பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 24, 2020

தற்காலிகத் தனிமை

   
   இன்னும் இரண்டு வாரங்கள். நேரலையில் பிரதமர் பேசி முடிக்கப்போகிறார். சுகுமாறனுக்கு அது மன உளைச்சலைக் கொடுத்தது. சுகுமாறனுக்கு மட்டுமா? சுற்றுவட்டார மாறன்கள் அனைவருக்கும்தான். முகநூலில் பலர் பதிந்த புலம்பல் போலவே தானும் பதிவு போட்டார்.

         பெரிய வீடுதான். ஒரு நாள் இரண்டு நாளென்றால் பரவாயில்லை. வீட்டையே சுற்றிப் பார்க்கலாம் ஆனால் மொத்தமாக இரண்டாவது மாதமாக இந்நிலை என்றால் பாவம்தானே. மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு. தேவையின்றி யாரும் வெளியேறக்கூடாது. வீட்டில் இருப்பதுதான் பாதுகாப்பு. உத்தரவை மீறினால் சிறை தண்டனையும் அபராதமும் உண்டு.

  பொழுது முழுவதும் கைபேசி, தொலைக்காட்சி, இணையம் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து மனம் குழம்பிப்போய்விட்டது.

    தனக்கு மட்டும்தான் இப்படியா என வீட்டில் ஒவ்வொருவரின் அறையையும் நோட்டமிட்ட தொடங்கினார். அப்போதாவது பொழுது கொஞ்சம் போகுமே என்பதற்காக.

    மகன் தன் அறையில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கிறான். வீடு பற்றி எரிந்தாலும் அவனுக்கு தெரியாது.

    மகள் தன் அறையில் பாடல்களைக் கேட்டுக்கொண்டே ஸ்கைப்பில் யாருடனோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்கிறாள். விட்டால் பேசியே வயதாகிவிடுவாள் போல.

     மனைவி மஞ்சளாய் எதையோ தடவிய முகத்துடன் யூடியூப்பில் அழகு குறிப்புகளைக் கேட்டுக்கொண்டுருக்கிறாள். இன்னும் எத்தனை கொடுமைகளை தான் அனுபவிக்க வேண்டும் என கண்கள் கலங்கினார்.

   நான்காவது, ஸ்டோர் ரூம் கதவை திறக்கிறார். உள்ளே, கட்டிலில் அமர்ந்தபடி திறந்த ஜன்னலில் எதையோ பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார். எந்த வித பதட்டமும் இல்லை, அவரின்  முகம் அத்தனை சாந்தமாக இருக்கிறது.

    சில ஆண்டுகளாக அம்மாவை இந்த அறையிலேயே வைத்திருப்பது சுகுமாறனுக்கு இப்போதுதான் சுருக்கென்றது. 

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்