பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 27, 2020

மருந்தென்னும் மாயப்புள்ளி



மனப்பிணிக்கு மருந்துகொடுக்கக் கூடியவரிடம்
வாங்கிவந்த மருந்துச்சீட்டுகள் அவை
நோய்க்கூறுகளை துல்லியமாக
உடல்புள்ளிகளில் கண்டறிந்தார்

ஒவ்வொரு புள்ளிகளிலும்
ஒரு கதையை செருகச்சொல்லி
தீவிரமாக வேறெதையோ தேடலானார்

உடன்பாடில்லையென்றாலும்
கதைகளை கண்டறிந்துக்கொண்டிருந்தேன்

முதல்புள்ளி என் நெற்றிப்பொட்டில் இருப்பதாக
எழுதிக்கொடுத்தார்
சின்ன வயதில் யாரையோ
கல்லெறிந்துவிட்டு ஓடிய கதையை
அங்குச் செருகினேன்
நெற்றிப் பொட்டு வலித்தது

இரண்டாவது புள்ளி என் கண்களில் இருப்பதாக
எழுதிக் கொடுத்தார்
ஒரு முறை தோழி தன் காதலனுக்கு
முத்தம் கொடுத்தகதையை அங்குச் செருகினேன்
என் இதழ் எச்சிலானது

மூன்றாவது புள்ளி என் கட்டை விரலில் இருப்பதாக
எழுதிக் கொடுத்தார்
அப்பாவின் கையெழுத்தை ஏமாற்றி போட்டுவிட்ட
கதையை அங்குச் செருகினேன்
நகத்தின் முனை உடைந்தது

நான்காவது புள்ளி என் நாவின் நுனியில் இருப்பதாக
எழுதிக் கொடுத்தார்
இதுதான் முதல் முறையென
சொல்லி அணைத்தக் காதலியின்
கதையை அங்குச் செருகினேன்
நாவு கடிபட்டது

இப்படியாகப் பல புள்ளிகளைக் கண்டறிந்து
அதற்கான கதைகளை செருகியும்
நிம்மதியை முழுமையாக அடைய முடியாதபடி

மனைவியை வன்கலவி செய்த கனவினை
செருகிவைக்கவேண்டிய புள்ளியை மட்டும்
கண்டுபிடிக்கவே முடியாதபடி கண்கலங்கி தோல்வி கண்டார்...

- தயாஜி

(நன்றி வல்லினம்)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்