பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 31, 2025

4:4:4


நடுகல்.காம் மின்னிதழுக்கு என் படைப்புகளாக சிறுகதைகள், குறுங்கதைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதுவதோடு 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' என்ற மாதாந்திர தொடரையும் எழுதிவருகிறேன். இவ்வாண்டு ஜனவரி தொடங்கி டிசம்பரில் ஒரு டஜன் புத்தகங்களைப் பற்றி எழுதியுள்ளேன்.

அவை 4 சிறுகதை தொகுப்புகள், 4 நாவல்கள், 4 கவிதை தொகுப்புகள்என அமைந்துவிட்டது ஆச்சர்யம்தான்.

அடுத்த ஆண்டும் இத்தொடரை தொடர்ந்து எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது. நடுகல்.காம் குழுவினர்க்கும் அதன் ஆசிரியர் வா.மு.கோமுவிற்கும் என் அன்பும் நன்றியும்.

நான் வாசித்த மலேசிய புத்தகங்கள் குறித்த என் வாசிப்பு அனுபவத்தை நீங்கள் வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

அதற்கான இணைப்பு 👉https://share.google/6VgmDrTXWVYLFcbck


வாசிப்பை கொண்டாடுவோம்...


இந்த ஆண்டில் வாசித்த புத்தகங்கள்; இதுவரை வாசித்தவையில் இருந்து சற்றே அதிக எண்ணிக்கையில் இருப்பதாகத் தோன்றுகிறது.

வழக்கமாக ஒரு பெட்டியில்தான் இருக்கும். இம்முறை இன்னொரு பெட்டியும் சேர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும் எடுத்து மீண்டும் அலமாரியில் அடுக்க வேண்டும். அதற்கு முன் அவற்றை பட்டியலிட வேண்டும். சில குறிப்புகள் எழுத வேண்டும்.

அதற்கு பின்னர்தான் புத்தாண்டு தொடக்கம் வாசிக்க வேண்டியதை மீண்டும் காலி பெட்டியில் வைத்து நிரப்ப வேண்டும்.

ஒரு புத்தகத்தை வாசித்தபடி புத்தாண்டை கொண்டாட வேண்டும்..
வாசிப்பை நேசிக்கிறவர்களுக்கு இதுதானே புத்தாண்டு கொண்டாட்டம்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


டிசம்பர் 27, 2025

- முன்மாதிரியும் பின்மாதிரியும் -

நாம் யாரை பின்தொடர்கின்றோமோ அவர்களுக்கு சாதகமான எல்லாவற்றையும் செய்து நல்லப்பெயரை வாங்குவதைவிடவும்
முக்கியமான ஒன்று உள்ளது.

அவர்கள் சொல்வதைவிட, செய்வதை கவனிப்பது. அவர்கள் செய்வதை நாமும் செய்வது.
அப்படி அதை நாம் செய்யும் போது அவர்களுக்கு எரிச்சல் வந்தால் அவர்களை பின்தொடர்வதை நாம் மறுபரிசீலனைச் செய்யவேண்டும்.

அவர்கள் சொல்வதை அவர்களே செயல்படுத்தாமல் முரணாக இருந்து கொண்டு காலம் தன்னை இழுத்துவிட்டு கோலம் போட்டுவிட்டதாக சொல்கிறவர்கள்
சொல்லட்டும். நம்மால் அதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவகையில் காலம் பலவற்றை ஆரோக்கியமாக மாற்றிவிடத்தான் செய்கிறது. வரவேற்போம்.

ஆனால் அதே காலம் நமக்கு வரும்போது அவர்கள் அதனை எப்படி எதிர்கொள்கிறார்கள். ஏன் நம்மை எதிரியாகப் பார்க்க ஆரம்பிக்கின்றார்கள், என கேட்க தொடங்காதவரை நமக்கு எதுஎதுவு மாறப்போவதில்லை.

அவர்கள் சொல்வதை அவர்களே பின்பற்றாத போதும் நாம் அவர்களையே முன்மாதிரி கொண்டு பின்மாதிரி! ஆக விரும்பினாலும் நண்பர்களே உண்மையில் அவர்களைவிடவும் நாம்தான் ஆபத்தானவர்கள்.

டிசம்பர் 20, 2025

- மலேசியா வந்துவிட்டார் பெருமாள்முருகன் -


💙எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வந்துவிட்டார்..!💙

வல்லினத்தின் இலக்கிய முகாமில் கலந்து கொண்டேன். 'சிறுகதை எழுதும் பட்டறையை' எழுத்தாளர் பெருமாள்முருகன் வழிநடத்தினார்.
முதல் அமர்வு வழக்கம் போல சிறப்பாய் அமைந்தது.

இன்று காலை அவரை சந்தித்ததும், கடந்த இருபது நாட்களாக அவரின் சிறுகதைகளைக் குறித்து நான் எழுதிய தினம் ஒரு வாசிப்பனுபவம்டுரையைப் பற்றி பேசினார்.

இன்றைய முதல் அமர்வு முடிந்ததும்,
அவரிடம் எனது இரு குறுங்கதை புத்தகங்களையும் கொடுத்தேன்.

இரண்டாம் அமர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றோம்.

அவர் பேசியதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா.?
அவற்றை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.....

டிசம்பர் 19, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 20/20


பெருமாள்முருகன் சிறுகதை; ‘முத்தம்’ 20/20

இன்று இருபதாவது சிறுகதையைப் பார்க்கவுள்ளோம். இந்த தொடர் வாசிப்பு கட்டுரையின் நிறைவு கட்டுரையும் இதுதான். நாளை பெருமாள்முருகனைச் சந்திக்கவுள்ளேன். அதற்குள் இந்தக் கட்டுரையை முடித்துவிடலாம் என்ற எண்ணத்தால் நாளை எழுதவேண்டியதை இன்று எழுதுகிறேன்.

நாளை மறுநாள்; டிசம்பர் 21-ம் திகதி, வல்லினம் விருது விழா என்னும் நம் நாட்டின் முக்கியமான இலக்கிய நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அதனை நிகழ்ச்சி என்று சுருக்காமல் இலக்கிய முன்னெடுப்பு என்றே அழைக்க விரும்புகிறேன். நீங்களும் இந்த விருது விழாவிற்கு வந்தால், நான் சொல்வதற்கான காரணத்தை நீங்கள் நேரடியாக உணரலாம்.

இவ்விழாவில் மலேசிய மக்களிடம் நன்கு அறிமுகமானவரும், பலரும் தங்களின் கல்விசார் வழிகாட்டியாகவும் ஆசானாகவும் நினைக்கும் பி.எம்.மூர்த்தி அவர்களுக்கு இம்முறை இவ்விருதைக் கொடுக்கின்றார்கள். அதோடு பி.எம்.மூர்த்தி குறித்த ‘கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை’ என்னும் புத்தகத்தையும் வெளியிடவுள்ளார்கள்.

பிரிக்பீல்ட் YMCA மண்டபத்தில் ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் இவ்விருது விழாவில் மேலும் ஒரு சிறப்புரையை வழங்க தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் பெருமாள்முருகன் வருகின்றார்.

எப்போதும் சொல்வதுதான் நாம் நேசிக்கும் செயல்பாடுகளை நம்மால் செய்யமுடியாமல் போகலாம். ஆனால் நாம் நம்பும் ஒன்று நம் கண்முன்னே நடக்கின்றது என உணர்ந்துவிட்டால் நாமும் நம்மால் முடிந்த சிறு பங்களிப்பை தருவதே ஒருவகையில் நாமும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம் என்பதற்கான ஒரு சாட்சிதான். இந்த சாட்சி யாருக்கு தேவையோ இல்லையோ நமக்கு நாம் கொடுக்கும் உற்சாகம் அதுதான்.

அந்த உற்சாகத்தை நான் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். அந்த உற்சாகம்தான் இன்று இருபதாவது சிறுகதையைக் குறித்து எழுதவும் வைக்கிறது.

ஓர் எழுத்தாளரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் எவரும் அந்த எழுத்தாளரின் படைப்புகளில் சிலவற்றையாவது வாசித்திருத்தல் என்பது அடிப்படை என எப்போதும் நம்புகிறேன். நான் இதனை தொடர்ந்து செய்வதால்தான் உங்களோடும் பகிர்ந்து கொளகிறேன்.
நான் தொடர்ந்து எழுதிய இந்த வாசிப்பு கட்டுரையின் வழி எழுத்தாளர் ‘பெருமாள்முருகன் படைப்புலகம்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் முன் பேசுவதற்கான வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. அதற்கான மேலும் சில தயாரிப்பு வேலைகள் இருப்பதால்தான் நாளை பகிரவேண்டிய இந்த வாசிப்பு கட்டுரையை இன்று பகிர்கிறேன்.

பெருமாள்முருகன் சிறுகதை; ‘முத்தம்’ 20/20.

இக்கதையின் களம் எனக்கு புதியது. ஓர் இளைஞன் திருடுவதற்கான புதிய வழியைக் கண்டுபிடிக்கின்றான். அதன் படி அவனுக்கு அவனே சில சட்ட திட்டங்களை வைத்துக்கொள்கிறான். அவனே அதை மீறவும் செய்கிறான். அவனது வயது அப்படி. அதன் பின் என்ன நடந்து. அவனது திட்டம் ஈடேறியதா இல்லையா என்பதுதான் கதை.

இதனைப் படித்ததும் சினிமாக்களில் காட்டும் சில கோமாளி திருடர்கள் உங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இக்கதையின் போக்கு உங்களுக்கு வேறொரு உலகத்தைக் காட்டும். இக்கதையின் எதிர்ப்பாராத முடியும் நம்மை பலவிதங்களில் யோசிக்க வைக்கும்.

மலைப்பகுதியில் இருக்கும் சிறு குகையின் உள்பகுதியில் நாயகன் சென்று ஒழிந்து கொள்வதாக கதை தொடங்குகிறது. அந்தப் பக்கம் இருக்கும் ஒத்தையடி பாதியில் அவ்வப்போது சிலர் வருவார்கள் போவார்கள். அங்கே வரும் காதல் ஜோடிகள் யார் கண்ணிலும் படாமல் சில்மிஷங்களில் ஈடுபடுவதற்கு ஏற்ற இடமும் அங்கே இருக்கிறது. அங்கு வரும் காதலர்களுக்கு அந்த இடம் கண்ணில் பட்டுவிடும். நாயகன் ஒழிந்திருக்கும் இடத்தில் இருந்து அங்கு பார்க்கலாம். இவனது வேலை என்னவென்றால் அந்தப் புதருக்கு வரும் காதல் ஜோடிகளை கவனித்து அவர்கள் மெய்மறக்கும் சமயம் சட்டாரென அவர்கள் முன் தோன்றி பயம்காட்டி அவர்களிடம் இருந்து பணததையும் நகையையும் திருடிக்கொள்வதுதான். முகத்தை மறைத்தபடி தீடீரென தோன்றும் அப்படியொரு உருவத்தைப் பார்த்தவர்கள் நிச்சயம் பதறத்தானே செய்வார்கள். அதிலும் அந்த இளம்ஜோடிகளின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வேன் என்று கூறும் நாயகன்; அவர்களைப் பொறுத்தவரை இந்தக் கதையின் வில்லன் தானே.

நாயகன் யார் என்ன செய்கிறான். இந்தத் திருட்டுத் தொழிலை ஏன் தொடங்கினான் எப்படி தொடங்கினான் என எழுத்தாளர் சொல்வது நமக்கு புதிய கதைக்களாக இருக்கலாம். ஆனால் இது எங்கோ நடக்கும் உண்மை சம்பவமாகவே நமக்கு தோன்றும்.

இந்தச் சமயத்தில்தான் நாயகன் கண்களுக்கு இரு இளம் ஜோடிகள் சிக்குகிறார்கள். காதலனும் காதலியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாயகன் தான் அவர்களுக்கு இடையே குதிக்க வேண்டிய சரியான தருணத்திற்காக காத்திருக்கிறான். அங்கு அந்தக் காதலி சட்டென காதலின் தலையை தன் இரு கைகளாலும் பற்றி இழுத்து அவன் உதட்டில் முத்தமிடுகிறாள். இருவரும் அப்படியே அந்த முத்தத்தில் ஆழ்கிறார்கள். இனிதான் அவர்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்வார்கள் என்ற நாயகனுக்கு நன்றாக தெரிகிறது. அவ்வளவு தொழில் சுத்தம். ஆனால் என்ன நினைத்தானோ அவர்கள் முன் சட்டென வந்து நின்று “என்னடா பண்றீங்க?” என அதட்டுகிறான்.

அவர்களிடம் வழக்கம் போல கைவரிசையைக் காட்டுகிறான் நாயகன். அவனின் வயது அங்கு வந்த பெண்ணின் அழகும் நாயகனை சபலப்படுத்துகிறது. அவள் மீது ஆசை கொள்கிறான். காதலனை கட்டிப்போட்டுவிட்டு காதலியிடன் தவறாக நடக்க முடிவு செய்கிறான். இந்தத் தொழிலில் எதை செய்யக்கூடாது என அவனுக்கு அவனே சட்டங்களைப் போட்டு வைத்திருக்கிறானோ அதை அவனே மீற முற்படுகின்றான்.

இதுதான் தாங்கள் முதன் முறையாக வெளியில் வந்துள்ளதாகவும். தன் காதலனுக்கு இன்று பிறந்த நாள். அவளிடம் பரிசாக கொடுக்க எதுவும் இல்லை என்பதாலும் ஆசையாய் அவனுக்கு அவன் விரும்பும் ஒரு முத்தத்தைக் கொடுக்கத்தான் இங்கு அழைத்து வந்ததாய்ச் சொல்லி காதலி நாயகனிடம் அழுகிறாள். அவள் சொலவதில் உள்ள உண்மையை எழுத்தாளர் முன்னமே நமக்கு தெரியப்படுத்தியிருப்பார்.

ஆனாலும் நாயகன் அவளை விடுவதாக இல்லை. மரத்தில் கட்டப்பட்டிருக்கும் காதல் கண்மூன்னே நடக்கவிருக்கும் கொடூரம் வாசகர்களுக்கும் பதற்றத்தைக் கொடுக்கிறது. இதுவரை நாயகனாக் தெரிந்தவன் ரொம்பவும் கேவலமானவனாக தெரிய தொடங்குகின்றான்.

அங்குதான் எழுத்தாளர் ஒரு வேலையைச் செய்கிறார். எந்த நல்லவனிடமும் ஒரு கெட்டவன் இருப்பான் எந்த கெட்டவனிடத்திலும் என நாம் சொல்வதை எழுத்தாளர் அங்கு நடத்திக்காட்டுகிறார்.

அந்தக் காதலி சொல்லும் ஒரு வார்த்தை நாயகனின் மனதில் மாற்றத்தைக் கொடுக்கின்றது. அது மன மாற்றமா அல்லது தான் செய்யவிருந்த அருவருப்பான காரியத்தைப் பற்றிய காட்சியா என வாசகர்கள் முடிவு செய்துக்கொள்ளலாம்.

கதை எழுத விரும்புகிறவர்கள் இந்தக் கதையை வாசித்து அதில் இருக்கும் வித்தைகளைக் கண்டு கொள்ளலாம். இன்னும் கூட இந்தக் கதையைக் குறித்து நாம் பேசலாம். கதையின் முடிவில் அந்தக் காதலில் என்ன சொல்லியிருந்தால் நாயகன் தன் முடிவை மாற்றியிருப்பான்.

நாயகன் மனதில் எழுந்திருக்கும் அந்த காமுகம் சட்டென அவளை துச்சமாகவோ தூய்மையாகவோ நினைத்து சட்டென உதறி “போய்த் தொலைங்க..” என சொல்லிவிட்டு அங்கிருந்து போவதற்கு என்ன காரணமாக இருக்கும். இக்கதையை வாசித்தால் அது நமக்கு விளங்கும்.

ஆனால் நான் உங்களுக்கு ஒரு குறிப்பு கொடுக்க விரும்புகிறேன். அந்தப் பெண் தன் காதலனுக்குக் கொடுத்த முத்தம் ரொம்பவும் பரிசுத்தமானது. அந்தப் பரிசுத்தத்தைதான் நாயகனால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் அங்கிருந்து தப்பியோடியிருக்கலாம்.

இனி நீங்களே வாசித்துக் கொள்ளுங்கள்.



#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

டிசம்பர் 18, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 19/20


மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்

பெருமாள்முருகன் சிறுகதை 19/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
***************************************

‘வளர்ந்துவிட்ட மகனுக்கு முதல் எதிரி அவனது அப்பாதான் !’ என்றால்; ஆமாம் என்பதற்கும் நம்மிடம் கதைகள் இருக்கும் இல்லை என்பதற்கும் நம்மிடம் கதைகள் இருக்கும். அப்பாவின் வலி; மகன் வளர்ந்து அப்பாவாய்  ஆனப்பின்னர்தான் தெரியும் என்பதை  நம்மால் மறுக்க முடியுமா சொல்லுங்கள். 

எழுத்தாளர் பெருமாள்முருககனின் மலேசிய வருகையை  முன்னிட்டு எழுதும் தினம் ஒரு பெருமாள்முருகன் சிறுகதைகள் வாசிப்பு கட்டுரையில் அப்பா மகன் உறவு குறித்தும் சில கதைகள் இருக்கின்றன. அதில் இன்று நாம்  பார்க்கப்போகும் கதை கொஞ்சம் மாறுபட்ட கதை. ஆடுகளைப் பற்றி இவ்வளவு அழகாய்ச் சொல்ல முடியுமா என்பதை ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ என்னும் நாவலில் எழுத்தாளர் நிரூபித்திருக்கிறார்.

 இந்தக் வாசிப்பு கட்டுரையிலும் இன்னொரு கதையிலும் ஆடுகள் வருகின்றன. இன்று நாம் பார்க்கப்போகும் கதையிலும் ஆடுகள் வருகின்றன. நம்மை இரசிக்க வைக்கின்றன. 

ஆனால் இது ஆடுகளை மட்டும் பேசவில்லை என்பதுதான் இந்தக் கதை நமக்கு சொல்லும் செய்தி.

பெருமாள்முருகன் சிறுகதை ‘நுங்கு’ 19/20

படிப்பைத் தொடர விரும்பாத நாயகன் அவர்களின் குடும்ப தொழிலான ஆடு மேய்க்கும் தொழிலை விரும்பி செய்கிறான். மாதம் இரு ஆடுகளை விற்றாலும் கூட எந்தவொரு பொருளாதார சிக்கல் இல்லாமல் வாழ முடிகிற நடுத்தர குடும்பம்தான். அதுநாள்வரை ஆடுகளை பராமரிக்கும் பொறுப்பை செய்துவந்த அப்பா நூறு நாள் வேலைக்குச் செல்கிறார்.

அப்பாவிற்கும் மகனுக்குமான உறவு ரொம்பவும் எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் மகனுக்கு மரம் ஏற கற்றுக்கொடுப்பதும்; மகன் தவறி கீழே விழுவதும். இருவரும் வீட்டில் அதை சமாளிக்கும் விதமும் மனதிற்கு நெருக்கமாகிறது.

ஏதோ ஒருவகையில் அப்பாவிற்கும் மகனுக்குமான இடைவெளி வந்துவிடுகிறது. ஆடுகள் மூலம் அந்த இடைவெளி எப்படி உடைகிறது என இக்கதையை வாசித்து தெரிந்துகொள்ளலாம். 

அதுசரி இந்தக் கதைக்கு ஏன் ‘நுங்கு’ என பெயரிட்டுள்ளார் எழுத்தாளர். அட சொல்ல மறந்துவிட்டேன். இந்தக் கதையில் நுங்கும் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக இருக்கிறது. 

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 18/20



மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் 

பெருமாள்முருகன் சிறுதை 'போதும்' 18/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
***************************************

எல்லோருக்குள்ளும் ஒரு காதல் கதை இருக்கும். வெற்றியோ தோல்வியோ எப்போதும் மறக்க முடியாத ஒரு காதல் கதையை நம் மனதின் ஆழத்தில் புதைத்து வைத்திருப்போம்.

என்றாவது ஒரு நாள், மனதின் ஆழம் வரை நீந்தி புதைந்திருக்கும் காதலை மெல்ல மெல்ல வருடியும் கடப்பாரை கொண்டு குத்தியும் வெளியில் எடுத்து பார்த்து இரசிப்போம்.

ஆனால், அந்தக் காதல் இன்னமுமே இயல்பாகத்தான் இருக்கிறது. பிறகுதான் நமக்கு புலப்படுகிறது; நாம் வருடியதும் நம்மைத்தான், நாம் கடப்பாரை எடுத்து குத்தியதும் நம்மைத்தான்.

காதல் பசுமரத்தாணியாய் நினைவில் இருப்பதற்கு காரணமே எல்லா ஆணிகளையும் வாங்கி கொண்டிருப்பது நம் மனம் என்பதால்தால். 

காதலை தன் சிறுகதைகளில் எழுதும் எழுத்தாளர் பல சமயங்களில் நம் இளமையில் நம் இயலாமையில் நாம் மறைப்பதில் நாம் மறக்காமல் இருப்பதில் இருந்து நம் அனுபவத்தை எந்த அனுமதியும் இன்று எடுத்துக்கொள்கிறார் என்றே தோன்றுகிறது.

'பெருமாள்முருகன் காதல் கதைகள்' என்றொரு தொகுப்பு வரவேண்டும் எனறு அவரது காதல் கதைகளை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் தோன்றுகிறது.

அவரது மலேசிய வருகையை முன்னிட்டு தினம் ஒரு சிறுகதையை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.  இன்று 18வது நாள்; 18வது சிறுகதை.

ஓர் எழுத்தாளரை சந்திக்கும் முன் அவரது படைப்புகளை வாசித்தும் அது குறித்து எழுதியும் இருப்பது எனக்குமே உற்சாகத்தைக் கொடுக்கிறது.

பெருமாள்முருகன் சிறுகதை 'போதும்' 18/20.

காதல் தோல்வி பற்றிய கதைக்கரு. ஆனால் அந்தக் காதல் எங்கு தொடங்கி எங்கு சிக்குகிறது என்பதுதான் கதை. இன்னொன்றையும் சொல்லலாம்; காதல் தோல்விகளுக்கு பின்னால் நண்பர்களின் ஆதரவு மனதை எவ்வளவு ஆற்றுப்படுத்துகிறது. அதற்காகவாவது நண்பர்கள் தேவைதான் போல.

ஒவ்வொரு கதையிலும் இந்தச் சமுகத்தின் மீது தன் விமர்சனத்தை வைக்க எழுத்தாளர் தவறுவதில்லை.
இந்தக் கதையிலும் உண்டு.

' காதலிப்பவர்களைக் கொலை செய்யும் திருப்பணி புரியும் சாதியிடம் போய் மாட்டிக்கொள்ளக் கூடாது....' என்று காதலித்த பெண் நினைக்கிறாள் என காதலன் யூகிக்கிறான்.

நாயகனின் காதல் பிஞ்சில் முளைத்திருந்தாலும் அவள் நெஞ்சில் அவன் இன்னும் நண்பனாகவேதான் இருக்கிறான். போதாக்குறை அந்தப் பெண்ணின் குடும்பச் சூழல் வேறு.

அவள் அவனை வீட்டில் பேசத்தான் அழைக்கிறாள். அவனோ அவளது கல்யாணத்திற்கு சென்று மணமக்களோடு சாப்பிட்டு திரும்புகிறான். என்னதான் காதலில் தோல்வி கண்டிருந்தாலும் தன் காதலியின் நினைவொன்றை நண்பன் மூலம் பெற்றுக்கொள்கிறான்.

நண்பன் அப்படி எதைக் கொடுத்தான். அதுவே தனக்கு போதுமென்று நாயகனும் ஏன் சொல்கிறான் என்பதை பெருமாள்முருகனின் 'போதும்' சிறுகதையை வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

அப்படி வாசிக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் ஆழ்மனதில் நீங்கள் மறைத்திருக்கும் காதல் அதன் வேலையைக் காட்டி உங்களை சங்கடப்படுத்திவிட போகிறது.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

டிசம்பர் 17, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 17/20


மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்

பெருமாள்முருகன் சிறுகதை ‘கடைக்குட்டி’ 17/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
***************************************

வழக்கமாக சிறுகதையை எழுதுகிறவர்களிடம் கதையின் முடிவில் திருப்பம் இருக்க வேண்டும் அல்லது கதை முடிவு திருப்பத்தைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் சொல்வார்கள். பலரும் அதனை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவில் ஒரு வெடிகுண்டை வைத்திருப்பார்கள். துரதிஷ்டவசமாக அது வெடிக்கவும் வெடிக்காது. 

கதையில் எங்குமே அந்த வெடிகுண்டிற்கான திரியைப் பற்ற வைத்திருக்க மாட்டார்கள். அல்லது நமத்து போன திரியை நம்பி, வெடிகுண்டை வைத்திருப்பார்கள். அது ஒன்றுக்கும் உதவாமல் போயிருக்கும். இன்னும் சொல்லப்போனால்; அந்தக் கதைக்கு வெடிகுண்டே தேவையிருக்காது. அல்லது அந்த வெடிகுண்டுதான் முழு கதையாகவே வந்திருக்க வேண்டியது. தவறவிட்டிருப்பார்கள். இன்னும் சிலர் கதையை முடிக்கிறேன் என நினைத்து அந்த வெடிகுண்டின் மீது தண்ணீரை ஊற்றிவிடுவார்கள். 

கதையின் முடிவில் தேவைப்படும் திருப்பம் என்றால் என்ன? கதையின் முதல் பத்தியிலேயே அதற்கான திரி தயாராய் இருக்க வேண்டும் என்றால் கதையை எங்கிருந்து தொடங்குவது? போன்ற கேள்விகளுக்கு இந்தச் சிறுகதை நமக்கு பதில்களைக் கொடுக்கும்.

பெருமாள்முருகன் சிறுகதை; ‘கடைக்குட்டி; 17/20

இந்தக் கதையின் முடிவு கொடுக்கும் அதிர்ச்சியைப் பல இடங்களில் நாம் சர்வ சாதாரணமாக சந்தித்திருப்போம். அப்போதெல்லாம் நமக்கு என்ன வந்தது என கடந்து சென்றிருப்போம். அல்லது அப்படி சொல்கிறவர்களைப் புறக்கணிப்போம். ஆனால் இந்தக் கதையை வாசித்துக் முடிக்கும் போது எதிர்க்கொள்ளும் அதே அதிர்ச்சியை எளிதாக கடக்க முடியாது.  ஏனெனில் இந்த வெடிகுண்டிற்கான  திரியை சிறுகதையில் மிகவும் சரியாக எழுத்தாளர் பற்ற வைத்திருக்கிறார். அது மெல்ல மெல்ல கதையின் முடிவிற்கு நம்முடனே வந்து 
படாரென வெடித்து நமக்கும் பாதிப்பைக் கொடுக்கின்றது.

 வீட்டில் ஒருவருக்கு ஏற்பட்ட குடிப்பழக்கத்தால் வீட்டில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்தான் கதை.  ஆனால்  அதை கதையாக சொல்லும் முறையில் எழுத்தாளர் தனித்து நிற்கிறார். கதைப்பின்னல் என்பதற்கு  உதாரணமாக இந்தச் சிறுகதையைச் சொல்லலாம். நிதானம் இல்லாத  மனிதர்கள் தங்களின்  இயலாமைக்கும் தோல்விக்கும்  ரொம்பவும் மோசமான எதிர்வினையைக் கொடுக்கவும்  தயங்கமாட்டார்கள் என்பதை  ஒரு பாடம்போல  இந்தக்  கதை நம் கண்முன் நடத்திக்காட்டுகிறது. 

 இப்போது நான் அந்தக் கதையை உங்களிடம் சொல்வதற்கு முன்பாக நீங்களே அந்தக் கதையை வாசிக்கும் போது உங்களால் அந்த திரியுடன் நேரடியாகப் பயணிக்க முடியும். உங்கள் மனதிலும் அந்த வெடிகுண்டு வெடிக்கட்டும் என நானும் கேட்டுக்கொள்கிறேன்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

டிசம்பர் 16, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 16/20

 



மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்


பெருமாள்முருகன் சிறுகதை, ‘வீராப்பு’ 16/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
***************************************

    ‘குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்’ என்று சொல்லிச்சொல்லி அலுத்துவிட்டோம். விற்கிறவர்களும் கேட்பதில்லை வாங்குகிறவர்களும் கேட்கதில்லை. அதற்கு லைசன்ஸ் கொடுக்கிறவர்களும் கேட்பதில்லை.

    அதனால்தான் என்னவோ குடிப்பழக்கம் குறித்தும் அதன் விளைவுகளைக் குறித்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதைவிட குடியின் கொண்டாட்டத்தை எழுதுகிறவர்களும் பாடுகிறவர்களும் அதிகரிக்கவே செய்கிறார்கள்.

    பல ஆண்டுகளாக குடிப்பவர்கள் கூட அத்தனை மோசமான நிலையை அடைவதில்லை. ஆனால் புதிய குடிகாரர்கள்; குடிக்க ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே குடிக்கு அடிமையாகி குடும்பத்தை இழந்து உடலை இழந்து உயிரையும் இழந்துவிடுகிறார்கள். அது என்னமோ நமக்கு புரியாத புதிர்தான்.
    
    பெருமாள்முருகனின் இந்தச் சிறுகதையும் அப்படியொரு குடியின் விளைவைச் சொல்லும் கதைதான். ஆனால் வெறுமனே அப்படியொரு முத்திரையைக் குத்த முடியாத கதை. அதில்தான் எழுத்தாளர் தனித்து நிற்கிறார்.

    மனித இயல்பில் தன்னை அடுத்தவரிடம் நிரூபிக்க படும்பாட்டை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றாம். நாம் அழகாய் இருக்கிறோம் என யாரோ நமக்கு சொல்ல வேண்டியுள்ளது. நாம் திறமையாய் இருக்கிறோம் என்பதை யாரோ நமக்கு சொல்ல வேண்டியுள்ளது. நாம் தைரியமாய் இருக்கிறோம் என்பதை யாரோ நமக்கு சொல்ல வேண்டியுள்ளது. அதனால் நமக்கு எந்த இலாபமும் இல்லாவிட்டாலும் யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்கவும், சொல்ல வைக்கவும் நாம் எந்த எல்லைக்கும் போகின்றோம்.
அப்படியொரு எல்லையைத் தொட்டு நம்மை பீதிக்கு ஆளாக்குகின்றான் இக்கதையின் நாயகன்.

இன்றைய பெருமாள்முருகன் சிறுகதை ‘வீராப்பு’ 16/20

    தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தால் தன் இயல்பில் இருந்தே நாயகன் மாறி யாரிடமும் பழக விரும்பாதவனாக ஒதுங்கி வாழ ஆரம்பித்துவிட்டான்.
திருமணத்திற்கு பின்னும் தான் பழையமாதிரிதான் இருக்கிறேன் எந்த மாற்றமும் இல்லை என்று நண்பர்களுக்கு காட்ட நினைத்ததின் விளைவு.

    அப்படி காட்ட நினைத்த வீராப்பு நாயகனுக்கு எதைக் காட்டியது என்பதை நாம் வாசிக்க உள்ளுக்குள் நமக்கு பீதி ஏற்படுகிறது. தெளிந்த நீரோடை போல சென்று கொண்டிருக்கும் கதையில் வரும் முடிவு நம்மைத் தூக்கியடிக்கச்செய்கிறது.

    நீங்கள் உங்களை மற்றவர்களிடம் எப்போதும் நிரூபிக்க நினைக்கும் நபராக இருந்தால் இந்தக் கதையை வாசித்துவிடுங்கள். அதனால்தான் இந்தக் கதையைக் குறித்து நான் அதிகம் எழுதவில்லை.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

- அந்த 7 முத்தகங்கள் -



இந்தப் புத்தகங்கள், இந்த ஆண்டின் என் வாசிப்பு பட்டியலை முடித்து வைக்க காத்திருக்கும் புத்தகங்கள்.

ஆண்டு தொடக்கத்திலேயே, இந்த ஆண்டு வாசிக்க வேண்டிய புத்தகங்களைப் பட்டியல் போட்டு பெட்டியில் அடுக்கினேன்.

ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒருமுறை, அந்தப் பெட்டியில் உள்ள அனைத்து புத்தகங்களையும் மீண்டும் பார்வையிட்டு கையிலெடுத்து புரட்டி, தொடர்ந்து வாசிப்பு பெட்டியில் வைக்கவும் சிலவற்றை மீண்டும் புத்தக அலமாரியில் அடுக்கி வைக்கவும் செய்தேன்.

வாசிக்க வேண்டிய புத்தகப் பட்டியலிலும் அதற்கு ஏற்றார்ப்போல சில புத்தகங்களை இணைத்துக் கொண்டே வந்தேன்.

அப்படியும் இப்படியும் என ஆகிப்போன கணக்கில் இந்த ஆண்டின் வாசிப்பை நிறைவு செய்யக்கூடிய புத்தகங்களாக இவை கையில் எஞ்சியுள்ளன.

வழக்கமான என வாசிப்பு கணக்கில் (அப்படியொரு கணக்கு என்னிடம் உள்ளது. ஒருநாள் அதுபற்றியும் பகிர்ந்து கொள்கிறென்) இவை ஏழு புத்தகங்கள் எழுநூற்று ஐம்பது பக்கங்கள். புத்தாண்டு பிறக்க இன்னும் 15 நாட்கள் உள்ளன.

அதற்குள் இவற்றை வாசித்து முடித்துவிட்டால் இந்த ஆண்டு தொடக்கத்தில் நான் போட்ட திட்டமிடல் எனக்கும் மனநிறைவைக் கொடுக்கும்.

ஒருவேளை அதிகம் வாசிக்க வாய்ப்பு கிடைத்தால்; கொஞ்சமாய்க் கொண்டாடிக்கொள்வேன்.

இந்தப் பதினைந்து நாட்களில் இவற்றில் எது வாசிப்பில் கரையேறுகிறதோ; அல்லது புத்தக அலமாரிக்கு செல்கிறதோ; புதிதாக எதுவும் இணைகிறதோ;
என என்னால் யூகிக்கவே முடியாது. அதற்கு சில புறவய காரணங்களும்
என் உடல்நிலை காரணங்களும்
இருக்கவே செய்கின்றன.

சின்ன சின்ன வெற்றிகளைக் கொண்டாடி மகிழ்வோம். நமது பெரிய பெரிய காயங்களையும் இழப்புகளையும் கொஞ்ச நேரம் மறந்திருக்கச்செய்யும்.

டிசம்பர் 15, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 15/20


மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்

பெருமாள்முருகன் சிறுகதை ‘பரிகாரம்’ 15/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.

***************************************

ஏன் கதை எழுதுதப்படுகின்றன? என்று நான் அடிக்கடி கேட்டுக்கொள்வேன். ‘நான் ஏன் எழுதுகிறேன்?’ என்பதற்கும் ‘ஏன் கதைகள் எழுதப்படுகின்றன?’ என்பதற்கும் பதில்கள் ஒரே மாதிரி வருவதில்லை. ஏன் எழுதுகிறேன் என்பதற்கு கொடுக்கும் பதில்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமைகிறது. அது அவரவர் எதை நம்புகிறார்களோ   அதைப் பொறுத்தது. அதற்கு மாறாக; ஏன் எழுதப்படுகின்றன என்ற கேள்விக்கு பெரும்பாலும் ஒரே மாதிரி பதில்கள்தான் கிடைக்கின்றன. 

அது, தன் சக மனிதனுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையைக் கொடுப்பதற்காக; நிதர்சனத்தை முகத்தில் அறைந்தார்ப்போல சொல்வதற்காக; இதற்கெல்லாமா அழுவாய் என அரவணைப்பதற்காக என வரும் பதில்களைப் பின்தொடரும்போது  அந்த பதில்கள் ஒவ்வொன்றும்  ஓர் இலக்கை நோக்கி  பயணிப்பதை நான்  அறிந்து கொள்ளலாம். அதுதான் ‘சக மனிதன்’.

எழுதப்படுவது எல்லாமே சக மனிதனிடம் ‘எழுத்து’ வழி உரையாடுவதற்குதான்.

சிலவற்றை அன்பாகவும் சிலவற்றை அதட்டியும் சொல்லவேண்டியுள்ளது. சிலருக்கு அப்படியும் சிலருக்கு இப்படியும் புரியும். முகத்தில் அறைந்தபடி சொல்லும் வாழ்வின் நிதர்சனம் எல்லோருக்கும் பெரிய மன வெடிப்பிற்கு பின் புரிகிறது.

அப்படியொரு அறைதான் பெருமாள்முருகனின் இந்தக் கதை.

பெருமாள்முருகன் சிறுகதை, ‘ஒளி’ 15/20

ஒரே கதையில் இரு கதைகளுக்கான திறப்புகளைக் கொண்டிருக்கும் கதையாக இதனைப் பார்க்கிறேன். வழக்கமாக கதை எழுதுகிறவர்களிடம் ஒரு சிக்கல் இருக்கும். அவர்கள் எழுதும் கதை ஓரிடத்தில் முடிந்துவிடும். அக்கதையை  வாசிக்கும் நமக்கு அது நன்றாகவே தெரியும். ஆனால் அந்த எழுத்தாளரோ, தேவையே இல்லாமல் அந்தக் கதையை மேலும் அரை பக்கம்  முதல் ஒரு பக்கம் வரை நீண்டு எழுதுவார். அதாவது அவர் எழுதிய கதை முடிவை வாசகர்கள் புரிந்து கொள்ளாமல் போய்விடுவார்களோ என்று பயந்து அவர் எழுதிய கதையின் முடிவிற்கு அவரே இன்னும் ஒரு பக்கத்திற்கு விளக்கவுரையை எழுதுவார்.
ஆனால் எழுதிப் பழகிய  எழுத்தாளர்களிடம் அந்த சிக்கலைப் பார்ப்பது ரொம்பவும் அறிது. அப்படி இருந்தாலும் அதுவும் கதையின் ஒரு காரணத்தைக் கொண்டிருக்கும்.

பெருமாள்முருகன் எழுதியிருக்கும் ‘ஒளி’ சிறுகதை கொஞ்சம் தடுமாறியிருந்தால் அந்தச் சிக்கலை சந்தித்திருக்கக்  கூடும். ஆனால் அவர் எழுதிய விதம் இருவேறு முடிவுகள் குறித்து சிந்திக்க வாசகர்களை இழுத்துச் செல்கிறது.

நாயகனின் தந்தை இறந்துவிடுகிறார். அவரின் நினைவுகளால் நாயகனின் மனம் அலைக்கழிக்கிறது.  அந்த மரணத்தை குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்  என எழுத்தாளார் படிப்படியாகச் சொல்கிறார்.  அப்பா இறந்த மறுநாளே அவர்  பயன்படுத்திய வண்டியை சின்னண்ணன் விற்க முற்படுகின்றார்.  அந்த வாகனத்தில் ஏற்பட்ட விபத்தால்தான் தன் கணவர் இறந்ததால் அதனை வீட்டில் வைக்க வேண்டாம் என அம்மா சொல்கிறார். அந்த வாகனத்தைப் பார்க்கும் போதெல்லாம் அப்பா இறந்தது நினைவிற்கு வரும் எனவே அந்த வாகனம் இனி வேண்டாம் என்கிறார் பெரியண்ணன். 

ஆனால் நாயகனின் எண்ணமோ வேறாக இருக்கிறது.
அப்பாவின் அந்த வாகனம் வீட்டில் இருந்தால்  அப்பாவே வீட்டில் இருப்பது போல இருக்குமே என நாயகன் நினைக்கிறான். இப்படியாக தந்தையின் திடீர் மரணம் அவருடனான பல நினைவுகளை மீண்டெழ வைக்கிறது. என்ன இருந்தாலும் கடந்துதானே போகவேண்டும் என சுற்றி இருப்பவர்கள் சொன்னாலும்கூட நாயகனின் மனம் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

அப்பா இறந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில், நாயகனை ஆசுவாசப்படுத்த அவனது நண்பன் அவனை திரையரங்கிற்கு அழைக்கின்றன். நாயகனின் அப்பாவிற்கு பிடித்த கதாநாயகன் என்பதையெல்லாம் கூறி நண்பனும் வீட்டில் உள்ளவர்களும் நாயகனை திரைப்படத்திற்கு செல்லச்  சொல்கிறார்கள். அது அப்பாவையும் மகிழ்ச்சிப்படுத்தும் என்ற எண்ணத்தில் நாயகன் செல்கிறான்.

சுடுகாட்டை கடந்துதான் திரையரங்கிற்குச் செல்லவேண்டும். செல்லும்போதே படம் பார்த்துவிட்டு திரும்பும்போது அப்பாவின் சமாதியின் முன் அமர்ந்து அந்தப் படத்தின் கதையைச் சொன்னால் அப்பாவின் ஆன்மா சாந்தியடையும் என நினைக்கிறான்.

படம் முடிந்து அதே சுடுகாட்டு வழியில் வருகிறான் நாயகன். அங்கு அந்த இரவு நேரத்தில் நாயகனுக்கு யாரோ அழைப்பது போல கேட்கிறது. அது அவனது அப்பாவின் குரல். “என்னய்யா படம் நல்லாருந்ததா?” என அப்பா கேட்கிறார்.

இதோடு எழுத்தாளர் சிறுகதையை முடித்திருக்கலாம். இறந்தவர் எங்கும் போகவில்லை நம்முடந்தான் இருக்கிறார்கள் என்கிற செய்தியை வாசகர்கள் புரிந்து கொள்ளக்கூடும். வாசிக்கும் நமக்கும் அது ஒரு மனநிறைவைக் கொடுக்கும்.  ஆனால் அது போலியான மனநிறைவு. மனதளவில் நாம் அதனை முழுவதுமாக ஏற்க மறுக்கின்றோம். இறந்ததும் ‘பிணத்தை’ எப்போது எடுக்கிறார்கள் என கேட்பதும் அதனால்தான்.

எழுத்தாளர் இந்தக் கதையை இங்கேயே முடிக்கவில்லை. தொடர்கிறார். அது வாழ்வின் நிதர்சனத்தை நம் முகத்தில் அறைந்தார்ப்போல சொல்கிறது.

அப்பாவின் குரல் கேட்டதும் பயந்தடித்துக்கொண்டு சைக்கிளை இதுவரை மிதிக்காத வேகத்தில் மிதித்து வீட்டுக்கு போகிறான் மகன்.

வீட்டின் முன் சென்றவன் பின்னால் திரும்பி பார்க்கிறான். இருளில் அப்பாவின் உருவம் அப்படியே தெரிகிறது. அதுவும் மகனை பாசத்தோடு ‘வாய்யா..’ என கூப்பிடவும் செய்கிறது. மகனை கூப்பிட்டுக்கொண்டு அப்பா பின்னாலேயே வந்துவிட்டார்.

நாயகனோ அலறியடித்துக்கொண்டு சைக்கிளை அப்படியே கீழே போட்டுவிட்டு “அம்மா… அம்மா…” என்று கத்திக்கொண்டே வெளிச்சத்திற்குள் ஓடுவதாக கதையை முடிக்கின்றார் எழுத்தாளர்.

மரணம் என்பதை ஒருபோதும் தவிர்க்க முடியாது; யாருமே அதனை எதிர்க்கொண்டுதான் ஆகவேண்டும் என்கிற உண்மையை எல்லோருக்குமே  சொல்கிறார். எந்த உறவாக இருந்தாலும் இறந்த பின் பிணமாகவும் அதற்கு பின் பேயாக மாறிப்போவதையும் நாம் எல்லோருமே தெரிந்துதான் வைத்திருக்கிறோம். 

ஆனால் உடனே அந்த உண்மை நமக்கு புலப்படுவதில்லைதானே.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

டிசம்பர் 14, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 14/20


மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்

பெருமாள்முருகன் சிறுகதை ‘பரிகாரம்’ 14/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.

****************************************

காதல் எல்லாவிதமான பைத்தியக்காரத்தனத்தையும்  செய்ய வைக்கிறது. சாதுக்களைச் ‘சேதுக்களாய்’ ஆக்குவதும் காதல்தான் ‘சேதுக்களைச்’ ‘சாதுக்களாய்’ ஆக்குவதும் காதல்தான்.

காதலைப் பற்றி என்ன சொன்னாலும் யாரோ ஒருவர் அழுவதற்கும் யாரோ ஒருவர் சிரிப்பதற்கு யாரோ ஒருவர் வெறுப்பதற்கும் அதிலொரு காரணமும் அவர்கள் மனதில் மறைத்திருக்கும் காதலும் இருக்கும்.

காதலுக்கு எதிர்ப்பும் எதிரிகளும் இருப்பது காதலை சுவாரஸ்யப்படுத்துவத்ஓடு காதலர்களை  பலப்படுத்துகிறது. வழக்கமாய் வரும் எதிர்ப்புகள் காதலுக்கு வெளியில் இருந்துதான்  வரும் சில சமயங்களில் காதலர்களாலேயே வரவும் செய்யும். அத்தி பூத்தாற் போல, காதலே காதலுக்கு எதிரியாக அமைந்துவிடுவதும் இருக்கிறது. அப்படியொரு அத்திப்பூதான் இந்தச் சிறுகதை

பெருமாள்முருகன் சிறுகதை ‘பரிகாரம்’ 14/20
காதலிக்கு திருமணம் நடக்கவிருக்கிறது; காதலனோ அந்த வலியைத் தாங்காது தற்கொலைக்கு முயல்கிறான். தெய்வாதீனமாக காப்பாற்றப்படுகின்றான். எல்லாமே கூடிவந்த சமயத்தில் இவன் தான் இந்தக் கல்யாணம் வேண்டாம் என்றான். அதுவும் தன் காதலிக்காகத்தான். இவனுக்கும் காதலிக்கும்  திருமணம் நடந்தால் காதலி இறந்துவிடுவாள் என்று ஜோதிடத்தில் சொல்லிவிட்டதால். தன் காதலி வாழ்வதற்காக தன் காதலை கொலை செய்யும் காதலனின் கதை.

இது ஒருபக்கம் இருந்தாலும்; இம்மாதிரி ஜாதகங்களும் ஜோதிடங்களும் தனிமனிதனின் வாழ்வில் எப்படி நுழைகிறது; எப்படியெல்லாம் அவனது நம்பிக்கையை அசைக்கிறது என எழுத்தாளர் சொல்லியிருக்கும் விதம் கவனிக்கத்தக்கது. நாயகனின் வாழ்க்கைக்குள் மெல்ல மெல்ல இவை நுழைந்து அவனது மனதை குழப்புகிறது. அதற்கான பரிகாரத்தைத் தேடிச்செல்லும் நாயகனின் மனநிலை மேலும் சஞ்சலப்படுகிறது.

தொடக்கத்தில் நமக்கு அது நகைச்சுவையாக இருந்தாலும் மெல்ல மெல்ல நமது முட்டாள்த்தனங்களும் நம் கண்முன்னே வந்து நிற்கிறது.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

டிசம்பர் 13, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 13/20


பெருமாள்முருகன் சிறுகதை - 'கருவாடு' 13/20


முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.

**********************************

நீங்கள் எதை மிஸ் பண்ணுகிறீர்கள்? எதை நினைத்து நீங்கள் ஏங்கி கொண்டு நினைவுகளில்  மூழ்குகிறீர்கள்?  பேசப்பேசப் பேசி முடியாதது நண்பர்களிடம்தான். அவர்களைத்தான் நாம் எல்லோருமே மிஸ் பண்ணுகின்றோம். பால்ய நட்பின் நினைவுக்கு ஒருபோதும் வயதாவதில்லை. 

யாரோ ஒருவர் நம்மை கட்டிப்போட்டு கிச்சுகிச்சு மூட்டுகின்றார் என வைத்துக்கொள்வோம். நாம் அடக்க முடியாது சிரிப்போம். இதுவரை அப்படி சிரித்திருக்கவும் மாட்டோம். 

ஆனால் சிரிப்பில் அதன்  எல்லையைத் தொட்டவுடன் நம்மையும்  அறியாமல் கண்கள் கலங்கி அழ ஆரம்பித்துவிடுவோம். இப்படி சிரிப்பையும் அழுகையையும் ஒன்றின் பின் ஒன்றாகவும் இரண்டையுமே ஒன்றாகவும் வரவைக்கக்கூடியது பழைய நினைவுகள்தான். அதிலும் அது பால்ய நினைவுகள் என்றால் சொல்லவும் வேண்டுமா.

என் வாழ்வில் நான் அதிகம் சிரித்ததும் என் நண்பர்களிடம்தான் அதிகம் அழுததும் என் நண்பர்களிடம்தான். அதே போல நான் அதிகமும் வேதனைப்பட்டதும் அவர்களால்தான். நண்பர்கள் அமைவது நாம் நமக்கான நண்பர்களை அமைத்துக் கொள்வதும் வரம். 

இப்படி நமது பல பால்ய நினைவுகளுக்கு நம்மை அழைத்துச் சென்று நம்மை சிரிக்கவும் வைத்து அழவும் வைக்கும் கதையைத்தான் எழுத்தாளர் ‘கருவாடு’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

இன்றைய பெருமாள்முருகனின் சிறுகதை ‘கருவாடு’ 13/20

நாயகன் வேலை நிமித்தமாக ஒரு நபரை சந்திக்கின்றான். எங்கோ பார்த்த முகமாக இருக்கிறது. ஆம் அது நாயகனின் பால்ய நண்பன்.

 நாயகனுக்கு தெரிந்தது போலவே அவனது நண்பனுக்கு தெரிகிறது. ஆனால் இருவரும் தங்களை மீண்டும் அறிமுகம் செய்து நட்பு பாராட்டவில்லை. இருவருக்குமே பெரிய தயக்கம் இருக்கிறது. அது என்ன தயக்கம்?. நண்பர்களுக்குள் அன்று நடந்தது என்ன என்பதை எழுத்தாளர் சொல்லிச்செல்லும் இடங்களில் நாமும் நமது பால்ய நண்பர்களையும் அவர்களுடன் செய்த கலாட்டாக்களையும் சண்டை சச்சரவுகளையும் நினைக்க வைக்கிறது. 

பால்ய வயதில் ரொம்பவும் நெருக்கமான நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும் பிரிய காரணமாக இருந்தது ‘கருவாடு’. அந்தக் கருவாடுதான் இந்தச் சிறுகதையின் மையம்.

 அந்தக் ‘கருவாடு’ நாயகனால் நண்பனுக்கு வந்த காரண பெயர். அதுவும் அவன் விரும்பும் பெண் மூலமாக ‘கருவாட்டு காதலன்’ என்று நாயகன் அழைக்கவும் பிறகு அதுவே சுருங்கி  நண்பனுக்கு பட்டபெயராக ‘கருவாடு’ என சுருங்கிவிட்டது. 

அதன் பின் இருவருக்கும் நடக்கும் ஒவ்வொன்றும் அட்டகாசமாக இருக்கும். 

எதனால் பிரிந்தார்களோ இன்று அதனாலேயே அந்த இறுக்கத்தை உடைத்து இருவரும் மீண்டும் பழையபடி இணைகிறார்கள். 

வாசிக்க ரொம்பவும் இனிமையான கதைகளில் இதுவும் ஒன்று. 

இப்படிச் சொல்ல ஆசைப்படுகின்றேன். இந்தக் கதையை வாசித்து முடிக்கையில் நீங்கள் கண்கள் கலங்கியபடி சிரித்தால் நீங்களும் நானும் கூட்டாளிகள்.

கட்டாயம் வாசித்துவிடுங்கள். மீண்டும் பால்யப்படகில் ஏறி பள்ளிக்கூடம் வரை சென்றுவருவோம். அங்குதான் நாம் ரொம்பவும் வெளிப்படையாக சூதுவாதின்றி திரிந்து கொண்டிருந்தோம். 

இன்றைய தலைமுறை அதில் பாதியைக் கூட அனுபவிக்க முடியவில்லை என்பதுதான் எவ்வளவு பெரிய இழப்பு.

தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

- இன்றைய வாசிப்பில் -


'காதல் பால் போன்றது. நேரம் ஆக ஆகப் புளித்துப்போகும், திரிந்துபோகும், விஷமாகிவிடும். மாதவன் எனக்கு அந்த விஷத்தைக் கொடுத்தான். நான் சாகவில்லை, அதற்கு பதிலாக அவனைக் கொன்றுவிட்டேன்.............'

வாசிப்பில் கே.ஆர்.மீராவின் 'மீராசாது'. மோ.செந்தில்குமாரின் தமிழாக்கம்.
இன்றைய இரவு இந்த மீராசாதுவிற்கானது.....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

டிசம்பர் 12, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் 12/20 -

 


பெருமாள்முருகன் சிறுகதை ‘ஆடு’ 12/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.


********************************************************************************************************

ஏன் போட்டி போடுகின்றோம். வெற்றி பெறுவதற்கும் சாதித்து முன்னணியில் இருப்பதற்கும். அப்படித்தானே சொல்லிக் கொடுத்தார்கள். நாம் அப்படித்தானே நம்பிக் கொண்டிருக்கின்றோம். இந்தப் போட்டி போடும் பழக்கம் ஒரு கட்டத்தில் பொறாமையாக மாறிவிடுவதை நாமும் அனுபவத்திருப்போம்.

உன்னை நான் வென்று காட்டுவேன் என்பதற்கும் என்னுடன் போட்டி போட நீ உயிரோடு இருக்க மாட்டாய் என்பதற்கும் சின்ன வித்தியாசம்தான். அது அவரவர் மனநிலைக்கு ஏற்றார் போல மாறிவிடுகின்றது. அதற்கு அடிப்படையில் இருப்பது  போட்டி போடும் குணத்தை எப்படி அவரவர் கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்தது.

நாம் நேரடியாக போட்டியில் ஈடுபடாமல் நமக்கு விருப்பம் உள்ளவர்கள் போட்டி போடுவதையும் நாம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு இரசிக்கின்றோம். உலகமே போட்டிவிளையாட்டுகளை அதற்குத்தான் நடத்துகிறதோ என்னமோ.

இந்தப் போட்டிபோடும் குணம் இன்றைக்கோ நேற்றைக்கோ வந்ததல்ல. காமமும் பசியும் வேட்டையும் மனிதனின் ஆதி குணமாய் இருப்பது போல, இந்தப் போட்டியும் நமது ஆதிகுணம்தான். அவையெல்லாம் இல்லையென்றால் நாம் இவ்வளவு உற்சாகமாக இவ்வளவு உயரத்திற்கு சென்றிருப்போமா என தெரியாது.

இன்றைய நமது போட்டியைக் கொண்டாடும் மனம் என்னவாக இருக்கிறது என்பதை விமர்சிக்கும் ஒரு சிறுகதையாகத்தான் என்னால் பெருமாள்முருகனின் ‘ஆடு’ சிறுகதையைப் பார்க்க முடிகிறது.

பேருந்தை பிடிக்க நாயகன் ஓடுகிறான்; அவன் எப்படித்தான் ஏறுவான் பார்க்கலாம் என பேருந்தை வேகமாக ஓட்டும் ஓட்டுனர். இந்தக் காட்சியும் அதில் மறைந்திருக்கும் ‘நாயகன் & ஓட்டுனர்’ என்ற இரு தரப்புகளின் உதிக்கும் போட்டியையும் உற்சாகமாய்ப் பார்க்கத் தொடங்கும் சக பயணிகள். ஒருகட்டத்தில் பேருந்தில் ஏற முடியாமல் கீழே விழுகிறான் நாயகன். ஒருவன் கீழே விழுந்ததைவிடவும்; ஓட்டுனரின் வெற்றிதான் பயணிகளை உற்சாகமாக்கி கொண்டாட வைக்கிறது.

மனிதர்கள் போட்டி போடுவதில் ஒருபோதும் பின் வாங்கமாட்டார்கள். அது சக மனிதர்களிடமும் இருக்கலாம் உலநாடுகளிலும் இருக்கலாம்.

சரி இந்தக் கதைக்கு ஏன் ஆடு என பெயர் வைத்திருக்கிறார் எழுத்தாளர் என இந்நேரம் நீங்கள் யோசித்திருப்பீர்கள்.

அதுதான் மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என சொல்லாம் சொல்கிறாரோ என்ற  கேள்வி இக்கதையை வாசித்து முடிக்கையில் நமக்கு தோன்றுவதற்குத்தான்.

எந்தப் புத்தகத்தில் ஆரம்பிப்பீர்கள் ?



2026-ம் ஆண்டு ஜனவரி முதல்நாள், என்ன புத்தகம் வாசிக்கவுள்ளீர்கள்.

அதனை ரொம்பவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டியுள்ளது. ஒருவேளை தவறான புத்தகத்தை வாசிக்க எடுத்துவிட்டோம் என்றால் அது ஓராண்டு முழுக்க நம்மை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். சிலர் தங்களின் தவறான முதல் தேர்ந்தெடுப்பில் இருந்து சிக்கிரமே தப்பித்துவிடுவார்கள்.

ஆனால் எல்லோருக்கும் அது அத்தனை எளிதாக கடந்துவிடக் கூடியதாக இருக்கப் போவதில்லை.
தவறான முதல் வாசிப்பே நமது அடுத்தடுத்த வாசிப்புகளுக்கு சோம்பலைக் கொடுத்துவிடும். தடையாகி நின்றுவிடும்.

ஆகவே, அடுத்த ஆண்டு நீங்கள் வாசிக்கவுள்ள முதல் புத்தகம் எதுவென இப்போதே தேடலைத் தொடங்கிவிடுங்கள்.

நானும் அதனைத் தொடங்கிவிட்டேன். ஏனெனில் எனது அடுத்த  ஆண்டிற்கான வாசிப்பு உத்வேகத்தைக் கொடுக்கக் கூடிய புத்தகம் அதுவாகத்தான் இருக்கும்.

ஒரு வாசகன் அதை ஒருபோதும் தவறவிட மாட்டான்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

டிசம்பர் 11, 2025

_ மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 11/20



பெருமாள்முருகன் சிறுகதை 11/20
முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
***************************************

    கதையை சுவாரஸ்யமாக எழுதலாம். அதேபோல சுவாரஸ்யத்தையே ஒரு கதையாக்கி எழுத முடியுமா? அப்படி எழுதுவதில் ஒரு சிக்கல் உண்டு. இது கதையே இல்லை என்று ஒதுக்கிவிடுவார்கள். அல்லது இது கதைதான் என ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

    அப்படியொரு சுவாரஸ்யத்தைதான் எழுத்தாளர் இங்கு கதையாக்கியிருக்கிறார். அதனை ரொம்பவும் இயல்பாக கொடுத்திருக்கின்றார். இது கதையா இல்லையா என்கிற குழப்பத்துடனேயே இக்கதையை நாம் வாசித்தும் முடித்துவிடுவோம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இக்கதையை வாசித்து முடித்த பின் நம்மால் இக்கதையை ஒதுக்கிட முடியாது. அதுதான் இக்கதையின் சுவாரஸ்யம்.

இன்றைய 11வது சிறுகதை ‘சிரிப்பு’.

    நாயகனுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அதற்கு முன் பேச்சலர் பார்ட்டி போல நண்பர்களுக்கு விருந்து கொடுக்கவேண்டும். முடியாது என்றாலும் விடமாட்டார்கள்; மானப்பிரச்சனை ஆக்கிவிடுவார்கள் என நாயகனுக்கு தெரிகிறது. எப்படியோ நண்பர்களின் விருப்பப்படி தேவையான டாஸ்மார்க் பாட்டில்களை வாங்குகிறார்கள். அங்கேயே சாப்பிட முடியாததால் இன்னொரு நண்பனின் அறைக்கு செல்கிறார்கள்.

    அங்கு குடித்துக்கொண்டே இவர்கள் அடிக்கும் லூட்டி நம்மை சிரிக்க வைக்கும். இளைஞர்களின் வழக்கமான ‘18 ப்ளஸ்’ ஜோக்குகளும் வருகின்றன. திருமணம் செய்யவிருக்கும் நண்பனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: அங்கு நடக்கும் கலாட்டாவின் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். கதையும் அங்கு முடிகிறது.

        இந்த முடிவிற்கு நம்மை அழைத்துச் செல்வதற்கு முன்பாக நாயகன் குறித்து எழுத்தாளர் எழுதியிருப்பது ஒரு சாமன்ய இளைஞனின் இயல்பான வாழ்க்கையை. தன் வாழ்க்கையையும் தன் முன்னேற்றத்தை தானே உருவாக்க வேண்டும் என புரிந்து கொண்ட இளைஞனாக எழுத்தாளர் நாயகனைக் காட்டியிருப்பார். பாதியில் விட்ட அவனது கல்லூரி படிப்பு, காரவேலையில் அவனுக்கு இருந்து திறமை, அவன் சந்திக்கும் மனிதர்கள் என இக்கதையை வாசிக்கும் நாம் நாயகனுடன் நடப்பது போன்ற உணர்வைக் கொடுக்கின்றார்.
    நாம் என்ன தொழில் செய்கிறவர்களாக இருந்தாலும் நாம் நம்மை எப்படியாக நினைத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். இந்தக் கதையின் நாயகன் தன்னை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும் விதம்தான் அவனுக்கு பெண் கிடைக்கவும் திருமணம் நடக்கவும் முக்கியமான காரணம்.

    அப்படியென்ன செய்துவிட்டான் என நீங்கள் தெரிந்து கொள்ள சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாத சிரிப்பு சிறுகதையை வாசித்துவிடுங்கள். சுவாரஸ்யத்தையே ஒரு கதைபோல எழுதினாலும் அங்கும் ஒரு கதையை மறைத்து வைப்பதுதான் எழுத்தாளர்கள் நமக்கு கொடுக்கும் சுவாரஸ்யம் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

டிசம்பர் 10, 2025

- இன்னும் இருக்கின்றன 10 நாட்கள் 10 சிறுகதைகள் -

 


இன்று டிசம்பர் 10. வரும் டிசம்பர் 21க்கு எழுத்தாளர் பெருமாள்முருகனை ‘வல்லினம் விருது விழாவில்’ நண்பர்கள் சந்திக்கலாம். அவரின் வருகையை முன்னிட்டு எளிய வாசகனாய் என்னால் செய்ய முடிந்தது அவரது சிறுகதைகள் குறித்து எழுதுவதுதான்.

நாம் நம்பும் இலக்கியத்திற்கு நம்மால் செய்ய முடிந்ததை மனதார செய்வதில்  நமக்கு எப்போதும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். நான் இப்படி செய்வது இனி வரவிருக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் பாராட்டு பெரும் எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொரு வாசகனும் செய்ய ஏதுவாய் இருக்கும் என நம்புகிறேன்.

எழுத்தாளர் பெருமாள்முருகனை முதன்முதலில் நான் வாசித்தது 2014-ஆம் ஆண்டுவாக்கில்தான். அதுவரையில் அங்கொன்றும் இங்கொன்றும் என நான்  வாசித்த அவரின் கதைகளை ஒரு புத்தகமாக வாங்கி வாசித்தது அப்போதுதான். அதுவும் எனக்கு கிடைத்த சிறுகதைத் தொகுப்பு ‘பீக்கதைகள்’. தலைப்பை வாசிக்கும் போதே எனக்கு என்னமோ போல் இருந்தது. அப்போது இருபது வயதைக் கடந்து முப்பதை நெருங்கியிருந்தேன். ‘பீ’ என்று சொல்லவோ எழுதவோ சிறு தயக்கம்  இருந்த காலக்கட்டம். ‘மலம்’ என்றும் ‘கக்கா’ என்றும் சொல்லிப் பழகிவிட்டதால் ‘பீ’ என்று சொல்வது  எனக்கு அந்நியமாகப் பட்டிருந்தது.

இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசிக்க வாசிக்க, அந்நியத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையும் அவர்களின் பாசாங்கற்ற மொழியும் எனக்கு நெருக்கமாகியது. இந்தக் கதைகளை வாசிக்கும் போதே சந்திக்கும் நண்பர்களிடம் இந்தக் கதைகளை குறித்து பேசுவேன். தொடக்கத்தில் எனக்கு இருந்த அதே அந்நியத்தன்மை அவர்களுக்கு இருந்தது. மெல்ல மெல்ல அந்தக் கதைகளில் சொல்லப்பட்ட வாழ்க்கையை நானும் புரிந்து கொண்டு நண்பர்களுடன் பேசும்போது; அவர்களால் அந்தக் கதைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.

பதினான்கு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு அது. ஒவ்வொரு சிறுகதையிலும் மலமோ கழிவறையோ வந்துவிடும். அதுவும் கதையில் ஒரு முக்கியமான அங்கமாகவோ திருப்பமாகவோ ஒரு பொறியாகவோ வரும்.

அன்றையச் சூழலில் நான் சந்திந்த இன்னல்களும் எனக்கு நிகழ்ந்த எதிர்ப்பாராத சம்பவங்களும் என் இருப்பை கேள்விக்குறியாக்கியதோடு என் வாசிப்பையும் மடைமாற்றியது.  

 இன்று இந்தக் கட்டுரையை எழுதும் பொருட்டு மீண்டும் பெருமாள்முருகன் கதைகளுக்குள் நுழைகிறேன்.  எந்த முன்முடிவுகளும் இல்லாமல் அவரின் ஒரு புத்தகத்தைத் திறந்து அதிலிருந்து ஒரு சிறுகதையை வாசித்து அதையொட்டிய என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன்.

அந்தச் சிறுகதை எனக்கு என்ன கொடுக்கின்றதோ அதையே வெளிப்படையாக எழுதுகிறேன். இது ஒருவகையில் சிறுகதைகளை விரும்பி வாசிக்கும் நமக்கும் ஒரு பயிற்சியாக இருக்கும்.

            இன்றுவரை பெருமாள்முருகனின் பத்து சிறுகதைகளைக் குறித்து தினம் ஒரு  சிறுகதை என எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரையின் முடிவில் அந்தக் கட்டுரைகளுக்கான இணைபையும் இணைக்கின்றேன். வாசிக்காதவர்கள் அல்லது தவறவிட்டவர்கள் ஒருமுறை வாசிக்கலாம்.

            இன்னும் பத்து சிறுகதைகளை எழுதவுள்ளேன். அதனையும் நீங்கள் வாசிப்பீர்கள் என நம்புகிறேன். நான் நம்பும் இலக்கிய செயல்பாடு எங்கெல்லாம் இருக்கிறது என நான் நம்புகிறேனோ அங்கெல்லாம் செல்லவும் என் பங்களிப்பைக் கொடுக்கவும் எனக்கு நானே தடையாக இருக்க விரும்பவில்லை.

இதுவரை எழுதிய கட்டுரைகளின் இணைப்பை கமெண்ட் பாக்சில் கொடுத்துள்ளேன்.

1. ஆட்டம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/1.html

2. பொண்டாட்டி http://tayagvellairoja.blogspot.com/2025/12/blog-post_04.html

3. மாயம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/3.html

4. பசி http://tayagvellairoja.blogspot.com/2025/12/4.html

5. அருவி http://tayagvellairoja.blogspot.com/2025/12/520.html

6. நாய் http://tayagvellairoja.blogspot.com/2025/12/620.html

7. பந்தயம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/720.html

8. அபிசேகம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/820.html

9. தொடை http://tayagvellairoja.blogspot.com/2025/12/920.html

10. தொழில் http://tayagvellairoja.blogspot.com/2025/12/1020.html

வாய்ப்புள்ள நண்பர்கள் எனது இந்த வாசிப்பு அனுபவத்தை வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். இதன்வழி எழுத்தாளரை சந்திக்கும் முன் நீங்களும் அவரது சிறுகதைகளை வாசித்து வருவீர்கள் என நம்புகின்றேன்.

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 10/20

பெருமாள்முருகன் சிறுகதை 10/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.

***************************************

எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருவதை முன்னிட்டு இருபது நாட்கள் இருபது சிறுகதைகள் என இந்தக் கட்டுரையை எழுதி வருகின்றேன். இன்று பத்தாவது சிறுகதையைக் குறித்து எழுதவுள்ளேன். தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இந்தக் கட்டுரைக்கும் பின் இன்னும் 10 சிறுகதைகள் இருக்கின்றன. அதில் எந்தெந்த சிறுகதைகள் வருமென எனக்கும் கூட தெரியவில்லைதான்.

இன்றைய பத்தாவது சிறுகதை ‘தொழில்’. இந்தக் கதையும் அப்பா மகனுக்கு இடையில் வரக்கூடிய சிக்கலைச் சொல்லும் சிறுகதைதான். இந்தத் தொடர் கட்டுரையின் முதன் கதையாக ‘ஆட்டம்’ என்னும் சிறுகதையும் அப்பா மகனின் சிக்கலைச் சொன்ன கதைதான். இரு சிறுகதைகளின் கதைக்கருவும் ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொன்றையும் தனித்து தெரியும்படி எழுத்தாளர் எழுதியிருக்கின்றார்.

தொழில் சிறுகதையில் அப்பாவின் முடிவெட்டும் தொழிலை மகனும் இணைந்து செய்யும்படி ஆகிறது. மகன் இளம் தலைமுறை என்பதால் அந்தத் தொழிலில் ஈடுபட்ட சில மாதங்களிலேயே பல புதிய கஷ்டமர்களைக் கவர்ந்துவிட்டார். இன்னொரு கடையையும் திறக்கலாம் என்று மகன் சொல்கிறான். அப்பா வேண்டாம் என்கிறார். இப்போது வரும் கஸ்டமர்களை நம்பி இன்னொரு கடையைத் திறப்பது நல்லதல்ல என்கிறார். சில நாட்களில் அப்பாவே மகனுக்கு தொழில் நன்றாக வருகிறது இனி அவனுக்கு தனியாக ஒரு கடையை வைத்துகொடுக்கலாம் என தன் மனைவியிடம் பேசுகின்றார். எழுத்தாளர் அங்கு ‘தொழில்’ சிறுகதையை முடிக்கின்றார்.

இன்னொரு கடை வேண்டாம் என்று சொன்ன அப்பா; சில நாட்களிலேயே மகன் தொழிலைக் கற்றுக்கொண்டான்; இனி தனியாக கடை நடத்தட்டும் என சொல்வதற்கான காரணத்தை எழுத்தாளர் வைத்திருக்கும் இடம்தான் கவனிக்கத்தக்கது.

தன் அப்பாவிடம் முடிவெட்டிக்கொண்டவர், இத்தனை ஆண்டுகளாக   தன்னிடம் முடிவெட்டிக்கொண்டவர் இன்று தன் மகனிடம் முடிவெட்ட விரும்புகிறார். அப்பா எவ்வளவு சொல்லியும் அவர் அப்பாவிடம் முடிவெட்ட விரும்பவில்லை. மகனின் தொழில் நேர்த்தியை ஊரில் உள்ளவர்கள் புகழ்வதையும் சொல்லிவிட்டு மகன் வந்ததும் வருவதாகச் சொல்லி புறப்படுகின்றார். அப்பாவிற்கு இப்போதுதான் சுருக்கென்கிறது.

தன் தொழிலுக்கு தன் மகனே போட்டி என நினைத்துவிட்டாரா? தன் மகனுக்கு தொழில் கைவந்துவிட்டது இனி அவன் தனியாக பிழைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்துவிட்டதா? என்ற இருவேறு கேள்விகளில்  ஒன்றை வாசகர்கள் தேர்வு செய்யலாம்.

என்னதான் தன் மகனாக இருந்தாலுமே; தொழில் என்பது ஒவ்வொரு மனிதனுக்குமே அந்தரங்கமானது. மகனை மட்டுமல்ல எவனையும் தன் தொழிலில் தன்னை ஜெயிக்க எந்த மனிதனும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்தான் போல.

டிசம்பர் 08, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 9/20


-மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்-

பெருமாள்முருகன் சிறுகதை 9/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.

**********************************************************************

ஒரு கதையை எழுத  என்னதான் தேவைப்படுகின்றது?  என அடிக்கடி நான் யோசிப்பது உண்டு. சிலசமயங்களில் ஒரு சிறு பொறிகூட பல பக்களுக்கான கதையைக் கொடுக்கும். சிலசமயங்களில் பல பக்கங்களில் நாம் வாசித்த கதையை ஒரே வரியில் சொல்லிவிடலாம். அப்படிச் சொல்வது அந்தக் கதையின் பலவீனத்தைக் காட்டுகிறதா பலத்தைக் காட்டுகிறதா? 
இன்று நாம் பெருமாள்முருகனின் ‘தொடை’ என்ற சிறுகதையைப் பார்ப்போம்.

  ‘காதலை மறைப்பது போல; காதலால் கிடைத்த காயத்தையும் மறைப்பது ஒரு வகையில் சுவாரஸ்யமானதுதான்’ இதுதான் ‘தொடை’என்னும் சிறுகதையின் சாரம்.  நாயகனின் தொடையில் அடிபட்டு அவ்விடம் புடைத்திருக்கிறது. தொடையில் ஏதோ கட்டிதான் முளைத்திருப்பதாக சொன்னாலும் தம்பி நம்பவில்லை எனும்போதே அந்தக் காயத்தின் பின்னணி மீது நமக்கும் ஆர்வம் எழுகின்றது.

 காயம் வந்தக் கதையைத் தெரிந்து கொள்ள நாயகனுக்கு காதல் வந்த கதையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அந்தக் காதல்தான் காயத்திற்கு காரணம், ஆனால் நேரடியாக இல்லை. 

 தன் நண்பன் விரும்புவதாக சொன்ன பெண்ணை நாயகன் காதலிக்கத் தொடங்குகிறான். நண்பனுக்கு மட்டுமல்ல அங்குள்ள பலருக்கு அந்தப் பெண் மீது விருப்பம் இருக்கிறது. ஆனால் காதலிக்கும் வாய்ப்போ நாயகனுக்குத்தான் வாய்க்கிறது.

 நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக குடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்குதான் அந்தப் பெண்ணை ஒருதலையாக காதலித்த நண்பனும் இருக்கிறான். எப்படியோ அந்தப் பெண்ணை மயக்கிவிட்டான் தன் நண்பன் என பாராட்டுகிறான். எப்படி தெரியுமா கையை மூடி இறுக்கி அவனது தொடையில் ஓங்கி குத்துவிட்டு.

 மேற்சொன்னது போலத்தான் காதலை மறைப்பது போல காதலால் வந்த காயத்தையும் நாயகன் மறைக்கிறான் என்கிற ஒருவரியை; எழுத்தாளர் சுவாரஸ்யம் குன்றாத கதைப்பின்னல் வழி சொல்லியிருக்கின்றார்.

கதையெழுத என்னதான் தேவைப்படுகின்றது என யோசிக்கையில் அனுபம் என்பதே முதன்மையானதோ என தோன்றுகின்றது. அதில் இரகசியம் என்னவென்றால் நாம் சந்தித்த அனுபவங்களை மட்டுமல்ல, யார்யாருக்கோ நடந்த அனுபவங்களை நம் அனுபவமாக மாற்றி அதனுள்ளிருந்து நமக்கான கதையை எழுதத் தொடங்கலாம். 

எவ்வளவுதான் கற்பனையைக் கொட்டினாலும் அதைத் தாங்கிப்பிடிக்க அனுபவம் என்னும் பிடி அதனால்தான் அவசியமாகிறது. 

காதலிப்பவர்களுக்கு காதலால் ஏற்படும் காயங்கள் இப்படி கூட எதிர்ப்பாராத வரவாக இருக்கலாம்தானே. ‘தொடை’ சிறுகதையில் நாயகனுக்கு ஏற்பட்ட அனுபவத்தைத் தெரிந்து கொண்டோம். அந்த அனுபவத்தில் இருந்தும் நமக்கான ஒரு கதையை நாம் கண்டுபிடித்து எழுதிவிட்டால் நாம்கூட நம் சட்டை காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 8/20


-மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்-

பெருமாள்முருகன் சிறுகதை 8/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.

****************************

நீங்கள் பார்த்து வைத்து திருமணம் செய்தவரா? காதல் கீதல் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று சமத்து பிள்ளையாய் வீட்டில் பார்த்து வைத்து திருமணம் செய்தவர் என்றால் இந்தக் கதையை வாசித்துவிடாதீர்கள். உங்களின் வருங்கால கனவுகள் மீது பெரிய கல்லை போட்டுவிடக்கூடிய கதை இது.


ஒருவேளை காதல் திருமணம் செய்தவர்கள் இந்தக் கதையை வாசிக்கலாமா என்று கேட்கிறீர்களா? இதைவிட பெரிய கற்களெல்லாம் உங்களுக்கு காத்திருக்கும் போது இந்தக் கல் பெரிதாக உங்களை பாதிக்காது என்றும் சொல்ல ஆசைதான். ஆனால் உங்களுக்கும் வயிறு கலக்கத்தான் போகிறது.

இன்று பெருமாள்முருகனின் ஏழாவது சிறுதையாக 'அபிசேகம்' சிறுகதையைப் பார்ப்போம்.

புது மாப்பிள்ளைக்கு புதுப்பெண் கொடுக்கும் அதிர்ச்சிதான் கதை. சிறுகதையில் நடக்கும் அபிசேகத்திற்கு வாசகர்களை மெல்ல மெல்ல எழுத்தாளர் தயார் செய்வது சிறுகதை மீதான ஈர்ப்பையும் ஏதோ நடக்கவுள்ளதான அறிகுறியையும் கொடுத்துக் கொண்டே வருகிறது.

புது தம்பதிகள் அழைப்பின் பேரின் உறவினர் வீடுகளுக்கு விருந்திற்கு செல்கிறார்கள். அங்கு விடைபெறும் போது மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் மொய்ப்பணத்தைக் (விருந்து பணம்) கொடுக்கின்றார்கள்.

புதுப்பெண் அந்தப் பணத்தை கணவனிடம் கொடுக்கவில்லை. ஏன் கொடுக்கவில்லை எப்படி கேட்கபது என புது மாப்பிள்ளையும் குழம்புகிறார். வண்டிக்கு பெட்ரோல் போடும் போது தன் பணம் பாக்கெட்டில் இருப்பதாகவும் எடுக்க சிரமமாக இருக்கிறது என்றும் அவளிடம் உள்ள விருந்து பணத்தை எடுத்து பெட்ரோலுக்கு கொடுக்க சொல்லி வீட்டிற்கு வந்ததும் கொடுக்கதாக சொல்கிறான். மனைவியோ ஒன்றும் அவசரமில்லை நீங்கள் நிதானமாக வண்டியில் இருந்து இறங்கி உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொடுங்கள் என்கிறாள். அவனுக்கு அது அவமானமாகிறது.

இவள் பணத்தை கொடுப்பாளா மாட்டாளா அல்லது தன் அப்பா வீட்டிற்கு கொடுக்க எடுத்து வைக்கிறாளா என வாசிக்கின்றவர்களையும் கேட்க வைக்கிறது.

இரவு பணத்தைக் குறித்து கணவன் மேட்கிறான். அவள் ஆவேசம் வந்தவளைப் போல தனக்கு கிடைத்த பணத்தையெல்லாம் அவன் மீது வீசுகிறாள். அதோடு நிற்கவில்லை "இந்தா பிடிச்சிக்கோ.. பிசாசே இந்த புடிச்சிக்கோ... " என்று அடிக்குரலில் ஆங்காரமாகச் சொல்கிறாள் . அவன் மீது ரூபாய்த் தாள்கள் அபிசேகம் செய்யப்பட்டது போலானது என கதையை முடிக்கின்றார் ஆசிரியர்.

கணவன் மீது இப்படியொரு அபிப்பராயம் வருவதற்கான காரணத்தை கதையின் ஓரிடத்தில் கணவன் மனைவி சாப்பிட்ட விதத்தை எழுத்தாளர் சொல்லியிருப்பார். அவன் அவசர அவசரமாக சாப்பிட்டு அவளுக்காக காத்திருக்கவும் அதை கவனிக்காமல் அவள் மெதுவாக, நிதானமாக சாப்பிட்டதையும் , கணவன் அவளுக்கு காத்திருப்பதைப் பார்த்து அங்குள்ளவர்கள் சிரிப்பதையும் அவளோ உடனே இலையை மூடிவிட்டு எழுந்ததையும் எழுதியிரிப்பார். இதுதான் அந்த அபிப்பராயத்திற்கு முழுமையான காரணம் என்றும் சொல்வதற்கில்லை.

ஆண் பெண் உறவுகளில் விசித்திரமானது கணவன் மனைவி உறவு. எப்போதோ யாரோ ஏற்படுத்திய வலிகளுக்கு சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒருவர் இங்கு பாதிக்கப்படக்கூடும். அல்லது எல்லா வெறுப்புகளையும் கொட்டித்தீர்க்க ஓர் ஜீவன் யாரோ ஒருவரிடம் வந்து சிக்கி கொள்ளும்.

'அபிசேகம்' சிறுகதையில் அந்தப் பெண் ஏன் தன் கணவனைப் பார்த்து அப்படி சொல்லி ஆவேசம் கொள்கிறாள். அது அவன் மீதுள்ள கோவமா அல்லது இந்த திருமணத்தின் மீதுள்ள கோவமா அல்லது பெண்ணாய்ப் பிறந்ததில் இயலாமையின் விரக்தியா என்பதை நீங்கள் இந்தச் சிறுகதையை வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்