பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 22, 2021

‘மலேசிய நாவல்கள்’ – இரண்டாவது கட்டுரையை முன் வைத்து

 

‘மலேசிய நாவல்கள்’ – இரண்டாவது கட்டுரையை முன் வைத்து

தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார்.

            இரண்டாவது கட்டுரையாக, ‘மெல்லுணர்ச்சிகளின் பூஞ்சணம்’ என்ற தலைப்பில் ரெ.கார்த்திகேசு நாவல்கள் குறித்து எழுதியுள்ளார்.


            ரெ.கார்த்திகேசு ஒரு வணிக எழுத்தாளர் என ஆசிரியர் கட்டுரையைத் தொடங்குகின்றார். அதென்ன வணிக எழுத்தாளர். வணிகம் என்பது வியாபாரம் என நன்கு தெரியும். ரெ.கார்த்திகேசு எழுதி எழுதி வியாபாரம் செய்து சம்பாதித்தாரா? அப்படி எழுதி எழுதி சொத்துகள் ஏதும் சேர்க்க முடியுமா என்ன ? என சிலரை  கேள்வி கேட்க வைக்கிறது.  அவர்களும் அதனை ஒரு அறிவார்த்த கேள்வியாக நம்பி கேட்கவும் செய்கிறார்கள்.

            தீவிர  இலக்கியம் வணிக இலக்கியம் என்கிற இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரிகின்ற வரை அல்லது அதனை அறிந்துக் கொள்ள முயலாதவரை அர்த்தமற்ற கேள்விகளும் அதையொட்டிய அர்த்தமற்ற விவாதங்களும் தொடரத்தான் செய்யும்.

            இதனை அறிந்துக் கொண்டதாலும் தனது முன் அனுபவத்தாலும் கட்டுரையாசிரியர்  வணிக  எழுத்துகள்  குறித்து  தெளிவு செய்கிறார். வணிக எழுத்துகளை சாகசக் கதைகள், குற்றவியல் கதைகள், மெல்லுணர்ச்சிக் கதைகள், லட்சியவாதக் கதைகள்  என நான்காக பிரிக்கின்றார். ‘பொதுவாக வியாபார நோக்கம் கொண்ட அவை மக்களுக்குப் பிடித்ததை அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மட்டுமே எழுதுவதால் ஜனரஞ்சக இலக்கியம் என சொல்லப்படுகின்றது’ என்கிறார். தான் கூறும் நான்கு பிரிவுகளுக்கும் ஏற்ற எழுத்தாளர்களையும் மேற்கோள் காட்டுகின்றார். இதன் மூலம் அவர் சொல்லவருவதை வாசகர்கள் எளிதாக புரிந்துக் கொள்ளலாம்.

            வணிக இலக்கியத்தையோ தீவிர இலக்கியத்தையோ பற்றிய விளக்கங்கள் என்னதான் கொடுத்துக் கொண்டிருந்தாலும் இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசங்களை சொல்லித்தான் ஆகவேண்டியுள்ளது. அவ்வாறே இக்கட்டுரையும் அமைந்துள்ளது.

            ஒருவர் எழுதுவது வணிக இலக்கியமோ தீவிர இலக்கியமோ, அது அவரவர் தேர்வு. ஆனால் தான் எழுதுவது என்ன வகை என தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பதுதான் முரண்நகை. அதுவாவது பரவாயில்லை, இன்னொரு ரகமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு தாங்கள் எழுதுவது வணிக  எழுத்து என நன்றாக தெரியும் ஆனால்  தங்கள் மீது தீவிர இலக்கியவாதிக்கான போர்வையை போர்த்திக் கொள்ள  எல்லாவகையான காரியங்களையும் செய்கிறார்கள்.  அதன் பின்னால் இருக்கும் அரசியல் கவனிக்க வேண்டிய ஒன்று. இவர்களைப் போன்றவர்கள்தான்  சிக்கல்களுக்கு மூல காரணமாக இருக்கிறார்கள்.

            ரெ. கார்த்திகேசு எழுதிய,  வானத்து வேலிகள்,  தேடியிருக்கும் தருணங்கள், அந்திம காலம், காதலினால் அல்ல, சூதாட்டம் ஆடும் காலம் என்ற ஐந்து நாவல்களைப் பற்றியும் இக்கட்டுரை பேசுகிறது. ஐந்து நாவல்களின் சுருக்கத்தையும் ஆசிரியர் சொல்லிவிட்டு அந்நாவல்களின் பலம் பலவீனங்களை ஆராய்கின்றார். யோசிக்கையில் இதற்கு அதிக நேரமும் உழைப்பும் தேவையாயிருக்கிறது. வெறுமனே ஒரு படைப்பையோ அவர் மீதான  பிம்பத்தையோ கணக்கில் கொள்ளாமல்,  ஒரு முழுமையான பார்வையைக் கொடுக்க அவர் மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. ரெ.கார்த்திகேசு  மீது மரியாதை உள்ளதாகச் சொல்லிக்கொள்பவர்களோ, அவர் முக்கியமான படைப்பாளி என முன்மொழிகின்றவர்களோ அவரது படைப்புகளை முழுமையாக வாசித்துள்ளார்களா என்பது ஐயம் கொடுக்கும் கேள்விதான்.

            ‘பெரும்பாலும்  மலேசிய எழுத்தாளர்கள் செய்யும் அடிப்படைத் தவறுகள் இல்லாமல் ரெ.கா-வின் நாவல்கள் உள்ளன. வசனங்களின் புழங்கு மொழி, பிற இன மக்களிடம் பேசும்  வசனங்களின் நேர்த்தியான  மொழி, காலங்களில் குழப்பம்  இல்லாமை என தன்னை ஒரு சிறந்த பேராசிரியர் என நிரூபித்துள்ளார்’ என்கிறார்.

            ரெ.காவின் புனைவின் தரத்தை மட்டுமே இக்கட்டுரை ஆராய்கிறது. வாசிக்கின்றவர்களுக்கு அது புரியும் வகையிலும் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

            அவரின் இதர செயலூக்கத்தினால் உருவாகியிருக்கும் ஆளுமையைக் கொண்டு அவரது புனைவுலகை மதிப்பிட்டுக் கொண்டிருக்காமல் இரண்டுக்குமான வித்தியாசத்தை கண்டறிய இக்கட்டுரை உதவும். இக்கட்டுரையை மூழுமையாக வாசிக்கின்றவர்களுக்கு அது புரியும் என எதிர்ப்பார்க்கலாம்.

 

#தயாஜி

           

             

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்