- வலி வேதனை தெரியா வயது -
- வலி வேதனை தெரியா வயது -
அண்ணன், கவிஞர் சிவா சுங்கைப்பட்டாணியையும் அவரது வாரிசையும் சந்தித்தேன். நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையில் அவருக்கான புத்தகங்களை
வாங்குவதற்காக வந்திருந்தார்.
நண்பர்களை வழக்கமாகச் சந்திக்கும் உணவகத்தில் சந்தித்தோம். காலை உணவின் ஊடே வழக்கம் போல இலக்கியம் குறித்தும் அடுத்த என்ன என்பது குறித்தும் எங்கள் உரையாடல் இருந்தது.
விரைவிலேயே கவிஞர் நா.முத்துக்குமார் குறித்த நிகழ்ச்சியொன்று நடக்கவுள்ளதையும் அதில் அவர் பேசவுள்ளதையும் கொஞ்சம் பகிர்ந்து கொண்டார்.
அந்தக் கொஞ்சமே இரசிக்கும்படி இருந்தது. வாய்ப்பிருந்தால் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும்.
கூடவே நா.முத்துக்குமாரின் கவிதைகள் குறித்தும் பேசினோம். அந்த இடத்தில் என்னால் கவிஞர் கார்த்திக் நேத்தாவை வைக்க முடிகிறது என்றேன். அவரும் தலையசைத்தார்.
கோலாலும்பூருக்கு நான் வருவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் அந்தப் பதின்ம வயதில் நான் பிரமித்து பார்த்தவர்களின் சிவா அண்ணனும் ஒருவர்.
எங்கள் வாழ்விடத்தில் இருந்து ஒரு இளைஞன் கோலாலும்பூர் பட்டணத்தில் கவனிக்கத்தக்க இடத்தில் இருப்பது அவ்வளவு எளிதல்ல என்பது எங்களுக்கு தெரியும்.
அந்த வயதில் அவரின் தம்பி எழுத்தாளர் மணிராமுவை அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பும் அவரது நட்பும் கிடைத்தது. சொல்லப்போனால் இலக்கிய சர்ச்சைகள் என்னென்ன நடக்கிறது என அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது. எதையும் சுவாரஸ்யமாகவே சொல்லுவார். அவரின் நட்பும் ஒருவகையில் எனக்கு பல அனுபவங்களுக்கு வழிகாட்டியது. வெளியில் இருந்து வரும் பூசல்களால் பெரிதாக பாதிக்கப்படாத நட்புகளில் இவரது நட்பும் ஒன்று.
இன்றைய சந்திப்பில் அண்ணன் சிவாவுடன் பேசுவது உற்சாகத்தைக் கொடுத்தது. சமீபத்தில் வாசித்த சிறுகதைகள் குறித்தும் பேசினார். நல்ல வேளையாக நானும் அந்தச் சிறுகதைகளை வாசித்திருந்தேன். எங்களின் உரையாடல் அப்படியே சிறுகதைப் பக்கமும் நுழைந்தது.
அவர் பேச்சில் இருக்கும் உற்சாகம் என் காலைப் பொழுதை மேலும் உற்சாகமாக்கியது. இன்றும் கூட நான் அவரை பிரமிப்பாகத்தான் பார்த்து கொண்டிருக்கிறேன். அவரைப் பார்க்கும் போதெல்லாம் மீண்டும் நான் என் பதின்ப வயதிற்கு சென்றுவிடுகிறேன்.
வலியும் வேதனையும் என்னவென்று முழுதாய்த் தெரியாத/ புரியாத வயதாயிற்றே அது....
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக