பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 27, 2020

ஆணொருவன் அழுகிறான்

அலாவுதின் விளக்கில் அடைபட்டிருக்கும்
பூதமொன்று
அவனது அழுகை துளியின்
சிறு துகள் பட்டு தூக்கம் கலைந்தது
இது சாத்தியமே ஆகக்கூடாதென
அசரீகள் முழுக்க
பெண் குரல்களால் ஒலிக்கத்தொடங்கின

ஆயிரத்து இரண்டாவது நாளுக்கான
கதையை அரேபியர்கள் தேடிப்போகலானார்கள்
அதிலவன் தனது மார்புக்கூண்டிலிருந்து
இதயத்தை கழற்றி அதற்கு
தங்க முலாம் பூசியதன்
தகுதியை உயர்த்திக்கொண்டிருந்தான்
விபரம் தெரிந்தவிட்ட ஊர் பெண்கள்
ஒவ்வொருவராக சாலை மின்சாரத்தை
துண்டிக்கத் தொடங்கினர்

நெற்றிக்கண்ணில் பிறந்துவிட்ட முருகனை
வேறெப்படியெல்லாம் கொன்றுவிடலாம் என
யோசனை கூட்டத்தின்
முதல் தீர்மானமாக
நெற்றிகண்களையெல்லாம்
தோண்டியெடுத்து தீயிட்டு கொளுத்தலாம்
என்ற சாசனத்தில் சக்திகள் கையொப்பமிட
வரிசைக்கு வரலானார்கள்

கன்னங்கள் வழி இறங்கி வந்துக் கொண்டிருந்த
நீர்த்துளிகளுக்கு
பனித்துளிகளென பெயரிட்டு ஊர் முழுக்க
தண்டோரா போட ஆளுக்கொரு திசையாக
புறப்படுகிறார்கள்

ஆணொருவன் அழுத கதை தெரியாததால்
அதன் விளைவுகள் ஏதும்
இன்னும் முகங்காட்டாமலேயே
முடங்கிவிட்டிருக்கிறது….

தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்