பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 20, 2020

அதனதன் இருப்பும் அதனதன் இயல்பும்

-அதனதன் இருப்பும் அதனதன் இயல்பும்-


       அப்போதுவரை பணக்காரர்கள் என்றாலே திமீர் பிடித்தவர்கள் என்றுதான் நினைத்திருந்தான். அந்த குளிரடிக்கும் கார்காரரின் பேச்சு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. பறவைகளை பிடித்து வந்து விற்பதுதான் தற்போதைய ஒரே தொழில். அடுத்தவர் காலுக்கு கீழ் வேலை செய்யாமல் தன் கைக்கு எட்டியவரை உழைத்து வாழ்வது உத்தமமாக இருந்தது.

          இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காட்டிற்குச் சென்று பறவைகளைப் பிடித்து வந்து விற்று தன் குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தான். சமயங்களில் அரிய வகை பறவைகள் கிடைத்துவிடும். விற்பனையில் நல்ல லாபமும் கிடைக்கும். இன்றும் அப்படித்தான் இதுவரை பார்த்திடாத மாதிரி அழகான சின்னச்சின்ன வண்ணப் பறவைகள் கூட்டத்தோடு சிக்கிக்கொண்டன. வழக்கமான இடத்திற்குக் கொண்டு சென்றான். பலரும் அவனது வித்தியாசமான பறவைகளை ஆர்வமாகப் பார்த்தார்கள். இன்றைய அதிஷ்ட தேவதை அவனுக்குத்தான் மாலை போட்டுவிட்டாள் என்றார்கள். அது உண்மைதான் போல.

       முதல் முறையாக அங்கு ஒரு பெரிய கார் வந்து நின்றது. காரின் கருப்பு கண்ணாடியில் தெரிந்துக் கொண்டிருந்த அவனது முகம் மெல்ல மெல்ல கீழே போனது. இப்போது முற்றிலும் வேறு முகம் அங்கு இருந்தது.  கருப்பு கண்ணாடி. வாயில் மின் சுருட்டு. கண்ணுக்கு தெரிந்த கை விரல்கள் மூழுக்க குண்டு மோதிரங்கள்.

      அவன் தூக்கிக்காட்டிய கூண்டில் ஆங்காங்கு பறந்துக் கொண்டிருந்த பறவைகள் அந்த பணக்காரருக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அனைத்திற்கும் ஒரு விலை சொல் என்றார். அதிர்ச்சியில் ஏதோ உளறி ஏதோ குழப்பி ஒரு தொகையை பறவைகளுக்கு நிர்ணயித்தான்
      “பறவைகளோட இயல்பே பறக்கறதுதான் அதை போய் கூண்டில் அடிச்சிருக்கயே.. எல்லாத்தையும் நான் வாங்கிக்கறேன். கூண்டைத் திறந்துவிடு…”.

        அவனால் அந்த வார்த்தைகளைத் தாங்க முடியவில்லை. இன்று கிடைக்கும், அவர் கொடுக்கப்போகும் பணத்திற்கு பிறகு பறவைகளைப் பிடிப்பதில்லை என்று சத்தியம் செய்தான். அவருக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவனது கைகளினாலேயே பறவைகளை திறந்துவிடச் சொன்னார். பறவைகள் ஒவ்வொன்றாக பறக்கத் தொடங்கின. ஏழை பணக்காரர் இருவர் கண்ணிலும் ஒரே மாதிரி ஆனந்தத்தைக் காண முடிந்தது.

     பிறகு அவர் பணத்தை எண்ணலானார். அசுத்தமும் பாவமும் நிறைந்துவிட்ட கைகளைக் கழுவ நினைத்தான். பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கொண்டு கைகளைக் கழுவியப் பின் இடுப்பில் இருக்கும் துணியில் துடைத்துக்கொண்டான். நிமிர்ந்துப் பார்க்க அந்த குளிரடித்த காரையும் அதிலிருந்த ஆளையும் காணவில்லை.

       கண்ணுக்கெட்டிய தூரம் ஒன்றும் தெரியவில்லை. கை கழுவியப்போதே அவன் செய்த சத்தியமும் போயிருக்கும்தானே என தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான்.


#தயாஜி


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்