பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 20, 2012

பயணிப்பவனின் பக்கம் 8

பொம்மைகளின் வன்முறை




மூன்றாண்டு காலமாக வானொயில் அறிவிப்பு செய்துக் கொண்டிருக்கின்றேன். இவ்வேளையில் பலதரபட்ட மக்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. வாழ்வில் உயர்ந்த நிலையில் இருபவர் முதல் அதபாதாளத்தில் இருப்பவர்கள் வரை பல முகங்கள். அத்தகைய சந்திப்புகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. சமீபத்தில் தந்தையர் தினத்தையொட்டி வானொலி நேயர்களுக்கு நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்தோம். சக நண்பர்களிடம் ஆளுக்கு ஒரு பணி எனக் கொடுக்கப்பட்டது.

எப்போதும் பல குரலில் பேசி ஆர்பாட்டம் செய்யும் எனக்கு இம்முறை; என்னை அடையாளம் காட்டாதப் பணி. முகமெல்லாம் சாயம் பூசி உடல் முழுக்க வண்ணக்கலவையில் ஆடை அணிந்து வழக்கத்திற்கு மாறாக குதித்தும் ஆடிக்கொண்டும் இருக்கும் கோமாளி வேடம். சக கோமாளியைத் தொடர்பு கொண்டு அவரையும் உதவிக்கு அழைத்தேன். கோமாளியாவதற்கு முதல் தேவை மீசை தாடி எல்லாம் மளித்து; வளவள முகத்தோடு இருத்தல் வேண்டுமாம். அதுதான் அரிதாரம் பூச அவசியமாம். மளிக்கப்பட்ட அவரின் முகத்திற்குப் பின்னால் இருக்கும் தொடர் வியாபாரம் அப்போதுதான் புரிந்தது.

சில வாரங்களில் எனக்கு பதிவு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேரம் அது. மீசை இல்லாமல் போனால் பொண்ணுக்கே என்னை அடையாளம் தெரியாமல் போய்விடும். ஆதலால் மாற்று வழியை யோசிக்கலானேன். கோமாளியின் வேலை என்ன? சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சிப்படுத்துவதுதானே. அதை செய்துவிட்டால் முகத்தில் முடி எடுப்பதும் அவசியமற்றதாகிவிடும்.

யோசித்ததில் ஒரு சிந்தனைத் தோன்றியது. முகத்தில் சாயாம் பூசாமல்; சாயம் பூசப்பட்ட ஒரு பொம்மை முகமூடியும் அதன் உடையையும் அணிய முடிவெடுத்தேன். வாத்து உருவில் இருந்த பொம்மை உருவத்தினுள் என்னை புகுத்தவேண்டும். எப்படியும் என் அடையாளம் என நான் கருதும் என் குரலுக்கும் என் உணர்ச்சிகளைக் காட்டும் முகத்திற்கும் வேலை இல்லை. முழுக்க முழுக்க வாத்தாக நான் மாறி இடுப்பை ஆட்டியபடி நடந்து; கால்களை அகல விரித்து நடந்து; கைகளை அடிக்கடி தூக்கி காட்ட வேண்டும். மீசையும் தாடியும் தப்பித்தது.

எல்லாம் தயார். வழக்கம் போல் நிகழ்ச்சி தொடங்கியது. என்னை மறைத்த நான், வாத்தாக மாறி தயாராகி வந்திருந்தேன்.

வாத்து நடந்து வரும்போது சிறுவர் முதல் பெரியவர் வரை குதூகலப் பார்வைப் பார்க்கத் தவறவில்லை. அதன் பிறகு அந்தக் குதூகல பார்வைக்கு பின் இருந்த வன்முறையை நான் நினைத்தும் பார்க்கவில்லை.

எப்போதும் போல குழந்தைகளில் செயல்கள் விசித்திரமாகத்தான் இருந்தன. வழக்கமாக அவர்கள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் உருவம் கண் முன்னே வந்ததும் சிலர் அழுதனர் ; சிலர் பிரமித்து ரசித்தனர். இதையெல்லாம் தாண்டி சிறுவர்கள் பயன்படுத்திய வன்முறை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தாங்கள் ரசித்து சிரித்து பார்த்த கார்ட்டூன் கதாபாத்திரத்தை அடிப்பதும்; வயிற்றில் பலம் கொண்டு குத்துவதும்; பின்னால் உதைப்பதும் எந்த வகை ரசிப்புத்தன்மை. இந்த வன்முறையை யாரிடமிருந்து அந்தச் சிறுவர்கள் கற்றிருப்பார்கள். வீட்டில் இருந்தா...? பள்ளிக்கூடத்தில் இருந்தா...? சக மாணவர்களிடம் இருந்தா..? அல்லது கர்ட்டூனின் இருந்தா..?

‘ஆளவந்தான்’ திரையில் ஒரு காட்சி. புதுவிதமாக சண்டையிட்ட மனவளர்ச்சி குன்றிய நந்து பாத்திரத்திடம் “எப்படிச் சண்டை போட கற்றுக்கொண்டாய்” என மருத்துவர் கேள்வி கேட்பார். அதற்கு நந்து சொல்லும் பதில் இது “எல்லா குழந்தைகள் போலவும் கார்ட்டூனின் இருந்துதான் டாக்டர்”. ஆக; கேலிச்சித்திரம் என நாம் நம் குழந்தைகளுடன் கைத்தட்டி சிரித்துப் பார்க்கும் கார்ட்டூன்; குழந்தைகள் மனதில் வன்முறையையும் விதைக்கிறது.

‘மனிதர்கள் எப்போதும் தாங்கள் நேசிக்கும் ஒன்றின் மீது வன்முறையக் காட்ட தயங்கமாட்டார்கள்’ என எஸ்.ரா சொன்னது அந்த வலியிலும் நினைவுக்கு வந்தது. இத்தகைய மனப்பாங்கு கொண்ட சிறுவர்கள் நாளை இளைஞர்கள் ஆனதும் எப்படிச் செயல்படுவார்கள். நேற்று கோவப்பட்டு இன்று கையில் கத்தியோ கட்டையோ இவர்கள் எடுக்கவில்லை. ஆழ்மனதில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த ஒன்றுதான் நேரம் வரும்வரைக் காத்திருந்து கையில் ஆயுதம் எடுக்கின்றது.

அத்தனை வலியிலும் என்னை சிரிக்கவைத்தது அந்த முகமுடி. என் இயல்பை மீறி அடையாளம் தொலைத்து நான் அணிந்திருந்த முகமுடிதான் என் உணர்வுகளை வெளிகாட்டாமல் சிரித்தவாரு இருந்தது. அடையாளம் தொலைத்தால் மட்டுமே உணர்ச்சிவசப்படுவதிலிருந்து மீள முடியுமோ என்னமோ?

குறிப்பு : வலிகளுக்கு இடையில் கொஞ்சம் நிம்மதிக்குக் காரணம் சில பெண்கள். பெண்கள் மட்டுமே கடைசிவரை குதூகலத்துடன் இருந்தார்கள். என்னுடன் புகைப்படம் எடுப்பதும் கைகொடுப்பதும் என தொடர்ந்தார்கள். இளவயது பெண்கள் மட்டுமல்ல வயோதிகப் பெண்களும் அதில் அடக்கம். என்ன செய்வது சில பெண்கள் பொம்மையை உயிருக்கு உயிராய் நேசிப்பார்கள். உண்மையை ஏற்றுக் கொள்ளுவதில் அவர்களுக்கு அவ்வளவாக மனம் வாய்த்திடாது.


நன்றி
இதழ் 32
ஆகஸ்ட் 2011

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்