பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 27, 2020

பூனைகளின் ராஜ்ஜியத்தின் உய்யலாலா...


    தம்பதிகள் கைகோர்த்தபடி அத்தனை நெருக்கமாக இருக்கிறார்கள். ஒவ்வொருவர் முகங்களிலும் பலவித எதிர்ப்பார்ப்புகள். இளம் தம்பதிகள் முதற்கொண்டு பல வயதுகளில் தம்பதிகள் இருக்கிறார்கள். அதோடு ஆண்கள் ஒரு குழுவாகவும் பெண்கள் ஒரு குழுவாகவும் இருக்கிறார்கள். ரசிக்கிறார்கள். லயிக்கிறார்கள். மிதக்கிறார்கள்.

   வாசல் கதவிற்கு மேல் அத்தனைப் பெரிய பூனை தலையும் ஆங்காங்கு பூனைகளில் புகைப்படங்களும் இருந்தன. வாசலில்  அவர்களின் தகுந்த அடையாளங்களை உறுதி செய்கிறார்கள். பின்னர் அந்த பிரம்மாண்டமான பூனை வாய் கதவு திறக்கப்படுகிறது.

   பூனைகளுக்கே உரிய அமானுஷ்ய வாசனை எவ்விடத்திலும் பரவியிருக்கிறது. வரம் தரும் கடவுள் போல பூனைகளைக் கண்டும் தொட்டும் வணங்கியும் தத்தம் வேண்டுதல்களை வைக்கிறார்கள். நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

   பலவித பூனைகள் வேடமணிந்தவர்கள் உற்சாகமாக துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவை செல்லும் வழிகளில் இருப்பவர்கள் தலை குனிந்து வழிவிட்டு மரியாதை செய்கிறார்கள். பின்னர் இவர்கள் பூனைகள் போலவே துள்ளி குதிக்கிறார்கள். 'மியாவ்'விக்கிறார்கள்.

    வரிசையாக பல கடைகள் இருந்தன. ஒவ்வொரு கடை வாசலிலும் அவரவர்க்கு பிடித்த பூனை சிலைகளும் பூனைகளின் புகைப்படங்களும் நிறைந்திருந்தன. 

     'மியாவ் மியாவ்' என்னும் கீதம் மெல்லிய பின்னணியில் ஒலித்துக கொண்டிருக்கிறது. அது சூழலை மேலும் தெய்வாதீனமாக ஆக்குவதை ஒவ்வொருவரும் உணர்கிறார்கள்.

    வருடத்தில் ஆறு  நாட்கள் மட்டுமே இங்கு கூடுகிறார்கள். கொண்டாடுகிறார்கள். இளமை விழா என்ற இன்னொரு பெயரும் உண்டு. இங்கு, கேட்கும் வரங்களைக் கொடுக்கும் பூனைகளின் ஆசீர்வாதத்திற்கு பஞ்சமே இருப்பதில்லை.  அதில் விஷேசமே குழந்தை பேரு தான். குழந்தைகளுக்காக பிரார்த்தித்தவர்கள் சில ஆண்டுகளிலேயே குழந்தைகளுடன் இங்கு வந்துவிடுகிறார்கள். 

    அதிஷ்டம் கொடுக்கும் பூனை உரோம சங்கிலி. வியாபார வெற்றிக்கு பூனை நக மோதிரம். குடும்ப நிம்மதிக்கு விசித்திர பூனை புகைப்படங்கள். இப்படி தனித்தனியே பல காரணங்கள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக எல்லாவற்றுக்கும் ஏற்ற ஒன்றும் உள்ளது. தம்பதிகளை என்றும் இளம் ஜோடிகளாக இணை பிரியாமல் இருக்க வைப்பதுதான் இவ்விடத்தின் சிறப்பு.

   மனம் கவர்ந்த பூனையை தேர்வு செய்யலாம். அதனுடன் சில மணிநேரம் கழிக்கலாம். விளையாடலாம். அதனை மகிழ்ச்சிப்படுத்தலாம். புகைப்படம் எடுக்கலாம். புறப்படுவதற்கு முன் ஏதாவது கடைக்குச் சென்று அந்த பூனையைக் கொடுத்துவிட வேண்டும்

   கொஞ்ச நேரத்தில் கடைக்காரர் தயாரித்துக் கொடுக்கும் அந்த பூனை தலை சூப்தான் இந்த பூனைகள் ராஜ்ஜிய விழாவின் முத்தாய்ப்பு. பூனைகளின் ஆசீவாதமும் கூட. அதற்காகவே வந்தவர்கள் திரும்பத்திரும்ப வருகிறார்கள் குழந்தைகளுடனும் குட்டிகளுடனும்....

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்