பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 24, 2021

#கதைவாசிப்பு_2021 ‘தேவகியின் தேர்’

#கதைவாசிப்பு_2021 ‘தேவகியின் தேர்’

தலைப்பு – தேவகியின் தேர்

எழுத்து-  எஸ்.ராமகிருஷ்ணன்

வகை – சிறுகதை

பிரசுரம் – மே 22 (எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம்)

சிறுகதையில் ஒன்றை சொல்லியும் சொல்லாமலும் வாசகர்களிடம் அதன் முடிவை கொடுப்பது ஒரு கலை. எஸ்.ரா அவர்களுக்கு அது கை வந்த கலை. அதற்கு சான்றாக இக்கதையைச் சொல்லலாம்.

‘தேவகியின் தேர்’ என்பது தலைப்பாக இருந்தாலும், இறுதியில் தேவகியும் தேரும் ஒரே பொருளாக மாறிவிடுவதில் சிறுகதை தனித்து நிற்கிறது. ஆணாதிக்க குடும்பம் என்பதை நாயகியின் அப்பாவின் அறிமுக காட்சியிலேயே நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.

அவ்வூரில் இருக்கும் நூறு வருடங்களுக்கும் பழமையான தேரை பார்க்க வெளியூரில் இருந்து லியோன் என்கிற இளைஞன் வருகிறார். அப்பாவின் கட்டளையின் படி லியோனை ஹரி அழைத்துச் செல்கிறார்.

தொடர்ந்து அந்த தேர் பற்றியும் ஆண்டுதோறும் நடக்கும் பங்குனிப் பெருவிழாவை பற்றி ஆசிரியர் சொல்லிச் செல்வது நாமும் அவ்விழாவில் கலந்து கொண்ட உனர்வை தருகிறது. எங்கிருந்தோ வந்த வெள்ளைக்கார லியோனுக்கு அவ்வூர் தேரை பற்றி பல விபரங்கள் தெரிகின்றது. அதன் சிற்பங்கள். அதன் நேர்த்தி. அதன் பின்னனி காரணங்கள் என ஹரிக்கு தெரியாததையெல்லாம் பேசி ஆச்சர்யப்படுத்துகிறார். இதுவரை யாரும் கண்டிராதபடி தேரின் அழகை படம் பிடிக்கின்றார்.

அடுத்ததாக ஆசிரியர், ஹரியின் அக்கா தேவகியை அறிமுகம் செய்கின்றார்.

தேவகியின் அறிமுகம் கிடைத்த பிறகு, தேர் குறித்த விபரங்கள் வரும் பொழுது தேவகியையும் அதனுடன் இணைத்துப் பார்க்க தோன்றியது. இந்த இணைப்பில் ஏதோ இருப்பதாக உணர்ந்தேன்.

அதன் பிறகு கதை அதன் விளையாட்டை தொடங்கியது.  

அதிக நாட்கள் லியோன் அவ்வூரில் தங்கும்படி ஆகிறது. பலருடன் நெருக்கம் கிடைக்கிறது. இதற்கிடையில் ஒரு நாள் தேவகி தானும் லியோனும் காதலிப்பதாக அம்மாவிடன் சொல்கிறார். அதற்கு சான்றாக தேருக்கு அருகில் தேவகியை அழகாய் படம் எடுத்திருந்ததைக் காட்டுகிறாள். அடிக்கடி சந்தித்து பேசியுள்ளதையும் சொல்கிறாள். அம்மா அப்பாவை நினைத்து பயப்படுகின்றார். அதற்கு ஏற்றார் போலவே அப்பாவும் தேவகியை அடித்து அம்மாவை திட்ட தொடங்குகின்றார்.

அதன் பிறகு ஹரி லியோனை பார்க்க செல்கிறார். லியோன் அங்கில்லை. புறப்பட்டுவிட்டார். தேவகிதான் அந்த மனிதன் மீது காதல் கொண்டிருக்கிறாள். லியோனுக்கும் இதற்கும் சம்பத்தம் இல்லையென அப்பா திட்டுகிறார். ஆறு மாதங்களில் தேவகிக்கு திருமணத்தை நடத்துகின்றார் அப்பா. வெளியூர் மாப்பிள்ளை.

‘அக்கா எப்போது லியோனை சந்தித்தாள். எப்படி அவள் காதலித்தாள். எதுவும் ஹரிக்குப் புரியவில்லை. லியோன் ஏன் இதை வெளிப்படுத்தவேயில்லை. எப்படி ரகசியத்தை மறைத்துக் கொள்ள முடிந்தது. அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்த தேரையும் தனக்குத் தெரியவில்லை. வீட்டிலிருந்த அக்காவையும் தெரியவில்லை. நிழல் போல இருந்த பெண் இப்படி நடந்து கொண்டுவிட்டாளே என்று வியப்பாகவே இருந்தது.

என ஹரி யோசிகின்றார். உண்மையில் இங்குதான் தேருக்கும் தேவகிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என சொல்லாமல் சொல்கிறார் ஆசிரியர்.

தேர் இருப்பது பிரம்மாண்டம். திருவிழாக்களுக்கு பயன்படும். ஆனால் அதிலிருக்கும் ஒரு சிற்பத்தைக் கூட அங்குள்ளவர்கள் முழுமையாக கண்டிருக்க மாட்டார்கள் என்பதை கதையின் ஊடே ஆசிரியர் காட்டுகின்றார். நம் வீட்டிலும் இப்படித்தான் பெண்களை அவர்களுக்கு உரிய இடத்தை கொடுப்பதாகச் சொல்லி, மரியாதை கொடுப்பதாகச் சொல்லி அவர்களின் ஆசைகளைப் புறக்கணிக்கின்றோம். திருவிழாக்களுக்கு தேர் அழகை கொடுத்து மற்ற நேரங்களில் ஏதோ ஓர் மூலையில் தனித்து கவனம் பெறாது இருப்பது போலவே பல பெண்களின் நிலை இன்றும் இருப்பதை இச்சிறுகதை காட்டுகிறது.

திருமணத்திற்கு பின் தேவகி ஒரு நாளும் பிறந்தகத்திற்கு திரும்பவில்லை. யார் அழைத்தும் வாருவதற்கு தயாராய் இல்லை.

“நான் செத்தாலும் ஊருக்கு வரமாட்டேன்.  அந்தத் தேரை பார்க்கமாட்டேன் பாத்துக்கோ“

“தேர் என்னடி பண்ணுச்சி“ என்றாள் அம்மா

“என்ன பண்ணலே“ என்று கேட்டு அழுதாள் தேவகிஅக்கா

அம்மாவிற்கு அப்படித் தேவகி அழுவதைக் கேட்கும் போது கண்கள் கலங்கவே செய்தன.

என சிறுகதையை முடிக்கையில் நம் மனமும் கலங்கத்தான் செய்கிறது. தேவகியின் தேர் சிறுகதை முழுமையாக வாசிப்பதன் மூலம் நாம் அதனை உணரலாம்.

(இங்கு சுட்டி சிறுகதையை வாசிக்கலாம்)

https://www.sramakrishnan.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/

 

#தயாஜி

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்