பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 27, 2020

'எனக்கொரு வாய்ப்பு கொடு அன்பே என் நட்பே'


வாழ்ந்துவிட்டு போங்கள் 
என்கிறேன்
பார்த்துவிடவும் வேண்டாமென
மறைகிறேன்
கண்டுக்கொள்ளக்கூடாது என
கவனம் கொள்கிறேன்
உங்கள் போலிபுகார்களை காதில்
நுழையாமல் தடுக்கிறேன்

உங்களால் இழந்துவிட்டவைகளை 
நானே
கடன்களாக சுமக்கிறேன்
உங்கள் பச்சை 
துரோகத்திற்கு
வெண்மை பூசுகிறேன்

உங்கள் ஏமாற்று வேளைகளை
கணக்குப்பார்க்காமல் ஒதுக்குகிறேன்
உங்கள்
போலி முகம் குறித்த
வார்த்தைகளை கிள்ளிவிடுகிறேன்
ஆனால்

நீங்கள்
ஆனால் நீங்கள்
என் வாழ்வை 
இம்சிக்கவே யோசிக்கிறீர்கள்
உங்களிடம் வேண்டிக்கொள்வது 
ஒன்றுதான்
உங்களை மன்னிக்க உங்களை மறக்க
எனக்கு ஒரு வாய்ப்பு
ஒரே ஒரு வாய்ப்பு மட்டும்
கொடுத்துவிடுங்கள்
உங்களை மன்னிக்க

என்னால் உங்களை
இம்சிக்க முடியவில்லை
என்னால் உங்களை
தேடிப்பார்க்க முடியவில்லை
என்னால் உங்கள் முகநூலில்
மோப்பமிட முடியவில்லை
என்னால் உங்கள் 
புகைப்படங்களை
மீண்டும் மீண்டும் தேடி
எரித்துவிட முடியவில்லை

என் நினைவுகளில் எங்கல்லாம்
நீங்கள் இருக்கிறீர்களோ
அங்கெல்லாம் என்னால்
துரோகத் திராவகம் 
ஊற்ற முடியவில்லை
என்னால் உங்கள் 
நண்பர்களை 
உதாசினம்
செய்ய முடியவில்லை

நாம் சென்று வந்த இடங்களை
கல்லரைகளாக பார்க்க முடியவில்லை
நாம் பேசிக்கொண்ட நகைச்சுவைகளுக்கு
அழுது வைக்க முடியவில்லை
நாம் சேர்ந்து செய்த பிரார்த்தனைகளை
மூட நம்பிக்கைகளாக
மாற்ற முடியவில்லை
நாம் சேர்ந்துச் சுற்றிய ஊர்களை
திக்கற்றவை  
என நினைக்க முடியவில்லை
நாம் சேர்ந்து 
தின்ற பிராணிகளை மறந்து
சைவனாக மாற தெரியவில்லை
நாம் சேர்ந்து பேசியப் புரளிகளை
உண்மை என நம்ப முடியவில்லை

நிறைவாக என்ன சொல்ல
நிலமையைத் தவிர
ஆகக்கடைசியாக உங்களால்
என்ன செய்ய முடிந்தது

கூட்டணிக்கூடி
ஆள்வைக்கத்தான்  முடிந்தது
அறிவில் அல்ல
ஆயுளில் கெட்டிக்காரன் என்பதால்
அடித்த அடிகளில்
இடது கால் ஒடிந்தது
நெஞ்சு எலும்பு வீங்கியது
எடுத்த இரத்த வாந்திகளில்
பற்களின் சில துகள்கள் விழுந்தன

பாரமெடுத்த மண்டைக்காரன்
என்பதால் என்னவோ
அடித்த அடிகளில் மூளையின்
மேல்மட்ட நினைவுக்கூடம்
ஆட்டம் கண்டு
ஞாபகங்களை திட்டுத்திட்டாக
சிதற விட்டது

வங்கிப்பணமெல்லாம் மருத்துவமனை
மருந்துகளுக்கு மாறிக்கொண்டது

உயிரே
உயிரே
என்பதெல்லாம் காரணத்துடந்தானா?
காரியங்கள் முடிந்ததும்
கனவுகளை கொன்றுவிட
எல்லாமே வெறும் மயிர்கள்தானா…?

நான் சம்பாதித்துக் கொடுத்த
பணக்கூட்டங்களில் உங்களால்
என்ன செய்துவிட முடியும்

மேலும் மேலும்  முதலீடு செய்வீர்கள்
இன்னும் சில புத்தகங்களை 
வெளியிடுவீர்கள்
முன்பொருமுறை திட்டியவர்களுக்கு
எலும்புத்துண்டுகளை விருதுகளில்
கட்டி கூட்டி வருவீர்கள்

அதில் உங்கள் ஆட்டம் காட்டுவீர்கள்
புதியவர்கள் தேவை என
கூப்பாடு போடுவீர்கள்
பேசி  மயக்க முடிந்தவர்களை
டீ-க்கு அழைத்து போவீர்கள்

சம்பத்தப்பட்ட கணவர்களுக்கு
கண்ணாம்பூச்சி காட்டுவீர்கள்

ஒரு நிமிடம்
ஒரு வினாடி
ஒரு நொடி

உங்கள் வீட்டில் இடி விழுந்தால்
என்ன செய்வீகள்
உறவுகளில் உயிர் ஊசலென்றால்
என்ன செய்வீர்கள்
வேலையில் வேசம் கலைந்தால்
என்ன செய்வீர்கள்
ஒரு கை ஊனமானால்
என்ன செய்வீர்கள்
உங்கள் காலில்
யானை புகுந்தால்
என்ன செய்வீர்கள்

இத்தனை பயங்களுடந்தான்
உங்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
என் காதில் கிசுகிசுப்பதை நிறுத்துங்கள்
கெஞ்சி வேண்டுமானும் 
கேட்டுக்கொள்கிறேன்

ஒரு வாய்ப்பு
ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்
உங்களை மன்னித்துவிடுகிறேன்

-தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்