பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 20, 2012

பயணிப்பவனின் பக்கம் 2

ஒரு உருது கவிஞனும் நெடியத் தேடலும்





    சிலருட‌னான சந்திப்புகளில் பல மொழிக‌ளிலும் புழங்கும் இலக்கியங்களைப் ப‌ற்றி பேச கேட்டிருக்கின்றேன். இன்றுவரை ஒருவரையும் கேட்டதில்லை 'நீங்கள் அதனை எந்த மொழியில் படித்தீர்கள்' என. ஒரு ச‌ம‌ய‌ம் என‌க்கும் அவ்வாறு வேற்றுமொழி இல‌க்கிய‌த்தை தேடிச்செல்லும் சூழ‌ல் ஏற்ப‌ட்ட‌து.

     ‘முகத்தை எப்போதும் மூடிக்கொள்ளாதே எனது நெஞ்சத்தில் முள்ளாய் குத்தாதே’

இந்தப் பாடலைக் கேட்டவகளுக்கு அடுத்த வரி பழக்கப்பட்டதுதான்.

‘உருது கவிஞன் உமர்கய்யாமின் கவிதையா..?’

     அது யாருப்பா புதுசா ஒருத்தன். உருது கவிஞன். உமர் கய்யாம்? உள்ள கவிஞர்களுக்கே பதில் சொல்ல போதும் போதும்னு ஆகுது. புது கவிஞன். யோசித்தேன்; இவன் புதுக் கவிஞனோ புரட்சிக் கவிஞனோ தெரியவில்லை ஆனால் என்னை குழப்பியக் கவிஞன். மேற்சொன்ன பாடலுக்கு பிறகு உமர் கய்யாம் கவிதைகள் எப்ப‌டி இருக்கும். உருது மொழி தெரிந்த யாரால் அந்தக் கவிஞன் தமிழில் அறியப்பட்டான் என குழம்பினேன். தெரிந்தவர்களிடம் கேட்கத் தெரிந்தது; கேட்டவர்களுக்கு பதில் தெரியவில்லை. எப்ப‌டியாவ‌து அக்க‌விஞ‌னை தேடி அடைய வேண்டும் என புத்த‌க‌க் க‌டைக‌ளில் தேடிக்கொண்டிருந்த‌போது தைப்பூசம் வ‌ந்த‌து.

     சுங்கைப் பட்டாணி ஸ்ரீ சுப்பரமணியம் ஆலயத்தின் எதிர்ப்புறம் புத்தகக்கடைகள் போனால் போகிற‌தென தோன்றின. புத்தகங்களை விடவும் புத்தகங்கள் அல்லாதவை அதிகம் இருந்தன. ஆனால் முக‌ப்பில் குறிப்பிட்டிருந்தது என்னமோ புத்தகக்கடைதான். மிகுந்த ஏமாற்ற‌த்தில் இருக்கையில் சில மாதம் கழித்து, அதே முருகன் கோவில் புதிய மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது ஒவ்வொரு வருடமும் தவறாமல் வரும் காய்ச்சல் போல. பலமுறை செல்ல நினைத்தும் பணமில்லாததால் தவிர்த்தேன், இந்த முறை வேலைக்குச் சேர்ந்த காரணமும் சம்பள நாள் காரணமும் கைகூடியது.

     வாசலில் பணம் கட்டவேண்டிய மேஜை இருந்தது; அருகில் பூஜைக்கு வைத்த பிள்ளையாராய் ஒருவர். வேண்டுமென்றே அந்தப் பூஜைக்கு வைத்த பிள்ளையாரிடம் சில பெயர்களைச் சொல்லி, இந்த புத்தகங்கள் எல்லாம் இருக்கா என விசாரித்தேன். எல்லா புத்தகமும் உள்ளே இருக்கு தேடினா கிடைக்கும்னு சொன்னார். அது தெரியாமலா இவ்வளவு தூரம் வந்திருக்கேன்னு மனதில் நினைத்தேன். புத்தகங்கள் விற்பன‌ர்கள் புத்தகத்தை மதியாவிட்டாலும் பரவாயில்லை; சில பெயர்களையாவது மதியில் பதிக்கலாமே? எதைக் கேட்டாலும் சொல்லும் பதில் ‘இருக்கும்’ என்பதுதான்; வாசிக்கின்றவர்கள் நேசிக்கும் வார்த்தை ‘இருக்கின்றது’ என்பதைதானே.

     புதிதாய் பிறந்த புத்தகம் முதல் கிழிந்த புத்தகம் வரை இஷ்டப்படி அடுக்கியிருந்தார்கள். பெரும்பாலும் ஆங்கில மலாய் புத்தகங்கள் நல்ல அட்டையில் இருந்தன. கை படாததாலா இல்லை காசு கொடுத்து வாங்கிச் செல்வதாலா தெரியவில்லை. மண்டபத்தை மூன்றாவது முறையாக சுற்றிவரும்போதுதான் கண்ணில்பட்டது கவிதை புத்தகம். “உருது கவிஞன் உமர் கய்யாம் கவிதைகள்” மொழிபெயர்த்தவரின் பெயர் நினைவில் இல்லை. ரொம்ப பழைய புத்தகம். முதல் பக்கத்தையும் முடியும் பக்கத்தை மடக்கினால் உடைந்து அல்லது உதிர்ந்துவிடும் போல இருந்தது.

     பார்த்ததும் விரிந்த கண்கள், பக்கங்களைத் திருப்பியதும் சுருங்கியது. எதுகை மோனையோடு எழுதப்பட்டு இருந்தது அந்தக் கவிதைகள். உருது கவிஞனது க‌விதையை இப்படியா மொழிபெயர்ப்பது? புரியவில்லை? அப்படி எதுகை தேவை மோனை தேவை சந்தம் தேவை என்றால்; எனக்கு உருது கவிஞன் உமர் கய்யாம் எதற்கு? நம் நாட்டில்தான் அப்படி பல கவிஞர்கள் & கய்யாம்கள் இருக்கின்றார்களே...? உருது மொழி க‌விதைக்குள் அதை புகுத்தியிருக்க வேண்டாம். அதன் சாராம்சத்தை சொல்லிய பிறகு தங்களில் திறமைகளில் எதுகைக்கும் மோனைக்கும் இடம் தந்திருக்கலாம். அதை செய்யாமல் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் இப்படிச் செய்திருப்பது எப்படி உருது கவிதையைப் பற்றி எனக்கு சொல்லும்?

     ‘உமர் கய்யாம்’ புத்தகம் என்னை ஏமாற்றிய‌ப் பிற‌கு கைக்கொடுத்தது நான் வாங்கிய மலையாள மொழிபெயர்ப்பு சிறுகதைகள்தான். பிற மொழி இலக்கியங்களைத் தெரிந்து கொள்வதன் மூலம் நம் மொழி இலக்கியத்தின் தூரத்தையும் தரத்தையும் ஓர‌ள‌வு தெரிந்துகொள்ள முடிகின்ற‌து. ‘மாத்தனின் கதை’ என்ற த‌லைப்பில் மலையாளச் சிறுகதைகள் அப்புத்த‌க‌த்தில் தொகுக்க‌ப்ப‌ட்டிருந்தன. கேரள எழுத்தாளர்களின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருந்தார் சாரா. இவர் 75 நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறாராம். தொடக்கத்தில் சக்கரியா என்ற எழுத்தாளரின் ‘சத்திய வாக்குமூலம்’ கதையைப் படித்தேன்.

“நீ சத்திய வாக்குமூலம் அளிக்கனும், அப்படித்தானே..?”

“ஆமாம் தோழரே..!”

     இப்படியாகத் தொடங்குகின்றது கதை. இரண்டு கதாப்பாத்திரங்களின் உரையாடல்தான் கதையை நகர்த்துகிறது. அரசியல் பிரமுகர்கள் பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒருவர் பதில் சொல்லிக் கொண்டே வருகின்றார். கேள்வி கேட்டவரின் அடுத்த கேள்வி ‘சத்தியமா..?’ என வருகின்றது. அதற்கு பதிலாக “சத்தியம்” என்றே பதில் வருகின்றது. ஒவ்வொரு பிரமுகர்களின் பெயர்களையும் சொல்லி; புகழ்ந்து; சத்தியமா என கேட்க, சத்தியம்தான் என பதில் கிடைக்கிறது.

     இதுதான் கதையா...? இப்படித்தான் கதை முழுக்கப் போய்க்கொண்டே இருந்தது. எனக்கோ கதை பிடிபடவில்லை (பிடிக்காமலில்லை). எல்லாம் உண்மைதானே அப்போ எதுக்கு இந்த கதை. ஆனால்; கதையின் முடிவில்தான் சுளீர் என்றது. அதுதான் ‘சத்திய வாக்குமூலம்’.

“நாம் கடவுள்மீது நம்பிக்கை வைக்கலாமா..?”

“வைக்கக் கூடாது”

“நீ கடவுளை நம்பலை..?”

“நம்பலை”

“சத்தியமா..?”

“கடவுள் மேல சத்தியமா...”

“ஆமேன்”

      இதனோடு கதை முடிகின்றது. இதுவரை சத்தியம்; சத்தியம் என சொன்னவர் முடிக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லையாம். அதற்கு ஆமேன் என. ஆக இதுவரையில் சத்திய வாக்குமூலமாக இவர் சொன்னதெல்லாம் அரசியல் சூழல் குறித்த கேலியோ என யோசிக்க கைக்கிறது. இப்படியும் சமகால அரசியலை பேசலாமோ. ‘கண்ணைத் திறந்தேன் அப்போதுதான் தெரிந்தது அது கனவென்று’ என்று கதையை முடிபவர்கள் இதையெல்லாம் கொஞ்சமேனும் கவனிக்கலாம்.

      இவ்வாறான கதை குறித்த ஆராய்ச்சியெல்லாம் நமது கோலாலம்பூர் இளைஞர்களுக்கு இல்லை. அவர்கள் சொல்லாராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அண்மையில் நான் சந்தித்த ஒரு இளைஞர் குழு மனுஷி... பொம்பள... பொண்ணு... இந்த மூன்று வார்த்தைகளையும் புது அர்த்தத்துடன் மொழிபெயர்த்திருக்கின்றார்கள்.

மனுஷி – கல்யாணம் ஆகி சில ஆண்டுகள் ஆனவங்க.

பொம்பள – கல்யாணம் ஆகி பல ஆண்டுகள் ஆனவங்க.

பொண்ணு - கல்யாணப்பேச்சை இனிமேல்தான் ஆரம்பிக்கனும்.

        இதை கேட்ட எனக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் இதற்காவது மூளையைப் பயன்படுத்துகிறார்களே என ஆறுதல் படுத்திக்கொண்டேன். ஆறுதல் படுத்திக்கொள்வதால் மட்டுமே இப்போதைக்கு கொஞ்சம் நிம்மதியாகவாவது தூங்க முடியும்... துர்கனவுகளின் தொல்லை இல்லாமல்.


நன்றி
இதழ் 26
பிப்ரவரி 2011

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்