பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 10, 2021

'மலேசிய நாவல்கள்’ – ஆறாவது கட்டுரையை முன் வைத்து


‘மலேசிய நாவல்கள்’ – ஆறாவது
கட்டுரையை முன் வைத்து

     தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார். 

   ஆறாவது கட்டுரையாக, ‘சென்று சேராத முன்னோடி ’ என்ற தலைப்பில் ஐ.இளவழகு குறித்து எழுதியுள்ளார்.



லட்சியவாதம் என்கிற பதம் இங்கு எவ்வாறு புரிந்துக்கொள்ளப் படுகின்றது என்கின்ற அறிமுகத்துடன் கட்டுரை தொடங்குகின்றது. 

1. சமூகப் பொறுப்புணர்வை அதிகம் வலியுறுத்துவது.
2. சித்தாந்த பலம் இல்லாத எழுச்சிக்கனவுகளை உருவாக்குவது.
3. அன்பு, கருணை, காதல், மனிதாபிமானம், என அனைத்திலும் மிகையான வெளிப்பாடுகளைக் கொண்டது. 
4. வாழ்வை எளிமைப்படுத்திக் காட்டுவது.

என இலட்சியவாத எழுத்துகளை வரையறை செய்கிறார் கட்டுரையாசிரியர்.

இக்கட்டுரை ஐ.இளவழகு எழுதிய 'இலட்சியப் பயணம்' எனும் 424 பக்க நாவலைப் பற்றி விரிவாக பேசுகிறது.  இந்நாவல் பின்புலத்தை சொல்லும் போது, மலேசிய எஸ்.பி.எம் தேர்வுக்கு தெர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசிய நாவல் என்கிறார். அதோடு மாணவர்களின் பிரதிக்காகத் தணிக்கை செய்யப்பட்டு சுருக்கப்பட்டதையும் குறிப்பிடுகின்றார்.

இந்நாவலின் சிறப்பம்சமாக, 
1. தோட்ட வாழ்வின் அத்தனை அம்சங்களையும் விரிவாக சொன்ன பாங்கு.
2. மையமாக மாதவன் எனும் கதாபாத்திரம் இருந்தாலும் அவனுக்கு ஈடாக அவன் தந்தை ஆண்டியப்பன் மற்றும் இதர கதாப்பாத்திரம் வந்து பல்வேறு மனோநிலைகளை வெளிப்படுத்துகின்றனர்.  

அடுத்ததாக இந்நாவல் கொண்டுள்ள பலவீனப்பகுதிகளை பேசுகின்றார் ஆசிரியர். கதாப்பாத்திரம் அடையும் மாற்றம் குறித்து தெளிவான சித்தரிப்பு இல்லாமை முக்கிய பலவீனம் என்கிறார். 
 
படைப்பாளர்களுக்கு அரசியல் புரிந்துணர்வு எத்தனை அவசியம் என கோடிட்டுக் காட்டுகின்றார். அதுதான் தெரிந்தோ தெரியாமலோ படைப்பில் வெளிவந்துவிடுகிறது. பலர் வழிந்தே தங்களில் அரசியலை படைப்புகளில் புகுத்துகின்றார்கள். சிலர் தங்களையும் அறியாமல் எழுத்தின் வழி தங்களை காட்டிக் கொடுத்துக் கொண்டுவிடுகிறார்கள். 

ஐ.இளவழகு எழுதியிருக்கும் 'லட்சியப் பயணம்' எனும் இந்நாவல், எழுத்தாளருக்கு தெளிவான அரசியல் பார்வை இல்லாததால் அது அடைய வேண்டிய இடத்தை அடையாமல் சரிந்துவிடுகிறது என்பதனை புரிந்துக்கொள்ள முடிகின்றது.

படைப்பை நோக்கி வைக்கப்படும் விமர்சனம் படைப்பாளரை நோக்கி திரும்புவது இயல்புதான். அதனையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஆனால் படைப்பாளர் ஒன்றை நம்பி அதனை படைப்பில் புகுத்துகின்றாரா? அல்லது அத்தகைய (அன்றைய)சூழல் அவருக்கு கொடுத்த தெளிவற்ற சிந்தனை படைப்பில் புகுந்துவிடுகின்றதா என கவனிக்க வேண்டியுள்ளது. 

ஏனெனில், சில காரணங்களால் 'இந்நாவல் ஒரு வரலாற்று மோசடி. அதனை எண்ணி எழுத்தாளன் தலைகுணிந்துதான் ஆகவேண்டும்' என்கிறார் கட்டுரையாசிரியர். இவ்வாறு சொல்வது ரசனை விமர்சனத்திற்கு அவசியம்தான என கேட்க தோன்றுகிறது.

ஒருவேளை இந்நாவலில் எழுத்தாளர் புகுத்தியுள்ள அரசியல் பார்வையால் அவர் லாபம் அடைந்து பொருள் ஈட்ட அதனை மேற்கொண்டார் என நிரூபனம் ஆகியிருந்தால் கூட மேற்சொன்ன கூற்றை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். அப்படி நிரூபனம் ஆகிடாத ஒன்றை, எழுத்தாளரின் அன்றைய சூழலில் தெளிவற்ற அரசியல் பார்வையை இன்றைய சூழலில் இருந்து பார்க்கையில் அதனை விமர்சனப்பூர்வமாக அணுகலாமே தவிர  அதனை எழுதியதற்காக எழுதியரை 'தலைகுனிய' சொல்வதெல்லாம் அநாவசியமாகவே தோன்றுகிறது. 

இருந்தும் '..... சிறுசிறு இடையூறுகளால் நாவலைப் புறக்கணிப்பது நம் வரலாற்றின் ஒரு பகுதியைப் புறக்கணிப்பதும் தான்'  என சொல்வதன் வழி இன்றைய தலமுறையினர் இந்நாவலை தேடும் வழி செய்கிறார் கட்டுரையாசிரியர்.


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்