- மறைந்தாடும் மௌனிகள் -
அந்த மௌனத்தை
அப்படியே விட்டுவிடலாம்தானே
என் சகாவே
ஏன் தடுமாறுகிறாய்
மீண்டும் மீண்டும்
காயப்படும் இதயத்தின்
வலியை
இன்னும் எத்தனை நாட்கள்தான்
பொறுப்பாய்
நெருப்பாய் விழும்
சொற்களை
வெறுமனே தாங்கிகொள்ள
உன் இதயம் என்ன
கற்களா
அவர்கள்
மௌனம் காக்கிறார்கள் என்றால்
உன்னை இன்னமுமே
வதைக்க
வழிமுறைகளை யோசிக்கிறார்கள்
என புரிந்து கொள்
இங்கு
எல்லா மௌனங்களுமே மௌனங்கள் அல்ல
அதில் சில
நயவஞ்சக ஓநாய்களின் நாக்குகள்
பசித்திருக்கும் கழுகுகள்
காத்திருக்கும் கட்டுவிரியன்கள்
தானாய்ச் சென்று
தலை கொடுக்காதே
மௌனத்தை அப்படியே
விட்டுவிடுவதுதான்
உனக்கும் நல்லது
உன்னையே நம்பி துடிக்கும்
இதயத்திற்கும்
ரொம்பவே நல்லது
0 comments:
கருத்துரையிடுக