பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 08, 2021

#கதைவாசிப்பு_2021 வாழ்வின் தேவை

 

#கதைவாசிப்பு_2021 வாழ்வின் தேவை

 

தலைப்பு – வாழ்வின் தேவை

எழுத்து-  எஸ்.ராமகிருஷ்ணன்

வகை – சிறுகதை

பிரசுரம் – மே 6 (எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம்)

அம்மாவிற்கு குடும்பத்தில் என்ன மாதிரியான இடத்தை கொடுக்கின்றோம் என்கிற அடிப்படை கேள்வியை முன் வைக்கும் கதை. யோசிக்கையில் இதுவெல்லாம் ஒரு கேள்வியா என்றும் தோன்றலாம். ஆனால், அந்த யோசனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது ‘வாழ்வி தேவை’.

அப்பா இறந்துவிட்டார். அவர் இருக்கும் வரையில் அம்மாவை அவர்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார். வெளியூரில் வசிக்கும் மகளுக்கு இரண்டாம் பிரசவத்திற்கு பின் அம்மா அங்கு செல்ல வேண்டி வருகிறது. கொஞ்ச நாட்களாக அம்மா அங்கு இருக்கும்படியும் ஆகின்றது. வழக்கம் போல பேரன்களுக்கு பாட்டியாக, மகளுக்கு தாயாக, மருமகனுக்கு மாமியாராக இருந்துக் கொண்டிருக்கின்றார். அவர்களின் ஒரு கார் இருக்கிறது. எப்போதாவது அதனை பயன்படுத்தவும் செய்கிறார்கள். அவ்வபோது அம்மா காரை துடைத்து வைக்கிறார். ஒரு நாள் அம்மா, மகளிடம் கார் ஓட்ட கற்றுக்கொள்ளவா என கேட்கிறார். மகள் யோசிக்கின்றார். அதற்கு தடை போடவில்லை. ஏற்பாடு செய்கின்றார். மருமகனுக்கும் பெரிய விருப்பம் இல்லை. அம்மா டிரைவிங் ஸ்கூலில் சேர்கிறார். காரோட்ட கற்றுக்கொள்கிறார். அம்மாவிடம் மாற்றம் தெரிகிறது. உற்சாகமாக பொழுதுகளை ஆரம்பிக்கின்றார்.  மகள் மருமகள் பேரன்களை காரில் ஏற்றிக்கொண்டும் செல்கிறார். மீண்டும் சொந்த ஊர்க்கு செல்லும் போது பேருந்து நிறுத்துமிடத்தில் அடுத்த  முறை அம்மா காரிலேயே ஊருக்கு செல்லலாம், அதற்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக மருமகன் வாக்களிக்கின்றார். அம்மா உற்சாகமாக சம்மதிக்கின்றார்.

“நீ கார் ஒட்டுறதை பார்க்க அப்பா இருந்திருக்கணும். “

“அவர் இருந்திருந்தா என்னாலே கார் ஒட்ட கத்துகிட்டு இருந்திருக்க முடியாதுடீ“ என்றாள்

என்ற உரையாடலில் முழு கதையில் சொல்லப்படாத கதையை எஸ்.ரா சொல்லிவிடுகின்றார். குடும்பத்தில் அப்பாவிற்கு கொடுக்கும்  மரியாதையை  அப்பாவிற்கு கொடுக்கும்  கவனத்தை  பலரும் அம்மாவிற்கு கொடுப்பதில்லை. அதிகாரமே குடும்பத்தை தன் வசம் வைத்திருக்கிறது. மகனால் மகளால் அந்த அதிகாரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வயதில் வெளியேறிவிட முடிகிறது. ஆனால் அம்மாக்கு  அந்த வாய்ப்பு வருவதே இல்லை.

கதையில்  அம்மாவிற்கு  கார்  ஓட்டுவதில் ஏற்படும் ஆசையை  எளிதில்  கடந்துவிட முடியாது. தன் வாழ்க்கை தன் கட்டுப்பாட்டில்  வருவதாக அம்மா நினைக்கின்றார். ஒருவருக்கு அப்படியான வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு அரிதாகிக் கொண்டே போகிறது. தன் கையில் தான் ஓட்டும் காரின்  ஸ்டேரிங் கிடைத்துவிடுவது அம்மா இனிதான் தனக்கான வாழ்வை வாழப்போகின்றார் என்கிற உற்சாகத்தை கொடுக்கிறது.

நம்முடன் இருக்கின்றவர்களின், நமக்காக வாழ்கின்றவர்களின் கனவுகளை ஆசைகளை சின்ன சின்ன விரும்பங்களை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோமா? அவற்றை ஏன் தவற விடுகின்றோம் என்கிற ஆதார கேள்வியை கதையை வாசித்ததும், கேட்டுக் கொள்ள செய்கிறோம்.

கதையை இந்த லிங்கில் முழுமையாக வாசிக்கலாம். 

https://www.sramakrishnan.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88/

-       #தயாஜி

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்