பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 24, 2020

'அவளும் என் கவிதைகளும்'



உன்னால் என் கவிதை
நூலுக்கு என்ன கொடுக்க
முடியுமென்பதே விவாதம்
எதுவும் பேசவில்லை
எழுந்தாள்
என் கவிதை நூல்களை
ஒன்றின் பின் ஒன்றாக கோர்த்தாள்
படுத்தவாக்கில் ஆளுயர நீளமாய் தெரிந்தன
மெல்ல முன் நகர்ந்தாள்
வெறுமனே நகரவில்லை
ஒவ்வொரு அடிக்கும்
நூல்களின் முகப்புகளைத்
தடவிக்கொண்டே போனாள்
தலை நூலை மட்டும்
சில நொடிகள் நீள
தொட்டுத்தடவி விட்டுச்சென்றாள்
சட்டென நூல்கள் மகுடி கேட்ட
பாம்புகளாக
உடல் நெளிந்து
வால் அதிர்ந்து
தலை தூக்கி அவள் பின்னே
ஊர்ந்ததுப் சென்றன
கைகளை நீட்டுகிறாள்
பாம்பாகிவிட்ட நூல்கள்
அவன் கையணைப்பில் குழந்தை போல உறங்கத் தொடங்கின
மெல்ல அதனை மேஜையில்
வைத்தவள்
கொஞ்ச நேரம் தடவிக்கொடுத்தாள்
மீண்டும்
ஒற்றை நூலை உருவி எடுத்து
நடுபக்கம் பிரித்தாள்
'பூவிதழ்' எனும் தலைப்புக் கவிதை தெரிந்தது
அருகிலிருந்த குவளையில் நீர் அருந்தியவள்
ஆழ்ந்த சுவாசத்தை உள்ளிழுத்து
பனிக்காற்றை ஊதினாள்
நூல்களில் பனி நீர் பரவ
ஏடுகளிலிருந்து எழுந்து வளர்ந்து
பூத்துக் குலுங்கின பூச்செடிகள்
அதிலொரு பூவைத் தொடவும்
அதுதன் இதழொன்றை அவளுக்கு எடுத்துக் கொடுத்தது
இன்னொரு புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்து
திறக்கச்சொன்னாள்
எனக்கு உள்ளூர பயம்
என்ன செய்ய
இப்படி மாட்டிக்கொண்டேனே என பதறினேன்
என்னால் எழுத மட்டும் முடிகிறது
என்கிறேன்
நீ நினைத்தை எழுது
நீ எழுதியதை
நான் நினைக்க வைக்கிறேன் என்கிறாள்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்