பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 16, 2022

- பாவத்தின் சம்பளம் -

பேயைப் பார்த்தால் யார்தான் பயப்படமாட்டார்கள். அதனால்தான் இன்று இருவரும் இங்கு வந்திருக்கிறார்கள். 
எப்படியாவது எவ்வளவு செலவு செய்தாவது அந்தப் பேயிடமிருந்து தப்பிக்க வேண்டும். 

இறந்த சில நாட்களில் இப்படி பேயாக வந்து நிற்பாள் என அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் தங்களின் முகங்களை அவளிடம் காட்டாமலேயே அவளை சிதைத்திருப்பார்கள். அல்லது பணத்தையும் பலத்தையும் காட்டி மிரட்டி விட்டிருப்பார்கள்.

இப்போது செத்து பேயாக வந்து நிற்கிறவளை எப்படி மீண்டும் சாகடிப்பது. அவர்களால் முடியாது. அதனால்தான் இங்கு வந்திருக்கிறார்கள். மொத்தமாக ஆளுக்கு பத்தாயிரம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ற பூஜை நடந்துகொண்டிருக்கிறது.

இரண்டு மணிநேரத்தில் பூஜை முடிந்தது. ஆனால் பூஜை முழுமையாக நிறைவு பெற,  பூஜையில் கொடுக்கும் தண்ணீரை வீட்டைச் சுற்றியும் தெளிக்க வேண்டும். ஆனால் அதற்கு அந்தப் பேய் விடாது. அது இவர்களை நெருங்காதபடிக்கு இருவர் நெற்றியிலும் விபூதியை வைத்துவிட்டார்கள்.

நெற்றியில் விபூதி இருக்கும்வரையில் அந்தப் பேய் இவர்களை எதுவும் செய்யாது. அதற்குள் அவர்கள் வீட்டிற்கு சென்று பூஜை நீரை வீட்டில் தெளிக்க வேண்டும். 

பணமும் பூஜையும் கொடுத்த நம்பிக்கையில் வீட்டை அடைந்தார்கள். வீட்டைவிட்டு சற்று தூரத்தில்தான் வாகனத்தை நிறுத்த முடிந்தது. கையில் பூஜை தண்ணீருடன் இருவரும் மெல்ல நடக்கலானார்கள்.

ஏதோ ஒன்று, இருவர் தலையிலும் சொட்டியது. என்ன இதுவென மேலே பார்க்கவும். மறு நொடியில் பேய்மழை. அடுத்த அடி வைப்பதற்குள் இருவரும் முழுக்க நனைந்துவிட்டார்கள்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்