாவது காலகட்டத்தில் உருவான முக்கியமான எழுத்தாளர் எம்.குமாரன். 

எழுத்தாளரின் பின்புலத்தையும் அவர் முன்னெடுத்த முயற்சிகளையும் கட்டுரையாசிரியர் சொல்கிறார். இன்றைய தலைமுறைக்கு பயன்மிக்க ஒரு கட்டுரை. 

லட்சியவாதத்தையும் , கற்பனாவாதத்தையும், மிகை உணர்ச்சிகளையும், நம்பி எழுதப்பட்ட மலேசிய நாவல்களுக்கு மத்தியில் 1971-ல் எழுதப்பட்ட இருத்தலியல் தன்மையிலான 'செம்மண்ணும் நீல மலர்களும்' நாவல் தனித்து நிற்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

அந்நாவல் பற்றிய தன் விமர்சனப் பார்வையில்  ' குறிப்பிட்ட வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டிருந்தாலும் இவை அனைத்தும் ஒரு தனி மனிதனின் பார்வையில் அலசப்படுகிறது' என்கின்றார்
ஆசிரியர். அதோடு, 'எழுத்தாளர் தனக்குள் எழும் வினாவை விவாதமாக விரித்து நாவலுக்குள் நிகழ்த்தும்போது, தன்னையே பலநூறாக உடைக்கின்றார். வாழ்வு குறித்த சில புதிய அவதானிப்புகளைக் கண்டடைகிறார். அதன்வழி தன்னையும் கண்டடைகின்றார். அந்தக் கண்டடைவே நாவலைத் தாங்கிப் பிடிக்கிறது, தனித்துவமாக்குகிறது.' என்கிறார்.

மேலும் கட்டுரையை வாசிக்க வாசிக்க, அந்நாவலை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றது. ஆனால் தற்சமயம் அந்நாவல் கிடைப்பது அரிது. நானும் பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருக்கின்றேன். சம்பந்தப்பட்டவர்கள் யாரும் அந்நாவலை மீண்டும் மீள்பிரசுரம் செய்வதற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டுகின்றேன். இன்றைய தலைமுறை மட்டுமல்ல நாளைய தலைமுறையும் அறிந்துக்கொள்ள வேண்டிய சுடர் எம்.குமாரன் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

இம்மாதிரி தொடர் விமர்சனங்களால் ஆசிரியர் தன்னை முன்னிலைப்படுத்துவதாக குற்றம் சாற்றுபவர்கள் இருக்கிறார்கள். மூத்த படைப்பாளர்களை உதாசினம் செய்வதாகவும் கூறுபவர்கள் இருக்கிறார்கள். எவ்வாறு மூத்த படைப்பாளிகளுக்கு மரியாதை செய்ய வேண்டும் என பாடம் எடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை.  கூடுதலாக அவர்களிடம் ஒரு விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்கிற பட்டியலும் இருக்கிறது. ஆனால் அந்த பட்டியலில் எம்.குமாரன் போன்ற சுடரின் வெளிச்சம் சிறிதாகக் கூட இருக்கப் போவதில்லை.




#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்