பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 26, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘மாறிலிகள்’

புத்தகவாசிப்பு_2021 ‘மாறிலிகள்’

தலைப்பு –‘மாறிலிகள்’

வகை – சிறுகதை தொகுப்பு

எழுத்து – சித்துராஜ் பொன்ராஜ்

வெளியீடு – அகநாழிகை

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

 

‘மாறிலிகள்’. சிங்கை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு. இச்சிறுகதை நூல், 2016-ம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கிய விருதினைப் பெற்றது. இந்நூலுக்கு 2017-ம் ஆண்டின் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘கரிகாற்சோழன்’ விருதும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சித்துராஜ் பொன்ராஜ் தன் இளவயது முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறவர். மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி வருகிரார். தமிழில் இருந்து சிறுகதை, கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளில் இருந்து சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழ்மொழியில் பெயர்த்திருக்கிறார். கன்னடத்தை வீட்டின் மொழியாகக் கொண்ட இவர், சமஸ்கிருதம், ஹீப்ரூ, பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளிலும் தேர்ச்சிக் கண்டவர்.

இச்சிறுகதை தொகுப்பிற்கு ஆசான் ஜெயமோகன் முன்னுரை கொடுத்திருக்கின்றார்.

சென்ற இருபதாண்டுகளில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த சிறுகதைத் தொகுதி என்று சித்துராஜ் பொன்ராஜின் மாறிலிகளைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தமிழில் சில சிறுகதைத் தொகுதிகள் முதன்மையான படைப்பாளிகளின் வரவை அறிவித்ததனால் இன்றும் நினைக்கப்படுபவையாக உள்ளன. சுந்தர ராமசாமியின் அக்கரைச்சீமையிலே அசோகமித்திரனின் வாழ்விலே ஒருமுறை வண்ணத்தாசனின் தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் போன்றவை. அவ்வரிசையில் வைக்கத்தகுந்த தொகுப்பு மாறிலிகள். சிங்கப்பூரின் அரை நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட எழுத்து அதன் இயல்பான முதிர்ச்சியை இத்தொகுதியில் அடைந்திருக்கிறது. இது ஒரு தொடக்கப்புள்ளியாக அமையுமென்றால் தமிழ் இலக்கியத்தின் ஒளி மிக்க ஒரு பகுதியாக சிங்கப்பூர் இலக்கியம் வளரும் என்று எண்ணுகிறேன்.’ என ஜெயமோகன் சொல்லியிருப்பது இச்சிறுகதைகள் மீதான ஆர்வத்தைக் கூடுகின்றது.

இத்தொகுப்பில் மொத்தம் 15 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் முந்தைய கதைகளை நினைவுப்படுத்தாமல் நகர்ந்துச் செல்கிறது. ஒரு சிறுகதை எப்படி சொல்லப்பட வேண்டும் என பாடம் எடுப்பவர்களுக்கு மத்தியில் அப்படியான கதைகளை எழுதி வாசிப்பவர்கள் தாங்களே அதனை கண்டுக்கொள்ள செய்திருக்கின்றார் ஆசிரியர்.

ஒவ்வொரு கதையும் உண்மையில் ஒவ்வொரு கதைகளாக விரிகின்றன. அறம், காதல், காழ்ப்புணர்ச்சி, ஏமாற்றம் , இயலாமை, இழப்பு, நகைச்சுவை, ஆணவம்  என கதைகள் தனியாகத் தெரிகின்றன. நாம் எங்கிருந்து எழுதுகின்றோம் என்பதை விட எந்த பார்வையில் எழுதுகின்றோம் என்பது எழுதுவதற்கு முக்கியம் என நம்புகின்றேன். மலேசியாவில் எழுதப்படும் பல கதைகளை தமிழ்நாட்டு கதைகள் போல பல இடங்களில் பாசாங்கு மொழியில் (அம்மொழி தமிழக எழுத்தாளர்களைப் போல அமைந்திருக்கும்) இருந்துவிடுவதை கவனித்துள்ளேன். அதில் அசல் தன்மை இருக்காது அல்லது குறைவாக இருக்கும். ஒரு சிலரே தங்களின் மண்ணிற்கான மொழியை எழுத்தாக்கம் செய்து தனிந்து தெரிவார்கள். அவ்வகையில் சிங்கை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள், அம்மண்ணிற்கு (தார்ச்சாலைக்கு) உண்டான மொழியில் கதைகளை எழுதியுள்ளார். இருப்பினும் வாசிக்கையில் எவ்வகையிலும் வாசகர்களுக்கு குழப்பத்தைக் கொடுக்காதவாறு அது அமைந்துள்ளது.

ஒவ்வொருவருக்குள்ளும் ‘அறம்’ என்ற ஒன்று எப்போது இருப்பதாக நினைக்கிறேன். அது மனசாட்சியின் குரலா? கர்மாவின் காரணமா என பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஒரு காலக்கட்டத்தில் ஆடிவிட்ட ஆட்டங்களுக்கு காலம் சரியான நேரத்தில்  அறம் கொண்டு பேசவும் பதில் கொடுக்கவும் செய்கிறது. இதனாலேயே நம் வாழ்வில் நாம் பல துரோகிகளை மன்னிக்கும்படியும் ஆகின்றது. எழுத்தாளர்கள் இதனடிப்படையில் எப்படியும் ஒரு கதையை எழுதியிருப்பார்கள் அல்லது எழுத தயாராய் இருப்பார்கள்.

இத்தொகுப்பில் ‘அறம்’ என்கிற அடிப்படையைக் கொண்டு ‘தர்ம ரதம்’ என்கிற கதையை எழுதியிருப்பார். சிங்கப்பூர் பின்னணியில் சில வரலாறுகளை சொல்லிச் செல்லும் கதையில் சரியான நேரத்தில் பேசத்தவறிய மனிதன் அவனது அறத்தின் குரலைக்கு எப்படி பயந்திருக்கிறான் என சொல்லும் கதை. தனக்கு நன்மை செய்த ஒருவரை நண்பர் ஏமாற்றும் போது தடுக்காமல் உண்மையைச் சொல்லாமல் சின்ன சபலத்தில் அமைதி காக்கிறார் பழனியப்பன். ஏமாற்றி வாங்கிய பணத்தை மேஜை டிராவருக்குள் வைக்கிறார். பத்து ஆண்டுகளாக அந்த பணம் மீண்டும் எடுக்கப்படாமல் கட்டும் பிரிக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டிருக்கிறது. அவர் விபத்தில் இறந்த பின் அவரது மகன் அதனை கண்டு நம்மிடம் சொல்லுவதாக கதை முடிகிறது. அப்பணக்கட்டில் யாரின் பணம் என்கிற குறிப்பையும் பழனியப்பா எழுதியிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக பழனியப்பா எப்படியெல்லாம் மன வேதனைக்கும் குற்றவுணர்ச்சிக்கும் ஆளாகியிருப்பார் என நினைக்கையில் நம்மையும் சுயபரிசோதனை செய்யத் தோன்றுகிறது. ஒரு சின்ன சபலம் எத்தனை ஆண்டுகளாக பின் தொடர்ந்துவிடுகிறது. அவர் இருக்கும் வரை மட்டுமல்ல இறப்பு வரையும் தொடர்வே செய்கிறது. இறந்த பிறகாவது ஆத்மா சாந்தியடைந்திருக்குமா என தெரியவில்லை.

இரண்டாவது கதை ‘கர்ண யட்சிணி’. எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிவதாக கதை தோன்றினாலும், முடிவில் தன் பலவீனங்களை மறைக்க சிலவற்றை செய்யத்தான் வேண்டியுள்ளதை காட்டுகிறது. தன் மீது விழுந்துவிட்ட அடையாளத்தை மாற்ற முயற்சிக்கும் போது கூட நம்மை மீறியும் நாம் யாரென்று வெளிகாட்டிக் கொள்கிறோம். இக்கதையின் நாயகிக்கு அதுதான் நடந்துள்ளதாக தெர்கிறது.

மூன்றாவது கதை ‘விடியல் தவம்’ ஆசான் ஜெயமோகன் இக்கதை குறித்து முன்னுரையிலேயே ஆழமாக கூறியுள்ளார். சீன சமையல் கலையில் சாதனை படைக்க நினைக்கும் தமிழ் இளைஞனின் கதை. சமையில் போட்டியில் தொடங்கி இரண்டாம் நிலை வெற்றியில் கதை முடிகிறது. அதற்குள் நாயகன் மீது நமக்கு ஒருவித அன்பையும் அவர் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் கொடுத்துவிடுகிறார்.  

‘முடிவொழுக்கம்’ நான்காவது கதை. ஆண் பெண் பாலியல் தேவைகள் குறித்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் மாய தடையொன்று நம் சமூகத்தில் இருக்கவே செய்கிறது. ஏன் எழுதப்பட்டது என கொஞ்சமும் யோசிக்காமல் பிறரையும் யோசிக்க விடாமல் சில வார்த்தைகளிலே முழு கவனத்தை வைத்து முழு படைப்பையும் புறக்கணித்துவிடுகிறார்கள். பாலியல் கல்வி/தேவை பற்றிய பிரக்ஞை இல்லாதது பல குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கு காரணமாகிறது. தன்னால் மனைவியை திருப்தி படுத்த முடியாததை மறைக்க தினமும் குடித்து விட்டு மனைவியை அடித்து துன்புருத்தி தன் ஆண்மையை நிலைக்காட்டும் ஆண்கள் உண்டு. தன் தேவைகளை பூரித்தி செய்யாத கணவனை வார்த்தைகளாலும் செயல்களாலும் சிதைக்கும் பெண்களும் உண்டு. ‘முடிவொழுக்கம்’ கதையில் தன் உடல் தேவைக்கு கணவரின் நண்பனை நாடும் மனைவில், அவரும் சரியவரவில்லை என அவரையும் ஒதுக்குகிறார். கதையை முழுமையாக வாசிக்க பல கேள்விகளைக் கொடுக்கும்.

‘மூன்று சந்திப்புகள்’ ஐந்தாவது சிறுகதை. வயதான கணேசன், குடும்ப தேவைக் கருதி வேலை தேடுகின்றார். முதல் சந்திப்பில் வேலை கிடைக்கவில்லை. இரண்டாவது சந்திப்பில் தன் பழைய நண்பரையும் அவரது மகளையும் சந்திக்கின்றார். மூன்றாவது சந்திப்பில் நண்பரின் மகளை சந்திக்கின்றார். மகளின் மூலம் இவருக்கு வேலை கிடைக்கிறது. இக்கதையில் இன்றைய இளைஞர்களின் வாழ்வியலை தொட்டு எழுதியுள்ளார். ஒரு காலத்தில் மறைந்திருந்து  மது குடித்து பழகியவர்களுக்கு, இன்றைய தலைமுறை மது ஊற்றிக் கொடுப்பதை தொழிலாகவே செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாமையைக் கோடிட்டுள்ளார்.

ஆறாவது கதை, ‘இரண்டாம் வாய்ப்பாடு’. மனித மனம் எத்தனை விசித்திரமானது. எப்போது ஒருவரை தனக்கு கீழாகவே வைத்திருக்க நினைக்கிறது. மாறான தனக்கு இணையாக வாழ்வதை விரும்புவதில்லை போலும் என யோசிக்க வைக்கும் கதை. பிலிப்பீன்ஸ்க்கார பெண்னை காதலிக்கும் முரளி. அதனை தன் வீட்டில் சொல்ல தயங்குகிறான். பல வீடுகளில் வேலைக்கார பெண்களாகப் பார்த்து பழகி பிலிப்பீன்ஸ்க்கார பெண்ணை தன் மனவியாக ஆக்கிக் கொள்வதில் மனத்தயக்கம் கொள்கிறார் முரளி. இத்தனைக்கும் இருவரும் வேதியியல் ஆராய்ச்சியாளர்களாக ஒன்றாக பணியாற்றுகின்றார்கள். இன்றைய உரையாடலில் முரளியை நன்கு அறிந்துக்கொண்ட அந்த பெண் எடுக்கும் முடிவு பாராட்டத்தக்கது. எழுத்தாளருக்கும் பெண்கள் மீதான கவனிப்பும் அக்கறையும் இருப்பதை கதைகளில் தொடர்ந்து வாசிக்க முடிகின்றது.

ஏழாவது கதை ‘முல்லை வனம்’. ஒருவருக்கு தேவையான ஒன்று அதனை கொஞ்சமும் பயன்படுத்தாத அதன் அருமை தெரியாதவர்களிடம் இருப்பதென்பது எத்தனை வேதனை. இக்கதையில் அதனை உணரலாம்.

எட்டாவது கதை,  ‘அறம் கூத்தாகும்’. இக்கதையின் வடிவம் எனக்கு பிடித்திருந்தது. மகிழ்ச்சியின் எல்லைவரை நம்மை அழைத்துச் சென்று, இதுவரை அழைத்துச் சென்றதெல்லாம் அடுத்து வரவிருக்கும் வேதனைக்கும் வலு சேர்க்கத்தான் என சொல்லி தூக்கி வீசுவது போன்றதொரு கதை. குழந்தைக்கு காது குத்துவதற்கு வீடே விழாக்கோலம் கொண்டிருக்கிறது. நம்மையும் அதில் ஒருவராக இணைத்துக் கொள்ள செய்கிறோம். ஆனால் அவ்வீட்டில் தனி அறையொன்றில் இருக்கும் பெண் மிகுந்த வேதனையில் இருக்கிறாள். அவரை சந்தித்து நடக்கும் உரையாடலில் ‘‘எனக்கு வந்த குட்டிக் கிருஷ்ணனையே நான் வேண்டாம்னு தூக்கி எறிஞ்சவோ. பாவி’’ என சொல்லி விம்மி விம்மி அழுகிறாள். தனக்கு வராத குழந்தையை நினைத்து அப்பெண் அழவில்லை, தான் வேண்டாமென தூக்கி எறிஞ்ச குழந்தையை நினைத்து அழுகிறாள். தான் செய்துவிட்ட செயலுக்கும் காலம் கொடுத்திருக்கும் தண்டனை எத்தனை கொடுமையானது.

ஒன்பதாவது கதை.  ‘தேவேந்திரன் பன்ணிய டிராமா’ தலைப்பிலிருந்தே கதை ஆரம்பித்துவிடுகிறது. வயிற்றுப் பிழைப்பிற்கு எப்படியெல்லாம் நாடகம் ஆடவேண்டியுள்ளது. கீழிடத்தில் இருந்து மேலிடம் வரை அத்தகைய நாடகங்கள் அரங்கேறிக்கொண்டே இருப்பதை சிரிக்கும்படி சொல்லும் கதை.

 ‘மாறிலிகள்.’ பத்தாவது கதை. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என சொல்வதற்கு தகுந்த மனிதர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். பலரால் தங்களின் வெண்மைகளைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களின் அனுபவங்கள் விடுவதில்லை. மாறிலிகள் கதையில் வரும் நாயகி வாழ்வில் நடந்த ஏமாற்றத்தை ஒரு முறையேனும் நான் கேள்விப்பட்டிருப்போம். உண்மையும் செய்தியாக சொல்லுவதற்கும் புனைவாக்கி சொல்வதற்கும் உள்ள வித்தியாசங்கள் அதிகம். உண்மையைக் கூட கடந்துவிடலாம். ஆனால் புனைவின் உள்ளே நாமும் நுழைந்துவிடுவதால் நமக்கும் வலிக்கச் செய்கிறது. திருமணத்தில் ஏமாறும் பெண்கள் என்கிற வகைமாதிரி பல கதைகளை நாம் வாசித்திருப்போம். ஆனால் இக்கதை தனித்து தெரிகிறது. அதற்கு ஆசிரியர் எடுத்துக் கொண்ட கதை சொல்லும் முறையைச் சொல்லலாம்.

‘வெட்சிப் பூக்கள்’ பதினோறாவது கதை. கண்முன்னே மெல்ல மெல்ல நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அப்பாவின் மரணத்தை எதிர்க்கொள்ளும் மகன்.

பனிரெண்டாவது கதை. ‘துளசி மாடம்’. இக்கதை போல நிஜத்தில் நடந்த இரண்டு மூன்று கதைகள் எனக்கு தெரியும். அலுவலகத்தில் சூழ்ச்சி செய்யும் தோழி. அது அலுவலகத்தில் மட்டும் நடக்கவில்லை. யாரும் எப்படி வேண்டுமானாலும் நம்மை இயக்கி அவர்களின் காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்கிற எச்சரிக்கையைக் கொடுக்கும் கதை. முடிவு நெருங்கும் போது நம் யூகங்களைவிடவும் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

பதிமூன்றாவது கதை, ‘தாளோர நாரைகள்’. எதிர்ப்பார்ப்புகள் நம்மை இயல்பாக சிந்திக்கவிடுவதில்லை. அது நமக்கு சாதகமாகவே சிந்திக்க வைக்கிறது. எதார்த்தம் என்பது கசப்பானது ஆனால் நம்மை நம்ம வைத்து ஏமாற்றாது. அதனை ஏற்றுக் கொள்ள மட்டும் மன தைரியம் வேண்டும். தொகுப்பில் எனக்கு பிடித்த கதை. கடலால் தன் குடும்பத்தை ஊரை தன் மக்களை இழந்த ஜப்பானியப் பெண். கடலையே தன் தாயாக பாவித்து விலாங்கு மீன்களை காப்பாற்றுகிறாள். அவளால் வெங்கட் கொண்ட காதலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனும் அவளுக்காக அவளுடன் சேர்ந்து செயலாற்ற முடியும் என சொன்னாலும் அவள் சம்மதிக்கவில்லை. ஒருவர் ஆத்மார்த்தமாக செய்ய நினைக்கும் கடமையை அவ்வாறே இன்னொருவராலும் செய்ய முடியுமா என்கிற கேள்வியை நாம் செய்திருக்கிறோமா என கேட்க வைக்கும் கதை,

பதினான்காவது கதை, ‘களங்கம்’. போலி எழுத்தாளர்களை பகடி செய்யும் கதை. சிரிக்க வைக்கிறது.

கடைசி கதை, ‘மோகவல்லி’ திருநங்கையின் மனநிலையைச் சொல்லும் கதை. ஏதோ ஒன்று அவர்கள் மனதில் குறையாக இருந்துக் கொண்டெ இருப்பதை காட்டுகிறார் ஆசிரியர்.

நிறைவாக, ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்குறது. இத்தொகுப்பு நம்மைச் சுற்றி கதைகளுக்கு எப்போதும் பஞ்சமில்லை என காட்டுகிறது. கதை எவ்வளவு முக்கியமோ கதை சொல்லும் முறையும் முக்கியம் என காட்டும் தொகுப்பு. வழக்கமாக நாம வாசிக்கும் கதை பாணியில் இருந்து மாறுபட்ட கதையமைப்பு கொண்ட கதைகள். சிறுகதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு புதிய பாணியைக் கற்றுக் கொடுப்பதோடு நில்லாமல் வாசிக்க வாசிக்க நமக்குள் அகம் சார்ந்த கேள்விகளை தூண்டுகிறது.

 

#தயாஜி

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்