பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 29, 2020

ஆளுக்கொரு ஆசை


     இன்னும் நான்கு எண்கள் உள்ளன. உள்ளே போனவர்கள் அங்கேயே தூங்கிவிட்டார்களா தெரியவில்லை. மீதமுள்ள நான்கு பேர்களும் உள்ளே சென்று வருவதற்குள் நான் தூங்கிவிடுவேன் போல. என முணுமுணுத்துக் கொண்டே இருந்தான் கேசவன்.

    கைராசியாக மருத்துவர். பலரும் இவரது மருத்துவத்தாலும் ஆலோசனைகளாலும் குழந்தைகளுடன் நடமாடும் சாட்சியாக இருக்கிறார்கள். கோவில் குளம் என மனைவி விரும்பினாலும், விஞ்ஞானமே விடை என நம்பும் கேசவன் இங்கு கூட்டி வந்து விட்டான். இப்போது கூட மனைவி, டாக்டர் நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறாள். 

    அவர்கள் முறை வந்தது. உள்ளே சென்றார்கள். இருவரையும் பேசவிட்ட மருத்துவர், உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார். அவரிடம் மெல்லிய சிரிப்பும் அவ்வபோது ஆமோதிக்கும் தலையசைப்பும் இருந்தது.

    அரைமணி நேரத்தில் அவர்களின் முறை முடிந்தது. கையில் மருந்துச் சீட்டையும் தலையில் பல ஆலோசனைச் சீட்டுகளையும் எடுத்துக் கொண்டு கேசவனும், நல்ல வழியை கடவுள் காட்டியுள்ளார் என்கிற ஒற்றை பிரார்த்தனையை மனைவியும் சுமந்துக் கொண்டு வெளியேறினார்கள்.

  குழந்தைப்பேறுக்காக தற்காலிய மருத்துவராக மாறியிருந்த கேசவன். தன் அறையில் மினி மருந்தகத்தை உருவாக்கியிருந்தான். 

    இரண்டு நாட்களில் அவன் அந்த அதிர்ச்சியை எதிர்ப்பார்க்கவில்லை. ஏதோ கோவிலில் அந்த கை ராசிக்கார மருத்துவர் விளக்கேற்றி வைத்து நின்றுக் கொண்டிருந்தார். கேசவனுக்கு கோவம் வந்துவிட்டது. இப்படி மருத்துவரே மூட நம்பிக்கையை சுமந்துக் கொண்டிருக்கலாமா? தன் வேலை வெட்டியை மறந்து மருத்துவரிடம் சென்றான்.

     மருத்துவர் அவனை கண்டதும், பழைய புன்னகையுடன் நலம் விசாரித்தார். மருந்து மாத்திரைகள் குறித்துக் கேட்டார். தானும் தன் மனைவிக்காகத்தான் இங்கு வந்திருப்பதாக கூறி, அவரை காட்ட முயன்றார். கேசவனுக்கு பொறுமை இல்லை. தன் மனதில் தோன்றியதை சட்டென போட்டு உடைத்துவிட்டான்.

   புன்னகையில் கொஞ்சமும் மாறுதல் இல்லாமல் மருத்துவர்,
"இதுல என்ன சிக்கல் இருக்கு... என் மருந்தை அவங்க எடுத்துக்கறாங்க.. அவங்க பிரார்த்தனையை நான் எடுத்துக்கறேன்." என்றார்.

"புரியல..டாக்டர்!!!" 

மருத்துவரின் புன்னகை ஆழமாகியது.

   "ம்.... என்னோட அறிவுக்கு மரியாதை கொடுக்கறவங்களோட நம்பிக்கைக்கு மரியாதை கொடுக்கறேன் அவ்வளவு தான்... ஏன்னா இது எங்க ரெண்டு பேரோட வாழ்க்கை... ரெண்டு பேருக்குமே சம பங்கும் இருக்கு, தனித்தனி அனுபவங்களும் இருக்கு.....

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்