- சமாதி புறா -
தொலைக்காட்சி விவாதமேடை
காதலால் சாதியை எதிர்த்து
ஓடிப்போய்
எங்கோ ஓர் மூலையில்
நிம்மதியாய்
வாழ்ந்திருந்த தம்பதிகள்
முகம் காட்டினார்கள்
கடந்த காலத்தின்
கசப்புகளையும்
எதிர்காலத்தின் நம்பிக்கையையும்
கண்கலங்க பேசினார்கள்
இழந்துவிட்ட
அம்மாவின் பாசம்
அப்பாவின் அக்கறை
அண்ணன் தம்பிகளின் அரவணைப்பு
அக்கா தங்கைகளின் சிரிப்பு
உறவுகளின் உரையாடல்
ஊர் மக்களின் உற்சாகம்
என
இழந்துவிட்டவை எவ்வளவோ
வீட்டிலிருந்து பார்த்த
பலரும் அழுதார்கள்
நிகழ்ச்சி முடிவில்
சாதி தோற்று
காதலே வென்றது என
நடத்துனரும் கொண்டாடினார்
சில நாட்களில்
பங்கேற்ற மூன்று தம்பதிகளையும்
அடையாளம் தெரியாதவர்கள்
வெட்டி கொன்றார்கள்
மேற்கொண்ட இரு
தம்பதிகள் தற்கொலை
செய்து கொண்டார்கள்
அடுத்த வாரம்
அதே விவாத மேடையில்
'ஏன் கொல்கிறோம்' என்பவர்களை
பேச அழைத்திருந்தார்கள்
விவாத மேடைகளின்
விளைவுகள் அவ்வளவுதானா
0 comments:
கருத்துரையிடுக