பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 31, 2020

#கதைவாசிப்பு_2020_9 'தவளைகள்'


#கதைவாசிப்பு_2020_9
கதை  தவளைகள்
எழுத்துப.சிங்காரம்
புத்தகம்காலச்சுவடு ஜனவரி 2020 இதழ்


       சொல்லப்போனால் உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு. இதழைப் பிடித்திருந்தக் கைகள் மெல்லிய தாளம் போடவும் செய்தன. இம்மாத இதழில் ப.சிங்காரத்தின் ‘தவளைகள்’ கதை பிரசுரமாகியுள்ளது. அதோடு இம்மாதம் முதல் சிறப்பு பகுதியாக ‘கதைத்தடம்’ எனும் பகுதியை ஆரம்பித்துள்ளார்கள். முன்னோடி எழுத்தாளர்களின் புத்தகங்களின் வெளிவராத கதைகளை இடம்பெறப்போகின்றன. இது பற்றி முந்தைய பதில் எழுதியிருப்பேன்.

    ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ மற்றும் ‘புயலிலே ஒரு தோணி’ போன்ற இரு நாவல்களுக்கு பிறகு எந்த ஆக்கமும் படிக்கக் கிடைக்கவில்லை. அவர் பற்றி மிகச்சரியான தகவல்களும் தேடுகையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்லிவிடுகிறார்கள். அவரின் மறைவுக்கு பிறக்குதான் இலக்கிய உலகம் அவரைக் கண்டுக்கொண்டது என்பது வேதனையான ஒன்று.

   இரண்டு நாவல்களுக்குப் பிறகு, மூன்றாவதாக அவர் ஒரு நாவலை எழுத முயற்சித்தார் . ஆனால் அது குறித்த விபரங்கள் தெரியவில்லை என்கிறார்கள். அவரின் இரு நாவல்களும் அக்கால மலேசியச் சூழலை கண்முன்னே காட்டியது.  நாவலின் மொழியைக் கண்டு இதனை எழுதியது மலேசியர் எனவும் ஒரு நம்பிக்கை இருந்தது. நாவலின் மொழி அந்த அளவிற்கு மலேசியாச்சூழலையும் இங்குள்ள மக்களையும் காட்டியது.

     பல நாட்களாக அவரது இதர படைப்புகளைத் தேடி கிடைக்கவில்லை. ஜனவரி காலச்சுவடு இதழில் ப.சிங்காரத்தின் ‘தவளைகள்’ கதை வந்துள்ளது.

தவளைகள்.

      ஊரைவிட்டு வெளியேறும் கணவன் மனைவி. யார் அவர்கள். என்ன சிக்கல் என கதை  விவரித்துக் கொண்டே செல்கிறது. இருள் சூழ்ந்த வழி. தண்ணீர் கரையோறமாக இருவரும் ஒருவர் பின் ஒருவராக எந்தவித சலனமும் ஏற்படாதவாறு நடந்துச் செல்கிறார்கள். அவர்களின் பயணத்தின் ஊடே ஆற்றில் தவளைகள் ‘கிரக் கிரக் கிராக்..!’ என தொடர்ந்துக் கத்திக்கொண்டே இருக்கின்றன. இந்த கத்தலுக்கான காரணம் கதையின் முடிவில் நமக்கு திகிலை ஏற்படுத்திவிடுகிறது.

    எப்படியும் பிழைக்கலாம் என யோசிக்கும் கணவன். இனி எப்படி பிழைப்பது என  நிலமையை முழுதும் அறிந்துப்புரிந்து யோசிக்கிறார் மனைவி. கணவனை நன்கு அறிந்திருக்கிறவள். இனி என்ன சொன்னாலும் அவர் கேட்கப்போவதில்லை என தெரிகிறது. எல்லாம் இழந்துவிட்ட பொழுதில் வாழ்ந்து வந்த ஊரை விட்டுச்செல்வது மனைவிக்கு சரியாகப் படவுமில்லை.

     சட்டென தண்ணீரில் ஏதோ பெரிதாக விழுந்துவிட அது தன் மனைவி என கணவர் அதிர்கிறார். அவளைக் காப்பாற்ற அவரும் ஆற்றில் குதிக்கிறார். தண்ணீரில் மனைவிக்கு அருகில் நீந்திச் செல்கிறார்.  ஏதோ கைகள் அவரது கழுத்தை பூட்டுகின்றன. மனைவியின் பெயர் சொல்லி அழைக்கிறார். அந்த பிடி விடுபடவில்லை. கழுத்தைப்பிடித்திருப்பதை பலமாக அறைகிறார். முடியவில்லை. அதன் கன்னத்தைக் கடித்துக் குதறி வெளியேற முயல்கிறார். முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் தண்ணீர்ல் ஏற்பட்ட சலனம் ஒரு முடிவிற்கு வந்தது.

     கதையின் முடிவை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. நிச்சயம் அந்த முடிவை நான் எதிர்ப்பார்க்காததும் அதற்கான காரணமாக இருக்கலாம். கணவனின் கழுத்தைப் பிடித்த அந்த கரங்கள் யாருடையது என தெரிந்துக் கொண்டதும் புத்தகத்தை அப்படியே மூடி வைத்துவிட்டேன். சமீக கால பத்திரிகை செய்திகள் கண்முன் வந்து வந்துப் போயின.
     கணவனின் எல்லா கொடுமைகளையும் மனைவி தாங்கிக்கொள்கிறாள். எப்போதாவது அவள் பங்கிற்கு அடிக்கவும் செய்கிறாள். பின்னர் அவளின் வாழ்வு எப்போதும் போல தொடர்கிறது. ஆனால் கணவன் மீது முற்றிலும் நம்பிக்கையற்ற மனைவியில் அடுத்த செயல் என்பது யாராலும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கும். அதற்கு அவள் மனதில் அந்த மனிதன் 'கணவனாக' இருக்க வேணடும்.

- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்