பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 25, 2020

இரத்தக்கறை..... (Sharing is killing)


   மிகவும் அசந்துவிட்டான். கண்கள் கலங்கி இருந்தன. தலை முடிகலெல்லாம் எங்கெங்கோ பார்த்துக் கொண்டிருந்தன. கால்கள் நடந்து நடந்து பலமிழந்துவிட்டன. தூக்க கலக்கத்தில் கண்கள் சொருகியது. கலங்கிய கண்களில்  இருந்து கண்ணீர்தான் வழிந்ததேத் தவிர தூக்கம் வருவதற்கு வழியில்லை.

  தன்னைச் சுற்றிலும் நடந்துக் கொண்டிருப்பதை அவனால் உணரவும் உள்வாங்கவும் முடியவில்லை. வீசி எறிந்திருந்த கைபேசியைப் பார்த்தான். ஏதோ ஓர் கறுத்த உருவம் கைபேசியில் மேல் அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அதிர்ந்தேப்போனான்.

   சூதாரித்துக் கொண்டுப் பார்க்கிறான். அங்கு கைபேசி மட்டுமே இருந்தது. மீண்டும் அந்த வாடையை அவன் உணர்ந்தான். அவனுக்கு குமட்டியது. கைகளைப் பார்க்கிறான். இரத்தம். ஆமாம் இரத்தம் அவனது இரண்டு கைகளில் இருந்தும் வழிந்துக் கொண்டிருந்தது.

  பதறியடித்துக் கொண்டு எழுந்தான். மீண்டும் கழிவறைக்கு ஓடினான். குழாயைத் திறந்தான். அதிலும் இப்போது இரத்தம் வரத் தொடங்கியிருந்தது. பீதி அவனை பீடித்துக் கொண்டது. முன்னே இருந்த கண்ணாடியில் ஏதோ அசைவதாகத் தெரிந்தது. நிமிர்ந்தான். அவன் முகம் முழுக்க இரத்தமாக இருந்தது.  இரத்தம் வழிந்து அவன் மேலாடை முழுக்கவும் சிவப்பாக்கிக் கொண்டிருக்கிறது.

   வெளியே ஓடி வருகிறான். கீழே கிடந்த கைபேசியை எடுக்கிறான். அதில் அவனது முகநூல் பக்கம் திறந்தே இருந்தது. அவன் பகிர்ந்திருந்த அந்த பெண்ணின் 'டிக்டாக்' வீடியோவை அழிக்க முயன்றான். 

  அவன் அழிக்க அழிக்க அடுத்த நொடியில் அதே வீடியோ அவனது முகநூலில் மீண்டும் மீண்டும் பதிவாகிக்கொண்டே இருந்தது. அந்த பெண் மீண்டும் மீண்டும் டிக்டாக்கில் ஆடிக்கொண்டே இருக்கிறாள்.

  யாரோ அழுகிறார்கள். நிமிர்கிறான். நின்றுவிட்ட காற்றாடியில் அந்த 'டிக்டாக்' பெண் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருக்கிறாள். 

  அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. மண்டியிட்டு கதற ஆரம்பித்தான்.

" ஐயோ என்னைய மன்னிச்சிடு நான் சும்மாதான் உன் வீடியோவை போட்டேன்... நீ யார்னு தெரியாமலே உன்னை பத்தி தப்பு தப்பா எழுதிட்டேன்.. உன் சாவுக்கு நான் காரணமில்ல.. நிறைய பேரு அப்படிதான் எழுதனாங்க... உன் சாவுக்கு நான் மட்டும் காரணமில்ல.. என்னைய விட்டுடு......'

  அவன் அறை முழுக்க மீண்டும் அந்த வாடை ஆரம்பமானது. அவன் உடல் முழுக்க இப்போது இரத்தம் வழியத் தொடங்கியது.

     தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தவள் தொங்கியவாரே அவனைப் பார்க்கிறாள். அந்த டிக்டாக் வீடியோவில் செய்த பாவனையை மீண்டும் செய்யத் தொடங்கினாள்.

  அதிலிருந்து தப்பிக்க வேகமாக ஓடியவன் முன்னே, பதினாறாவது மாடி ஜன்னல் திறந்தே இருந்தது...

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்