பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 30, 2020

உன் வெளிப்பாடுதான் உன் மொழி


    நண்பர்கள் தொடர்ந்து zoom மூலமாக முக்கியமான சந்திப்புகளை முன்னெடுத்து வருகிறார்கள். நான்காவது நிகழ்ச்சியாக, தோழர் லீனா மணிமேகலையுடனான சந்திப்பாக அமைந்திருந்தது.

   முன்னமே தோழர் லீனா மணிமேகலை எனக்கு பழக்கம். அவரை கவிஞராகவும் இயக்குனராகவும் அறிந்திருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் அவர் மலேசியா வந்திருந்தார். அப்போது அவரின் இயக்கத்தில் வெளிவந்த 'செங்கடல்' திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. முதலில் என்னால் அதனை உள்வாங்க முடியவில்லை. மெல்ல நானும் ஒரு கதாப்பாத்திரமாக உள் செல்ல ஆரம்பித்துவிட்டேன். அதனை அடுத்து அவர் இயக்கிய சில ஆவணப்படங்களையும் வாங்கிக்கொண்டேன்.

    எந்த படைப்பாளியை சந்திக்க வேண்டும் என்றாலும் குறைந்த பட்சம் அவர் படைப்புகளை வாசித்திருக்க/தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு நாம் கொடுக்கும் முதல் மரியாதை என நம்புகிறேன். இன்றளவும் அதனை தவறாது செய்தும் வருகிறேன். அப்படி தோழர் லீனா மணிமேகலையை சந்திப்பதற்கு முன்னதாக அவரின் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். சினிமா சார்ந்து அவரது போராட்டங்களைத் தெரிந்துக் கொண்டேன். மெல்ல அவர் மீது இனம் புரியாத ஓர் அன்பு எனக்கு வந்திருந்ததை உணர்ந்தேன். இன்றளவும் அது தொடரவே செய்கிறது.

   ஒவ்வொரு முறை பேசும் போதும் நமக்குள் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரக்கூடியவர்.

   இன்று நடந்த zoom கலந்துரையாடலில் அவரை சந்தித்தேன். முதல் முறை பார்த்தது போலவே தெரிந்தார். அதைவிட முக்கியம் நான் இன்னமும் அவர் நினைவில் இருக்கிறேன்.

   தனது கடந்த காலம், இயக்கிய ஆவணப்படங்கள், 'மீ டூ'  சர்ச்சை என பலவற்றைப் பகிர்ந்துக்கொண்டார். சமீபத்தில் அவர் இயக்கிய 'மாடத்தி' திரைப்படம் குறித்தான பயணம் தொடர்பாக பேசினார்.  'மாடத்தி'யை குறித்தும் அந்த கதையில் மையத்தை எங்கிருந்து தான் பெற்றுக்கொண்டார் என்பதை பற்றியும் நேர்மையாக பகிர்ந்துக் கொண்டார். அப்படத்தைத் திரையில் காணவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டவே செய்கின்றது

  பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தோழர் லீனா மணிமேகலை கொடுத்த பதில்கள் ரசிக்க வைத்தன. 

"இயக்குனராக உங்கள் இலக்கு என்ன?"
என்கிற கேள்வியை முன் வைத்தேன்.

"தான் தேடி கண்டுணர்ந்ததைப் பகிர்ந்துக் கொள்வதுதான்...." என தொடங்கி மேற்கொண்டு பேசினார்.

   சிங்கப்பூரில் இருந்து நண்பர் ஒருவர் தான் வளர்ந்து வரும் இயக்குனர் என்றும், தனக்கான அறிவுரையை கேட்கலானார்.

"கலை என்பதே தனக்கான வழியை தானே தேடி கண்டடைவதுதான். தனக்கான குரலை தானே கேட்டுணர்வதுதான்" என்று மேற்கொண்டு பேசலானார்.  

   இடையில் அவர் கூறிய "உன் வெளிப்பாடுதான் உன் மொழி.." என்பது என் மனதோடு ஒட்டிக்கொண்டது. ஒரு மந்திரம் போல அதனை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்கிறேன்.

   அவருடைய சந்திப்பு மட்டுமின்றி, இந்த zoom நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைவரின் உரையாடல்களையும் தொகுத்து விரைவில் மீண்டும் வெளிவரவிருக்கும் 'நேர்கோடு' இணைய இதழில் வெளியிடவுள்ளார்கள். அதன் பொருட்டே என்னால் இங்கு தோழர் லீனா மணிமேகலையின் சந்திப்பை குறித்து அதிகமாய் சொல்ல இயலவில்லை. 

   நேர்கோடு இணைய இதழில் நீங்கள் அதனை முழுமையாக வாசிக்கலாம்.

பின்குறிப்பு zoom உரையாடலில் தோழரின் சிரிப்பை கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்க முயன்றேன். அப்போது,


ஒரு கவிதையே
தன்னை 
வாசித்துக் கொண்ட - தாய்
தெரிந்தது...'


#தயாஜி

1 comments:

Yarlpavanan சொன்னது…

அருமையான தொகுப்பு

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்