பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 21, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘ஜார் ஒழிக’

 

புத்தகவாசிப்பு_2021 ‘ஜார் ஒழிக’

தலைப்பு –‘ஜார் ஒழிக’

வகை – சிறுகதை தொகுப்பு

எழுத்து – சாம்ராஜ்

வெளியீடு – நற்றிணை பதிப்பகம்

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

‘ஜார் ஒழிக’ கவிஞர் சாம்ராஜின் இரண்டாவது  சிறுகதை தொகுப்பு. மொத்தம் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.

வாசிக்க ஆரம்பித்ததும் சின்னதாய் ஓர் ஏமாற்றம். ஒருவேளை பெரிய எதிர்ப்பார்ப்புடன் புத்தகத்தை கையில் எடுத்தது ஒரு காரணமாக இருக்கும். அதுவுமில்லாமல் கவிஞர் சாம்ராஜை குறித்து நான் கேள்விபட்டதும், அவ்வபோது அவரது பேச்சுகளை யூடியூப்பில் கேட்டு மனதில் ஏற்றி வைத்த பிம்பமாகவும் இருக்கலாம். அவரின் பேச்சில் இருக்கும் எள்ளல் தொணி எனக்கு பிடித்த ஒன்று. இப்படி பலவற்றை மனதில் வைத்துக் கொண்டு வாசித்ததில் அந்த ஏமாற்றம் வந்திருக்க வேண்டும்.

வாசிப்பு என்பதை ஒரு பயிற்சியாக நான் அணுகுகிறேன். அதன் பொருட்டே தொடர்ந்து வாசிக்கவும் அதுபற்றி எழுதவும் செய்கிறேன். அதன் வழி செய்யும் உரையாடல் வழி சக ஜீவராசிகளை புரிந்துக் கொள்ள வழி அமைவதாகவும் நம்புகிறேன்.

முழுமையாக வாசித்து முடித்ததும் என் ஏமாற்றத்திற்கான காரணம் புரிந்தது. அலங்கார வார்த்தைகள் இல்லாமல் கதைகள் நகர்த்தப்பட்டிருப்பதும், வாசகர்களின் முன் முடிவுகளை ஏமாற்றும் போக்கும் ஒருவகையில் காரணம் என தோன்றுகிறது. ஒவ்வொரு கதையையும் இரண்டு முறை வாசிக்கும்படி ஆனது.

வாசித்ததை எழுதுவதன் வழி நாம் வாசித்ததை எவ்வாறு புரிந்துக் கொண்டோம் என்பதை நமக்கே காட்டும் கண்ணாடி.

முதல் கதை ‘குள்ளன் பினு’. உயரத்தை வைத்தே புகழப்படும் குடும்பத்தில் குள்ளமாக பிறக்கிறான் பினு. அதனாலேயே அவனை குள்ளன் பினு என அழைக்கப்படுகின்றான். குடும்பத்திலும் சமூகத்திலும் குள்ளன் என்பதால் கேலிக்கு ஆளாகிறான். ஒரு சமயம் அவனது அக்காள் மகளை கேலி செய்யும் இளைஞர்களுடன் சண்டை செய்யும்படி ஆகிறது. அவனது உயரமே அவனுக்கு சாதகமாகிறது. இளைஞர்களின் கால்களுக்குன் புகுந்து வெளி வந்து சண்டை செய்து எல்லோரையும் பிரமிப்பில் ஆழ்ந்துகின்றான். அதன் பின் பினுவின் அன்றாட வாழ்க்கை மாறுகிறது. அவ்விடம் கதையில் எதார்த்தமாக சொல்லப்படுகின்றது. தனது பலவீனமே தனது பலமாகிவிட்டதை உணரும் தருணம் அது.

இரண்டாவது கதை,  ‘செவ்வாக்கியம்’ ஒரு பெண் அவளது கோவத்தை எதுவரை கொண்டுச் செல்லக்கூடியவள் என சொல்லும் கதை. தன் கணவனை அவனது தவறான செயலுக்கும் அதற்கான முயற்சிக்கும், மனைவி எடுத்திருக்கும் முடிவு வாசிக்கையில் நம்மையும் பயம் காட்டுகின்றது. இக்கதை  ப.சிங்காரம் எழுதிய ‘தவளைகள்’ என்னும் சிறுகதையை நினைவுப்படுத்தியது. இரண்டு கதைகளிலுமே பெண்கள் குறிப்பாக மனைவிகள் எடுக்கும் முடிவுகள்தான் மையம். ஜீரணிக்க சிரமத்தைக் கொடுக்கும் முடிவுகளும் கூட.

மூன்றாவது ‘கதை தொழில் – புரட்சி.’ இக்கதையில் இருக்கும் பகடி ரசிக்கும்படியும் யோசிக்கும்படியும் அமைந்திருக்கி றது. இன்னும் சொல்வதென்றால், கவிஞர் சாம்ராஜின் குரலில் இருக்கும் எள்ளல் தொணியை இதில் காணலாம்.

நான்காவது ‘பரமேஸ்வரி’. தனது மாமனாரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பரமேஸ்வரி அதற்கு ஒரு முடிவு கட்டும் கதை. பாவம் புண்ணியம் பார்த்துக் கொண்டிருந்தால் சிவற்றில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதை நினைக்க வைக்கும் கதை.

ஐந்தாவது ‘கப்பல்’. முதல் வாசிப்பில் இச்சிறுகதை எனக்கு பிடிபடவில்லை. மீண்டும் வாசித்தேன், ஒவ்வொரு பத்தியையும் ஆழ்ந்து வாசிக்கலானேன். மனிதன் எப்போதும் இன்னொரு மனிதனை தனக்கு கீழாக வைக்க நினைக்கிறான். அல்லது தன்னை எப்போதும் மேலானவனாக வைத்துக் கொள்ளவே விரும்புகிறான். கப்பலில் பல ஆண்டுகளாக வேலை செய்தவர், பல முறை காப்டன்களான் புறக்கணிக்கப்பட்டவர் பின்னர் கப்பல் போலவே வீடு கட்டுகின்றார் இக்கதையின் முடிவு பலவாறாக நம்மை யோசிக்க வைக்கிறது.  நாய் தண்ணீரில் தெரியும் கப்பல் வீட்டின் தலைகீழ் பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்ததுதிடீரென ஆவேசமாய் குலைத்ததுபிறகு ஆச்சரியத்துடன் நிமிர்ந்து வீட்டைப் பார்க்ககப்பல் வீடு தண்ணீரில் கடல் இருக்கும் திசை நோக்கி மெதுவாய் மிதந்து போய்க் கொண்டிருந்தது. இம்முடிவை நாம் எப்படி அணுகுவது. அது அந்த நாயின் பார்வையா. அல்லது அந்த கப்பல் வீடு கட்டிய அச்சுதனின் எதிர்ப்பார்ப்பா. அல்லது இதற்கு அங்கிருந்து விரட்டப்பட்ட மனிதர்களின் சாபமா.

ஆறாவது கதை சன்னதம். ஒரு நாள் கணவனாக வந்திருந்தவன் படுக்கையில் இறந்துவிடுகிறான். அவனுக்காக லஷ்மியக்கா மொட்டையடிக்கிறாள். யாரவள் மிச்ச வாழ்க்கையை எப்படி கடக்கிறாள் என்பது கதை.

ஏழாவது ‘மருள்’. ஒரே இடத்தில் தொடர்ந்து வேலை செய்யாத அருளை பற்றிய கதை. சுவாரஸ்யமாக நகரும் கதை, நாமும் எப்போது இம்மாதிரி மனிதனை சந்தித்த நியாபகத்தை வரவைக்கிறது.

 எட்டாவது கதை ‘மூவிலெண்ட்’. தொகுப்பில் எனக்கு பிடித்த கதைகளில் ஒன்று. காதல் தோல்வி பற்றிய கதைதான். ஆனால் அதனை எழுத்தாளர் அணுகிய விதமும், கதாப்பாத்திர படைப்பும் நன்றாக அமைந்திருக்கிறது. நிறைமாத கர்ப்பிணி திரையரங்குக்கு செல்வதில் இருந்து கதை ஆரம்பிகின்றது. சினிமாவில் அப்படி என்னதான் இருக்கிறது ஏன் அவள் இந்த நிலையிலும் சினிமா பார்க்க செல்கிறாள் பின்னர் ஏன் அவள் சினிமா பார்ப்பதையே தவிர்க்கின்றாள் என வாசிக்கையில் அந்த பெண்ணில் மீது கரிசனம் வர செய்கிறது. கதையில் சொல்லப்படும் ஒவ்வொன்றும் கதையோட்டத்திற்கு எத்தனை அவசியம் என சொல்லத்தக்க கதை.

ஒன்பதாவது கதை, ‘ஜார் ஒழிக’. சிரிக்கலாம். வாயில் ஒட்டிக் கொண்ட வார்த்தையால் ஏற்படும் சங்கடங்களை சொல்லும்  கதை. அதிலிருந்து நாயகன் மீண்டானா இல்லையா என்பதை பகடியுடன் வாசிக்கலாம்.

பத்தாவது கதை மரியபுஷ்பம் இல்லம். தொகுப்பில் எனக்கு பிடித்த இரண்டாவது கதை. இக்கதையின் கட்டமைப்பு அழகாக அமைந்துள்ளது. வாசிக்கும் நம்மையும் உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் கதை. கதையின் முடிவு முழு கதையையும் மாற்றிவிடுகிறது. முடிவை நெருங்க நெருங்க ஏதோ நடக்கவுள்ளதை கணிக்க முடிந்த நமக்கு அதன் முடிவை யூகிக்க முடியவில்லை. ஒரு சிறுகதையில் என்ன விடயங்களை எப்படி கையாளலாம் என சொல்லிச்செல்லும் கதை. கதையை நகர்த்த உதவும் எதும் கதைக்கு முக்கியமே.

நிறைவாக, வாசிக்க எடுக்கும் புத்தகங்கள் சமயங்களில் நம்மிடம் ஒரு விளையாட்டை காட்டும். அதற்கு இணையாக இன்னொரு விளையாட்டை வாசிப்பின் மூலம் நாமும் நடத்திக் காட்ட வேண்டியுள்ளது. முதல் கதையை வாசித்து  விட்டு இத்தொகுப்பை மூடி வைத்திருந்தால் எனக்கு பிடித்தமான இரண்டு கதைகளை வாசித்திருக்க முடியாது. மற்ற கதைகள் பிடிக்கவில்லை என்பதற்கில்லை மற்ற கதைகளைக் காட்டிலும் ‘மரியபுஷ்பம் இல்லம்’, ‘மூவிலேண்ட்’ என்ற இரண்டு கதைகளும் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதற்கு அக்கதையும் கதை சொல்லப்பட்ட விதமும் காரணம். அதனைக் காட்டிலும் எழுதிவிடாத ஏதொ ஒன்றை வாசகரிடம் அக்கதைகள் கொடுத்துவிடுவதாகவும் இருக்கலாம்.

 

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்