பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 14, 2020

அம்மாவின் நட்ச்சத்திரம்



- அம்மாவின் நட்ச்சத்திரம் -


    அந்த நபரின் பெயர் மறந்துவிட்டது. காலையில் நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவர் அவனிடம் வந்தார். அவனது அம்மாவின் பெயரைச் சொல்லி, அவரது மகனா என கேட்டார். அவனும் ஆமாம் என்றான்.
அம்மாவும் அவரும் பள்ளித் தோழர்கள் என்றுச் சொல்லி அவரை அறிமுகம் செய்துக்கொண்டார். அம்மாவைப்பற்றி விசாரித்தார். அவர்களின் பழைய குறும்பு நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டிருந்தார். 

   அந்நேரம் அவனது கைபேசி ஒலித்தது. அவசரமாக எழுத்தவன் அவருக்கு கை கொடுத்தான். மனதில் சுருக்கென்றது. எழுந்துச் சென்றவன் பேசி முடித்ததும் வந்துப்பார்க்க அவர் அங்கு இல்லை.

   மாலை, அம்மாவிடம் அவர் பற்றி பேசலானான். பள்ளி நண்பர்கள் எனவும், அம்மா செய்ததாய் சொன்ன குறும்புகளையும் சொல்லிச் சிரித்தான். அம்மாவிற்கு எதுவுமே நினைவில் இல்லை. தான் ஒருபோதும் அவ்வாறு செய்ததில்லை என்றுக்கூறி, 
"உங்கப்பா வர நேரமாச்சு.. மேற்கொண்டு எந்த பொய்யும் சொல்ல வேண்டாம். போ.. போய் வேற வேலை இருந்தா பாரு.." என்று எரிச்சலடைந்தார்.

  எழுந்து நடக்கலானான். பெயர் நினைவில் இல்லாததுதான் அம்மாவின் நம்பிக்கையின்மைக்கு காரணம் என புரிந்தது. இன்னொன்று சட்டென நினைவிற்கு வந்தது.

    அம்மாவின் வலது கை கட்டைவிரலுக்கு மேல் இருக்கும் நட்சத்திர வடிவ பச்சையைத்தான் அந்த நபரும் குத்தியிருந்தார் என்பதை அம்மாவிடம் சொல்லலாம் என திரும்பினான்.

  அம்மா தனியே அமர்ந்து, ஏதோ சிந்தனையில் தன் கட்டை விரல் பச்சையைத் தடவிக் கொண்டிருக்கிறார்.

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்