பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 24, 2021

‘மலேசிய நாவல்கள்’ – ஐந்தாவது கட்டுரையை முன் வைத்து



‘மலேசிய நாவல்கள்’ – ஐந்தாவது
கட்டுரையை முன் வைத்து

     தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார். 

   ஐந்தாவது கட்டுரையாக, ‘நெடுநாள் உயிர்த்துள்ள நெகிழிப்பூ ’ என்ற தலைப்பில் கா.பெருமாள் குறித்து எழுதியுள்ளார்.

'சிறுகதையில் எழுத்தாளன் வாழ்க்கையின் ஒரு புள்ளியை அறிந்துக்கொள்ள முயல்கிறான். நாவலில் வாழ்வின் எண்ணற்ற திசைகளை ஓர் ஒட்டுமொத்த பார்வையில் தொகுக்கப் பழகுகிறான்.' என நாவல் எழுதுவற்கும் சிறுகதை எழுதுவதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தை சொல்லி கட்டுரையை ஆரம்பிக்கின்றார்.  அதோடு ஜெயமோகனின் 'வெள்ளையானை' நாவலை முன்வைத்து மேற்சொன்னவற்றை விளக்குகின்றார்.

கா.பெருமாள் எழுதிய 'துயரப்பாதை' நாவலைப் பற்றி பலவீனமாக எழுதப்பட்டு பலகாலமாக கொண்டாடப்பட்ட நாவல் என்கின்றார். இத்தகையப் பார்வையை இக்கட்டுரையின் தலைப்பிலேயே உணர முடிந்தது.

246 பக்கங்கள் கொண்ட நாவலை நான்கே வரிகளில் சொல்லிவிடுகின்றார். மேற்சென்று நாவலின் பலவீனங்களைப் பேசுகின்றார்.

1958 சங்கமணி நாழிதழில் தொடர்கதையாக வெளிவந்த 'துயரப்பாதை' பின்னர் 1978ம் ஆண்டு நாவலாக வெளிவந்தது. அன்றைய சுழலில் இந்நாவலைப்பற்றி சொல்லப்பட்ட கருத்துகளை வாசிக்கையில் ஒரு பக்கம் அதிர்ச்சியும் இன்னொரு பக்கமும் குழப்பமும் வராமல் இல்லை.

புத்தகத்தில் இக்கட்டுரைக்கு பக்கங்கள் குறைவுதான். சிக்கல் இல்லாமல் வாசிக்கும்படி எழுதியுள்ளார் ஆசிரியர்.

ஒரு காலகட்டத்தில் கொண்டாடப்பட்ட படைப்புகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மீள்வாசிப்பு செய்வதும் அதுபற்றி பேசுவதும் அவசியம் என்பது இக்கட்டுரை வழி முக்கியத்துவம் பெருகின்றது. 

ஆனால் மீள்வாசிப்பில் அப்படைப்பை மட்டுமே கைகொள்ளாமல் அந்நாவல் எழுதபட்ட கால சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். 

ஏனெனில் ஒரு படைப்பை கொண்டாடும் மனநிலையை புரிந்துக்கொள்ள அது உதவும். அதனை ஒரு போதும் குறைத்து மதிப்பிடலாகாது. 

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்