பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 10, 2021

#கதைவாசிப்பு_2021 ‘கைதட்டுகள் போதும்’

 

#கதைவாசிப்பு_2021 ‘கைதட்டுகள் போதும்’

தலைப்பு – கைதட்டுகள் போதும்

எழுத்து-  எஸ்.ராமகிருஷ்ணன்

வகை – சிறுகதை

பிரசுரம் – மே 4 (எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம்)


கதை தொடங்கிய இடத்திலேயே முடிகிறது. அதற்குள் ஒரு கலைஞனின் இழப்புகளை பதிவு செய்துள்ளார் எஸ்.ரா. ‘கைதட்டுகள் போதும்’ என்று தலைப்பை வாசித்து கதைக்குள் நுழைந்தேன். ஆனால், ‘கைதட்டல் போதுமா?’ என்கிற கேள்வியோடு சிறுகதையை வாசித்து  முடித்தேன்.

கலை மீதான ஆர்வம் ஏதோ ஒரு வயதில் எவருக்கும் ஏற்படக்கூடியதுதான். சிலர் அதற்காகவே பிறந்தவர்கள் போலவும் பிரகாசிப்பார்கள். சிலர் துரதிஷ்டவசமாக காணாமல் போய்விடுவார்கள்.  இப்படி பிரகாசிப்பவர்களும்  காணாமல்  போகிறவர்களும்  சரி, தத்தம் குடும்ப வாழ்வில் எத்தனையோ இழப்புகளை சந்திக்கும்படி ஆகிறது.  கலையின் வெற்றி பலரையும் அனாதையாக்கியிருக்கிறது.  நாம் நேசிக்கும், நாம் நம்பும் கலை உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து யாரோ ஒருவரை நமக்கருகில் அழைத்து வருகிறது. ஆனால் நம் பக்கத்தில் இருக்கும் பலரையும் தொலைத்து விடுகிறது.

இக்கதை அப்படியான கலையில் ஈடுபாடு காட்டி கைதட்டலில் கிரங்கிய மனிதனை பேசுகிறது. அவனை கிரங்கடித்த கைதட்டல்களால் அவன் இழந்தது அவனது வாழ்க்கையை.

ரங்கசாமி வீட்டில் கதவுகள் இல்லை என்றும் அதற்கான அவசியம் இல்லை என்றும் கதை தொடங்குகின்றது. யார் இந்த ரங்கசாமி என்கிற கேள்விக்கு அடுத்தடுத்து பதில்களைக் கொடுத்து கதையை நகர்த்துகின்றார்.

சர்க்கஸில் வேலை செய்த ரங்கசாமியிடம் இப்போது ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிள் மட்டுமே இருக்கிறது. இந்த ஒற்றை சக்கர சைக்கிள் ரங்கசாமியின் வாழ்க்கையை பிரதிபலிப்பும் குறியீடாகவே பார்க்கிறேன். சர்க்கஸில் இருக்கும்   வரைதான் அந்த  சைக்கிளுக்கு பாராட்டுகள், பார்ப்பவருக்கு பரவசங்கள் எல்லாம். ஆனால் அதுவே வீட்டு வாசலில் சாய்ந்துக் கிடந்தால் யாருக்குத்தான் பரவசத்தைக் கொடுக்கும், யார்தான் வந்து பாராட்டிவிட்டுப் போவார்கள். யோசிக்கையில் சர்க்கஸில் கூட இதைவிட சாகசம் காட்டும் வேறொரு சைக்கிள் வந்துவிட்டால் இந்த ஒற்றை    சக்கர சைக்கிளுக்கு மதிப்பேது. அதன் எல்லை அதை விட அதிகம் பரவசமூட்டும் வேறொரு சைக்கிள் வருவரைதானே.

ஊரில் வேலை இல்லாமல் வெளியேறிய ரங்கசாமி சர்க்கஸில் சேர்கிறார். அங்கு ரங்கா என்ற பெயரில் பல சாகசங்களைச் செய்கிறார். தனித்து அறியப்படுகின்றார். அவரை மையப்படுத்தியே விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. பதினெட்டு வயதிலேயே திருமணம் ஆகியிருந்தது. குழந்தையும் பிறந்தது. தன் அம்மாவின் பெயரையே குழந்தைக்கும் வைத்து மகிழ்கிறார். இருந்தும் வேலை ஏதுமில்லாமல்     அங்கு இருக்கு முடியாமல்தான் யாருக்கும் தெரியாமல் வெளியேறினார். சர்க்கஸில் அவருக்கான முக்கியத்துவமும் அவருக்கு கிடைத்த  கைதட்டல்களும் அவரை அதில் முழுமையாக ஈடுபட வைக்கிறது. ஆண்டுகள் கடக்கின்றன.

அதற்கிடையில் ரங்காவை ஒரு மருத்துவர் சந்தித்து விருந்துக்கு அழைக்கின்றார். அங்கு மருத்துவரின் மகள் ரங்காவைப் பார்த்து உற்சாகமாகிறார். அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். அங்கு நடந்தது ரங்காவிற்கு அவரின் மனைவி பிள்ளையை நினைவுப்படுத்துகிறது.

இருந்தும் சந்தர்ப்ப சூழலால் ஒரு மாதம் கழித்தே சொந்த ஊர் செல்கிறார். அங்கே மனைவியும் மகளும் இல்லை. அவர்கள் ஊருக்கு சென்று மூன்றாண்டுகளுக்கு மேலாகிறது என தெரிந்துக் கொள்கிறார். அவர்கள் சென்றிருக்கும் ஊருக்கு ரங்காவும் செல்கிறார். இவரைப் பார்த்ததும் யாரும் மகிழ்ச்சியடையவில்லை. வெறுப்பையே காட்டுகிறார்கள். மனைவி மட்டுமல்ல மகளும்தான். அவருக்கு  அவர்களுடன் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. மன கவலையுடன் மீண்டும் சர்க்கஸ்க்கு செல்கிறார். அவரால் பழையபடி எந்த சாகசத்திலும் ஈடுபாடு காட்ட முடியவில்லை. மனைவியும் மகளும் தன்னை வெறுத்து ஒதுக்கியதையே மீண்டும் மீண்டும் நினைக்கிறார். அவரை இதுநாள் வரை அங்கு நிறுத்தி வைத்த கைதட்டல்களும் பாராட்டுகளும்  அவருக்கு  வெறுமையைக்  கொடுக்கின்றன. சர்க்கஸ்க்கு விடைகொடுத்து  அந்த  ஒற்றை சக்கர சைக்களுடன்  ஊர் திரும்புகிறார்.

தினமும்  மனைவி மகள் கண்ணில் படும்படி ஏதேதோ செய்கிறார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இனியும் அவர்களை தொல்லை செய்ய கூடாது என முடிவெடுக்கின்றார்.

எதனால் தன் மனைவியும் மகளும் தன்னை வெறுக்கிறார்கள் என முழுமையாக உணர்ந்து வருந்துகின்றார். என்றாவது அவர்கள் மனம் மாறும் எனவும் ஒரு நாள் அவர்கள் தன்னைத் தேடி வருவார்கள் எனவும் நம்புகிறார். அவர்கள் வரும் போது கதவு மூடியிருக்கக்கூடாது என்றே கதவை பிடுங்கியும் வைக்கிறார்.

காத்திருப்பு மட்டுமே காயங்களை மறக்கச்செய்யும் , உறவுகளை சேர்த்து வைக்கும் என்கிற நம்பி நாட்களை கடக்கிறார்.

நாம் எதை நம்புகிறோம். எதில் மயங்குகிறோம். எதையெல்லாம் இழக்கிறோம் என்கிற கேள்விகளை வாசகர்களுக்கு ஏற்படுத்துகிறது. அதையொட்டிய ஒரு எச்சரிக்கையையும் இக்கதை கொடுக்கின்றது.

நண்பர்கள் இச்சிறுகதையை, இங்கு சுட்டி வாசிக்கலாம்.

https://www.sramakrishnan.com/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

 

#தயாஜி

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்